கட்டுரைகள்

கட்டுரைகள்

கட்டுரைகளும் விவாதங்களும்

முத்துக்குமார் கொலை செய்யப்பட்டாரா? சுப்ரமணியசாமி சந்தேகம்

muthukumar-30011.jpgஇலங்கை தமிழர்களுக்காக தீக்குளித்த முத்துக்குமார் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என்ற சந்தேகம் தமக்கு உள்ளதாக ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணிய சாமி தெரிவித்துள்ளார். சென்னையில் அவர் நிருபர்களிடம் கூறுகையில்,

முத்துக்குமாரின் மரணம் தற்கொலையா? கொலையா? என்ற சந்தேகம் எங்களுக்கு வந்திருக்கிறது. முத்துக்குமாரிடம், தீக்குளிக்க முன்வா. நாங்கள் உன்னை தடுத்து விடுவோம் என்று சிலர் அவருக்கு வாக்குறுதி கொடுத்ததாக எனக்கு தகவல் கிடைத்திருக்கிறது.முத்துக்குமார் எழுதியதாக வெளியான நான்கு பக்க கடிதம் விடுதலைப்புலிகள் தொடர்பாளர் எழுதியது போல இருக்கிறது. அது நம்நாட்டு தமிழ் அல்ல, இலங்கை தமிழ் போல இருக்கிறது.

அவரது மரணம் குறித்து விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும். அவர் கொலை செய்யப்பட்டார் என்றால், அதன் பின்னணியில் யாரெல்லாம் இருக்கிறார்கள் என்றும் கண்டுபிடிக்க வேண்டும். பந்த் நடத்துவது தேசத்துரோக முடிவு. அதனை வாபஸ் பெற வேண்டும். அப்படி பந்த் நடத்தும் தலைவர்களை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்றார் சுப்பிரமணிய சாமி.

சீனப்பிரதமர் மீது செருப்பு வீச்சு

china-pm.jpgகடந்த ஆண்டு இறுதியில், அமெரிக்க அதிபராக இருந்த ஜார்ஜ் புஷ் பாக்தாத் சென்றபோது அவர் மீது செய்தியாளர் ஒருவர் தனது இரு ஷூக்களையும் வீசிய சம்பவம் உலகையே பரபரப்பில் ஆழ்த்தியது. இந்த சம்பவம் மறைவதற்குள் லண்டனில், சீன பிரதமர் வென் ஜியாபோ மீது ஷூ வீசப்பட்டுள்ளது.

சீன பிரதமர் வென் ஜியாபோ 3 நாள் பயணமாக இங்கிலாந்துக்கு சென்றுள்ளார். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் நடந்த கூட்டத்தில் அவர் உரையாற்றினார். அப்போது, திடீரென எழுந்த ஒரு வாலிபர், வென் ஒரு சர்வாதிகாரி. இந்த சர்வாதிகாரிக்கு கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் எப்படி பேச அனுமதி கொடுக்கலாம் என்று ஆவேசமாக கூறியபடி தன் ஷூவை கழற்றி வீசினார். ஆனால் வென் ஜியாபோ மீது ஷூ படவில்லை. வென் ஜியாபோ இருந்த மேடைக்கு முன்பாகவே விழுந்து விட்டது.

உடனடியாக பாதுகாப்புப் படையினர் அந்த நபரை மடக்கிப் பிடித்து அப்புறப்படுத்தினர். பின்னர் அவர் கைது செய்யப்பட்டார்.

