கட்டுரைகள்

கட்டுரைகள்

கட்டுரைகளும் விவாதங்களும்

பாதுகாப்பை நாடி வரும் சிவிலியன்களின் நலன்கருதி இன்று முதல் புதிய நடைமுறை

mahinda_samarasinghe.jpgபுலிகளின் பிடியிலிருந்து விடுபட்டுப் பாதுகாப்பை நாடி வரும் சிவிலியன்களின் நலன்கருதி இன்று முதல் புதிய நடைமுறையை பாதுகாப்புப் படையினர் அமுல் படுத்தவுள்ளதாக இடர் முகாமைத்துவம் மற்றும் மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க நேற்றுத் தெரிவித்தார்.

அரசாங்க கட்டுப்பாட்டு பிரதேசத்திற்கு பாதுகாப்பை நாடி வரும் அப்பாவி மக்களுக்குத் தேவையான பாதுகாப்பை வழங்குவதற்கும் தேவையான வசதிகளை செய்து கொடுப்பதற்கும் அரசாங்கம் ஒருபோதும் பின்வாங்கப் போவதில்லை என்றும் அமைச்சர் உறுதியளித்தார்.

புலிகளின் பிடியிலிருந்து விடுபட்டு பாதுகாப்பை நாடி மேலும் ஆயிரக்கணக்கான மக்கள் வருவதற்கு தயாராக உள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.  விசுவமடு, சுதந்திரப் பிரதேசத்தை நோக்கி வந்த சிவிலியன்களை இலக்கு வைத்து புலிகளின் பெண் தற்கொலை குண்டுதாரி நேற்றுக்காலை மேற்கொண்ட தாக்குதல் தொடர்பாக ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் விசேட செய்தியாளர் மாநாடு இடர் முகாமைத்துவம் மற்றும் மனித உரிமைகள் அமைச்சின் கேட்போர் கூடத்தில் நேற்று நடைபெற்றது.  இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார, இடர் முகாமைத்துவ அமைச்சின் செயலாளர் கலாநிதி ரஜீவ விஜேசிங்க கலந்துகொண்ட இந்த செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் மேலும் உரையாற்றுகையில் :-

புலிகளின் பிடியில் சிக்கியுள்ள அப்பாவி தமிழ் மக்களை இராணுவ கட்டுப்பாட்டு பிரதேசத்தை நோக்கி வருமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அண்மையில் வேண்டுகோள் விடுத்திருந்தார். ஜனாதிபதியினதும் அரசாங்கத்தினதும் அழைப்பை ஏற்றுக்கொண்டு பொதுமக்கள் ஆயிரக்கணக்கில் வரத்தொடங்கினர்.  சுமார் 20 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் கடந்த சில நாட்களுக்குள் வந்துள்ளனர். நேற்றும் ஐயாயிரம் பொது மக்கள் வருகை தந்துள்ளனர். யாழ்ப்பாணம் வடமராட்சியை நோக்கி படகுகள் மூலம் 2 ஆயிரம் பொதுமக்கள் வருகை தந்துள்ளனர் என்று யாழ். அரச அதிபர் தனக்கு தகவல் தந்ததாகவும் அவர் குறிப்பிட்டார். பாதுகாப்பை நாடி எத்தனை ஆயிரம் பேர் வந்தாலும் அவர்களுக்குத் தேவையான சகல நிவாரண நடவடிக்கைகளை செய்து கொடுக்க அரசாங்கம் தயாராக உள்ளது. இதில் எந்தவித மாற்றமும் இல்லை.

தற்பொழுது படுதோல்வியடைந்துள்ள புலிகள், இது போன்ற தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். சிவிலியன்களே புலிகளை பாதுகாத்துக் கொள்ளவுள்ள ஒரே ஒரு ஆயுதமாகும். எனவே பொதுமக்கள் பாதுகாப்பு நாடி வருவதையிட்டு விரக்தியடைந்த புலிகள் அப்பாவி பொதுமக்களை கொலை செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். தப்பிவரும் மக்கள் மத்தியில் பயத்தை ஏற்படுத்தி அவர்களின் வருகை கட்டுப்படுத்துவதே இதன் பிரதான நோக்கமாகும் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

