புளட்

புளட்

பாகம் 16: சுழிபுரம் படுகொலையும் அதன் பின்னணியும்!!!

களுதாவளையிலிருந்து பாரிஸ் வரை
ஒர் அரசியல் போராளியின் வாழ்வின் பயணம்!

அசோக் யோகன் கண்ணமுத்துவுடன் ஒர் உரையாடல்! : தோழர் அசோக் யோகன் கண்ணமுத்துவின் சாட்சியம் பகுதி 14 (ஒலிப் பதிவு செய்யப்பட்ட திகதி 09.08.2021). இந்த உரையாடல் அசோக் யோகன் கணணமுத்துவின் பேச்சுமொழியில் எந்த மாற்றமும் இன்றி பிரசுரமாகின்றது.

பாகம் 16:

தேசம்: 83 க்குப் பிறகான காலகட்டம், ஈழவிடுதலை அரசியலைப் பொறுத்தவரைக்கும் கடுகதி வேகத்தில் பயணித்துக் கொண்டிருந்த அரசியல் தானே. அரசியல் நகர்வுகள் அல்லது அந்த அரசியல் சூழல் வேகமாக மாறிக் கொண்டிருந்தது. 84 இந்திராகாந்தி மரணம் அடைந்தார். அதற்குப் பிறகு இலங்கை ராணுவம் திட்டமிட்ட படுகொலைகளை மேற்கொண்டது. 15 பேர் கொல்லப்படுகிறார்கள். ஒதிய மலையில் கொல்லப்படுகிறார்கள். அதேபோல தமிழீழ விடுதலை இயக்கங்கள் குறிப்பாக தமிழீழ விடுதலைப் புலிகள் மக்கள் மீது தாக்குதல் நடத்தி இருக்கினம். இன உணர்வு என்பது மிகக் கொதிநிலையில் இருந்த காலங்கள். இந்த காலப்பகுதியில் சகோதரப் படுகொலைகளும் இடம்பெற்றிருக்கிறது. அதிலும் குறிப்பாக, மிகவும் உக்கிரமாக பேசப்பட்ட படுகொலை, சுழிபுரம் 6 பேரின் படுகொலை. விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்கள் அல்லது அனுதாபிகள் ஆறு பேர் கொல்லப்பட்டது. எந்தவிதமான விடயங்கள் இந்த படுகொலைகளை நோக்கி நகர்த்தி இருக்குது. அந்த நேரம் நீங்கள் யாழ்ப்பாணத்தில் இருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். யார் அந்த நேரம் புளொட்டுக்குப் பொறுப்பாக இருந்தது?

அசோக்: அந்த காலகட்டத்தில் தோழர் கேசவன் தளப் பொறுப்பாளராக இருந்தார். மாவட்ட பொறுப்பாளராக தோழர் நேசன் இருந்தவர். இராணுவப் பொறுப்பாளராக சின்ன மென்டிஸ் இருக்கிறார். அந்தக் காலகட்டத்தில் பின் தளத்திலிருந்து படைத்துறைச் செயலர் கண்ணன் யோதீஸ்வரனும் வந்து நின்றவர். 84 டிசம்பர் காலகட்டம் என்று நினைக்கிறேன், இந்த காலத்தில் சுழிபுரத்தில் உமாமகேஸ்வரனும் வந்து தங்கி இருந்தார்.

தேசம்: அதால தான் படைத்துறைச் செயலர் உட்பட முக்கியமான ஆட்கள் எல்லாம் வந்து நின்றவை…

அசோக்: அதற்கு முதலே படைத்துறைச் செயலர் கண்ணன் வந்துட்டார். வந்து தளத்தில் சந்திப்புகள் எல்லாம் செய்து கொண்டிருந்தவர். அதற்குப் பிறகுதான் உமாமகேஸ்வரன் வாறார். வந்து சுழிபுரத்தில் தான் தங்கி இருக்கிறார். அது ஒரு ரகசியப் பயணம் தான். யாருக்குமே சொல்லப்படாமல் வந்த ரகசியப் பயணம். கிளிநொச்சி வங்கி கொள்ளை நகையின் ஒரு பகுதியை உமாமகேஸ்வரன் தன் பாதுகாப்பில் யாழ்ப்பாணத்தில் புதைத்து வைத்திருந்தார். அதை எடுக்கவே இந்த ரகசிய பயணம். வந்த உமாமகேஸ்வரனுக்கான பாதுகாப்பை புளொட்டின் ராணுவப் பிரிவு சங்கிலி – கந்தசாமி தலைமையில் சுழிபுரத்தைச் சேர்ந்த ஆட்கள்தான் கொடுக்குறாங்க.

தேசம்: சுழிபுரம் அந்த நேரம் புளொட்டின் ஒரு கோட்டையாகவும் இருந்தது?

அசோக்: பூரண பாதுகாப்பாகவும் அந்த இடம்தான் இருந்தது. அந்த நேரம் புலிகளின் மாணவர் அமைப்பைச் சேர்ந்த 6 பையன்கள் சுவரொட்டி ஒட்ட போயிருக்கிறார்கள். அந்தப் பையன்களை இவங்கள் உளவு பார்க்க வந்தவர்கள் என்ற சந்தேகத்தின் பெயரில் கைது செய்து படுகொலை செய்து புதைசிட்டாங்க. யாருக்குமே தெரியாது. இந்தப் படுகொலை நடந்து இரண்டு மூன்று நாட்களில், தங்களின் மாணவர் அமைப்பைச் சேர்ந்த இந்த மாணவர்களை காணவில்லை என்று சொல்லி புலிகள் தேட தொடங்கிட்டாங்க. அந்த நேரம் புலிகளின் மாணவர் அமைப்புக்கு பொறுப்பாக இருந்தது திலீபன்.

தேசம்: திலீபன் அப்ப உங்கட பேனா நண்பர்…

அசோக்: திலீபன் பேனா நண்பர் இல்லை. புலிகளில் இருந்த என் பேனா நண்பியின் மூலம் ஏற்பட்ட உறவு. இது பற்றி முன்னர் கதைத்திருக்கிறன். எங்களிட்ட தனிப்பட்ட உறவு இருந்தது, கதைப்பம் பேசுவோம். தனிப்பட்ட பிரச்சனை எல்லாம் கதைக்கக் கூடிய உறவு ஒன்று இருந்தது. திலீபனின் மூத்த அண்ணன் ஒருவர் புளொட்டில் பின் தளத்தில் இருந்தவர். பிற்காலத்தில் திலீபன் பற்றி விமர்சனங்கள் வரும்போது, எனக்கு அதிர்ச்சியாக இருந்தது, இவனா என்று சொல்லி. அந்தக் காலகட்டத்தில் திலீபனிடம் வித்தியாசமான குணாதிசயங்கள் இருந்தது. திலீபன் அந்த நேரம் புலிகளின் மாணவர் அமைப்பிற்கும் பொறுப்பாக இருந்தவர்.

சுழிபுரம் பக்கம் போன இந்த மாணவர்களை காணவில்லை என்றவுடன், இவங்களுக்கு சுழிபுரம் புளொட் ஆட்கள் மீது சந்தேகம் வந்துவிட்டது. அவங்க கைது செய்திருப்பாங்க என்ற சந்தேகம் இவங்களுக்கு வந்து விட்டது. அந்த நேரம் உமாமகேஸ்வரன் அங்க வந்து நிற்கிறது இவங்களுக்கு தெரியாது.

தேசம்: திலீபன் ஆட்களுக்கு…

அசோக்: ஒம். உண்மையிலேயே அவர்கள் உளவு பார்க்க போக வில்லை. சுழிபுரத்தை அண்டியுள்ள கிராமங்களைச் சேர்ந்த சேர்ந்த பையன்கள் அவர்கள். விக்டோரியா கொலேஜ்சில் படித்துக் கொண்டிருந்தவர்கள். சுவரொட்டி ஒட்டுவதற்காகத்தான் போய் இருக்கிறார்கள். அவங்களுக்கு உமாமகேஸ்வரன் வந்து நிற்கும் விடயம் எதுவுமே தெரியாது.

பிறகு யாழ்ப்பாண யுனிவர்சிட்டியில் மாணவர்கள் மத்தியில் இப்பிரச்சனை வருகின்றது. யுனிவர்சிட்டியைச் சேர்ந்த மாணவர் அமைப்புகளில் ஒன்று இருந்தது என்ன என்றால், பிரச்சனை என்றால் கதைக்கலாம். உரையாடல் தளம் ஒன்று இருந்தது எல்லோர் மத்தியிலும். அப்போ திலீபன் ஆட்கள் வந்து கதைக்கிறார்கள், சுழிபுரம் பகுதிகளுக்கு சுவரொட்டி ஒட்ட போன மாணவர்களைக் காணவில்லை என்று சொல்லி. முகுந்தன் வந்து நிற்பதை இந்த நேரத்தில அவர்கள் அறிந்து விட்டனர். அப்ப அவங்களுக்கு சந்தேகம் வந்துவிட்டது. புளொட்தான் கைது செய்திருக்கும் என்று.

சுழிபுரம் புளொட் ஏரியா. அதற்குள் இவர்கள் சென்று விசாரிக்க முடியாது. என்னைத்தான் சென்று விசாரிக்க திலீபனும், கிட்டுவும் கூப்பிடுகிறார்கள். நான், சுழிபுரம் போய் விசாரித்து விட்டு வாரன் என்று இவர்களிடம் சொன்னேன். தாங்களும் வருவதாக சொன்னாங்க. நானும், திலீபனும், கிட்டுவும் அங்கு போகின்றோம். புளொட் ராணுவம் வளைத்து நிற்கிறது. சித்தன்கேணி கோயிலடியில் சந்தியில சென்ரி நின்ற ஆட்களை கேட்டதும், அப்படி யாரும் வரவில்லை என்று சொல்லிப் போட்டாங்க. ரெண்டு பக்கமும் பெரிய வாய்த்தர்க்கம். புளொட் காரங்க மிக மோசமாக நடந்து கொண்டாங்க. இவங்களை கூட்டி வந்ததற்கு என்னையும் பேசினாங்க. நான் இடையில நின்று சமாதானப்படுத்தி திலீபனையும், கிட்டுவையும் கூட்டிட்டு வந்துட்டேன். வரும்போது அவங்க சொன்னாங்க, அவர்களுடைய கதைகள் பேச்சிலிருந்து புளொட் தான் ஏதோ செய்திருக்கு என்று தாங்க நம்புவதாக. அவங்கள் ஒரு முடிவுக்கு வந்துட்டார்கள் புளொட் தான் ஏதோ செய்து விட்டது என்று…

தேசம்: திலீபனும், கிட்டுவும் ஒரு முடிவுக்கு வந்துட்டாங்க

அசோக்: ஓம். பிறகு தோழர் கேசவனிடம் நான் போய் நடந்த முழு கதையும் சொன்னேன். அந்த நேரம் கேசவன் சொன்னார், புளொட் கைது செய்திருக்காது, எதுக்கும் நான் சுழிபுரம் போய் விசாரித்து கொண்டு வாரேன் என்று சொல்லி, சுழிபுரம் போனவர். போயிட்டு வந்து சொன்னார், புளொட் கைது செய்யல என்றுதான் சொல்லுறாங்கள் என்று. அந்த நேரம் படைத்துறைச் செயலர் கண்ணனும் சுழிபுரம் போய் விசாரிக்கின்றார். அவரும் வந்து, கேசவன் தோழர் சொன்ன மாதிரியே சொல்கிறார். அப்ப கொந்தளிப்பான காலகட்டம். மக்களுக்கு, எங்க தோழர்களுக்கு இச் சம்பவம் தொடர்பாக தெளிவுபடுத்த துண்டுப்பிரசுரம் ஒன்று வெளியிட வேண்டும் என்று சொல்லி கண்ணன், நேசன் எல்லாருடைய முடிவோடையும் துண்டு பிரசுரம் ஒன்று அடிக்கப்படுது, ஒன்றுபட்டு செயற்படுவோம் என்ற தலைப்பில.

தோழர் கேசவன்தான் அந்த துண்டுப் பிரசுரத்தை எழுதுகின்றார். அதன்ற உள்ளடக்கம் இப்போது எனக்கு ஞாபகம் இல்லை. காணாமல் போன மாணவர்கள் தொடர்பான விடயத்தில், புளொட்டிக்கு எந்த சம்பந்தமும், தொடர்புகளும் இல்லை என்றும், இயக்கங்களின் ஒற்றுமையை வலியுறுத்தியும் எழுதப்பட்டதாக நினைக்கிறன்.

தேசம்: அந்த துண்டுப் பிரசுரம் வரேக்க அவர்களுடைய உடல் எடுக்கப்பட்டுட்டுதா?

அசோக்: இல்லை இல்லை. அந்த நேரம் எதுவுமே தெரியாது. என்ன நடந்தது என்றே தெரியாது. அந்த காலகட்டத்தில் தான் இந்த துண்டுப் பிரசுரம் வருகிறது. நாங்களும் உண்மையாவே நம்புறோம் புளொட் செய்ய வில்லை என்று.

பிறகு உடல் தோண்டி எடுக்கப்படுது. உமாமகேஸ்வரன் பின் தளம் போனதற்குப் பிறகு, அந்த இடங்களெல்லாம் கட்டுப்பாடு இல்லாமல் போகுது. பிறகு நாய்கள் கடற்கரையில் மோப்பம் பிடித்து தோண்டிய இடத்தில் உடல்கள் காணப்படுது. ஈபிஆர்எல்எஃப் தோழர்களும் பார்த்திருக்கிறாங்க அவங்கதான் படங்கள் எடுத்தார்கள் என்று சொன்னார்கள்.

தேசம்: நான் நினைக்கிறேன் அந்த நேரம் ஈபிஆர்எல்எஃப் இல் இருந்த கொன்ஸ்ரன்ரைன் இப்ப லண்டனில் இருக்கிறார். அவர் அந்த காலகட்டத்தில் நான் நினைக்கிறேன் ஈழமுரசில் பணியாற்றிக் கொண்டிருந்தவர். அந்தப் படத்தை அவர்தான் எடுத்திருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.

அசோக்: எனக்கு நல்ல ஞாபகம், இந்த சம்பவம் நடந்ததற்கு பிறகு, நான் நீர்வேலி என்ற கிராமத்தில் இருந்தன். திலீபன் என்னை தேடி வந்தவர். அதுக்கு முதல் திலீபன் கிட்ட நான் சொல்லிட்டேன் மாணவர்கள் காணாமல் போனதுக்கும் எங்களுக்கும் தொடர்பில்லை என்று. ஆனால் அவங்களுக்கு சந்தேகம் இருந்தது. அப்ப திலீபன் என்னை கண்டதும் அழத் தொடங்கிட்டார். படத்தை காட்டி சொன்னார், இப்ப என்ன சொல்லுறீங்க? நீங்கள்தான் செய்திருக்கிறீர்கள். சுழிபுரத்தில் தான் தோண்டி எடுக்கப்பட்டு இருக்கு என்று சொல்லி. எதுவுமே கதைக்கல நான். என்ன கதைக்க முடியும்? கதைக்க வார்த்தையும் வரல. ரெண்டு பேருக்குமான உறவு அதோட முடிந்து போயிட்டது. இறந்து போன மாணவர்களை புலிகளின் மாணவர் அமைப்பினுள் கொண்டு வந்தது திலீபன்தான். இவங்களோடு நெருக்கமாகவும் இருந்துள்ளார்.

தேசம்: இந்த திலீபன் தான் பின்னாட்களில் உண்ணாவிரதம் இருந்தவர்?

அசோக்: உண்ணாவிரத திலீபன். பிற்காலத்தில் திலீபனுடைய வாழ்க்கை முறையும் வேறயா போயிட்டுது. டெலோ அழிப்பில் முன்னுக்கு நின்றவர் என்டு சொல்லி பயங்கர குற்றச்சாட்டுகள்.

தேசம்: அப்போ எப்ப உங்களுக்கு தெரியும் இதில் புளொட் ஈடுபட்டது என்று சொல்லி?

அசோக்: சுழிபுரத்துக்குள்ள தானே இது நடந்திருக்கு. எனக்கு டவுட் வந்துட்டுது இவர்கள் தான் செய்திருப்பார்கள் என்று சொல்லி. அன்றைக்கு கிட்டு, திலீபனுடன் நடந்த உரையாடல் ஆரோக்கியமாக இருக்கல. இவங்கள் நிதானமாக கதைத்தவங்கள். புளொட் ஆட்கள் அதுல நடந்துகொண்ட முறை சரியான பிழை. அப்பவே கொஞ்சம் சந்தேகம் இருந்தது.

தேசம்: யார் யார் அதில் சார்பாக உரையாடலில் ஈடுபட்டது.

அசோக்: அதுல சங்கிலி உட்பட பெரிய குழு. அவங்களோட பெயர் ஞாபகம் இல்லை இப்போது. எப்படி நீ இவங்கள கூட்டிட்டு வருவாய், எங்க ஏரியாக்குள்ள புலிகளை எப்படி கூட்டிட்டு வருவாய் என்று சொல்லி என் மீது படு கோபம். மிக மோசமாக நடந்துகொண்டனர். அப்ப அவங்களை பொறுத்தவரை புளொட்டின்ட ஏரியா, இவங்களை எப்படி கூட்டிட்டு வரலாம் என்றுதான். மிக ஆக்ரோஷமாக நடந்து கொண்டார்கள்.

தேசம்: அந்தக் காலகட்டத்தில் மீரான் மாஸ்டர் எல்லாம் அங்கு முன்னணியில் இருந்த உறுப்பினர்கள் என்று நினைக்கிறேன். இது சம்பந்தமாக நீங்கள் யாருடனாவது கதைத்தீர்களா?

அசோக்: பிற்காலத்தில் மீரான் மாஸ்டரை நான் இங்க பாரிசில் சந்தித்தேன். அப்ப அவர் நோர்வேயில் இருந்தவர். எனக்கு மீரான் மாஸ்டரும் அதில் சம்பந்தப்பட்டவர் என்று படுகோபம் இருந்தது. அவரை சந்திக்கவே நான் விரும்பவில்லை. பிறகு பிரண்ட்ஷிப்பா சந்திக்கலாம் என்றுதான் சந்தித்தேன்.சந்தித்த இடத்தில் சுழிபுரம் தொடர்பான கதை வந்தது. மிக மறுத்தார் அவர். சம்பவம் நடந்த இடத்தில் அவர் இருந்திருக்கிறார். சங்கிலி கந்தசாமி ஆட்களோடு சண்டை பிடித்திருக்கிறார்.

தேசம்: சம்பவம் நடந்த நேரத்திலா?

அசோக்: ஓம். அவருக்கு அவர்கள் அப்பாவி பையன்கள் என்று தெரியும்.

தேசம்: அவருடைய மாணவர்களா?

அசோக்: நான் நினைக்கிறேன் அவருக்கு தெரிந்த மாணவர்களாக இருக்கலாம். இவர் பயங்கரமாக சண்டை பிடித்து இருக்கிறார், செய்யக்கூடாது என்று சொல்லி. அப்ப சங்கிலி மற்ற ஆட்கள் எல்லாம் இவரை சுட வெளிக்கிட்டு இருக்கிறார்கள். இந்த இடத்தை விட்டுப் போ, இல்லாவிட்டால் உன்னையும் சுட வேண்டி வரும் என்று சொல்லி இருக்காங்க. இவரை வெளியேற்றிப் போட்டுத்தான் இந்த சம்பவங்கள் நடந்திருக்கு. மீரான் மாஸ்டர் இந்த சம்பவத்தைப் பற்றி சொல்லும்போது நான் நம்பவில்லை. ஆனால், பிற்காலத்தில் வேற ஆட்கள் இந்த சம்பவம் பற்றி கதைக்கும் போது, இப்படி மீரான் மாஸ்டர் சண்டை பிடித்தவர் என்று சொல்லியும், அதில் மீரான் மாஸ்டருக்கு தொடர்பில்லை என்றும் சொன்னார்கள். ஆனால் மீரான் மாஸ்டர் அதில் தொடர்பு என்று சொல்லித்தான் வதந்தி. மீரான் மாஸ்டருக்கு பிடிக்காதவர்கள் அந்த குற்றச்சாட்டை பரப்பிவிட்டுட்டாங்கள்.

தேசம்: இந்தப் படுகொலை விஷயத்தில் உமா மகேஸ்வரன் அந்த பகுதியில் இருந்ததால்தான் இது நடந்தது என்று சொல்லப்படுது. அவர்கள் விசாரிக்கப்பட்டு சுடப்பட்டு, மிக மோசமாக துன்புறுத்தப்பட்டு, அவர்களது உடல்களும் வெட்டப்பட்டு இருந்திருக்கு. அது இலங்கை ராணுவம் செய்கின்ற கொடுமையிலும் பார்க்க மிக மோசமான கொடுமை.

அசோக்: பயங்கரமாக சித்திரவதை செய்து தான் கொலை செய்திருக்கிறார்கள். இந்த சித்திரவதை மனோபாவம் ஒரு விடுதலை இயக்கத்தில் இருக்கிறது என்பதே பெரிய அதிர்ச்சியான விஷயம்தான். இதுதான் காலப்போக்கில் பயிற்சி முகாம்களில் சித்திரவதை செய்வதற்கு காரணமாக இருந்திருக்கு. உண்மையிலேயே இந்த நபர்களை பார்த்தீர்களென்றால், இவங்கள் எப்படி புளொட்டுக்குள்ள வந்தார்கள் என்றே தெரியாது. சங்கிலியை கொண்டு வந்தது சந்ததியார். வவுனியாவில் கடையில வேலை செய்து கொண்டிருந்தவர். இவங்கள் சண்டியர்கள் ஆக இருந்தார்களேயொழிய…

தேசம்: கொண்டு வாறத்துல பிரச்சினை இல்லை. ஆனால் அவர்களுக்கு எந்த ஒரு அரசியல் விழிப்புணர்வும் கொடுக்கல.

அசோக்: என்னதான் அவங்கள் பிழையான திசையிலிருந்து வந்தாலும் கூட, அவங்களை அரசியல் கல்வி ஊட்டி, நல்வழிப்படுத்தி இருக்கலாம். புளொட்டினுள் கொலைகளையும், சித்திரவதைகளையும் செய்த நபர்கள் பலர் தோழர் சந்ததியாரினால் இயக்கத்தினுள் கொண்டு வரப்பட்டவங்க. இதைப்பற்றி முன்னமே சொல்லி உள்ளேன். இவர்கள் தனிநபர் விசுவாசிகள் ஆக்கப்பட்டு, பிற்காலத்தில் முகுந்தனால் பயன்படுத்தப்பட்டார்கள். சங்கிலி கந்தசாமியோட பழகின ஆட்களை காலப்போக்கில் சந்திக்கும்போது தனிப்பட்ட வகையில் மிக நல்லவர் என்று தானே சொல்கிறார்கள். ஆனால் அவர் மிகக்கொடூரமான கொலை கார மனுஷனாக இருந்திருக்கார் . உளவியல் சார்ந்த நோயாகவே போயிட்டுது இந்த கொலைகள்.

வரலாற்றில் பார்த்தோமானால் இப்படிப்பட்டவர்கள் தனிப்பட்ட வகையில் தங்களைச் சார்ந்தவர்களுக்கு நல்லவர்களாக பண்பானவர்களாகத்தான் இருந்திருக்காங்க. இது ஒருஉளவியல் சார்ந்த பிரச்சனை. புளொட்டில் பலர் கொடுர சாடிஸ்டுகளா இருந்திருக்காங்க. உண்மையில இதை அமைப்பு சார்ந்த பிரச்சனையாகத்தான் பார்க்க வேணும். ஆயுத இயக்கங்கள் அரசியல் சித்தாந்த மார்ச்சிய வழிகாட்டல் இல்லாமல், அரசியல் கல்வி இல்லாமல், ஒடுக்கப்பட்ட மக்கள் பற்றிய அக்கறையில்லாமல், இயக்கம் நடாத்த வெளிக்கிட்டால் இப்படி பிரச்சனைகள் வரத்தான் செய்யும்.

தேசம்: இந்தப் படுகொலை தொடர்பாக மத்திய குழுவில் பேசப்பட்டிருக்கா?

அசோக்: விவாதம் எல்லாம் நடந்தது. சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க என்று சொல்லி. ஏனென்றால் சங்கிலி கந்தசாமி மத்திய குழுவில் இருக்கிறார் தானே.

தேசம்: வேற யார் இந்த கொலையில் சம்பந்தப்பட்ட ஆட்கள்.

அசோக்: வெங்கட் என்று நினைக்கிறேன். மத்திய குழுவில் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சொல்லப்பட்டது ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கல.

பாகம் 15: இன்று ஜனநாயகம் பேசுபவர்களும் புளொட் படுகொலைகளுக்கு உடந்தையாக இருந்தனர்!!!

களுதாவளையிலிருந்து பாரிஸ் வரை
ஒர் அரசியல் போராளியின் வாழ்வின் பயணம்!

அசோக் யோகன் கண்ணமுத்துவுடன் ஒர் உரையாடல்! : தோழர் அசோக் யோகன் கண்ணமுத்துவின் சாட்சியம் பகுதி 15 (ஒலிப் பதிவு செய்யப்பட்ட திகதி 09.08.2021). இந்த உரையாடல் அசோக் யோகன் கணணமுத்துவின் பேச்சுமொழியில் எந்த மாற்றமும் இன்றி பிரசுரமாகின்றது.

பாகம் 15

தேசம் : கண்ணாடிச் சந்திரன், நேசன் காலத்தில் யாழ்ப்பாணத்திலும் கொலைகள் நடந்தனவா?

அசோக்: ஓம். பல விடயங்கள் மர்மமானவை. ஒரு சிலதான் எங்களுக்கு தெரியவந்தன.

கொட்டடிப் பகுதியில், இவர்கள் ஒரு கொலை செய்தார்கள். அந்தப் பகுதியில் சண்டித்தனம் செய்கிறார் என்று சொல்லி, ஒருவரை எச்சரிக்கை பண்ணுதற்காக, கண்ணாடிச் சந்திரனும், நேசனும் போய் இருக்காங்க. அவர் அந் நேரத்தில் கண்ணாடிச் சந்திரனை அடித்து விட்டார். அந்தக் கோபத்தில் அவரை, பிறகு கொலை செய்துவிட்டாங்கள். புளாட் என்று யாருக்கும் தெரியாது.

தேசம்: கண்ணாடிச் சந்திரன் இராணுவப் பொறுப்பாளராக வந்த பிறகு, நீங்கள் ஒரு மூன்று நாலு படுகொலைகள் சொல்லியிருக்கிறீர்கள். அதைவிடவும் சம்பவங்கள் நடந்ததா?

அசோக்: நிறைய கொள்ளைகள் நடந்திருக்கு. உதாரணமாக யாழ்ப்பாண டவுனில் ஒரு பாட்டா சப்பாத்து கம்பெனி இருந்தது. அவர்கள் நிறைய எங்களுக்கு ஹெல்ப் பண்ணினார்கள். டெசோவுக்கு எல்லாம் ஹெல்ப் பண்ணினார்கள். அதுவும் கொள்ளையடிக்கப்பட்டது. அதுவும் புளொட் என்று தெரியாது.

தேசம்: அரசியல் பிரிவுக்கும் ராணுவ பிரிவுக்கும் தொடர்பில்லாத செயற்பாடுகளால் நடந்ததா அல்லது?

அசோக்: அரசியல் பிரிவுக்கும் இராணுவப் பிரிவுக்கும் எந்த தொடர்பும் இருக்கல்ல. குறிப்பாக தொழிற்சங்கங்கள், மாணவர் அமைப்புகள் இததெல்லாம் தேவையற்றது, இராணுவப் பிரிவு ஒன்று இருந்தாலே போதும் என்ற சுத்த இராணுவ வாதக் கண்ணோட்டம்தான் இவர்களைப் போன்ற பலரிடம் இருந்தது. மக்கள் அமைப்பின் பிரதேச பொறுப்பாளர்களாக இருந்த பலர், தங்களை இராணுவ நடவடிக்கைகளில், சாகசங்களில் ஈடுபடும் நபர்களாக காட்டடிக் கொள்ளவே ஆசைப்பட்டனர். எந்த இராணுவப் பயிற்சியும் இவர்களுக்கு இருக்கல்ல. அரசியல் அறிவும் இருக்கல்ல. சின்ன சின்ன பிரச்சனைகளுக்கு துப்பாக்கி கொண்டு விசாரிப்பது, அடிப்பது. இதற்காகவே பிரச்சனைகளை தேடி அலையும் நபர்களாக பலர் மாறிப் போயிற்றாங்க.

ஜீவன் என்றொரு தோழர். ஆரம்பத்தில் தொழிற் சஙகத்தில் வேலை செய்தார். அது அவருக்கு போகப் போக பிடிக்கவில்லை. கிராமங்களில் இறங்கி வேலை செய்ய வேண்டும். மத்திய தர வர்க்ககுணாம்சம் இதற்கு இடம் தராது. அத்தோடு தொழிற்சங்க அமைப்புக்களில் வேலை செய்வது, மக்கள் பணி ஆற்றுவது அதிகாரத்தனங்களை வழங்காது. அப்ப மக்கள் மத்தியில் அதிகாரம் கொண்ட மனிதராக காட்ட வேண்டும் என்றால், இப்படியான அமைப்புக்களில் வேலைசெய்ய முடியாது. நேசனிடம் சொல்லி மக்கள் அமைப்பிற்கு மாறி விட்டார். துப்பாக்கியோடு சென்று விசாரனை செயயும் ஆளாக மாறி விட்டார். இதுதான் இவர்களின் விருப்பமாக இருந்தது. தங்களை சுற்றி அதிகார விம்பங்களை உருவாக்கும் இந்தச் செயல் பலரிடமும் இருந்தது.

பிறகு இவர் ஒருதடவை, தீவுப் பகுதியில் நடந்த குடும்ப பிரச்சனை ஒன்றிக்கு, துப்பாக்கியோடு இன்னொரு தோழரோடு மோட்டார் சைக்கிளில் போய் இருக்கார். போகும் போது, ஆமியைக் கண்டு விட்டார்கள். இவர், பயத்தில் துப்பாக்கியை பண்ணைப் பாலத்தினுள் எறிந்து விட்டார். எங்களிடம் அப்போது இருந்ததே இரண்டு முன்று துப்பாக்கிகள்தான். இப்படித்தான் எல்லாம். இப்போது கனடாவில் பிரபல ரியல் ஸ்டேட் புரோக்கராக இருக்கிறார் .

தேசம்: இதுல இன்னொன்று பார்த்தீர்களென்றால், நேசன் மாவட்ட பொறுப்பாளராக இருக்கிறார். கண்ணாடிச் சந்திரன் இராணுவப் பொறுப்பாளராக இருக்கிறார். இவர்கள் இரண்டு பேருமே பிற்காலத்தில் தீப்பொறியில் வேலை செய்திருக்கினம். ஏன் இவர்கள் மற்றவர்களோடு இவை பற்றி உரையாடுவதில்லை.

அசோக்: நான் முதலே சொன்னேன் தானே. ஒரு ஜனநாயக பூர்வமான உரையாடல் தளம், அதற்கான மன நிலை, அரசியல் கல்வி எப்போதும் அவர்களிடம் இருந்ததில்லை. அத்தோடு, அரசியல் வளர்ச்சியற்ற சாகச மனநிலை கொண்ட நபர்களாகத்தான் இவர்கள் இருந்தார்கள். உண்மையில் இவர்கள் லும்பத்தனம் கொண்டவர்கள்.

தேசம்: இதுல அரசியல் வார்த்தைகளை விடுங்கள். இது ஒரு சாதாரண மனிதாபிமானம் சம்பந்தமான விடயங்கள் தானே? ஒருவரை கொலை செய்வது அல்லது ஒருவரை துன்புறுத்துவது என்பது அதுவும் ஒரு விடுதலைப் போராட்டத்திற்கு போன போராளிகள் செய்வது என்பது எந்த ஒரு வகையில்?

அசோக்: ஒரு காலகட்டத்தில் யாழ்ப்பாணத்தில் பார்த்தீர்களென்றால் பல்வேறு இயக்கங்கள் பல்வேறு கொலைகளில், மக்கள் விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்கள். அது ஒரு சாகச நிகழ்ச்சியாக, அதிகார மேலாண்மையை நிறுவும் எத்தனங்களாக போய்விட்டது. ரெலோ செய்யும், டைகர் செய்யும். இயக்கங்கள் இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடும் போது, இவங்களுக்கும் தேவைப்படுது. ஏனென்றால், வேறு வேலைத்திட்டங்கள் இவங்களுக்கு இல்லை. நாங்கள் மக்கள் மத்தியில் வேலை செய்வோம், தொழிற்சங்கங்கள் வேலை செய்யும், மாணவர் அமைப்புகள் வேலை செய்யும், மக்கள் அமைப்பு வேலை செய்யும். இப்படி பல்வேறு வேலைத் திட்டங்கள் எங்களிடம் இருந்தது. இராணுவப் பிரிவுக்கு ஒரு வேலையும் இல்லை. ராணுவப் பிரிவில் ஈடுபட்ட இவர்கள் யாருமே இராணுவப் பயிற்சி பெற்ற ஆட்கள் இல்லை. கண்ணாடிச் சந்திரனுக்கும், மல்லாவிச்சந்திரனுக்கும் எந்த வித இராணுவக் கல்வியும், பயிற்சியும், அரசியலும் அற்றவர்கள். கொலை என்பதுதானே எங்கள் போராட்டமாக இருந்தது. இயக்கங்கள் செய்த கொலைகளை எப்படி செய்தார்கள் என்பதை அறிந்தால், எங்கட மனநிலை பாதிக்க பட்டுவிடும். அவ்வளவு கொடுரமானவர்கள் போராளிகள் என்று சொல்லிக் கொண்ட நாங்கள்…

தேசம்: மற்ற இயக்கங்கள் குறைந்தபட்சம் பொலீஸ் அல்லது ராணுவம் என்ற பொது எதிரிக்காக செய்யேக்க நீங்கள் சொந்த மக்களுக்கு எதிராக செயற்பட்டா? தோழர் கேசவனின் நிலை என்ன?

அசோக்: தோழர் கேசவன் நல்ல தோழர், ஆனால் அவர் சுயமாக செயற்படக்கூடிய ஆள் இல்லை…

தேசம்: அவர் என்ன பொறுப்பில் இருக்கிறார்?

அசோக்: அவர்தான் தளப் பொறுப்பாளர்.

தேசம்: நேசன்…

அசோக்: யாழ்ப்பாண நேசன் மாவட்ட பொறுப்பாளர். தோழர் கேசவன் சித்தாந்த ரீதியாக வளர்ச்சி பெற்ற தோழர். யாழ்ப்பாண சூழலுக்கு நானும், கேசவனும் புது ஆட்கள். யாழ்ப்பாண புவியியல் அமைப்பு, போக்குவரத்து, ஒழிந்து வாழ்வதற்கான சூழல், களநிலை எங்களுக்கு தெரியாது. நிலம் சார்ந்த எதுவும் தெரியாது. பாதுகாப்பு சூழலை நாங்கள் ஏற்படுத்திக் கொள்ளவேண்டும். புது ஆட்கள் நாங்கள். இவங்க கிட்ட தான் தங்கி நிற்க வேண்டும். அப்போ முரண்பட ஏலாது இவங்களோட. தோழர் கேசவன் முழுக்க இவர்களையே தங்கி இருக்க வேண்டிய நிலையில்தான் இருந்தார். நேசனும், கண்ணடிக் சந்திரனும் அவரை தங்களிடம் தங்கியிருக்கும் ஒரு ஆளாக, அதற்கான சூழலை ஏற்படுத்திக் கொண்டே இருந்தார்கள்.

நான் யாழ்ப்பாணம் போய் ஒரு சில மாதங்களிலே இவர்களை தங்கி இருக்கும் நிலையை மாற்றிக் கொண்டேன். என் பாதுகாப்பு, தங்குமிடம் எவற்றுக்குமே நான் இவர்களை சார்ந்திருக்க வில்லை. அத்தோடு இவர்கள் மேல் நம்பிக்கையும் எனக்கு இருக்கல்ல. டெசோவோடையும், தொழிற்சங்கங்களோடையும் என்னை நான் இணைத்துக்கொண்டேன். அப்போ இவங்களோட நான் தங்கியிருக்க வேண்டிய அவசியம் வரவில்லை.

தொழிற்சங்கங்களையும், மாணவர் அமைப்பையும் தனித்துமான சுதந்திர அமைப்பாக உருவாக்க வேண்டும் என்பதே என் நோக்கமாக இருந்தது. அந்நேரத்தில், யாழ்ப்பாண மாவட்டத்தில் கிராமிய மட்டங்களில் வேலை செய்து கொண்டிருந்த, கிராமிய உழைப்பாளர் சங்கத்தின் தொடர்பு எனக்கு கிடைத்தது, பெரிய உதவியாகவும், ஒத்துழைப்பாகவும் இருந்தது. இதற் கூடாகத்தான், தோழர்கள் கௌரி காந்தன், முத்து போன்றவர்களின் அறிமுகம் கிடைத்தது. பிறகு எமது தொழிற் சங்க அமைப்புக்களை உருவாக்குவதில் பெரும்பங்கு வகித்தவர்கள் கௌரி காந்தனும், முத்துவும்தான்.

தேசம்: உங்களுக்கும் கேசவனுக்குமான உறவு எப்படி?

அசோக்: கேசவனுக்கும் எனக்கும் நல்ல உறவு இருந்தது. கேசவன் தோழர் சொல்லுவார் என்ன செய்றது, பிரச்சினை என்றால் முகுந்தனிட்டையும் இவங்களை பற்றி ரிப்போர்ட் பண்ண ஏலாது. அந்த நேரம் முகுந்தனுக்கும் கண்ணாடி சந்திரனுக்கும் உறவு மிக நெருக்கமானது.

தேசம்: கண்ணாடிக்கு சந்திரன் பின் தளத்துக்கு போயிருக்கிறாரா?

அசோக்: ஓம். பின் தளத்துக்கு போயிருக்கிறார். இரண்டு மூன்று தரம் போயிட்டு வந்திருக்கிறார். முகுந்தனை சந்தித்து வருவார். வந்தவுடன் இங்கு நேசனோடு சேர்ந்து ஏதாவது குளறுபடி செய்வார். உதாரணமாக, மண்டை தீவில் உப வானொலி ஒலிபரப்பு அஞ்சல் நிலையம் இயங்கிக் கொண்டிருந்தது. அதனை கொள்ளை அடித்து, பின் தளம் அனுப்பினார். கேட்டபோது, தமிழ் ஈழத்தின் குரல் வானொலி நடத்துவதற்கு முகுந்தன் கேட்டதாக சொன்னர். இவற்றால் எந்தவித பிரயோசனமும் இருக்க வில்லை. இது பற்றி நான் முகுந்தனிடம் கேட்டபோது, தன்னிடம் இது எங்களுக்கு பிரயோசனப்படும், பவர் புள்ளானது என்று சொன்னபடியால், தேவையான கருவிகளை மாத்திரம் எடுக்கும்படி சொன்னதாக கூறினார். ஆனால், இவர்கள் முழுமையாக கொள்ளையடித்து, அதனைச் சேதப்படுத்தி விட்டு வந்துவிட்டார்கள். அதன் பின் அந்த வானெலி நிலையம் இயங்கவில்லை. அந்த சாமான்கள் எங்களுக்கும் பிரயோசனப்பட வில்லை.

தேசம்: மத்திய குழு உருவாக்கப்படுவதற்கு முன்னரே போய் வந்துவிட்டாரா?

அசோக்: மத்திய குழு கூடுவதற்கு முதலே இந்தியாவுக்கு போயிட்டு வந்து இருக்கிறார். முகுந்தன் ஆட்களை எல்லாம் சந்தித்துவிட்டு வந்துட்டார். அவர்களின் நம்பிக்கைகளையும் பெற்றுவிட்டார்.

நாங்கள் தோழர் என்று கதைப்போம் அவர் பெரியய்யா என்று கதைப்பார். பெரியய்யாவுக்கு அதை அனுப்ப வேணும், பெரியய்யாவுக்கு இதை அனுப்ப வேண்டும். அன்று பெரியையாவின் ஆசைகளை நிறைவேற்றுகின்ற நபராக தான் இவர் இருந்தார். ஒரு தடவை விவசாய காரியாலத்தில் இருந்த ஜீப் ஒன்றை பின் தள உபயோகத்திற்கு என்று கடத்தி, அதை பாகங்களாக கழட்டி அனுப்பினார். இப்படி இவரின் தன்னிச்சையாக காரியங்கள் ஏராளம். வெளியில் யாருக்கும் தெரியாது. எல்லாச் செயற்பாடுகளுக்கும் துணை நேசன்தான்.

தேசம் : நீங்கள் மத்திய குழு போகும்போது இந்த இந்த தன்னிச்சையான போக்குகள் முரண்பாடுகள் சம்பந்தமா நீங்கள் பேசினீர்களா

அசோக்: நான் சந்ததியாருடன் பேசியிருக்கிறேன். இதைப்பற்றி. சென்ட்ரல் கமிட்டியில் கதைக்கல நான்.

தேசம்: தளத்தில் மத்தியகுழு உறுப்பினர்களாக உங்களோடு இருந்த மற்றவர்கள் இங்கே நடந்து கொண்டிருந்த அராஜகங்கள் படுகொலைகள் பற்றி எந்தப் பேச்சும் எடுக்கலையா?

அசோக்: சொல்லவேண்டியது கேசவன் தான். ஆனால் ஏன் சொல்லவில்லை என்றால் கேசவன் தோழருக்கு தெரியும் முகுந்தன் தோழரின் அனுசரணையுடன் தான் நடக்குது என்று சொல்லி. அப்போ முகுந்தனுக்கு எதிராக ஒன்றும் வைக்க இயலாது தானே.

தேசம்: அப்படி ஒரு முடிவுக்கு வர ஏலாது தானே? மத்திய குழு ஒன்று இருந்தால் அது ஒரு குறிப்பிட்ட நபரின் நடவடிக்கைகள் பிழை என்று சொன்னால் மற்ற மத்திய குழு உறுப்பினர்கள்…

அசோக்: இதை நான் தான் கதைத்திருக்க வேண்டும். ஏனென்றால், தோழர் கேசவன் இவர்களின் நடவடிக்கைகளை ஏற்றுக்கொண்டிருக்கிறார் தானே. கேசவன் அதை பெரிய பிழையாக பார்க்கவில்லை. அத்தோடு முக்கிய காரணம் இவங்களோடு அவர் முரண்பட விரும்பவில்லை.

தேசம்: ஒட்டுமொத்த இயக்கமுமே படுகொலைகள் எல்லாவற்றையும் ஏற்றுக் கொள்ளுதா?

அசோக்: அப்படி சொல்லி விட முடியாது. விமர்சனங்கள் இருந்தன. ஆனால் வெளிப்படையாக யாரும் கதைக்கவில்லை. மத்தியகுழுவில், கட்டுப்பாட்டுக்குழுவில் இருந்தவர்கள் எவரும் இவற்றையெல்லாம் அக்காலங்களில் கண்டிக்கவில்லை என்பது உண்மைதான். கண்டித்திருந்தால், விமர்சனங்களுக்கு உள்ளாக்கி இருந்தால், புளாட்டின் தவறான போக்கை தடுத்திருக்கமுடியும். ஆரம்பத்திலேயே ஏற்றுக்கொண்டுதான் இருந்திருக்கிறது.

தேசம்: மத்திய குழுவிலிருந்த எல்லாரும்?

அசோக்: யாரும் இது பற்றி கதைக்கவில்லை. குறிப்பாக தளத்தில் நடந்த படுகொலைகளை பற்றி சொல்லி இருக்க வேண்டியது நானும், கேசவனும் தான்.

தேசம்: யாரும் சொல்லி இருக்கலாம் தானே?

அசோக்: அவங்களுக்கு தெரியாது தானே.

தேசம்: ஏன் பத்திரிகைகளில் வெளியில வந்து இருக்கும் தானே?

அசோக்: பெருசா வரேல்ல. புளொட் என்றே தெரியாது. 3 கொலையும் புளொட் என்றே தெரியாது.

தேசம்: அப்போ நீங்கள் தனிப்பட்ட முறையிலேனும் ரகுமான் ஜானுடனோ, கேசவனுடனோ பேசவில்லையா இதைப்பற்றி?

அசோக்: தோழர் கேசவனுடன் இவர்களின் தன்னிச்சையான போக்குகள் படுகொலைகள பற்றி கதைத்திருக்கிறேன். தோழர் கேசவனுடன் முரண்பட்டிருக்கிறேன். தோழர் ரகுமான் ஜான் இக் காலங்களில் பாலஸ்தீன பயிற்சிக்காக சென்றுவிட்டார்.

தேசம்: மற்ற உறுப்பினர்கள்…

அசோக்: தளத்தில் இருந்த ஏனைய மத்தியகுழு உறுப்பினர் ஈஸ்வரன், முரளி, குமரன் ஆட்களோடு எல்லாம் இதைப்பற்றி கதைத்து இருக்கிறேன்.

தேசம்: அது நீங்கள் தளத்தில் இருந்த ஆட்கள். நான் கேட்கிறது பின் தளத்தில் இருக்கிற ஆட்களுடன்

அசோக்: பின் தளத்தில் யாருடனும் கதைக்கேல.

தேசம்: உங்களுக்கு அச்ச உணர்வு இருந்தது அவர்கள் தொடர்பாக அல்லது..

அசோக்: அந்த கால கட்டத்தில் நான் கலந்து கொண்ட முதலாவது இரண்டாவது மத்தியகுழு கூட்டங்கள் அவை. அதனால் அங்கு இவை எதனையும் என்னால் கதைக்க முடியாது போய் விட்டது. ஆனால் தோழர் சந்ததியாரோடு இவை பற்றி கதைத்திருக்கிறேன். கட்டுப்பாட்டு குழுவில் கதைப்பதாக சொல்வார். கதைத்திருப்பாரோ தெரியல்ல. காலப்போக்கில் நிறைய சம்பவங்கள் நடந்தது. அதைப்பற்றி மத்தியகுழுவில் கதைத்திருக்கிறேன். அதைப்பற்றி பிறகு கதைக்கலாம். ஆனால் அக்காலங்களில் சென்றல் கமிட்டியில் இதைப்பற்றி நான் கதைக்கவில்லை. தோழர் கேசவன் தளப் பொறுப்பாளாராக இருந்தவர். அவர்தான் கதைக்க வேணும். ஆனால் அவர் இவை பற்றி கதைத்ததே இல்லை. இப்போது உணர்கின்றேன். நான் கதைத்திருக்க வேண்டும் என்று. திரும்பி பார்க்கையில் நிறைய தவறுகள் செய்திருக்கின்றோம். கடந்து செல்லல், மௌனமாக இருத்தல் என்பதுவும் ஒரு வகை தப்பித்தல்தான். புளாட்டின் தவறுகளுக்கு இவ்வகையில் நானும் காரணம்தான்.

