கட்டுரைகள்

கட்டுரைகள்

கட்டுரைகளும் விவாதங்களும்

அறியாப் பருவ பெண் பிள்ளையை பாலியல் இச்சைக்கு உட்படுத்திய லண்டன் கொலின்டேல் ஆனந்தம் கிரியேசன் நிறுவனரின் குற்றம் நிரூபணமானது!

அறியாப் பருவத்தில் பெண் பிள்ளையை தன் பாலியல் இச்சைக்கு உட்படுத்திய தமிழ் வர்த்தகப் பிரமுகருக்கு எதிரான பாலியல் இம்சைக் குற்றச்சாட்டு நீதிமன்றில் நிரூபிக்கப்பட்டு உள்ளது. இவர் குறைந்தது ஓரு பெண் பிள்ளையையாவது பாலியல் இம்சைக்கு உட்படுத்தியது தற்போது லண்டன் வூட் கிரீன் கிரவுண் நீதிமன்றில் நிரூபிக்கப்பட்டு உள்ளது. இவருக்கு எதிரான இவ்வழக்கு நவம்பர் 28 முதல் ஏழு வேலை நாட்களுக்கு வூட் கிரீன் கிரவுண் நீதிமன்றில் விசாரிக்கப்பட்டு நிரூபிக்கப்பட்டு உள்ளது. தற்போது குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளதாகவும் தண்டனைக் காலம் அடுத் அமர்வில் ஜனவரி 3 2023இல் தீர்மானிக்கப்படும் எனவும் மெற் பொலிஸார் தேசம்நெற்க்கு தெரிவித்தனர்.

லண்டனின் வசதிபடைத்த பகுதிகளில் ஒன்றான ஹரோ உள்ளுராட்சிப் பிரிவுக்குள் கொலின்டேல் பகுதி வருகின்றது. இப்பகுதியில் இளையவர்களுக்கான இசை, நடனம் அவற்றை அரங்கேற்றுவது போன் கலைத்துறைசார்ந்த தன்னை நிலை நிறுத்திக் கொண்ட பிரமுகர் பிரேமகுமார் ஆனந்தராஜா. இவர் கலை கலாச்சாரத்தை வளர்க்கின்றேன் என்ற பெயரில் ஆனந்தம் கிரியேசன் யுகே என்ற நிகழ்வு ஓழங்கமைப்பு நிறுவனத்தை நடத்தி வந்தவர். இந்த பிரேமகுமார் ஆனந்தராஜா என்ற இந்நபரே தற்போது பெண் குழந்தை மீது பாலியல் இச்சையோடு நடந்துகொண்டமை நிரூபிக்கப்பட்டு உள்ளது. இந்த ஆனந்தம் கிரியேசன் யூகே 2015இல் யூரியூப்பில் சில கலை நிகழ்வுகளைப் பதிவு செய்துள்ளது.

இச்சம்பவம் பற்றி பிரேமகுமார் ஆனந்தராஜாவின் குடும்ப நண்பர் தேசம்நெற்க்கு தெரிவிக்கையில் இவ்வாறான ஒரு கீழ்த்தரமான மனநிலை கொண்ட ஒருவரோடு தாங்கள் குடும்ப நண்பராக இருந்தது தற்போது நினைக்கின்ற போது அருவருப்பாக உணர்வதாகத் தெரிவித்தார். “எனக்கும் பெண் பிள்ளைகள் இருக்கின்றனர். அவர்களோடும் இவர் பழகி உள்ளார். ஆனால் நாங்கள் ஒரு போதும் யாருடனும் பிள்ளைகளைத் தனிய அனுமதிப்பதில்லை” என்றும் “பிரேம் இம்சைக்கு உட்படுத்தியதாக அறியவருபவர்கள் இவருடைய நண்பர்களின் குழந்தைகளே” என்றும் மிகுந்த கோபத்தோடு அவர் பதிலளித்தார். “பிரேம் தன்னுடைய குடும்பத்துக்கும் எங்களைப் போன்ற நண்பர்களுக்கும் மன்னிக்க முடியாத துரோகத்தை இழைத்துள்ளார்” என வாரத்தைகள் தடம்புரள சினத்தோடு தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

யாழ்ப்பாணம் புங்குடு தீவைப் பூர்வீகமாகக் கொண்ட பிரேமகுமார் ஆனந்தராஜா 1961 பிறந்தவர் யாழ் இந்துக் கல்லூரியின் பழைய மாணவர். தற்போது 61வது வயதையெட்டுபவர். இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட மலேசியப் பெண்ணை 1990க்களில் மணந்தவர். பதின்ம வயதைக் கடந்த கலைத்துறையில் ஆர்வமுள்ள இரு ஆண் குழந்தைகளின் தந்தை. இவருக்கு கொலின்டேலில் கடையும் உள்ளது. இரு சகோதரர்கள் மூன்று சகோதரிகள் என்று அவர்களும் கொலிடேலிலும் லண்டனின் ஏனைய பாகங்களிலும் வர்த்தக நிறுவனங்களைக் கொண்டுள்ளவர்கள்.

பிரேமகுமார் ஆனந்தராஜாவின் தீயசெயல் அவரைச் சுற்றியுள்ள அனைவருக்கும் நெருக்கடியையும் அவருடைய மனைவி பிள்ளைகளுக்கு மிகுந்த அவமானத்தையும் ஏற்படுத்தி இருப்பதாக பிரேமகுமார் ஆனந்தராஜாவின் மற்றுமொரு நண்பர் தேசம்நெற்க்கு தெரிவித்தார். அவருடைய ஒரு மகளும் வேறொருவரால் பாலியல் துஸ்பிரயோகத்துக்கு உள்ளாகி இன்றும் மனவேதனையில் இருப்பவர். பிரேம் இப்படிப்பட்ட ஒருவன் என்ற சந்தேகம் முன்னம் உங்களுக்கு இருந்ததா என்று கேட்டபோது, “அவ்வாறன ஒருவன் என்று எந்த சந்தேசமும் தனக்கு ஏற்பட்டதில்லை” என அவர் தெரிவித்தார். பாதிக்கப்பட்ட பிள்ளைகளை நான் எண்ணி வருந்துகிறேன். அதேநேரம் அவன் ஏன் இப்படி நடந்துகொண்டான் என்று எண்ணும் போது எனக்கு மிக வேதனையாக இருக்கின்றது” என்றார். “அவன் தன் பிள்ளைகளின் எதிர்காலத்தையும் சேர்த்து நாசமாக்கிவிட்டான்” என்று மிகவும் மனம் புலங்கினார்.

