அறிக்கைகள்

அறிக்கைகள்

கட்சிகள் அமைப்புகள் நிறுவனங்கள் வெளியிடும் அறிக்கைகள்

தமிழரை கொல்லவேண்டுமென இராணுவம் எண்ணவில்லையென ஜெயலலிதா கூறியிருப்பது ஆதரவான வார்த்தை இல்லையா? – கருணாநிதி கேள்வி

karunanithi.jpgஇலங்கைத் தமிழர்களைக் கொல்ல வேண்டும் என்று இலங்கை இராணுவம் எண்ணவில்லை என்று ஜெயலலிதா கூறியிருப்பது இலங்கை இராணுவத்திற்கு ஆதரவான வார்த்தைகளா இல்லையா என்று முதலமைச்சர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள கேள்விபதில் அறிக்கை வருமாறு;

இலங்கை இராணுவத்திற்கு ஆதரவாக தான் பேசவில்லை என்றும் அப்படி மாயத் தோற்றத்தை உருவாக்க சில தீய சக்திகள் முயல்வதற்குக் கண்டனம் தெரிவிப்பதாகவும் ஜெயலலிதா கூறியுள்ளாரே?

இலங்கை வேறுநாடு. அந்த நாட்டுப் பிரச்சினையில் தலையிடுவதில் ஒரு எல்லை உண்டு. இலங்கையில் ஈழம் என்ற நாடு இன்னும் அமையவில்லை. இலங்கைத் தமிழரைக் கொல்ல வேண்டும் என்று சிங்கள இராணுவம் எண்ணவில்லை. ஒரு போர் நடக்கும் போது அப்பாவி மக்கள் கொல்லப்படுவார்கள். இதில் எந்த நாடும் விதிவிலக்கு அல்ல என்று ஜெயலலிதா அளித்த பேட்டி 18ஆம் திகதி அனைத்து நாளிதழ்களிலும் வெளிவந்துள்ளது.

இலங்கைத் தமிழரைக் கொல்ல இராணுவம் எண்ணவில்லை என்று அவர் சொன்னது இலங்கை இராணுவத்துக்கு ஆதரவான வார்த்தைகள் இல்லையா? ஜெயலலிதா முதலில் ஒன்றை சொல்வதும் பிறகு அப்படி சொல்லவே இல்லை என்று வாபஸ் வாங்குவதும் இது முதல்முறை அல்ல. இதுதான் கபட நாடகம். இது புரியாமல் பன்னீர்செல்வம் எதையோ நாடகம் என்றும் அதில் நடிக்க தான் தயாராக இல்லை என்றும் சொல்கிறார்.

இலங்கையில் தமிழர்களின் படுகொலைக்கு விடுதலைப்புலிகள் தான் காரணம் என்று அறிக்கையில் ஜெயலலிதா கூறியியுள்ளாரே?

இதற்குப் பதில் சொல்ல வேண்டியவர்கள் எங்கே பதுங்கியிருக்கிறார்கள் என்று தேடிப் பார்த்து கண்டுபிடியுங்கள்.

இலங்கைத் தமிழருக்காக கருணாநிதி திரட்டிய நிதி, அந்த மக்களுக்குப் போய்ச் சேர்ந்ததாக இதுவரை தகவல் இல்லை. அதை கருணாநிதி தன் குடும்ப நிதியில் சேர்த்துக் கொண்டு விட்டாரோ என்ற சந்தேகம் மக்கள் மனதில் எழுந்துள்ளது என்று ஜெயலலிதா விடுத்துள்ள அறிக்கை பற்றி?

அமெரிக்காவில் இருந்து வந்த ஒரு கோடி ரூபாவுக்கான காசோலைகள் யாரிடம் இருந்து வந்தது என்றே தெரியாமல் தன் கணக்கில் வரவு வைத்துக் கொண்டேன் என்று நீதிமன்றத்திலேயே சொன்னவர் அல்லவா. தான் திருடி, பிறரை நம்பாள் என்ற பழமொழிக்கு ஏற்ப இவ்வாறு கூறியுள்ளார். அந்த நிவாரணப் பொருட்கள் எல்லாம் செஞ்சிலுவைச் சங்கத்தின் உதவியோடு பாதிக்கப்பட்ட அப்பாவித் தமிழ் மக்களுக்கு வழங்கப்பட்டன என்று பல நாளேடுகளில் செய்தி வந்துள்ளது.