தேசம்: கேசவன் அவரும் தீப்பொறிக்கு போனவர்..

அசோக்: ஓம் தீப்பொறி உருவாக்கத்தில் முக்கியமானவர்.

தேசம்: எனக்கு ஒரு கேள்வி வருது என்னென்றால் உமா மகேஸ்வரன் தவறான முடிவுகளை எடுத்தார் என்று சொல்லி தீப்பொறி ஒருகட்டத்தில் பிரிய வெளிக்கிடுது. ஆனால் தீப்பொறியில் இருந்த நபர்களே உமாமகேஸ்வரனுக்காக சில விஷயங்களை செய்திருக்கினம்.

அசோக்: ஓம் நீங்கள் புளொட்டின் வரலாற்றை எடுத்து பார்த்தீர்களென்றால், எந்த காலகட்டத்தில் இந்த நபர்களுக்கும் முகுந்தனுக்கும் இடையில் முரண்பாடு வரும் காலகட்டத்தை நீங்கள் பார்க்கவேண்டும்.

தேசம்: எப்ப வருது அந்த முரண்பாடு.

அசோக்: அது ஒரு அதிகாரப் போட்டியில்தான் உருவாகிறது. தளத்தில் இராணுவப் பொறுப்பாளராக கண்ணாடிச் சந்திரன் இருக்கும் போது, பின்தளத்திலிருந்து இராணுவப் பயிற்சி பெற்ற தோழர் ரமணன் தள இராணுவ பொறுப்பாளராக பொறுப்பெடுக்கிறார். இதனை கண்ணாடிச் சந்திரன் எதிர்பார்க்கவிலலை. ரமணனோடு இராணுவ பயிற்சி பெற்ற தோழர்களும் வருகின்றார்கள். இவர்கள் தளம் வந்தவுடன் கண்ணாடிச் சந்திரனின் அதிகாரம் இல்லாமல் போய் விடுகிறது. தன்னுடைய பதவி பறிபோகேக்கத் தான் அந்த முரண்பாட்டின் தொடக்கம் வருது. எப்ப தங்களின் அதிகாரம் பறிக்கப்படுதோ அப்பதான் முரண்பாடு வருது.

தேசம்: ரமணனைப் பற்றி சொல்லுங்கள் பார்ப்போம்.

அசோக்: ரமணன் அருமையான தோழர்.

தேசம்: அவர் எந்த மாவட்டம்

அசோக்: அவர் எந்த மாவட்டம் என்று தெரியல. கடைசியா மட்டக்களப்புக்கு போய் ராணுவ சுற்றிவளைப்பில் சுட்டுக்கொல்லப்பட்டார்.

தேசம்: எத்தனையாம் ஆண்டு?

அசோக்: 85 ஆக இருக்கலாம் என்று நினைக்கிறேன். நாலு ஐந்து தோழர்கள் சுற்றிவளைக்கப்பட்டு படுகொலை செய்யப்படுகிறார்கள்.

தேசம்: அந்த காலகட்டத்தில் பின் தளத்தில் படுகொலைகள் ஏதாவது நடந்தது பற்றி நீங்கள் அறிந்திருக்கிறீர்களா

அசோக்: அந்தக் காலகட்டத்தில் நடைபெற்ற சந்தர்ப்பம் இல்லை ஆரம்பகாலம் தானே அது. படுகொலைகள் எப்ப நடக்குது என்று கேட்டால் ஒரு அதிகார மையம் உருவாகின பிறகுதான். சந்தேகங்களின் அடிப்படையில் தான் உட்கட்சி கொலைகள் நடக்குது. 84 க்கு முன்னர் சில படுகொலைகள் நடந்ததென பின்னர் அறிந்திருக்கிறேன். சிவநேசன், ராஜ் மோகன் கொலைகள் என. 84 கடைசி காலங்களிலிருந்துதான் நிறைய தவறுகளும், இயக்க உள் கொலைகளும் தொடங்கி இருக்குமென நினைக்கிறேன். இக்கொலைகளோடு சம்பந்தப்பட்டவர்கள் பலர் இன்னும் உள்ளனர். அவர்கள் உண்மை சொல்ல வேண்டும். குறிப்பிட்ட காலம் வரை புளொட் ஆரோக்கியமான ஒரு அமைப்பாக தான் இருந்தது. முகுந்தனுடைய விசுவாசிகளாக தான் எல்லாரும் இருந்தார்கள். ஏனென்றால் முகுந்தன், சந்ததியாருக்கு இடையில் ஒரு ஒருங்கிணைந்த ஒருமைப்பாடு இருந்தது. கட்டுப்பாட்டுகுழுவை அவதானித்தால் இது விளங்கும்.

தேசம்: அப்போ அந்த நேரத்தில் நடந்த அத்தனை ஜனநாயக விரோத அராஜக போக்குகளையும் எல்லா ஜனநாயக சக்திகளும் ஏற்றுக்கொண்டிருக்கு.

அசோக்: நான் உட்பட, எல்லாரும் ஏற்றுக் கொண்டுதான் இருந்திருக்கிறோம். தளத்தில் இருந்த எங்களுக்கு, பின் தளத்தில் நடந்த படுகொலைகள் தொடர்பாக தெரிந்திருக்கவில்லை. குறிப்பட்ட காலம் வரையும் சந்ததியாரோ, கேசவனோ, ரகுமான் ஜானோ எவருமோ எங்களோடு இவை பற்றி கதைக்கவில்லை. முரண்பாடு தொடங்கிய பின்தான் எங்களோடு இது பற்றி கதைக்கிறார்கள். நாங்கள் கொலைகள் தொடர்பாக விமர்சனங்கள் வைத்தாலும், கொலைகளுக்கு தவறுகளுக்கு நாங்களும் தான் பொறுப்பு. ஏனென்றால் புளொட் தானே செய்தது.

தேசம்: அந்த சந்தர்ப்பத்தில் மத்திய குழுவில் கதைக்கப்படவில்லை.

அசோக்: பின் தளத்தில் சந்ததியார், முகுந்தன் முரண்பாடுகள் தொடங்க முதல், ஆரம்ப காலங்களில் கொலைகள், தவறுகள் தொடங்கிய காலத்திலேயே கதைத்திருந்தால் இவற்றிக்கு முற்றுப் புள்ளி வைத்திருக்க முடியும். கதைக்கப்படவில்லை. அதற்கான சூ ழல் அப்போது இருந்தது. கதைத்திருக்க வேண்டும். பிற்காலத்தில் கதைக்கக் கூடிய சூழல் இல்லை.

தேசம்: நான் குற்றச்சாட்டை உங்கள்மீது வைக்கவில்லை. நீங்கள் உட்பட மத்தியகுழு உறுப்பினர்கள் எல்லாருக்கும் அந்தப் பொறுப்பு இருக்குது தானே. மிக மோசமானது ஏனென்றால், தளத்தில் கொலைகள் நடந்திருக்கு. அதே போன்று ஆரம்ப காலங்களில் பின்தளத்தில் நாலு ஐந்து கொலைகள் நடந்து இருக்கு. அந்த கொலைகள் தொடர்பாக எந்த ஒரு கேள்வியும் கேட்கப்படவில்லை.

அசோக்: கேட்கப்படவில்லை.

தேசம்: மிகத் துரதிர்ஷ்டவசமான விஷயமாகத்தான் பார்க்க வேண்டியிருக்கு. அந்தக் கமிட்டி மீட்டிங் எத்தனை நாள்? எத்தனை நாளுக்கு பிறகு நீங்கள் திரும்பி வாறீங்கள்?

அசோக்: சென்ட்ரல் கமிட்டி மீட்டிங்குக்கு போனால் ஒரு பத்து ,பதினைந்து நாள் நிற்போம்.

தேசம்: அந்தப் பதினைந்து நாளில் அங்கே என்ன மாதிரியான செயற்பாடுகள்?

அசோக்: பயிற்சி முகாம்களுக்கு போவம். தோழர்களை சந்திப்போம். அந்த நேரத்தில், டெசோ மாணவர் அமைப்பு தமிழ்நாட்டில் பல இடங்களில் வேலை செய்தது. டெசோவுக்கு பொறுப்பான தோழர்களை சந்திக்க அநேகமாக நான் போய் விடுவன். சென்னையில் கேசவன், அசோகன் என்று பல தோழர்கள் வேலை செய்தாங்க. திருச்சியில் அலெக்ஸ் ரவி வர்மா பொறுப்பாக இருந்தார். இப்போது கனடாவில் இருக்கிறார். இவர்கள் எல்லாம் அப்போது, தமிழ் நாட்டில் படித்துக் கொண்டிருந்த மாணவர்கள் . டெசோவால் பொங்கும் தமிழமுது என்ற இலக்கிய சஞ்சிகை வெளியிடப்பட்டது. இது தொடர்பான வேலைகளையும் நான் பார்ப்பேன். இப்போ ஞாபகம் இருக்கு. இந்த சஞ்சிகைக்காக எழுத்தாளர் ஜெயகாந்தனை பேட்டி கண்டிருந்தன்.

தேசம்: 84 ஜனவரி நீங்கள் மத்திய குழுவுக்கு போகும் போது கொலைகள் தொடங்கி விட்டனவா?
ஒன்று ரெண்டு நடந் து விட்டன என நினைக்கிறேன்.

அசோக்: சரியா சொல்ல முடியாமல் இருக்கு எனக்கு. அதுக்குள்ள நடந்ததாக தெரியவில்லை. அதற்குப் பிற்பாடு தான் நடந்தது என நினைக்கிறேன்.

தேசம்: அப்போ சென்ட்ரல் கமிட்டியில் கதைக்க வேண்டிய நிலைமையும் வந்திருக்காது.

அசோக்: ஏனென்றால் குறுகிய காலம் தானே. செப்டம்பர் சிறை உடைப்பு, அதற்குப் பிற்பாடு ஜனவரி. அந்தக் குறுகிய காலத்தில் இந்த கொலைகளை செய்வதற்கான சந்தர்ப்பங்கள் இல்லை. எண்பத்தி நான்கில் தான் இந்த கொலைகள் நடக்குது என்று நினைக்கிறேன்.

தேசம்: இதில கட்டுப்பாட்டுக்கு குழு இருக்கிற விஷயம் உங்களுக்கு எப்ப தெரியும்?

அசோக்: முதலாவது சென்றல் கமிட்டிக்கு போனதற்குப் பிறகு கட்டுப்பாட்டு குழு இருப்பது தெரியும்.

தேசம்: அது சாதாரண உறுப்பினர்களுக்கும் தெரியுமா ?

அசோக்: சாதாரண உறுப்பினர்களுக்கு மத்திய குழுவில் யார் இருக்கிறார்கள் என்றே தெரியாது. அப்படி இருக்கும் போது, கட்டுப்பாட்டு குழுபற்றி அறிந்திருக்க வாய்பில்லை. இப்ப புளொட் தோழர்களை கேட்டுப்பாருங்கள் மத்திய குழுவில் யார் யார் இருந்தது என்று. ஏனென்றால், வெளிப்படைத்தன்மை இருக்கவில்லை. ஜனநாயக மத்தியத்துவம் வாய்ந்த வடிவமாக கீழ் இருந்து உள்வாங்கப்படவில்லை. ஈபிஆர்எல்எஃப் பொருத்தவரைக்கும் எல்லாம் வெளிப்படை. கீழிருந்து தெரிவு செய்யப்படுவார்கள். இது மேலிருந்து தானே எல்லாம் தெரிவு செய்யப்படுது. ஜனநாயக வடிவமும் இல்லை. ஜனநாயக தேர்வும் இல்லைத்தானே. கூட்டுச் செயற்பாடு, சுதந்திரமான சிந்தனை முறை என்பது புளொட்டில் இருந்ததில்லை. ஜனநாயக மத்தியத்துவம் என்பது ஒரு அமைப்பின் ஸ்தாபனக் கோட்பாடாக இருக்க வேண்டும். ஆனால் யாரும் இது பற்றி அக்கறைப்படவில்லை.

தேசம்: இதுவரைக்கும் புளொட்டின் வரலாறு எழுதுகிறவர்கள் யாரும் இல்லையே.

அசோக் : ஒரு சிலர் நடைபெற்ற சம்பவங்களை எழுதியுள்ளனர். அரசியல் சார்ந்து விமர்சன நோக்கில் எதுவும் வரவில்லை என்றே நினைக்கிறன்.

தேசம்: எத்தனை மத்திய குழுக் கூட்டம் நடந்திருக்கும் ?

அசோக்: மூன்று, நான்கு மாதத்திற்கு ஒரு தடவை நடக்கும். நாங்கள் நான்கு பேர் இங்கே இருந்து போவோம். 4 பேர் தானே தளத்திலிருந்த ஆட்கள்.

தேசம்: யார்? யார்?

அசோக்: நான், ஈஸ்வரன், முரளி, தளப் பொறுப்பாளராக யார் இருக்கிறார்களோ அவங்கள். முதல் தளப்பொறுப்பாளராக இருந்தது கேசவன் பிறகு தளப்பொறுப்பாளராக இருந்தது குமரன்.

தேசம்: இந்த நாலு பேரும் தான் கமிட்டி

அசோக்: தள மத்திய குழு

தேசம்: இங்க நடக்கிற பிரச்சினைகள் தொடர்பாக முடிவெடுக்கக் கூடியவர்கள் இவர்கள்…

அசோக்: என்ன நடந்தாலும், நாங்கள் தான் பொறுப்பு.

தேசம்: கிட்டத்தட்ட நீங்கள் சொல்வதன் படி பார்த்தால், இந்த நாலு பேருமே ஜனநாயக மத்தியத்துவம், புரட்சிகர சிந்தனை உடைய ஆட்களாக தானே இருக்கினம்.

அசோக்: எங்களுக்குள்ள மிக ஒற்றுமை இருந்தது. மனம் திறந்த உரையாடல் இருந்தது. கூட்டு செயற்பாடு இருந்தது . கேசவன் இருந்த போது இது இருக்கவில்லை. தோழர் குமரன் தளப் பொறுப்பாளராக பொறுப்பெடுத்த போது நிறைய மாற்றங்கள் முன்னேற்றங்கள் தளத்தில் நடந்தன. பின் தளத்தை நம்பி இருக்கும் போக்கை இக் காலங்களில் நாங்க கைவிட தொடங்கிவிட்டோம்.

தேசம்: நாலு பேரும் தானே தளத்தில் நடக்கிற எல்லாத்துக்கும் பொறுப்பு?

அசோக்: ஆனால் யாழ்ப்பாணத்தில் எங்களுக்கு எந்த அதிகாரமும் இல்லை. அதுதான் நடந்த பிரச்சனை.

யாழ்ப்பாணம் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் வேலை செய்த தோழர்கள் அரசியல் வளர்ச்சி கொண்ட தோழர்களாக இருந்தார்கள். அவர்களோடு உரையாடவும் இணைந்து செயற்படவும் முடிந்தது. நிறைய வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்த முடிந்தது. நான் அனேகமாக யாழ்ப்பாணத்தில் இருந்தது குறைவு. யாழ்ப்பாணத்தில் தொழிற் சங்கங்களில், மாணவர் அமைப்புக்களில், பெண்கள் அமைப்புக்களில் நிறைய வேலைத்திட்டங்கள் நடைபெற்றன. மிகத்திறமை வாய்ந்த தோழர்கள் இருந்தார்கள். அவர்கள் அரசியல் சார்ந்து செயற்படவும், சுயமாக செயற்படவும் ஆளுமை கொண்ட தோழர்களாக இருந்தார்கள். இதன் பின்னான காலங்களில் ஏனைய மாவட்டங்களில் தொழிற்சங்கங்கள் மாணவர், அமைப்புக்களை தீவிரமாக அமைக்கும் பணியையும் செயற் திட்டங்களையும் தொடங்கி விட்டோம். மட்டக்களப்பில், அம்பாறை மாவட்டங்களில் பாதுகாப்பு நெருக்கடிகள் இருந்தபோதிலும், தோழர்கள் வரதனும், ராதா கிருஸ்ணனும் அங்கு அமைப்பு வேலைகளை தீவிரமாக செய்தாங்க. அரசியல் வகுப்புக்கள் எடுக்க தோழர்கள் முத்துவும், பிரசாத்தும், பெண்கள் அமைப்பு தோழர்களும் போனாங்க. நானும், தோழர் கௌரி காந்தனும் ஏனைய மாவட்டங்களுக்கு போனேம்.

யாழ்பாணத்தில் நாங்கள் நின்றது மிகக் குறைவு. இக் காலங்களில் கிளிநொச்சி மாவட்டத்தில் தவநாதன், செல்வம், தெய்வேந்திரம் மாஸ்டர், மனோ மாஸ்டர், ரஜனி, பாபு, முல்லைத்தீவு மாவட்டத்தில் சத்தியன், பிரசாத், நந்தன், கோன், வவுனியாவில் பெரியண்ணன், செந்தில் என மிகவும் நல்ல தோழர்கள் வேலை செய்தார்கள். இவர்களோடு உரையாடவும் இணைந்து செயற்படவும் எங்களால் முடிந்தது.

ஆனால், யாழ்ப்பாண நிலமை அப்படி இல்லை. யாழ்ப்பாணத்துக்குள்ள எந்த அதிகாரமும் எங்களுக்கு இருக்கல்ல. ஆரோக்கியமான உறவு நிலையும் இருக்கல்ல.

தேசம்: அதுக்கு யார் பொறுப்பு…

அசோக்: அது ஒரு சிக்கல் தான். யாழ்ப்பாண பொறுப்பு நேரடியாக முகுந்தனிடம் தான் இருந்தது. இங்கு நேசன், கண்ணாடிச் சந்திரன் காலப்போக்கில் சின்ன மெண்டி என இப்படியே போய் விட்டது.

தேசம்: நேசன் மாவட்ட பொறுப்பாளராக இருந்தாலும் அவருக்கு ஊடாக த்தான் எல்லாம்..

அசோக்: நேசன் மாவட்ட பொறுப்பாளர், நாங்கள் மத்திய குழுவில் இருக்கிறோம். நாங்கள் எதுவுமே அங்க செய்ய இயலாது. நேசனை கட்டுப்படுத்த இயலாது. ஏனைய மாவட்ட பொறுப்பாளர்களை நாங்கள் கட்டுப்படுத்தலாம். உரையாடலாம். அவர்களிடம் அவர்களின் தவறுகளை சுட்டிக் காட்டலாம். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியும். யாழ்ப்பாண உறவுநிலை முழுக்க முழுக்க பின் தளத்தோடு இருந்த உறவு தானே. எங்கள விட அங்க ஒரு சக்தி இருக்கு தானே. அவங்களைப் பொறுத்த வரைக்கும் நாங்க எல்லாம் சாதாரண ஆட்கள். என்ன பிரச்சினை என்றால் பெரியய்யா ஆட்கள் நாங்கள் என்ற போக்கு. கிளிநொச்சி, முல்லைத் தீவில், ஏனைய மாவட்டங்களில் ஒரு பிரச்சனை என்றால் நாங்கள் அங்க போவோம் . பிரச்சினையை தீர்ப்போம். யாழ்ப்பாணத்தில் எங்களால் எதுவுமே செய்ய இயலாது. நாங்க நாலு பேரும் டம்மி தான். நேசனின் காலத்தில்தான் காரை நகரில் இயங்கிய சீநோர் படகு கட்டும் தொழிற்சாலை கொள்ளையிடப்பட்டது. யாருக்கும் தெரியாது. இந்த கொள்ளையால், இயங்கி வந்ததொழிற்சாலை மூடப்பட்டது. எங்களால் எந்த நடவடிக்கையும் எடுக்கு முடியவில்லை. இப்படி பல சம்பவங்கள்.

தேசம்: யாழ்ப்பாணத்தைப் பொறுத்தவரை

அசோக்: யாழ்ப்பாணத்தைப் பொறுத்தவரை தளப் பொறுப்பாளர், தள மத்திய குழு உறுப்பினர்கள் எல்லாம் வெறும் டம்மி தான்.

யாழ்ப்பாணத்திலிருந்து தானே பின் தளத்துக்கு கம்யூனிகேஷன். அப்ப இலேசு அவங்களுக்கு. கேட்டா சொல்லுவார்கள் பெரியய்யா ஓடர்அ துக்கு யார் பொறுப்பு… , பெரியய்யாட்ட நாங்கள் சொல்லிக் கொள்ளுவோம். நாம் ஒரு பிரச்சினையை கேட்டால் அதை பெரியய்யாட்ட கதைத்துக் கொள்ளுங்கோ என்பார்கள்.

தேசம்: இது முதலாவது மத்திய குழுக் கூட்டம் இரண்டாவது மத்திய குழுக் கூட்டம் நீங்கள் போய் இருக்கிறீர்கள் அதற்குப் பிறகு நீங்கள் ஒவ்வொரு மத்திய குழு கூட்டத்திலும் கலந்து கொண்டு இருக்கிறீர்களா?

அசோக்: கலந்து கொண்டிருக்கிறோம். அனேகமாக நிர்வாக சிக்கல்கள் தான் கதைக்கபடுவது. இந்தக் கொலைகள் கொள்ளைகள் பற்றி எல்லாம் பெருசாக வெளியில தெரியாது தானே. சந்ததியார் முகுந்தன் முரண்பாட்டுக்கு பிறகுதான் அது வெளிக்கிழம்புது.

தேசம்: அப்போ எப்ப இந்த சந்ததியார் முகுந்தன் முரண்பாடு பெரிய பிரச்சினையாக வருது

அசோக்: அது 85 ஆரம்பத்தில்தான்.

பாகம் 14: மட்டு கச்சேரி துப்பாக்கி கொள்ளையும் – தராக்கி சிவராமின் அரசியல் நுழைவும் – இன்று ஜனநாயகம் பேசுவோரின் கொலைமுகங்களும்

களுதாவளையிலிருந்து பாரிஸ் வரை
ஒர் அரசியல் போராளியின் வாழ்வின் பயணம்!

அசோக் யோகன் கண்ணமுத்துவுடன் ஒர் உரையாடல்! : தோழர் அசோக் யோகன் கண்ணமுத்துவின் சாட்சியம் பகுதி 14 (ஒலிப் பதிவு செய்யப்பட்ட திகதி 09.08.2021). இந்த உரையாடல் அசோக் யோகன் கணணமுத்துவின் பேச்சுமொழியில் எந்த மாற்றமும் இன்றி பிரசுரமாகின்றது.

பாகம் 14

தேசம்: தோழர் மட்டக்களப்பு சிறை உடைப்பை பற்றி கதைத்தோம். அதுக்குப்பிறகு அதாவது எண்பத்தி மூன்று செப்டம்பருக்கு பிறகு, மட்டக்களப்பில் செயற்பாடுகள் எப்படி இருந்தது? குறிப்பா உங்கட செயற்பாடுகள்… ?

அசோக்: புளொட் தீவிரமாக இயங்க முடியாமல் போய் விட்டது. நாங்க அதற்குப் பிறகு மிகக் கடுமையாக தேடப்பட்டோம். வாசுதேவா மற்ற முக்கிய தோழர்கள் எல்லாம் சிறை உடைப்பு சம்பந்தப்பட்ட ஆட்களோட அப்படியே யாழ்ப்பாணம் போயிட்டாங்க. கொஞ்சம் பேர் இந்தியாவுக்கு போய்விட்டார்கள். மிக மிக மோசமான கெடுபிடி அந்த காலகட்டத்தில். ஏனைய தமிழ் பிரதேசங்களிலும் மிகக் கடுமையாகதான் இருந்தது. யாழ்ப்பாணம் தவிர்ந்த, ஏனைய மாவட்டங்களில் புளொட்டினுடைய நடவடிக்கை மட்டுப்படுத்தப்பட்டு தான் இருந்தது. அதான் முழுப்பேரும் யாழ்ப்பாணம் போக வேண்டி வந்தது.

தேசம்: யாழ்ப்பாணத்தில ஏன் அவ்வளவு தூரம் தேடுதல்கள் ஒன்றும் நடக்கேல? யாழ்ப்பாணம் முழுமையாக தமிழ் பிரதேசமாக இருந்தபடியாலா அல்லது ஏற்கனவே போலீஸ் நிலையங்கள் மூடப்பட்டுவிட்டதா அந்த காலகட்டத்தில்?

அசோக்: நான் நினைக்கிறேன் அந்த காலகட்டத்தில் ஏனைய பிரதேசங்களை விட யாழ்ப்பாணத்தில் பொலிஸ் நிலையங்கள் குறைவாகத்தான் இருந்திருக்கும் என்று. முழுக்க முழுக்க தமிழ் பிரதேசங்களாக இருந்தபடியால், எங்களுக்கு ஒழிந்து கொள்வதற்கான சாத்தியங்கள் இருந்தது. ஆனா மட்டக்களப்பில் இவ்வாறான பாதுகாப்பு சூழல் இல்லை. ஒரு பக்கம் கடல் மறு பக்கம் ஆறு. மட்டக்கிளப்பின் புவியியல் அமைப்பை பார்த்தீங்க என்றால், கடலோரக் கிராமங்கள் எங்க பகுதிகளில் கூட. இவற்றல் மறைந்து வாழ்வது கஷ்டம். அப்படி இல்லாவிட்டால் காட்டுக்குப் போக வேண்டும். அல்லது படுவான்கரைக்குப் போக வேண்டும். கொஞ்ச தோழர்கள் படுவான்கரையில் ஒழிந்து வாழும் சூழல் இருந்தது. மற்ற ஆட்கள் யாழ்ப்பாணம் போயிட்டாங்க.

தேசம்: அந்தக் காலகட்டத்தில் தான் நான் நினைக்கிறேன் கச்சேரியில் ஒரு துப்பாக்கி பறிமுதல் நடந்தது என்று. அது எதற்காக மேற்கொள்ளப்பட்டது? எப்படி மேற்கொள்ளப்பட்டது?

அசோக்: மட்டக்களப்பு சிறை உடைப்புக்கு பிற்பாடு, அதை புளொட் தான் செய்வதென்று என்று இருந்தது. அதற்கான வரைபடங்கள், ரெக்கி எல்லாம் ஒரு தோழர் பார்த்து தந்தவர். எங்களுக்கு நம்பிக்கையான தோழர் அவர். அவர்தான் எல்லா ஆயத்தங்களும் செய்தவர்.

மட்டக்களப்பு சிறை உடைப்பு சம்பவம் நடந்தவுடனே மிக கெடுபிடி இருந்ததால, முக்கியமான தோழர்கள் எல்லாருமே வெளியில போயிட்டாங்க. நானும் ஈஸ்வரனும்தான் தான் மிஞ்சினது. அப்ப எங்களால் எதுவும் செய்ய முடியாமல் போய்விட்டது. அந்த நேரத்தில் எனக்கு தனிப்பட்ட வகையிலான நண்பர்கள் சிலர் இதனை செய்ய முடிவு செய்தாங்க. இவர்கள் புளொட்டோட கொஞ்சம் உறவே ஒழிய, புளொட்டில வேலை செய்யவில்லை. அவர்கள் சுயமாக இயங்க வேண்டும் என்று நீண்ட காலமாக எண்ணி இருந்தார்கள். அவங்கள் தாங்கள் இந்த கச்சேரியை செய்யப்போகிறோம் என்று சொல்லி அதைச் செய்தார்கள்.

தேசம்: வேறு அமைப்புகளோடு சேர்ந்தா அல்லது …

அசோக்: இல்லை. அவர்கள் என்னுடைய நண்பர்கள். சின்ன சின்ன அதிருப்திகள் இருந்தது புளொட் தொடர்பாக. எங்களிட்ட ஆட்க்ஷன் இல்லை என்று சொல்லி அதிருப்தி இருந்தது அவங்களிடம். நான் முன்னர் கதைத்த நாக படை வேறு, இவங்க வேறு.

உண்மையில் இந்த நடவடிக்கைக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை. அவங்கள் மிகக் கடுமையான நெருக்கடிக்குள்ள அதை செய்தாங்க. அந்த ஆயுதங்கள் என்னுடைய களுதாவளை கிராமத்தில்தான் புதைக்கப்பட்டது.

அடுத்த நாள் போய் பார்த்தபோது புதைத்த இடத்தில் ஒன்றுமில்லை. அப்போ இவங்களுக்கு பெரிய அதிர்ச்சி.

அது என்ன நடந்தது என்று கேட்டால், எங்களுடைய ஊரில் அதிகாலையில் கரையோரமாக கடலில் மீன்பிடித்துக் கொண்டிருப்பது வழமை.

கடற்கரையை அண்டிய பகுதி ஒன்றில் ஆயுதங்களை மறைவாக புதைக்கும் போது, கடற்கரையில் கரைவலையில் மீன் பிடித்துக் கொண்டிருந்தவர்கள், இவங்கள் புதைத்ததைக் கண்டுட்டாங்க. அவங்களுக்கு என்ன சாமான் என்று தெரியாது, பிறகு தோண்டி பார்த்திருக்கிறாங்கள் துப்பாக்கி. எங்கட கிராமத்து ஆக்கள் அவங்க. எல்லாரும் ஒன்டு ரெண்டு என எடுத்து தங்கள் வீடுகளுக்கு கொண்டு போய்விட்டார்கள். மொத்தம் 67 துப்பாக்கிகள் என நினைக்கிறேன்.

பிறகுதான் கேள்விப்பட்டிருக்கிறார்கள் இப்படி கடற்கரையிலிருந்த ஆட்கள் கொண்டு போய்விட்டார்கள் என்று. என்னிடம் வந்து சொன்னாங்க. அப்போ நான் தேடப்பட்டு கொண்டிருக்கிற நேரம். நானும் நேரடியாக போகேலாது. போனாப் பிரச்சனை வந்திடும். நான் நண்பர்களிடம் சொன்னேன், நீங்க போய் கேளுங்க என்று. இவங்க போய் எடுத்தவங்களிடம் கேட்ட போது, அவர்கள் கொடுக்க மறுத்து விட்டார்கள். அவங்களுக்கு இதன்ற பிண்ணனி அபாயம் எதுவும் தெரியாது.

பிறகு நானும், தோழர்கள் பணிக்ஸ்சும், கராட்டி அரசனும் போய் வாங்கி, இன்னொரு இடத்திற்கு மாத்தினோம். நான் போனதால் நாங்கள் தான் இதைச் செய்தோம் என நினைத்து, பொலிஸ் என்னை கடுமையாக தேடத் தொடங்கி விட்டார்கள். அதற்குப் பிறகு, நான் தோழர் ஈஸ்வனிடம் இந்த துப்பாக்கி சம்பந்தப்பட்ட விடயங்களை பொறுப்புக் கொடுத்துவிட்டு, என்னுடைய கிராம சூழலை விட்டு மட்டக்களப்புக்கு டவுனுக்கு வந்துட்டேன்.

அங்க ஒழித்துக் கொண்டிருக்கும் போது, இந்த நண்பர்களுக்கும், ஈஸ்வரனுக்கும், எனக்குமான கம்யூனிகேஷன் இல்லாம போயிட்டுது. அப்போ இந்த கம்யூனிகேஷன் ஏற்படுத்துவதற்கான நம்பிக்கையான ஒருவர் எனக்கு கட்டாயம் தேவை. அப்போது எனக்கு தெரிந்த நண்பர் ஒருவர் சொன்னார் சிவராமை பயன்படுத்தலாம் என்று. சிவராமை எனக்கு முதலே தெரியும். என் நண்பர் கவிஞர் வீ. ஆனந்தனின் நண்பன் சிவராம். அத்தோடு, மட்டக்களப்பில் வாசகர் வட்டம் ஒன்று இருந்தது. அதற்கூடாகவும், சிவராமை எனக்கு தெரியும். அடிக்கடி சந்தித்து கொள்ளுவோம். ஆனால் பெரிய நெருக்கம் இல்லை எங்களுக்குள்ள. அப்போ சிவராமை கூப்பிட்டு, சிவராமுக்கு ஊடாகத்தான் அந்த நண்பர்களோடும், ஈஸ்வரனோடும் தொடர்களை ஏற்படுத்திக் கொண்டேன்.

தேசம்: பிற்காலத்தில் தராக்கி என்று அழைக்கப்பட்ட சிவராமும் இவரும் ஒருவர்தானே..

அசோக்: ஆம். ஒருவர்தான். ஏனென்றால் சிவராமின் பேக்ரவுண்ட் ரோயல் பெமிலி. அப்போ பொலிசாருக்கு சந்தேகம் வராது. அப்போ சிவராமை வைத்துக்கொண்டுதான் கம்யூனிகேஷன் செய்கிறோம். அந்த பிரச்சினை தீர்ந்ததற்குப் பிறகு நான் யாழ்ப்பாணம் வந்துட்டேன். ஈஸ்வரன் வவுனியா போட்டார்.

தேசம்: துப்பாக்கிகளுக்கு பிறகு என்ன நடந்தது?

அசோக்: துப்பாக்கிகளுக்கு பிறகு என்ன நடந்தது என்று கேட்டால், துப்பாக்கிகள் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. ஒரு பத்து, பதினைந்து துப்பாக்கிகள் இடங்கள் மாறும் மாறும்போது பல்வேறு பிரச்சினையால் விடுபட்டு போய் விட்டது. அது அவங்களுக்கு கிடைக்கல. ஒரு ஐந்து ஆறு தோழர்கள். அந்நேரம் அவங்களுக்கு வேற அமைப்புகளும் இல்லை. அவங்களுடைய சிந்தனைக்கும், செயற்பாட்டிற்கும் ஏற்றது புலிகளாகத்தான் இருந்தது. புலிகளோடு சேர்ந்து விட்டார்கள். அதுல முக்கியமா என்னுடைய நண்பன் மாறன் சின்னத்தம்பியும் ஒருவர். பிறகு அவர் புலியை விட்டு விலகி இருந்ததாகவும், இந்திய இராணுவ காலத்தில் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் பிற்காலங்களில் அறிந்தேன்.

கொஞ்ச காலத்திற்கு பிறகு, யாழ்ப்பாணத்தில் நான் இருந்த போது, என்னுடைய நண்பர் வந்து சொன்னார் மட்டக்களப்பில் இருந்து, என்னை பார்ப்பதற்கு ஒருவர் வந்திருக்கிறார் என்று. அங்க போனா, நாலைந்து பேரோட எல்.ரீ.ரீ.ஈ மாத்தையா நிக்கிறார்.

தேசம்: உங்களை வரச்சொன்னது மட்டக்களப்பைச் சேர்ந்த மாறனா?

அசோக்: இல்லை. என்னிடம் வந்து சொன்னவர் யுனிவர்சிட்டி யில் படிக்கும் நண்பர். என்னை தேடி வந்தவர் யார், என்ன பெயர் என்று அவரிடம் நான் கேட்ட போது, தனக்கு தெரியாது என்றும், தன்னிடம் என்னை விசாரித்தபடியால் வந்து சொன்னதாக கூறினார். ஆனால், அவர் புலிக்கு வேலை செய்தவர் என்று பிறகுதான் தெரியும். காலப்போக்குல புலிக்கு உளவாளியா வேலை செய்தார் என்று கேள்விப்பட்டேன்.

துப்பாக்கி சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் தங்கட இயக்கத்திற்கு வந்துவிட்டார்கள் என்றும், குறிப்பிட்ட துப்பாக்கிகளை நாங்கள் தரவில்லை என்று சொல்லி அவற்றை தர வேண்டும் என்றும் மாத்தையா சொல்கின்றார்.

அந்த துப்பாக்கிகளால் பெரிய பிரயோசனம் இல்லை. எல்லாம் சொட் கண். அத்தோட, மாத்தையாவோடு நிற்கிற ஆட்களில், துப்பாக்கி சம்பவத்தில் ஈடுபட்ட யாரும் இல்லை. ஆனால் இவர் கேட்கிறார். அப்ப நான் நடந்த சம்பவங்களை விளங்கப்படுத்தினேன், இதுதான் நடந்தது என்று சொல்லி.

தேசம்: அதுல மாத்தையாவும் வேறு யாரும் வந்தது புலிகளிலிருந்து?

அசோக்: மாத்தையாவை மட்டும் தான் எனக்கு தெரியும். மற்றவர்களைக் காட்டி, இவங்களும் துப்பாக்கி சம்பவத்தில் சம்பந்தப்பட்டவங்க என்று மாத்தையா என்னிடம் சொல்கிறார். ஆனா யாருமே சம்பந்தப்பட்ட ஆக்களா எனக்கு தெரியல.

அப்போ நான் சொன்னேன், உங்களுக்கு நன்மை செய்ய போய்த்தான் நாங்களும் தேடப்பட்டு இவ்வளவு சிக்கல் பட்டது. உங்களுக்கு கடைசியா ஒரு பத்து, பதினைந்து துப்பாக்கி தான் இல்லாமல் போனது. அதை பாதுகாத்து உங்களுக்கு தருவதற்கு எவ்வளவு கஷ்டப்பட்டோம் என தெரியுமா என கேட்டேன். இல்ல நீங்கள் ஏமாத்தி போட்டீங்கள். உங்கள் மீது நடவடிக்கை எடுப்போம் என்று சொல்லி, பிறகு அதுல முரண்பட்டு போயிட்டாங்க. பிறகு காலப்போக்கில் அதில் ஒருவரை நான், இந்தியாவில் தற்செயலாக சந்திக்க நேர்ந்தது.

தேசம்: யாரை..

அசோக்: மாத்தையாவோடு வந்த அந்த நாலு ஐந்து பேரில் ஒருத்தரை. அப்போ அவர் சொன்னார் உங்களுக்கு எல்லாம் வெடி இருக்கு என்று.

தேசம்: மட்டக்களப்பிலிருந்து நீங்கள் யாழ்ப்பாணம் போவதற்கு முதலில் மட்டக்களப்பு சிறை உடைப்பில் பயன்படுத்தபட்ட ஆயுதங்கள் தொடர்பா ஒரு சுவாரசியமான கதை இருப்பதாக சொல்லிட்டு அதை நிப்பாட்டிட்டீங்க.

அசோக்: நான் முன்னர் சொல்லி இருப்பேன் என்று நினைக்கிறேன் எறிகுண்டு செய்ததது பற்றி. பால் டின்னில ஜெலட்டின் வைத்து, திரி வைத்து, நெருப்பு கொளுத்தி எறிய வேண்டும் என்ற அடிப்படையில் செய்யப்பட்டது அது… அவற்றில் எதுவுமே பயன்படுத்தப்படவில்லை. எங்கட வீடு ஒரு தென்னந்தோப்பு. அங்க தேங்காய் உரித்த பிறகு, தேங்காய் மட்டை எல்லாம் பெருசா குமிச்சு வைத்திருப்பார்கள். மிஞ்சின கைக்குண்டுகள் எல்லாவற்றையும், அதுக்குள்ள நான் ஒழித்து வைத்துவிட்டேன். ஒரு நாள் அம்மா தேங்காய் மட்டை குவியலுக்கு நெருப்பு வைத்து எரித்து இருக்கிறா. இவற்றிக்கு என்ன நடந்தது என்று தெரியல. பார்த்தா எல்லாம் எரிஞ்சி போய்விட்டது.

தேசம்: ஒண்டும் வெடிக்கேல?

அசோக்: ஒன்றுமே வெடிக்கேல. அப்ப யோசித்துப் பார்த்தன் நாங்கள் இதுகளை வைத்துக்கொண்டுதான் சிறையை உடைக்க வெளிக்கிட்டு இருக்கிறோம். அம்மா நெருப்பு வைக்கும் போது வெடித்திருந்தால் பெரிய பிரச்சனை ஆகியிருக்கும். ஆனால் ஒன்றும் வெடிக்காமல், அப்படியே எரிந்து போயிட்டுது. கொஞ்ச காலத்துக்குள்ள தான். நீண்ட காலமும் இல்லை.

தேசம்: அந்த நேர சம்பவங்கள், திட்டமிடல்கள் எல்லாம் ஒரு சிறுபிள்ளைத்தனமாகவும் இருந்திருக்கிற மாதிரி தெரியுது…?

அசோக்: சிறுபிள்ளைத்தனம் என்பதைவிட அதீத நம்பிக்கை இருந்தது எங்களிடம். அந்த நம்பிக்கையும், நல்ல திட்டமிடலும்தான் அந்த வெற்றிக்கு காரணம்.

தேசம்: உங்களுடைய பேனா நட்பு என்பதும் அதனூடாக நீங்கள் எடுத்துக்கொண்ட தொடர்புகளும் தான் கூடுதலாக அரசியலுக்கும், அதற்குப் பிறகு இயக்கத்துக்கும், இயக்கங்களுக்கு இடையேயான உறவுகளுக்கும் உதவியாக இருந்திருக்கும் என நினைக்கிறேன்?

அசோக்: ஒரு பன்முக பார்வை கொண்ட தன்மையையும், ஜனநாயக பண்புகளையும் பேனா நட்பு தந்தது. உரையாடல் தானே வாழ்வை எம் பயணத்தை தீர்மானிப்பவை. எவ்வளவு முரண்பாடுகள் இருந்தாலும் உரையாடுவோம். அது எங்களுக்கு நிறைய பண்புகளை வளர்த்தது. பேனா நண்பர்கள் புளொட்டுக்குள்ள வந்தது குறைவு. ஆனால் தொடர்புகள் இருந்தது. அந்தக் காலம் யூத் கவுன்ஸில் இருந்தது, விளையாட்டு முகாம் எல்லாம் நடந்தது. அதுக்குள்ள நிறைய நண்பர்கள் கிடைத்து, அவங்க நிறைய பேர் புளொட்டுக்குள்ள வந்திருக்கிறார்கள். பெரிய ஒரு நெட்வொர்க் இருந்தது. பென் பிரண்ட், யூத் கவுன்ஸில் என்றெல்லாம் எங்களை நம்பி ஒரு கிரவுட். அதற்கான நம்பிக்கையை நாங்கள் கொடுத்தோம். வேறு இயக்கங்களுக்குள்ளும் என் பேனா நண்பர்கள் ஒருசிலர் இருந்துள்ளனர்.

மட்டக்களப்பில் இருக்கும் போது, எல்லா அமைப்புகளோடும் எங்களுக்கு தொடர்பும் உறவும் இருந்தது. முக்கியமாக அங்க வேலை செய்த ஈபிஆர்எல்எஃப், ஈரோஸ், புலிகளுக்கு வேலை செய்த முழுப் பேரோடையும் எங்களுக்கு உறவு இருந்தது.

உமைகுமாரன், இறைகுமாரன் கொல்லப்பட்ட பின்பும், எங்களுக்குள்ள ஒரு உறவு இருந்தது தானே நாங்க பேசினம் கதைத்தோம்…

தேசம்: யாழ்ப்பாணத்தில வேலை செய்யேக்கை உங்களுக்கு எப்படியான சூழல் இருந்தது ?

அசோக்: குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு நாங்க மட்டகளப்பில் நிற்கமுடியாமல் போய்விட்டது. ரகுமான் ஜான், கேசவன், பார்த்தன், சலீம், செல்வன், ஜென்னி முழுப்பேரும் திருணோமலையிலிருந்து யாழ்ப்பாணம் வந்துட்டார்கள்.

வவுனியா தான் எங்கட பிரதான முக்கிய தளமாக இருந்தது. வவுனியாவில் தங்கராஜா தோழர் எல்லாரும் இருந்தவங்கள். யாழ்ப்பாணத்தில் அமைப்பை மிகத் தீவிரமாக கட்டமைக்க வேண்டும் என்று முடிவு செய்யப்படுகிறது. அது வரைக்கும் யாழ்ப்பாணத்தில் யுனிவர்சிட்டியில் இரண்டு தோழர்கள் வேலை செய்தவர்கள் சத்தியமூர்த்தியும், கேதீஸ்வரனும். கேதீஸ்வரன் திருகோணமலை, சத்தியமூர்த்தி யாழ்ப்பாணம். குமரன் தோழர் யாழ்ப்பாண மாவட்ட பொறுப்பாளராக இருந்தார். பெரிதாக மக்கள் அமைப்பு வேலைகள் எதுவும் நடக்கல்ல.

தேசம்: இப்பவும் அவர்கள் இருக்கிறார்களா?

அசோக்: தோழர் குமரன் இங்க பிரான்சில் இருந்தவர். இறந்து விட்டார். சத்தியமூர்த்தி இலங்கையில் இருக்கிறார். கேதீஸ்வரன் காந்திய வாகனத்தில் போய், யாழ்ப்பாண பௌத்த விகாரையடியில் இராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டவர்.

அந்த காலகட்டத்தில் யாழ்ப்பாணத்தில மற்ற இயக்கங்கள் தீவிரமாக வேலை செய்து கொண்டிருந்தது. அப்போ நாங்களும் வேலை செய்ய வேண்டும் என்று நானும், தங்கராஜா தோழரும் யாழ்ப்பாணம் போறோம். ஏனென்றால் அரசியல் வகுப்பு எடுக்க வேண்டியிருந்தது. அமைப்பு வடிவங்களை உருவாக்க வேண்டி இருந்தது.

தேசம்: தங்கராஜா தோழர் எந்த பகுதியை சேர்ந்தவர்…

அசோக்: அவர் மலையகத்தை சேர்ந்தவர். இப்போது, இந்தியாவில் தான் இருக்கிறார். அவர் ஜே.வி.பி இல் இருந்து வந்தவர்.

தேசம்: மலையகத்தை சேர்ந்த தோழர்களும் கணிசமான அளவில் இருந்தார்களா?

அசோக்: நிறைய முக்கியமான தோழர்கள் ஆதவன், மாணிக்கம் என்று ஒரு தோழர் முக்கியமானவர். மாணிக்கம்பிள்ளை என்ற ஒரு தோழர் இருந்தவர். பெரியண்ணன் என்று சொல்லி வவுனியா அவர். நிறைய தோழர்கள் இருந்தார்கள்.