பிரேமகுமார் ஆனந்தராஜாவின் இச்செயல் தமிழ் சமூகத்திற்குள் மிகுந்த அதிர்வலையை ஏற்படுத்தும் என்பதில் ஆச்சரியமில்லை. பெரும்பாலும் பெண் குழந்தைகள் மீதான பாலியல் இம்சைகள் குடும்ப உறவுகள் நட்புகளினாலேயே ஏற்படுத்தப்படுகின்றது என்ற உண்மையை இச்சம்பவம் மேலும் ஒருமுறை உறுதிப்படுத்தி இருக்கின்றது. தமிழ் சமூகங்களினுள் இவ்வாறான பல சம்பவங்கள் பரவலாக இடம்பெற்ற போதும் இவ்வாறான சம்பவங்கள் அக்குடும்பங்களின் கதவுகளைத் தாண்டி வெளியே வருவதில்லை என்கிறார் மருத்துவ கலாநிதி ஆர் ராமநாதன்.

பிரேமகுமார் ஆனந்தராஜாவின் மூத்த மகன் தனது முகநூலில் ”always my legend“ என்று தந்தையுடன் தான் நிற்கின்ற படத்தை போட்டு பதிவு செய்திருந்தார். அந்த எண்ணங்கள் அத்தனையும் சுக்குநூறாகும் விதத்தில் பிரேமகுமார் ஆனந்தராஜாவின் செயல்கள் அமைந்துவிட்டது. “பிரேமகுமார் ஆனந்தராஜா இன்னும் எத்தனை குழந்தைகளை இச்சைக்கு உள்ளாக்கி இருப்பார் என்பது அவருக்கு மட்டுமே வெளிச்சம்” என்கிறார் மற்றுமொரு நண்பர். தன்னுடைய மகளின் அரங்கேற்றத்தைக்கூட பிரேமே ஏற்பாடு செய்து ஒத்துழைத்;ததாகவும் அவர் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில் “குழந்தைகள் வளர்ந்து எவ்வளவு மனவுளைச்சலையும் வேதனையையும் தமது வாழ்நாள் முழவதும் சுமப்பார்கள் என்பது மிகுந்த வலியை அவர்களிடம் ஏற்படுத்துவதுடன் சமூகம் பற்றிய அவநம்பிக்கையையும் ஏற்படுத்திவடும்” என்றார். “பிரேமகுமார் ஆனந்தராஜா மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டது அவர்களுடைய ரணத்தை ஓரளவு ஆற்றும்” என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

தங்களுடைய வலியைக் கடந்து இந்தக் குற்றத்தை நீதிமன்றில் நிரூபிக்க அப்பிள்ளைகளும் குடும்பத்தினரும் எடுத்த முயற்சிக்கு தமிழ் சமூகம் நிச்சயம் தலைவணங்க வேண்டும் என ஈலிங் ஆலய செயற்குழு உறுப்பினர் தேசம்நெற்க்குத் தெரிவித்தார். மீண்டும் இவ்வாறாண நிகழ்வுகள் நடந்துவிடாமல் இருக்க இவ்வாறான வழக்குகளின் தீர்ப்புகள் மிக அவசியமானது என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார். பிரேமகுமார் அப்பகுதிகளில் உள்ள ஆலயங்களுக்கு தவறாமல் செல்பவர் என்றும் தெரியவருகின்றது.

இந்த அநீதி லண்டனில் இழைக்கப்பட்டதால் அதற்கான தண்டனையை சட்டமும் காவல்துறையும் உறுதிப்படுத்தி இருக்கின்றது. ஆனால் தாயக மண்ணில் மாணவிகளைப் பாலியல் துஸ்பிரயோகம் செய்யும் விரிவுரையாளர்கள், பேராசிரியர்கள் இன்னமும் சுத்தமான சுவாமிப்பிள்ளைகளாக யாழ் மற்றும் வவுனியா பல்கலைக்கழக வளாகங்களில் வலம்வருகின்றார்கள். அவர்கள் போடும் தேசியவாதச் சாயம் கலர அவர்கள் அம்மணமாகும் நாள் விரைவில் ஏற்படும்.

FIFA கிண்ணத்தின் மீது உப்பைத் தூவுவது போல சைகை செய்த சமையல் கலை நிபுணர் – விசாரணைகளை ஆரம்பிக்கிறது FIFA !

உலகக் கிண்ண கால்பந்து இறுதியாட்டத்தில் துருக்கியேவின் பிரபல சமையல்கலை நிபுணர் நுஸ்ரெத் கோக்கே  அனுமதியின்றி மைதானம் நுழைந்து உலகக்கிண்ணத்தை கையில் ஏந்தி முத்தமிட்டமை தொடர்பில் விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

50 மில்லியன் மக்கள் இன்ஸ்ட்ராகிராமில் பின்தொடரும் சமையல்கலை நிபுணர் நுஸ்ரெத் கோக்கேவின் குறித்த செய்கைக்கு எதிராக பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டிருந்தது.