ஈழத்தில் போரை நிறுத்தாவிட்டால் குண்டை வெடிக்கச் செய்வதாக மிரட்டியவர் கைது

tinakaran.jpgஇலங்கையில் போரை நிறுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லை என்றால் கல்லூரியை வெடிகுண்டு வைத்து தகர்க்க போவதாக மிரட்டிய வாலிபரை கடலூர் போலீசார் கைது செய்தனர். இலங்கையில் தமிழர்கள் மீதான தாக்குதலை தடுத்து நிறுத்தக்கோரி கடலூர் பெரியார் கல்லூரி மாணவர்கள் வளாகத்துக்குள் கடந்த 5 நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று வாலிபர் ஒருவர் மாணவர்கள் உண்ணாவிரதம் இருக்கும் இடத்துக்கு வந்து மாணவர்களை சந்தித்து பேசினார். பின்னர் ஈழம் மலரட்டும், மத்திய அரசே இலங்கையில் போரை நிறுத்து என்று கோஷமிட்டபடி கல்லூரியின் அலுவலகத்துக்குள் நுழைந்தார். அப்போது அங்கே இருந்த பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்களிடம் இலங்கையில் போரை நிறுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி இந்த கல்லூரியை வெடிகுண்டு வைத்து தகர்க்க போகிறேன் என கூறியுள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அலுவலக ஊழியர்கள் அவரை மடக்கிபிடிக்க முயன்றனர். அப்போது அவர், என்னை பிடிக்காதீர்கள் வெடிகுண்டு வைத்துள்ளேன் வெடித்துவிடும் என்று கையில் மஞ்சள் நிறத்தில் இருந்த ரிமோட் போன்ற கருவியை காண்பித்து பயமுறுத்தியுள்ளார். இதையடுத்து அலுவலகத்துக்குள் இருந்த பேராசிரியர்களும், ஊழியர்களும் ஓட்டம் பிடித்தனர். இதுபற்றி உடனடியாக போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் வருவதை கண்ட வாலிபர் அங்கிருந்து தப்பியோட முயன்றான்

ஆனால் போலீசார் அவரை விரட்டிச் சென்று பிடித்து சோதனை செய்தனர். அவரிடம் வெடிகுண்டு எதுவும் இல்லை என்பதும், கையில் வைத்திருந்தது ரேடியோ, டி.வி. போன்ற எலக்ட்ரானிக் பொருட்களை பழுது பார்க்க பயன்படும் `மல்டி மீட்டர்’ என்றும் தெரியவந்தது.

பின்னர் அவரை கைது செய்த போலீசார், மல்டிமீட்டர் கருவியையும் பறிமுதல் செய்தனர். விசாரணையில் அந்த வாலிபர் டெய்லர் என்றும், கடலூருக்கு அருகே உள்ள ரெட்டிச்சாவடி கிளிஞ்சிக்குப்பத்தை சேர்ந்த ஆனந்தன் என்பவரது மகன் தினகரன் என்றும் தெரியவந்தது.

விடுதலைப் புலிகளின் 7வது விமான ஓடுபாதை கைப்பற்றப்பட்டுள்ளது

airstrip-1501.jpgவிடுதலைப் புலிகளின் 7வது விமான ஓடுபாதை கைப்பற்ற்ப்பட்டுள்ளது புலிகளின் கடைசி விமான ஓடுபாதையெனக் கருதப்படும் இந்த ஓடுபாதை முல்லைத்தீவு சுந்தரபுரத்திற்கு  மேற்குப் பகுதியிலும் பிரமந்தாறு பகுதியின் வடக்கேயும்  அமைந்துள்ளது. சுமார் 2 கி.மீ. நீளமான இந்த ஓடுபாதையை இன்று (3) காலை கைப்பற்றியுள்ள பிரிகேடியர் சவேந்திர சில்வா தலைமையிலான 58வது படையணியினர் அப்பகுதியைத் தற்போது தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவ்ந்துள்ளனர் என்று இராணுவத் தலைமையகம் தெரிவித்துள்ளது.

தீவிரவாதிகளை விருந்தாளிகளைப் போல் பாகிஸ்தான் நடத்துகிறது இந்தியா குற்றச்சாட்டு – எம்.கே. நாராயணன்

mk-narayanan.jpgவீட்டுக் காவலில் உள்ள விருந்தாளிகளை வீட்டு விருந்தாளிகளைப் போல் பாகிஸ்தான் நடத்துகிறது என்று தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன் குற்றம் சாட்டினார்.  மும்பையில் கடந்த நவம்பர் 26ம் தேதி பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இவர்களுக்கு பின்னணியாக இருந்தவர்கள் பாகிஸ்தானில்  உள்ளனர். இதற்கான ஆதாரங்களை பாகிஸ்தானிடம் இந்தியா தாக்கல் செய்து நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டது.

இதற்கு பாகிஸ்தான் தரப்பில் இருந்து இதுவரை அதிகாரப்பூர்வமான பதில் வரவில்லை. அவர்கள் கேட்டால் இன்னும் அதிக தகவல்களை தரவும் இந்தியா தயாராக உள்ளது என்று வெளியுறவு அமைச்சர் பிரணாப் கூறினார்.  இந்த நிலையில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன் தனியார் தொலைக்காட்சிக்கு நேற்று அளித்த பேட்டி:  இந்தியா அளித்துள்ள ஆதாரங்கள் அடிப்படையில் பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்கும் என்று எதிர்பார்த்தோம்.