பாதுகாப்பை நாடி வந்த ஆயிரக்கணக்கான சிவிலியன்கள் வவுனியாவில் அமைக்கப்பட்டுள்ள ஏழு நலன்புரி நிலையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதுடன் அவர்களுக்குத் தேவையான சகல ஏற்பாடுகளும் செய்து கொடுத்துள்ளோம்.
இந்த மக்களை தங்கவைக்கப்பட்டுள்ளதுடன் அவர்களுக்குத் தேவையான சகல ஏற்பாடுகளும் செய்து கொடுத்துள்ளோம். இந்த மக்களை தங்க வைக்கவென மேலும் 5 நலன்புரி நிலையங்களை அமைக்க வவுனியா அரசாங்க அதிபர் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

72 மணித்தியாலங்கள் தொலைக்காட்சி பார்த்து கனடிய தமிழர் சாதனை

suresh.jpgஇலங்கை யைச் சேர்ந்தவரும் கனடாவில் வசிப்பவருமான சுரேஷ் ஜோக்கிம் (39 வயது) என்பவர் 72 மணித்தியாலங்கள் தொடர்ச்சியாக தொலைக்காட்சியைப் பார்த்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.  சுரேஷ் ஏற்கனவே 52 கின்னஸ் சாதனைகளைப் படைத்திருக்கிறார். ஏற்கனவே கடந்த 2005 இல் நியூயோர்க்கில் ஏபிசி ஸ்ரூடியோவில் 69 மணித்தியாலங்கள் 48 நிமிடங்கள் தொடர்ந்து தொலைக்காட்சி பார்த்து சாதனை படைத்திருந்தார். இப்போது ஸ்ரொக்ஹோமில் 72 மணித்தியாலங்கள் தொடர்ந்து தொலைக்காட்சி பார்த்து தனது முன்னைய சாதனையை முறியடித்துள்ளார்.

கின்னஸ் ஏட்டில் பல சாதனைகளை நிலைநாட்டியுள்ள சுரேஷ் ஜோக்கிமை சுவீடனின் தொலைக்காட்சி சேவையான ரிவி4 நிலையம் சுவீடனைச் சேர்ந்தவருடன் போட்டியிடுமாறு அழைத்திருந்தது. அதற்கிணங்கி அங்கு சென்று ஞாயிற்றுக்கிழமை ஜோக்கிம் சாதனை புரிந்துள்ளார்.  ரொறன்ரோவில் மிஸ்ஸிசாகுவா பகுதியில் தனது மனைவியுடன் சுரேஷ் வாழ்ந்து வருகிறார். கோப்பி குடித்தவாறு தொலைக்காட்சி தொடர் நாடகங்களைப் பார்ப்பதில் தனது நேரத்தை செலவிட்டிருப்பதாக அவர் கூறியுள்ளார்.

வியாழக்கிழமை இரவு 8 மணிக்கு தொலைக்காட்சியை பார்க்கும் போட்டியை ஆரம்பித்த அவர் ஞாயிறு மாலையே பார்ப்பதை நிறுத்தியுள்ளார். தனது சாதனையை முறியடிக்க கடந்த 3 வருடங்களாகப் பலர் முயன்றதாகவும் ஆயினும் முடியவில்லை என்று ஜோக்கிம் கூறியுள்ளார்.

25 மணித்தியாலங்கள் 49 நிமிடங்களில் மரதன், 120 மணிநேரம் வானொலி ஒலிபரப்பு, ஒற்றைக்காலில் 76 மணித்தியாலங்கள் 40 நிமிடங்கள், 55 மணித்தியாலங்கள் 5 நிமிடங்கள் உடுப்புகளை இஸ்திரிகை செய்தமை என்பன இவரின் சாதனைகளில் முக்கியமானவையாகும்.  தொடர்ச்சியாக 84 மணித்தியாலங்கள் மேளம் அடித்தமை, 168 மணித்தியாலங்கள் ரெட்மில்லில் (659.27 கிலோமீற்றர் தூரம்) ஓடியமை, 4.5 கிலோகிராம் எடை கொண்ட 135.5 கிலோ மீற்றர் தூரம் காவிச் சென்றமை, 56.62 கி.மீ.தூரம் தொடர்ந்து தவழ்ந்தமை, 100 மணித்தியாலங்கள் நடனமாடியமை, 24 மணித்தியாலயத்தில் 19.2 கி.மீ.தூரம் காரை தள்ளிச் சென்றமை என்பனவும் ஜோக்கிமின் சாதனைகளாகும்.