இலங்கைத் தமிழர் நிவாரண நிதியைப் பொறுத்தவரை ஒவ்வொருவரிடம் இருந்தும் காசோலையாகத்தான் வழங்கப்பட்டதே தவிர யாரும் தொகையாக வழங்கவில்லை. என்னிடம் உதவி வழங்கிய அனைவரது பெயரும் ஏடுகளில் வெளியிடப்பட்டது. அந்த நிதி ஒவ்வொரு நாளும் நிதித்துறைக்கு அனுப்பப்பட்டு அரசு இருப்பில் செலுத்தப்பட்டது. முதல்கட்டமாக நிவாரணப் பொருட்கள் வழங்கியது போக மீதி இன்றளவும் அரசு கணக்கில் இருக்கிறது.

மேலும் யாழ்ப்பாணம் ஆயர் தோமஸ் சவுந்தரநாயகம் எழுதிய கடிதம் மத்திய அரசின் வெளியுறவு அமைச்சு மூலமாக கிடைத்தது. இந்திய அரசால் வழங்கப்பட்டு விநியோகம் செய்யப்பட்ட பொட்டலங்கள் ஒவ்வொரு குடும்பத்துக்கும் கிடைத்தது. ஒரு வாரத்துக்குத் தேவையான பொருட்கள் அதில் இருந்தன. சமையலுக்கு தேவையான மளிகைப் பொருட்கள் மிகவும் பயனுள்ளதாக அமைந்தன. போர் நடந்துகொண்டிருக்கும் இந்த இக்கட்டான நேரத்தில் தமிழக மக்களிடம் இருந்து வந்த நன்கொடைப் பொருட்களை இலங்கைத் தமிழர்கள் பெரிதும் பாராட்டி வரவேற்றுள்ளனர்? என்று அதில் கூறியிருக்கிறார்.

இலங்கையில் தமிழ் இனமே அழிகிறது என்ற தலைப்பில் நீங்கள் தீர்மானம் கொண்டு வந்த போது தமிழர்களின் ஒட்டுமொத்த உணர்வை காட்ட முன்வராமல் அ.தி.மு.க.வினர் வெளிநடப்பு செய்ததும் அவர்களை ம.தி.மு.க.பின்பற்றியதும் பற்றி?

இன்னும் தமிழ் இனம் நெல்லிக்காய் மூட்டையாகத்தான் இருக்கிறது என்று எண்ணி நெஞ்சம் பதைபதைக்கிறேன்.

இலங்கைத் தமிழர் பிரச்சினை ஒட்டுமொத்த தமிழர்களின் பிரச்சினை. இதில் தி.மு.க.செயற்குழுவை மட்டும் கூட்டி முடிவெடுப்பது சரியல்ல என்று ராமதாஸ் கூறியுள்ளாரே?

தி.மு.க.ஜனநாயக இயக்கம். அதன் தலைவராக நான் இருந்த போதிலும் சில முக்கிய முடிவுகளை தன்னிச்சையாக எடுத்து விட முடியாது. முடிவுகளை எடுக்கலாம் என்ற போதிலும் நான் அவ்வாறு சர்வாதிகாரமாக நடந்து கொள்வதில்லை. முதலில் கட்சியில் முடிவெடுத்து பின்னர் அனைத்துக் கட்சிகளையோ, தோழமைக்கட்சிகளையோ கலந்தாலோசித்துத்தான் முடிவு அறிவிப்போம். அனைத்துக் கட்சிக்கூட்டங்களில் கலந்து கொள்ளும் கட்சியினர் கூட முன்னதாக தங்கள் கட்சிக்குள் விவாதித்து ஒரு முடிவு எடுத்துக் கொண்டுதான் வருவார்கள்.

சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்றத் தலைவர் கூறும்போது, ?காங்கிரஸ் அரசையும் மத்திய அரசையும் தமிழக அரசு பகைத்துக் கொள்ள விரும்பவில்லை எனத் தெரிகிறது? என்று கூறியிருக்கிறாரே?

ஆம். தி.மு.க.வோடு தோழமை கொண்டுள்ள கூட்டணியில் உள்ள கட்சியின் அரசுதான் காங்கிரஸ் அரசு. கூட்டணி தர்மத்தைப் பின்பற்ற வேண்டும் என தி.மு.க.நினைப்பது தவறல்லவே என்று முதலமைச்சர் கருணாநிதி கூறியுள்ளார்.