இந்தநிலையில், பிபா எனப்படும் சர்வதேச உதைபந்தாட்ட சம்மேளனத்தின் விதிமுறைகளை மீறியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

கால்பந்து இறுதிப்போட்டியின் பின் “சால்ட் பே (Salt Bae)” எனப்படும் துருக்கியேவின் பிரபல சமையல்கலை நிபுணர் நுஸ்ரெத் கோக்கே  திடீரென மைதானம் நுழைந்ததால் மெஸ்ஸி உள்ளிட்ட அர்ஜென்டினா அணி வீரர்கள் அனைவரும் அதிர்ச்சியடைந்தனர்.

கால்பந்தாட்ட உலகக் கிண்ணத்தைத் தனது கைகளில் ஏந்தி அதற்கு முத்தமிட்டதோடு கிண்ணத்தின் மீது உப்பைத் தூவுவதுபோல வழக்கமான தமது சைகையைச் செய்துள்ளார்.

அர்ஜென்டினா அணி வீரர் ஒருவரின் பதக்கத்தை தமது பற்களால் கடித்து புகைப்படம் எடுத்துள்ளார்.

அவரது குறித்த செய்கைகள் பிபா விதிமுறைகளை மீறியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

உலகக் கிண்ணத்தை வென்றவர்கள், பிபா நிறைவேற்று அதிகாரிகள் மற்றும் போட்டியை ஏற்று நடத்தும் நாட்டின் தலைவர்கள் மட்டுமே கிண்ணத்தைக் கைகளில் ஏந்த முடியும் என்பது பிபாவின் விதிமுறையாக உள்ளது.

இந்த நிலையில், குறித்த விதிமுறைகளை மீறியதாக சமையல்கலை நிபுணர் நுஸ்ரெத் கோக்கே மீது விசாரணைகளை முன்னெடுக்க பிபா தீர்மானித்துள்ளது.

ஆரம்பகட்டமாக, நுஸ்ரெத்தைத் மைதானத்திற்குள் நுழைய யார் அனுமதி கொடுத்தது என்பது தொடர்பில் விசாரணைகள் நடைபெறுகின்றன.

ஐ.பி.எல் வரலாற்றில் அதிக விலைக்கு ஏலம் போன சாம் கர்ரன் !

16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்களின் மினி ஏலம் கேரள மாநிலம் கொச்சியில் இன்று நடைபெறுகிறது.

இதில், இங்கிலாந்தின் இளம் வீரர் சாம் கர்ரனை வாங்க சென்னை சூப்பர் கிங்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையே கடும் போட்டி நடைபெற்றது. இடையில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகளும் போட்டி போட்டு ஏலம் கேட்டன. இறுதியாக, சாம் கர்ரனை பஞ்சாப் கிங்ஸ் அணி ரூ.18.25 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது. இதேபோல் ஆஸ்திரேலிய வீரர் கேமரூன் கிரீனை வாங்கவும் கடும் போட்டி இருந்தது. இறுதியில் அவரை ரூ.17.50 கோடிக்கு மும்பை இந்தியன்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது. சாம் கர்ரன் மற்றும் கேமரூன் கிரீன் இருவரும் இதுவரை நடந்த ஐபிஎல் ஏலத்திலேயே அதிக தொகைக்கு ஏலம் போன வீரர்கள் என்ற சாதனையை படைத்துள்ளனர்.

சாம் கர்ரன் – ரூ.18.50 (பஞ்சாப் கிங்ஸ்) கேமரூன் கிரீன் – ரூ.17.50 (மும்பை இந்தியன்ஸ்) பென் ஸ்டோக்ஸ் – ரூ.16.25 (சென்னை சூப்பர் கிங்ஸ்) ஹாரி புரூக்- ரூ.13.25 (சன்ரைசர்ஸ் ஹைதராபாத்) ஜேசன் ஹோல்டர் – ரூ.5.75 (ராஜஸ்தான் ராயல்ஸ்)

22-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி – பிரான்சை பந்தாடி வெற்றி வாகை சூடியது மெஸ்ஸி தலைமையிலான ஆர்ஜென்டீனா !

22-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி அரபு நாடான கட்டாரில் கடந்த மாதம் 20-ந்திகதி கோலாகலமாக தொடங்கியது. 32 நாடுகள் பங்கேற்ற இந்த கால்பந்து திருவிழாவில் 4 முறை சாம்பியனான ஜெர்மனி முதல் சுற்றுடன் நடையை கட்டியது. எதிர்பார்க்கப்பட்ட ‘நம்பர் ஒன்’ அணியும், 5 முறை சாம்பியனுமான பிரேசில், கால்இறுதியில் குரோஷியாவிடம்  தோற்று வெளியேறியது.

லீக், நாக்-அவுட் முடிவில் நடப்பு சாம்பியன் பிரான்சும், முன்னாள் சாம்பியன் அர்ஜென்டினாவும் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தன. இந்த நிலையில் உலகக் கோப்பை மகுடம் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் இறுதி ஆட்டத்தில் பிரான்சும், அர்ஜென்டினாவும் லுசைல் ஐகானிக் ஸ்டேடியத்தில் இன்று இரவு மோதின. பரபரப்பாக தொடங்கிய போட்டியில் இரு அணி வீரர்களும் ஆக்ரோஷமாக விளையாடினர். அதில் பிரான்ஸ் வீரர் பாக்சில், அர்ஜென்டினா வீரரை தள்ளிவிட்டதால் பெனால்டி தரப்பட்டது. இதனையடுத்துட ஆட்டத்தின் 23வது நிமிடத்தில் கிடைத்த இந்த பெனால்டி வாய்ப்பை மெஸ்சி கோலாக மாற்றி அசத்தினார்.