கடற்புலிகளின் பாரிய தளம் முல்லை காட்டுப் பகுதியில் அழிப்பு

mi24_2601.jpgமுல்லைத் தீவு காட்டுப் பகுதியில் மறைவான முறையில் அமைக்கப்பட்டிருந்த கடற் புலிகளின் பாரிய தளம் மற்றும் கட்டடத் தொகுதி என்பனவற்றை நேற்றுக் காலை விமானப் படையினர் தாக்கியழித்துள்ளதாக விமானப்படைப் பேச்சாளர் விங் கமாண்டர் ஜனக நாணயக்கார தெரிவித்தார். விமானப் படையினரின் இந்த கடுமையான தாக்குதல்களில் கடற் புலிகளின் பாரிய கட்டடத் தொகுதிகளுடன் மறைத்து வைக்கப்பட்டிருந்த பெருந்தொகையான படகுகள் மற்றும் உழவு இயந்திரங்களும் நிர்மூலமாக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

முல்லைத்தீவு கடலேரிக்கு வடக்கேயும், வெள்ளைமுல்லை வாய்க்கால் காட்டுப் பகுதியின் கரை யோரத்திற்கு மேற்கே ஒரு கிலோ மீற்றர் தொலைவிலும் இந்த முகாம் அமைக்கப்பட்டிருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார். விமானப் படைக்குச் சொந்தமான கிபீர் மற்றும் மிக் – 27 ரக தாக்குதல் விமானங்களை பயன்படுத்தி நேற்றுக்காலை 7.00 மணியளவில் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல்கள் வெற்றியளித்துள்ளதாக மேலும் தெரிவித்தார்.

இடம்பெயர்ந்த மக்களுக்கு உதவ ஐ. நா தொண்டு நிறுவனங்கள் மீண்டும் தயார்

mullai-ahathi.jpgஇலங் கையின் வடக்கே விடுதலைப்புலிகளின் பிரதேசத்தி்லிருந்து இடம்பெயர்ந்து இராணுவத்தின் கட்டு்ப்பாட்டுப் பகுதிகளுக்குள் வரும் மக்களுக்கான அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக்கொடுப்பதிலும், அவர்களின் முக்கிய அவசர தேவைகளை ஈடுசெய்வதிலும், ஐநா மன்றத்தின் தொண்டு நிறுவனங்கள் தமது பங்களிப்பை வழங்குவதற்கு முன்வந்திருப்பதாக அரசாங்கம் அறிவித்திருக்கின்றது.

விடுதலைப்புலிகளின் பிரதேசங்களில் இருந்து இந்த நிறுவனங்கள் பாதுகாப்பு காரணங்களை முன்வைத்து அரசாங்கத்தினால் விடுக்கப்பட்ட அழைப்பை ஏற்று அங்கிருந்து வெளியேறி வந்து வவுனியாவில் தமது அலுவலகங்களை அமைத்திருந்த போதிலும் அந்த நிறுவனங்கள் இடம்பெயர்ந்து வரும் மக்களுக்கான நிவாரண பணிகளில் சுதந்திரமாக ஈடுபடுவதற்கு அரசாங்கத்தினால் அனுமதி வழங்குவதில் தாமதம் ஏற்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, இன்று வவுனியாவுக்கு விஜயம் செய்த அனர்த்த முகாமைத்துவ மீள்குடியேற்ற அமைச்சர் ரிசாட் பதியுதீன் தலைமையில் வவுனியா செயலகத்தில் நடைபெற்ற உயர்மட்ட கூட்டம் ஒன்றில் ஐநா மன்றத்தின் தொண்டு நிறுவனங்கள், அரசாங்கத்தின் வழிகாட்டலில் இடம்பெயர்ந்த மக்களுக்கான நிவாரண பணிகளில் ஈடுபடுவது தொடர்பாக ஆராயப்பட்டு, அவற்றிற்கான பொறுப்புக்கள் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன.

போர்ப்பிரதேசத்திலிருந்து இதுவரையில் 13 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வவுனியாவில் உள்ள இடைத்தங்கல் முகாம்களுக்கு வந்து சேர்ந்திருக்கின்றார்கள் என்பதும், ஏற்கனவே இராணுவத்தினரிடம் வந்து சேர்ந்துள்ள மேலும் 12 ஆயிரம் பேர் இந்த முகாம்களுக்கு படிப்படியாகக் கொண்டு வந்து கொண்டிருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர். இவர்களுக்கான அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக்கொடுப்பதில் அரச திணைக்களங்களும் தொண்டு நிறுவனங்களும் இணைந்து செயற்படத் தொடங்கியிருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.