நாங்க யாழ்பாணம் போகும்போது, அங்கு பெரிதாக அமைப்பு வடிவம் இருக்கவில்லை. நாங்க போய்த்தான் அவற்றை ஒழுங்கமைக்கின்றோம். யாழ்ப்பாண மாவட்டத்திற்கு பொறுப்பாக இருந்த தோழர் குமரன், நெருக்கடிகளால் எதுவும் செய்ய முடியல்ல. குமரன் பின்தளம் போய், கரையோரப் பொறுப்புக்களை, கடல் போக்குவரத்துக்களை பார்க்க வேண்டி இருந்ததால், மாவட்ட பொறுப்பாளராக நேசன் என்று சொல்லி, இப்போது கனடாவில் இருக்கிறார். அவரை நியமிக்கிறார். தளப் பொறுப்பாளாராக தோழர் சலீம் பொறுக்பெடுக்கிறார். அவர் பொறுப்பெடுத்து மூன்று மாதத்திலேயே திருநெல்வேலியில் வைத்து இராணுவத்தால் கைது செய்யப்பட்டு விட்டார். அதற்குப் பிறகு தோழர் கேசவன் தளப்பொறுப்பாளராக வருகின்றார்.

இக் காலங்களில் நாங்கள் அமைப்பை கட்டுவதற்கான தீவிர முயற்சியில் ஈடுபடுகிறோம். தொழிற்சங்கங்கள், மாணவர் இயக்கங்கள், பெண்கள் அமைப்பு என உருவாக்குகின்றோம். இவ் அமைப்புக்களை சேர்ந்த தோழர்களுக்கு பாசறைகள் வைத்து அரசியல் வகுப்புக்கள் நடாத்துகிறோம்.

தேசம்: தளத்தில் வந்து மத்திய குழுவைச் சேர்ந்த தோழர்களில் நீங்கள் ஒருவர், மற்ற தோழர்கள் யார் யார்…?

அசோக்: மத்திய குழு உருவாக்கப்படவில்லை. இந்த நேரத்தில் தற்காலிக மத்திய குழு இருக்கிறது . இது பற்றி முன்னமே கதைத்துள்ளோம்.

தொழிற்சங்கங்களுக்கு முக்கியமாக ஐபி, ஜீவன், ராஜன், பிரசாத், முத்து, ரகு, கௌரிகாந்தன், இளவாலை பத்தர், கிருபா அவங்க எல்லாம் இருக்கிறாங்கள். பிறகு மாணவர் அமைப்புகள் டெசோ உருவாக்கப்பட்டு, தீபநேசன், குருபரன், ஜபார், மகிழ்ச்சி, அர்ச்சுனா, தமிழ், தம்பா, தனஞ்சயன், சிவகுமார், விமலேஸ்வரன், லவன், சுகந்தன், திரிலிங்கம் ஞானம், போல், பாபு, இப்படி நிறைய தோழர்கள். பெண்கள் அமைப்பில் நிறைய தோழர்கள் வேலை செய்தவங்க. மாணவர் அமைப்பிலும் நிறைய பெண் தோழர்கள் வேலை செய்தவர்கள் பெயர்கள் வேண்டாம்.

மக்கள் அமைப்பில் உரும்பிராய் குமார், சீலன், விபுல், இளங்கோ, பரணீதரன், கதீர், இப்படி நிறைய. கொக்குவில் தோழர்கள் நிறையப்பேர். நாதன், சிவானந்தன், செல்வன், ஆனந்தன், தோழர்கள் பெயர்களை ஞாபகப்படுத்த முடியாமல் உள்ளது.

தேசம்: நான் நினைக்கிறேன் அந்த காலகட்டத்தில் புளொட்டில் தான் ஆகக்கூடுதலான தோழர்கள் இருந்தார்கள் என்று.

அசோக்: ஓம். ஒப்பிட்டளவில் புளாட் அமைப்பில்தான் கூடுதலான தோழர்கள் இருந்திருப்பார்கள் என நினைக்கிறன். மாணவர் அமைப்பு டெசோவின் இருந்த தோழர்கள் பாசறைகளில் கலந்து கொண்டார்கள். உண்மையில் டெசோவும், தொழிற்சங்கமும், பெண்கள் அமைப்பும் அரசியல்ரீதியாக வளர்ச்சி கொண்ட தோழர்களை கொண்டிருந்தது. யாழ்ப்பாணத்தில் என்ன நடந்தது என்று கேட்டால், யாழ்ப்பாண நிர்வாக அமைப்பு குறிப்பாக மக்கள் அமைப்பு பொறுப்பாளர்களை, மாவட்ட அமைப்பாளராக நியமிக்கப்பட்ட நேசனும், கண்ணாடிச் சந்திரனும்தான் தீர்மானிச்சாங்க. எங்களுக்கு அங்கு பெரிதாக யாரையும் தெரியாது. பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட இந்த தோழர்களுக்கு அரசியல் சார்ந்த வரலாற்று புரிதலும், கோட்பாட்டு ரீதியான புரிதலும் இல்லை. அவர்கள் வெறும் நிர்வாகிகளாகத்தான் இருந்தாங்க.

அவர்களுக்கு கீழ வேலை செய்ற தோழர்கள் அரசியல் வகுப்புக்கு வந்தாங்க. கீழ் மட்டங்களில் வேலை செய்த தோழர்கள், மற்றும் மாணவர் அமைப்புகள் தொழிற்சங்கங்களில் வேலை செய்தவர்கள் அரசியல் ரீதியாகவும், சிந்தனை ரீதியாகவும், ஒரு மாக்சிச ஐடியோலொஜி உள்ளவர்களாகவும், முற்போக்கான எண்ணம் கொண்டவர்களாகவும் இருந்தார்கள். அப்ப எங்களுக்கு அவங்களோட வேலை செய்றது லேசாக இருந்தது.

தேசம்: நான் திருப்பியும் பேனா நண்பர்கள் என்ற விடயத்திற்கு வாரன். உங்கள் பேனா நண்பர்களில் சிலர் பிற்காலத்தில் விடுதலைப்புலிகளில் இயங்கியதாக ஒரு தடவை சொன்னது ஞாபகம் உள்ளது. அதைப்பற்றி சொல்லமுடியுமா?

அசோக்: யாழ்ப்பாணத்தில ஒரு பேனா சிநேகிதி இருந்தவ. யாழ்ப்பான யூனிவர்சிட்டியில் எம் ஏ செய்தவா. பல்கலைக்கழக மறுமலர்ச்சிக் கழகத்தில் வேலை செய்து, அப்படியே புலிக்கு போயிற்றாங்க. பிறகு புலிகளிலிருந்து வெறியேறிட்டாங்க. அவங்களால்தான் திலீபன் உறவு எனக்கு வந்தது.

தேசம்: உண்ணாவிரதம் இருந்து இறந்த திலீபன்

அசோக்: ஓம். ஒரளவு எங்களுக்கு யாழ்ப்பாணத்தில, பேசக் கூடிய உறவுகள், எல்லா அமைப்புகளிடமும் இருந்தது.

தேசம்: இது ஒன்றும் யாழ்ப்பாணத்திலிருந்த தோழர்களுக்கு இடையில் இருக்கேல. ஏன் ?

அசோக்: அப்படி முழுமையாக சொல்லமுடியாது. அரசியல் வளர்ச்சி கொண்ட, ஜனநாயகப் பண்பு கொண்ட தோழர்கள் மத்தியில் உரையாடல்கள் இருந்தன. இது எல்லா இயக்கங்களுக்கும் பொருந்தும். ஆனால் பெரும்பான்மை கொண்டதாக, ஆதிக்கம் கொண்டதாக ஏனைய சக்திகள்தான் இருந்தன. அதுதான் பிரச்சனை. இயக்கங்களோடு பல்வேறு முரண்பாடுகள் வரேக்க நான்தான் அனேகமா பேச்சுவார்த்தைக்கு போறது. சுழிபுரம் படுகொலை தொடர்பாக கூட நான்தான் பேச்சுவார்த்தைக்கு போனான். அதைப் பிறகு கதைக்கலாம் என்று நினைக்கிறேன்

ஈபிஆர்எல்எஃப் க்கு இன்டலெக்சுவல் வட்டம் ஒன்று இருந்தது. நிறைய இடதுசாரி தோழர்களுடன் எல்லாம் உறவை வளர்த்து இருந்தாங்க. புளொட்டுக்கு அந்த நேரத்தில் இவ்வாறான தொடர்புகளும், உறவுகளும் இருக்கவில்லை.

நாங்க போனதற்குப் பிறகுதான், ஓரளவு இடதுசாரித் தோழர்கள், இலக்கிய துறை சார்ந்த நண்பர்களோடு உறவுகளை ஏற்படுத்திக் கொள்ளமுடிந்தது. உரையாடலுக்கான உறவை அவர்களுடைய கருத்தை உள்வாங்குவதற்கான உறவை நாங்கதான் ஏற்படுத்தி கொண்டோம். இதில சந்திச்ச தோழர்களில்
நாகராஜா, கௌரிகாந்தன், முத்து, ஜெயபாலன் போன்றவங்க அரசியல் வகுப்புக்கள் எங்களுக்கு எடுத்தவங்க. அந்த நேரத்தில்தான் நாங்கள் சுவர் என்ற பத்திரிகையும் வெளியிட்டோம்.

தேசம்: அது டெசோ மாணவர் அமைப்பு சார்ந்ததா?

அசோக்: இல்லை இல்லை. அப்ப யாழ்ப்பாணத்தில் புதுசு என்ற சஞ்சிகை வெளி வந்திருந்தது. நல்ல காத்திரமான இலக்கிய சஞ்சிகை அது. சபேசன், ரவி அருணாசலம், இளவாலை விஜயேந்திரன் போன்றவங்க சேர்ந்து வெளியிட்டார்கள். சபேசன், ரவி அருணாசலம் அவங்களோட எனக்கு ஒரு நட்பு ஒன்று இருந்தது. தோழர் கேதீஸ்வரனும் இவங்களோடு நட்பாக இருந்தார். நாங்களும் ஒரு இலக்கிய பின்புலத்திலிருந்து வந்த ஆட்கள் தானே. அப்ப இலக்கிய சஞ்சிகை வெளியிடலாம் என்ற ஒரு ஐடியா இருந்தது. எங்க நோக்கம் என்னவென்றால் புளொட்டினுடைய அரசியல் சாராமல், ஆரோக்கியமான உரையாடலுக்கான ஒரு சுதந்திர தளமாக அந்த இலக்கிய சஞ்சிகையை கொண்டு வர வேண்டும் என்ற ஒரு ஐடியா இருந்தது. அப்போது வழி செல்லத்துரை என்றொரு தோழர் இருந்தவர். இப்ப கனடாவில் இருக்கிறார். அவரோட கதைத்த போது, நல்ல முயற்சி செய்யலாம் என்றார். அதன் பின்பு தோழர்கள் கேசவன், ரகுமான் ஜான், கேதிஸ்வரனோடு கதைத்து கொண்டு வரலாம் என முடிவு செய்கிறோம்.

தேசம்: வலி செல்லத்துரை என்பது அவர் வலிகாமம் என்பதாலா ?

அசோக்: இல்லை இல்லை. அவர் புன்னாலைக் கட்டுவனைச் சேர்ந்தவர். வழி என்று ஒரு பத்திரிகை வெளியிட்டவர். பிறகு சபேசனோடு இது பற்றி கதைக்கிறம். அதற்கு பிறகு நாங்கள் ஒரு சுவர் என்ற பெயரில் சஞ்சிகை ஒன்று கொண்டு வாறதுக்கு கமிட்டி ஒன்று உருவாக்கி, அந்தக் கமிட்டியில் சபேசன், ரவி அருணாச்சலம், நான், ஜீவன், வழி செல்லத்துரை, கேதீஸ்வரன் முதலாவது சஞ்சிகையை கொண்டு வந்தம். சஞ்சிகை ஒரு ஆரோக்கியமான உரையாடல் தளமாக இருந்தது. பல பேரின் படைப்புக்கள் அதில் வெளிவந்தன. இரண்டாவது சஞ்சிகை கொண்டு வரேக்க இயல்பாகவே இயக்கவாதம் தெரியும்தானே, அந்தக் கவிதை பிழை, கட்டுரை பிழை என்று சொல்லி. அதுல பெரும் பிரச்சனை எடுத்தது கண்ணாடி சந்திரன்.

தேசம்: அவர் உங்கட குழுவில் இருக்கிறாரா?

அசோக்: குழுவில் இல்லை. ஆனால் அவர் ஒரு அதிகார மையமாக மாறிவிட்டார் அந்த நேரம்.

தேசம்: இந்த சஞ்சிகை வெளியிடுவதற்கான ஆதரவைப் புளொட் தான் தந்தது.

அசோக்: இது சம்பந்தமாக தோழர்கள் ரகுமான் ஜான், கேசவன் ஆட்களோட எல்லாம் கதைத்து ஓகே பண்ணிட்டாங்க. பிறகு ரகுமான் ஜான் இந்தியாவுக்கு போயிட்டார். இங்கே இருந்தது கேசவன் தோழர்தான். முதலாவது நிதி புளொட் தந்தது. பிறகு கண்ணாடிச் சந்திரன் பிரச்சனை கொடுக்க தொடங்கிவிட்டார். கேசவன் தோழரும் கண்ணாடிச் சந்திரனின் அதிகார மையத்தோடு அக்காலங்களில் ஐக்கியமாகிக் கொண்டிருந்தார். நேசன், கண்ணாடிச் சந்திரன் போன்றவர்களின் அதிகார தன்னிச்சையான போக்குகளை கண்டிக்காமல், அவர்களோடு தாராளவாதம் கொண்டவராக இருந்தார். இரண்டாவது பத்திரிகையை வெளியிடுவதற்கு எங்களிடம் பணம் இல்லை. அந்த நேரம் யாரிடமும் இப்படி பிரச்சினை என்று சொல்லவில்லை.பிறகு நாங்கள் ஸ்டாப் பண்ணிட்டோம்.

தேசம்: இதுல ரகுமான் ஜான், நேசன், கண்ணாடிச் சந்திரன் மூன்று பேரும் பிறகு தீப்பொறி உருவாக்கினம். இவர்கள்தான் அதிகார மையங்களை உருவாக்குகின்றார்கள்…

அசோக்: இதை நீங்கள் வரலாற்று ரீதியாக பார்த்தீர்களென்றால், இப்படி இந்த அதிகார மையம் உருவாகுவதற்கான அடிப்படைக்காரணங்களும், அதன் சூழலும், அது பற்றிய அரசியல் பார்வையும் எங்களுக்கு அவசியம். ஏனென்றால், இப்ப நாங்கள் எடுத்த உடனேயே எல்லாரும் தலைமை மீது தானே குற்றச்சாட்டு வைக்கிறம். தலைமையில் ஒரு அதிகார மையம் உருவாகிய அதே நேரம், தளத்திலும் ஒரு அதிகார மையம் உருவாகுது. கண்ணாடிச் சந்திரன், நேசன் போன்றவர்கள் அந்த அதிகார மையத்தை உருவாக்குகின்றனர்.

அதற்கு தோழர் கேசவனும் துணை போகின்றார். உதாரணமாக பார்த்தீர்கள் என்றால், பார்த்தன் தான் இராணுவப் பொறுப்பாளராக இருந்தவர் தளத்துக்கு. அந்த காலகட்டத்தில் கொலைகளும், கொள்ளை நடக்கவில்லை. நாங்கள் அரசியல் மயப்படுத்தும் வேலைகளில் ஈடுபட்டு கொண்டிருந்தோம்.

தேசம்: அந்தக் காலகட்டத்தில் நல்ல ஒரு உறவு ஒன்று இருந்தது.

அசோக்: ஓம் நிச்சயமாக. புளொட் அமைப்பின் வேலைத்திட்டங்கள் யாழ்ப்பாணத்தில் சுமூகமாகப் போய்க் கொண்டிருந்தது. வேறு அமைப்புகள் சில நடவடிக்கைகளில் ஈடுபட்டாலும் கூட, புளொட் எந்த விதமான தவறான நடவடிக்கைகளிலும் ஈடுபடவில்லை. பார்த்தன் மட்டக்களப்புக்கு போய் போலீசில் பிடிபட்டு கொலை செய்யப்பட்டபோது, ராணுவ பொறுப்பாளர் இல்லாத ஒரு காலம் வருது.

தேசம்: பார்த்தன் என்பது ஜெயச்சந்திரன். ஜென்னியின் துணைவர்…

அசோக்: ஓம். அந்த இடைவெளியில் ஒரு ராணுவ பொறுப்பாளர் அவசியம் என்ற வகையில் கண்ணாடிச் சந்திரன் நியமிக்கப்படுகிறார். பார்த்தனுக்கும் எங்களுக்கும் இடையில் ஒரு ஆரோக்கியமான உரையாடல் இருந்தது, தோழமை இருந்தது. கண்ணாடிச் சந்திரனிடம் அது இல்லாமல் போய் விட்டது. இவர் மற்றவர்களை தோழமையோடு எப்பவும் அணுகுவதில்லை. எப்போதும் அதிகாரத்தனம்தான்.

நேசனைப் பொறுத்தவரை, அரசியல் ரீதியில் எந்த வளர்ச்சியும் அற்றவர். வெறும் நிர்வாகி. சொல்லப் போனால், கண்ணாடிச் சந்திரனின் அடிமையாகவே இருந்தார். குமரன் தோழரிடம் நான் பகிடியாக கேட்பதுண்டு. எப்படி நேசனை கண்டுபிடிச்சீங்க என்று.

தேசம்: பார்த்தன், நீங்கள், மற்றது வாசுதேவா எல்லாரும் காந்தியத்திலிருந்து அரசியல் மயப்படுத்தப்பட்டு வாறீர்கள். கண்ணாடிச் சந்திரனின் பின்னணி என்ன?

அசோக்: அவர் மொரட்டுவை யூனிவர்சிட்டியில் ஆர்க்கிட்டெக் படித்துக் கொண்டிருந்தவர். படிக்க முடியாத சூழல் வருதுதானே. அப்போது புளொட்டிக்கு வருகின்றார்.

தேசம்: இவரைப் போன்றவர்களுக்கு அரசியல் வளர்ச்சியும், இராணுவப் பயிற்சியும் இருக்கேல

அசோக்: எதுவும் இல்லை..

தேசம்: அப்போ என்ன என்று அந்த பொறுப்பான பதவிக்கு வாறினம்?

அசோக்: இவர் ரகுமான் ஜானின் நெருங்கின நண்பர். யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் இவங்க இருவரும் படித்தவர்கள். இவர் வந்த பிண்ணனி பற்றி முன்னர் கதைத்திருக்கிறோம்.

தேசம்: அதற்காக, இவ்வாறு பொறுப்பு கொடுக்க முடியுமா?

அசோக்: இவ்வாறுதான் அதிகார துஷ்பிரயோகங்கள் தளத்தில் உருவாகியது. பிற்காலத்தில் ரகுமான் ஜான் தோழருடன், கண்ணாடிச் சந்திரன் பற்றி கதைக்கும் போது, கண்ணாடிச் சந்திரன் பிற்போக்கான ஆள் என்றும், தன் ஊரில் நடந்த சாதிய கலவரம் ஒன்றில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிராக செயற்பட்டவர் என்று சொன்னார். அப்ப கேட்டேன், இப்படிப்பட்டவரை எந்த எந்த அடிப்படையில் கொண்டு வந்தீர்கள் என்று. தனக்கு அப்போது தெரியாது என்றும், பின்னர்தான் தான் அறிந்ததாகவும் சொன்னார். நான் இன்றைக்கும் மதிக்கும் தோழர்களில், ரகுமான் ஜான் தோழர் முக்கியமானவர். ஆனால் அவரின் பலவீனம், தனிப்பட்ட நட்புக்களுக்கு இயக்கத்தினுள் முக்கியத்துவம் கொடுத்தது.

தேசம்: பொருளாதார ரீதியில் கண்ணாடிச் சந்திரன் எப்படியான பின்னணியை கொண்டிருந்தார்.

அசோக்: நான் பகிடியா சொல்லுறது, கண்ணாடி சந்திரனை அவருடைய காருக்காகத்தான், புளொட்டில் சேர்த்தது என்று சொல்லி. அவரின் சொந்த காரிலதான் வருவார்.

தேசம்: செல்வந்த குடும்பத்தை சேர்ந்தவர்.

அசோக்: ஓம். அதிகார வர்க்கமாக யாழ்ப்பாணத்தில் ஒரு குரூப் அப்போதே உருவாகிவிட்டது. அந்த நேரத்தில் எனக்கும் இவர்களுக்கும் முரண்பாடு தொடங்கி விட்டது.

தேசம்: யாழ்ப்பாணத்தின் இயல்பா இது… ?

அசோக்: மத்தியதர வர்க்கத்தின் இயல்பு இது. மத்திய தர வர்க்கம் அதிகாரத்துக்கான அபிலாசை கொண்டது. அதற்காக எந்த சமரசமும், எந்த தவறுகளையும் செய்யத் துணியும்.

தேசம்: மத்திய தர வர்க்கம் என்றால், கிழக்கு மாகாணத்தில் மத்தியதர வர்க்கம் இருக்குத்தானே

அசோக்: மத்தியதர வர்க்கத்தில் அபிலாசைகள், எதிர்பார்ப்புக்கள் நடத்தைகள் எல்லாம் எங்கும் ஒன்றாகத்தான் இருக்கும். இயல்பாக எம் எல்லோரிடமும் இந்த குணாம்சம் இருக்கும். அது அதிகாரத்திற்கு ஆசைப்படும். தன்னைச் சற்றி விம்பங்களை ஏற்படுத்தும். அனைத்து சொகுசுகளையும் அனுபவிக்க விரும்பும். இவற்றில் இருந்து விடுபடவேண்டுமென்றால் மார்க்சிய கல்வி அவசியம். இடதுசாரிய பண்பாட்டு வாழ்வு அவசியம். பன்முகத்தன்மை பார்வை, சமூக அக்கறை இருக்க வேண்டும். இல்லாட்டி அதிகாரமும் தன்னிச்சையான போக்குகளும்தான் அதிகரிக்கும். இவைகள் இயக்கத்தை அழித்துவிடும்.

கண்ணாடிச் சந்திரன், நேசன் இவங்க இரண்டு பேரிடமும் இந்த அதிகாரமும், தன்னிச்சையான போக்குகளும் நிறைய இருந்தது. இரண்டு பேரும் சேர்ந்து செய்த விடயங்கள் பலருக்கும் தெரியாது.

உதாரணமாக, கிளிநொச்சி மாவட்டத்தில் வட்டக்கச்சி என்ற ஒரு கிராமம் இருக்கு. அங்க டெசோ மாணவர் அமைப்பு தொடர்பாக அமைப்பு கட்டுவதற்கு வட்டக்கச்சி மகா வித்தியாலயத்திற்கு போயிருந்தேன். மாணவர்களோடு கதைத்த பின், அதிபர் வந்து சொன்னார், டீச்சர் ஒருத்தர் உங்களோட கதைக்க வேண்டுமாம் என்று சொல்லி. அந்த ரீச்சருக்கு நான் புளொட் என்று தெரியும். போனவுடனே சொன்னா, அவங்களின்ர உறவினரை புளொட் சுட்டு கொலை செய்து போட்டுது என்று. எனக்கு ஒன்றும் புரியவில்லை. ஒரே குழப்பம். அவங்க ஆதாரமா சொல்லுறா புளொட் தான் கொலை செய்து போட்டுது என்று. நீங்க எல்லாம் எந்த அடிப்படையில் மாணவர் அமைப்பை கட்ட வாறீங்கள்? கொலைகார இயக்கம் அது இது என்று கடுமையாக பேசினாங்க. எனக்கு ஒன்றுமே தெரியாது. வட்டக்கச்சியில் புளொட் கொலை செய்த மாதிரி நான் அறியல அப்போ.

அதுக்கு பிறகு, அங்க அமைப்பு கட்ட முடியாமல் போய்விட்டது. நான் யாழ்ப்பாணத்துக்கு திரும்பி வாறேன். அப்ப பொறுப்பாளராக இருந்தவர் தோழர் கேசவன். அவரிடம் நான் சொன்னேன் இப்படி ஒரு படுகொலை நடந்தது என்று. தோழர் கேசவன் மறுத்திட்டார். கிளிநொச்சி தோழர்கள் பலருக்கும் இது தெரியாது. ரகசியமாக செய்யப்பட்டிருக்கு. எப்படியோ அந்த டிச்சருக்கு தெரிந்து விட்டது.

பிறகு எனக்கு கிளிநொச்சி தோழர்களுக்கு ஊடாக தெரியவந்தது புளொட் தான் செய்தது என்று சொல்லி. பிறகு கேசவன் ஒத்துக்கொண்டார். அப்போது நான் கேட்டேன் எந்த அடிப்படையில் முடிவு எடுத்தீர்கள் என்று. பிறகு சொன்னார், கிளிநொச்சி மாவட்ட பொறுப்பாளராக அப்ப கிளிமாஸ்டர் என்று ஒரு ஆள் இருந்தவர். அவருடைய அறிக்கையின் அடிப்படையில்தான், இந்த படுகொலை நடந்தது என்று. அப்போ நான் சொன் னேன், அவர் கொலை செய்யப்பட்டது சரியென்றால், புளொட் வெளிப்படையாக உரிமை கோர வேண்டும். பிழை என்றால், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று. அப்போ ஓம் ஓம் என்று சொல்லிப்போட்டு, உரிமை கோரவில்லை. நான் கேள்விப் பட்டேன் , உண்மையில் அந்த கொலை, கிளி மாஸ்டருக்கும், கொலை செய்யப்பட்டவருக்கும் ஏற்பட்ட தனிப்பட்ட பிரச்சனையில், கண்ணாடிச் சந்திரனும், நேசனும் முடிவு பண்ணி, செய்த கொலை என்று.

மல்லாவிச் சந்திரன் என்று ஒருவர் இருந்தவர். அவர் மல்லாவியில் சிறுசிறு களவுகளில் ஈடுபட்டிருந்தவர். இவங்கள் அவரை விசாரணைக்காக, யாழ்ப்பாணம் கொண்டு வந்திருக்கிறார்கள். கொண்டு வந்த பிற்பாடு, அவர் கொஞ்சம் துணிவான ஆள். அவரை இந்த விஷயங்களுக்கு பயன்படுத்த தொடங்கிட்டாங்க. அவர்தான் அந்தக் கொலைக்கு அங்க பயன்படுத்தப் பட்டிருக்கிறார். கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சொல்லி எனக்கும், தோழர் கேசவனுக்கும் பிரச்சனை வந்துவிட்டது. கேசவனிடம் நான் இந்த குற்றச்சாட்டை வைத்தது, நேசனுக்கும் கண்ணாடி சந்திரனுக்கும் தெரியவந்தது. அந்த காலகட்டத்திலேயே எங்களுக்குள்ள பெரிய முரண்பாடு தோன்றி விட்டது. அந்த நேரத்தில் உமா மகேஸ்வரனின் பெரிய ஒரு விசுவாசியாக இவர்கள் மாறி விட்டார்கள். இந்த தன்னிச்சையான போக்குகளுக்கு பின் தளத்தில் இருந்தும் பெரிய ஆசீர்வாதம் கிடைத்தது. உமா மகேஸ்வரனை முதல் முதல் தளத்தில், பெரிய ஐயா என அழைத்தவர்கள் இவர்கள்தான். அவ்வளவு விசுவாசம்.

அந்த நேரம் ஒட்டிசுட்டானில் ஒரு சம்பவம் நடந்தது கேள்விப்பட்டிருக்கிறீர்களா? சுப்ரமணியம் அல்லது சண்முகநாதன் என்று சொல்லி ஒரு இன்ஸ்பெக்டர். மிக அருமையான ஆள். விடுதலை இயக்கங்களுக்கு எல்லாம் பெரும் ஆதரவு கொடுத்தவர்.

தேசம்: அவர் போலீஸ் அதிகாரியா. ?

அசோக்: ஓம். போலீஸ் பொறுப்பதிகாரி. ஆனால் அவரை இவங்கள் படுகொலை செய்திட்டாங்கள். அதுவும் தனிப்பட்ட பிரச்சனைகளுக்காக. புளொட் என்று தெரியாது.

பாகம் 13: மட்டக்களப்பு சிறை உடைப்பா? சிறைத் திறப்பா?

களுதாவளையிலிருந்து பாரிஸ் வரை
ஒர் அரசியல் போராளியின் வாழ்வின் பயணம்!

அசோக் யோகன் கண்ணமுத்துவுடன் ஒர் உரையாடல்! : தோழர் அசோக் யோகன் கண்ணமுத்துவின் சாட்சியம் பகுதி 12 (ஒலிப் பதிவு செய்யப்பட்ட திகதி 07.08.2021). இந்த உரையாடல் அசோக் யோகன் கணணமுத்துவின் பேச்சுமொழியில் எந்த மாற்றமும் இன்றி பிரசுரமாகின்றது.

பாகம் 13

தேசம்: மட்டக்களப்பு சிறை உடைப்பு பற்றி பேசிக்கொண்டிருக்கிறம். நீங்கள் ஆயுதங்கள் எல்லாம் எடுத்து சேகரித்திருந்தா லும் கூட, ஆயுதங்கள் எதுவும் பெரிசா பயன்படுத்தப்படவில்லை என்று நினைக்கிறேன். சிறைக்குள் என்ன நடந்தது?

அசோக்: ஆயுதங்கள் எதுவும் பயன்படுத்தப்படவில்லை. உள்ளுக்குள்ள ரிவால்வர் தான் அனுப்பப்பட்டது. ஈபிஆர்எல்எஃப் தோழர்கள் தங்களுக்கு தேவையானதை அனுப்பி இருப்பார்கள் என்று நினைக்கிறேன். புளொட்டில் இரண்டு ரிவால்வர் அனுப்பப்பட்டது. வெளியில கூடுதலா சொட் கண்கள்தான். அடுத்தது பால் ரின்னில் கிரானைட் மாதிரி ஜலற்றின் வைத்து செய்யப்பட்ட திரிவைத்த எறி குண்டு. திரியில் நெருப்பு பற்ற வைத்து எறியவேண்டும். ஆனால் இவை எதையும் பயன்படுத்த வேண்டிய அவசியம் வரவில்லை.

சிறைக்குள் இருந்தஎல்லோரும் கூட்டாக இணைந்துதான் முயற்சி எடுத்தாங்க ராஜன் டக்ளஸ் தேவானந்தா, பனாகொடை மகேஸ்வரன் போன்றவங்க முக்கியமானவங்க. பலருக்கும் பொறுப்புக்கள் பிரித்துப் பிரித்து கொடுகப்பட்டன. உதாரணமாக டேவிட் ஐயாவிடமும் , டொக்டர் ஜெயகுலரா ஜாவிடம் மும் கட்டிப்போடப்படும் ஜெலர்களுக்கு வாயில் பிளாஸ்டர் ஒட்டும்வேலை பொறுப்பு கொடுகப்பட்டது. இப்படித்தான் எல்லோருடைய ஒத்துழைப்பும் இருந்தது.

தேசம்: ராணுவ பாதுகாவலர்கள் மாறுகிற நேரத்தில்தான் சிறை உடைப்பு நடந்தது..

அசோக்: ஓம், . குறிப்பிட்ட நேரத்திற்கு ஒரு தடவைதான் சிறையை சுற்றியுள்ள வீதிகளில் பொலிஸ் அல்லது இராணுவம் ரோந்து வரும் . அந்த இடைவெளிக்குள் சிறை உடைப்பு செய்யவேண்டும்.

அந்த குறிப்பிட்ட நேரத்திற்குள்ள நடந் ததால எந்தவொரு சிக்கலும் ஏற்படவில்ல. சிறைக்குள்ள பிரச்சனையில்லை. தெரிந்த ஜெயிலர்ஸ் தானே அதனால் பெரிய பிரச்சனைகள் ஏற்படவில்லை.

தேசம்: அப்போ சிறைப் பாதுகாவலர்கள் சிறைக் கதவுகளின் சாவிகளை உங்களுக்குத் தந்து…..

அசோக்: இல்லை இல்லை உள்ளுக்க ரெண்டு மூன்று ஜெயிலர்ஸ் தான் சப்போர்ட் பண்ணினார்கள். மற்ற ஜெயிலலர்களை பிடித்து கட்டிப்போட்டு அவர்களிடமிருந்த சாவிகளை பறித்து ஒவ்வோரு செல்களும் திறக்கப்பட்டன. அதனோட நாங்க செய்த சாவிகளும் பயன்படுத்தப்பட்டன முழு ஜெயிலர்சையும் சப்போர்ட் பண்ணுவாங்க என்று எதிர்பார்க்க இயலாதுதானே.

தேசம்: எல்லாருமே தமிழ் காவலர்களா

அசோக்: சிங்கள காவலர்களும் இருந்தவங்க. சிறை உடைக்கப்பட்டு எல்லாரும் வெளியேறியவுடன், அங்கு சிறை வைக்கப்படடிருந்த சாதாரண கைதிகள் அவங்களும் வெளியேறி தப்பிட்டார்கள். அரசியல் கைதி அல்லாத, வேறு குற்றங்களுக்காக கைது செய்யப்பட்ட கைதிகள் முழுப்பேரும் வெளியேறி போய்விட்டார்கள். தமிழ்க் கைதிகளுக்கு சிறை இருந்த இடம் பற்றி, அந்த சுற்றாடல் பற்றி ஓரளவு தெரியும். அவங்க தப்பி போயிற்றாங்க. சிங்களக் கைதிகளுக்கு இடம் தெரியாது. மட்டக்களப்பு ஒரு தீவு. மேலிருந்து பார்த்தீர்களென்றால் மட்டக்களப்பு என்பது வாவிகளால் சூழப்பட்ட ஒரு பிரதேசம். மட்டக்களப்பை புளியந்தீவு என்றும் சொல்வதுண்டு. மட்டக்களப்பை ஏனைய பிரதேசங்களோடு இணைப்பது பாலங்கள்தான்.

தேசம்: தமிழ் கைதிகள் எல்லோரும்…

அசோக்: தமிழ் கைதிகள் பாலம் எல்லாம் தாண்டி தப்பி போயிட்டாங்க. தோணிகள் பயன்படுத்தி ஆற்றைக் கடந்தும் தப்பிவிட்டாங்க. சிங்கள சிறைக் கைதிகளுக்கு ஒன்றும் செய்ய இயலாமல் போய் விட்டது. போலீஸ் அவங்க முழுப் பேரையும் அரெஸ்ட் பண்ணி விட்டது.

தேசம்: வெளியேறின அரசியல் கைதிகளை எப்படி வெளில கொண்டு போறீங்க

அசோக்: அரசியல் கைதிகளை வெளியில கொண்டு போறதுக்கு ஈபிஆர்எல்எஃப் தோழர் குன்சி தங்களுக்குரிய ஏற்பாட்டை செய்திருந்தார். தம்பாப்பிள்ளை மகேஸ்வரன் தங்களுக்குரிய ஆட்களை ஏற்பாடு செய்திருந்தார். புளொட்டுக்கான ஏற்பாட்டை பார்த்தன் செய்தது. பனிச்சம் கேணியிலிருந்து, இந்தியா கொண்டு போற வரைக்கும் எல்லா பாது காப்பையும் தோழர் பார்த்தன்தான் செய்தார்.

தேசம்: அதாவது சிறை உடைத்த பிறகு வெளியில வந்தவர்களைக் கொண்டு போற வேலைகளைப் பார்த்தன் செய்தது.

அசோக்: பனிச்சம்கேனியிலிருந்து இருந்து திருகோணமலைக்கு கொண்டு போய், அங்க இருந்து இந்தியாவுக்கு அனுப்புற வேலைகளை பார்த்தன், ராதாகிருஷ்ணன், ஜெயகாந்தன், செல்வன் இவங்கதான் செய்தாங்க. நேரடியாக இந்தியா போகவில்லை. பல இடங்களில் தங்க வைக்கப்பட்டு, கொஞ்ச கொஞ்ச பேராக பின் தளத்திற்கு அனுப்பப்பட்டாங்க. மாதகல் ஊடாகத்தான் அனுப்பப்பட்டாங்க. இதற்கான போக்குவரத்து பொறுப்புக்களை தோழர் குமரன் செய்தார். குமாரதுரை என்று ஒருத்தர் இருந்தவர். கிளிவெட்டியை சேர்ந்தவர். அவருடைய உதவியும் இருந்தது.

டேவிட் ஐயா சிறைக்குள்ளிருந்து எல்லாரும் போகேக்க அவரால வெளியேற முடியவில்லை. சிறையில் இருந்து வாகனத்தில் இவங்க எல்லாரும் ஏறும்போது, அவரைக் கவனிக்கவில்லை. இவர் ரோட்டில நின்றுட்டார். இவங்க எல்லாரும் போனதற்குப் பிறகு தனிமைப்பட்டுட்டார். பிறகு ஜெயிலில் இருந்து தப்பிய சாதாரண கைதிகள் இரண்டு பேர் , டேவிட் ஐயாவை தற்செயலா கண்டிருக்கிறார்கள். அவர்கள் தான் டேவிட் ஐயாவை கொண்டு பாதுகாப்பா வச்சு, ஒரு பாதரிட்ட ஒப்படைத்து பாதர் தான் அனுப்பி வைத்தவர்

தேசம்: இந்தியாவுக்கு அனுப்பி வைத்தவரோ?

அசோக்: இல்ல எங்கட தோழர்களிடம் ஒப்படைத்து நாங்க பொறுப்பெடுத்தம்.

தேசம்: இந்த சிறை உடைப்புக்கு பிறகு உங்களுக்கு உதவி செய்த தமிழ் சிறைக்காவலர்கள் இருக்கினம் தானே அதுக்கு ஏதாவது பிரச்சனை வந்ததா

அசோக்: ஒரே ஒருத்தருக்கு பிரச்சனை வந்தது, கிருஷ்ணமூர்த்தியை ஐடிடென்டி பண்ணிட்டாங்க. அவர் பிறகு புளொட்டுக்கு வந்துட்டார். பிறகு வெளியிலிருந்து உதவி செய்த மாசிலாமணி அவருக்கும் பிரச்சினை வந்து, அவரும் திரும்ப புளொட்டுக்கு வந்துட்டார். இவர்கள் பற்றி முன்னர் கதைத்திருக்கிறன்.

அதுல என்னை விசாரித்த டிஎஸ்பி மகேந்திரன் அவரோட உதவியும் கொஞ்சம் இருந்தது. இல்லாட்டி காந்திய வாகனம் எல்லாம் உடனே பிடிபட்டிருக்கும். பிறகு சிங்கள பொலிசாருக்கு தெரிய வந்து, காந்தீயமும் தடை செய்யப்பட்டு, வாகனங்கள் எல்லாம் பறிமுதல் செய்யப்பட்டு விட்டன.

தேசம்: சிறை உடைப்பில் காந்திய வாகனங்கள் பயன்படுத்தப்பட்டது

அசோக்: காந்திய வாகனங்கள்தான் பயன்படுத்தப்பட்டது. வாகனங்களை பயன்படுத்திட்டு, அந்தந்த இடத்தில் விட்டுட்டு போயிட்டாங்க. அவற்ற திருப்பி கொண்டு வரவில்லை. அடுத்த நாள் போலீஸ் போகும்போது, டிஎஸ்பி மகேந்திரனுக்கு தெரியும் இது காந்திய வாகனங்கள் என்று. அவர் காந்தியதுக்கு அறிவித்து உடனடியாக வாகனங்களை எடுக்க சொல்லி, பிறகு வாகனங்களை அந்த இடத்திலிருந்து எடுத்தார்கள்.

தேசம்: வேற அமைப்புகளில் இருந்த முக்கியமான ஆட்கள் உங்களுக்கு ஞாபகம் இருக்கா? குறிப்பாக விடுதலை புலிகள் இருந்த முக்கியமான ஆட்கள்

அசோக்: சென்ற அத்தியாயத்தில இதுபற்றி கதைத்திருக்கிறம். விடுதலைப்புலிகள் என்று அதன் ஆதரவாளர்கள் என்று நித்தியானந்தன், நிர்மலா , டாக்டர் ஜெயகுலரா ஜா பாதர் சிங்கராயர் பாதர் சின்னராஜா, பாதர் ஜெயதிலகராஜா இவங்க இருந்தாங்க. வேறு ஆட்கள் என்று கோவை மகேசன் டாக்டர் .தர்மலிங்கம் பெயர்கள் ஞாபகம் இல்லை இருந்தாங்க. இவங்க முன்று பேரும் சிறை உடைப்புக்கு முன்னரே பிணையில் வெளியில் வந்துட்டாங்க. நான் நினைக்கிறேன் பாதர் சிங்கராஜரும் பிணையில் வெளியில் வந்துவிட்டார் என விடுதலைப் புலிகளுக்கு தாங்கள் தனித்துவமாக சிறை உடைக்க வேண்டும் என்ற நோக்கம் இருந்தது என்று நினைக்கிறேன். சிறை உடைப்பில் அவங்கள் சப்போர்ட் பண்ணல.

தேசம்: இவர்களெல்லாம் எப்படி புலிகளின் ஆதரவாளர்களாக இருந்தார்கள் ? . இவர்கள் சிறை உடைப்பில் வெளியில் வரவில்லையா?

போராட்ட வரலாற்றை நீங்கள் அவதானித்தால் புலிகள் மோசமான கருத்தியல் கொண்டவர்கள். வலது சாரிய நிலவுடமைச்சிந்தனைகளின் எல்லா எச்சங்களையும் கொண்டவர்கள்.முற்போக்கான சிந்தனைகள் எவையும் அவர்களிடம் இருந்ததில்ல. ஆனா இந்த பாதர்களும், நிர்மலா , நித்தியானந்தன் சேர் போன்றவர்கள் புலிகளைத்தான் அதரிச்சாங்க. எல்லாம் வர்க்க கூட்டு. இதைப்பற்றி முன்னர் சொல்லியிருக்கிறன்.

நிர்மலா தவிர்ந்த மற்ற இவங்க எல்லோரும் சிறை உடைப்பில் வெளியில் வந்துட்டாங்க. நிர்மலா வரவில்லை. . புலிகள் சம்பந்தப்பட்ட ஆட்களை கொண்டு செல்லும் பொறுப்பை பரமதேவா, புளோட் வாசுதேவாவின்ற தம்பி, இவர் புலிகளில் இருந்தார். மட்டக்களப்பு சிறையில் இருந்து சிறை உடைப்புக்கு முன்னர் பிணையில் வெளியில் வந்திருந்தார். இவர்தான் பொறுப்பெடுத்தவர். இவர்களை பாதுகாத்து இந்தியாவுக்கு அனுப்பியதில் தம்பிரா ஜா அண்ணரும் முக்கியம் என நினைக்கிறன். இப்போது லண்டனில் இருக்கிறார்.சிறைக்குள் நிர்மலாவை காப்பாற்றி வெளியில் கொண்டு வரும் பொறுப்பை எடுத்தவர் புளொட் வாமதேவன். அவர் விட்ட தவறினால் , அவங்க வெளியேற முடியல்ல.
பிறகுதான் புலிகள் தனியாக அவரை மீட்டாங்க.

தேசம்: அதற்குப் பிறகுதான் உங்கட மத்தியகுழு உருவாக்கப்பட்டது.

பாகம் 12: சிறைக்குள் நடந்த படுகொலைகளும் சிறைக்கு வெளியே நடந்த படுகொலைகளும் – படுகொலை அரசியலை தேர்ந்தெடுத்த இன்றைய மார்க்ஸியர்கள்!

களுதாவளையிலிருந்து பாரிஸ் வரை
ஒர் அரசியல் போராளியின் வாழ்வின் பயணம்!

அசோக் யோகன் கண்ணமுத்துவுடன் ஒர் உரையாடல்! : தோழர் அசோக் யோகன் கண்ணமுத்துவின் சாட்சியம் பகுதி 12 (ஒலிப் பதிவு செய்யப்பட்ட திகதி 07.08.2021). இந்த உரையாடல் அசோக் யோகன் கணணமுத்துவின் பேச்சுமொழியில் எந்த மாற்றமும் இன்றி பிரசுரமாகின்றது.

பாகம் 12

தேசம்: 83 ஜூலைக் கலவரம். இது இலங்கையில் தமிழர்களின் வரலாற்றில் மிக முக்கியமான காலப்பகுதி. விடுதலை அமைப்புகள் சாதாரண தாக்குதல்களை ஒரு ராணுவத்தையும் போலீசையும் அடித்து துவக்கு பறித்த நிலைமை போய், மிகத் திட்டமிட்ட ஒரு தாக்குதல் 83 ஜூலை 23 இரவு நடக்குது. அந்தத் தாக்குதலில் தான் 13 ராணுவ வீரர்கள் கொல்லப்படுகிறார்கள். அவர்களுடைய உடல் மறுநாள் மாலை கொழும்புக்கு கொண்டு வரப்படுகிறது. அதைத்தொடர்ந்து கலவரம் ஆரம்பிக்குது. அந்த காலகட்டத்தில் இந்த விடயங்களை நீங்கள் எப்படி அறிகிறீர்கள்? என்ன மாதிரி அந்த காலகட்டத்தில் உங்கள் உணர்வுகள் இருந்தது? எப்படி நீங்கள் அதை உள்வாங்கிக் கொண்டீர்கள்? எங்கே இருந்தீர்கள் நீங்க எந்த செய்திகளைக் கேள்விப்படும்போது?

அசோக்: ஜூலை இனக்கலவரம் ,படுகொலைகள் நடக்கும்போது எனது கிராமமான களுதாவளையில்தான் நான் இருந்தேன். அது ஒரு உணர்ச்சி கொந்தளிப்பான கவலையான மனநிலையை எங்களுக்கு தந்தது. சிங்கள அரசு மீது கடும் கோபத்தை ஏற்படுத்தியது. அன்றைக்கு பிலிப்பைன்ஸில் இருந்து வந்த வெரித்தாஸ் வானொலியில் தான் இந்த செய்திகளை அதிகமாகக் கேட்கக்கூடிய தரக்கூடியதாக இருந்தது. வேற வானொலிகளும் இல்ல. ஊடகங்களும் பெருசா இல்லைதானே கிழக்கு மாகாணத்தில். ஒன்றேயொன்று வெரித்தாஸ் வானொலி தான்.