இதனைத்தொடர்ந்து அர்ஜென்டினா அணி அதிரடி ஆட்டத்தை அதிகப்படுத்தியது. இதற்கு பலனாக ஆட்டத்தின் 36வது நிமிடத்தில் அர்ஜென்டினா வீரர் டி மரியா தனது அணிக்கான இரண்டாவது கோலை அடித்தார். இதன்மூலம் ஆட்டத்தின் முதல் பாதியின் முடிவில் அர்ஜென்டினா அணி 2-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்தது.

தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது பாதி ஆட்டத்தில் அர்ஜெண்டினா அணிக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பிரான்ஸ் அணி வீரர் எம்பாப்பே, ஆட்டத்தின் 80 மற்றும் 81-வது நிமிடங்களில் தனது அணிக்கான அடுத்தடுத்து இரண்டு கோல்களை அடித்து போட்டியை சமன் செய்து அசத்தினார்.  போட்டி சமன் ஆனதை தொடர்ந்து இரு அணி வீரர்களும் கூடுதல் கோல் அடிக்க எடுத்துக் கொண்ட முயற்சியகள் தோல்வி அடைந்தன. 90 நிமிடங்கள் முடிவடைந்த நிலையில், பிரான்ஸ் – அர்ஜென்டினா அணிகள் 2-2 என்ற கோல் கணக்கில் சமனில் இருந்ததால் கூடுதலாக 30 நிமிடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

அதில் அர்ஜென்டினா அணி வீரர் மெஸ்சி போட்டியின் 108 நிமிடத்தில் கோல் அடித்து அசத்தினார். இவரைத்தொடர்ந்து பிரான்ஸ் அணி வீரர் எம்பாப்பேவும் ஆட்டத்தின் 118-வது நிமிடத்தில் தனது அணிக்கான 3-வது கோலை அடிக்க ஆட்டத்தின் ஒவ்வொரு நொடியும் ரசிகர்களை உச்சகட்ட பரபரப்பில் உறைய வைத்தது. அர்ஜென்டினா வீரர்களான டி மரியா (1), மெஸ்சி (2), மற்றும் பிரான்ஸ் வீரர் எம்பாப்பே (3) என்ற கணக்கில் கோல் அடிக்க 3-3 என்று இரு அணிகளும் சமநிலையில் இருந்தன. கூடுதல் நேரம் முடிவடைந்த நிலையில் ஆட்டம் சமனில் நீடித்ததால் பெனால்டி ஷூட் அவுட் வழங்கப்பட்டது. பின்னர் பெனால்டி ஷூட் அவுட் முறையில் 4-2 என்ற கோல் கணக்கில் பிரான்ஸ் அணியை வீழ்த்தி உலகக்கோப்பை கால்பந்து போட்டியின் சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியது. 1986-ம் ஆண்டில் மரடோனா தலைமையில் அர்ஜென்டினா அணி மகுடம் சூடியது. அவரது வழியில் மெஸ்சியும் ஆர்ஸென்டீனாவுக்காக இந்த சாதனையை  நிகழ்த்தியுள்ளார். இந்த இறுதி போட்டியில் வென்றதன் மூலம் 3-வது முறையாக உலகக் கோப்பையை வென்று அர்ஜென்டினா சாதனை படைத்தது.

. முன்னதாக தென்அமெரிக்க கண்டத்தை சேர்ந்த அர்ஜென்டினா அணி தொடக்க லீக்கில் சவுதி அரேபியாவிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்தாலும் சுதாரித்துக் கொண்டு அசுரவேக எழுச்சியோடு வீறுநடை போட்டது. அரைஇறுதியில் 3 கோல்கள் போட்டு குரோஷியாவை ஊதித்தள்ளியது.

பதவி விலகுகிறார் ரொனால்டோவை களமிறக்க மறுத்த போர்த்துக்கல் கால்பந்தாட்ட அணியின் பயிற்றுவிப்பாளர் !

போர்த்துக்கல் கால்பந்தாட்ட அணியின் பயிற்றுவிப்பாளர் பெர்னாண்டோ தனது பதவி விலகலை உத்தியோகபூர்மாக அறிவித்துள்ளார்.

கால்பந்தாட்ட உலகக்கிண்ண போட்டியின் காலிறுதி சுற்றில் போர்த்துக்கல் அணி மொராக்கோ அணியிடம் தோல்வியடைந்தது.

போர்த்துக்கல் கால்பந்தாட்ட அணியின் தோல்வி இந்த தோல்விக்கு காரணம் அந்த போட்டியில் ரொனால்டோ 50 ஆவது நிமிடத்தில் களமிறக்கப்பட்டது தான் என சமூக வலைதளங்கள் ஊடாக ரசிகர்கள் குற்றம் சாட்டினார்கள்.

மேலும் அந்த அணியின் பயிற்றுவிப்பாளர் தனிப்பட்ட விரோதம் காரணமாக ரொனால்டோவை அந்த போட்டியில் முதலில் களமிறக்கவில்லை எனவும் குற்றம் சாட்டினார்கள்.

இதனால் போர்த்துக்கல்லின் இந்த தோல்விக்கு பொறுப்பேற்று அந்த அணியின் தலைவர் பதவி விலக வேண்டும் என்று பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

இதற்கு பதிலளித்த பயிற்றுவிப்பாளர்,

“நான் ரொனால்டோவை வெளியில் அமர வைத்ததுக்கு வருத்தப்படவில்லை. அவர் அணியில் விளையாடி இருந்தாலும் இதே நிலைமை தான் ஏற்பட்டிருக்கும். அதற்காக ரொனால்டோ திறமையான வீரர் இல்லை என கூறவில்லை. போர்த்துக்கல் அணி நன்றாக விளையாடியது, மொரோக்கோ அணி அதை விட நன்றாக விளையாடியது.”என கூறியுள்ளார்.

இவருடைய இந்த கருத்து ரசிகர்கள் மத்தியில் கோவத்தை அதிகரித்தது. இந்நிலையில் அவர் தனது பதவி விலகலை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.