மேல் மாகாண சபைத் தேர்தலில் சுசந்திகாவும் களத்தில் குதிக்கிறார்

susanthika.jpgமுன்னாள் குறுந்தூர ஓட்ட வீராங்கனை சுசந்திகா ஜயசிங்க எதிர்வரும் மேல் மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடத் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. புதிதாக உருவாக்கப்பட்ட அரசியல் கட்சியொன்றில் வேட்பாளராகவே இவர் எதிர்வரும் மேல் மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடவுள்ளார்.

சுசந்திகா தடகள விளையாட்டுகளில் இருந்து ஓய்வுபெறப்போவதாக கடந்தவாரம் அறிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

முக்கிய அரசியல் கட்சியொன்றிலிருந்து அண்மையில் விலகிச் சென்ற குழுவினரே இப்புதிய கட்சியை உருவாக்கியுள்ளனர். இக்கட்சியின் தலைவர் மேல் மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக சுசந்திகா உட்பட பல முன்னாள் கிரிக்கெட் வீரர்களையும் அணுகியுள்ளதாகவும் அதற்கு சாதகமான பதில் கிடைத்துள்ளதாகவும் அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் அர்ஜுன ரணதுங்க கடந்த பொதுத் தேர்தலில் பொதுஜன ஐக்கிய முன்னணியில் போட்டியிட்டு வெற்றிபெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. இவரைப்போலவே தேர்தலில் போட்டியிடும் கிரிக்கெட் வீரர்கள் வெற்றிபெறுவார்கள் என்ற நம்பிக்கையுள்ளதாகவும் அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

ஏ.ஆர். ரஹ்மானுக்கு பாஃப்டா விருது

rahman.jpg‘ஸ்லம் டாக் மில்லினர்’ படத்துக்கு இசையமைத்த ஏ.ஆர். ரகுமானுக்கு, பிரிட்டிஷ் பிலிம் அகாடமியின் பாஃப்டா விருது கிடைத்துள்ளது.

பிரிட்டிஷ் இயக்குனர் டேனி பாயல் இயக்கத்தில் வெளியான ‘ஸ்லம்டாக் மில்லினர்’ படம், ஆஸ்கார் விருதுக்கு அடுத்து உயரியதாகக் கருதப்படும் ‘கோல்டன் குளோப்’ விருதைப் பெற்றது.

இப்படத்தில் இசையமைத்த ஏ.ஆர். ரஹ்மானுக்கு ‘கோல்டன் குளோப்’ விருதும் கிடைத்தது. மேலும் ஆஸ்கார் விருத்துக்கும் ‘ஸ்லம்டாக் மில்லினர்’ படம் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், பிரிட்டனில் உயரியதாகக் கருதப்படும் பாஃப்டா விருதை ஏ.ஆர். ரஹ்மான் பெற்றுள்ளார்.

உலகம் முழுவதும் உள்ள கலைஞர்களுக்கு பிரிட்டிஷ் பிலிம் அகாடமி விருது வழங்கி கவுரவித்து வருகிறது. ‘ஸ்லம்டாக் மில்லினர்’ படத்தில் இசையமைத்ததற்காக ஏ.ஆர். ரகுமானுக்கு இவ்விருது வழங்கப்பட்டுள்ளது.

இதுதவிர, சிறந்த படம், சிறந்த இயக்குநர், சிறந்து திரைக்க‌தை, ஒளிப்பதிவு, எடிட்டிங், சவுண்ட் என மேலும் ஆறு விருதுகளையும் ‘ஸ்லம்டாம் மில்லினர்’ பெற்றுள்ளது.

மக்களை அழைத்துவர 40 பஸ்கள் சேவையில்

bus.jpgவன்னியில் இருந்துவரும் மக்களை வவுனியாவுக்கு அழைத்துவருவதற்கென 40 பஸ்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அனர்த்த நிவாரண மற்றும் மீள்குடியேற்ற அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார். புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் இருந்து வந்த சுமார் 12 ஆயிரம் பேர் ஓமந்தை மற்றும் கிளிநொச்சி பகுதிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் கட்டம் கட்டமாக வவுனியா அழைத்து வரப்படுவதாகவும் அவர் கூறினார்.

மக்களை அழைத்துவர இ.போ.ச. மற்றும் தனியார் பஸ்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதோடு, வவுனியாவுக்கு அழைத்துவரப்படும் மக்கள் வவுனியாவிலுள்ள பாடசாலைகளில் தங்க வைக்கப்பட்ட பின் தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்படவுள்ளனர்.

