மகாபாரதக் கதையில் அனைத்தையும் வைத்து சீட்டாடி நிர்க்கதியான தருமன் இறுதியில் தனது மனைவியைப் பணயம் வைத்து சீட்டாடித் தோற்றது என்பது புராணக் கதை. இப்போது இலங்கை அரசுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையே நடைபெறுகின்ற இந்த யுத்தத்தில் ஒட்டுமொத்த வன்னி மக்களும் பணயம் வைக்கப்பட்டு உள்ளனர். ஐக்கிய நாடுகள் சபை, சர்வதேச மன்னிப்புச் சபை, மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு எனப் பல்வேறு சர்வதேச அமைப்புகள் தொடர்ச்சியாக அழுத்தங்களைக் கொடுத்த போதும் அவற்றை முற்று முழுதாக உதாசீனப்படுத்திவிட்டு தங்கள் பாட்டுக்கு தங்கள் நோக்கங்களுக்காக இரு தரப்பும் யுத்தத்தைத் தொடர்கிறது. நிர்க்கதியான மக்கள் என்பதற்கு உண்மையான உதாரணம் வன்னி மக்கள் என்பதற்கு அப்பால் அதற்கொரு விளக்கம் வேண்டியதில்லை.
சார்ள்ஸ் டார்வினின் 200வது பிறந்த தினம் பெப் 12ல் நினைவுகூரப்படும் காலத்தில் யுத்தப் பிரியர்களான சிங்கமும் புலியும் ‘தக்கன பிழைக்கும்’ விதியை வன்னி மக்களின் மத்தியில் வைத்து பரீட்சித்துப் பார்க்கத் முனைந்துள்ளன. அனைத்து யுத்த விதிகளையும் மீறி கடந்த பல மாதங்களாக நடைபெறும் இந்த யுத்தம் தற்போது இந்த அத்தியாயத்தின் க்ளைமக்ஸிற்கு வந்துள்ளது. துரதிஸ்ட வசமாக இங்கு கதாநாயகர்கள் யாரும் இல்லை. ஆபத்தில் கைகொடுக்க கிருஸ்ணபரமாத்மாவும் இல்லை. இரு பக்கத்திலும் நிற்பது சாத்தான்கள் மட்டுமே. இவர்களுக்கு மத்தியில் அப்பாவி வன்னி மக்கள் ஒன்றல்ல இரண்டல்ல 250 000 பேர் வரை மாட்டிக் கொண்டு உள்ளனர். குழந்தைகள் சிறுவர்கள் பெண்கள் வயோதிபர்கள் எவ்வித வேறுபாடும் இன்றி தொடர்ச்சியான குண்டுத் தாக்குதல்களுக்குள் வெட்டைவெளியில் விடப்பட்டு உள்ளனர். இந்த ஆபத்தான சூழலில் குழந்தைகள் பிரசவிக்கின்றன. மழலைகள் தங்கள் உயிரைக் காக்க அழுதழுது ஓடுகின்றன. மரணங்கள் தொடர்கிறது. அன்புக்குரியவர்களை இழந்த உறவுகள் துடிக்கின்றன.
செப்ரம்பர் 11 அன்று தாக்குதலுக்கு உள்ளான அமெரிக்க இரட்டைக் கோபுரங்களில் ஒன்று உலகமே பார்த்து நிற்க யாருமே எதுவும் செய்ய வியலாத கையறு நிலையில் நிற்க சில மணி நேரங்களில் சரிந்து வீழ்ந்தது. இறுதிநேரத்தில் தங்களைக் காப்பாற்றிக் கொள்ள அந்த மக்கள் தவித்த தவிப்பு கையறு நிலையில் உலகமே அதனைப் பார்த்து நின்றது. அந்த மனித அவலம் அதனிலும் பல மடங்காக புதுக்குடியிருப்பில் நிகழ்ந்துவிடும் என்ற அபாயம் இப்போது ஏற்பட்டு உள்ளது. ஆனால் இந்த அவலத்தை ஏற்படாமல் தடுக்க சகல சந்தர்ப்பங்களும் உண்டு. அப்படி இருந்தும் ஒரு மனித அவலம் ஏற்படுத்தப்படுமானால் அதனை தமிழ் மக்கள் என்றைக்கும் மன்னிக்கவோ மறக்கவோ மாட்டார்கள்.
சர்வதேச சமூகம் விரைந்து செயற்பட வேண்டும். அதற்கான நடைமுறைச்சாத்தியமான நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட வேண்டும். இன்றுள்ள நிலையில் வெறும் அழுத்தங்கள் மட்டும் போதாது. செயற்பாடுகள் மிக அவசியம்.