வன்னியில் தினமும் அப்பாவி பொதுமக்கள் பலியாகும் நிலையில் மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் ஏன்?

wanni.jpgவன்னியில் இடம்பெற்றுவரும் இராணுவ நடவடிக்கையின்போது நடத்தப்படும் அகோர ஷெல் தாக்குதல்கள், விமானக் குண்டு வீச்சுகள், பல்குழல் பீரங்கித் தாக்குதல்களினால் தினமும் அப்பாவி பொது மக்கள் கொல்லப்பட்டும் படுகாயப்படுத்தப்பட்டும் வரும் நிலையில் அம்மக்கள் தொடர்பில் எவ்வித அக்கறையுமற்ற நிலையில் இன்று நடத்தப்படும் மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தை பகிஷ்கரிப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் அறிவித்துள்ளனர்.

இது தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், ச.கனகரட்ணம், ந.சிவசக்தி ஆனந்தன், ச. வினோநோகராதலிங்கம், சிவநாதன் கிஷோர் ஆகியோர் கையொப்பமிட்டு வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

வன்னியில் அரசபடையினர் மேற்கொண்டு வரும் இராணுவ நடவடிக்கை காரணமாக என்றுமே இல்லாத மனிதப் பேரவலம் ஏற்பட்டுள்ளது. பொதுமக்களின் வாழ்விடங்கள், அவர்களின் தற்காலிக இருப்பிடங்கள்

மீது தினமும் கண்மூடித்தனமான ஷெல், விமானத் தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன. தினமும் அப்பிரதேசம் முழுவதும் மரண ஓலம் கேட்ட வண்ணம் உள்ளது. அங்கு பொதுமக்கள் இராணுவத்தினரின் தாக்குதலில் கொல்லப்படாத நாட்கள் இல்லை. இராணுவத்தினரின் ஷெல்தாக்குதலில் பலியானவரின் இறுதிக் கிரியைகள் கூட நடத்த முடியாத அவல நிலையை பொதுமக்கள் அங்கு எதிர்நோக்கி உள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தில், போராட்டத்துடன் எவ்விதத்திலும் தொடர்பு படாத 4 இலட்சத்து 75 ஆயிரம் பொது மக்கள் மிகவும் குறுகிய நிலப்பரப்புக்குள் சிக்கியுள்ளனர். இராணுவத்தினரின் கடுமையான ஷெல்தாக்குதலில் சிக்கி கடந்த ஒன்பது நாட்களில் நூற்றுக்கும் அதிகமான பொதுமக்கள் உயிரிழந்து உள்ளனர். காயம் அடைந்தவர்களில் பலர் தமது அங்க அவயங்களை இழந்து உள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் சாதாரண பொதுமக்கள் மீது தினமும் நடத்தப்படும் தாக்குதல் குறித்தோ அவர்களின் நிலை குறித்தோ அரசாங்கம் எவ்வித அக்கறையும் கொள்ளவில்லை. மக்களின் உண்மையான நிலை அறிந்தும் படையினரும் எதுவும் தெரியாதவர்கள்போல் உள்ளனர். மேலும் விடுவிக்கப்படாத வன்னி மக்களுக்கு பாதுகாப்புப் படையினரால் பாதுகாப்பு வலயம் நிறுவப்பட்டுள்ளது.எனினும் குறித்த பாடசாலைகளில் இயங்கிவந்த வைத்தியசாலைகள் மற்றும் தேவாலயங்கள் உள்ள பகுதிகளிலும் ஷெல்கள் வீழ்ந்து வெடித்துள்ள இந்நிலையில் அங்கு தஞ்சமடைந்த மக்களின் நிலைமையும் அபாய கட்டத்தை அடைந்துள்ளது.

புதுக்குடியிருப்பு அரச வைத்தியசாலையை உடன் மூடுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே மனிதாபிமான அரச வைத்திய உதவிகளை எதிர்பார்த்திருக்கும் வன்னிமக்களின் உயிரோடு விளையாடும் பாதகச் செயலாகும்.