தேசம்: அந்த நேரம் முக்கியமாக இருந்தது வெரித்தாஸ் வானொலி, பிபிசி தமிழோசை, இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் செய்திகள்…

அசோக்: அன்றைக்கு இனக்கலவரம் பற்றிய ஒரளவு உண்மையான செய்திகளை கேட்கிறதென்றால் வெரித்தாஸ் வானொலியில் தான் கேட்க வேண்டும். அடுத்தது டாக்டர் ராஜசுந்தரம் படுகொலை என்பது எங்களுக்கு பெரிய அதிர்ச்சியாக இருந்தது. நாங்கள் காந்தியத்தில் இருந்தவர்கள். அவரோடு பழகியவர்கள். அந்த வெலிக்கடை படுகொலை என்பது உணர்வுபூர்வமான கவலையை அளித்தது. எங்களுக்கு மனக் கொந்தளிப்பை கொடுத்தது. 53 பேர் கொல்லப்பட்டு, பெயர்களெல்லாம் அறிவித்தார்கள். வெரித்தாஸ் வானொலியில் அதை விவரமாக சொன்னார்கள். ஒரு ஊடகத்தால் எத்தகைய தாக்கத்தை கொடுக்கமுடியும் என்பதை அக்காலங்களில உணர்ந்து கொள்ளமுடிந்தது. உண்மையிலேயே அந்த இரவுதான், நிறைய பேரை இயக்கங்களுக்கு போக வேண்டும் என்ற உணர்வை கொடுத்ததும், சிங்கள பேரினவாத அரசுக்கு எதிராக போராட வேண்டும் சிந்தனையை கொடுத்ததும் அதுதான். இந்த படுகொலைகள் எங்க கிராமத்தில் இளைஞர்கள் மக்கள் மத்தியில் பெரிய சோகத்தை கோபத்தை, கொடுத்தது. மற்றக் கிராமங்களைப் பற்றி தெரியல. எங்க கிராமத்தில் அரசியல், இலக்கியம், சமூக அக்கறை கொண்ட குருப் ஒன்று இருந்தது ஆரம்பத்திலிருந்து. அவங்களுக்கு இயக்கங்களுக்கு போவதற்கான தூண்டுதலாக இது இருந்தது. பிறகு எங்கட கிராமத்தில் இருந்து நிறைய தோழர்கள் புளொட்க்கு வந்தார்கள்.

தேசம்: அந்த சம்பவத்துக்குப் பிறகு..

அசோக்: எங்கட கிராமத்து பையன்கள் இனவாத தாக்கத்தையோ, இனவாத ஓடுக்குமுறைகளையோ நேரடியாக அனுபவிக்காதவர்கள். கருத்தியல் சார்ந்து பல்வேறு ஒடுக்குமுறைகள் பற்றி அறிந்திருந்தார்களேயொழிய ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கப்படாத ஆட்கள். அவர்களை சிந்திக்க வைத்தது இப்படியான சம்பவங்கள் தான்.

தேசம்: தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தில் நீங்கள் முக்கியமான உறுப்பினராக இருக்கிறீர்கள். தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் பாரிய தாக்குதல்கள் எதையும் பெரிய அளவில் செய்யவில்லை. நான் நினைக்கிறேன் விமானப்படை தாக்குதல் ஒன்றுதான் தமிழிழ மக்கள் விடுதலைக் கழகம் செய்தது. அதுவும் திட்டமிடப்படாத தாக்குதல் என்று நினைக்கிறேன்.

அசோக்: யாழ்ப்பாணத்தில் ஆனைக்கோட்டை பொலிஸ் நிலையம், குறிகட்டுவான் கடல்படையினர் மீதான தாக்குதல் ஆரம்பத்தில் நடந்தது. இந்த தாக்குதல்கள் விமர்சனங்களுக்கு உரியவை.

தேசம்: அப்படியான சூழலில விடுதலைப் புலிகள் இப்படி ஒரு பாரிய தாக்குதலை செய்தது சம்பந்தமா கழகத்தில் எப்படி உணரப்பட்டது. கழகமும் இப்படியான தாக்குதல்களை செய்ய வேண்டும் என்ற நிலைப்பாடுகள் முன்தள்ளப்பட்டதா?

அசோக்: தனிநபர் பயங்கரவாதம், தனிநபர் நடவடிக்கைகள், ராணுவத்தின் மீதான தாக்குதல் தொடர்பாக தெளிவான பார்வை, சுத்த ராணுவக்கண்ணோட்டத்திக்கு எதிரான கருத்தியல் சார்ந்த அரசியல் பார்வை எங்கள் பலரிடம் இருந்தது. இந்தத் தாக்குதல் வெறுமனே அரசாங்கத்தை பலமடையச் செய்யும் என்பதும், எங்களின் போராட்டத்தை பலவீனமடையச் செய்யும் என்பதும், சிங்கள மக்கள் மத்தியில் இனவாதத்தை வளர்ப்பதற்கு பயன்படுத் தப்படும் என்பதும் தெரியும். எங்கட போராட்டம் மக்களை அனுசரிப்பதனூடாக, அரசியல் மயப்படுத்தப்பட்ட மக்கள் போராட்டத்துக்கூடாகத்தான் கொண்டு வரவேண்டுமென்று நாங்க விரும்பினம். எங்களுக்கு சீனா, வியட்நாம், கியூபா போராட்டங்களும் படிப்பினைகளும் முன்மாதிரியாக இருந்தது தானே.

தேசம்: அந்த நேரம் இவைகள் பற்றி எல்லாம் நீங்கள் வாசித்திருக்கிறீர்களா…

அசோக்: ஓம். அனேகமாக கழகத்தில் நிறைய தோழர்களிடம் அரசியல் வாசிப்பு இருந்தது. மக்கள் இராணுவம், முண்ணனிப்படை பற்றியெல்லாம் அரசியல் அறிவு ஒரளவு கொண்டவர்களாக நாங்க இருந்தோம். எங்களுக்கு தெரியும் இப்படியான தாக்குதல்கள் அரசாங்கத்தை பலமடைய வைக்கும். எங்களை பலவீனமடைய வைக்கும் என்று. அதுல தெளிவா இருந்தனாங்கள். புலிகள் செய்றதால நாங்களும் செய்ய வேண்டும் என்ற அபிப்ராயம் எங்களிடம் இல்லை. ஆனா புளொட்டில் பல தோழர்களிடம் புலிகளைப்போல் தாக்குதல் செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. அடுத்தது மக்கள் போராட்டம் என்பதில் நாங்கள் தெளிவாக இருந்தனாங்கள். காந்தியமும் அதுதானே. மக்கள் மயப்படுத்தல்… காந்தியத்தை புளொட் பயன்படுத்தியதற்கான காரணமும் அதுதானே. காந்தியத்துக்கூடாக துரிதமாக மக்களை அரசியல் மயப்படுத்தலாம், அதை அடிப்படையாக பயன்படுத்தலாம் என்ற போக்குத்தான் எங்களிடம் இருந்தது. இது தவறான போக்கு என்பது வேறு.

இதுபற்றி முன்னமே கதைத்திருக்கிறம். யாழ்ப்பாணம் தாண்டிய ஏனைய பிரதேசங்களில் அரசியல் பாசறைகள் நிறைய நடத்தியிருக்கிறோம். அரசியல் வாசிப்புகள் நிறைய இருந்தது. அப்போ ஓரளவு எங்களுக்கு தெரிந்தது இவ்வாறான தாக்குதல்கள் எந்தவிதமான விடுதலையையும் பெற்றுத் தராது என்று. இயக்கங்கள் எல்லாத்தையும் வென்று தரும் என்ற எண்ணப்பாட்டை மக்களிடம் உருவாக்கி, மக்களை வெறும், பார்வையாளர்ளாகவும் ஆக்கிவிடும் என்று நினைத்தோம். மக்கள் மயப்படுத்தப்பட்ட முழுமையான போராட்டம் அவசியம் என்பதில் மிகக் கவனம் இருந்தது.

அடுத்தது விடுதலைப்புலிகள் தொடர்பான விமர்சனப் பார்வை எங்களிடம் இருந்தது. இவ்வாறான தாக்குதல்களைத்தான் அவர்கள் செய்வார்கள் என்று. அவர்களிடம் மக்களை அரசியல் மயப்படுத்துவது என்ற சிந்தனை இருக்கவில்லை தானே. அவங்கள் சுத்த இராணுவாதம் கொண்ட ஒரு மரபு ரீதியான ராணுவமாகத்தான் வளர்ந்து வந்தார்கள்.

தேசம்: அதை நீங்கள் அந்தக் காலகட்டத்தில் உணர்ந்திருந்தீர்களா?

அசோக்: அந்தக் காலகட்டத்திலேயே நாங்கள் தெளிவாக உணர்ந்து இருந்தம். புலிகள் தொடர்பாக பல்வேறு விமர்சனங்கள் இருந்தது. புலிகளோடு இருந்த ஆட்கள் தானே, புளொட்டுக்குள்ள இங்கே வந்தவர்கள். அவர்கள் புலிகள் பற்றிய பல விமர்சனங்ளை சம்பவங்களை சொல்வாங்க.

தேசம்: புலிகளுக்கு உள்ளேயே நடந்த கொலைகள் தொடர்பாய் அது சம்பந்தமாக என்ன அறிந்திருந்தீர்கள்?

அசோக்: கூடுதலாக புலிகளுக்குள் இருந்து வந்தவர்களுடைய அபிப்பிராயம்… அங்க நடந்த தனிநபர் படுகொலைகள் தொடர்பாக கடும் விமர்சனம் இருந்தது. கணேசய்யர், நாகராஜ் வாத்தி, உமாமகேஸ்வரன், சந்ததியார், சுந்தரம், கண்ணன் நிறைய பேரிட்ட கொலைகள் தொடர்பாக மிக அதிருப்தி இருந்தது. புலிகளுடைய தனிப்பட்ட தாக்குதல்கள், தனிநபர் பயங்கரவாதம். பிரபாகரனின் தன்னிச்சையான போக்குகள்… கொலை செய்யப்பட்ட முறைகள்…

தேசம்: சில கொலைகளை சொல்லுங்கள்

அசோக்: பற்குணம், மட்டக்களப்பு மைல்கல், கண்ணாடி பத்மநாதன்… அது ஒரு நீண்ட கொலை பட்டியல். எல்லாம் சந்தேகத்தின் அடிப்படையிலும், இந்த தனிநபர் தாக்குதலுக்கு ஊடாக, படு கொலைகளுக்கு ஊடாக இயக்கத்தை முன்னெடுத்துச் செல்லலாம் என்ற ஒரு நம்பிக்கையும் தான். அது கடைசி வரைக்கும் நீடிக்குது.

தேசம்: இந்தக் கொலைச் சம்பவங்கள் நடந்துகொண்டு இருக்கேக்கையும் நீங்கள் முதலில் குறிப்பிட்ட மாதிரி ராகவன், நித்தியானந்தன், நிர்மலா எல்லாரும் அப்பவும் விடுதலைப் புலிகளோடு தான் இருக்கினமா?

அசோக்: நித்தியானந்தன், நிர்மலா அந்தக் காலகட்டத்தில் இல்லை. அதுல ராகவன் மாத்திரம்தான் ஆரம்பகால உறுப்பினராக மிக நெருக்கமாக பிரபாகரனோடு இருந்து வாரார். இவர்கள் பிற்காலத்தில்தான். நான் நினைக்கிறேன், 80க்கு பிற்பாடுதான் நிர்மலா, நித்தியானந்தன் எல்லாம் அவர்களுடைய ஆதரவாளர்களாக மாறியிருப்பார்கள் என. இவர்களும் ஒரு முழுநேர ஊழியர்கள் இல்லை தானே. ஆதரவு தளத்தை வழங்கியவர்கள். பிறகு புலிகளுக்கு உதவி செய்தார்கள் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு சிறைக்குள்ளே போனார்களேயொழிய, முழு நேர உறுப்பினர்களாக இருக்கவில்லை. கருத்தியல் சார்ந்து அறிக்கைகள் எழுதுவதற்கு, கருத்தியல் சார்ந்து விளக்கம் கொடுக்கிறதுக்கு, நியாயப்படுத்துவதற்கு, ஒரு கிரவுட் தேவைதானே. அதற்கு இவங்க தேவைப்பட்டாங்க. அந்த நேரத்தில உணர்வுகள் என்ற ஒரு பத்திரிகையும் யாழ்ப்பாணத்தில புலிகள் வெளியிட்டவர்கள். அப்ப அதற்கு கட்டுரை எழுதுவதற்கான தேவையும் இருந்திருக்கும். ஆனா இவர்கள் சிறையில் இருந்து தப்பி இந்தியா சென்ற பின் எல்ரீரீஈயில் முழு நேரமாக வேலை செய்கிறாங்க.

ஒரு சந்தேகம் என்னிடம் உண்டு. அந்த நேரத்தில ஈபிஆர்எல்எப், ஈரோஸ், புளொட் என மார்ச்சியம் பேசிய இயக்கங்கள் இருக்கும் போது, வலதுசாரித்தனமும், தனிநபர் பயங்கரவாதத்தையும், படுகொலைகளையும் தங்கள் அரசியலாக் கொண்ட புலிகளுக்கு இவங்க எப்படி ஆதரவளிச்சாங்க என்று. ராகவனை விட்டுத்தள்ளுங்கள். அவர் அன்று தொடக்கம் இன்று வரை அதிகார நலன்களோடு, அந்த நபர்களோடு கூட்டுச்சேரும் ஒரு அடிமை மனநிலை கொண்டவர். அப்பவும் சரி இப்பவும் சரி நேர்மையற்ற மனிதர் அவர். நான் அவரை அறிந்த வரை சுயமான அரசியல் தேர்வு அவரிடம் இருந்ததில்லை. இதைப்பற்றி முன்னமே கதைத்திருக்கிறன். ஆனா நித்தியானந்தன் சேர் , நிர்மலா அப்படியானவர்கள் அல்ல. அரசியல் கருத்தியல் சார்ந்து சிந்திக்கக் கூடியவர்கள். அவர்கள் புலிசார்பு நிலையை எடுத்ததிற்கான காரணங்கள் இருக்கக்கூடும். இவர்கள் எல்லோருடனும் உரையாடல் செய்ய வேண்டும். புலிகள் படுகொலைகளையும், அராஜ கங்களையும் செய்த காலங்களில் இவங்க புலிகளோடு இருந்திருக்காங்க.

தேசம்: 83 ஜூலை படுகொலையில் கொல்லப்பட்ட உறுப்பினர்களில் யாரை யாரையெல்லாம் அறிந்து வைத்திருந்தீர்கள்?

அசோக்: டாக்டர் ராஜசுந்தரம் அவருடன் மாத்திரம் நெருக்கம் இருந்தது.

தேசம்: காந்தியத்துடன் இருந்தபடியால்…

அசோக்: ஆனால் நிறைய பேரை கேள்விப்பட்டிருக்கிறோம். நடேசானந்தன், குட்டிமணி, ஜெகன், கிருஷ்ணகுமார் என்று பற்றி எல்லாம் கேள்விப்பட்டிருக்கிறேன். கொலை செய்யப்பட்டவர்கள் தொடர்பாக நேரடி உறவு இல்லையே ஒழிய, அவங்களுக்கும் எங்களுக்கும் உணர்வுபூர்வமான நெருக்கம் இருந்தது. எங்கட தோழர்கள், போராளிகள், எங்களுக்காக சிறைக்கு சென்றவர்கள் என்ற உணர்வு ஒன்று இருந்தது. மற்றது படுகொலை செய்யப்பட்ட முறைகளும் வெளிவர வெளிவர பெரிய தாக்கம் வந்தது. குட்டிமணி மீது நடத்தப்பட்ட அந்த கொடுரமான படுகொலை, அது ஒரு இனவாதத்தின் உச்சகட்டமாக தான் நாங்க பார்த்தோம். இனவாத அரசின், ஒரு அதிகார வர்க்கத்தின் துணையோடு நடந்த திட்டமிட்ட படுகொலைகள். பேரினவாத அதிகாரவர்க்கத்தின் இனவாத படுகொலையாக தான் பார்த்தோம்.

தேசம்: இந்தப் படுகொலைகளைத் தொடர்ந்து எவ்வாறான அரசியல் நடவடிக்கைகளை இயக்கங்கள் கையில் எடுத்தது?

அசோக்: எல்லா மட்டங்களிலும் இலங்கை அரசு மீது இருந்த கோபம், கொந்தளிப்பு இயக்கங்களுக்கு சாதகமாக அமைந்ததுவிட்டது. இளைஞர்கள் மத்தியில், இயக்கங்களின் அரசியல் அற்ற வெறும் உணர்ச்சியூட்டல் நடந்தது. இது இயக்கங்கள் வீங்குவதற்கும், போராளிகளின் எண்ணிக்கை கூட்டுவதற்கும் சாதகமாக போய்விட்டது. அரசியல் சார்ந்து நடக்கவில்லை. வெறும் சிங்கள மக்களுக்கு எதிரான பிரச்சாரமாக, ஒரு மனநிலையை கட்டமைக்கிற மாதிரி சில இயக்கங்கள் செய்யத் தொடங்கிற்று. அது இன்னொரு இனவாதம்தானே. இளைஞர்கள் வர வர பின்தளத்திற்கு அனுப்பபட்டடார்களே தவிர தேர்வுகள், பரிசீலனைகள் எதும் இருக்கல்ல. பிறகு இந்தியாவும் டிரெய்னிங் கொடுக்க தொடங்கிவிட்டது.

தேசம்: வெலிக்கடை சிறைச்சாலை தொடர்ந்து கொழும்பில் கலவரம் வெடிக்குது. கொழும்பிலிருந்து ஆயிரக்கணக்கானவர்கள் வடக்கு-கிழக்குக்கு வாரார்கள். அவர்களுடைய பராமரிப்பு அந்த விடயங்களில் நீங்கள் ஈடுபட்டிருக்கிறீர்களா? அல்லது இயக்கங்கள் அவர்களை பராமரிக்கிறதில் புனர்வாழ்வளித்து ஈடுபட்டிருக்கின்றனவா?

அசோக்: ஓம். வவுனியா முல்லைத் தீவுக்கு வந்த நிறையபேருக்கு நாங்கள் பொறுப்பெடுத்து செய்தம்.

தேசம்: எவ்வாறான வேலைத்திட்டங்கள்? நீங்கள் அல்லது அந்த இயக்கங்கள் காந்தியம் ஈடுபட்டு இருக்குதா?

அசோக்: அதுல பிரச்சனை என்னவென்று கேட்டால், வவுனியா முல்லைத்தீவில் காந்தியம் தடை செய்யப்பட்டு விட்டது. வவுனியாவில் நடந்த பிரச்சனைக்கு பிறகு டேவிட் ஐயா ஆட்கள் கைது செய்யப்பட்டவுடன் காந்தியம் வவுனியா, மன்னார், முல்லைத்தீவு எல்லாத்திலயும் தடைசெய்யப்பட்டது. மட்டக்களப்பில் இயங்கினது.

அங்க எந்த தடையும் இல்லை. அதற்கு என்ன காரணமோ தெரியல. சிலவேளை, வேறு பெயரில் பதிவு செய்யப்பட்டிருந்ததோ தெரியல. அங்க இயங்கியது. மட்டக்களப்பில் சகல வேலைத் திட்டங்களும் நடந்தது. குடியேற்றங்கள், சத்துணவு திட்டம், காந்தியத்தின் சகல வேலைத் திட்டங்களும் கிழக்கு மாகாணத்தில் நடந்தது. குறிப்பாக மட்டக்களப்பில்.

தேசம்: கிட்டத்தட்ட மட்டக்களப்பில் நடந்த காந்தியத்தின் செயற்பாடு என்பது, புளொட்டின் செயற்பாடு தான்…

அசோக்: ரெண்டும் இணைந்த செயற்பாடு தான். ஆனால் நாங்கள் குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு மட்டக்களப்பு காந்திய செயற்பாடுகளுக்கு நாங்கள் போகவில்லை. நாங்கள் தேடப்படுற ஆட்கள் தானே. நான் தேடப்படுறேன், ஈஸ்வரன் தேடப்படுது. வாசுதேவா மாத்திரம்தான் பிணையில் வரக்கூடியதாக இருந்தது.

தேசம்: வெலிகடை சம்பவத்தின் போது கொல்லப்பட்டவர்கள் தவிர வேற யார் யார் சிறையில் இருந்தவை…

அசோக் : நிறையப் பேர் இருந்தவங்க . எல்லா இயக்கங்களையும் சேர்ந்த போராளிகள், இயக்க ஆதரவாளர்கள், பொதுமக்கள் என கைதுசெய்யப்பட்ட பலரும் இருந்தனர். உயிர் தப்பிய அவங்களைத்தான் மட்டக்களப்பு சிறைக்கு மாத்திராங்க.

தேசம் : அதற்குப் பிறகும் கைதுகள் நடந்தனவா?

அசோக்: பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைதுகள் நிறைய நடந்தது. வெலிக்கடை படுகொலைகளுக்கு பின்னான காலங்களில்தான் நூற்றுக்கணக்கானவர்கள் கைது செய்யப்படுகிறார்கள்.

தேசம்: அதுல முக்கியமான ஆட்கள் யார் யார் கைது செய்யப்படுகினம்?

புளொட்டின் தோழர்கள் சலீம், சத்தியமுர்த்தி, ஜெயகாந்தன், ரமணன், மீரான் மாஸ்டர், லவன், மாறன், சிவா, கல்லாறு சதீஸ், சண் தவராஜா, வைத்தியலிங்கம், சக்தி வடிவேல், மாணிக்கம்பிள்ளை, துரைசிங்கம் இப்படி நிறைய தோழர்கள் கைது செய்யப்படுகிறார்கள். எங்கள் கிராமத்தில் புளொட் தோழர்கள் நிறையப் பேர் கைது செய்யப்ப டாங்க. நல்லீஸ், கராட்டி அரசன், வன்னியசிங்கம், பேரின்பம், சிவஞானம், பூபாலசிங்கம், தில்லையம்பலம் செல்லக்கிளி, கனகசூரியம் இப்படி நிறையத் தோழர்கள். ஆனா இவர்கள் வெலிக்கடை சிறையில் அடைக்கப்படவில்லை. பூசா இராணுவ சிறை முகாம்மில்தான் அடைக்கப்பட்டாங்க… தோழர் கராட்டி அரசன் கராட்டியில் பிளாக் வெலிட் எடுத்தவர். திறமையான தோழர். இவரை பூசா சிறையில் வைத்து இராணுவம் அடித்துக் கொன்றது.

இவரின்ர தம்பி அவரை நாங்க செல்லக்கிளி என்றுதான் கூப்பிடுவோம். அவரும் பூசா சிறையில் இருந்தவர். வெளியில் வந்தவுடன் புலிகள் படுகொலை செய்தாங்க.

வன்னியசிங்கமும் பூசா சிறையிலிருந்து வெளிவந்த பின் அவரையும் புலிகள் சுட்டுக் கொன்றாங்க. அவரின் தலையை வெட்டி எடுத்து, அவரின் உடலை தெருத் தெருவாக டிரக்டரில் கட்டி இழுத்தாங்க. செல்வரெத்தினம் என்றொரு தோழர் கைது செய்யப்பட்டு பொலிசாரல் சுட்டுக் கொல்லப்பட்டார். பல தோழர்கள் பயங்கரமான சித்திரவதைகளை அனுபவிச்சாங்க. ரவிராஜ் என்ற தோழர் இன்றைக்கும் இந்த சித்திரவதைகளினால பாதிக்கட்ட நிலையிலதான் வாழ்கிறார்.

யோசித்துப் பாருங்க. எவ்வளவு கொடூரம். இதையெல்லாம் நினைத்தால் எனக்கு பைத்தியம் பிடித்துவிடும். இந்த தோழர்களையெல்லாம் எங்கேயாவது பதிவு செய்யணும் என எண்ணி இருந்தன். இந்த போராட்டத்தில தங்கட வாழ்கையை இழந்தவங்க இவங்க. இவங்களெல்லாம் தோழர்கள் மாத்திரம் இல்ல, என்னுடைய இளமைக்கால நண்பர்கள் இவங்க.

தேசம்: ஏற்கனவே வெலிக்கடைச் சிறையில் இருந்தவர்களை மாத்திரம்தான் மட்டக்களப்பு சிறைக்கு கொண்டு வரார்களா?

அசோக்: ஓம். மட்டக்களப்புக்கு கொண்டு வரப்படும் போது, பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட வெலிக்கடை படுகொலையில் உயிர் தப்பியவர்களைத்தான், பழைய ஆட்களைத்தான் கொண்டு வாறாங்க. வெலிக்கடை சிறையில் படுகொலை நடந்தவுடன், அவங்களுக்கு பாதுகாப்பின்மை இருக்குது. தற்காலிகமாக அவங்களை மட்டக்களப்பு சிறையில் வைத்துக் கொண்டு, இன்னுமொரு சிறைக்கு மாற்றுவதற்கு, அவகாசத்துக்காக மட்டக்களப்பு சிறைக்கு கொண்டு வரார்கள். இங்க குறிப்பிட்ட காலம் தான் வைத்திருக்க முடிவு செய்திருந்தார்கள். அதற்குப்பின் வேறு சிறைக்கு மாத்துவது அவர்களின்ர திட்டம். பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட் ட புதிய போராளிகளை, நிறைய தமிழ் மக்களை பூசா சிறையில் தான் அடைத்தார்கள். எங்கட கிராமத்திலேயே நிறைய பேரை கைது செய்திருக்கிறார்கள். பூஸாவில் எங்கட நிறைய தோழர்கள் இருந்திருக்கிறார்கள்.

தேசம்: இந்த விடுதலைப் போராட்டத்தில் முக்கியமாக கருதப்பட்ட கனபேர் அந்த காலகட்டத்தில் மட்டக்களப்பு சிறையில் இருந்திருக்கிறார்கள். நிர்மலா… நித்தியானந்தன்…

அசோக்: டேவிட் ஐயா, ராஜன், டக்ளஸ் தேவானந்தா, சுகுதோழர், வரதராஜபெருமாள், நித்தியானந்தன், பாதர் ஜெயகுலராஜா, தங்க மகேந்திரன்.

தேசம்: வேற யார் யார்…

அசோக்: பனாக்கொடை மகேஸ்வரன், ஈரோஸ் அந்தோனிப்பிள்ளை, புளொட்டில் மாணிக்கதாசன், அற்புதம், வாமதேவன், சுபாஸ், மகேந்திரன் மாமா இவங்களெல்லாம் சிறைக்குள்ள இருந்தவங்க.

தேசம்: இவர்களெல்லாம் வெலிக்கடை சிறையில் இருந்து மட்டக்களப்புக்கு மாற்றப்படுகிறார்கள்…

அசோக்: ஓம்…

தேசம்: இவர்கள் இந்த வெலிகடை படுகொலையில் இருந்து தப்பிய ஆட்கள்…

அசோக்: படுகொலையில் இருந்து தப்பி ஆட்கள் அவ்வளவு பேரும் தான், மட்டக்களப்பு சிறை உடைப்புக்குள்ளால வெளியில வாறார்கள்.

வெலிக்கடை சிறையிலிருந்து மட்டக்களப்பு சிறைக்கு மாற்றும் போது எல்லா இயக்கங்களை சேர்ந்தவங்களும் அதில் இருக்காங்க. அதுல ஈபிஆர்எல்எஃப் தோழர்கள் இருந்திருக்கிறார்கள், ஈரோஸ் தோழர்கள் இருந்திருக்கிறார்கள், தம்பாப்பிள்ளை மகேஸ்வரன் ஆட்கள் இருந்திருக்கிறார்கள், புலிகளின் ஆட்கள் இருந்திருக்கிறார்கள்.

தேசம்: மட்டக்களப்பு சிறையை உடைக்க வேண்டும் என்ற அந்த எண்ணக்கரு எப்படி உருவாகுது?

அசோக்: நான் சொன்னேன் தானே தற்காலிகமாகத்தான் இங்க வைத்திருக்கிறார்கள் என்று.

தேசம்: இதுல முக்கியம் என்னென்றால், வெலிக்கடை சிறையில் இருந்த ஆட்கள் எல்லாரும் தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் முக்கியமானவங்க. எஞ்சியவர்களும் மிக முக்கியமான ஆட்கள் தான்.

அசோக்: அவர்களும் வேறு சிறைக்கு மாற்றப்பட்டு படுகொலை செய்யப்பட்டு அழிக்கப்பட்டிருந்தால், போராட்டத்திற்கான முன்னெடுப்புகள் இல்லாமல் போயிருக்கும். ஏதோ ஒரு வகையில் மிக முக்கியமான ஆட்கள் இவங்க… காலப்போக்கில் பிற்காலத்தில் அவர்கள் தொடர்பான விமர்சனங்கள் இருந்தாலும் கூட, அன்றைய காலகட்டத்தில் சிறைக்குள் இருந்த அவ்வளவு பேரும் மிக மிக முக்கியமான ஆட்கள். ஈழ விடுதலைப் போராட்டத்தின் முன்னோடிகள். அவர்கள் இன்னொரு சிறைக்கு மாற்றப்பட்டு இன்னொரு படுகொலை நடந்திருந்தால் ஈழப் போராட்டத்தின் வரலாறு அன்றைக்கு அழிந்து போயிருக்கும். அப்போ இன்னொரு சிறைக்கு மாற்றுவதற்கு முன்னர் இவங்களை வெளியில் எடுக்க வேண்டிய தேவை எல்லா இயக்கங்களுக்கும் இருந்தது. புளொட்டுக்கும் அந்த ஐடியா இருந்தது. ஈபிஆர்எல்எஃப் தோழர்களுக்கும் அந்த ஐடியா இருந்தது. புளொட் குறிப்பிட்ட காலத்துக்குள்ள அதை செய்யவேண்டும் என்று சொல்லி அதற்கான வேலைகளை தொடங்கினது. அதற்கான ஆயுதங்கள் எங்களிடம் இல்லாமல் போய்விட்டது.

தேசம்: மட்டக்களப்பு சிறை உடைப்பு எப்ப நடக்குது…

அசோக்: 83 செப்டம்பர். எங்களிட்ட ஆயுதங்கள் இல்லை. குறிப்பிட்ட சில ஆயுதங்கள் தான் இருந்தது. ரகுமான் ஜான் தோழர் ஆயுதங்கள் எடுத்து வருவதற்கு இந்தியாவுக்கு போறார். போயிட்டு, அவர் வெறும் கையோடுதான் வாறார். வந்து சொல்லுறார் அங்க ஆயுதங்கள் இல்லை என்று. ரகுமான்ஜான் தோழர் மன்னாரில் வந்திறங்கிய போது கடற்படையின் சுற்றிவளைப்பில் இருந்து தப்பி, நேரடியா எங்கட வீட்ட தான் வாறார் களுதாவளைக்கு. அன்றிரவு எங்கட வீடு பொலிசால் ரவுண்டப் பண்ணுப்படுது. அன்று இரவு நானும் ரகுமான்ஜானும் வீட்டில் தங்கியிருந்தா நாங்களும் மாட்டுப்பட்டு இருப்போம்.

தேசம்: ஏற்கனவே நீங்கள் தேடப்படுற ஒரு ஆளாக இருந்தபடியால்…

அசோக்: எப்படியோ பொலிசிக்கு தெரிந்து விட்டது. அன்றைக்கு வேறு ஒரு வீட்டில இருந்தபடியால் தப்பி விட்டோம். பின் தளத்திலிருந்து ஆயுதங்கள் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருந்த எங்களுக்கு தோழர் ரகுமான் ஜான் ஆயுதங்கள் கிடைக்கவில்லை என்று சொன்னது ஏமாற்றமாக இருந்தது. குறிப்பிட்ட காலத்தினுள் சிறை உடைப்பு செய்ய வேண்டும். காலம் போனால், வேறு சிறைக்கு மாற்றி விடுவார்கள். பிறகு ஒன்றும் செய்ய இயலாது. பிறகு ஈபிஆர்எல்எஃப் தோழர்களுக்கும் இது சம்பந்தமாக ஆர்வம் இருக்கின்றபடியால் அவங்களோட தொடர்பு கொள்கிறோம். குறிப்பாக யோகராஜ் என்று எங்களுக்கு நெருங்கிய தோழராக இருந்தவர். அவரோடதான் முதலில் தொடர்பு கொள்ளுகிறேன். அவர் சொல்கிறார் எங்களிட்ட ஆயுதம் இருக்கு சேர்ந்து செய்யலாம் என்று.

அடுத்தது சிவலிங்கம் என்று ஒரு தோழர். அருமையான தோழர். தோழர் பாலா, தோழர் கணேஸ் இவர்கள் எல்லாம் ஈபிஆர்எல்எஃப் தோழர்கள். அதில் குன்சி தான் முக்கியமானவர். குன்சியோடு வாசுதேவா தொடர்பு கொள்கிறார். குன்சிக்கும் வாசுதேவாவுக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடந்தது சேர்ந்து செய்யலாம் என்று சொல்லி.

தேசம்: புளொட்டில் மட்டக்களப்பு சிறை உடைப்பை மேற்கொள்வதில் யார் முன்னுக்கு நின்று செயற்பட்ட ஆட்கள்…

அசோக்: முக்கியமாக தோழர் வாசுதேவாதான். மற்றது தோழர் பார்த்தன். சிறையிலிருந்து வந்தவங்களை பாதுகாத்து, இந்தியாவுக்கு கொண்டு சென்றதில் தோழர் பார்த்தனின் பங்களிப்பு முக்கியமானது.

வாசுதேவா மட்டக்களப்பில் சிங்கள வாடி என்ற இடத்தை சேர்ந்தவர். அங்க இருக்கிற பல பேர் மட்டக்களப்பு சிறையில் ஜெயிலராக இருக்கிறார்கள். இயல்பாகவே வாசுதேவுக்கும் இந்த ஜெயிலர்களுக்கும் இடையில் உறவு ஒன்று இருந்தது. சிறையில் நடக்குற எல்லாம் இந்த தமிழ் ஜெயிலர்களுக்கூடாக தெரியவரும். அதில முக்கியமானவர் கிருஷ்ணமூர்த்தி என்றவர். அவர்
வாசுதேவாவின் நல்ல ஃப்ரெண்ட். சிறை உடைப்புக்கு பிற்பாடு இவரும் புளொட்டிக்கு வந்து, பி எல் ஒ ட்ரெயினிங் எடுத்தவர். தோழர் பிரசாத் என்று சொல்றது. புலிகள் தான் அவரை பிறகு மட்டக்களப்பில் வைத்து சுட்டுக் கொன்றார்கள். மிகத் திறமையான தோழர். உண்மையிலேயே அந்த ஜெயில் உடைப்புக்கு பெரும் உதவியாக இருந்தவர் இவர்தான்.#

இவருக்கூடாகத்தான் உள்ளே இருந்தவர்கள் தப்புவதற்கான தற்காப்பு ஆயுதங்கள், இரண்டு ரிவோல்வர்கள், வடிமைக்கப்பட்ட மெசின் கன், சாவிகள் கொடுக்கப்பட்டன.

தேசம்: கிட்டத்தட்ட ஜெயில் உடைப்பு என்பது திறந்துவிடப்பட்டது மாதிரித்தான்…

அசோக்: ஆனால், அதற்கான தயாரிப்புகள் நிறையச் செய்யப்ப ட்டது. எங்களிடம் ஆ யுதங்கள் இல்லை. ரிவோல்வர்கள் இருந்தன. இவற்றை வைத்து ஒன்றும் செய்யமுடியாது. ஈபிஆர்எல்எஃப் தோழர்கள் ஆயுதங்கள் தங்களிடம் இருப்பதாக சொன்னாங்க. பிறகுதான் தெரியும் அவர்களிடம் ஆயுதங்கள் இல்லை என்று. ஆயுதம் இல்லாதபடியால், குறைந்தபட்சம் ஆயுதம் தேடவேண்டும் என்று சொல்லி கிராமங்களிலிருந்து சோட் கண்களை எடுத்தோம். அதுல வரதன், வைத்திலிங்கம், விஜி, ஜீவா அகஸ்டின், நிறைய தோழர்கள் ஈடுபட்டார்கள்.

தேசம்: அதுல ஈஸ்வரனும்…

அசோக்: ஈஸ்வரன், கராட்டி அரசன், நான் சில இடங்களில் ஆயுதங்களை சேகரித்தோம். அதற்குப் பிறகு அரசாங்கம் மிகக் கடுமையாக சொல்லிவிட்டது விவசாயிகள் இருக்கிற ஆயுதங்களை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்க வேண்டும் என்று.

தேசம்: நீங்கள் விவசாயிகளிடம் இருந்து ஆயுதங்களை பறிக்க முயற்சித்தீர்கள்.

அசோக்: அது ஒரு பிழையான காரியம்தான். அன்றைய நேரத்தில் அதைப்பற்றி யோசிக்கவில்லை. சிறையிலிருப்பவர்களை எடுக்க வேண்டும் என்ற நோக்கம்தான் முக்கியமாகபட்டது.

மட்டக்களப்பு ஜெயில் உடைப்பில் நான், ஈஸ்வரன் நேரடியாக பங்கு கொள்ளவில்லை… அப்போது நாங்கள் பொலிசாரால் தேடப்பட்டுக் கொண்டிருந்தோம்… முழுக்க முழுக்க ஈடுபட்டது வாசுதேவாதான். இந் நேரத்தில் தோழர் மாசிலாமணியின் பங்களிப்பை நினைவு கூறுவது மிக அவசியம். அவர்தான் சிறைச்சாலை கதவு திறப்புக்களை செய்து உதவியவர். அவரின் இந்த உதவியின்றி சிறைச்சாலை கதவுகளை திறந்திருக்க முடியாது.

அவர் லேத் மெசின் கராஜ் வைத்திருந்தார். அவர் கடைசியாக புளொட்டில வந்துட்டார். இப்ப கனடாவில இருக்கிறார் என்று நினைக்கிறேன். தப்பிச் செல்வதற்கு காந்திய வாகனங்கள் பயன்படுத்தப்பட்டன. இது பின்னர் பொலிசிக்கு தெரியவந்து மட்டக்களப்பு காந்தியத்தை தடைசெய்துவிட்டாங்க. பொறுப்பாக இருந்த சின்னத்துரை மாஸ்ரரும், துரைசிங்கமும் கைது செய்யப்பட்டாங்க.

இந்த சிறை உடைப்பில், தோழர்கள் சக்தி வடிவேல், சங்கர், வரதன், வைத்திலிங்கம் கணன், கராட்டி அரசன், விஜீ போன்றோர் முக்கியமானவங்க. ஈபிஆர்எல்எப் தோழர்களும் மிகமுக்கியமானவங்க. குறிப்பாக தோழர் குன்சி. இவர்கள் எல்லோருடைய ஒத்துழைப்போடுதான் மட்டக்களப்பு சிறையுடைப்பு நடைபெற்றது. பிறகு தோழர்கள் சக்தி வடிவேல், வைத்தியலிங்கம், மாணிக்கம்பிள்ளை போன்றவங்ககளும் இது தொடர்பாக கைது செய்யப்பட்டாங்க…

தேசம்: அந்த நேரத்தில் புளொட் தாம் செய்ததாக உரிமை கோரி அறிக்கை விட்டதென நினைக்கிறேன்.

அசோக்: புளொட் முழுக்க உரிமை கோர இயலாது. அது உண்மையிலேயே புளொட்டும், ஈபிஆர்எல்எஃப் பும், சேர்ந்து செய்த சிறை உடைப்பு தான். யாழ்ப்பாணத்தில் புளொட் அறிக்கை விட்டு, பின்பு ஈபிஆர்எல்எஃப் ஒரு அறிக்கை விட, முரண்பாடு வந்து அறிக்கைப் போராகவே மாறிவிட்டது. இரு அமைப்புக்களும் புரிந்துணர்வு அடிப்படையில் தோழமையோடு இணைந்து கூட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்க முடியும்.

புளொட் தலைமையினால் அது முடியாமல் போயிற்று. இந்த அறிக்கைப் போர் தோழமையோடு இருந்த ஈபிஆர்எல்எப் தோழர்களுக்கும் எங்களுக்குமிடையில் முரண்பாட்டை ஏற்படுத்தி, பரஸ்பரம் நம்பிக்கையின்மையையும் உருவாக்கி விட்டது.

தேசம்: இவ்வாறான பல முரண்பாடுகள் உரிமை கோரல்கள் பல எழுந்திருக்கு…

அசோக்: அது எனக்கு ஒரு பெரிய மனவருத்தம். இப்படியான சம்பவங்களை வடிவா பேசித் தீர்த்துக்கலாம். ஈபிஆர்எல்எஃப் தோழர்கள் உரையாடலுக்கு தகுதியற்ற ஆட்கள் இல்லை தானே. எங்களைவிட அவங்களிட்ட ஜனநாயகப் பண்பு இருந்திருக்கு. அவங்களோட உரையாடல் செய்து இருக்கலாம். இது புளொட்டில் நடந்த பெரிய தவறு.

உதாரணமாக மட்டக்களப்புகச்சேரி துப்பாக்கி பறிமுதல் சம்பவம். அது எனக்குத் தெரிந்த நண்பர்களால் செய்யப்பட்டது. அதற்கு நான் தனிப்பட்ட வகையில் ஒத்துழைப்பு கொடுத்தனேயொழிய, அதற்கும் புளொட்டிக்கும் தொடர்பு இல்லை. பிறகு அவங்க எல்.ரீ. ரீ . ரீக்கு போயிட்டார்கள். மட்டக்களப்பு சிறை உடைப்புக்கு பிறகு, இதை நாங்கள் செய்யத்தான் இருந்தோம். செய்யுறதுக்கு அதற்கான ஆட்பலம் இல்லாமல் போய்விட்டது. நானும் ஈஸ்வரனும் தான் மட்டக்களப்பில் இருந்தோம். மிச்ச எல்லோரும் சிறை உடைப்போட அப்படியே இந்தியாவுக்கு போயிட்டார்கள். அதால செய்ய முடியாமல் போயிற்று. கச்சேரி துப்பாக்கி பறிமுதல் நடந்தது பற்றி பின் தளத்தில் கேள்விப்பட்ட புளொட் தலைமை இதனைச் செய்தது புளொட் என அறிக்கைவிட்டது. இது தவறான புரிதலின் அடிப்படையில் நடந்தது. புளொட் செய்வது பற்றிய திட்டமிருந்ததினால் புளொட்தான் செய்திருக்கும் என்ற அனுமானத்தில் இவ் அறிக்கை வெளியிட்டதாக பின்னர் சொல்லப்ட்டது.

பாகம் 11: புளொட்டின் மத்திய குழு உருவாக்கமும் அதன் துஸ்பிரயோகமும் – உமாமகேஸ்வரன் மட்டும் பொறுப்பல்ல!

களுதாவளையிலிருந்து பாரிஸ் வரை
ஒர் அரசியல் போராளியின் வாழ்வின் பயணம்!

அசோக் யோகன் கண்ணமுத்துவுடன் ஒர் உரையாடல்! : தோழர் அசோக் யோகன் கண்ணமுத்துவின் சாட்சியம் பகுதி 11 (ஒலிப் பதிவு செய்யப்பட்ட திகதி 07.08.2021). இந்த உரையாடல் அசோக் யோகன் கணணமுத்துவின் பேச்சுமொழியில் எந்த மாற்றமும் இன்றி பிரசுரமாகின்றது.

பாகம் 11

தேசம்: புளொட்டின் மத்தியகுழுவில் பெரும்பாலான ஆட்கள் யாழ் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் அப்படித்தானா?

அசோக்: அப்படியல்ல. பெரும்பாலும் யாழ்ப்பாணத்திற்கு வெளியில் ஏனைய மாவட்ட ங்களை சேர்ந்தவங்கள்தான் அதிகம்.

இதில் தோழர் ஆதவன் மலையகம், வவுனியாவில் இருந்தவர். தோழர் முரளி வவுனியா. வாசுதேவா, ஈஸ்வரன், நான் மட்டக்களப்பு. பார்த்தன், ரகுமான்ஜான், கேதிஸ்வரன் கேசவன், திருகோணமலை. சலீம் மூதூர், சரோஜினிதேவி கிளிநொச்சி, ஆரம்ப காலம் யாழ்ப்பாணம் ஆக இருக்கலாம், இருக்கிற இடம் கிளிநொச்சி. ராஜன் பரந்தன், கிளிநொச்சி.

தேசம்: செந்தில்…

அசோக்: செந்தில் செட்டிகுளம், வவுனியா.

தேசம்: தீப்பொறியில் இருந்தவரா?

அசோக்: அதுல இல்ல உமா மகேஸ்வரனோடு கடைசி காலங்களில் முரண்பட்டு வெளியேறிவர்களில் இவரும் ஒருவர்.

தேசம்: மாறன்…

அசோக்: மாறன் ஆரம்ப காலத்தில் இருந்தவர். தெல்லிப்பளை என நினைக்கிறன். அவரைப் பற்றி எனக்கு பெருசா தெரியாது. 84 இராணுவத்தால கைது செய்யப்பட்டு ஜெ யிலில் இருந்தவர். பிறகு விடுதலையாகி புளொட்டில் வேலை செய்ததாக அறிந்தேன்.

தேசம்: இதைவிட இந்தியாவைச் சேர்ந்த இரண்டு பேர்…கிட்டத்தட்ட 20 பேர் இருந்திருக்கிறார்கள்…

அசோக்: முதல் 17 பேர் தான். இது 83 கடைசில உருவாக்கப்படுது. 84 ஜனவரி மத்திய குழுவில் இரண்டுபேர் மேலதிகமாக, நானும் செல்வனும் பிரேரிக்கப்படுறம்…

தேசம்: ரெண்டு பேரையும் உள்ளுக்கு எடுக்கினமோ?

அசோக்: அதுல ஒரு சிக்கல் நடந்தது இரண்டு பேரும் பிரேரிக்கப்பட்டு நான் மட்டும் உள்வாங்கப்பட்டேன். செல்வன் தொடர்பாக ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டதால், செல்வனை சேர்க்கவில்லை. பிற்காலத்தில் நான், ரகுமான் ஜான் தோழரிடம் இதைப்பற்றி கேட்டேன்.