ஆனால் இதற்கு மாறாக பாகிஸ்தான் இந்தியாவிடமே இருமுறை கேள்விக் கணைகளை தொடுத்தது. ஒருமுறை கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்து விட்டோம். லஷ்கர் இயக்கத்தின் தலைவர் லக்வி உள்ளிட்ட சில தீவிரவாத தலைவர்கள வீட்டுக் காவலில் வைத்திருப்பதாக பாகிஸ்தான் கூறுகிறது. ஆனால், இந்த தீவிரவாதிகள் வீட்டு விருந்தாளிகளைப் போலத்தான் நடத்தப்படுகிறார்கள்.

மசூர் அசாத் என்ற தீவிரவாதி தெற்கு ஆப்கானிஸ்தானில் இருக்கலாம். அவர் எங்கிருக்கிறார் என்பது பாகிஸ்தான் அரசுக்கு நன்றாகவே தெரியும். ஆனாலும் அவரை பிடிக்கவில்லை. குற்றம் செய்தவர்களை விசாரணைக்காக இந்தியாவிடம் ஒப்படைப்பதில் பாகிஸ்தானுக்கு என்ன தயக்கம் என்பது தெரியவில்லை.

மும்பையில் தாக்குதல் நடத்தியவர்கள் பாகிஸ்தானில் இருந்து செயல்படவில்லை என்று லண்டனில் உள்ள பாகிஸ்தான் தூதர் வாஜித் சம்சல் கூறியிருப்பதை புரிந்து கொள்ள முடியவில்லை. பாகிஸ்தான் அரசு இன்னும் செயல்படவில்லை என்று தான் என்னால் கூற முடியும். இவ்வாறு எம்.கே. நாராயணன் கூறினார்.

முழு அடைப்பு போராட்டத்திற்கு பிஜேபி ஆதரவு.

eela-ganash.jpgஇலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கம் நாளை  நடத்த உள்ள முழு அடைப்பு போராட்டத்திற்கு பிஜேபி ஆதரவு அளிக்கும் என்று அக்கட்சியின் மாநில தலைவர் இல.கணேசன் கூறியிருக்கிறார். இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கம் 4ஆம்  தேதி நடத்துவதாக அறிவித்துள்ள முழு கடையடைப்புக்கு பிஜேபி ஆதரவு  தருகிறது.

தற்போது பத்திரிகைகளில்  வரும் செய்திகள், இலங்கையில் தவிக்கும் தமிழர்களை பாதுகாக்கவும், அவர்களுக்கு நிரந்தரமாக சமஉரிமை பெற்றுத்தரவும் ஒவ்வொருவரும் தன் பங்குக்கு ஏதேனும் செய்ய வேண்டும் என்று கருதுகிறார்கள் என்பதை உணர்த்துகிறது. சிலர் உணர்ச்சிவரப்பட்டு தங்களை  மாய்த்துக் கொள்ள முயற்சிக்கிறார்கள். செய் அல்லது செத்து மடி என்பது ஏற்புடையதல்ல. மாறாக “வாழ்ந்து லட்சியத்தை அடைந்து காட்டு’ என்பதில் நாம் உறுதியுடன் இருக்க வேண்டும்.

அரசியல் கட்சிகளும், அமைப்புகளும் பங்குக்கு செய்ய வேண்டியவைகளை செய்தும், மத்தியில் உள்ள காங்கிரஸ் அரசின் செயல்பாடு இந்தவிஷயத்திலும் திருப்திகரமாக இல்லை. எனவே மக்கள் அனைவரும் பங்கேற்கும் ஒரு சாத்வீக போராட்டம் நடத்துவதால் மக்களுக்கு தங்களது உணர்வுகளை வெளியிட ஒரு வடிகால் கிடைக்கும். இந்த அறிவிப்பை வெற்றிகரமாக்கிட மக்கள் தானாக முன் வர வேண்டும். தங்களது ஆதரவை ஒன்றுபட்டு மத்திய அரசுக்கு உணர்த்த வேண்டும்.