வன்னி மக்கள் பணயம் வைக்கப்பட்டு உள்ள இந்த நிலையிலும் அந்த மக்களை யுத்தப் பகுதிகளில் இருந்து உடனடியாக வெளிக்கொண்டு வருவதைக் கோருவதை விட்டுவிட்டு புலிகளுக்கு ஆதரவாகவும் எதிராகவும் ஊர்வலங்களும் ஆர்ப்பாட்டங்களும் ஏற்பாடு செய்யப்படுகிறது.
ஜனவரி 31ல் பிரித்தானிய தமிழர் பேரவையும் தமிழ் இளையோர் அமைப்பும் இணைந்து மாபெரும் ஆர்ப்பாட்டத்தை நடத்தியது. அதில் 50 000 – 100 000 பேர் வரை கலந்தகொண்டனர். சகல அரசியல் முரண்பாடுகளையும் மறந்து வன்னி மக்களைக் காக்க அவர்கள் திரண்டனர். அங்கு ஒரு சில புலி ஆதரவுக் குரல்களும் வே பிரபாகரனின் படங்களும் கொண்டு வரப்பட்டாலும் அவற்றை அப்புறப்படுத்தும் படி நிர்ப்பந்திக்கப்பட்ட சம்பவங்களும் நடந்தது. யுத்தம் நிறுத்தப்பட வேண்டும் என்பதே அவ்வூர்வலத்தில் கலந்த கொண்டவர்களின் பிரதான கோரிக்கையாக அமைந்தது. ஆனால் ஏற்பாட்டாளர்களான பிரித்தானிய தமிழர் பேரவையினது செய்திக் குறிப்பு முற்றிலும் விடுதலைப் புலிகளின் ஆதரவு நிலையை எடுத்து உள்ளது. சர்வதேச அமைப்புகள் அனைத்துமே வன்னி மக்களை புலிகள் தடுத்து வைத்திருப்பதாகக் குற்றம்சாட்டி உள்ள நிலையில் தங்கள் புலியாதரவு நிலைப்பாட்டினால் பிரித்தானிய தமிழர் பேரவை ஆர்ப்பாட்டத்தின் நோக்கத்தை ஒரு வகையில் பாதிக்கச் செய்துள்ளனர்.
இங்கு பிரித்தானிய தமிழர் போறம் புலிகளுக்கு வக்காலத்து வாங்க அதற்கு அடுத்த 24 மணி நேரத்தில் யாழ்ப்பாணத்தில் ஈபிடிபி புலிகளுக்கு எதிராக ஊர்வலம் நடாத்தி உள்ளது. புலிகள் பணயக் கைதிகளாக உள்ள தமிழ் மக்களை விடுவிக்க வேண்டும் என்று அந்த ஊர்வலத்தில் கோரப்பட்டு உள்ளது.
தடுத்து வைக்கப்பட்டு இருப்பது வன்னி மக்கள். அவர்கள் ஒரு மனித அவலத்தை ஒவ்வொரு விநாடியும் எதிர்நோக்கி உள்ளனர். அவர்களுக்காக யாழிலும் புலத்திலும் உள்ள மக்களின் மனங்கள் துடிக்கின்றது. ஆனால் அதனை பிரித்தானிய தமிழர் பேரவை, ஈபிடிபி என்பன தங்கள் குறுகிய அரசியல் நலன்களின் அடிப்படையில் பயன்படுத்த முற்பட்டு உள்ளன. பிரித்தானிய தமிழர் பேரவைக்கு புலிகளின் மனித உரிமை மீறல்கள் தெரியவில்லை. ஈபிடிபிக்கு தனதும் தனது அரசினதும் மனித உரிமை மீறல்கள் தெரியவில்லை. இந்த ‘செலக்டிவ் அம்னீசியா’ காரர்கள் தமிழ் மக்களுக்கு தலைமை தாங்க முற்பட்டதே தமிழ் மக்களின் இந்த அவலத்திற்கு காரணம்.