இதேவேளை 68 வயதுடைய போர்த்துக்கல் கால்பந்தாட்ட அணியின் பயிற்றுவிப்பாளர் பெர்னாண்டோ போர்த்துக்கல் அணியின் வளர்ச்சிக்கு முக்கிய காரணம் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

எந்தக்கழகத்திலும் இரட்டைக் குடியுரிமை பெற்றவர்களுக்கு இடமில்லை – விளையாட்டுத்துறை அமைச்சர் உத்தரவு !

விளையாட்டுச் சட்டத்தில் பல புதிய விதிமுறைகளை விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க வெளியிட்டுள்ளார்.

இலங்கையில் உள்ள எந்தவொரு விளையாட்டுக் கழகத்திலும் இரட்டைக் குடியுரிமை பெற்றவர்கள் பதவிகளை வகிக்க முடியாத வகையில் விளையாட்டுச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது.

மேலும், விளையாட்டுக் கழகங்களின் எந்தவொரு அதிகாரி அல்லது குழு உறுப்பினரின் அதிகபட்ச வயதை 70 ஆக மாற்றவும் சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது.

விளையாட்டுச் சட்டத்தின் கீழ் தமக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின்படி அவர் இந்த திருத்தங்களை கொண்டுவந்துள்ளார்.

 

உலக கிண்ண கால்பந்து போட்டி 2022 – குரோஷியா அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது ஆர்ஜென்டினா !

உலகக் கோப்பை கால்பந்து தொடரில் குரோஷியா அணிக்கு எதிரான ஆட்டத்தில் 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்ற ஆர்ஜென்ரீனா அணி முதலாவதாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.

லுசைஸ் ஐகானிக் ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடந்த முதலாவது அரைஇறுதியில் முன்னாள் சம்பியனான ஆர்ஜன்ரீனா அணி, குரோஷியாவுடன் மோதியது. இரு அணிகளும் சரிசம பலத்துடன் மோதியதால் களத்தில் சூடுபறந்தது.

இதன்படி பரபரப்பாக தொடங்கிய ஆட்டத்தின் முதல் பாதியில் ஆர்ஜன்ரீனா அணிதலைவர் லயோனல் மெஸ்சி போட்டியின் 34-வது நிமிடத்தில் தனது அணிக்கான முதல் கோலை அடித்து அசத்தினார். அவரைத்தொடர்ந்து சக அணி வீரர் ஜூலியன் அல்வாரஸ் போட்டியின் 39-வது நிமிடத்தில் தங்கள் அணிக்கான இரண்டாவது கோலை அடித்து ரசிகர்களை மகிழ்ச்சியின் எல்லைக்கே கொண்டு சென்றார்.

இதன்மூலம் போட்டியின் முதல் பாதியில் 2-0 என்ற கோல் கணக்கில் ஆர்ஜென்ரீனா அணி முன்னிலை வகித்தது.

தொடர்ந்து அனல் பறந்த இரண்டாவது பாதி ஆட்டத்தின் 69-வது நிமிடத்தில் 2-வது முறையாக ஜூலியன் அல்வாரஸ் தனது அணிக்கான மூன்றாவது கோலை பதிவு செய்தார்.

தொடர்ந்து நடந்த போட்டியில் கோல் அடிக்க குரேஷியா அணி வீரர்கள் எடுத்துக் கொண்ட முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்தன. கூடுதல் நேரம் வழங்கப்பட்ட போதும் குரேஷியா அணியால் கோல் அடிக்க முடியவில்லை.

இதன்மூலம் குரேஷியா அணிக்கு எதிரான ஆட்டத்தில் 3-0 என்ற கோல் கணக்கில் ஆர்ஜன்ரீனா அணி வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்கு முதல் அணியாக முன்னேறியது.

விஜயகாந்த் வியாஷ்காந்த் அசத்தல் – Jaffna Kings இலகுவான வெற்றி !

2022 ஆம் ஆண்டுக்கான லங்கா பிரீமியர் லீக் போட்டித் தொடரின் மூன்றாவது போட்டியில் Jaffna Kings அணி அபார வெற்றி பெற்றுள்ளது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற Dambulla Aura அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.

அதனடிப்படையில் முதலில் களமிறங்கிய Dambulla Aura அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்களை 121 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

துடுப்பாட்டத்தில் Jordan Cox அதிகபட்சமாக 43 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார்.

பந்து வீச்சில் மஹீஷ் தீக்‌ஷன மற்றும் விஜயகாந்த் வியாஷ்காந்த் ஆகியோர் தலா 3 விக்கெட்களை வீழ்த்தியிருந்தனர்.

அதனடிப்படையில் Jaffna Kings அணிக்கு 122 ஓட்டங்கள் வெற்றியிலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய Jaffna Kings அணி 15.4 ஓவர்கள் நிறைவில் 1 விக்கெட்டை மாத்திரம் இழந்து வெற்றி பெற்றுள்ளது.

துடுப்பாட்டத்தில் Jaffna Kings அணி சார்ப்பில் சதீர சமரவிக்ரம ஆட்டமிழக்காமல் 62 ஓட்டங்களையும் அவிஷ்க பெர்ணாட்டோ 51 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.

5000 மீட்டர் ஓட்டப்போட்டியில் தேசிய ரீதியில் கிளிநொச்சி மாணவன் சாதனை !

தேசிய ரீதியிலான பாடசாலைகளுக்கிடையிலான 5000 மீட்டர் ஓட்டப்போட்டியில் தேசிய ரீதியில் கிளிநொச்சி மாணவன் சாதனை படைத்துள்ளார்.

இந்த போட்டி கொழும்பு சுகததாச விளையாட்டு மைதானத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) காலை நடைபெற்றது.