பிஜேபியின் தொண்டர்கள் இந்த முழு அடைப்புக்கு ஒத்துழைப்பார்கள். மக்கள் தானாக முன் வந்து தங்களது உணர்வை வெளிப்படுத்தும் வாய்ப்பு இது என்பதால் கட்சியின் தொண்டர்கள் தெருவில் இறங்கி எவரையும் வற்புறுத்த மாட்டார்கள்.
இது அச்சுறுத்தி வெற்றிகரமாக்கிய போராட்டம் என்கின்ற அவப்பெயர் வராது, தானாக வெற்றி பெறுவது சிறப்பாகும்.

ஆனால் அதே நேரத்தில், மாநில அரசும் தங்களது அதிகாரத்தை பயன்படுத்தி ஒடுக்க முனைவதும் கூடாது. எந்தவிதமான வன்முறைச் சம்பவங்கள் நடைபெறாது. அமைதி காக்கும் பணியினை அரசு செய்யட்டும். ஆனால் போராட்டம் வெற்றி பெற்றால் அதன் காரணமான அரசியல் லாபம் யாருக்குப் போகும் எனக் கணக்கிட்டு தடுக்க முனைதல் கூடாது என அரசை வற்புறுத்துகிறேன். தமிழர்கள் அனைவரும் இலங்கை தமிழர்களை காக்கவும், அவர்களுக்கு சம உரிமை பெறவும் முனையும் விஷயத்தில் ஒன்றுபட்டு நிற்போம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

ஈராக் மாகாண சபை தேர்தல் முடிவுகள் அடுத்த வாரம்

iraq-elc.jpgஈராக்கில் நடந்து முடிந்த மாகாண சபைத் தேர்தலின் முடிவுகள் அடுத்த வாரம் அறிவிக்கப்படவுள்ளதாகத் தெரிவித்த தேர்தல் அலுவலகம் முழு முடிவுகளையும் அறிவிக்கப் பல வாரங்கள் தேவைப்படும் எனத் தெரிவித்தது. புதுவகையான தேர்தல் முறை என்பதால் வாக்குகளை எண்ண பல நாட்கள் எடுக்கும். மற்றும் எண்ணுவதில் பெரும் சிக்கல்களும் உள்ளதென்றும் செயலகம் தெரிவித்துள்ளது. கடந்த சனிக்கிழமை நடந்த மாகாண சபைத் தேர்தல்களில் 15 மில்லியன் மக்கள் வாக்களித்தனர்.

440 ஆசனங்களுக்கு 14 ஆயிரம் வேட்பாளர்கள் போட்டியிட்டனர். 400 கட்சிகள் களத்தில் குதித்தன. ஈராக்கிற்கான ஐ. நா. வின் தூதுவர் முஸ்தபாமிஸ்டிரா இதுபற்றிக் கூறுகையில் :- ஈராக்கில் இறுதியாக நடந்த தேர்தல் முடிவுகள் கணக்கிடப்பட்ட விதம் பூரண திருப்தியில்லை. விகிதாசாரம் முறையாகப் பேணப்படவில்லை.எனவே இம்முறை இந்தத் தவறுகள் இடம்பெறாமல் தவிர்க்க பல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகக் கூறினார். மீள் புனரமைப்புப் பணிகள், வெளிநாட்டு உதவிகள் என்பவற்றை மாகாண சபை முன்னெடுப்பதுடன், ஆளுநர்களையும் நிர்வாகமே தெரிவு செய்கின்றது. 2.5 பில்லியன் ரூபா புனரமைப்புகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

சாத்தான்களின் செவிகளில் மனித உரிமை வேதம் – தங்கள் வேள்விக்கு மக்களை பலியிட சிங்கமும் புலியும் தயார் : த ஜெயபாலன்

War in Wanni - Photo_Puthinamமகாபாரதக் கதையில் அனைத்தையும் வைத்து சீட்டாடி நிர்க்கதியான தருமன் இறுதியில் தனது மனைவியைப் பணயம் வைத்து சீட்டாடித் தோற்றது என்பது புராணக் கதை. இப்போது இலங்கை அரசுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையே நடைபெறுகின்ற இந்த யுத்தத்தில் ஒட்டுமொத்த வன்னி மக்களும் பணயம் வைக்கப்பட்டு உள்ளனர். ஐக்கிய நாடுகள் சபை, சர்வதேச மன்னிப்புச் சபை, மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு எனப் பல்வேறு சர்வதேச அமைப்புகள் தொடர்ச்சியாக அழுத்தங்களைக் கொடுத்த போதும் அவற்றை முற்று முழுதாக உதாசீனப்படுத்திவிட்டு தங்கள் பாட்டுக்கு தங்கள் நோக்கங்களுக்காக இரு தரப்பும் யுத்தத்தைத் தொடர்கிறது. நிர்க்கதியான மக்கள் என்பதற்கு உண்மையான உதாரணம் வன்னி மக்கள் என்பதற்கு அப்பால் அதற்கொரு விளக்கம் வேண்டியதில்லை.