தேசம்: எதைப் பற்றி…

அசோக்: செல்வன் சேர்க்கப்படாததற்கு என்ன காரணம் சொல்லப்பட்டதென. ஏன் அவர் சேர்க்கப்பட வில்லை என்பது பற்றி. தற்சமயம் வேண்டாம், அவர் ஒரு பிரச்சனைக்குரிய ஆள் என்று, தோழர் பார்த்தன் கருத்து வைத்ததாகவும், அதனால்தான் சேர்க்கப்படவில்லை என்றும் சொன்னார்.

தேசம்: அவர் இந்தியாவுக்கு வந்து விட்டு திரும்பி வாரார்…

அசோக்: ஓம் திரும்பி வந்துட்டார். ஜனவரி சென்றல் கமிட்டியில் நான் மட்டும்தான் கலந்து கொள்கிறேன்.

தேசம்: இதுல கண்ணாடி சந்திரன் என்பது யார்?

அசோக்: அவர் கழகத்தில் எல்லா அதிகாரங்களுடனும் இருந்தவர். அவரைப்பற்றி பின்னாடி தளம் பற்றி வரும்போது கதைக்க வேண்டும். ஏனென்று கேட்டால், அவர் ஆரம்ப காலத்தில் பயங்கர உமாமகேஸ்வரன் விசுவாசி. தளத்தில் நடந்த தன்னிச்சையான பல செயற்பாடுகளுக்கு தவறான போக்குகளுக்கு முழுக்காரணமாக இருந்தவர். பல்வேறு பொறுப்புகளில் இருந்தார். அவருக்கு என்ன பொறுப்பு என்றே சொல்ல முடியாது. எல்லா அதிகாரங்களும் அவருக்கு இருந்தன. தளத்தில் ஒரு கட்டத்தில் ராணுவ பொறுப்பாளராக இருந்தார். பார்த்தன் இறந்த பின் இவரைத்தான் கட்டுப்பாட்டுக்குழு தள இராணுவப் பொறுப்பாளராக நியமனம் செய்யுது. எந்தவொரு இராணுவ பயிற்சியும், இராணுவக் கல்வியும் இல்லாத ஒருவர் இராணுவப் பொறுப்பாளாராக தளத்திற்கு நியமிக்கப்படுகின்றார் என்றால், நட்புக்காக அதிகார துபிரயோகம் எப்படி நடந்திருக்கு பார்த்தீங்களா? உலக போராட்ட வரலாற்றில் இப்படி ஒரு அதிசய சம்பவம் நடந்திருக்குமா…?

இந்த நேரத்தில பின் தளத்தில் இராணுவப்பயிற்சி எடுத்த, அரசியல் ரீதியில் வளர்ந்த தோழர்கள் பலர் இருந்தனர். என்ன நடந்தது என்றால், அந்த நேரத்தில் தளப் பொறுப்பாளராக தோழர் கேசவன் இருந்தார். தோழர் கேசவனுக்கும், தோழர் ரகுமான் ஜானுக்கும் கண்ணாடிச் சந்திரன் நெருக்கமானவர் என்பதால் இந்த நியமனம் நடந்தது.

தேசம்: கண்ணாடிச் சந்திரன் எப்ப இயக்கத்தில் சேர்ந்தவர்?

அசோக்: 83 ஜூலைக் கலவரத்திற்கு பிற்பாடு. மொரட்டுவ பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருந்தவர் பிறகுதான் இயக்கத்துக்கு வாரார்.

தேசம்: ஜூலைக் கலவரத்தில் வந்து 3 மாதத்திலேயே இயக்கத்தில் சேருகிறாரா?

அசோக்: கண்ணாடிச்சந்திரன் யாழ்ப்பாண இந்துக் கல்லூரியில் ரகுமான் ஜானோடு ஒன்றாக படித்தவர். ஜானின் நண்பர் பிறகு படிக்க போயிட்டார் மொரட்டுவ பல்கலைக்கழகத்திற்கு. கலவரத்துக்குப் பிறகு அங்கு தொடர்ந்து படிக்கமுடியாத சூழல் வரும் போது, வேலை செய்ய வாரார். வந்து மூன்று நான்கு மாதத்திலேயே மத்திய குழுவில் வந்துட்டார். அவர் மத்திய குழுவுக்கு வந்ததே வியப்புக்குரியது ஏனென்றால், பழைய நீண்டகாலமாக முழு நேரமாக வேலைசெய்த பல தோழர்கள் இருந்தாங்க.

தேசம்: இதுக்குள்ள வேறு யாரும் இப்படி குறுகிய காலத்தில் மத்திய குழுவில் வந்தவர்களா?

அசோக்: இல்லை இவர் தான் முக்கியமானவர். மற்ற ஆட்கள் எல்லாம் நிறைய காலம் இயக்கத்துடன் வேலை செய்தவர்கள். இவர் தெரிவு தொடர்பான விமர்சனங்கள் தளத்தில் இருந்தது.

தேசம்: அது என்ன விமர்சனம்?

அசோக்: எத்தனையோ நீண்ட காலமாக வேலை செய்யும் தோழர்கள் தளத்தில் இருக்கும் போது இவர் தெரிவு செய்யப்பட்டால் விமர்சனங்கள் வரும்தானே. பழைய தோழர்கள் நிறைய பேர் இருந்தவர்கள் தானே. செல்வன் உள்வாங்கப்படவில்லை. ராதாகிருஷ்ணன் என்று ஒரு தோழர் இருந்தவர். திருகோணமலையைச் சேர்ந்தவர். அகஸ்டின் செபமாலை அம்பாறை மாவட்ட பொறுப்பாளராக இருந்தவர் நீண்டகாலமாக. வரதன் மட்டகளப்பு தோழர். இவர்கள் எல்லாம் பழைய தோழர்கள். அவர்கள் யாரும் உள்வாங்கப்படவில்லை. மிகத் தீவிரமாக, தங்களுடைய வாழ்க்கையை இழந்து வேலை செய்த தோழர்கள் இவர்கள். அப்படி நிறைய தோழர்கள் இருந்தார்கள். தங்கராஜா தோழர். தோழர்களுக்கு அரசியல் பாசறைகள் நடத்தியவர். நீண்ட காலமாக இருந்தவர். இவர்கள் யாரையுமே இவர்கள் தெரிவு செய்யல்ல.

அத்தோடு பெண்கள் பிரதிநித்துவம் மத்திய குழுவில் மிகக்குறைவு. சரோஜினிதேவி மாத்திரமே இருந்தாங்க. ஜென்னியை எடுத்திருக்க முடியும். ஜென்னி தொடர்பாய் பிற்காலத்தில் விமர்சனம் இருக்கலாம். பிற்காலத்தில் எல்லாப் பேர்களை பற்றியும் விமர்சனம் இருக்குத்தானே. ஆனா அன்றைய நேரத்தில ஜென்னி தீவிரமான செயற்பாட்டாளர். காந்தீயத்தின் தொடக்க காலத்திலிருந்து புளொட்டிக்கு வந்தவர். ஆனா விரும்பல்ல. வவுனியா தோழர் செந்தில் என்று. மிகத்தீவிரமாக வேலை செய்தவர். யாழ்ப்பாண யுனிவசிற்றில படித்துக் கொண்டு வவுனியாவிலும் யாழ்பாணத்திலும் வேலை செய்தவர். இப்படி நிறைய தோழர்கள் பெயர்கள் ஞாபகம் இல்ல.

தேசம்: இந்த சென்றல் கமிட்டி உறுப்பினர்களை யார் தெரிவு செய்கின்றார்கள்?

அசோக்: கட்டுப்பாட்டுக்குழுவில் இருந்த சந்ததியார், உமா மகேஸ்வரன், ரகுமான் ஜான், கண்ணன், சலீம் இவங்கதான். இது தனிநபர் அதிகாரங்களுக்கு ஊடாகத்தான் இந்த தெரிவுகள் நடந்தன.

தேசம்: ரகுமான் ஜானுக்கும் அந்த அதிகாரம் இருந்ததா?

அசோக்: ஓம் ஆரம்ப காலகட்டத்தில் இந்த ஐந்து பேருக்கு தான் அந்த அதிகாரம் இருந்தது. இல்லாட்டி கண்ணாடி சந்திரனை எவ்வாறு கொண்டு வர முடியும்? அதிகாரம் இருந்தபடியால் தானே. இவர்கள்தான் புளொட்டின் அதிகார துஷ்பிரயோகத்தின் ஆரம்ப கர்த்தாக்கள். வழிகாட்டிகள். உமா மகேஸ்வரனின் தன்னிச்சையான போக்குகளுக்கு, அதிகார செயற்பாடுகளுக்கு வழிகாட்டிகளாக இருந்தவங்க இவர்கள்தான். ஆரம்பத்திலேயே நாம் நேர்மையாக ஐனநாயக மத்தியத்துவ பண்புகளோடு தன்னிச்சையான போக்கு, குழு வாதம் தனிநபர் விசுவாசம், திறமையற்ற நபர்களை உள்வாங்கல் போன்றவற்றிக்கு எதிராக செயற்பட்டிருந்தால் உமா மகேஸ்வரனின் அதிகாரத்தையும் புளொட்டின் அழிவையும் தடுத்திருக்க முடியும்தானே. புளொட்டின் உட் கொலைகளுக்கும் அதன் சீரழிவுகளுக்கும் காரணமான உமா மகேஸ்வரனினால் பயன்படுத்தப்பட்ட அனேகர் சந்ததியாரல் கொண்டு வரப்பட்ட ஆட்கள்தானே. இவர்களை சரியான வழியில் அரசியல் சிந்தனை கொண்டவர்களாக ஏன் சந்ததியாரல் மாற்றமுடியாமல் போயிற்று?

யோசித்துப்பாருங்க.

தேசம்: அப்படிப் பார்த்தாலும் உமாமகேஸ்வரன், கண்ணன் இவர்கள் இரண்டு பேரும் வேற ஒரு அரசியலில் இருந்து வந்தவர்கள். அங்கால ரகுமான்ஜான், சந்ததியார், சலீம் மூன்று பேரும் கிட்டத்தட்ட தீப்பொறி…

அசோக்: சந்ததியாருக்கும் தீப்பொறி இயக்கத்திற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. அதை பிறகு கதைப்பம். உண்மையில் விமர்சன பூர்வமாக ஆராய்ந்தோமானால் ஆரம்பகால புளொட்டில் அதிகாரம் என்பது உமாமகேஸ்வரன் போன்றவர்களிடம் மட்டும் இருக்கல்ல. சந்ததியார், ரகுமான்ஜான், கேசவன் போன்ற தோழர்களிட மும் இருந்தது. இவர்கள் புளொட்டை இடதுசாரி அரசியல் கொண்ட ஒரு தேசிய விடுதலைப் போராட்ட அமைப்பாக வளர்த்தெடுத்து இருக்க முடியும். இடதுசாரி கருத்தியல் கொண்ட ஆட்கள் தானே… ஆரம்ப காலத்தில் நீங்கள் பார்த்தீர்கள் என்றால் உமாமகேஸ்வரன் மீதோ, கண்ணன் மீதோ விமர்சனங்கள் வைக்க முடியாது . சந்ததியார், ரகுமான்ஜான் இவர்களோடு இணைந்துதானே எல்லாச் செயற்பாடுகளையும் தீர்மானித்துள்ளார்கள்.

உமாமகேஸ்வரன் போன்றவர்கள் அப்படி தன்னிச்சையான போக்கு கொண்டவர்களாக ஆதிக்கம் செலுத்துபவர்களாக உருவாகக் கூடிய சூழலை சந்ததியார், ரகுமான்ஜான் இல்லாமல் செய்திருக்க வேண்டும். அதற்கு நல்ல அரசியல் ஆளுமைகொண்ட சக்திகளை மத்தியகுழுவில் உள்வாங்கி இருக்க வேண்டும். இவர்களும் நேர்மையாக முன் மாதிரியாக நடந்திருக்க வேண்டும். ஆனால் நடந்தது கோஸ்டி சேர்த்ததுதானே. இவர்களே தவறான வழிகாட்டிகளாகத்தானே இருந்திருக்காங்க. சந்ததியார், உமாமகேஸ்வரன் முரண்பாடு வந்ததன் பிறகு தான் உமாமகேஸ்வரன் சுயரூபம் தெரியுது. இந்த மோசமான அதிகாரத்தை தனிநபர் ஆதிக்கத்தை உமா மகேஸ்வரனுக்கு வழங்கியதில் இவர்கள் எல்லோருக்கும் பங்கு உண்டு. இதை முதலாவது மத்திய குழுக் கூட்டத்தில் நான் கலந்துகொண்ட போது உணரமுடிந்தது. ரகுமான் ஜான் தோழர் மிகத்திறமையாவர்.அரசியல் திறனும் இராணுவத்திறனும் கொண்டவர். கேசவன் தோழர் இடதுசாரிய அரசியல் கொண்டவர். சந்ததியாரும் அரசியல் ரீதியில் வளர்ந்தவர். இவர்கள் சரியான வழிகாட்டிகளாக இருந்திருந்தால் பின் தளத்தில் புளொட்டை இடதுசாரி கருத்தியல் கொண்ட அமைப்பாக வளர்த்தெடுத்திருக்கமுடியும். அதற்கான சந்தர்ப்பங்கள் இவங்களுக்கு நிறைய இருந்தது.

தேசம்: இந்த மத்திய குழு கட்டுப்பாட்டு குழு தொடர்பாக நீங்கள் முதல் தரம் மத்திய குழுக் கூட்டத்தில் கலந்து கொண்ட போது…

அசோக்: இப்பவும் நல்ல ஞாபகம் இருக்குது. 84 ஜனவரி கேகே நகரில் தான் மீட்டிங் நடக்குது. எனக்கும் ஒரு கற்பனை தானே மீட்டிங் தொடர்பாக. இடதுசாரி இயக்கங்கள், கம்யூனிஸ்ட் கட்சிகள் பற்றி எல்லாம் படிச்சுப் போட்டு, இது தொடர்பான கற்பனையோடு, மத்திய குழுக் கூட்டங்கள் இப்படித்தான் நடக்கும், அரசியல் சித்தாந்த விவாதங்கள் நடக்கும் என்று சொல்லி அங்க போனால்…

முதலாவது சென்றல் கமிட்டி மீட்டிங்கில விவாதங்கள் எல்லாம் சம்பவங்களாத்தான் இருந்திச்சு. அதுக்குப் பிறகு நடந்த சென்றல் கமிட்டீ மீட்டிங்கில இந்தியா கொடுத்த ட்ரெய்னிங் தொடர்பாக பேசப்பட்டது. எல்லா இயக்கங்களுக்கும் ட்ரெய்னிங் கொடுக்க இந்தியா முடிவு பண்ணியிருந்த நேரம். புளொட்டுக்கு கொடுக்கபடவில்லை. அப்ப புளொட் ரெயினிங் எடுக்கப்போவதா இல்லையா என்பது பற்றி ஒரு விவாதம் நடந்தது. அது அரசியல் கருத்தியல் நடைமுறை சார்ந்த பிரச்சனை தானே.

தேசம்: ஓ.

அசோக்: ஆனால் அந்த விவாதம் கருத்தியல் சார்ந்து பெருசா நடக்கேல. கருத்தியல் சார்ந்து இந்தியா தரும் பயிற்சியில் உள்ள நன்மை, தீமைகள் இதில் எதிர்கால சிக்கல்கள் எதைப்பற்றியும் உரையாட வில்லை. அவர்களை என்னென்று கையாளுவது என்பது பற்றி எதுவுமே இல்லை. ஆனால், பெரும்பான்மையான ஆட்கள் கட்டாயம் ட்ரெய்னிங் எடுக்கனும் என்ற நிலைப்பாட்டில்தான் கதைத்தாங்க. ரெயினிங் எடுப்பது பிரச்சனை அல்ல. குறைந்தபட்சம் இதை அரசியல் உரையாடலாக கொண்டு போய் இருக்கமுடியும். இவர்கள் யாருமே தயாராக இல்லை. டெலோவும் எடுக்குது. புலிகளும் எடுக்குது. ஈபிஆர்எல்எஃப்பும் எடுக்குது. நாங்களும் எடுக்கப் போவம் என்டு தான் ஒரு முடிவுக்கு வாராங்க. அதுல வார நன்மை தீமை – அதனால வாற பிரச்சனை இது பற்றி யாரும் ஆராயத் தயாராக இல்லை.

தேசம்: இந்த வங்கம் தந்த பாடம் எந்தகால கட்டத்தில வெளியிடப்பட்டது…?

அசோக்: வங்கம் தந்த பாடம் எண்பத்தி மூன்று காலகட்டத்தில் வெளியானது.

தேசம்: அப்படி என்டா நீங்க போன கூட்டத்திற்கு முன்பாகவே அது வெளியிடப்பட்டுட்டு விட்டது?

அசோக்: அதுக்கும் மத்திய குழுவுக்கும் தொடர்பில்லை. அது இலங்கையில் வெளியிடப்பட்டது. அது மத்திய குழு உருவாக்கப்படுவதற்கு முன்பு அது வெளியிடப்பட்டது. நாங்க மாவட்ட அமைப்பாளர்கள் இருந்தம்தானே அந்த காலத்திலேயே அடிக்கப்பட் டது…

தேசம்: அதாவது இதை வெளியிட்ட அவர்களுக்கு ஒரு கருத்தியல் இருக்குதானே…?

அசோக்: ஓ நிச்சயமாக.

தேசம்: அப்ப இந்தியா தொடர்பான அரசியல் மற்ற ஆபத்துகள் பற்றி விவாதிக்கப்படலையா..?

அசோக்: தமிழ் ஈழப்போராட்டம் தொடர்பாகவும் இந்தியா தொடர்பாகவும் எங்களிடம் சரியான அரசியல் பார்வை இருந்தது. அதன்ற வெளிப்பாடுதான் வங்கம் தந்த பாடம். எங்களிடம் இருந்த தெளிவு மத்திய குழுவைச் சேர்ந்தவர்களிடம் இருக்கவில்லை. மத்தியகுழு எப்படி உருவாக்கட்டது என்று முன்னமே கதைத்திருக்கிறம். புளொட்டில் ஆரம்ப காலங்களில் இருந்த லும்பன்களும், கடடுப்பாட்டுக்குழுவில் இருந்த உமா மகேஸ்வரன், சந்ததியார், ரகுமான்ஜான் விசுவாசிகளும்தானே மத்தியகுழுக்கு தெரிவு செய்யப்பட்டவங்க. அரசியல் கோட்பாட்டு நடைமுறை கொண்ட நேர்மையான தோழர்கள், எந்த முடிவெடுக்கும் அதிகாரமற்றவர்களாக வெளியில்தானே இருந்தாங்க.

மாவட்ட அமைப்புகளில் ஏனைய பொறுப்புக்களில் ஈழத்தில் இருந்த தோழர்கள் கருத்தியல் சார்ந்து வளர்ந்தவர்கள். இந்த மாவட்ட அமைப்பாளர்கள் எல்லாரும் மத்திய குழுவுக்கு போ கவில்லைத்தானே. மத்திய குழுவில் சிறை உடைப்பிலிருந்து வெளியே வந்தாக்கள்தான் அதிகம் பேர்.

தேசம்: இதில மாவட்ட பிரதிநிதிகளோ – மாவட்ட அமைப்பாளர்களோ இந்த மத்திய குழு அமைப்பில இருக்கல…? ஒராள் ரெண்டு பேர் இருந்திருக்கலாம்…?

அசோக்: முரளி, ஈஸ்வரன், குமரன் நான் எல்லாம் இருந்தனாங்க. எங்களை விட வளர்ந்த வேறு தோழர்கள் இருந்தார்கள். அவர்களையும் உள்வாங்கி இருந்திருக்கலாம்.

தேசம்: இந்தியாட்ட பயிற்சி பெறுவதா…? இல்லையா …? என்ற விவாதம் வங்கம் தந்த பாடம் வெளி வந்திருந்தாலும் கூட, ஒரு கருத்தியல் ரீதியான விவாதமா அங்க நடைபெறல..?

அசோக்: இது ஒரு நல்ல கேள்வி. வங்கம் தந்த பாடம் இந்தியாவுக்கு, அதனுடைய செயற்பாடுகளுக்கு எதிரான புத்தகம். வங்களாதேசில் இந்தியாவினுடைய வருகையும், அதனுடைய ஆக்கிரமிப்பு பற்றிய அது தொடர்பான ஒரு புத்தகம். வங்கம் தந்த பாடம் புத்தகத்தை நாங்க படிச்சிருப்பம் தானே. எனவே இது தொடர்பான பார்வையும், இந்தியா தொடர்பான எச்சரிக்கை உணர்வும் இருக்கத்தானே வேணும். அது எங்கேயும் வரலை. அப்படிப் பார்த்தால் புளோட்டா இந்த புத்தகம் அடிச்சது என்ற ஒரு கேள்வி தான் வரும் உங்க கிட்ட. அதுக்குப் பிறகு நான் கலந்து கொண்ட மத்திய குழுக் கூட்டம் எதுலயும் இந்த இந்திய ஆபத்து தொடர்பா பெருசா பேசப்படல. இந்த வங்கம் தந்த பாடம் எங்களுக்கு ஒரு அரசியல் விழிப்புணர்ச்சியை கொடுத்திருக்கணும். அது எப்பவுமே நடக்கல.

தேசம்: அந்த வங்கம் தந்த பாடத்தை யார் வெளியிட்டது. ?

அசோக்: 83ல் வெளியிடப்பட்டது என நினைக்கிறேன். தோழர் சந்ததியார், ரகுமான் ஜான், கேசவன் முக்கியமானவர்கள். இது மொழிபெயர்ப்பு புத்தகம். பங்களாதேஷ் இராணுவத்தில் இருந்த அபுதாகிர் என்கிற இராணுவத் தளபதி வெளியேறி J.S.D. என்ற கட்சி உருவாக்கினாங்க… மாக்சிசத்தை அடிப்படையாகக் கொண்ட கட்சி இது. அபுதாகிர் பங்களாதேசில் இந்திய மேலாதிக்கத்தையும், அமெரிக்க ஏகாதிபத்தியத்தியத்தின் சதியையும் அம்பலபடுத்தினார். அமெரிக்க C.I.A யும், இந்தியாவும் சேர்ந்து அவரை தூக்கில போட்டுவிட்டது. அபுதாகிரின் நீதிமன்ற சொற்பொழிவின் தமிழாக்ககம்தான் இது.

தேசம்: இது வெளியிடப்பட்டது உமா மகேஸ்வரனுக்கு தெரியுமா..?

அசோக்: தெரியும். தமிழிழ மக்கள் விடுதலைக் கழகம் என்ற பெயரிலதான் இது அச்சிடப்பட்டது.

தெரியாமல் செய்திருந்தால், பிரச்சனை வார காலத்தில் அது ஒரு பெரிய குற்றச்சாட்டா எங்களுக்கு எதிராக முன் வைக்கப்பட்டிருக்கும் தானே. அப்ப அது எங்கேயும் யாருக்கும் எதிராக வைக்கப்படல. ஆனா சந்ததியார் தொடர்பாக இந்தியா ரோவிடம் சந்ததியார்தான் இதனை வெளியிட்டவர் என்ற குற்றச்சாட்டு வைக்கப்பட்டதாக அறிந்தேன். எங்களுக்கு எதிராக குறிப்பாக எனக்கு, தங்கராஜா தோழர், சண்முகலிங்கம் போன்றவர்களுக்கு எதிராக நாங்க JVP யில் இருந்து போனபடியால், சீனாச்சார்பானவர்கள் என்றகுற்றச்சாட்டு ரோவிடம் சொல்லப்பட்டது.

பாகம் 10: புளொட் – புலிகள் முரண்பாடும் படுகொலைகளின் ஆரம்பமும் – ‘துரோகத்தின் பரிசு’ எழுதியது யார்?

களுதாவளையிலிருந்து பாரிஸ் வரை
ஒர் அரசியல் போராளியின் வாழ்வின் பயணம்!

அசோக் யோகன் கண்ணமுத்துவுடன் ஒர் உரையாடல்! : தோழர் அசோக் யோகன் கண்ணமுத்துவின் சாட்சியம் பகுதி 09 (ஒலிப் பதிவு செய்யப்பட்ட திகதி 07.08.2021). இந்த உரையாடல் அசோக் யோகன் கணணமுத்துவின் பேச்சுமொழியில் எந்த மாற்றமும் இன்றி பிரசுரமாகின்றது.

பாகம் 10

தேசம்: நாங்கள் இன்னும் 83 கட்டத்திற்கு வரவில்லை தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் உருவாக்கம் பற்றி முதல் கதைத்திருக்கிறோம். 83 க்கு முன்னான சில விடயங்களை கதைச்சிட்டு நாங்கள் அடுத்த கட்டத்துக்கு போவம்.

தேசம்: 83ம் ஆ ண்டிற்கு முன்னான அந்தக் காலகட்டத்தில் இயக்கங்கள் இந்தியாவில் பயிற்சிகள் ஏதும் எடுத்தனவா?

அசோக்: பயிற்சிகள் இயக்கங்கள் செய்தாக நான் அறியவில்லை. 83 யுலைக் கலவரத்திக்கு பிற்பாடு இந்தியா கொடுத்த பயிற்சி பற்றித்தான் எனக்கு தெரியும். 76 ஆண்டு பாலஸ்தீனத்திற்கு போய் இருக்காங்க. போன முதல் குருப்பில் லங்காராணி அருளர், சங்கர் ராஜூ, கனெக்ஸ் என்று ஒருவர், முன்று பேர் போய் பயிற்சி எடுத்திருக்காங்க.

அதற்குப் பிறகு உமா மகேஸ்வரனும், விச்சு என்ற தோழரும் பயிற்சிக்கு போனவங்க.

தேசம்: வேறு இயக்கங்களும் பயிற்சி எடுத்தனவா?

அசோக்: விடுதலைப்புலிகளில் உமா மகேஸ்வரன் இருந்த காலத்தில்தான் இந்தப் பயிற்சிக்கு போய் இருப்பார் என நினைக்கிறன். அதை ஒழுங்குபடுத்தினது ஈரோஸ் ரத்னசபாபதி என்று சொல்லப்படுது.

தேசம்: லண்டனில் இருந்து ஒழுங்கு செய்யப்பட்டது…

அசோக்: ஓம்

தேசம்: அதுல பிரபாகரனும் போறாரோ

அசோக்: பிரபாகரன் போகல

தேசம்: குறிப்பிட்ட காரணங்கள் இருக்கா பிரபாகரன் போகாமல் இருந்ததற்கு…

அசோக்: அது தெரியல்ல.

தேசம்: பாண்டி பஜார் சம்பவம் அது ஞாபகம் இருக்கா உங்களுக்கு…

அசோக்: அது பிற்காலத்தில். முரண்பாடுகள் கூர்மையடைந்து பிரபாகரனும், உமா மகேஸ்வரனும் பிரிந்த பின்பு நடந்த சம்பவம் அது…

தேசம்: ரெண்டு பேருக்கும் இலங்கையில் பாதுகாப்பு இல்லை தேடப்படுகிறார்கள் என்று அங்க போயினம். அங்க எதேச்சையாக சந்திக்கேக்க இந்தப் பிரச்சனை நடக்குது. அப்படித்தானே.

அசோக்: நான் அறிந்தது என்னவென்றால் 82ம் ஆண்டு இந்த சம்பவம் நடந்தது என நினைக்கிறேன். உமா மகேஸ்வரனும், கண்ணனும் சாப்பிடுவதற்காக பாண்டி பஜார் போய் இருக்காங்க.

அப்போது பிரபாகரனும், ராகவனும் வந்திருக்காங்க. ஆளுக்கு ஆள் நேரே சந்தித்துக் கொண்டதும், உடனே பிரபாகரனும், ராகவனும் உமா மகேஸ்வரனையும், யோதிஸ்வரன் கண்ணனையும் சுட்டிருக்காங்க. உமா மகேஸ்வரன் தப்பி விட்டார். கண்ணனுக்கு காலில் காயம் என நினைக்கிறன். தப்ப முடியவில்லை.

பொலிஸ் வந்து பிரபாகரனையும், ராகவனையும், கண்ணனையும் அரெஸ்ட் பண்ணி விட்டது. பிறகு உமா மகேஸ்வரனும் கைது செய்யப்படுகிறார்.

தேசம்: எண்பதுகளுக்குப் பிறகு விடுதலைப்புலிகளும் புளொட்டும் பிரிந்த காலப்பகுதி இருக்குதானே. இதுல பிரிந்து வந்தவர்கள் இடையே ஒரு தத்துவார்த்த வேறுபாடு அல்லது அரசியல் கொள்கை ரீதியான வேறுபாடுகளைக் காணக்கூடியதாக இருந்ததா?

அசோக்: சம்பந்தப்பட்ட நபர்களுடன் பிற்காலத்தில் கதைக்கும் போது சில விஷயங்களை உணர்ந்து கொள்ளக் கூடியதாக இருந்தது. விடுதலைப் புலிகளில் இருந்து உடைந்ததற்கு கணேசய்யர் இவங்களெல்லாம் சொன்ன காரணம் என்ன என்று கேட்டால், ஜனநாயகத் தன்மை இல்லை, தன்னிச்சையான போக்கு, ஜனநாயக மத்தியத்துவம் இல்லை, மத்திய குழுவுக்கு கட்டுப்படுவதில்லை என்று.

புலிகளிலிருந்து பிரிந்து, புளொட்டின் ஆரம்ப உருவாக்கத்தின் போதும் இதே பிரச்சனை வருகிறது. இது பற்றி முன்னமே கதைத்திருக்கிறேம்.

இதனால்தான் கணேசய்யர், நாகராஜ், சாந்தன் போன்றவர்கள் வெளியேறுகிறார்கள் உமா மகேஸ்வரனுக்கும், பிரபாகரனுக்கும் ஏற்பட்ட முரண்பாடுகளுக்கு பல காரணங்கள் சொல்லப்படுகின்றது. ஆனா அவை எல்லாம் தனிப்பட்ட பிரச்சனை களாகத்தான் இருக்கு.. அரசியல் தத்துவாரத்த முரண்பாடுகள் எதுவுமே இருந்ததாக தெரியவில்லை.

தேசம்: உண்மையிலேயே பார்க்கப்போனால் உமாமகேஸ்வரனோ, சந்ததியாரோ, சுந்தரமோ புலிகளோடயே இருந்திருக்கலாம் என்ற சூழல்தான் இருந்தது என்று சொல்ல வாறீங்களா?

அசோக்: உண்மையில் இவர்களின் முரண்பாட்டிக்கு எந்த அரசியல் கோட்பாட்டு மற்றும் நடைமுறைபிரச்சனைகள் எதுவும் இல்லைத்தானே. தனி நபர் முரண்பாடுகள் தீர்க்கப்பட்டிருந்தால் இவர்கள் எல்லோரும் ஒன்றாய் புலிகளாய் இருந்திருப்பாங்க. புலிகளின் உருவாக்கம், பின்பு புளொட்டின் உருவாக்கம் இவற்றில் எங்குமே அரசியல் சித்தாந்த கோட்பாடுகள் ஆளுமை செலுத்தியதாக தெரியவில்லை.

தேசம்: தனிநபர் முரண்பாடுதான் அதுல இருந்திருக்கு…

அசோக்: வெளியேறின ஆட்கள் கணேச அய்யரோ, சாந்தனோ, நாகராஜ் மாஸ்டரோ ஜனநாயகத் தன்மை இல்லை, தன்னிச்சையான போக்கு, ஜனநாயக மத்தியத்துவம் இல்லை, மத்திய குழுவுக்கு கட்டுப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டுக்களை வைத்துத்தானே வெளியேறி இருக்கிறார்கள். புலிகளிடமும் வைக்கிறார்கள். இங்கேயும் வைத்திருக்கிறார்கள்.

தேசம்: ஏன் இவர்களுக்கு அவைகளை வெளியில போட இயலாமல் போனது.

அசோக்: நான் நினைக்கிறேன் ஆயுதபலம் அவங்க கிட்ட தான் இருந்திருக்கு. முதல் பிரபாகரனிடம் ஆயுதபலம் இருந்தது. இங்க சுந்தரம், உமாமகேஸ்வரன் ஆட்களிடம் ஆயுதபலம் இருந்தது.

தேசம்: அவர்கள் வெளியேறி இடதுசாரி கருத்தியல் கொண்ட அமைப்பொன்றை ஏன் உருவாக்க முடியல்ல.

அசோக்: அவர்களிடம் வளர்ச்சி கொண்ட இடதுசாரி கருத்தியல்கள், சிந்தனைகள் இருப்பதற்கான சந்தர்ப்பம் இல்லை. முதலாளித்துவ ஜனநாயக பண்புகளின் எதிர்பார்ப்புக்களே அவர்களிடம் இருந்தன.
அவைகளை குறைந்த பட்சமாவது கொண்டிருக்க வேண்டும் என விரும்பி இருக்கின்றார்கள்.

தேசம்: ஏன் அவர்கள் பிற்காலத்துல ஈபிஆர்எல்எஃப் போய் சேர முடியாமல் போனது?

அசோக்: நாகராஜ் மாஸ்டர் ஒதுங்கிவிட்டார். கணேசய்யர் என். எல். எஃப். டி உருவாக்கத்தில் மத்திய குழுவில் இருந்திருக்கின்றார். அவரிட்ட ஓரளவு இடதுசாரி சிந்தனை இருந்திருக்கு, என். எல். எப். டி இடதுசாரிக் கோட்பாடுச்சார்புகளை ஓரளவு கொண்டிருந்தது.

தேசம்: அடுத்தடுத்த தோல்விகளால் ஒரு சலிப்புத் தன்மையை ஏற்படுத்தி இருக்கும். 80ற்குப் பிறகு நீங்கள் புளொட்டுக்குள்ள உள்வாங்கப்படும் போது புளொட்டின் மத்தியகுழுவின் அமைப்பு வடிவம் எப்படி இருந்தது.

அசோக்: மட்டக்களப்பு சிறை உடைப்புக்குபிற்பாடுதான் ஒரு பூரணமான மத்திய குழு அமைக்கப்படுகிறது.

தேசம்: என்னென்ன காரணங்களுக்காக முக்கியமான உறுப்பினர்கள் எல்லாரும் கைது செய்யப்படுகிறார்கள்..

அசோக்: மாணிக்கதாசன் கைது செய்யப்பட்டது நூலக எரிப்புக்கு முதல்நாள் நாச்சிமார் கோவிலடியில் நடந்த தேர்தல் கூட்டத்தில் பொலிசாரை சுட்ட பிரச்சனையால் என நினைக்கிறேன்.

தேசம்: அந்தத் தாக்குதல் எல்லாம் திட்டமிடப்பட்டதா கமிட்டி முடிவெடுக்கப்பட்ட தாக்குதலா?

அசோக்: எல்லாம் தன்னிச்சையான தாக்குதல்கள்தான். புலிகளைப் பொறுத்தவரை குறைந்தபட்சமாவது ஒரு ராணுவ கட்டமைப்பு இருந்தது. அராஜக, பாசிச கூறுகள் இருந்தாலும், ஒரு கட்டுப்பாடும், கட்டளையை ஏற்கும் தன்மையும் இருந்தது. மற்ற இயக்கங்கள் இடம் அது இருக்கேல. தன்னிச்சையான போக்குகள் நிறைய இருந்தது. இயக்கங்கள் அழிந்ததற்கும் அது காரணம். காலப்போக்கில் மத்திய குழு உருவாக்கப்பட்டாலும் கூட, யாழ்ப்பாணத்தில் நடந்த தன்னிச்சையான போக்குகள் ஏராளம். எந்த முடிவும் எடுக்காமல் தான் நடந்தது. அது வந்து நிலப்பிரபுத்துவ கூறுகள் இருக்குதானே. தன்னிச்சையான இயல்புகளை உருவாக்கும். குழு வாதம், தன்னைச் சுற்றி ஒரு பிம்பத்தை ஏற்படுத்துதல். இவர்கள் எப்பவும் ஒரு ஜனநாயக மத்தியத்துக்குள்ள வரமாட்டடார்கள். இடதுசாரி இயக்க ஜனநாயக மத்தியஸ்தம் என்பது, ஒரு அரசியல் கலாச்சார பண்பாட்டுக் கூடாக வாறது. அது பல்வேறு அரசியல் கற்றல்களுக்கு ஊடாக, முற்போக்கு சமூக பழக்க வழக்கங்களுக்கு ஊடாக வரவேண்டும்.

தேசம்: அந்தக் காலகட்டத்தில் 83 ஜூலைக்கு முன் இயக்க முரண்பாடுகளினால் பல படுகொலைகள் நடந்திருக்கின்றன. அதில் முதலாவது இயக்க சகோதர படுகொலை என்பது சுந்தரத்தினுடையது. அது ஏன் நடந்தது? எப்படி நடந்தது?

அசோக்: சுந்தரம் ஆட்கள் விடுதலைப்புலிகளிடம் இருந்து வெளியேறும் போது அது புலிகளுக்கு பெரிய தாக்கமாகத் தான் இருந்தது. சுந்தரம் திறமையான இராணுவத்திறன் கொண்ட ஆள். அரசியல் ரீதியாகவும் ஓரளவு வளர்ச்சியுள்ள ஆள். புதிய பாதை பத்திரிகை ஊடாக அந்த நேரம், தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு எதிராக, மாவட்ட சபைக்கு எதிராக எல்லாம் கடுமையான விமர்சனங்களை, எதிர்வினைகளை முன்வைக்கிறார். புதிய பாதையில் கூடுதலாக அமிர்தலிங்கம் தொடர்பான பல விமர்சனங்கள் வருது.

தேசம்: அமிர்தலிங்கமும் வட்டுக்கோட்டை தொகுதி தான் சுந்தரமும் வட்டுக்கோட்டை தொகுதி…

அசோக்: அந்த நேரம் பிரபாகரன் தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு, அமிர்தலிங்கம் குடும்பத்தினருக்கு, ஒரு செல்லத் தம்பிதானே…! ஒரு செல்ல பிள்ளை தானே. புலிகளிடமிருந்து வெளியேறி அமைப்பை உருவாக்குவது பிரபாகரனைப் பொறுத்தவரையில் மரண தண்டனைக்குரிய குற்றம். புளொட்டின் உருவாக்கம் அவருக்கு உடன்பாடாக இருந்திருக்காது. கடும் எரிச்சலை கொடுத்திருக்கும். அந்த காலகட்டத்தில் புளொட் மக்கள் மத்தியில் இயங்கத்தொடங்கி விட்டது. இதுவும் ஒரு காரணமாக அமைந்திருக்கும்.

தேசம்: புதியபாதை சுந்தரம் மட்டுமில்ல, சந்ததியாரும் சுழிபுரம் தான். வட்டுக்கோட்டைத் தீர்மானம் எங்கு உருவாக்கப்பட்டதோ அந்த பிரதேசத்தில் இருந்து வந்தவர்கள்…

அசோக்: பிரதான எதிரியாக உமாமகேஸ்வரன் இருந்தாலும், தமிழர் விடுதலைக்கூட்டணிக்கும், பிரபாகரனுக்கும் அப்போ சுந்தரத்தினுடைய அரசியல் கருத்துக்கள் பிரச்சனையாக இருந்திருக்கும். அத்தோடு ஆனைக் கோட்டை பொலிஸ் நிலையம் தாக்கப்பட்டு ஆயுதங்கள் எடுக்கப்பட்டது, அது சுந்தரத்தின் தலைமையில் நடந்தெல்லாம் பிரபாகரனுக்கு கடும் தன்மானப் பிரச்சனையாக, கடும் கோபத்தை கொடுத்திருக்கும். பிரபாகரனுக்கு பெரிய அச்சுறுத்தலாக இருந்திருக்கும். ஆனா இதில் நாங்க கவனிக்க வேண்டும். சுந்தரத்தின் அரசியல் என்பது, இடதுசாரி கோட்பாடுளை, நடைமுறைகளை கொண்ட அரசியல் அல்ல. சுந்தரத்திடம் பிரபாகரனைப்போல் சுத்த இராணுவ கண்ணோட்டம் இல்லாவிட்டாலும், கூட அவரிடமும் இராணுவ வாதம்தான் இருந்தது.

தேசம்: எப்படி அந்தப்படுகொலை நடந்தது?

அசோக்: சித்திரா அச்சகத்தில் ஒரு கிறிஸ்மஸ் காட் அடிக்கப்பட்டது. அதன் தலைப்பு ஜேசு தேடப்படுகிறார். இயேசு கிறிஸ்துவை ஒரு புரட்சியாளராக காட்டி, என்னென்ன காரணங்களுக்காக ஜேசு தேடப்படுகிறார் என்று கிறிஸ்மஸ் காட் அடிக்க ஓடர் கொடுத்து, அதுதொடர்பாக தான் சுந்தரம் அங்கு போய் இருக்கிறார். சுந்தரம் போய்க் கொண்டிருந்த காலத்தில் நுஃமானின் பலஸ்தீனக் கவிதைகளும் என்ற புத்தகமும் அங்கு அடிக்கப்பட்டு கொண்டிருந்தது. அந்த நேரத்தில் நுஃமான் பொலிசாரினால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டவர் என்று நினைக்கிறேன்.

இந்த நேரத்தில் உமைகுமரன் அந்த அச்சகத்துக்கு போய் வந்ததாகவும், அவருக்கு ஊடாகத்தான் புலிகள் உளவு பார்க்கப்பட்டதாகவும் சொல்லப்பட்டது. இதுதான் பிறகு உமைகுமாரன், இறைகுமாரன் கொலைக்கு காரணமாக இருந்தது. இந்தக் காரணம் தான் சொல்லப்பட்டது.

தேசம்: சுந்தரத்தின் இந்த படுகொலை நியாயப்படுத்தி அந்த நேரத்தில் துண்டுப் பிரசுரங்கள் வெளியிடப்பட்டன…

அசோக்: ஓம். கொலைகளை நியாயப்படுத்தி துண்டுப்பிரசுரம் வெளியிடப்பட்டது. ‘துரோகத்தின் பரிசு’ என்ற தலைப்பில் அது வெளியிடப்பட்டது.

தேசம்: அதன் பின்னணியில் என்ன நடந்தது?

அசோக்: நித்தியானந்தன் சேர்தான் அதை எழுதினவர். அவர் பிற்காலத்தில் அதை மறுத்தவர். புலிகளின் அரசியல் தத்துவார்த்த பின் புலமாக நித்தியானந்தன் சேர் போன்றவர்கள்தான் அந் நேரத்தில் முக்கியமான ஆட்களாக இருந்தவர்கள்… புலிகளின் பத்திரிகைக்கு ஆசிரியராக நித்தியானந்தன் சேர்தான் இருந்தவர். துரோகத்தின் பரிசு என்ற துண்டுப்பிரசுரத்தை எழுதியவர் நித்தியானந்தன் சேர்தான் என்று சொல்லப்படுது. அவர் மறுத்து இருந்தார். ஆனால் புலிகளுக்குள் இருந்த ஆட்கள் சொல்லி இருக்கிறார்கள் அவர்தான் எழுதினார் என்று. நாங்க புளொட்டில் இருந்த போது, இயக்கத்தின் தலைமையின் தவறுகளுக்கு எதிராக போரடி வந்திருக்கிறம். ஏனைய சகதோழமை இயக்கங்களோடு உரையாடவும், உறவைப் பேணவும் முயன்றிருக்கிறோம். ஆனா நித்தியானந்தன் சேர், புலிகளின் பத்திரிகை ஆசிரியராக இருந்த காலங்களில், ஏனைய அமைப்புக்கள் தொடர்பாய் மிக மோசமான கருத்துகளை எழுதினார். ஈபிஆர் எல் எப் தொடர்பாக செவ்வணக்கம், செந்தோழர் போன்ற அர்த்தம் கொண்ட இந்த செறிவான வார்த்தைகளை மிகவும் கொச்சைப்படுத்தி சேர் எழுதி வந்தார். ஈபிஆர் எல்எப் தோழர்களிடம் கேட்டால் கதை கதையாக சொல்வாங்க.

தேசம்: கொலை நடந்த பிறகு அதற்கு எதிரான கருத்து மோதல் புலிகள் அமைப்புக்குள்ள ஏதும் உருவாகியதா?

அசோக்: அது உருவாகவில்லை. ஏனென்றால் கொலை நியாயப்படுத்தப்பட்ட கொலைதானே. அத்தோடு தனக்கு எதிரானவர்கள் எல்லோரும் துரோகிகள், அழிக்கப்பட வேண்டும் என்ற ஒரே பாசிச நிலை கொண்ட சிந்தனைதானே பிரபாகரனுடையது.

தேசம்: புலிகளுடன் இருந்தவர்கள் பெரும்பாலும் அதை ஏற்றுக் கொண்டிருக்கின்றனர்…

அசோக்: நிச்சயமாக. அந்தக் காலத்தில் இந்த கொலைகளை கண்டித்து ஒரு உட்கட்சிப் போராட்டம் ஒன்று நடத்தியிருந்தால், அந்தத் தாக்கம் மற்ற இயக்கங்களின் மீதான கொலைகளுக்கு, தனி நபர் பயங்கரவாதங்களுக்கு முடிவாக இருந்திருக்கும்.

தேசம்: அந்தக்காலம் ராகவன் ஆக்டிவாக இருந்தவரா…

அசோக்: கொலை நடக்கும்போதும் ராகவன் இருந்தவர். ஆனால், இவங்க எந்த அளவுக்கு ஆளுமையோடு இருந்தார்கள் என்று தெரியாது. இவர்களின் கதையை பிரபாகரன் கேட்கக் கூடிய அளவுக்கு இருந்தாரா தெரியல்ல. பிரபாகரனோடு இவர் இருந்த காலங்களில் புலிகளுக்குள் நிறைய படுகொலைகள் நடந்துள்ளன. வெளியிலும் நடந்துள்ளன. உதாரணமாக துரையப்பா, சுந்தரம் படுகொலையெல்லாம் இவர் இருந்த காலத்திலானே நடந்தது. இதற்கு முன்னமே நிறைய கொலைகள் உள்ளும், வெளிலும் நடந்தன. அந்த படுகொலைகளுக்கு எதிராக, பிரபாகரனின் தன்னிச்சையான போக்குகள் தொடர்பாகத்தானே ஐயர் போன்றவர்கள் முரண்பட்டு வெளியேறினார்கள். அப்பொதெல்லாம் பிரபாகரனுக்கு ஆதரவாகத்தானே ராகவன் இருந்திருக்கின்றார். வெளியேற வில்லையே.