இந்த போட்டியில் கிளி/ முழங்காவில் தேசிய பாடசாலையின் மாணவன் சுமன் கீரன் தோற்றி முதலாவது இடத்தினை பெற்று, வரலாற்றில் முதன் முறையாக தேசிய மட்டத்தில் சாதனை படைத்துள்ளார்.

இந்த வீரன் அவரது வெற்றிக்கு உறுதுணையாய் உழைத்த பயிற்றுவிப்பாளர்களுக்கும், அவரது பெற்றோர்களுக்கும் கற்ற பாடசாலைக்கும் பெருமையை தேடி கொடுத்துள்ளார்.

கட்டிய கணவன் கைவிட்டாலும் கற்ற கல்வி கைவிடாது: ஹர்த்தாயினி ராஜேஸ்கண்ணா; உறுதிகொண்ட நெஞ்சினாள் நூல் வெளியீடு

ஹம்சகௌரி சிவஜோதியின் ‘உறுதிகொண்ட நெஞ்சினாள்’ என்ற பத்து பெண் ஆளுமைகள் பற்றிய நூல் வெளியீடு மிகச்சிறப்பாக கிளிநொச்சி லிற்றில் எய்ட் அரங்கில் நடைபெற்றது. இந்நூல் வெளியீடு முற்றிலும் இளம் தலைமுறைப் பெண்களினாலேயே நடாத்தப்பட்டது. யாழ் பல்கலைக்கழகத்தின் மாணவர்களின் ‘மனிதம்’ குழவைச் சேர்ந்த இளம் பெண்கள் (படம்) இந்நிகழ்வை திறப்பட நடத்தினர்.

புத்தக வெளியீட்டுக்கு தலைமையேற்ற செல்வி வர்ஷனா வரதராசா இந்நூல் தன்னுள் ஏற்படுத்திய மாற்றத்தையும் இந்தப் பெண் ஆளுமைகள் பற்றிய அனுபவம் தன்னுள் ஏற்படுத்திய தாக்கத்தையும் சுட்டிக்காட்டினார்.

இப்பெண் ஆளுமைகள் பல்துறைசார்ந்த பன்முக ஆளுமைகள். பெண்ணியம் (செல்வி திருச்சந்திரன்), கல்வி (ஜெயா மாணிக்க வாசகன், சசிகலா குகமூர்த்தி, வலன்ரீனா இளங்கோவன்) இலக்கியம் (தாமரைச்செல்வி), பொறியியல்துறை (பிரேமளா சிவசேகரம்), கலைத்துறை (பார்வதி சிவபாதம், வலன்ரீனா இளங்கோவன்), அரசியல், கலை, இலக்கியம் (கலாலக்ஷ்மி தேவராஜா), விளையாட்டுத் துறை (அகிலத்திருநாயகி சிறிசெயானந்தபவன்) இவர்களோடு பொது வாழ்வில் அரசியலில் ஈடுபட்டு இனவெறியர்களை நேருக்கு நேர் எதிர்கொண்டு போராடியவர் நாகம்மா செல்லமுத்து. இவர்கள் யாரும் சமூகத்தில் இருந்து அந்நியப்பட்டு வாழவில்லை. தங்களையும் சமூகத்தில் ஒருவராகப் பிணைத்துக்கொண்டு தங்களது நாளாந்த வாழ்வியலோடு சமூகத்திற்கான சேவையை வழங்கி வந்தனர் அல்லது வழங்கி வருகின்றனர்.

கிரேக்க தத்துவஞானிகள் பிளேட்டோ, சோக்கிரட்டீஸ் ஆகியோர் தங்கள் கருத்துக்களை உரைநடையூடாகவே எடுத்துச் சென்றது போல் இந்நூலாசிரியர் ஹம்சகௌரியும் தன்னுடைய கருத்துக்களை உரைநடையூடாகவே எங்களைப் போன்ற இளம் சந்ததியினருக்கு கொண்டு சென்றுள்ளார் என நூலின் வெளியீட்டுரையை வழங்கிய செல்வி விராஜினி காயத்திரி இராஜேந்திரன் தெரிவித்தார்.

இந்நூல் ஒருவரில் அல்ல எம்போன்ற பலரில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது எனத் தெரிவித்த காயத்திரியின் கருத்துக்கள் ஏனைய ஆய்வாளர்களின் உரைகளிலும் எதிரொலித்தது. இந்நூலின் முதற் பிரதி, இந்நூலில் குறிப்பிடப்பட்ட ஆளுமைகளில் ஒருவரான அமரத்துவமடைந்த கலாலக்ஷ்மி தேவராஜா அவர்களுடைய மகள் அபிலாஷா தேவராஜாவுக்கு வழங்கப்பட்டது.

கட்டிய கணவன் கைவிட்டாலும் கற்ற கல்வி கைவிடாது: ஹர்த்தாயினி ராஜேஸ்கண்ணா

‘உறுதிகொண்ட நெஞ்சினாள் பிரதிபலிக்கும் பெண்ணியம்’ என்ற தலைப்பில் செல்வி ஹர்த்தாயினி இராஜேஸ்கண்ணா தனது நூலாய்வை மேற்கொண்டார். ‘பெண்ணியம் சார்ந்து பேசுவதை பெண்ணியம் பற்றிப் பேசுவதை விரோதமாகப் பார்க்கின்ற போக்கு இன்னமும் காணப்படுகின்றது. பெண்ணியம் பற்றிய விழிப்புணர்வு சில பெண்களுக்கே போதாமையாகவுள்ளது. போதைவஸ்துவுக்கும் மதுவுக்கும் அடிமைப்பட்டுள்ள இன்றைய நிலையிலும் அதனைச் செய்வதை பெண்ணியம் என்று வியாக்கியானப்படுத்துபவர்களும் எம்மத்தியில் உள்ளனர்’ என உணர்ச்சி பூர்வமாக உரையாற்றிய ஹர்த்தாயினி ‘சமத்துவமின்மையின் மூலங்கள் கண்டறியப்பட்டு அவை களையப்பட வேண்டும்’ என ஆணித்தரமாகத் தெரிவித்தார்.