ஆஸ்திரேலியா காட்டுத்தீ: பலி 173 ஆக உயர்வு

forest_fire.jpgஆஸ்தி ரேலியாவில் ஏற்பட்ட காட்டுத் தீக்கு இறந்தோர் எண்ணிக்கை 173 ஆக உயர்ந்துள்ளது. தீயை அணைக்க தொடர்ந்து முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்தில் உள்ள காடுகளில் கடந்த சனிக்கிழமை அன்று தீ விபத்து ஏற்பட்டது. அங்கு வீசும் அனல் காற்று, வெப்பம் காரணமாக தீ மேலும் பல இடங்களுக்கு பரவியது. சுமார் 30 ஆயிரம் சதுர கிலோ மீட்டர் தொலைவுக்கு தீ கொளுந்து விட்டு எரிந்தது. தீயை அணைக்க தீயணைப்புப் படையினர் எவ்வளவோ முயற்சி மேற்கொண்டும் உடனடியாகப் பலன் உண்டாகவில்லை.

இந்த தீ விபத்தில் சிக்கி பலர் உயிரிழந்தனர். இதுவரை 173 பேர் உயிரிழந்திருப்பது தெரிய வந்திருப்பதாக, காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மேலும், 750-க்கும் மேற்பட்ட வீடுகள் எரிந்து சாம்பலாகின. பொது மக்களின் உடமைகளுக்கும் பலத்த சேதம் உண்டானது. காட்டுத் தீயில் பலியானோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.

கடந்த 100 ஆண்டுகளில் ஆஸ்திரேலியாவில் இந்த அளவுக்கு பெரிய தீவிபத்து ஏற்பட்டதில்லை என்று ஆஸ்திரேலிய நிர்வாகம் தெரிவித்துள்ளது. காட்டுத் தீயால் கடும் பாதிப்பை சந்தித்திருக்கும் மேரிஸ்வில்லி, கிங்ஸ்லேக் ஆகிய இரு நகரங்களுக்கும் மக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த இரு ஊர்களிலும்தான் அதிக அளவிலான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.

பாக். விஞ்ஞானி விடுதலைக்கு அமெரிக்கா, பிரான்சு எதிர்ப்பு – மீண்டும் அணு ஆயுதத்தை விற்பார் என ஒபாமா சந்தேகம்

obama-2001.jpgபாகிஸ் தான் அணு விஞ்ஞானி விடுதலைக்கு அமெரிக்கா, பிரான்சு ஆகிய நாடுகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. அவர் தொடர்ந்து அணு ஆயுதத்தை பரப்பும் அபாயம் உள்ளதாக ஒபாமா அரசு கூறியுள்ளது.  அணு ஆயுத தொழில்நுட்பத்தை வடகொரியா, ஈரான், லிபியா ஆகிய நாடுகளுக்கு விற்றதால் 5 ஆண்டுகளாக வீட்டுக்காவலில் வைக்கப்பட்டு இருந்த பாகிஸ்தான் அணு விஞ்ஞானி அப்துல்காதிர்கான் நீதிமன்ற உத்தரவின் பேரில் கடந்த சனிக்கிழமை விடுதலை செய்யப்பட்டார். இதற்கு அமெரிக்கா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இது குறித்து வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ரொபர்ட் கிப்ஸ் கூறியதாவது:-  அப்துல் காதிர்கான் விடுதலை பற்றி பாகிஸ்தான் அரசு அதிகாரப்பூர்வமாக எதுவும் கூறவில்லை. அணு ஆயுத பரவல் குறித்து ஜனாதிபதி ஒபாமா பல தடவை கவலை தெரிவித்துள்ளார். காதிர்கான், அவரது வீட்டுக்காவலுக்கு காரணமான அணு ஆயுத தொழில்நுட்பத்தை விற்கும் செயலில் மீண்டும் ஈடுபட மாட்டார் என்று பாகிஸ்தான் உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்று ஒபாமாவும், அவரது அரசும் கேட்டுக்கொள்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் கார்டன் துகுயிட் கூறியதாவது:- அப்துல் காதிர்கான் விடுதலை மிகவும் வருந்ததக்கது. அவர் இன்னமும் அணு ஆயுதங்களை பரப்பும் ஆபத்தானவராக இருந்து வருகிறார். அவர் வடகொரியாவுக்கும், ஈரானுக்கும் அணு ஆயுத தொழில்நுட்பங்களை விற்றதால் சர்வதேச பாதுகப்புக்கு ஏற்பட்ட பாதிப்புகள், இன்னும் பல ஆண்டுகளுக்கு நீடிக்கும்.  அப்துல் காதிர்கான் விவகாரத்தில் அமெரிக்காவின் நிலை, பாகிஸ்தானுக்கு நன்றாகவே தெரியும். அதையும் மீறி அவரை விடுவித்தது துரதிருஷ்டவசமானது. இவ்வாறு அவர் கூறினார்.

