வன்னியில் இடம்பெற்று வரும் யுத்தத்தில் அதிகளவான இந்திய வம்சாவளி மக்களும் பாதிக்கப்பட்டுள்ளதால் அவர்களை மீண்டும் மலையகத்தில் குடியேற்ற அரசு நடவடிக்கையெடுக்க வேண்டுமென தெரிவித்துள்ள இலங்கை தொழிலாளர் ஐக்கிய முன்னணியின் தலைவர் டி.வி.சென்னன் இதற்கான முன்னேற்பாடாக மலையகத்தில் நலன்புரி நிலையமொன்றை அமைக்குமாறு கோரியுள்ளார். பதுளையிலுள்ள கட்சி பணிமனையில் நடந்த ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது;
பிரித்தானிய விசேட தூதுவரை இலங்கை அரசு நிராகரித்திருப்பது முறையற்ற செயலாகும். இந் நாட்டில் வாழ்ந்துவரும் இந்திய வம்சாவளி தமிழ் மக்களை இலங்கை நாட்டில் குடியேற்றியது பிரித்தானிய அரசுதான். அந்நிலையில், இலங்கையின் தமிழ் மக்களைப் பாதுகாக்க வேண்டிய தார்மீகப் பொறுப்பு பிரித்தானிய அரசுக்கு இருக்கவே செய்கின்றது. ஆகையினால், தமிழ் மக்களின் துயரினைப் போக்கும் வகையில் பிரித்தானிய அரசு துரித நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு பின்னிற்கக் கூடாது. பிரித்தானிய விசேட தூதுவரை இந்நாட்டிற்குள் பிரவேசிக்க இலங்கை அரசு அனுமதி வழங்க வேண்டும்.
நாட்டின் வட பகுதியில் இந்திய வம்சாவளி தமிழ் மக்கள் பெருமளவில் குடியேறியுள்ளனர். கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் மாவட்டங்களில் அம்மக்கள் செறிந்து வாழ்ந்து வருகின்றனர். நடைபெற்று வரும் யுத்தத்தினால் இம் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். இவர்கள் விடயத்தில் அரசுகருணை காட்ட வேண்டும். பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் இந்திய வம்சாவளி தமிழ் மக்களை இனம் கண்டு, அவர்களை மீண்டும் மலையகத்தில் குடியமர்த்துவதற்கான ஏற்பாடுகளை அரசு முன்னெடுக்க வேண்டும். இதற்கான முன்னேற்பாடாக மலையகத்தில் நலன்புரி நிலைய மொன்றினை அமைத்து வடபகுதி இந்திய வம்சாவளி தமிழ் மக்களை அந்நிலையத்தில் குடியமர்த்த வேண்டும். அதனையடுத்து அம்மக்களின் ஜீவனோபாயத்திற்கான முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்படவும் வேண்டும்.
நாட்டின் தென்பகுதியில் இடம் பெற்ற சம்பவங்களையடுத்தே, தென்பகுதி தமிழ் மக்கள் வட, கிழக்குப் பகுதிகளில் குடியேறினர். அங்கும் யுத்த சூழலினால் வாழ முடியாத அவலம் ஏற்பட்டிருக்கின்றது. இதனால், அம்மக்கள் இந்தியாவின் தமிழ் நாட்டிற்கே அகதிகளாக செல்ல வேண்டிய நிலை ஏற்படும். ஆகவே அரசு இம்மக்கள் விடயத்தில் கூடிய அக்கறை செலுத்தி செயல்படவேண்டும். அத்துடன் அப்பாவி மக்கள் மீது மேற்கொள்ளப்படும் தாக்குதல்களை அரசும் புலிகளும் கைவிடவும் வேண்டும்’ என்று கூறினார்.