‘இந்த ஆடை அணிந்தால் தான் நீ என் காதலியாகலாம், மனைவியாகலாம் என்ற வரைக்கும் அன்பின் பேரில் கட்டளையிடும் ஆண்கள் இன்னும் இருக்கின்றார்கள். அதற்குக் காரணம் நாங்கள் பெண்கள் தான். நாங்கள் ஏன் அதற்குப் பணிய வேண்டும்?’ என்று கேள்வி எழுப்பிய ஹர்த்தாயினி ‘பெண்களுக்கு விழிப்புணர்வு அவசியம் வேண்டும்’ என்பதை வலியுறுத்தினார். ‘இந்த நூலில் உள்ள பெண்கள், ஒரு தலைமுறைக்கு முன்னதாக பெண்கள் வெளியே செல்லவே தடைகள் இருந்த காலத்தில் சாதித்திருக்கின்றார்கள் என்றால் ஏன் எங்களால் முடியாது?’ என அவர் சபையில் இருந்த இளம் தலைமுறையினரை நோக்கி கேள்வி எழுப்பினார்.

தனதுரையில் ‘சாதாரணமான எங்கள் தாய்மாரை சகோதரிகளை பிள்ளைகளை ஏன் எங்களால் மாற்ற முடியாது?’ என்ற கேட்ட ஹர்த்தாயினி சமூகம் பாதிக்கப்பட்ட நலிந்த பெண்களுக்கே பாதிப்புகளைக் கொடுக்கின்றது. கணவரை இழந்து அல்லது கைவிடப்பட்ட பெண்கள் வாழும் அயல்வீடுகளைக் கேட்டால், இந்த சமூகம் இவர்களை எப்படிப்பார்க்கின்றது என்பதை தெரிந்துகொள்ளலாம். அப்படியிருந்தும் அப்பெண்கள் சவாலாக வாழ்கின்றனர். கட்டிய கணவன் கைவிட்டாலும் கற்ற கல்வி கைவிடாது’ என ஆக்கிரோசமாக பெண்கள் தங்கள் சுயத்தில் நிற்பதற்கு கல்வியை வலியுறுத்தினார்.

அவர் தனது உரையின் இறுதியில் இதில் உள்ள பத்தது பெண் ஆளுமைகள் மட்டுமல்ல நூலாசிரியர் ஹம்சகௌரியோடு 11 பெண் ஆளுமைகளும் திருமணத்துக்கும் பின்னும் தங்கள் அடையாளத்தை இழந்துவிடவில்லை. அவர்கள் உண்மையிலேயே முன்னுதாரணமானவர்கள். பெண்களுக்கு திருமணம் ஒரு தடையல்ல. எனது அடையாளத்தை தக்க வைக்க எனது பெண்ணியத்தை முன்னெடுக்க எனக்கு திருமணம் ஒரு தடையாக அனுமதிக்க மாட்டேன்’ எனத் தெரிவித்து தன்னுடைய விறுவிறுப்பான உரையை நிறைவு செய்தார்.

சாதியம் உணர்வு நிலையில் மாற்றம் நிகழவில்லை செல்வி மயூரகா ஸ்ரீஸ்கந்தராசா:

உறுதிகொண்ட நெஞ்சினாள் பேசும் பெண் கல்வியும் அதன் இன்றைய நிலையும் என்ற தலைப்பில் செல்வி மயூரகா ஸ்ரீகந்தராசா உரையாற்றினார். பெண்களது நிலையென்பது கயிற்றில் கட்டப்பட்ட பட்டத்திற்கு ஒப்பானதாக இன்னும் சுதந்திரம் என்பது மட்டுப்படுத்தப்பட்டதாகவே இருப்பதைச் சுட்டிக்காட்டடினார். ‘பிரேமளா சிவசேகம் அவர்கள் அன்றைய சுழலில் இலங்கையின் முதலாவது பெண் பொறியியலாளராக ஆனாது ஆச்சரியமானதாகவும் அதே சமயம் நாங்கள் என்ன செய்துகொண்டிருக்கின்றோம் என்பதை எங்களையே நாங்கள் கேட்க வைப்பதாகவும் இருக்கின்றது என மயூரகா தெரிவித்தார்.

இந்நூலில் ஆவணப்படுத்தப்பட்ட ஒவ்வொரு ஆளுமையுமே ஒவ்வொரு நூல்கள். அவர்களுடைய அனுபவங்களை நூலாசிரியர் பகிர்ந்துகொள்ள எடுத்த முயற்சி அளப்பெரியது என விதந்துரைத்தார் மயூரகா. ‘புத்தக மூலமான இந்தப் பயணம் எங்களைப் போன்ற பெண்களை எங்கள் comfort zone கொம்போர்ட் சூனில் இருந்து வெளியே வர வைக்கின்றது. செல்வி திருச்சந்திரன் குறிப்பிட்ட சாதியம் பற்றிய குறிப்புகள் மிக அருமையான பதிவு. சாதியம் எவ்வாறு சமநிலையைக் குழப்புகின்றது என்பதை அது துல்லியமாகக் காட்டுகின்றது. நாங்கள் இதனையெல்லாம் கடந்துவந்துவிட்டோமா?’ என்று கேள்வி எழுப்பிய மயூரகா ‘உணர்வுநிலையில் மாற்றம் நிகழவில்லை’ என்ற உண்மையை ஆணித்தரமாகத் தெரிவித்தார்.