சார்ள்ஸ் டார்வினின் 200வது பிறந்த தினம் பெப் 12ல் நினைவுகூரப்படும் காலத்தில் யுத்தப் பிரியர்களான சிங்கமும் புலியும் ‘தக்கன பிழைக்கும்’ விதியை வன்னி மக்களின் மத்தியில் வைத்து பரீட்சித்துப் பார்க்கத் முனைந்துள்ளன. அனைத்து யுத்த விதிகளையும் மீறி கடந்த பல மாதங்களாக நடைபெறும் இந்த யுத்தம் தற்போது இந்த அத்தியாயத்தின் க்ளைமக்ஸிற்கு வந்துள்ளது. துரதிஸ்ட வசமாக இங்கு கதாநாயகர்கள் யாரும் இல்லை. ஆபத்தில் கைகொடுக்க கிருஸ்ணபரமாத்மாவும் இல்லை. இரு பக்கத்திலும் நிற்பது சாத்தான்கள் மட்டுமே. இவர்களுக்கு மத்தியில் அப்பாவி வன்னி மக்கள் ஒன்றல்ல இரண்டல்ல 250 000 பேர் வரை மாட்டிக் கொண்டு உள்ளனர். குழந்தைகள் சிறுவர்கள் பெண்கள் வயோதிபர்கள் எவ்வித வேறுபாடும் இன்றி தொடர்ச்சியான குண்டுத் தாக்குதல்களுக்குள் வெட்டைவெளியில் விடப்பட்டு உள்ளனர். இந்த ஆபத்தான சூழலில் குழந்தைகள் பிரசவிக்கின்றன. மழலைகள் தங்கள் உயிரைக் காக்க அழுதழுது ஓடுகின்றன. மரணங்கள் தொடர்கிறது. அன்புக்குரியவர்களை இழந்த உறவுகள் துடிக்கின்றன.

செப்ரம்பர் 11 அன்று தாக்குதலுக்கு உள்ளான அமெரிக்க இரட்டைக் கோபுரங்களில் ஒன்று உலகமே பார்த்து நிற்க யாருமே எதுவும் செய்ய வியலாத கையறு நிலையில் நிற்க சில மணி நேரங்களில் சரிந்து வீழ்ந்தது. இறுதிநேரத்தில் தங்களைக் காப்பாற்றிக் கொள்ள அந்த மக்கள் தவித்த தவிப்பு கையறு நிலையில் உலகமே அதனைப் பார்த்து நின்றது. அந்த மனித அவலம் அதனிலும் பல மடங்காக புதுக்குடியிருப்பில் நிகழ்ந்துவிடும் என்ற அபாயம் இப்போது ஏற்பட்டு உள்ளது. ஆனால் இந்த அவலத்தை ஏற்படாமல் தடுக்க சகல சந்தர்ப்பங்களும் உண்டு. அப்படி இருந்தும் ஒரு மனித அவலம் ஏற்படுத்தப்படுமானால் அதனை தமிழ் மக்கள் என்றைக்கும் மன்னிக்கவோ மறக்கவோ மாட்டார்கள்.

சர்வதேச சமூகம் விரைந்து செயற்பட வேண்டும். அதற்கான நடைமுறைச்சாத்தியமான நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட வேண்டும். இன்றுள்ள நிலையில் வெறும் அழுத்தங்கள் மட்டும் போதாது. செயற்பாடுகள் மிக அவசியம்.

வன்னி மக்கள் பணயம் வைக்கப்பட்டு உள்ள இந்த நிலையிலும் அந்த மக்களை யுத்தப் பகுதிகளில் இருந்து உடனடியாக வெளிக்கொண்டு வருவதைக் கோருவதை விட்டுவிட்டு புலிகளுக்கு ஆதரவாகவும் எதிராகவும் ஊர்வலங்களும் ஆர்ப்பாட்டங்களும் ஏற்பாடு செய்யப்படுகிறது.