எங்கட தோழர் ஒருவரின் அப்பா. பெயர் தம்பாப்பிள்ளை. யூஎன்பி கட்சியைச் சேர்ந்தவர். ராகவனின் ஊரான புன்னாலைக்கட்டுவனைச் சேர்ந்தவர். அவர் புலிகளால் படுகொலை செய்யப்பட்டார். ராகவன் புலியில் இருந்த நேரத்திலதான் இந்த படுகொலை நடந்தது. ராகவன் காரணம் சொல்வாரா? இப்படி எத்தனையோ கொலைகள் இவரின்ற காலத்தில நடந்திருக்கு. நான் எப்பவும் புலிகளின் மேல் மட்டங்களில் இருந்தவங்களை நம்புவதில்லை. அவர்களின்ர உளவியல் கட்டமைப்பு அனைத்தையும் ஆதிக்கம் செலுத்தும் மேலாதிக்க தன்மை கொண்டதாக இருப்பதையே கண்டிருக்கிறன். அப்படித்தான் ராகவனையும் நான் பார்க்கிறன். அவர் புலிகளை எதிர்க்கின்ற இன்னொரு புலி. எங்க பலருக்கு இது இன்னும் புரியல்ல.

பாண்டி பஜார் துப்பாக்கி சூட்டுப்பிரச்சனையில் கூட, பிரபாகரனோடு சேர்ந்து இவரும் சுடுகின்றார். ஆனா, இந்த வரலாறு மறைக்கப்பட்டுவிட்டது. புஸ்பராஜா தோழர் எழுதியுள்ள ‘ஈழப்போராட்டத்தின் எனது சாட்சியம்’ என்ற புத்தகத்தில் இச் சம்பவம் பற்றி விபரமாக எழுதியள்ளார். பிரபாகரன் பொலிசில் கொடுத்த வாக்குமுலமெல்லாம் புஸ்பராஜா தோழரின்ற இந்த புத்தகத்தில இருக்கு. வரலாறுகளின் உண்மைகள் மறைக்கப்பட்டு, தங்களுக்கு ஏற்ற வரலாறுகளை இன்றைய புலிகளும், பழைய புலிகளும் கட்டமைக்கிறாங்க. மற்றவங்களை குற்றவாளிக் கூண்டில ஏத்துறாங்க. உண்மையில் ஐயர் ‘இனியொரு’ இணையத்தளத்தில் ‘ஈழப்போராட்டத்தில் எனது பதிவுகள்’ எழுதத்தொடங்கிய போது, நிறைய விடயங்களை விரிவாக எழுத எண்ணி இருந்தாங்க. ஆனால் ராகவன் போன்ற சிலர் அவருக்கு நெருக்கடி கொடுத்ததால், அவர் அந்த எண்ணத்தை கைவிட்டிட்டார் . நிறைய விடயங்ளை எழுதாமல் விட்டுட்டார்.

தேசம்: அந்தக் காலகட்டத்தில் பிரபாகரன் அதிகாரதிற்கு, கொலைகளுக்கு இவர்கள் உடந்தையாகத்தான் இருந்திருக்கிறார்கள்.

அசோக்: ராகவனுடன் ஒரு உரையாடல் செய்ய வெளிக்கிட்டால் பல்வேறு விடயங்களை கதைக்க முடியும். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு காரணங்கள் இருக்குதானே. சில வேளைகளில் ராகவனுக்கு அவை நியாயங்களாக இருந்திருக்கலாம். என்னுடைய நோக்கில் புலிகளின் ஒவ்வொரு உடைவிலும் ராகவன் பிரபாகரனுக்கு பக்கபலமாக தான் இருந்திருக்கிறார். அதற்கான காரணங்கள் அவங்ககிட்ட இருக்கலாம். ஆனால் அது தொடர்பான உரையாடல் ஒன்று கட்டாயம் அவசியம். புலிகளின் காலத்தில், அவர் இருந்த நேரத்தில் ஜனநாயக மத்தியத்துவம் என்ற கருத்துக்கு எதிராகத்தான் பிரபாகரன், ராகவன், மாத்தையா ஆட்கள் எப்பவும் இருந்திருக்கிறார்கள்.

தேசம்: அப்ப எதற்காக புலிகளை விட்டு வெளியேறுகிறார்?

அசோக்: அது ஒரு சுவாரசியமான கதை. சென்னையிலோ, மதுரையிலோதான் இந்த சம்பவம் நடந்தது. இடம் சரியாக தெரியவில்லை. பிரபாகரனின் காரை ராகவன் எடுத்துச் சென்ற போது, ரபீக் பொலிசோடு ஏதோ பிரச்சனையால், இவர் முரண்பட்டு சண்டை பிடித்துள்ளார். இதை பிரபாகரனிடம் இவர் சொல்லவில்லை. பிறகு மறுநாள், பிரபாகரன் அந்தக் காரில் போகும் போது, பொலிஸ் பிடித்து விட்டது. அப்போதுதான் பிரபாகரனுக்கு தெரிஞ்சி இருக்கு பிரச்சனை. பிரபாகரனுக்கு பயங்கர கோபம். இது முரண்பாடாகி விரிசல் அடைஞ்சிட்டு என நினைக்கிறன். ராகவன்தான் உண்மை சொல்லவேண்டும். ஆனா, அவர் வாழ்க்கையில உண்மையானவராக இல்லை. கடந்த காலங்களில் அரசியல் வாழ்விலும், சொந்த வாழ்விலும் தவறுகள் செய்யாத உத்தமர்கள் இல்லைத்தானே நாங்கள். சில நேரங்களில் என்னை நினைக்கும்போது எனக்கே என் மீது கோபம், வெறுப்பு வரும். விமர்சனம் வரும். அது ராகவனிடம் இருக்கும் என நான் நினைக்கவில்லை. நான் நம்பல்ல அவர் உண்மை பேசுவார் என்று.

தேசம்: சுந்தரம் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார் அதற்கு பழிவாங்கும் நடவடிக்கையா இறைகுமரன் உமைகுமரன் கொல்லப்படுகிறார்கள். அவர்கள் மைத்துனர்கள் என …

அசோக்: ஓம். மச்சான் மச்சான்

தேசம்: அதற்கு புளொட் நீண்ட காலமாக உரிமை கோரவில்லை ?

அசோக்: மத்திய குழுவில் இந்தப் பிரச்சனை கதைக்கப்பட்டது ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. ஏனென்றால் அவர்கள் முழுப்பேரும் சந்ததியாரால் கொண்டுவரப்பட்ட ஆட்கள்.

தேசம்: இறைகுமாரன் உமைகுமாரனை கொலை செய்தவர்கள் சந்ததியாரால் கொண்டுவரப்பட்ட ஆட்கள்…

அசோக்: முக்கியமானவர்கள் சுழிபுரத்தைச் சேர்ந்தவர்கள், சந்ததியாரால் புளொட்டினுள் கொண்டுவரப்பட்ட ஆட்கள். அதில் ஒருவர் அளவெட்டி. அவர்கள் சுந்தரத்தின் மிக நெருங்கிய நண்பர்களாக இருந்திருக்காங்க. மிக நெருக்கமானவர்கள், இளமையிலிருந்து சுந்தரத்துடன் நெருக்கமாக இருந்தவர்கள். சுந்தரம் படுகொலை செய்யப்பட்டது தனிப்பட்ட வகையில் அவங்களுக்கு பயங்கரத் தாக்கத்தை கொடுத்திருக்கு. உண்மையில் புளொட்டுக்கும் அதற்கும் எந்த தொடர்பும் இல்லை. சந்ததியார் மீது குற்றம்சாட்டப்பட்டது ஏனென்றால், சந்தியார் தானே இவங்களை கொண்டு வந்தவர்.

சந்ததியாருக்கும், இறைகுமாரனுக்கும் முதலே முரண்பாடு தமிழ் இளைஞர் பேரவையில் இருந்ததாக சொல்லுகிறார்கள். அந்த முரண்பாட்டை வைத்து முடிவுக்கு வாறாங்கள், சந்ததியார் தான் துணை போயிருப்பார் என்று சொல்லி. ஆனால் சந்ததியார் அதில் சம்பந்தப்படவில்லை.

தேசம்: அந்தப் படுகொலை செய்தவர்கள் புளொட்டில் உறுப்பினர்களாக இருந்தவையா?

அசோக்: முழுக்க முழுக்க புளொட்டின் உறுப்பினர்கள்தான்.

தேசம்: அவர்களுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையா?

அசோக்: நடவடிக்கை எடுக்கப்படவில்லை. ஆனா கடுமையா ன விமர்சனங்கள் வைக்கப்பட்டது.

தேசம்: இதிலிருந்து ஒரு விடயம் விளங்குது, புளொட்டில் தவறுகள் நிகழுமம் போது, அதை கண்டிப்பதற்கும் விமர்சிப்பதற்குமான ஒரு பகுதி இருந்திருக்கு.

அசோக்: தண்டனை அவர்களுக்கு வழங்கப்படாவிட்டாலும் கூட, கடும் விமர்சனங்கள் எழுந்தது.

தேசம்: இந்த காலகட்டத்தில் புளொட்டில் யார் அதிகாரத்தில் இருந்தது.

அசோக்: இதைப் பார்க்க வேண்டுமென்றால் மத்திய குழு எப்படி உருவாக்கப்பட்டது என்று பார்க்கவேண்டும். ஜெயில் உடைப்பு நடக்குது தானே.

தேசம்: 83 கலவரத்திற்கு பிறகுதான் உடைப்பு நடக்குது.

அசோக்: அதுவரைக்கும் மத்தியகுழு உருவாக்கப்படவில்லை. அதுக்கு முதல் மாவட்ட அமைப்பாளர்கள் தான் இருந்தவர்கள். இதைப்பற்றி முன்னர் கதைத்திருக்கிறம். சந்ததியார், உமா மகேஸ்வரன், ராஜன், யோதீஸ்வரன் என்று தற்காலிகமான மத்திய குழுவாகத்தான் இருந்தது. 83 செப்டம்பர் மட்டக்களப்பு சிறை உடைப்புக்கு பிறகு தான், மத்திய குழு தமிழ்நாட்டில உருவாக்கப்படுது. இந்த மத்திய குழு 83 கடைசியில் உருவாக்கப்பட்டது. பிறகு 84 ன் ஆரம்பத்தில், மத்திய குழுவுக்கு நானும், கிருபாகரன் செல்வனும் பிரேரிக்கப்பட்டு நான் மாத்திரம் உள்வாங்கப்படுகிறேன்.

தேசம்: செல்வன் ஏன் உள்வாங்கப்படவில்லை?

அசோக்: அவரின் தெரிவுக்கு பார்த்தன் ஆட்சேபனை தெரிவித்தாக தோழர்கள் ரகுமான் ஜான், குமரன், கேசவன் சொல்லி அறிந்தேன்.

தேசம்: நீங்கள் பிரேரிக்கப்பட்டு மத்திய குழுவில் சேர்க்கப்பட்டீர்கள். முதல் உருவான மத்திய குழு எப்படி தெரிவு செய்யப்பட்டது.?

அசோக்: மத்தியகுழுவுக்கு முன், புளொட்டின் அதிஉயர் பீடமாக கட்டுப்பாட்டு குழு உருவாக்கப்பட்டது. அதில் உமா மகேஸ்வரன், சந்ததியார், ரகுமான் ஜான், கண்ணன், சலீம் ஆகியோர் இருந்தனர். இந்த ஐந்து பேர் கொண்ட கட்டுப்பாட்டுக்குழுவில் இரண்டு பேர் முஸ்லிம் தோழர்கள்.

தேசம்: இவர்களை யார் தெரிவு செய்தது?

அசோக் : உமா மகேஸ்வரனும், சந்ததியாரும்.

இந்த கட்டுப்பாட்டுக்குழுதான், மத்தியகுழுவுக்கு ஆட்களை தெரிவு செய்தது. இதில ஆச்சரியம் என்னவென்றால், கண்ணாடிச் சந்திரன் 83ம் ஆண்டில்தான் புளொட்டிக்கு வருகிறார். அவரும் மத்தியகுழுவுக்கு தெரிவு செய்யப்படுகிறார்.

தேசம்: அது எப்படி?

அசோக்: கண்ணாடிச்சந்திரன் யாழ்ப்பாண இந்துக் கல்லூரியில் ரகுமான் ஜானோடு ஒன்றாக படித்தவர். ஜானின் நண்பர்.

தேசம்: அப்ப அதிகாரம் மிக்கவராக ரகுமான் ஜானும் இருந்திருக்கின்றார்?

அசோக்: காலப்போக்கில் அதிகார போட்டி உருவாகி முரண்பாடுகள் வந்ததே தவிர, ஆரம்பத்தில் எல்லோரும் உமா மகேஸ்வரன் விசுவாசிகளாகத்தான் இருந்தவங்க. அதிகாரம் கொண்டவங்களாத்தான் இருந்தவங்க. நான் உமா மகேஸ்வரனை தோழர் என்றுதான் அழைப்பேன். கண்ணாடிச் சந்திரன் பெரிய ஐயா என்றுதான் சொல்வார். அத்தனை விசுவாசம்..

தேசம்: மத்திய குழுவில் இருந்தவர்கள் விபரம் சொல்லமுடியுமா?

அசோக்: காலப்போக்கில் இருந்தவர்கள் விபரம் இதுதான். சந்ததியார், உமா மகேஸ்வரன், ராஜன், ரகுமான் ஜான், கண்ணாடிச் சந்திரன், பார்த்தன், கண்ணன், சலீம், சரோஜினிதேவி, வாசுதேவா, கேசவன், சத்திய மூர்த்தி, ஆனந்தி, குமரன், ராமதாஸ், முரளி, ஈஸ்வரன், ஆதவன், கந்தசாமி, மாணிக்கதாசன்,
சேகர், பாபு, செந்தில், மாறன், சீசர்.

தேசம்: இரண்டு பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள்.

அசோக்: ஓம் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள்

தேசம்: அதில ஒராள் ராணுவத்தளபதியா

அசோக்: ராணுவ தளபதி இல்ல. இந்திய கடற்படையில் இருந்தவர். மற்றவர் தோழர் சீசர் . பாவலரேறு பெருஞ்சித்திரனாரோடு தனித்தமிழ் இயக்கத்தில் இருந்தவர். இவர்தான் புளொட்டின் நிறைய பாடல்களை எழுதியவர்.

படங்கள்:
இடது: பாண்டிபசார் துப்பாக்கிச்சூடு தொடர்பில் பிரபாகரனும் ராகவனும் கைது செய்யப்பட்ட போது.
வலது: பிரபாகரன் ரை கோர்ட் சூட் அணிந்து இளவயதில் எடுத்துக்கொண்ட படம்

பாகம் 9: தற்கொலைகள்: அரசியலுக்கு அப்பாலும் அரசியலுக்குள்ளும் – சகோதரனின் இழப்பும் – சினேகிதியின் இழப்பும்

களுதாவளையிலிருந்து பாரிஸ் வரை
ஒர் அரசியல் போராளியின் வாழ்வின் பயணம்!

அசோக் யோகன் கண்ணமுத்துவுடன் ஒர் உரையாடல்! : தோழர் அசோக் யோகன் கண்ணமுத்துவின் சாட்சியம் பகுதி 09 (ஒலிப் பதிவு செய்யப்பட்ட திகதி 07.08.2021). இந்த உரையாடல் அசோக் யோகன் கணணமுத்துவின் பேச்சுமொழியில் எந்த மாற்றமும் இன்றி பிரசுரமாகின்றது.

பாகம் 09

தேசம்: 83 ஜூலை முதலான சம்பவங்கள் பற்றித்தான் கதைத்துக் கொண்டு இருக்கின்றோம். அதுலயும், உங்களுடைய குடும்ப விஷயங்கள் பற்றிக் கூடுதலாக கதைத்தோம். அதில் ஒரு விஷயம், உங்களுடைய சகோதரர் பற்றியது. பொதுவாக எங்களுடைய தமிழ்ச் சூழலில் தற்கொலைகள் சம்பந்தமான விடயங்கள் இன்றைக்கும் நடந்து கொண்டிருக்கிறது. இதே மாதிரி ஒரு அனுபவம் உங்களுடைய குடும்பத்திலும் ஏற்பட்டிருக்கு. கொஞ்சம் கஷ்டமான விஷயம்தான் இருந்தாலும், அதைப்பற்றி ஒருக்கா கதைக்க முடியுமா? ஏனென்றால், தமிழ்ச்சூழலில் இது பொதுவான விஷயமா காணப்படுது. ஏன் அது அப்படி? உங்களுடைய சகோதரனுடைய அனுபவத்தை நீங்கள் முதல் சொல்லுங்கள்

அசோக்: எனக்கு அவர் மூன்றாவது சகோதரர். பெயர் தியாகராஜா. அவர்தான் பெரியாரிஸ்ட்டாக இருந்தவர். ஒரு முற்போக்கான சிந்தனை உள்ள ஒருத்தர்.

தேசம்: சொல்லப்போனால் நீங்கள் அரசியலுக்குள் வாறத்துக்கு அவர் ஒரு வழிகாட்டியாக இருந்திருக்கிறார்.

அசோக்: அவர் அந்த நேரத்திலேயே இந்த கையெழுத்துப் பிரதிகள், பத்திரிகைகள் எல்லாம் வெளியிட்டுக்கொண்டிருந்தவர், அவரும் நண்பர்களும் சேர்ந்து.

தேசம்: அது ஒரு முக்கியமான காலகட்டம் என்று நினைக்கிறேன். கூடுதலாக அந்த நேரம் கையெழுத்து பிரதிகள் இருந்திருக்கு. உங்க குடும்பத்தில நிறைய பேர் இலக்கிய ஆர்வம் கொண்டவர்களாக இருந்திருக்கிறார்கள்…

அசோக்: ஓம் மூத்த அண்ணா கூட ‘உதயதாரகை’ என்ற பெயரில் வெளியிட்டிருக்கிறார். தியாகராஜா அண்ணா வெளியிட்ட அந்த கையெழுத்து சஞ்சிகை பெரியார் திராவிட இயக்க கோட்பாட்டோடதான் வந்தது. எனக்கு நல்லா ஞாபகம் இருக்கு அந்த சம்பவம். அட்வான்ஸ் லெவல் எழுதிக் கொண்டிருந்தவர் . அட்வான்ஸ் லெவலில் பெயில் என்று சொல்லித்தான் தற்கொலை செய்தார் என்று கதைத்து கொண்டாங்க. அட்வான்ஸ் லெவல் பெயில் என்று ஆளுக்கு ஒரு தாக்கம் இருந்திருக்கு போல. ஆனால், வெளியில் காட்டிக்கொள்ளவே இல்லை.

அன்றைக்கு பாண்டிருப்பு திரௌபதி அம்மன் கோவில் திருவிழா. அதற்கு போறதுக்கான முயற்சியில அம்மாக்கள் ஈடுபட்டுக் கொண்டிருந்திருக்கிறார்கள். அந்த டைம்ல இவர், எங்கட வீட்டு வளவு 4 ஏக்கர் பெரிய காணி. வீடு ஒரு பக்கம் இருக்கும் . இவர் தனிய தங்களுக்கான காரியாலயம் ஒன்றை உருவாக்கி அங்கேதான் படிப்பது , நித்திரை கொள்வது எல்லாம். சாப்பிட மட்டும் தான் வருவார். அதுக்குள்ளதான் பிரண்ட்ஸ் வாரது கதைக்கிறது. கையெழுத்து சஞ்சிகை வெளியிடுவதெல்லாம் அங்கேதான். அப்ப இவரை கூப்பிட்டு சாப்பாடு கொடுப்பதற்காக வீட்டிலிருந்த ஒரு ஆளை அனுப்பி இருக்காங்க… அங்க போனா ஆள் வந்து சம்பவத்தை சொல்லி இருக்கிறார்.

எங்கட வீட்ட துப்பாக்கி இருந்தது. விவசாயம் சம்பந்தப்பட்ட ஆட்கள் என்றபடியால், எங்களுக்கு லைசன்ஸ் துப்பாக்கி இருந்தது. அதைக் கொண்டுபோய் அவர் என்ன செய்தவர் என்று கேட்டால், அதை படுக்கிற ஃபெட்டின் மேல், வீட்டு முகட்டு கூறையில் கயிற்றில் கட்டி தொங்க விட்டு, நெஞ்சில் துப்பாக்கியின் குழாயை வைத்து, காலால டிக்கரை அமத்தியிருக்கிறார். ஸ்பாட்டிலேயே ஆள் போயிருப்பார் என்று நினைக்கிறேன். பிறகு பார்த்தால், உடனடியாக திடீர் முடிவுகளினால் நடந்த தற்கொலை அல்ல இது என தெரியவந்திருக்கின்றது. ஏனென்றால், கடிதங்கள் எல்லாம் எழுதி வைத்திருக்கிறார். போலீஸ் அதிகாரிக்கு ஒரு கடிதம், அடுத்தது மரண விசாரணை அதிகாரிக்கு ஒரு கடிதம், அடுத்து, வள்ளி அக்காவுக்கு கலியாணம் ஆகி மகன் பிறந்தால் அவருக்கு அவர் வாசிக்க ஒரு கடிதம். அது தமிழில். மற்ற இரண்டும் ஆங்கிலத்தில்.

தேசம்: அப்ப அந்த நேரமே அவருக்கு ஆங்கில தேர்ச்சி இருந்திருக்கிறது?

அசோக்: ஓம் பெரிய கெட்டிக்காற ஆள் என்று வீட்டில் சொல்ல கேள்விப்பட்டிருக்கிறன்.

தேசம்: அந்த நேரம் ஆங்கிலத்தில் தான் படிச்சவரோ…

அசோக்: ஆங்கிலத்தில அந்த நேரம் படிக்கக் கூடிய சாத்தியம் எனக்கு தெரியல.

வீட்டில யாரும் எதிர்பார்க்கல்ல . ஏனென்றால் அவ்வாறான மனநிலையை எங்கேயும் அவர் காட்டிக்கொள்ளவில்லை. சோகமாகவோ, விரக்தியாகவோ இருந்தில்லை. தற்கொலைக்கான காரணம் எதுவுமே தெரியல. அது அப்பா, அம்மா, வீட்டுக்காரர் எல்லாருக்கும் பெரிய தாக்கமா இருந்தது.

தேசம்: அந்த இழப்பு தான் உங்களுக்கு குடும்பத்தில் முதலாவது இழப்பு?

அசோக்: ஓம் முதலாவது இழப்பு. அடுத்தது நிறைய ப்ரண்ட்ஸ் அவருக்கு. எக்கச்சக்கமான ஃப்ரெண்ட்ஷிப் இருந்தது. எல்லாருக்கும் பெரிய அதிர்ச்சி. ஏனென்றால், யாருமே எதிர்பார்க்கவில்லை இப்படியொரு தற்கொலையை.

நீண்ட காலம் இது, எங்க வீட்டில தாக்கத்தை கொடுத்திருக்கிறது.

தேசம்: இன்றைக்கும் தற்கொலைகள் நடந்துகொண்டிருக்குது. பாரம்பரியத்தோடு ஜெனட்டிக்கோட தொடர்புபட்ட விடயமா என்று தெரியவில்லை. ஒரு காலகட்டத்தில் ஜப்பான் தற்கொலைகள் நடப்பதில் கூடிய நாடு. அதுமாதிரி தமிழர்கள் மத்தியிலும் தற்கொலைகள் அதிகமாக இருக்கிறது. என்ன பின்னணி என்பதே தெரியவில்லை. இது ஒரு மன வருத்தத்துக்குரிய விஷயம் தான். இதே போக்குகள் தான் ஒரு காலகட்டத்தில் பரீட்சையில் சித்தி அடையாதவர்கள் அல்லது பரீட்சையில் தோல்வியடைந்தவர்கள், இயக்கங்களில் போய் சேருகின்ற முறையும். அதை நீங்கள் அறியக்கூடியதாக இருந்ததா?

அசோக்: தற்கொலைகளுக்கு பல்வேறு மன அழுத்தம், உளவியல் உயிரியல், சார்ந்த மற்ற சமூக புறநிலைக் காரணிகளும் காரணங்களாக இருக்கலாம். குடும்பத்தில் தொடர்ச்சியாக தற்கொலைகள், தற்கொலை முயற்சிகள் நடந்தா நீங்க சொல்வதுபோல் ஜெனட்டிக் தொடர்பான காரணங்களும் இருக்கக்கூடும். ஆனால், அனேகமான தற்கொலைகள் உடனடி உணர்ச்சிகளால், கோபங்களால்தான், திடீர் முடிவுகளினால்தான் ஏற்படுகின்றன. திட்டமிட்ட, நீண்டகாலம் திட்டமிட்ட தற்கொலைகள் மிகக் குறைவு.

திட்டமிட்ட தற்கொலையை தடுப்பது சுலபம் தற்கொலை செய்வதற்கான எண்ணங்கள் அறிகுறிகள் தெரியவரும்போது அவங்களோட மனம் விட்டு கதைக்கனும். எனக்கு இந்த அனுபவம் இருக்கு. என் நண்பர் ஒருவரை காப்பாற்றி இருக்கிறன்.

விவசாயக் கிராமங்களில் தற்கொலை அதிகம் இடம்பெறுவதற்கான காரணம் என்னவென்று கேட்டால் பிரச்சனை என்று வந்தால் வீட்டில், தோட்டத்தில் பயிர்களுக்கு பயன்படுத்தும் நச்சு மருந்து இருக்கும். குடும்பத்தோட சண்டைபோட்டு என்ன செய்வாங்க என்றால், நச்சு மருந்தையோ, அரலிக்காயையோ சாப்பிட்டுவிடுவாங்க.

உடனடியாக பக்கத்திலேயே தற்கொலை செய்வதற்கான பொருட்கள் இல்லையென்றால் தற்கொலை முயற்சிக்க மாட்டார்கள்.

தேசம்: நீங்கள் சொல்வது சரி. ஐக்கிய நாடுகள் சபையின் ஸ்தாபனம் ஒன்று விவசாய மருந்துகளை வீடுகளில் வைப்பதற்கு, விவசாயிகளின் இறக்குமதிக்கு தடை செய்யப்பட்டது என்று நினைக்கிறேன் அந்த காலகட்டத்தில்…

அசோக்: ஓம், அடுத்து பரீட்சையில் சித்தி அடையாதவர்கள் அல்லது பரீட்சையில் தோல்வியடைந்தவர்கள் இயக்கங்களில் போய் சேர்ந்தார்கள் என்ற விமர்சனம். விடுதலை போராட்டத்துக்கு எதிராக போராட்டத்தை கொச்சை படுத்துவதற்கு சிலர் வைக்கிற குற்றச்சாட்டு இது.

ஓரளவு இருந்திருக்கலாம், வீட்டில் உள்ளவர்களின் பயத்தின் காரணமாக போயிருக்கலாம். இந்த விமர்சனத்தை முன்வைக்கிற ஆட்களைப் பார்ததோமென்றால் இவர்கள் பக்கா சுயநலவாதிகளாக, அந்த நேரத்தில இருந்தவங்கதான். தங்களை நியாயப்படுத்த, இப்படியான காரணங்களை கண்டுபிடிப்பாங்க.

தேசம்: கொச்சைப்படுத்த வில்லை… அவ்வாறான சம்பவங்களும் நடந்திருக்கு.

அசோக்: பயம் ஒன்று இருக்கும்தானே. அப்பா மற்றும் வீட்டார் தொடர்பாக. எதிர்காலம் தொடர்பாக. . போராட்ட காலத்தில் பரீட்சை எடுத்து என்ன செய்யப்போறம் என்ற எண்ணம் பலருக்கு இருந்திருக்கு. இந்தப் பரீட்சை தங்களின் வாழ்க்கைக்கு பிரயோசனம் அற்றது என்ற வெறுப்பு நிலையும் இருந்திருக்கு. அடுத்தது சிலருக்கு கல்வித்திட்டங்கள் மீதான வெறுப்பும் இருந்திருக்கு. மிகத் திறமையான என்னுடைய நண்பர்கள், பரீட்சையில் தோல்வி அடைந்திருக்கிறார்கள். ஆனால், அவர்கள் மிகத் திறமையானவர்கள்… இவ்வாறனவர்களை நீங்கள் அவதானித்தால், இவங்க அரசியல் சமூக அக்கறை கொண்டவங்களாக, மாற்றுச் சிந்தனை கொண்டவர்களாக இருப்பாங்க. பாடசாலை அமைப்பு வடிவம், அதன்ற செயற்பாடு, அதிகாரம் தொடர்பான விமர்சனங்கள் அவங்களுக்கு இருக்கும். எனக்கு இது கடுமையாக இருந்தது.

ஒருதடவை அம்மாவின்ற கவலை காரணமாக படிக்க எண்ணி, சம்மாந்துறை ரெக்கினிக் கொலிச்சில் ராஷ்மேன் கோசில் சேந்திருந்தன். முதல் வாரத்தியே லெச்சரோடு எனக்கு பிரச்சனை வந்து விட்டது . சில காரணங்களை பொதுமைப்படுத்த ஏலாது.

தேசம்: நிச்சயமாக. உங்களுடைய சகோதரரை எடுத்துக் கொண்டால்கூட, பரீட்சை என்பது திறமையை பரிசோதிப்பதற்கு சாதனமே இல்லை. சிலவேளை பரீட்சையில் தோல்வி அடைந்த எத்தனையோ பேர் கெட்டிக்காரர்களாக வந்திருக்கிறார்கள், திறமையாளர்களாக வந்திருக்கிறார்கள். சராசரி நபர்கள் தான் இந்த சமூகத்தில் மாற்றத்தை கொண்டு வந்திருக்கிறார்கள்.

அசோக்: கல்வி சார்ந்த அறிவு எப்பவுமே சமூக மாற்றத்திற்கு விடுதலைக்கோ உதவுவதில்லை தானே.

தேசம்: ஆனால் தற்கொலைகளை இல்லாமல் பண்ணுவதற்கு திட்டங்கள் அன்றைக்கும் இருக்கேல, இன்றைக்கும் இருக்கேல.

அசோக்: தமிழ் சமூகத்தை எடுத்துக்கொண்டால், உளவியல் சார்ந்த பிரச்சனைக்கு டாக்டரை அணுகுவது கௌரவ குறைச்சலாக தானே பார்க்கப்படுகிறது. எங்கட ஊர் மந்திரங்களுக்கும், சடங்குகளுக்கும் பேர்போன இடம். ரகசியமாக மந்திரவாதியை அணுகுவார்கள். ஒரு பெண்ணுக்கு ஒரு பிரச்சினை ஏற்பட்டால், அதற்கான உளவியல் காரணங்கள் ஆராயப்படுவதில்லை. பேய் பிடித்து விட்டது என்றுதான் சொல்வார்கள் ஆண்களுக்கு பிரச்சனை என்று வந்தால், மந்திரவாதியிட்ட கூட போகமாட்டாங்க.

ஆண்களுடைய உளவியல், பிரச்சினைக்கு, மனச்சிக்கல்களுக்கு ஒன்றும் செய்ய இயலாது. வைத்தியமுறை தெரிந்த மந்திரவாதியால ஓரளவு தீர்ப்பதற்குரிய சாத்தியம், பெண்களுக்கு இருக்கு. ஆண்களுக்கு மனச்சிக்கல் ஏற்பட்டால், அதற்கான தீர்வுக்கான சாத்தியமில்லை. கிராமங்களில் பார்த்தால், ஆண்களுக்கு பேய் பிடிக்காது. பெண்களின் உளவியல் சிக்கல்களை, அவர்கள் பேய் பிடித்தல் என்ற வெளிப்பாட்டால காட்டமுடியும். ஆண்களுக்கு அது ஒரு கௌரவ பிரச்சனை. மன உளைச்சலோடு அவங்க தற்கொலைக்கு தான் போக வேண்டும். அந்த நேரம் டாக்டர்ஸ் இருந்திருப்பார்கள். உளவியல் சார்ந்த படிப்பு இருந்தது தானே. யாரும் நாடினது இல்லை. இப்ப கூட இல்லை. ஐரோப்பிய நாடுகளில் கூட தமிழர்கள் மத்தியில் அதற்கான சாத்தியம் இல்லை.

தேசம்: நான் நினைக்கிறேன் சில மாதங்களுக்கு முன்னர் கூட பாரிசில் இரண்டு பெண்கள்…

அசோக்: இரண்டு பெண்கள். அதுவும் மிகவும் திறமையாக படித்த இங்கேயே பிறந்து வளர்ந்த பெண்கள்.

தேசம்: தமிழ் சூழல் நிச்சயமாக இது சம்பந்தமாக ஆராய்ந்து, இதற்கு எதிரான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

அசோக்: தமிழ்ச்சமூகம் மாத்திரமல்ல, நிலவுடைமை சமூகம் சார்ந்த இடங்களில் அந்தப் பண்புகள் அப்படித்தான் இருக்கும். இங்க ஐரோப்பா சூழலில தற்கொலைகளை, உளவியல் பிரச்சனைகளை மன அழுத்தங்களை தீர்ப்பதற்கான வழிமுறைகள் நிறைய இருக்கு. தற்கொலை நடப்பது குறைவு. நம்ம தமிழ்ச் சமூகம் நிலப்பிரபுத்துவ எச்ச சொச்சங்களை கொண்ட மூடுண்ட சமூகம் தானே. மனம்திறந்து பேசுவதற்கான சாத்தியங்கள் இல்லை. முதலாளித்துவ சமூகத்தில் தந்தை, தாய் குழந்தைகளுக்கு இடையிலான உறவு, ஒரளவு சுதந்திரமாக இருக்கும். ஒரு ஜனநாயகபடுத்தப்பட்ட உறவு இருக்கும். ஃப்ரெண்ட்ஸ் இருப்பாங்க. தாயோட கதைக்கலாம் தந்தையோடு கதைக்கலாம். அந்த உறவு உறவு குறைந்தபட்சமாவது ஜனநாயகத் தன்மையோட இருக்கும். எங்கட்ட அப்படி இல்லை. ஒரு பிரச்சனை வந்தால் தந்தையோடையும் கதைக்கேளாது, தாயோடையும் கதைக்கேளாது. மனதுக்குள்ளேயே குறுகிக் குறுகி கடைசியாக தற்கொலைக்கு தான் போவாங்க அல்லது பைத்தியமாவாங்க.

தேசம்: ஒன்று தற்கொலை அடுத்தது இப்ப நடக்கிற சம்பவங்களை பார்த்தீர்களென்றால் தாய்மார் பிள்ளைகளை கொலை செய்வது. அது உண்மையா கொலை என்று நாங்கள் பார்க்க இயலாது அவர்கள் மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் இது நடக்கிறது. மனநிலை சம்பந்தமான பிரச்சனைகள் பெரிய பிரச்சினையாக இருக்கிறது. அந்த நேரம் நீங்கள் வாழ்ந்த சூழலிலும் பெரிய பிரச்சனையா இருந்தது. ஆனால் அந்த நேரம் இந்த விடயம், பெரிசா அணுகப்படவில்லை என்று நினைக்கிறேன்.

அசோக்: அம்மாக்கள் தங்கள் குழந்தைகளை கொலை செய்வதற்கு பின்னால் ஆயிரம் சோகக்கதைகளும், மன அழுத்தங்களும் இருக்கும். அந்த நேரத்தில இப்படி சம்பவங்கள் மிகமிக்குறைவு. எங்க போராட்டம், யுத்த சூழல் தந்த நெருக்கடிகள் பொருளாதாரச் சிக்கல்கள் வறுமை ஆதரவற்ற நிலை இன்றைக்கு தாய்மார்களை கடுமையாக பாதிக்கிறது. உண்மையில தமிழ்ச் சமூகம் நினைத்தால் இப்படியான பிரச்சனைகளுக்கு தீர்வகாணமுடியும். அதற்கு தயாரில்லை. புலிகளின்ற முன்னாள் போராளிகளின்ற குடும்பங்கள் எவ்வளவு வறுமைக்குள், மன உழைச்சல்களோடு வாழ்கிறாங்க. பணப்புலிகள் இதைப்பற்றி சிந்திக்கல்ல. நாங்கதான் இதைப்பற்றி யோசிக்கிறம். மனம் வைத்தால் பல பிரச்சனைகளுக்கு தீர்வு காணமுடியும். அதற்கு யாரும் தயாரில்லை.

தேசம்: செல்வியினுடைய சினேகிதி சிவரமணியினுடைய இறப்பும் தற்கொலை அல்லவா? பலாத்காரப்படுத்தப்பட்ட தற்கொலை…

அசோக்: சிவரமணியினுடைய தற்கொலையும் ஒரு உணர்ச்சிவசப்பட்ட உடனடி தற்கொலை என்று சொல்ல ஏலாது. அதற்கு பல்வேறு காரணங்கள் இருந்திருக்கு. அன்றைய அரசியல், சமூகச் சூழல். குறிப்பா விடுதலைப்புலிகளின் அரசியல். அவர்கள் கொடுத்த நெருக்கடி கண்காணிப்பு நிர்ப்பந்தம்

தேசம்: அது ஞாபகம் இருக்கா உங்களுக்கு…

அசோக்: எனக்கு சிவரமணியை நேரடியாக தெரியாது. செல்வி முலம் அறிந்திருந்தேன். இந்தியாவுக்கு வந்தபோதுதான் நேரடியாக சந்திக்க முடிந்தது. இந்தியாவுக்கு செல்வியோட ஒரு பயிற்சி திட்டத்துக்கு யுனிவர்சிட்டியால அனுப்பப்பட்டவங்க. அப்போதுதான் சிவரமணியை சந்திச்சது. அதுக்குப்பிறகு ஒரு வருடத்திற்கு பிறகுதான் அவர் தற்கொலை செய்தவர் என்று நினைக்கிறேன்

தேசம்: பர்மாவில ஆங் சாங் சூகி க்கு கிடைத்த விருது கிடைத்தது என்று நினைக்கிறேன். அது செல்விக்கா சிவரமணிக்கா …

அசோக்: செல்விக்கு Internatioal PEN Award கிடைத்ததது தெரியும். இது தெரியல்ல. சிவரமணி மிகத் திறமையானவர். அரசியல், சமூக அக்கறைகளை கொண்டவர். பூரணி பெண்கள் இல்லம், பெண்கள் ஆய்வு வட்டம், அன்னையர் முண்னணி என்று பலவற்றிலும் பங்கு கொண்டவர். ஆளுமையான ஆள். பிலிப்பைன்ஸில் எல்லாம் பெண்ணுரிமை தொடர்பான மாநாடுகளில கலந்து கொண்டவர். நிறைய வாசிப்பு. ஆங்கிலத்தில் மிக தேர்ச்சி கொண்டவர். சிவரமணியின் தற்கொலை எல்லோருக்கும் பெரிய அதிர்ச்சி

தேசம்: என்ன சம்பவங்கள் அவரை தற்கொலைக்கு இட்டுச் சென்றது

அசோக்: அந்த சூழல் இதுக்குத்தானே அரசியல் சூழல்.

ஒரு சுதந்திரமான மனிதனுக்கு அவங்களின்ற சிந்தனைகளுக்கு, செயற்பாடுகளுக்கு நெருக்கடிகளை நீங்கள் கொடுத்தீர்கள் என்றால் அது சிறைதான். புலிகளாலும் கடும் பிரச்சனை. வீட்டிலயும் சிக்கல்கள் நடந்திருக்கலாம். எனக்கு எந்தளவு உண்மை என்று தெரியாது. அவவுக்கு ஒரு காதல் இருந்தது. எங்களுடைய பிரண்ட் தான் தில்லைநாதன். யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் படித்து ஆசிரியராக இருந்தவர். அவருக்கும் சிவரமணிக்கும் காதல் உறவு ஒன்று இருந்ததாகவும், வீட்டில் கொஞ்சம் நெருக்கடி கொடுத்ததாகவும் சொல்லப்பட்டது. எந்த அளவுக்கு உண்மை என்று தெரியாது. ஆனா பெரிய கொடுமையானது புலிகளின்ற நெருக்கடிகள்தான்.

தேசம்: விடுதலைப்புலிகளால அவருக்கு நேரடியாக தொந்தரவு இருந்ததா…

அசோக்: நேரடியாக தொந்தரவு இல்லை. உளவியல் சார்ந்த தொந்தரவு செல்விக்கும், சிவரமணிக்கும், நிறையபேருக்கு இருந்திருக்கு. மறைமுக வெருட்டல்கள், கண்காணிப்புக்கள் என்று. உடல் சார்ந்த நெருக்கடி அல்ல. ஒரு உளவியல் சார்ந்த நெருக்கடிகள், பல்வேறு வகைகளிலும் கொடுக்கப்பட்டிருக்கு. கண்காணிப்புக்கு உள்ளாக்கப்பட்டாலே, அது பெரிய நெருக்கடிதானே

தேசம்: சிவரமணி தற்கொலை செய்யும் போது போது தன்னுடைய கவிதைகளையும் சேர்த்து எரித்திட்டா…

அசோக்: ஓம் முழுக் கவிதைகளையும் எரித்திட்டா. மிஞ்சின கவிதைகள் தானே சிவரமணி கவிதைத் தொகுப்பாக வந்தது. நிறைய கவிதைகள் எழுதி எல்லாத்தையும் எரித்துட்டாங்க. உணர்ச்சிவசப்பட்ட தற்கொலை இல்லைத் தானே. சிவரமணியின் தற்கொலை என்பது புலிகளின்ற ஒடுக்குமுறைகளுக்கு , சமூக கொடூரங்களுக்கு எதிரான ஒரு நடவடிக்கைதானே. இது உண்மையிலே தற்கொலை அல்ல. புலிகள் செய்த கொலைதான். அகநெருக்கடிகளையும், புற நெருக்கடிகளையும் கொடுத்து தற்கொலைக்கு தூண்டி தங்கட எண்ணத்தை நிறைவேற்றும் புலிகளின் ஒரு பாசிச உளவியல் செயற்பாடுதான் இது. சிவரமணியின்ற தற்கொலை, பாசிச மன நிலை கொண்ட புலிகள் பற்றி, எங்கட தமிழ் சமூகத்திற்கு சொன்ன ஒரு செய்தி என்றே நான் பார்க்கிறன்.

தேசம்: அதே மாதிரியான சம்பவம்தான் நான் நினைக்கிறேன், சாதி முரண்பாடு, பிரதேச முரண்பாடு காரணமாக கிளிநொச்சியில் இருவர் ஆணும் பெண்ணும் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம். நான் நினைக்கிறேன் நான்கைந்து மாதங்களுக்கு முன்னர் இடம்பெற்றது

அசோக்: தாங்கள் நம்பிய குடும்பமும், உறவுகளும், சமூ கமும் கைவிடும்போது இந்த கொடுமைகளுக்கு எதிரான எதிர்வினையை அவர்கள் அப்படித்தான் காட்ட முடியும்…

தேசம்: அப்படி பார்க்கின்றபோது இந்த விடுதலைப் போராட்டம் ஆரம்பித்த பிற்பகுதியில், இந்த 40 வருட காலத்தில் சமூகத்தில் பெரியதொரு சிந்தனை மாற்றங்கள் நிகழ்ந்ததாக தெரியவில்லை. ஏனென்றால், அன்றைக்கு நடந்த அதே சம்பவங்கள் இன்றைக்கும் மீள நடக்கிற மாதிரி தான் உணர முடியுது.

அசோக்: தமிழ்த்தேசிய விடுதலைப் போராட்டம் முற்போக்கு சக்திகளால், இடதுசாரிகளால் தலைமை ஏற்று வழிநடத்தப்பட்டிருந்தால் மாற்றங்கள் நடந்திருக்கும். அப்படியில்லையே. விடுதலை இயக்கங்களின் தலைமைகளை நீங்கள் எடுத்துப்பார்த்தால், எங்களுடைய அரசியல் கோட்பாடுகள், சிந்தனைகளின் கொள்ளளவு தெரியும் உங்களுக்கு. நீங்கள் ஒரு சர்வதேச விடுதலைப் போராட்ட வரலாற்றில இயக்க தலைமைகளை எடுத்துப்பார்த்தால் அவர்கள் குறைந்தபட்சமாவது கோட்பாட்டு ரீதியான கொள்கைகளின் வழியாக பேச்சுக்கள் எழுத்துக்கள் எல்லாம் வரும்.

எங்கட சமூகத்தில் விடுதலைப் போராட்ட தலைவர்கள் ஒருவராவது ஒரு அறிக்கை கூட சொந்தமாக எழுதற ஆட்களாக இருந்ததில்லை. உமா மகேஸ்வரன் கொஞ்சம் பரவாயில்ல. பிரபாகரன் பற்றி சொல்ல வேண்டியதில்லை. மற்றப்படி இரண்டாம் நிலை தலைவர்கள்தான் கோட்பாட்டு ரீதியாக சித்தாந்த ரீதியாக வளர்ந்தார்களேயொழிய, தலைமைகள் அதி தீவிரமான தனிநபர் பயங்கரவாத நடவடிக்கைகள்தான் அவர்களை தலைவர்களாக்கியது. சித்தாந்த ரீதியாக வளர்ந்தவங்க இல்லை இவங்க.

பிரபாகரனோ, உமா மகேஸ்வரனோ, ஸ்ரீ சபாரத்தினமோ வந்து கோட்பாட்டு ரீதியாக சித்தாந்த ரீதியாக தலைவர்கள் ஆக்கப்பட்டவர்கள், அநீதிக்கு எதிராக போராடியவர்கள் அல்ல. அவர்களை பார்த்தீர்களென்றால் தனிநபர் பயங்கரவாதத்துக்கு ஊடாகத்தான், ஹீரோசியத்துக்கு ஊடாகத்தான் தலைமைக்கு வாராங்கள். ஈரோஸ் பாலகுமார், பத்மநாபா கூட சித்தாந்த வளர்ச்சி கொண்ட தலைவர்கள் இல்லை. என்றாலும், பத்மநாபா ஓரளவு முற்போக்கு எண்ணங்கள் கொண்ட ஜனநாயகவாதியாக இருந்தார். மற்ற இயக்கங்களின் தலைமை, எத்தனை கொலை செய்தால் தலைவராகலாம், துப்பாக்கி மிக அழகாக சுடுறான் அதுதான் இப்பவும் இருக்குது. இப்ப தமிழ் சினிமாவில் கதாநாயகர்களின் பிம்பங்கள் எப்படி சித்தரிக்கப்படுது எங்களுக்கு . அதே மாதிரித்தான் எங்க தலைவர்மாருடைய விம்பங்களும் எங்களிட்ட கட்டமைக்கப்பட்டன.