‘தங்கைகளா எங்களாலும் முடியும். எழுந்து வாருங்கள்’ செல்வி நிவேதா சிவராஜா:

‘உறுதிகொண்ட நெஞ்சினரின் சமூகப் பார்வை’ என்ற தலைப்பில் செல்வி நிவேதா சிவராஜா நூல்பற்றிய தன்னுடைய ஆய்வை மேற்கொண்டார். தன்னை சமூகத்தின் மீது காதல் கொண்டவளாக ஒரு சமூகக் காதலியாக அறிமுகப்படுத்திய அவர் இந்த பத்து ஆளுமைகளும் அந்த அளுமைகளை ஆவணப்படுத்திய ஆளுமையும் தன் சிந்தனையில் பெரும் புரட்சியை ஏற்படுத்திவிட்டதாக நிவேதா தெரிவித்தார். ‘இவர்கள் எல்லோரும் எங்களைவிட ஒரு தலைமுறை கடந்தவர்கள். அவர்களுடைய சமூகம் பற்றிய பார்வை எங்களுக்கு ஒரு வழிகாட்டல். முன்ணுதாரணம். அதனையே இந்நூலைப் பதிப்பித்த தேசம் ஆசிரியர் த ஜெயபாலன் தன்னுடைய பதிப்புரையில் குறிப்பிட்டுள்ளார் என்பதைச் சுட்டிக்காட்டினார் நிவேதிதா.

‘தேசம் த ஜெயபாலன் குறிப்பிட்டது போல பெண்கள் இன்னமும் இரண்டாம் நிலையில் நோக்கப்படும் போக்கு காணப்படுகின்றது. அதனை மாற்றியமைக்க வேண்டும் என்ற கனவோடு தான் தேசம் ஜெயபாலன் இந்நூலை வெளியிட்டுள்ளார். அவருடைய அந்தக் கனவை நாங்களும் இன்று சுமக்கின்றோம்’ என்று உணர்ச்சிபூர்வமாகத் தெரிவித்த நிவேதிதா ‘தம்பிகாளா! தங்கைகளா!’ உங்களுடைய பொறுப்புக்களை நீங்கள் சுமக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

‘இந்நூலை வாசித்த பின்னரே கிளிநொச்சியில் இப்படியொரு பாடசாலை – விவேகானந்தா வித்தியாலயம் இருப்பதைத் தெரிந்துகொண்டேன். ஆரம்பத்தில் வாசிக்கும் போது ஜெயா மிஸ் என்று தோண்றியது. வாசித்து முடிக்கையில் ஜெயா அம்மா என்று அழைக்கத் தோண்றியது. அவருடைய சமூகப் பங்களிப்பு என்னை சிலிர்க்க வைத்துவிட்டது. நாங்கள் மனிதம் அமைப்பினூடாக கல்விச் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றோம். எங்களுக்கு விவாகானத்தா வித்தியாலயத்தை பாரக்க வேண்டும் அதிலிருந்து நாங்கள் கற்க வேண்டும் என்ற ஆர்வம் பொங்கியுள்ளது’ என நிவேதிதா உணர்வுபூர்வமாக தன்னுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

‘எங்களை நாங்களே 90’ஸ் கிட்ஸ் 2கே கிட்ஸ் (ருகெ கிட்ஸ்) என்று சொல்கின்றோம் ஆனால் நடக்கவே சலித்துக் கொள்கிறோம். ஆனால் எழுபதுக்களையும் கடந்து ஒடிவிட்டு வந்திருக்கிறார் அகிலத்திருநாயகி அமையார். இந்த ஆளுமைகள் எல்லாமே இன்னும் இம்மண்ணில் சாதனையாளர்களாக வாழ்ந்து கொண்டுள்ளனர். ஆனால் நாங்கள் இன்னும் வெளிநாட்டு மோகத்தோடு தான் இருக்கின்றோம். இங்கு எங்கள் முன்னுள்ள வாய்ப்புகளைப் பார்க்காமல் தடைகளை மட்டுமே பார்க்கின்றோம்’ என்று குறிப்பிட்ட நிவேதா மீண்டும் ‘தம்பிகளா! தங்கைகளா!’ என்று விழித்தார்.

‘இவர்கள் எங்களுக்கு முன்னுதாரணமாக இருந்து விட்டார்கள். அவர்களுடைய பொறுப்பை சரிவரச் செய்துவிட்டார்கள். நாங்கள் எங்கள் அடுத்த தலைமுறைக்கு முன்ணுதாரணமாக வேண்டாமா?’ என்று கேள்வி எழுப்பியதுடன் ‘தங்கைகளா எங்களாலும் முடியும் என்பதைக் காட்டத் தயாராகுங்கள்’ என்று அழைப்பு அறைகூவல் விடுத்தார். ‘நாங்கள் இந்த பூமியில் இருந்துவிட்டு வாடகை செலுத்தாமல் சென்றுவிடக்கூடாது. எங்கள் வாடகையை நாங்கள் செலுத்த வேண்டும்’ என்ற பொறுப்பை அழுத்தம் திருத்தமாகக் குறிப்பிட்டு நிவேதா தன்னுரையை நிறைவு செய்தார்.

நிகழ்வின் இறுதியில் ஹம்சகௌரி சிவஜோதி நூலில் உள்ள ஆளுமைகளோடு தனக்கும் தன்னுடைய கணவருக்கும் இருந்த உறவுபற்றி கனத்த இதயத்தோடு சில அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார். இறுதியாக சிவஜோதியின் தந்தையார் நன்றி தெரிவித்து நிகழ்வை முடிவுக்கு கொண்டு வந்தார்.

நவம்பர் 20இல் நடைபெற்ற இந்நிகழ்வில் இருநூறு பேருக்கு மேற்பட்ட சமூக செயற்பாட்டாளர்கள், கலைஞர்கள், எழுத்தாளர்கள், மாணவர்கள் கலந்துகொண்டனர். இந்நிகழ்வில் கலந்துகொண்டவர்களும் நிகழ்வைத் திறம்பட ஏற்பாடு செய்தவர்களும் இளையவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.