ஜனவரி 31ல் பிரித்தானிய தமிழர் பேரவையும் தமிழ் இளையோர் அமைப்பும் இணைந்து மாபெரும் ஆர்ப்பாட்டத்தை நடத்தியது. அதில் 50 000 – 100 000 பேர் வரை கலந்தகொண்டனர். சகல அரசியல் முரண்பாடுகளையும் மறந்து வன்னி மக்களைக் காக்க அவர்கள் திரண்டனர். அங்கு ஒரு சில புலி ஆதரவுக் குரல்களும் வே பிரபாகரனின் படங்களும் கொண்டு வரப்பட்டாலும் அவற்றை அப்புறப்படுத்தும் படி நிர்ப்பந்திக்கப்பட்ட சம்பவங்களும் நடந்தது.  யுத்தம் நிறுத்தப்பட வேண்டும் என்பதே அவ்வூர்வலத்தில் கலந்த கொண்டவர்களின் பிரதான கோரிக்கையாக அமைந்தது. ஆனால் ஏற்பாட்டாளர்களான பிரித்தானிய தமிழர் பேரவையினது செய்திக் குறிப்பு முற்றிலும் விடுதலைப் புலிகளின் ஆதரவு நிலையை எடுத்து உள்ளது. சர்வதேச அமைப்புகள் அனைத்துமே வன்னி மக்களை புலிகள் தடுத்து வைத்திருப்பதாகக் குற்றம்சாட்டி உள்ள நிலையில் தங்கள் புலியாதரவு நிலைப்பாட்டினால் பிரித்தானிய தமிழர் பேரவை ஆர்ப்பாட்டத்தின் நோக்கத்தை ஒரு வகையில் பாதிக்கச் செய்துள்ளனர்.

இங்கு பிரித்தானிய தமிழர் போறம் புலிகளுக்கு வக்காலத்து வாங்க அதற்கு அடுத்த 24 மணி நேரத்தில் யாழ்ப்பாணத்தில் ஈபிடிபி புலிகளுக்கு எதிராக ஊர்வலம் நடாத்தி உள்ளது. புலிகள் பணயக் கைதிகளாக உள்ள தமிழ் மக்களை விடுவிக்க வேண்டும் என்று அந்த ஊர்வலத்தில் கோரப்பட்டு உள்ளது.

தடுத்து வைக்கப்பட்டு இருப்பது வன்னி மக்கள். அவர்கள் ஒரு மனித அவலத்தை ஒவ்வொரு விநாடியும் எதிர்நோக்கி உள்ளனர். அவர்களுக்காக யாழிலும் புலத்திலும் உள்ள மக்களின் மனங்கள் துடிக்கின்றது. ஆனால் அதனை பிரித்தானிய தமிழர் பேரவை, ஈபிடிபி என்பன தங்கள் குறுகிய அரசியல் நலன்களின் அடிப்படையில் பயன்படுத்த முற்பட்டு உள்ளன. பிரித்தானிய  தமிழர் பேரவைக்கு புலிகளின் மனித உரிமை மீறல்கள் தெரியவில்லை. ஈபிடிபிக்கு தனதும் தனது அரசினதும் மனித உரிமை மீறல்கள் தெரியவில்லை. இந்த ‘செலக்டிவ் அம்னீசியா’ காரர்கள் தமிழ் மக்களுக்கு தலைமை தாங்க முற்பட்டதே தமிழ் மக்களின் இந்த அவலத்திற்கு காரணம்.

அரசாங்கத்திற்கு முண்டு கொடுக்கும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்த, தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் ஆனந்தசங்கரி, ஈபிஆர்எல்எப் தலைவர் சிறீதரன், புளொட் தலைவர் சித்தார்த்தன், மற்றும் கிழக்கின் முதலமைச்சர் பிள்ளையான் பா உ முரளீதரன் இவர்கள் ஏன் இந்த வன்னி மக்களின் பாதுகாப்புப் பற்றி அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்கவில்லை. புலிகள் பயங்கரவாதிகள் என்று குற்றம்சாட்டும் இந்தத் தலைவர்கள் புதுக்குடியிருப்பில் சிக்கித் தவிக்கும் மக்களைக் கருத்தில் எடுக்காமல் தங்களுடைய அரசாங்கம் நடத்தும் இந்த யுத்தம் பற்றி மௌனமாக இருக்கிறார்கள். அங்கு மக்கள் உயிரிழக்கும் போதெல்லாம் அதனைப் புலிகளின் தலையில் கட்டி தப்பித்துக் கொள்வதைத் தவிர இவர்களால் எதுவும் செய்ய முடியவில்லை. இந்த வன்னி மக்களுக்கு ஏற்படப் போகும் அவலத்தை தடுத்து நிறுத்துவதற்காகவேனும் இவர்கள் குரல் கொடுக்காவிட்டால் இவர்கள் செய்வது அரசியல் விபச்சாரம் என்று குறிப்பிடுவது மிகையல்ல. இது இவர்களுக்கு மட்டுமல்ல புலம்பெயர் தேசங்களில் உள்ள இவர்கள் ஏஜென்டுகளுக்கும் பொருந்தும்.