தேசம்: என்றைக்கு யாழ்ப்பாணத்தில் இந்த வன்முறைக் கும்பல்கள் கூட இயக்கப் பாணியில்தான் அவர்களும் செயற்பட பார்க்கின்றன.

அசோக்: எங்கட விடுதலை இயக்கங்களுக்கும் மாபியா குழுக்களுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. விடுதலை அமைப்புக்கான கட்டமைப்பு என்பது, அரசியல் சித்தாந்த நெறிமுறைகளையும் செயற்பாடுகளையும் கொண்டது. ஜனநாயகப் பண்பும், சித்தாந்த ரீதியான கட்டமைப்பும் இல்லை என்றால், அதற்கு பேர் விடுதலை இயக்கம் அல்ல. அது மாபியா குருப்புத்தான். எங்கட இயக்கங்களுக்கும், மாபியா குழுக்களுக்கும் பெரிய வித்தியாசம் இருக்கல்ல.

தேசம்: இன்றைக்கு இலங்கையில் செயற்பட்டுக் கொண்டிருக்கும் ஆவா குழு, லண்டனில் செயற்பட்டுக் கொண்டிருக்கும் வன்முறைக் கும்பல்களோ பெரும்பாலும் அவர்கள் இந்த விடுதலைப் போராட்டத்தை ஆதரிப்பவர்களாகத்தான் தங்களைக் காட்டிக்கொள்கிறார்கள்.

அசோக்: அவங்கள் சில கோட்பாடுகளை வைத்திருப்பார்களாக இருந்தால், அவங்களும் விடுதலை இயக்கம் தான். ஆவா குரூப் தாங்களும் ஏதாவது கோரிக்கையை முன்வைத்து போராடுகிறோம் என்று கேட்டால் அவங்களும் அரசியல் இயக்கமாக போய்விடுவார்கள்.

நீங்கள் தமிழீழ விடுதலை இயக்கங்களின் தோற்றங்களைப் பார்த்தீர்களென்றால் ஒடுக்குமுறைக்கு எதிரான அரசியல் கோட்பாட்டு சிந்தனையிலிருந்து அமைப்புகள் உருவாக்கப்படவில்லைத்தானே. ஆரம்பத்தில் விடுதலை இயக்கத்தில் யார் உள்வாங்கப்பட்டது? சண்டியர்களும், ரவுடிகளும் தானே. புலிகளின்ற ஆரம்ப தொடகக்கத்திலிருந்து இயக்க வரலாறுகளை பார்த்தால் இது தெரியும். புளொட்டில் உமா மகேஸ்வரனை சுற்றி இருந்த நபர்களை பார்த்தால் இது விளங்கும். டெலோவில இது மிகமிக மோசம்.

தேசம்: ஒவ்வொரு இயக்கத்திலும் அந்த ஊரில் உள்ள சண்டியர் இருந்திருப்பர்…

அசோக்: எதிரிகளை தாக்குவதற்கு சண்டியர்கள் தேவைப்பட்டார்கள். ஆரம்பத்தில் எல்லா இயக்கங்களின் ஆரம்பகால நபர்களாக இருந்தது சமூக விரோதிகள் ஆகவும் சண்டியர்களாகவும் தான் இருந்தார்கள். அதுல தப்பின ஒரு இயக்கம் ஈபிஆர்எல்எஃப் தானென்று நான் நினைக்கிறேன். ஈரோஸிலையும் அந்தத் தன்மை இருந்திருக்கு. ஏனென்றால் மற்ற எல்லா இயக்கங்களும் விடுதலைப் புலிகளில் இருந்து தானே உருவாகின்றது.

பாகம் 8: மிதவாத அரசியலும் ஆயுத அரசியலும் உறவும் – முரணும்

களுதாவளையிலிருந்து பாரிஸ் வரை
ஒர் அரசியல் போராளியின் வாழ்வின் பயணம்!

அசோக் யோகன் கண்ணமுத்துவுடன் ஒர் உரையாடல்! : தோழர் அசோக் யோகன் கண்ணமுத்துவின் சாட்சியம் பகுதி 08 (ஒலிப் பதிவு செய்யப்பட்ட திகதி 07.08.2021). இந்த உரையாடல் அசோக் யோகன் கணணமுத்துவின் பேச்சுமொழியில் எந்த மாற்றமும் இன்றி பிரசுரமாகின்றது.

பாகம் 08

தேசம்: 1983 யூலைக்கு முதல் நடந்த விடயங்களை திருப்பி பார்ப்போம். 70க்கு பிற்பட்ட காலங்களில் தமிழர் எழுச்சியை தமிழரசுக்கட்சி தலைமை தாங்குகிறது. தொடர்ந்து 1980களுக்குப்பின் ஆயுதக்குழுக்களின் கைக்கு மாறுகின்றது. இந்த காலகட்டங்களில் தமிழரசுக் கட்சி – தமிழர் விடுதலைக் கூட்டணி – பின்பு தமிழர் விடுதலைக் கூட்டணி – விடுதலை இயக்கங்கள் ஆகியவற்றுக்கு இடையிலான உறவு எப்படி இருந்தது அதனை உங்களால் எப்படி உணர முடிந்தது…? முன்னைய பேட்டிகளில் உங்களுக்கு தமிழரசுக்கட்சி மீது பல விமர்சனங்கள் இருப்பதாகவும் குறிப்பிட்டு இருந்தீர்கள். ஆனால் பொதுவாக நிலை அப்பிடி இல்ல. அந்த நிலை எப்படி ஆனதாக காணப்பட்டது…?

அசோக்: தமிழரசு கட்சியின், தமிழர் விடுதலைக் கூட்டணியின் நடத்தை தொடர்பாக தான் பிரச்சினை இருந்ததே தவிர தமிழரசுக்கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணி பேசிய அரசியல் தொடர்பாக எங்களுக்கு சிக்கல் இருக்கவில்லை. இக் கட்சிகள் பேசிய அரசியல் யதார்த்தமான அரசியல். பேரினவாத ஒடுக்குமுறை, குடியேற்றத் திட்டங்கள் தொடர்பான பிரச்சனை, தமிழர்களுக்கான சம உரிமை இன்மை, சிறுபான்மை இனங்கள் நசுக்கப்படுகிறது என்று கூறிய கோரிக்கைகள் உண்மையானவை. அந்த எதிர்பார்ப்புகள் அவர்களுடைய உரிமை தொடர்பான விடயங்கள் உண்மையானவை. எனக்கு இக் கட்சிகளின் நடத்தை தொடர்பாக விமர்சனங்கள் இருந்தது. செயற்பாடு தொடர்பாக அதனுடைய அதிகாரம் தொடர்பான பிரச்சனைகள் நிறைய இருந்தது.

தேசம்: குறிப்பாக

அசோக்: தமிழரசுக்கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணி தமிழர்களுடைய பிரச்சினைகளுக்கான தீர்வுகளை வடிவாக கையாண்டு இருக்க முடியும் என நினைக்கிறேன். அவர்களினுடைய அரசியல் முக்கியமாக பாராளுமன்ற கதிரைகளுக்கான அரசியலாக, பேரம் பேசுவதற்கான அரசியலாகபோய்விட்டது. தமிழ் மக்களுக்கான அரசியலாகவன்றி அது தங்களுடைய கட்சி உறுப்பினர்களுக்கான அரசியலாக மாறிவிட்டது. ஆரம்பத்தில் செல்வநாயகம் இருக்கும்போதும் அந்த அரசியல் வேறு மாதிரித்தான் இருந்தது. செல்வநாயகம் இருக்கும் வரை ஓரளவுக்கு தமிழரசுக்கட்சி தமிழர்களின் உரிமைக்கான ஒரு குரலாக இருந்தது. ஏனென்றால் முஸ்லிம்களுக்கான தனியலகு பற்றி கூட செல்வநாயகம் பேசி இருக்கிறார். அவர் இனங்களுக்கிடையிலான சமத்துவம், ஒற்றுமை பற்றி எல்லாம் பேசி இருக்கிறார். இந்த உணர்வுகள் பின்பு தமிழரசுக் கட்சியிடம் இருந்ததில்லை. தமிழர் விடுதலைக் கூட்டணிடமும் இருக்கவில்லை. முஸ்லிம் மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக இந்த கட்சிகளை விட்டு வெளியேறியதற்கு காரணமும் இந்த கட்சிகளின் சந்தர்ப்பவாதம்தான்.

தேசம்: நீங்கள் கூறுகின்ற இந்த அரசியல் விளக்கம் அன்றைய காலகட்டத்தில் இளைஞர்களிடையே எப்படி பிரதிபலித்திருந்தது …? அல்லது தமிழரசு கட்சியோ அதன் பின்பு தமிழர் விடுதலைக் கூட்டணியோ தமிழர்களுக்கு விசுவாசமாக இல்லை என்பதை அவர்கள் எப்படி உணர்ந்தனர்…?

அசோக்: வெகுஜன பரப்பில் தமிழரசுக்கட்சி பின்பு தமிழர் விடுதலைக் கூட்டணி உன்னதமான ஒரு அமைப்பாகவே உணரப்பட்டது. விமர்சனங்கள் இருந்தது. உதாரணமாக எங்களுடைய குடும்பத்தை எடுத்துப் பார்த்தால் கூட எனக்கு விமர்சனம் இருந்த அளவிற்கு, என்னுடைய குடும்பத்தினரிடம் விமர்சனங்கள் எதுவும் இருக்கவில்லை. எங்களுடைய கிராமத்தில் கூட விமர்சனங்கள் இருக்கவில்லை. அது யாரிடம் வந்தது அரசியல் சமூக அறிவு பெற்ற – இடதுசாரித் தோழர்கள் மத்தியில் தான் தமிழரசுக் கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணி பற்றிய முரண்பாடுகள் வருது. நீங்கள் கேட்டது போல ஏன் ஆயுதக் குழு இயக்கங்கள் தோன்றின என்பதற்கு இன்னொரு விதமான அரசியல் இருந்தது. என்னவென்றால், தமிழர் விடுதலைக் கூட்டணி தன்னை ஒரு தமிழர்களின் பாதுகாப்புக்கான பாராளுமன்ற கட்சியாக தன்னை நினைத்திருந்தால் குறைந்தபட்சமாவது தமிழர் பிரச்சினைகளைத் தீர்த்து இருக்கலாம். ஒரு உரையாடல் முக்கியம். முரண்பாடு தோன்றிய சமூகத்துடனான உரையாடல் உங்களுக்கு அவசியம். அந்த உரையாடல் எப்பொழுதும் நிகழ்ந்ததில்லை. சிங்கள மக்கள் மத்தியில் தமிழரசுக்கட்சியினர், தமிழர் விடுதலைக்கூட்டணி யாருமே தமிழர்களின் பிரச்சினையை கொண்டு செல்லவில்லை. இயக்கங்களும் கொண்டு செல்லவில்லை.

புளொட் அதற்கான முயற்சியை ஓரளவு மேற்கொண்டது. JVP யில் இருந்து பிரிந்த தோழர்களோடு ஒரு உறவை வளர்த்தது. அதற்கான ‘ தமிழிழம்- சிறிலங்கா நட்புறவுக் கழகம்’ என்ற பெயரில ஒரு அமைப்பை உருவாக்கி இருந்தம். இவ்அமைப்பில் குமரன், முரளி, ஈஸ்வரன், கௌரிகாந்தன் , நானும், சிங்கள தோழர்களும் இணைந்து தென்னிலங்கையில் பல வேலைத்திட்டங்களை தொடங்கினோம். ஆனா புளொட் தலைமை ஒத்துழைப்பு கொடுக்கல்ல. தொடங்கின கையோட முடிஞ்சி போய்ச்சி. சிங்களத் தோழர்களுக்கு எங்களில சரியான ஏமாற்றம். என்டாலும் பறவாயில்ல புளொட் ரேடியோவில சிங்கள சேவிச நடத்திச்சு. அது சிங்கள மக்கள மத்தியில் தாக்கத்தை கொடுத்ததென்றுதான் சொல்லவேண்டும்.

தமிழரசு கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணி நினைத்திருந்தால் அவர்கள் நிறைய செய்திருக்கமுடியும். அதற்கான வளங்கள் இருந்தன. அதில் அங்கத்துவம் வகித்தவர்கள் எல்லோரும் சட்டத்தரணிகள். அவர்களுக்கு மொழி ஒரு தடையாக இருந்திருக்காது. நன்றாக ஆங்கிலம் கற்று இருந்தார்கள் பல்வேறு தரப்பினரை சந்தித்து தமிழர்களின் பிரச்சினையை எடுத்துரைத்திருந்திருக்கலாம். எமது நியாயங்களை சிங்கள மக்கள் புரிந்து கொணடிருப்பாங்க.

தேசம்: இந்தக் காலகட்டங்களில் தலைவர் அமிர்தலிங்கம் உள்ளிட்டோருக்காக கைகளைப் கிழித்துக் கொள்ளும் அளவிற்கு எழுச்சிமிக்க இளைஞர்கள் அலை ஒன்று வடக்கில் இருந்தது. இதேபோன்றுதான் நிலை கிழக்கிலும் இருந்ததா…?

அசோக்: ஓ ஓ…, கிழக்கிலும் உணர்ச்சி அரசியல் இருந்தது. எங்களின் கிராமத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணி கூட்டங்கள் நடைபெற்றபோது நிறைய இளைஞர்கள் கைகளைப் கிழித்துக்கொண்டு ரத்தத்தை நெற்றியில் பூச கூடிய அளவிற்கு காசி ஆனந்தனுக்கு – அமிர்தலிங்கம் ஆகியோருக்கு எல்லாம் பெரிய ஆதரவு இருந்தது.

தேசம்: நீங்கள் குறிப்பிடக்கூடிய இந்த நிலையில் பின்னர் மாற்றங்கள் ஏதாவது வந்ததா…?

அசோக்: அந்த காலத்திலிருந்த தலைமுறையில் பெரிய அளவிலான மாற்றங்கள் வந்திருக்கவில்லை. என்னுடைய தலைமுறையினரிடம் மாற்றம் வந்ததே ஒழிய முன்னையவர்களிடம் பெரிய அளவிலான மாற்றங்கள் எதுவுமில்லை. இன்றைய காலத்தில் தமிழரசு கட்சியின் வாக்கு வங்கி அவர்கள்தான். இந்தத் தலைமுறையினர் தான் இன்று 65 – 75 வயது தலைமுறையினராக உள்ளனர். இவர்களுடைய வாக்குவங்கி தான் தமிழரசுக்கட்சியின் பெரும் வாக்கு வங்கியாக உள்ளது. அதற்குப் பின்னர் பெரும்பாலான இளைஞர்கள் அரசியல் ரீதியாக வளர்க்கப்பட்ட – ஓரளவு சிந்திக்ககூடியவர்களாக இருந்தனர். இவர்கள்தான் தமிழரசுக் கட்சி மீதான அரசியல் விமர்சனங்கள் கொண்டவர்களாகக் காணப்பட்டனர். மற்றும்படி தமிழரசுக் கட்சிக்கான வாக்கு வங்கி என்றுமே உறுதியாக இருந்துள்ளது. பேரினவாதத்தின் ஒடுக்குமுறை, புறக்கணிப்பு இருக்கும் வரை தமிழ் அரசுக் கட்சி வாழும். அதற்கு மேல ஆயிரம் விமர்சனங்கள் இருக்கலாம்.

இன்றும் கூட கடுமையாக நாங்கள் தமிழரசுக் கட்சியை விமர்சிக்கிறோம். ஆனாலும், ஒரு பாராளுமன்ற தேர்தலின் போது வாக்குகள் தமிழரசு கட்சிக்கு தான் போகின்றது. அதற்கு மாற்றீடாக எந்த கட்சிகளுமே இல்லை.

தேசம்: நீங்கள் சொல்கின்ற அந்த 82 – 83 கால கட்டங்களிலும் இதே நிலைதானா…? இளைஞர் இயக்கங்கள் அல்லது அமைப்புகள் பெரிய அளவிறகு மக்களின் மனதை வென்றெடுக்கவில்லை என்டுறீங்க.?

அசோக்: ஆம். வென்றெடுக்கவில்லை. ஏனென்றால் தமிழர் விடுதலைக் கூட்டணி க்கு மாற்றீடான ஒரு கட்சியை இளைஞர்களால் உருவாக்க முடியவில்லைத்தானே…

குறைந்த பட்சம் ஒரு வெகுஜன அமைப்பைக் கூட உருவாக்க இல்லைத்தானே. இளைஞர்கள் உருவாக்கிய ஆயுத இயக்கங்களிடம் இருந்து பெரும்பாலும் மக்கள் அன்னியப்பட்டு பார்வையாளர்களாகத்தான் இருந்தாங்க. பங்களிப்பாளர்களாக ஒரு காலமும் இருந்ததில்லை.

மக்களுக்கு இயக்கங்கள் தொடர்பாய் பிரமிப்பும், பயமும் இருந்ததே தவிர நெருக்கமான உறவு இருக்கல்ல. சில இயக்கங்கள் மக்களிடம் எஜமான் தன்மையுடன்தான் நடந்துகொண்டன. மக்களை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை. சின்னச்சின்ன பிரச்சனைகளுக்கு எல்லாம் மக்களுக்கு தண்டனை வழங்கின. மரண தண்டனை கூட கொடுத்தாங்க. அதிகார ஆணவத்தோடு இந்த இயக்கங்கள் நடந்து கொண்டன. பிறகு எப்படி இவை மக்களுக்கு விடுதலையை பெற்றுக் கொடுக்கமுடியும்.

ஒரு விடுதலைப் போராட்டத்தில் மக்கள் பங்களிப்பின் முக்கியத்துவம், அதன் அவசியம் இயக்கங்களால் உணரப்படவே இல்லை. அரசியல் சார்ந்த வெகுஜன அமைப்ப கட்டியெழுப்பேல. ஆயுதம் இருந்தால் காணும் என்ற எண்ணம்தான் இருந்தது.

என்றாலும், புளொட், ஈபிஆர் எல் எப் இரண்டும் மக்கள் பங்களிப்பு, அணிதிரட்டல் போன்ற வெகுஜன வேலைத்திட்டங்களில் ஆர்வம் கொண்டிருந்தன.

காந்தியத்தை தடை செய்யாமல் விட்டிருந்தால் தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு மாற்றான அமைப்பாக காந்தியம் வளர்ந்திருக்கும். ஒருவேளை அது ஒரு எழுச்சியாக அமைந்திருக்கும். ஒரு ஆரோக்கியமான அரசியலை முன்னெடுத்து அரசியல் சமூக மேம்பாட்டு இயக்கமாக அது வந்திருக்க முடியும். காந்தியத்துக்கு இருந்த பெரிய பிரச்சனை ஒரு ஆயுத இயக்கம் அதுக்குள் போகும் போது ஒரு வெகுஜன இயக்கத்திற்கும் ஆயுத இயக்கத்துக்குமான பரஸ்பர உறவு முறையாக – கவனமாக கையாளப் பட்டிருக்க வேண்டும். அது புளொட்டிலும் இல்லை.

தேசம்: இதை இப்படி பார்க்கலாமா…? தமிழர் விடுதலைக் கூட்டணி ஒரு மிதவாத அரசியலை செய்ததாக இருந்த நிலை மாற்றம் கண்டு ஆயுத அரசியல் தான் தமிழர்களுக்கான ஒரு தீர்வைப் பெற்றுத்தரும் என்ற போக்கு தான் அந்த கால கட்டத்தில் இருந்ததா…? அதாவது இவர்கள் அரசியலுக்கானவர்கள்..

அசோக்: தமிழ் இளைஞர் பேரவை உருவாக்கம், தமிழர் விடுதலைக்கூட்டணியின், இதனுடைய ஒரு பகுதியாக இருக்கும் என்றே நான் நினைக்கிறேன். இளைஞர் பேரவை தமிழர் விடுதலைக் கூட்டணியின் ஒரு உபகுழுவாகதான் உருவாக்கப்பட்டது. பிறகு தமிழ் இளைஞர் பேரவைக்கும் – தமிழர் விடுதலைக் விடுதலைக் கூட்டணிக்கும் இடையில் சில பிரச்சினைகள் ஏற்பட்டு புஷ்பராஜா, வரதராஜப்பெருமாள், முத்துக்குமாரசாமி எல்லாம் பிரிந்தது வேறு வரலாறு. ஆனால், அது தமிழர் விடுதலைக் கூட்டணியின் ஒரு உப குழுவாக தான் உருவாக்கப்பட்டது. தமிழர் விடுதலைக் கூட்டணியின் போதாமை காரணமாக தான் ஆயுத இயக்கங்கள் உருவெடுத்தது. தமிழர் விடுதலைக் கூட்டணியின் அரசியலில் காணப்பட்ட போதாமை இளைஞர்களால் உருவாக்கப்பட்ட ஆயுத குழுக்களிலும் காணப்பட்டது.

தனி நாடு, தமிழ் ஈழம், பிரிவினை இப்படித்தான் எங்கள் நோக்கமும் இருந்ததே தவிர உலக அரசிலை யதார்த்தத்தை நாங்கள் அக்காலத்தில புரிஞ்சி கொள்ளல. எந்த ஒரு அரசியல் விழிப்பூட்டல்களும் இடம்பெறவில்லை. ஆயுத இயக்கங்கள் திடீர் வளர்ச்சியடைந்தன.

தேசம்: யாழ்ப்பாணம் தவிர்ந்த ஏனைய தமிழர் மாவட்டங்களில் காந்தியத்தின் மீதான ஈடுபாடு காணப்பட்டதும் பிறகு பல இளைஞர்கள் அரசியல் மயப் படுத்தப்பட்டனர் என்ற போக்கு ஒன்று இருக்குது. அதே சமயம் வடக்கிலிருந்து காந்தியம் செய்யப்படல. அங்க வந்து மாணவர் இயக்கங்கள் தான் ஏற்பட்டிருந்த அரசியல் வெற்றிடத்தை நிரப்பி கொண்டிருந்தார்கள். இவர்களின் அரசியலும் ஆயுத அரசியலாகத்தான் இருந்ததுவா?

அசோக்: மாணவர் அமைப்பு கெஸ் வந்து ஓரளவு அரசியல் வகுப்பு நடாத்தி இருக்கும் என நினைக்கிறன். எல்லா மாணவர் அமைப்புக்களும் ஆயுத போராட்டத்தை நோக்கித்தான் அரசியல் மயப்படுத்தப்பட்டன. அன்றைய காலத்தில் வெகுஜன அமைப்புக்கள் இயக்கங்களால் தொடங்கப்பட்டாலும் அவற்றிக்கு தனித்துவமான வெகுஜன அரசியல் இருக்கல்ல. இயக்கங்களின் கிளைகளாகத்தான் அவை இருந்தன.

யாழ்ப்பாணத்தில் புளொட் மாணவர் அமைப்பான தமிழிழ மாணவர் பேரவை TESO கலவரத்திற்கு பிறகுதான் தீவிரமாக தொடங்குகிறது. TESO தனித்துவமான வெகுஜன அமைப்பாக செயற்பட முயன்றும் தலைமை இடம் கொடுகல்ல.புளொட்டின் யாழ் மாவட்ட அரசியல்பற்றி பின்னர் கதைக்கும் போது இதுபற்றி சொல்றன். புளொட்டின் தொழிற்சங்க அமைப்புக்களும் இப்படித்தான்.

தேசம்: கெஸ்ல இருந்த எல்லாருமே கடைசியா ஈபிஆர் எல்எப் ல போய்ச்சேருகினமா…

அசோக்: அப்படித்தான் கெஸ் , ஈபிஆர் எல்எப் ஆக மாற்றம் பெறுகிறதென நினைக்கிறன். அதன்ற வரலாறு எனக்கு தெரியல்ல. கெஸ் வந்து மாணவர்களுக்கூடாக கட்டமைக்கப்பட்டதால் ஓரளவு அரசியல் தேர்ச்சி அவங்களுட்ட இருந்திருக்கு. ஏனென்டால் ஈ.பி.ஆர்.எல்.எப் தோழர்கள் நிறைய பேரோட கதைக்குறப்போ அரசியல் ரீதியான உரையாடல்களை செய்யக்கூடியதாக இருந்தது. மற்ற அமைப்புகள்ட்ட அது இருக்கல.

தேசம்: அப்ப இந்த தமிழ் இளைஞர் பேரவை போன்ற அமைப்புகளின் அரசியல் வளர்ச்சி…

அசோக்: தமிழ் இளைஞர் பேரவைட்ட தமிழரசு கட்சியின்ற வலதுசாரி அரசியல்தான் இருந்தது. . இடதுசாரி அரசியல் அவங்களிட்ட இல்லை. இடது சாரி அரசியல் கொண்டவங்க காலப்போக்கில் புளொட்டிற்கும் ஈபிஆர்எல் எப்பிக்கும் போறாங்க.

தேசம்: இளைஞர் பேரவை யாழ்ப்பாணத்துக்கு வெளியிலயும் பலமாய் இருந்ததா…?

அசோக்: ஓம் . பலமாய் இருந்தது. மட்டக்களப்பில தமிழ் இளைஞர் பேரவையை காசி ஆனந்தனோடு சேர்ந்து உருவாக்கியதில வசந்தகுமார் முக்கியமானவர். இவர் ரியுட்டரி வைத்திருந்து படிப்பித்தவர். இவருக்கூடாகத்தான் நிறையபேர் தமிழ் இளைஞர் பேரவைக்கு வாறாங்க. காசி ஆனந்தனோடு சிறைக்கு சென்று கடுமையான சித்திரவதைகளை அனுபவிச்சவர்.ஆனா அவர் பெயர் மறக்கப்பட்டுவிட்டது. இவங்களையெல்லாம் பதிவு செய்ய வேணும். நடேசானந்தம், வாசுதேவா, வேணுதாஸ், பரமதேவா, சிவநாதன், ராம்ராஜ் எல்லாம் தமிழ் இளைஞர் பேரவையில் இருந்தாக்கள் தானே இயக்கங்களுக்கு வந்தது.வாசுதேவா, சந்ததியார், வரதராஜபெருமாள், கி.பி அரவிந்தன், தங்ககேந்திரன் எல்லாம் தமிழ் இளைஞர் பேரவையில் இருந்தாக்கள்தானே. புஸ்பராஜா, வரதராஜபெருமாள், கி.பி அரவிந்தன் தங்ககேந்திரன் எல்லாரும் ஈபிஆர்எல்எஃப் க்கு போய்ட்டாங்கள். சந்ததியார், வாசுதேவா, ராம்ராஜ் போன்றவங்க புளோட்டுக்கு வந்துட்டாங்கள். காசி ஆனந்தன், வேணுதாஸ் பரமதேவா எல்லாரும் எல் ரீ ரீ ஈ க்கு போறாங்க.

தேசம்: அப்ப இந்த இயக்கங்கள்ட வளர்ச்சிக் கட்டத்தில இந்த இயக்கங்கள்ன்ட பொருளாதார தேவைகள் எல்லாம் என்னென்று நிறைவேற்றப்படுது…? ஒரு தொகையான இளைஞர்கள் அதுக்குள்ள இருக்கேக்குள்ள… ஏற்கனவே அங்கு வங்கிக் கொள்ளைகள் எல்லாம் நடந்திருக்கு. இதெல்லாம் எவ்வளவு தூரம் சமூகத்தில பாதிப்புகளை ஏற்படுத்தி இருக்கு…?

அசோக்: புளோட்டை பொருத்தவரை மக்கள்ட்ட தான் தங்கியிருந்தது. நாங்க மக்கள் மத்தியில தான் சாப்பாடு எல்லாம். பெரிய செலவில்லை. நாங்க போற இடத்தில மக்கள் மத்தியில் சாப்பிடுறது, பிரச்சாரம் பண்றது. ஏனைய அரசியல் வேலைத்திட்டங்களுக்கு, கூட்டங்களுக்கு பலர் அன்பளிப்பு நிதி தந்து உதவினாங்க. ஆயுத ரீதியான இயக்கம் ஒன்றுக்குத்தான் பணம் தேவை. வெகுஜன இயக்கங்களுக்கான ஆதரவு பொருளாதார உதவி மக்களுட்ட இருந்து கிடைத்தது. எல்லாத்தையும் மக்களிட்டையே பெற்றுக் கொண்டோம். வெகுஜன அமைப்பாக தொடங்கி ஆயுத இயக்கமாக மாறுகின்ற போது தான் பணம் தேவைப்படுது. அந்தக் கட்டத்தில்தான் கிளிநொச்சி வங்கி கொள்ளை அடிக்கப்படுது புளோட்டால. எப்ப வந்து நீங்க ஒரு ஆயுத இயக்கமா செயல்பட ஆரம்பிக்குறீங்களோ அப்பதான் பணம் ஒரு தேவையா தெரிய தொடங்குது.

தேசம்: அந்த நேரத்தில் பெரும்பான்மையான அமைப்புக்கள் வங்கிக் கொள்ளையில – தவறு என்றும் சொல்ல ஏலாது . இது ஆனால் சர்வசாதாரணமாக நடைபெற்று இருக்குது.

அசோக்: ஓம். நடந்திருக்கு. வங்கிக்கொள்ளைல ஈடுபட்டிருக்காங்க.அது சர்வசாதாரணமாக நடந்தது. வெகுஜன அமைப்புகள் மக்கள் மத்தியில் போய் பேசுதல், அவர்களோடு உறவுகளை வளர்த்தல், மக்களின்ர பங்களிப்பு, மக்களை அணிதிரட்டுதல் மக்கள் போராட்டம் என்ற ஒரு படிமுறை வளர்ச்சி கூடத்தான் ஆயுதப் போராட்டம் நடக்கும்.இப்ப நீங்க கியூபா, வியட்நாம் உட்பட எல்லா இடமும் பார்த்திங்க என்டா நீண்டகால படிமுறை வளர்ச்சி ஒன்று இருக்கு.

எங்க போராட்டத்தில மக்கள் மயப்பட்டபோராட்டங்களில நம்பிக்கை இருகல்ல. ஆயுதப்போராட்டம் ஒன்றுதான் தீர்வென நம்பினோம். அப்ப ஆயுதங்களுக்கு, பயிற்சிகளுக்கு பணம் வேணும் . ஒரே தீர்வு வங்கிக் கொள்ளைகள்தான். அதனோட ஜூலை கலவரம் வந்துட்டு உடனடியாக… அப்ப இங்க அந்த நீண்ட கால வெகுஜன இயக்கத்துக்கான அவகாசம் இல்லாம போயிட்டு.

தேசம்: ஆயுத இயக்கங்கள் கிட்டத்தட்ட ஒரு short cut அதான் பார்க்குறினம் என. மக்கள்கிட்ட போய் அரசியல் செய்யாமல் வங்கிகளையும் சிலஇயக்கங்கள் தனிப்பட்ட மக்கள் சொத்துக்களையும் கொள்ளையிட்டு உள்ளன.

அசோக்: சில இயக்கங்கள் செய்துள்ளன. முழுக்க முழுக்க ஆயுத இயக்கங்கள் என்னதான் சித்தாந்தங்கள், மக்கள் போராட்டம் என்றெல்லாம் அணி திரட்டுதல் என்றெல்லாம் கதைத்தாலும் கூட அவர்கள் முழுவதும் ஆயுத கவர்ச்சியோடதான் இருந்தாங்க.. ஆயுத பலத்தின் ஊடாக புரட்சி செய்து தமிழீழம் கிடைக்கும் என்ற நம்பிக்கைதான் எல்லா இயக்கத்திடமும்இருந்தது. அந்த நம்பிக்கை தான் எங்ககிட்ட கூட இருந்தது. ஆனால் இன்றைக்குத் திரும்பிப் பார்க்கும்போது விமர்சனத்துக்குரியதாகத்தான் இருக்குது.

தேசம்: இந்த வங்கிக் கொள்ளைகள் இதுகளால மக்கள் எவ்வளவு தூரம் பாதிக்கப்பட்டு இருக்காங்க. வங்கிக் கொள்ளைகள் மட்டுமில்ல. சங்க கடைகள் கூட அடித்து உடைக்கப்பட்டிருக்குது. இதனால் சாதாரண மக்கள் எவ்வாறான பாதிப்பை எதிர் கொண்டார்கள். நான் நினைக்கிறேன்; களுதாவளை உங்களுடைய கிராமத்தில் கூட மக்கள் சேமிப்புக்காக கொடுத்திருந்த நகைகளை கூட கொள்ளை அடிப்பதற்காக திட்டம் ஒன்றும் இருந்தது.

அசோக் : ஓம். அது வேறு ஒரு அமைப்பு ஒன்று. அப்ப நாங்க JVP ல இருந்து வெளியேறி இருந்த காலகட்டத்தில், வெவ்வேறுபட்ட அமைப்புகள் வந்து எங்கள சந்திப்பாங்க. இப்ப வெளிப்படையா கதைக்கலாம். ஈரோஸ் அமைப்பு அன்னலிங்கம் ஐயா எங்களோட உறவு வைத்திருந்தவர். அவருடைய பிரதானமான நோக்கமாய் இருந்தது எங்க ஊர் வங்கியை கொள்ளை அடிப்பது. இப்படியான கிராமிய வங்கிகளில நகைகளை ஈடு வைச்சிருக்கிறவங்க ஏழை விவசாயிகள்தான். அவங்களுக்கு இந்த கிராமிய வங்கிகளினால் நஷ்ட ஈடு கொடுக்கமுடியாது; பாவம் மக்கள். மக்கள் மத்தியில் வேலை செய்து கொண்டிருக்கும் போது இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபட்டீங்க என்டு சொன்னா அது எங்களை மக்கள் மத்தில இருந்து அன்னியப்படுத்திவிடும். தடையாக போயிடும். நீங்க இப்படியான ஒரு நடவடிக்கையில் ஈடுபட்டு போலீசுக்கு தெரியவந்தால் உங்களால அடுத்த கட்டத்துக்கு முன்னேற முடியாமல் போய்விடும். ஆனா இந்த அமைப்புகள் முழுக்க, மக்கள் இயக்கங்களை கட்டமை த்து மக்களிடம் ஆதரவும் நிதியும் பெறுவதை விடுத்து , பொருளாதார ரீதியான வங்கிக் கொள்ளைகளில் தங்கியிருந்தனர். பொருளாதார ரீதியாக மத்தியில் மக்கள் நிதி திரட்டவும், மக்கள் மத்தியில் தங்கி வாழ்வதற்கான சாத்தியங்கள் இருந்தது.அப்படியான நேரத்தில் இந்த வங்கிக் கொள்ளைகள செய்ய நாங்க விரும்பல.

தேசம்: அப்ப வங்கி கொள்ளை இடம் பெற்றதா…?

அசோக்: ஓம் அது நடந்தது வேறு இடத்தில். ஆனால் அது நாங்கள் கடுமையாக எதிர்த்தனாங்க.

தேசம்: இந்த வங்கிக் கொள்ளைகளில் எடுக்கப்பட்ட பணமும் நகையும் எப்படிப் பயன்படுத்தப்பட்டது இந்த இயக்கங்களால…?

அசோக்: அனேகமான வங்கிக் கொள்ளைகள் அனைத்தும் பயிற்சிகளுக்கு ஆயுதங்களுக்கு செலவழிக்கப்பட்டிருக்கு. . தனிநபர் ரீதியாக அது எங்கேயுமே பயன்படுத்தப்படல. ஒரு சில சம்பவங்கள் தவிர்க்க முடியாமல் சின்ன சின்ன தவறுகள் நடந்து இருக்கலாமே தவிர , மற்றும்படி அந்தத் தங்கங்களையும், பணங்களையும், நகைகளையும் இயக்கங்கள் தமக்காகவே பயன்படுத்தினர். அதேநேரம் தனிநபர்க்கூடாக பயன்படுத்தப்பட்டது என்று சொன்னா அது யாழ்ப்பாண ஹட்டன் நெசனல் வங்கி கொள்ளை தான்.

தேசம்: அவர்களுடைய அரசியல் செயற்பாடுகளும் வலு மட்டுப்படுத்தப்பட்டதாக தான் இருந்தது. இராணுவ நடவடிக்கைகளும் அவர்கள் மேற்கொள்ளல என …

அசோக்: அது மட்டுப்படுத்தப்பட்ட காலங்களில்தான் கொள்ளைகளும் அடிக்கப்பட்டது. அதுக்குப்பிறகு இயக்கமும் இல்லாம போயிட்டுது. பணமும் அதுக்குள்ள பயங்கர சிக்கலுக்கு உள்ளாகிட்டுது.

தேசம்: மற்ற அமைப்புகளுக்கு அது வழங்கப்பட்ட தாக சொல்லப்படுகிறதே…

அசோக்: தீப்பொறி இயக்கத்திற்கு கொடுக்கப்பட்டதா சொல்லப்படுது. ஐயருக்கு ஊடாக அது கொடுக்கப்பட்டதாக…!

தேசம்: அதைவிட வேற நான் நினைக்குறேன், ரெலி ஜெகன் எல்லாரும் அவர்களுடைய அமைப்பு சார்ந்து சில நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தனர். இந்தக் காலகட்டத்தில் சில தனி நபர் அமைப்புகளும் மிகத் தீவிரமாக ஈடுபட்டு இருந்த காலகட்டம் இருக்கு தானே… குறிப்பாக யாழ்ப்பாணத்தில.

அசோக்: இந்த இயக்கங்களின் அதிகரித்த உருவாக்கம் இருக்குதானே.., அது எங்க நடக்குது என்று சொல்லி சொன்னா ஒருவிதமான அதிகார மோகத்தினால, ஆயுத கவர்ச்சியாலதான் இந்த இயக்கங்களின் உருவாக்கம் அமைந்திருந்தது. அதனோட மத்தியதர வர்க்க மனோபாவமான ஹீரோசியம் சுயபிரபல்யம் ஒரு காரணமாக இருக்கு. ஈபிஆர்எல்எஃப் , ஈரோஸ் , புளோட் , ரெலோ புலிகள் எல்லாம் இயக்கங்களாக உருவாக்கப்பட்டிருக்குது. குறைந்தபட்சம் இந்த இயக்கங்களிடம் அதற்கான சித்தாந்தங்கள், அரசியல், இருக்குது. இனிமே புதுசா ஒரு இயக்கம் வருதென்டா இந்த இயக்கங்களின் கொள்கைகள் சித்தாந்தங்களை நடைமுறைகளைவிட வலுவான ஒரு காரணம் தேவையாய் இருக்கும். அப்படியான ஒன்றுமே இல்லை. அப்ப புதுசா இயக்கங்கள் வாரத்துக்கான நோக்கம் எங்க உருவாகுதென்டா நான் சொன்ன இந்தக் காரணங்கள்தான். அதேநேரம் அந்தக் காலத்திலே இயக்கம் என்பது பிரமிக்கத்தக்க ஒரு குறியீடாக போயிட்டு. அதால நிறைய இயக்கங்கள் அந்த காலத்தில வருது. அவற்றை தமிழர்களின் விடுதலைக்கான இயக்கங்களாக பார்க்க இயலாது என்று தான் நான் நினைக்கிறேன். ஏனென்டா உண்மையா அவங்க விடுதலைக்கான உந்துசக்தியாக வரவேண்டும் என்று நினைத்திருந்தால் ஏற்கனவே இருந்த இயக்கங்களில் எதுலயாவது சேர்ந்திருப்பார்கள். ஏதாவது ஒரு அமைப்பை அவர்கள் தேர்ந்தெடுத்திருக்கலாம். அப்படி இல்லாட்டி புதிய அமைப்பை உருவாக்குகின்ற போது ஏற்கனவே உருவாக்கப்பட்ட அமைப்புகளை விமர்சனத்திற்கு ஊடாக கற்றிருக்கோனும். பாக்கப் போனா எல்லாரும் தனிநபர் தாக்குதல்களை நடத்தினார்கள். எல்லாம் தனிநபர் பயங்கர வாதச் செயல்களாகத்தானே இருந்திருக்கு.

தேசம்: நான் நினைக்கிறேன் இயக்கங்கள்ட எண்ணிக்கை அதிகரித்தது இந்த ஜூலை கலவரத்துக்கு முன்னமே தானே.

அசோக்: ஈரோஸ் , ஈபி.ஆர்.எல்.எப், புளோட் ,ரெலோ – எல்ரிரீ இந்த இயக்கங்கள்ட தோற்றம் வருது. நான் நினைக்கிறேன் எவ்வளவு இயக்கம் வந்ததே எங்கட போராட்டத்தினுடைய தோல்விதான். ஒரே கோட்பாட்டுக்காக – ஒரே கொள்கைக்காக ஒரே லட்சியத்திற்காக போறம் என்று சொன்னால் ஈபி.ஆர்.எல்.எப்- ம் மார்க்சிசம் கதைக்குது , ஈரோசும் மாக்சிசம் கதைக்குது , புளோட்டும் மாக்சிசம் கதைக்குது ஆனா எல்லாம் வெவ்வேறு பட்ட அமைப்புக்களா தானே இருக்குது. குறைந்தபட்சம் உடன்பாடுகள் கூட இல்லை தானே. ரெலோவும் – எல்ரிரீயும் ஆயுதம் சார்ந்து சிந்திக்கும் இயக்கங்கள். என்றாலும்கூட இவர்களுக்கு இடையிலான ஒருமைப்பாடு எங்கேயும் இருக்கல்ல தானே. எல்லாமே மத்திய தரவர்க்க குணாம்சங்களோடு உறைந்து போன இயக்கங்கள்தான். அதன்ர வெளிப்பாடுதான் இத்தனை இயக்கங்களும், முரண்பாடுகளும், சண்டைகளும் , அதிகாரப் போட்டிகளும், அழிவுகளும். மக்கள் நலன்களைவிட தனிநபர் மேலாதிக்க மனோபாவம் , சுயநலம், அதிகார ஆசைகள்தான் நம்ம போராட்ட இயக்கங்களை அழிச்சது.இன்றும் தமிழ்க் கட்சிகளிடம் இதுதானே மேலோங்கி இருக்கு.

தேசம்: அப்ப இப்படியான சூழலில் உங்களைப் போன்றவர்கள் அரசியல் செய்கின்ற போது எப்படியான பிரச்சனைகளை எதிர் கொண்டீர்கள்..? மற்ற இயக்கங்க ங்கள் ஆட்களை உள்வாங்கேக்குள்ள எப்படி உங்கள வித்தியாசப்படுத்துறீங்க…;

அசோக்: ஜூலை கலவரத்துக்குப் பிறகு இயக்கங்களோட ஆட்சேர்ப்பு என்பது கடும் விமர்சனத்துக்கு உரியதுதான். இவர்கள் சித்தாந்த ரீதியாக வந்த ஆட்கள் இல்லை தானே. ஒரு ஆர்வம் இருக்கும் தானே .

அதுலயும் நிறையபேர் ஆயுத கவர்ச்சி காரணமாக எந்த இயக்கத்திற்கும் போகத் தயாராக இருந்தார்கள். ஓரளவு சித்தாந்த ரீதியாக அரசியல் ஆர்வம் உடையவர்கள் ஈபிஆர்எல்எஃப் ஐ தேர்ந்தெடுப்பார்கள் – ஈரோசை தேர்ந்தெடுப்பார்கள் – புளோட்டை தேர்ந்தெடுப்பார்கள். வெறும் ஆயுத கவர்ச்சி கவர்ச்சி உடையாக்கள் அதிகமாக ரெலோவுக்கும், எல்ரிரிக்கும் தான் போனார்கள். எங்களைப்போன்ற சிந்தனை கொண்டவர்களுக்கு இந்த ஆள் சேர்ப்பு பெரிய சிக்கல்தான். இந்தியா ,பின்தள பயிற்சி எல்லாம் எங்கட சிந்தனைகளுக்கு, செயற்பாடுகளுக்கு இடம்இல்லாமல் செய்து விட்டது. என்டாலும் 83 ஜூலை கலவரத்திற்கு பின் அந்த நேரத்திலும் நாங்க யாழ்ப்பாணத்தில அரசியல் வகுப்புக்கள் வெகுஜனஅமைப்புக்கள் என்று ஏதோ நம்பிக்கையில வேலை செய்ய தொடங்கி இருந்தம்.

தேசம்: அப்ப 1983 ஜூலை கலவரம் – திருநெல்வேலி தாக்குதல் வரைக்கும் பெரிய அளவிலான ராணுவத் தாக்குதல் எதுவும் நடைபெறவில்லை என்று நினைக்கிறேன். அப்படித்தான..?

அசோக்: 83 திருநெல்வேலி தாக்குதல் நடந்த வரைக்கும் பாரிய இராணுவ தாக்குதல் அதுவரைக்கும் நடக்கல. 13 பேர். எல்ரீரியிட முதல் தாக்குதல் அதுதான் என நினைக்கிறன்.

தேசம்: நான் நினைக்கிறேன் அடுத்த பதிவில் அதை செய்யலாம் என்று.

 

புளொட் – ஜேவிபி அரசியல் – அசோக்கின் கைது!!!

பாகம் 7: புளொட் – ஜேவிபி அரசியல் – அசோக்கின் கைது!!!
களுதாவளையிலிருந்து பாரிஸ் வரை
ஒர் அரசியல் போராளியின் வாழ்வின் பயணம்!

அசோக் யோகன் கண்ணமுத்துவுடன் ஒர் உரையாடல்! : தோழர் அசோக் யோகன் கண்ணமுத்துவின் சாட்சியம் பகுதி 07 (ஒலிப் பதிவு செய்யப்பட்ட திகதி 07.08.2021). இந்த உரையாடல் அசோக் யோகன் கணணமுத்துவின் பேச்சுமொழியில் எந்த மாற்றமும் இன்றி பிரசுரமாகின்றது.