அரசாங்கத்திற்கு முண்டு கொடுக்கும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்த, தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் ஆனந்தசங்கரி, ஈபிஆர்எல்எப் தலைவர் சிறீதரன், புளொட் தலைவர் சித்தார்த்தன், மற்றும் கிழக்கின் முதலமைச்சர் பிள்ளையான் பா உ முரளீதரன் இவர்கள் ஏன் இந்த வன்னி மக்களின் பாதுகாப்புப் பற்றி அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்கவில்லை. புலிகள் பயங்கரவாதிகள் என்று குற்றம்சாட்டும் இந்தத் தலைவர்கள் புதுக்குடியிருப்பில் சிக்கித் தவிக்கும் மக்களைக் கருத்தில் எடுக்காமல் தங்களுடைய அரசாங்கம் நடத்தும் இந்த யுத்தம் பற்றி மௌனமாக இருக்கிறார்கள். அங்கு மக்கள் உயிரிழக்கும் போதெல்லாம் அதனைப் புலிகளின் தலையில் கட்டி தப்பித்துக் கொள்வதைத் தவிர இவர்களால் எதுவும் செய்ய முடியவில்லை. இந்த வன்னி மக்களுக்கு ஏற்படப் போகும் அவலத்தை தடுத்து நிறுத்துவதற்காகவேனும் இவர்கள் குரல் கொடுக்காவிட்டால் இவர்கள் செய்வது அரசியல் விபச்சாரம் என்று குறிப்பிடுவது மிகையல்ல. இது இவர்களுக்கு மட்டுமல்ல புலம்பெயர் தேசங்களில் உள்ள இவர்கள் ஏஜென்டுகளுக்கும் பொருந்தும்.
ஏற்படப் போகும் இந்த அவலத்திற்கு புலிகளும் சம பொறுப்புடையவர்கள். அவர்கள் ஒன்றும் புனிதர்கள் அல்ல என்பது அரசாங்கத்தின் மீதான தனது குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரமாக பிரித்தானிய தமிழர் பேரவை சுட்டிக்காட்டும் சர்வதேச அமைப்புகள் அனைத்தினதும் அறிக்கைகளிலும் மீண்டும் மீண்டும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. ஆனால் தமிழ் தேசியக் கூட்டமைப்பு அதைப் பற்றி மூச்சும் விடுவதில்லை. பிரபாகரன் மாவீரர் தின உரையில் உறுமினால் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்றத்தில் ‘வடக்கில் இருந்து தெற்குக்கு சவப்பெட்டிகள் அனுப்புவோம்’ என்று டபிள் உறுமல் விடுவதைத் தவிர உருப்படியாக எந்த அரசியலும் செய்யவில்லை.
தங்களுக்கு வாக்களித்த மக்களை விட்டுவிட்டு தமிழ் மக்களை நாங்கள் தான் பிரதிநிதித்துவம் செய்கிறோம் என்று சொல்லிக்கொண்டு புலிக்கும் சிங்கத்துக்கும் பின்னால் நிற்கும் தமிழ் தலைமைகளும் அவர்களின் புலம்பெயர் முகவர்களும் இந்த வன்னி மக்கள் சிந்தும் குருதியில் தங்களைக் கறைபடுத்திக் கொண்டுள்ளனர்.
இப்போதுள்ள நிலையில் யுத்தத்தில் சிக்குண்ட தமிழ் மக்கள் பாதுகாக்கப்பட வேண்டுமானால்
1. யுத்தம் உடனடியாக முடிவுக்கு கொண்டு வரப்பட வேண்டும். அல்லது
2. அரச படைகளும் புலிகளும் குறைந்த பட்சம் சில தினங்களுக்காவது யுத்தத்தைத் தவிர்த்து மக்கள் பாதுகாப்பாக பாதுகாப்பு வலயங்களுக்கு செல்வதற்கான சூழலை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.
3. பாதுகாப்பு வலயங்கள் மீது தாக்குதல் நடத்துவதை இலங்கை அரசு உடனடியாக நிறுத்த வேண்டும்.
4. பாதுகாப்பு வலயங்களை சர்வதேச மனிதாபிமான அமைப்புகளின் பொறுப்பில் விடவேண்டும்.
5. விடுதலைப் புலிகளும் பாதுகாப்பு வலயங்களுக்கு மக்கள் செல்வதை அனுமதிக்க வேண்டும்.
6. பாதுகாப்பு வலயங்களுக்கு செல்வதற்கான பாதுகாப்பான வழியை புலிகளும் அரச படைகளும் ஏற்படுத்த வேண்டும்.
போன்ற ஜனவரி 29 அன்று ‘இலங்கை அரசும் புலிகளும் 200 000 – 300 000 தமிழர்களை ‘guinea pigs’ ஆக நடத்துகின்றனர் – பொறுப்பற்றவர்களின் யுத்தம் : த ஜெயபாலன்‘என்ற கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களுக்கு அல்லது அதற்கு ஒத்த விடயங்களை உடனடியாக செயற்படுத்த சர்வதேச சமூகத்திற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். அவலங்கள் ஏற்பட்ட பின் அதனைக் கண்டிப்பதிலும் அந்த அவலத்தை தடுத்து நிறுத்த அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட வேண்டும். இந்தப் போராட்டத்தில் தமிழ் மக்கள் மட்டுமல்ல சிங்கள முஸ்லீம் மக்களும் சர்வதேச மக்களும் இணைத்துக் கொள்ளப்பட வேண்டும்.