ஏற்படப் போகும் இந்த அவலத்திற்கு புலிகளும் சம பொறுப்புடையவர்கள். அவர்கள் ஒன்றும் புனிதர்கள் அல்ல என்பது அரசாங்கத்தின் மீதான தனது குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரமாக பிரித்தானிய தமிழர் பேரவை சுட்டிக்காட்டும் சர்வதேச அமைப்புகள் அனைத்தினதும் அறிக்கைகளிலும் மீண்டும் மீண்டும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. ஆனால் தமிழ் தேசியக் கூட்டமைப்பு அதைப் பற்றி மூச்சும் விடுவதில்லை. பிரபாகரன் மாவீரர் தின உரையில் உறுமினால் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்றத்தில் ‘வடக்கில் இருந்து தெற்குக்கு சவப்பெட்டிகள் அனுப்புவோம்’ என்று டபிள் உறுமல் விடுவதைத் தவிர உருப்படியாக எந்த அரசியலும் செய்யவில்லை.

தங்களுக்கு வாக்களித்த மக்களை விட்டுவிட்டு தமிழ் மக்களை நாங்கள் தான் பிரதிநிதித்துவம் செய்கிறோம் என்று சொல்லிக்கொண்டு புலிக்கும் சிங்கத்துக்கும் பின்னால் நிற்கும் தமிழ் தலைமைகளும் அவர்களின் புலம்பெயர் முகவர்களும் இந்த வன்னி மக்கள் சிந்தும் குருதியில் தங்களைக் கறைபடுத்திக் கொண்டுள்ளனர்.

இப்போதுள்ள நிலையில் யுத்தத்தில் சிக்குண்ட தமிழ் மக்கள் பாதுகாக்கப்பட வேண்டுமானால்
1. யுத்தம் உடனடியாக முடிவுக்கு கொண்டு வரப்பட வேண்டும். அல்லது
2. அரச படைகளும் புலிகளும் குறைந்த பட்சம் சில தினங்களுக்காவது யுத்தத்தைத் தவிர்த்து மக்கள் பாதுகாப்பாக பாதுகாப்பு வலயங்களுக்கு செல்வதற்கான சூழலை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.
3. பாதுகாப்பு வலயங்கள் மீது தாக்குதல் நடத்துவதை இலங்கை அரசு உடனடியாக நிறுத்த வேண்டும்.
4. பாதுகாப்பு வலயங்களை சர்வதேச மனிதாபிமான அமைப்புகளின் பொறுப்பில் விடவேண்டும்.
5. விடுதலைப் புலிகளும் பாதுகாப்பு வலயங்களுக்கு மக்கள் செல்வதை அனுமதிக்க வேண்டும்.
6. பாதுகாப்பு வலயங்களுக்கு செல்வதற்கான பாதுகாப்பான வழியை புலிகளும் அரச படைகளும் ஏற்படுத்த வேண்டும்.
போன்ற ஜனவரி 29 அன்று ‘இலங்கை அரசும் புலிகளும் 200 000 – 300 000 தமிழர்களை ‘guinea pigs’ ஆக நடத்துகின்றனர் – பொறுப்பற்றவர்களின் யுத்தம் : த ஜெயபாலன்‘என்ற கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களுக்கு அல்லது அதற்கு ஒத்த விடயங்களை உடனடியாக செயற்படுத்த சர்வதேச சமூகத்திற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். அவலங்கள் ஏற்பட்ட பின் அதனைக் கண்டிப்பதிலும் அந்த அவலத்தை தடுத்து நிறுத்த அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட வேண்டும். இந்தப் போராட்டத்தில் தமிழ் மக்கள் மட்டுமல்ல சிங்கள முஸ்லீம் மக்களும் சர்வதேச மக்களும் இணைத்துக் கொள்ளப்பட வேண்டும்.