பாகம் 7

தேசம்: புளொட்டின் உருவாக்கம் பற்றி பேசியிருந்தோம். யார் உங்களை புளொட்டுக்குள்ள கூடுதலாக influence பண்ணின என்று நினைக்கிறீங்க…

அசோக்: கூடுதலாக அதில கேசவன், ரகுமான் ஜானுடைய கருத்துக்கள். இவங்களிடம் இடதுசாரிக் கருத்துக்கள், மார்க்சிய ஐடியோலொஜி இருந்தது. ஈஸ்வரன் அடுத்தது வாசுதேவா. வாசுதேவாவின் பிற்காலம் என்பது விமர்சனத்துக்கு உரியது. அந்த காலத்துல வாசுதேவா முற்போக்கான ஆளாகத் தான் இருந்தவர். காந்தியத்தில் மிக செயற்திறனுடைய ஆளாகத்தான் இருந்தவர். மட்டக்களப்பு தோழர்கள் பலர் புளொட்டுக்குள்ளும், காந்தியத்துக்குள்ளும் உள்வாங்கப்படுவதற்கு வாசுதேவா தான் முக்கிய காரணம். மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளராக நான் வருவதற்கு வாசுதேவோவும் ஒரு காரணம்.

தேசம்: மாவட்ட அமைப்பாளரின் செயற்பாடுகள் என்ன? என்னென்ன பணிகள் உங்களுக்கு தரப்பட்டது?

அசோக்: கூட்டங்கள் பிரச்சாரங்கள்தான். மக்களை அரசியல்மயப்படுத்தல். அரசியல் வகுப்புகள் நடத்துதல். வெகுன போராட்டங்கள் செய்வது, பத்திரிகைகள், துண்டுப்பிரசுர வினியோகம் இப்படிஇருக்கும். கூடுதலாக புதிய பாதை பேப்பர் விற்பது.

தேசம்: அந்தக் காலகட்டத்தில் ராணுவ பயிற்சி அதுகள் இருக்குதா?

அசோக்: அதுகள் ஒன்றுமில்லை. உண்மையிலேயே புளொட்டில் முக்கியமாக இருந்தது அரசியல் வகுப்புக்கள்தான். தோழர்களை புளொட்டில் இணைப்பதும் தான் எங்களுடைய வேலையாக இருந்தது. அந்த நேரத்தில் என்னோடு மிகத் தீவிரமாக வேலை செய்த ஆட்கள், வரதன் என்று ஒரு தோழர், அடுத்தது சக்தி வடிவேல் என்று ஒரு தோழர், அகஸ்டின் என்ற ஒரு தோழர் அவர் பிறகு அம்பாறை மாவட்ட பொறுப்பாளராக வந்தவர். பேரின்பம் நிறைய தோழர்கள். செல்வரெத்தினம், பணிக்ஸ், பாக்கி மாமா, கராட்டி அரசன், மங்களம் குணரா ஜா, குருக்கள்மடம், பழுகாமம் கிரமாங்களிலிருந்து நிறைய தோழர்கள். வாழைச்சேனையில் யோகராஜா, பெயர்கள் நிறைய மறந்து விட்டது. அவங்க பெயர்களைலெல்லாம் பதிவு செய்யனும். மாணிக்கம் பிள்ளை என்ற ஒரு தோழர் இருந்தவர். அவர்கள் எல்லாம் மிகத் தீவிரமாக வேலை செய்தவர்கள். வரதன் என்ற தோழர் தன்னை அர்ப்பணித்து வேலை செய்தவர். கடைசி வரைக்கும் நாட்டை விட்டு வெளியேவில்லை.இப்பவும் ஊரில மக்களுக்கு ஏதாவது உதவி செய்து கொண்டுதான் இருக்கிறார்.

தேசம்: ஜே.வி.பி காந்தியம் புளொட் என்று உள்வாங்கப்படுகிறீர்கள். இதுக்கெல்லாம் உங்களை தள்ளுகின்ற முரண்பாடு எதுவாக இருந்தது? இலங்கை அரசாங்கத்தின் எந்த வகையான செயற்பாடுகள் உங்களை எப்படித் தள்ளுது?

அசோக்: எனக்கு ஒரு அனுபவம் இருக்கு என்ன என்று கேட்டால், சின்ன வயதிலிருந்தே பல பிரதேசங்களுக்கு போய் வந்திருக்கிறேன். மலையகத்தில் நான் இருந்தனான். மலையகத்தில் எனக்கு பேனா நண்பர்கள் நிறைய பேர் இருந்தவர்கள். கற்றன், தலவாக்கெல, லிந்துல, டயகம, பொகவந்தலாவ, கொட்டகலை போன்ற இடங்களில் நண்பர்கள் இருந்தாங்க. நெடுஞ்செழியன் என்ற நண்பன் சில வருடங்களுக்கு முன் இறங்துட்டாங்க. பிற் காலத்தில வீரகேசரியில வேலை செய்தவர். அரசியல் சமூக அக்கறை கொண்ட நண்பன். அவரோடு மலையகத்தில் பல இடங்கள் சுற்றியுள்ளன்.

இவர் மூலம்தான் சந்திரசேகரம், விஜயகுமார் மற்ற தீர்த்தக்கரை இலக்கிய அரசியல் நண்பர்கள் பலரின்ற அறிமுகம் கிடைச்சது.

அப்ப நான் அடிக்கடி போவேன். நாங்கள் ஒரு மத்தியதர வர்க்கக் குடும்பத்தில் இருந்தாலும் கூட, எங்களுடைய சிந்தனை முறை வித்தியாசம் தானே. எங்களுடைய கல்வி, வாசிப்பு, அரசியல்…

அப்ப பார்க்கேக்கை, தொழிலாளர் மீதான ஒடுக்குமுறை என்பது சிங்கள மக்களுக்கும் தமிழ் மக்களுக்கும், மலையக மக்களுக்கும், முஸ்லிம் மக்களுக்கும் ஒன்றாகத்தான் இருந்தது. இலங்கை அரசு தமிழ் மக்களை மொழி ரீதியாகவும், இன ரீதியாகவும் ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கும் அதேநேரத்தில், தொழிலாளர் ஒடுக்குமுறை என்பது எல்லா பக்கமும் ஒன்றாகத்தான் இருந்தது.

அதனாலதான் நாங்க ஜே.வி.பியிடம் போக வேண்டி வந்தது. பிறகு இனவாத ஒடுக்கு முறை வரும்போது எங்களுக்கு ஒரு சிந்தனை வருது. இதற்கு அங்கால ஒடுக்குமுறையில் ஒரு பரிணாமம் இருக்குத்தான் என்று. இன ஒடுக்குமுறை என்பது திடீரென வந்த ஒன்று இல்லைதானே. அதற்கு ஒரு பரிணாம வளர்ச்சி இருக்குதானே. தமிழ் தேசியத்தின் வளர்ச்சி என்பது திடீரென ஏற்பட்ட ஒன்று இல்லைதானே. அடிப்படைக் காரணங்கள் இருக்கு. அதற்கும் பரிணாம வளர்ச்சி ஒன்று இருக்கு. இனவாத ஒடுக்கு முறையால் தான் அது உற்பத்தி ஆகுது. வளருது. அப்ப நாங்க பார்க்கும்போது அது நியாயமாக எங்களுக்குப்படுது. தமிழரசு கட்சி மீதான விமர்சனங்கள் இருந்தாலும், தமிழ் மக்கள், முஸ்லிம் மக்கள், மலையக மக்கள் மீதான ஒடுக்குமுறை என்பது யதார்த்தம் தானே

தேசம்: அதை எப்படி feel பண்ணுகிறீர்கள்… எல்லைப்புறக் கிராமங்களை கைப்பற்றுவதால் இனக்கலவரங்கள் ஒரு விடயமாக இருந்திருக்கும், போலீஸ் ராணுவ கெடுபிடிகள் இருந்திருக்கும், அதில ஒன்றா தரப்படுத்தல் தொடர்பாகவும் பேசப்பட்டது. இளைஞர்கள் ஆயுத வன்முறையில் ஈடுபட்டதற்கு தரப்படுத்தல் முக்கிய காரணமாக இருந்தது. அது எவ்வாறான தாக்கத்தை கிழக்கு மாகாணத்தில் அல்லது உங்களில் ஏற்படுத்தியது?

அசோக்: தரப்படுத்தலுக்கு அரசியல்ரீதியாக வேற காரணங்கள் இருந்தது. தரப்படுத்தல் கிழக்கு மாகாண , மற்ற கிராமப்புற மாணவர்களுக்கு வாய்ப்பாக இருந்தது என்பது உண்மைதான். ஆனா, அது முழுத்தமிழ்ச் சமுகத்தின் கல்வி வளர்ச்சியில் தேக்க நிலையை உருவாக்கியது என்பதை காணத்தவறி விடுறம். பல்கலைக்கழகத்திற்கு எடுபடுவது மாத்திரம் முக்கியம் அல்ல. கல்வியின் திறன், ஆற்றல், கொள்ளளவு, ஆளுமை, வளர்ச்சி இவை எல்லாம் தமிழ் மாணவர்களுக்கு கிடைப்பதற்கான வழிமுறைகளை தமிழ்ப் பல்லைக்கழகங்கள் செய்யத்தவறி விட்டன. அதற்கான போதிய வளங்கள் இல்லை. இதற்கு இலங்கை அரசு முக்கிய காரணம். இது பற்றி நாம நேர்மையாக ஆராய்ய வேண்டும். சிங்கள பிரதேசங்களில் கிராமப்புற பகுதிகளில் இருந்து பல்லைக்கழகம் சென்று வெளியேறும் மாணவர்களின் அறிவார்ந்த வளர்ச்சி திறன், ஆற்றல் தமிழ் மாணவர்களிடம் இல்லாமல் போனதை நாம் எப்போதாவது கவனிச்சோமா?

சிங்கள கிராமப்புற மாணவர்களின் கல்வி வளர்ச்சியோடு, திறமையோடு ஒப்பிடும்போது, எமது கிராமப்புற மாணவர்கள் மிக பின்தங்கியவர்களாக இருக்கிறாங்க. பேரினவாத அரசுகள் பின்தங்கிய தமிழ் கிராமப்புற பாடசாலைகளுக்கான கல்வி வளர்ச்சிக்கான கட்டமைப்புக்களில் திட்டமிட்ட புறக்கணிப்புக்கள செய்து வருகிறதை நாம் கவனிக்க தவறிவிடுறம். ஒவ்வாரு வருடமும் இந்திய உயர் கல்வி பல்கலைக் கழகங்ளுக்கு பிஎச்டிக்கு நிறைய மாணவர்கள் போகிறாங்க. டெல்லி ஜேஎன்யு க்கு போன பலரை எனக்கு தெரியும். எங்கட ஆட்கள் என்றால் யாரும் பெரிதாய் இல்லை. என்ன காரணம் இதையெல்லாம் ஆராய்யவேணும்.

இனக்கலவரங்களின் தோற்றத்தின் பிண்னணியை ஆராய்ந்தால், அந்தந்த காலங்களில் ஆட்சி செய்த அரசின் இனவாதமும், திட்டமிட்ட செயலும் தெரியவரும். எந்தவொரு மக்கள் கூட்டமும் இனவாதிகளாக பிறப்பதில்லைத்தானே. அதிகார வர்க்கம் இனவாத சிந்தனைகளை விதைக்கிறது. தமிழ் அதிகார வர்க்கமும், சிங்கள அதிகார வர்க்கமும் விரும்பி இருந்தா, எங்கட தேசிய இன சிக்கல்களை எப்போ தீர்த்து இருக்க முடியும்தானே. இவங்களின்ர இருப்புக்கு முரண்பாடுகள் அவசியம் என்பது அவங்களுக்கு தெரியும்.
எனக்கு அரசுகளின் இனவாத செயற்பாடுகளில் முக்கிய காரணமாகபட்டது.

திட்டமிட்ட குடியேற்றத்திட்டங்கள்தான். பௌத்த மயமாக்கல். தமிழ்மக்களின்ர நிலத்தை பறிப்பது மாத்திரமல் தமிழ் மக்களின்ர உரிமைகளையும் சுதந்திரங்களையும் அந்த நிலத்திலிருந்து பறிப்பதுதான் இதன்ற நோக்கம். கந்தளாய்க் குடியேற்றத் திட்டம் கல்லோயாக் குடியேற்றத் திட்டம்
இவையெல்லாம் இந்த நோக்கத்தோடுதான் செய்யப்பட்டன.

இதைப்பற்றி புள்ளி விபரங்களோடு நிறையக் கதைக்கலாம். வி.நித்தியானந்தம் அவங்க இதைப்பற்றி நிறைய எழுதி இருக்காங்க. யாழ்ப்பாண யூனிவசிற்றில இருந்தவர். இப்ப நி யூசிலாந்து யுனிவசிற்றில இருக்கிறார். நாங்கள் எடுத்த உடனேயே தரப்படுத்தலை தானே பார்க்கிறோம்…

தேசம்: தரப்படுத்தல் யாழ்ப்பாணத்துக்கு வெளியில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை…

அசோக்: தரப்படுத்தல் என்பது உப காரணிதான். ஒரு தமிழ் தேசிய போக்கினுடைய வளர்ச்சிக்கும் வீக்கத்துக்கும் போராட்டத்தின் தொடக்கத்திற்கும் உந்து சக்தியாக இருந்தது தரப்படுத்தல்தான். அது ஒரு உப காரணி. அதற்கு முதல் பல்வேறு பிரச்சினைகள் இருந்தது. அரசியலமைப்புச் சட்டத்தில் சமஉரிமை இல்லாதது, சிங்கள குடியேற்றம், பௌத்த மயமாக்கல். தனிச்சிங்களச் சட்டம், புறக்கணிப்புக்கள் பல்வேறு பிரச்சினைகள் இருந்தது.

தேசம்: இதெல்லாம் நீங்கள் உணரக்கூடியதாக இருந்தது…

அசோக்: உணரக்கூடியதாக இருந்தது. அடுத்தது இந்த ஒடுக்குமுறை என்பது படுபயங்கரமாக இருந்தது. இரண்டு ஒடுக்குமுறைகள் இருந்தது. ஒன்று இன ரீதியான ஒடுக்குமுறை. அடுத்தது வர்க்க ரீதியான ஒடுக்குமுறை. தேசிய இனமாக ஒடுக்கப்படுகின்ற அதேநேரம் வர்க்க ரீதியாகவும் ஒடுக்குமுறை இருந்தது. அப்போதான் புளொட்டினுடைய தேசிய விடுதலைக்கு ஊடாக வர்க்கப் போராட்டம். வர்க்கப் போராட்டம் என்பது சகல மக்களுக்குமான விடுதலை. தேசிய விடுதலைப் போராட்டத்துக்காக ஒரு போராட்டத்தை நடத்திக் கொண்டு சிங்கள மக்களுடன் இணைந்து ஒரு வர்க்கப் போராட்டத்தை நடத்தல். ஒரு தமிழீழப் போராட்டம் என்பது தந்திரோபாயம். அதை வைத்துக்கொண்டு மூலோபாயத்தை நோக்கி போதல் என்பதுதான் புளொட்டினுடைய கோட்பாடாக இருந்தது.

அரசியல் கோட்பாடு எமக்கு உடன்பாடாக இருந்தது. இதப்பற்றி முன்ன கதைச்சி இருக்கம்.
அது சாத்தியமா சாத்தியம் இல்லையா என்பதை இப்ப நாங்கள் யோசிக்க வேண்டி இருக்கு. அந்த நேரம் சாத்தியமாக தான் தெரிந்தது. ஏனென்றால் ஜே.வி.பி எங்களுக்கு ஒரு உந்துதல் சக்தியாக இருந்தது தானே. அது தோல்வியடைந்தாலும் கூட, ஒரு ஆயுதப் போராட்டத்துக்கு ஊடாக வர்க்கப் போராட்டத்தை கொண்டு வரலாம் என்ற நம்பிக்கையை ஜே.வி.பி எங்களுக்குத் தந்தது.

தேசம்: இந்தக் காலகட்டத்தில்தான் நான் நினைக்கிறேன் 81 காலகட்டத்தில்தான் மாவட்ட சபை அறிமுகப்படுத்தப்பட்டது. அதாவது தமிழீழக் கோரிக்கையை 77 ஆம் ஆண்டு முன்வைத்த தமிழர் விடுதலைக் கூட்டணி அதற்குப் பிறகு அந்த கோரிக்கையில் இருந்து பின் வாங்குற ஒரு நிலைப்பாட்டை எடுத்து மாவட்ட சபையை ஏற்றுக்கொள்கின்ற நிலைக்கு வாறினம். மாவட்ட சபையை ஏற்றுக்கொள்கின்ற நிலையில் தான் யாழ்ப்பாணத்தில மாவட்ட சபைத் தேர்தலை ஒட்டி கலவரம் ஒன்று நடக்கிறது. அதை எப்படி நீங்கள் உணர்ந்தீர்கள்? கிழக்கு மாகாணத்தில் அது ஏதாவது தாக்கத்தை ஏற்படுத்தியிருந்ததா?

அசோக்: மாவட்ட சபை என்பது எந்தவிதமான பூரணமான தீர்வையும் தமிழ் மக்களுக்கு தரப்போவது இல்லை என்பதில் மிகக் கவனமாக இருந்தனாங்கள். மட்டக்களப்பிலும் தமிழர் விடுதலைக் கூட்டணி போன்ற ஆட்கள் மாவட்ட சபையை ஏற்றுக் கொண்டவர்கள் தானே. அபிவிருத்தி என்பது வேறு, அரசியல் விடுதலை உரிமை என்பது வேறு. மாவட்ட சபை என்பது எங்களுக்கு அபிவிருத்தி ரீதியான பிரயோசனங்களைத் தரலாமே, ஒழிய அரசியலுக்கான தீர்வாக மாவட்டசபை இருக்க இயலாது. அதில் நாங்கள் தெளிவாக இருந்தோம். மாவட்ட சபை என்பது தமிழ் மக்களுக்குரிய பிரச்சினையை தணிப்பதற்கான ஒரு உபாயமாக தான் அரசு கையாண்டது. ஒரு சமூகத்தின் அரசியல் விடுதலை அதன் சம உரிமை சுதந்திரம் இவைகளுக்கூடாகத்தான் புரண அபிவிருத்தி கிடைக்குமே தவிர இந்த அபிவருத்தியெல்லாம் ஒருவகை ஏமாற்று வேலதான்.

தேசம்: இந்த மாவட்ட சபையை கூட தர விரும்பாத ஒரு நிலையில்தான் அரசாங்கம் இருந்தது.

அசோக்: இலங்கை அரசியல் பாரளுமன்ற ஆட்சி அதிகாரம் இனவாதத்தினலாதான் கட்டமைக்கப்பட்டதுதானே. இதற்கு இனமுரண்பாட்டை கூர்மையாக்கல் அல்லது தக்க வைத்துக்கொள்ளல் அவசியம். அப்பதான் ஆட்சியை பிடிக்க முடியும். அதே நேரம் சர்வதேசத்திற்கு, இந்தியாவுக்கு இனமுரண்பாட்டை தணிப்பது போல பாவனையும் காட்டவேண்டும். மாவட்ட சபைக்கு எதிராக யாழ்ப்பாணத்தில் இருந்த தாக்கம் கிழக்கு மாகாணத்தில் இருக்கவில்லை. ஏனென்றால் ஆயுதப் போராட்டத்துக்குரிய தாக்கங்கள், சின்ன சின்ன வடிவங்கள், அமைப்புக்கள் யாழ்ப்பாணத்தில் தான் இருந்தது. அங்க உருவாகவில்லை.

தேசம்: அந்தக் குழப்பம் யாழ்ப்பாண நூலக எரிப்பு இதுகள் அவ்வளவு தூரம்….

அசோக்: யாழ்ப்பாண நூலக எரிப்பு பெரிய தாக்கத்தை கொடுத்தது. அது ஒரு பெரிய அதிர்ச்சியை கொடுத்தது. ஏனென்றால் நாங்கள் வாசகர் வட்டம், படிப்பு என்று இருந்தபடியால், நூலக எரிப்பு என்பது பெரிய தாக்கத்தை கொடுத்தது.

தேசம்: அதற்கு எதிரான ஊர்வலங்கள் ஏதாவது நடந்து இருக்கா.

அசோக்: அது பெருசா நடக்கல. கிழக்கில் பெருசா நடந்த மாதிரி தெரியல. நாங்க துண்டுப்பிரசுரம் அடிக்க நினைச்சம். முடியல்ல.

தேசம்: புளொட்டில் நீங்கள் இணைந்த பிறகு தான் துண்டுப் பிரசுரங்கள் அதுகளை விநியோகிக்கிறது அப்படியாக செயற்பட்டீர்கள். இதனால் என்னென்ன பிரச்சனைகளை எதிர்நோக்கினீர்கள் அந்த காலத்தில்?

அசோக்: பிரசுரம் தொடர்பாக பிறகு நான் கைது செய்யப்பட்டன். ஆரம்பத்தில் முதலாவது கைது, கல்முனையில் ஒரு சிங்கள முதலாளியினுடைய லாரி ஒன்று எரிக்கப்பட்டது. தொடர்பாக சந்தேகத்தின் பெயரில் புளொட் தோழர்கள் கைது செய்யப்பட்டவர்கள்.

அந்த நேரத்தில் நான் மட்டக்களப்பு மாவட்ட புளொட் அமைப்பாளராக இருந்தபடியால் கைது செய்யப்பட்டன். ஆனால் உண்மையில் அவங்களுக்கு அதோட சம்பந்தமில்லை. அரஸ்ட் பண்ணி கொஞ்ச காலம் வைத்திருந்த பிறகு பிணையில் விட்டவங்க. அந்த வழக்கில் அஸ்ரப் தான் பேசினவர். அதற்குப்பிறகு இன்னொரு சந்தர்ப்பத்தில் நான் கைது செய்யப்பட்டேன். சைன் வைக்க வேண்டும் எனக் கூறி விடுவிக்கப்பட்டன். நான் போலீசுக்கு போகாமல் விட்டுட்டேன். போகாமல் விட்டவுடனே நான் தேடப்பட்ட ஆள் ஆகிட்டேன். பிறகு என்னை அரஸ்ட் பண்ணிட்டாங்க. அரஸ்ட் பண்ணி என்னை கொண்டு போயிற்றாங்க. டி.ஐ.ஜி மகேந்திரன் தான் விசாரித்தவர். அது ஒரு சுவாரசியமான சம்பவம்

தேசம்: என்ன நடந்தது அதுல? மஹேந்திரன் பிற்காலத்தில் யாழ்ப்பாணத்தின் டி.ஐ.ஜி யாக இருந்தவர் என்று நினைக்கிறேன் யாழ்ப்பாணம் நூலகம் எரிக்கப்பட்ட சம்பவ காலத்தில் இருந்தவர் என நினைக்கிறேன்.

அசோக்: என்னுடைய பெயர் யோகன் கண்ணமுத்து தானே அப்ப கண்ணமுத்து என்றவுடன் அவர் நினைத்தார் ஆள் ஒரு பெரிய ஒரு சைசா உடம்பா இருப்பார் என்று. அவருக்கு தெரியாது நான் படித்துக் கொண்டிருக்கிறேன் என்று. அப்ப நூர்டீன்தான் என்னை அரஸ்ட் பண்ணினது. என்னை டி.ஐ.ஜி மஹேந்திரன் விசாரிப்பதற்காக அவரின் ஒபிசிக்கு கொண்டு போனாங்க… என்னை உள்ளுக்கு அனுப்பினதும். அவர் என்னை எதிர்பார்க்கவில்லை, இந்த தோற்றத்துடன் எதிர்பார்க்கவில்லை.

தேசம்: மாணவனை எதிர்பார்க்கவில்லை.. !

அசோக்: என்னை கொண்டு போன சிஐடி இன்ஸ்பெக்டர் , தம்பிராஜா எம்பியின் மகன். பெயர்
ஜெயக்குமார். எனக்கு நிறைய உதவி செய்தவங்க. அவர் வந்தவர். கூட்டிக் கொண்டு போன மூணு பேரையும் வெளியில போக சொல்லிப்போட்டு என்னைப் பார்த்தார். நான் கை கட்டிக்கொண்டு நின்றேன். என்னை சொன்னார் உட்கார சொல்லி. நான் உட்காரவில்லை. நான் பெரிய அப்பாவி மாதிரி சோகத்துடன் இருந்தன். ஆள் சொல்லிச்சு உட்கார சொல்லி.

கேட்டார் புளொட்டுக்கும் உனக்கும் என்ன உறவு என்று. நான் சொன்னேன் ஒரு தொடர்பும் இல்லை என்று. அப்ப வாசுதேவாவ எப்படி தெரியும்? நான் சொன்னேன், காந்தியத்தில் நான் வேலை செய்கிறேன் என்று. நான் படித்துக்கொண்டு, காந்தியம் சமூக சேவைகள் என்று ஈடுபடுகிறேன். நீ பொய் சொல்ல வேண்டாம் நீதான் மாவட்ட அமைப்பாளராக வேலை செய்கிறாய். ரிப்போர்ட் எல்லாம் வந்திருக்கு. நிறைய வன்செயல்களில் ஆட்கள் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள் அதுக்குப் பின்னாடி நீ இருக்கிறாய் என்று. நான் சொன்னேன், அதற்கும் எனக்கும் தொடர்பே இல்லை. நான் படித்துக் கொண்டிருக்கிறேன். நீங்கள் பிரின்ஸிப்பலிடம் கேட்டுப் பாருங்கள் என்று.

அப்ப கேட்டார் தமிழீழம் கிடைக்கும் என்று நீ நம்புறியா என்று. நான் சொன்னேன் எனக்கு அதை பற்றி ஒன்றுமே தெரியாது என்று. நான் காந்தியம் தான் என்று. தமிழீழம் கிடைக்கப்போவதில்லை வீணாக வாழ்க்கையை இழக்காமல் ஏதாவது தொடர்ந்து படி. அல்லது படித்து போட்டு வெளிநாட்டுக்கு போ. இனிமேல் இதில ஈடுபடக்கூடாது என்று போட்டு, இதுதான் கடைசி இனி ஏதாவது பிரச்சனை வந்தால் கடும் நடவடிக்கை எடுப்போம் என்று போட்டு, இவரை ரிலீஸ் பண்ணுங்க என்று சொல்லி அனுப்பிட்டார்.

அதோட என்னை விட்டாச்சு பிறகு. பிறகு என்ன நடந்தது என்று கேட்டால், போலீஸ் தெரியும் தானே, தொடர்ந்து கண்காணிப்பில் தான் நான் இருந்திருக்கிறேன். ஒரு நாள் என்ன நடந்தது என்றால், ஜே ஆர் ஜெயவர்த்தன வடகிழக்கு பிரதேசங்களுக்கு விஜயம் செய்வது தொடர்பாக வடகிழக்கில் மாணவர் பகிஷ்கரிப்பு போராட்டம் ஒன்று நடந்தது. அதுல யாழ்ப்பாணத்தில ஈபி ஆர்எல் எப் GUES செய்தது. மட்டக்களப்பில் நாங்கள் பொறுப்பெடுத்தோம்.

வடகிழக்கில் பாடசாலைகளை பகிஷ்கரிக்க சொல்லி எல்லாம் ஒழுங்கமைத்தாச்சு. அது தொடர்பா நோட்டீஸ் அடிக்கிறதுக்கு மட்டக்களப்பு ராஜன் அச்சகத்துக்கு நான் போனேன். அங்க ஓடர் கொடுத்திட்டேன் முதலே நோட்டீஸ் எல்லாம் அடிக்கிறதுக்கு. அண்டைக்கு போய் நோட்டீஸ் எடுத்து ரோட்ல வரும்போது அரஸ்ட் பண்ணுப்படுறேன் கையும் மெய்யுமா. அரஸ்ட் பண்ணு பட்டதும் தெரியும்தானே, ஒன்றுமே செய்ய இயலாது ஏனென்றால் கையும் மெய்யுமாக அரஸ்ட் பண்ணபடுறேன். நாங்க நோட்டிசை தமிழ் ஈழ விடுதலைக் கழகம் என்ற பெயரிலதான் அச்சிட்டிருந்தோம்.

தேசம்: என்ன காரணம்…

அசோக்: அது ஒரு அபத்தமாக காரணம். தமிழ் ஈழ மக்கள் விடுதலைக் கழகம் அண்டகிரவுண்ட் என்றும், தமிழ் ஈழ விடுதலைக் கழகம் அதனோட ஓப்பின் வொடி என்றுதான் நாங்க அந்த நேரத்தில இயங்கினம். வெகுஜன வேலைகள் எல்லாம் இதன் பெயரிலதான் செய்தோம். ஆன பொலிசிக்கு தெரியும் ஓரே ஆட்கள்தான் என்று. பெயரில் ஒரு சொல்தான் வித்தியாசம். சாதாரணமாகவே விளங்கும் இரண்டும் ஒன்றுதான் என்று.

அரஸ்ட் பண்ணின உடனே என்னை விசாரித்தது நூர்டீன். அவருக்கு இயக்கங்கள் பற்றி சகலதும் தெரிந்திருந்தது. நாங்கதான் முட்டாள்தனமாக இயக்கம் நடாத்தி இருக்கம்.

அந்த நேரத்தில புளொட்டின் தலைமையிடம் அண்டகிரவுண்ட் அமைப்பின் வடிவம், வெகுஜன அமைப்பின் வடிவம் பற்றிய எந்த அரசியல் புரிதல்களும் இருக்கல்ல. இப்ப நினைக்கும்போது சிறுபிள்ளத்தனமாக இவைகள் தெரிகின்றன. பார்த்தீங்க என்றா அண்டகிரவுன்ட அமைப்பின் பெயர் தமிழ் ஈழமக்கள் விடுதலைக் கழகம். வெகுஜன அமைப்பின் பெயர் தமிழ் ஈழ விடுதலைக் கழகம் யோசித்துப் பாருங்க, இப்படி யாரும் பெயர் வைப்பாங்களா?

தேசம்: அந்த நேரம் புளொட்டின் தலைமை என்று யாரை சொல்கிறீர்ங்க?

அசோக்: உமா மகேஸ்வரன், சந்ததியார், சுந்தரம் போன்றவங்க…

தேசம்: பிறகு என்ன நடந்தது…?

பிறகு, நூர்டீன் என்னை கடுமையாக விசாரிக்க முன்னரே, என்னை சிஐடி அரஸ்ட் பண்ணினபடியால், அவங்க என்னை விசாரிக்க பொறுப்பெடுத்தாங்க. ஒரு அடி கூட விழல.

சிஐடி இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் நல்லா கெல்ப் பண்ணினார். அடுத்த நாள் வாசுதேவாவையும் அரஸ்ட் பண்ணிட்டாங்க.

விசாரித்த பிறகு, கோர்ட்டுக்கு கொண்டு போனாங்க. பிறகு ரிமாண்ட் ஒரு மூன்று மாதம் உள்ளுக்கு இருந்தன்.

வாசுதேவாவை ஒரு மாதத்தில விட்டிட்டாங்க. பெட்றிக்சும், பேரின்பநாயகம் என்று சொல்லி யாழ்ப்பாணத்திலிருந்து வந்த லோயர் இரண்டு பேரும்தான் வாதாடுனவங்க. என்னை விடுவிக்கக்கோரி மாணவர் பகிஷ்கரிப்பு போராட்டம் ஊர்வலம் எல்லாம் நடந்தது. அதற்குப்பிறகு, பிணையில் வந்தாலும் கூட தொடர்ந்து சயின் பண்ண வேணும் நான். சைன் பண்றதால என்ன பிரச்சனை என்றால் ஏதாவது பிரச்சனை நடந்தால் என்னை தான் அரஸ்ட் பண்ணறது. அடுத்த தெரியும்தானே. போலீசில் பிடிபட்டால்… அதால நான் தலைமறைவு ஆகிட்டேன். அதற்குப் பிறகு தேடப்படும் ஆளாக ஆக்கப்பட்டேன்.

தேசம்: 82 ஆண்டுக்கு பிறகு நீங்கள் தேடப்பட்ட ஆளா ஆக்கப்பட்டுட்டீங்க. உங்களுடைய கைது தொடர்பா பத்திரிகைகளிலும் வந்தது என்று நினைக்கிறேன்

அசோக்: ஓம் எல்லா பத்திரிகைகளிலும் வந்தது.

தேசம்: அதற்குப் பிறகு உங்களுடைய தலைமறைவுவுக்கு பின் செயற்பாடுகள் எப்படி இருந்தது.

அசோக்: தலைமறைவாக இருந்துகொண்டு நிறைய தோழர்களை வைத்துதான் செயற்பட்டனான். வரதன் சக்திவேல், பேரின்பம், தில்லைநாதன், குணம், பாக்கி மாமா, ஜீவா நிறைய தோழர்கள் இருந்தவர்கள்.

தேசம்: அப்ப இயக்க முரண்பாடுகள் கிழக்கில பெருசா வரேல.

அசோக்: அந்த நேரம் வரேல. மிக தோழமையாக தான் நாங்கள் இருந்தோம். மட்டக்களப்பு ஜெயில் விரேக் வந்து… அதைப் பற்றி கதைக்கலாமா?

தேசம்: அதை அடுத்த பாகத்தில் பார்ப்போம். இந்தக் காலகட்டத்தில் நான் நினைக்கிறேன் வடக்கில் குறிப்பாக யாழ்ப்பாணத்தில இயக்க முரண்பாடுகள் பாரிய பிரச்சனையாக வந்து கொண்டிருக்கின்றது என்று.

அசோக்: அந்த டைம்ல அதற்கு முதலில் சுந்தரம், இறைகுமாரன், உமைகுமாரன் படுகொலை எல்லாம் நடந்திட்டு தானே.

தேசம்: அது சம்பந்தமா என்ன அறிந்து இருந்தீர்கள் அந்த நேரம். நீங்கள் சேர முதலே அது நடந்து விட்டது என்று நினைக்கிறேன்

அசோக்: இல்லை சுந்தரம் படுகொலை 82இல் தானே நடக்குது.

தேசம்: சுந்தரத்திற்கும் உங்களுக்குமான உறவு எப்படி இருந்தது?

அசோக்: பெரிதாக நெருக்கமான உறவு ஏற் படவாய்ப்பிருக்கவில்லை. இரண்டு தடவைகள் சந்தித்திருக்கிறன். புலிகள் சுந்தரத்தை சுட்ட போது புலிகள் மீது எங்களுக்கு கடும் ஆத்திரம் வந்தது. இயல்பாகவே ஒரு ஆத்திரம் வரும் தானே.

தேசம்: அதுதான் முதலாவது சகோதர படுகொலை…

அசோக்: ஓம், ஆனால் அந்த படுகொலை மட்டக்களப்பில் ஒரு முரண்பாட்டை ஏற்படுத்தவில்லை. எங்களுக்கு அதிருப்தி இருந்தது புலிகள் மீது. மட்டக்களப்பு புலித் தோழர்களுடன் கதைத்தால் அவங்களுக்கும் இதுக்கும் தொடர்பில்லை. அவங்களுக்கும் யாழ்ப்பாணத்தில் நடக்கிற எந்த ஒரு விஷயத்துக்கும் தொடர்பில்லை அப்ப முரண்பட்டும் பிரயோசனமில்லை தானே.

தேசம்: மட்டக்களப்புக்கு யாழ்ப்பாணத்துக்கும் அடுத்த சிக்கல் என்னவென்றால் நிலத் தொடர்போ, நேரடி தொடர்போ இல்லை.

அசோக்: அப்படித்தான் அன்றைய நிலமை இருந்தது. அடுத்தது அங்கு வேலை செய்த தோழர்கள் எல்லாருமே, அப்ப ஈரோசில வேலை செய்த ரமேஷ் என்ற தோழர், ஈபிஆர்எல்எஃப் பில் வேலை செய்த தோழர்கள் பாலா, சிவலிங்கம், கணேஸ், சின்னத்துரை நிறைய தோழர்கள் பெயர்கள் நான் மறந்துட்டேன். எல்லோரும் நாங்கள் ஃபிரண்டா இருந்த ஆட்கள் தானே. ஈபிஆர்எல்எஃப் பில் சின்னத்துரை என்ற ஒரு தோழர் அவர் என்ற பெஸ்ட் பிரெண்ட்.

தேசம்: இதையெல்லாம் பார்க்கும்போது யாழ்ப்பாணத்துக்கும் மட்டகளப்புக்கும் இடையில பெரிய ஒரு கலாச்சார வேறுபாடு ஒன்றும் இருந்திருக்கு

அசோக்: கலாச்சார வேறுபாடு என்று சொல்ல முடியாது. யாழ்ப்பாணத்தில் நடந்த பிரச்சனை, நான் என்ன நினைக்கிறேன் என்றால், இயக்கங்களுக்குள்ள அரசியல் கல்வி இல்லை. ஒரு அரசியல் கல்வி ஊட்டப்பட்டு இருந்தால் ஒரே நோக்கத்துக்காக…

தேசம்: சித்தாந்த அரசியல் கலாச்சாரம் ஒன்று இருக்கேல…

அசோக்: இருக்கேல. அரசியல் கல்வி ஊட்டப்பட்டு இருந்தால் இந்த இயக்க முரண்பாடுகள் வந்திருக்காது. ஒரே நோக்கத்துக்காக, ஒரே போராட்டத்துக்காக, ஒரே கொள்கைக்காக நிக்கிறம் என்ற உணர்வு வந்திருக்கும். மத்தியதர வர்க்கத்திற்குரிய போட்டி, பொறாமை, அதிகார ஆசை இவை எல்லாம் அரசியல் கல்வி, மக்கள் மயப்பட்ட செயற்பாடு சிந்தனை முலம்தான் இல்லாமல் போகும். 83 ஜூலை கலவரத்துக்கு பிறகுதான் யாழ்ப்பாணத்தில நாங்கள் வகுப்புகள் எடுக்கிறோம். சம ணர் குளத்தில் நடந்த வகுப்புகள் ஒன்றுக்குமே யாழ்ப்பாணத்திலிருந்து தோழர்கள் வந்தது குறைவு. நான் அறிய யாருமே வந்ததில்லை. பொன்னுத்துரை தோழர் மாத்திரம் வந்து போவார். வேறு தோழர்கள் வந்ததில்லை.

தேசம்: யாழ்ப்பாணத்தில நான் நினைக்கிறேன் அந்த காலகட்டத்திலேயே இங்க வந்து யுஎன்பி செயற்பாட்டாளரைக் கொலை செய்தது மாதிரி யாழ்ப்பாணத்திலும் சில கொலைகள் நடந்திருக்கு என்று நினைக்கிறேன் ஐக்கியதேசிய கட்சி உறுப்பினர் தியாகராஜா…

அசோக்: மட்டக்களப்பில் நடந்த கொலைகளை எங்களால நிறுத்த முடிந்தது. நாங்கள் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. மாலா ராமச்சந்திரன் யு என் பி அமைப்பாளராக இருந்தாலும்கூட எங்களுக்கு அந்த கொலையை ஏற்றுக் கொள்ளும் மனநிலை இருக்கல்ல. கொலை, தனிநபர் பயங்கரவாதம் என்பது எப்பவுமே விடுதலைக்கு சாத்தியமில்லை.

தேசம்: துரையப்பா படுகொலையை நீங்கள் எப்படி பார்த்தீர்கள் அந்த நேரம்..

அசோக்: சுதந்திரன் பத்திரிகைக்கு ஊடாக அவரைப் பற்றி மோசமான பிம்பம்தான் கட்டமைக்கப்பட்டு இருந்தது. துரையப்பா அவர் தொடர்பாக பொசிட்டிவான விடயங்கள் இருக்கு. அதை ஏற்றுக் கொள்கிற அதே நேரம், அவர் தொடர்பான நெகட்டிவான விமர்சனங்களையும் நாங்கள் கவனத்தில் எடுக்கத்தான் வேண்டும். அதுக்காக படுகொலை என்பது பிழை. ஆனால் அவரை பிழையற்ற நபராக புனிதராக கட்டமைக்கும் போக்கு ஒன்று இருக்குத் தானே அது பிழை.

ராஜன் செல்வநாயகம் மட்டக்களப்பில் இருந்தவர். அவரும் எஸ்எல்ஃப் பி இல இருந்தவர். துரையப்பா மாதிரிதான் அவர் அபிவிருத்தி வேலை செய்தவர். தமிழர் விடுதலைக் கூட்டணி அதன்ர அரசியல் எல்லாத்திற்கும் எதிரான ஆள். அதே நேரம் விடுதலை இயக்கங்களுக்கு நிறைய சப்போர்ட் பண்ணினவர். ஒரு தடவை பொதுக்கூட்டம் நடத்த எங்களுக்கு பொலிஸ் பெமிசன் தரல்ல. ராஜன் செல்வநாயகம்தான் எடுத்துத் தந்தவர். மாலா ராமச்சந்திரன் படுகொலை செய்யப்படாமல் இருந்தால் அவரும் இயக்கங்களுக்கு சப்போர்ட் பண்ணி இருப்பார். அதால தான் தனிமனித பயங்கரவாதத்தை, கொலைகளை நாங்க எதிர்த்தம். நாக படை உருவாகியிருந்தால் யாழ்ப்பாணம் மாதிரி தனிநபர் பயங்கரவாதம், கொலைக் கலாச்சாரம் உருவாகியிருக்கும். கண்டகண்ட முழுப்பேரையும் எதிரிகளாக்கி சுட்டு இருப்பார்கள். அதே நேரம் ராஜன் செல்வநாயகம் போல துரையப்பா இருக்கல்லதானே.

தேசம்: துரையப்பா செய்வதற்கான சந்தர்ப்பம் கொடுக்கப்படவில்லை. தமிழர் விடுதலைக் கூட்டணி அவரை ஒரு எதிரியாகத் தானே காட்ட முற்பட்டது.

அசோக்: எப்பவுமே அரசியல் இருத்தலுக்கு இலங்கை அரசிற்கு தமிழர்களை எதிரிகளாக்குவது போல, தமிழரசுக்கட்சிக்கு, கூட்டணிக்கு எதிரிகளை கட்டமைக்கவேண்டிய அவசியம் இருக்கு. அதற்கான சந்தர்ப்பங்களை துரையப்பா போன்றவங்க வழங்கியது அக்காலங்களில் இவர்களுக்கு சாதகமாக போய்விட்டது.

தேசம்: இயக்கங்களின் மந்தமான ஒரு வளர்ச்சி, இவ்வாறான ஒரு போக்குத்தான் 83 ஜூலை வரைக்கும் தொடர்ந்து கொண்டிருந்ததா?

அசோக்: 83 ஜூலை வரை எல்லா அமைப்புகளும் மந்தமான போக்கா, பெரிய வளர்ச்சி இருக்கல்ல.
புளொட் சித்தாந்த ரீதியாக வளர்ந்த தோழர்களை கொண்டிருந்த போதிலும், ஒழுங்கான கட்டமைப்பு இருக்கல்ல. நான் நினைக்கிறேன் ஒழுங்கமைக்கப்பட்ட அமைப்பாக அந்த காலகட்டத்தில் இருந்தது. ஈ.பி.ஆர்.எல்.எஃப் மாத்திரம்தான் என்று… ஈபிஆர்எல்எவ் இல் அரசியல் ரீதியான வளர்க்கப்பட்ட தோழர்கள் நிறைய பேர் இருந்தார்கள். ஓரளவு சித்தாந்த ரீதியாக வளர்க்கப்பட்ட அமைப்பாக, ஒரு கட்டமைப்பை கொண்டு ஈ.பி.ஆர்எல்எஃப் இருந்தது. அது வேறு எந்த அமைப்பிலும் இருக்கவில்லை.

தேசம்: ஆரம்ப காலத்தில் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் தான் ஆகக்கூடுதலான உறுப்பினர்களைக் கொண்ட அமைப்பாக இருந்தது. விடுதலைப்புலிகளை காட்டிலும் பன்மடங்கு. இந்த உறுப்பினர்கள் பெரும்பாலும் எந்த பகுதிகளைச் சேர்ந்தவர்கள் அல்லது இது இந்த வீக்கம் 83 ஜூலைக் பிறகுதான் வருதா அல்லது அதற்கு முதலே தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்துக்குள்ள கூடுதலான நபர்கள் உள்வாங்கப்பட்டு விட்டார்களா?

அசோக்: 83 ஜூலைக் கலவரத்திற்கு முற்பாடு புளொட்டுக்குள்ள உள்வாங்கப்பட்ட தோழர்கள் முழுப்பேரும் அரசியல் சித்தாந்த ரீதியாக வளர்க்கப்பட்டவர்கள். ஏனென்றால் பாசறை நடத்தப்பட்டது .யாழ்ப்பாணம் தவிர்ந்த எல்லா இடங்களிலும் பாசறை நடத்தப்பட்டது. அடுத்தது அவர்கள் உழைக்கும் வர்க்கத்தில் இருந்து வந்தாங்க. வடக்குக்கு அங்கால விவசாய குடும்பங்களாக , கடல்தொழிலாளர்கள் குடும்பங்களாக, தொழிலாள குடும்பங்களாக. அல்லது மத்தியதர வர்க்கமாக இருந்தாலும், உழைக்கின்ற சமூகத்தினுடைய அபிலாசைகளையும், குணாதிசயங்களையும் கொண்டிருந்தாங்க. நிறைய தோழர்கள் இருந்தாங்க. 83 ஜூலைக் பிறகுதான் எல்லா இயக்கங்களிலும் வீக்கம் ஏற்படுது. புளொட்டிலும் அப்படித்தான். இலங்கை அரசின் பேரினவாத செயல்களினால், இனக்கலவரத்தால் உணர்ச்சி கொண்ட, பாதிக்கப்பட்ட பலரும் இயக்கங்களில் சேருராங்க. எல்லா மாவட்டங்களிலிருந்தும். கூடுதலா புளொட்டில் யாழ்ப்பாணத்திற்கு வெளியேதான் கூட தோழர்கள் இருந்தாங்க. பெரும்பான்மை தோழர்கள் இப்படித்தான் வந்தவங்க. ஆனால் பின்தளத்தில் இவங்களுக்கு அரசியல் கல்வி ஊட்டப் பட்டது. புளொட்டில் அரசியல் கல்விக்காக, அரசியல் சமூக விஞ்ஞானக் கல்லூரி ஒன்று சென்னையில T3S என்ற பெயரில் தொடங்கப்பட்டது. மற்ற இயக்கங்கள் எப்படியோ தெரியல்ல.