காதிர்கான் விடுதலைக்கு அமெரிக்க வெளியுறவு மந்திரி ஹிலாரி கிளிண்டனும் கவலை தெரிவித்துள்ளார். இது பற்றி பிறகு விரிவாக பேசுவதாகவும் அவர் கூறினார்.
பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் விவகாரங்களுக்கான அமெரிக்க சிறப்பு பிரதிநிதி ரிச்சர்டு ஹால்ப்ரூக், அடுத்த வாரம் பாகிஸ்தான் செல்கிறார். அப்போது அவர் இவ்விவகாரம் குறித்து பாகிஸ்தான் அரசிடம் பேசுகிறார். காதிர்கான் விடுதலை குறித்து பிரான்சு வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் எரிக் செவாலியரும் கவலை தெரிவித்துள்ளார். அணு ஆயுத பரவலில் காதிர் கான் ஈடுபடக்கூடாது என்று அவர் கேட்டுக்கொண்டார்.

இதற்கிடையே, இவ்விவகாரத்தில் முதல்முறையாக பாகிஸ்தான் பதில் அளித்துள்ளது. பாகிஸ்தான் அணு ஆயுத தொழில்நுட்பங்கள் பாதுகாப்பாக இருப்பதாகவும், எனவே, காதரிர்கான் இனிமேல் அச்சுறுத்தலாக இருக்க மாட்டார் என்றும் பாகிஸ்தான் வெளியுறவு மந்திரி குரேஷி தெரிவித்தார்.

சேலத்தில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் இலங்கை குங்பூ அணி திரும்பியது

தற்காப்பு கலைப் போட்டியில் பங்கேற்க சேலம் வந்த இலங்கை வீரர்களை போட்டியிலிருந்து நீக்க வேண்டுமென்று கோரி இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். அப்போது இலங்கை தேசியக் கொடி எரிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.இதையடுத்து இலங்கை அணி பாதுகாப்பாக நாட்டுக்கு திருப்பி அனுப்பப்பட்டது.சேலம் காந்தி மைதானத்தில் உள்ள உள்விளையாட்டு அரங்கில் சனிக்கிழமை மாலை கராத்தே, குங்பூ, குத்துச்சண்டை, டேக்குவாண்டோ போன்ற தற்காப்பு

கலைப் போட்டிகள் நடந்தது. இதில் பங்கேற்க இலங்கையில் இருந்து 6 வீரர்கள்,2 வீராங்கனைகள் மற்றும் ஒரு பயிற்சியாளர் என மொத்தம் 9 சிங்களவர்கள் வந்திருந்தனர். விளையாட்டு போட்டியின் தொடக்க விழாவில் இலங்கை வீரர்கள் தங்கள் நாட்டு தேசியக் கொடியை ஏந்தி வந்தனர். சேலத்துக்கு சிங்கள வீரர்கள் வந்திருக்கிறார்கள் என்ற செய்தி காட்டுத் தீ போல் பரவியது. இதையடுத்து இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் மைதானத்தின் முன்பு இலங்கை அரசுக்கு எதிராக கோஷம் போட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர். போட்டியில் இருந்து அந்த வீரர்களை நீக்க வேண்டும் என கோஷம் எழுப்பினார்கள்.

இலங்கை வீரர், வீராங்கனைகள் வைத்திருந்த அவர்களது தேசியக்கொடியையும் பறித்து தீவைத்து எரித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.வீரர்களின் பாதுகாப்புக் கருதி தற்காப்பு கலைப் போட்டி நிறுத்தப்பட்டது. தகவல் கிடைத்ததும் சேலம் மாநகர துணை கமிஷ்னர் ஜான்நிக்சன் விரைந்து வந்து அங்கிருந்த இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தினருடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இலங்கை வீரர்களை போட்டியில் இருந்து வெளியேற்றுவதாக அவர் உறுதியளித்தார். இதையடுத்து இலங்கைக்கு வீரர்கள் பாதுகாப்புடன் திருப்பி அனுப்பப்பட்டனர்.