மன்மோகன் சிங் 8 நாள் சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் – 2 வாரத்தில் அலுவலகம் செல்வார்

sing.jpgஇதய அறுவை சிகிச்சை செய்து கொண்ட பிரதமர் மன்மோகன் சிங், 8 நாள் சிகிச்சைக்குப் பிறகு நேற்று வீடு திரும்பினார். இன்னும் 2 வாரத்தில் அவர் வழக்கமான பணிகளை கவனிப்பார். பிரதமர் மன்மோகன் சிங்குக்கு இதய ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்பட்டதால், ஜனவரி 23ம் தேதி டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மறுநாள் 14 மணி நேரம் இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

அதன் பிறகு பிரதமரின் உடல்நிலை வேகமான முன்னேறியது. 28ம் தேதி தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்து சாதாரண சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார்.  எட்டு நாள் சிகிச்சைக்குப் பிறகு நேற்று காலை 8 மணிக்கு மருத்துவமனையில் இருந்து மனைவி, மகள் மற்றும் குடும்பத்தினருடன் வீடு திரும்பினார். புறப்படும் முன்பு,  சிகிச்சை அளித்த டாக்டர்கள், நர்ஸ்களுக்கு, பிரதமர் தனிப்பட்ட முறையில் நன்றி தெரிவித்தார்.

 டிஸ்சார்ஜ் செய்வதற்கு முந்தைய பரிசோதனைகளை மும்பை டாக்டர் ராம்காந்த் பாண்டா தலைமையிலான குழு செய்தது.  நேற்று அதிகாலை பிரதமர் எழுந்ததும் டீ குடித்தார். மருத்துவமனை வளாகத்தில் சிறிது தூரம் வாக்கிங் சென்றார். பின்னர் பத்திரிகைகள் படித்தார். சிற்றுண்டி கொடுக்க தயாரானபோது வீட்டுக்குப் போய் சாப்பிட விரும்புவதாக கூறினார். பிரதமர் நேற்று உற்சாகமாக காணப்பட்டார் என்று டாக்டர்கள் தெரிவித்தனர்.

‘இப்போது, வீட்டில் இருந்தபடியே பிரதமர் பணியாற்றுவார். 2 அல்லது 3 வாரத்தில் அலுவலகம் வந்து வழக்கமான பணிகளை கவனிப்பார். பிரதமர் பூரண குணமடையும் வரை டாக்டர் பாண்டா தலைமையிலான குழு அவரை கவனித்து வரும்’ என்று மத்திய நல்வாழ்வுத் துறை அமைச்சர் அன்புமணி கூறினார். பிரதமரின் ஊடகத்துறை செயலாளர் தீபக் சாந்து விடுத்த அறிக்கையில், அடுத்து வரும் வாரங்களில் உணவு அளவு மற்றும் உடற்பயிற்சியை படிப்படியாக அதிகரிக்கும்படி டாக்டர்கள் ஆலோசனை கூறி உள்ளனர். தான் விரைவில் குணமடைய வேண்டி நாடு முழுவதும் மக்கள் பிரார்த்தனை செய்ததற்காக பிரதமர் நன்றி தெரிவித்துள்ளார். என்று கூறப்பட்டுள்ளது.

முல்லைத்தீவில் புலிகளின் ஒன்றுகூடல் தளம் மீது விமானத் தாக்குதல

jet-1301.jpgமுல்லைத்தீவு களப்புக்கு வடக்கு பிரதேசத்திலுள்ள புலிகளின் ஒன்று கூடல் தளம் ஒன்றை இலக்கு வைத்து விமானப் படையினர் நேற்று கடுமையான தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.  விமானப் படைக்குச் சொந்தமான ஜெட் ரக தாக்குதல் விமானங்களைப் பயன்படுத்தி நேற்றுப் பிற்பகல் 4.20 மணியளவில் நடத்தப்பட்ட தாக்குதல்கள் வெற்றியளித்துள்ளதாக விமானப் படைப் பேச்சாளர் விங் கமாண்டர் ஜனக நாணயக்கார தெரிவித்தார்.

முன்னேறிவரும் இராணுவத்தின் 59வது படைப் பிரிவினருக்கு உதவியாக நடத்தப்பட்ட தாக்குதல் வெற்றியளித்துள்ளதாக விமான ஓட்டிகளும், களமுனை வீரர்களும் உறுதியளித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.