மேலும் யுத்த நடவடிக்கையில் காயம் அடைந்து மேலதிக அவசர சிகிச்சைக்காக வன்னிப்பகுதியில் இருந்து வவுனியா பொது வைத்திய சாலைக்கு கொண்டுவரப்பட்டு தீவிர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டு குணம் அடைந்த பலர் மீண்டும் வன்னிக்கு திரும்பிச் செல்ல முடியாத நிலையிலுள்ளனர். வவுனியாவிலேயே இவர்கள் தங்கவேண்டி உள்ளதாக கூறப்படுகின்றது. இந்த நிலையில் வன்னியில் இருந்து காயத்துடன் வந்து வவுனியா வைத்தியசாலையில் குணம் அடைந்தவர்கள் அவர்களின் குடும்பத்தை விட்டு வலுக்கட்டாயமாக பிரிக்கப்பட்டு வவுனியாவில் தங்க நிர்ப்பந்திக்கப்படுகின்றனர்.

வன்னியிலிருந்து அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்கு இராணுவத்தினரால் அழைத்து வரப்பட்டு செட்டிக்குளம் மெனிக் பாமில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களை அவர்களின் உறவினர்களோ, நண்பர்களோ பார்வையிடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த வகையில் இவர்கள் சிறைவைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் மன்னார் மாவட்டத்தில் முசலி சிலாவத்துறை அரிப்பு பகுதியில் கடந்த இரண்டு வருடத்திற்கு முன்பு இராணுவ நடவடிக்கை ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது இதன் விளைவாக கொக்கு, படையான், கொண்டைச்சி, முள்ளிக்குளம், முசலி, சிலாவத்துறை, அரிப்பு, வேப்பங்குளம், பண்டார வெளி, புது வெளி, குளாங்குளம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த 1500 இற்கும் அதிக தமிழ் முஸ்லிம் குடும்பங்கள் அகதிகளாக இடம்பெயர்ந்தனர்.

மீனவர்களாகவும் விவசாயிகளாகவும் மன்னார் மாவட்ட பொருளாதார தரத்துக்கு கணிசமான பங்களிப்பு நல்கிய மேற்படி கிராமங்களைச் சேர்ந்த மக்கள் தற்பொழுது தமது அசையும் அசையா சொத்துக்களையும் முற்றாக இழந்து நானாட்டான் பிரதேச செயலகப் பிரிவில் உள்ள வயல் வெளிகளிலும் கைவிடப்பட்ட அரிசி ஆலைகளிலும் பொதுநோக்கு மண்டபங்களிலும் உறவினர் வீடுகளிலும் தற்காலிகமாக வசித்து வருகின்றனர்.

தற்பொழுது சிலாவத்துறை பகுதி முற்றாக விடுவிக்கப்பட்டதாக அரசாங்கம் கூறிவரும் நிலையில் அங்கிருந்து இடம் பெயர்ந்த மக்களை இரண்டு வருடங்கள் கழிந்த நிலையில் மீளக்குடி அமர்த்தவில்லை. வன்னித்தேர்தல் மாவட்டமானது முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் ஆகிய மூன்று நிர்வாக மாவட்டமாக உள்ளது குறித்த மூன்று மாவட்டங்களைச் சேர்ந்த மக்களின் வாக்குகளிலேயே நாம் ஐந்து பேரும் பாராளுமன்ற உறுப்பினர்களாக வந்த நிலையில் நாம் பிரதிநிதித்துவப்படுத்தும் மக்கள் தற்போது முல்லைத்தீவில் நடைபெறும் மோதலை அடுத்து கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.

இந்த வகையில் கடந்த மூன்று நாட்களில் இராணுவத் தாக்குதல் காரணமாக வன்னிப்பகுதியில் ஐம்பதுக்கும் அதிகமானோர் பலியாகியுள்ளதுடன் அதிக எண்ணிக்கையானோர் கடும் காயங்களுக்குள்ளாகியுள்ளனர்.

கடந்த சில நாட்களாக வன்னிப் பகுதியில் இடம்பெற்ற ஷெல் தாக்குதலில் காயம் அடைந்து மேலதிக சிகிச்சைக்காக வவுனியா பொது வைத்தியசாலைக்கு அழைத்துவரப்பட்டவர்களில் சிலர் தீவிர சிகிச்சைக்காக அனுராதபுரம் வைத்தியசாலைக்கு அனுப்ப வேண்டியநிலை ஏற்பட்டுள்ளது. எனினும், குறித்த காயம் அடைந்தவர்களுக்கு தேசிய அடையாள அட்டை இல்லை என்ற காரணத்தினால் அவர்களை அனுராதபுர வைத்தியசாலைக்கு அனுப்பமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

தொடர்ச்சியான இடம்பெயர்வு, அகோர ஷெல் வீச்சு காரணமாக மிகவும் மரண அச்சம் நிறைந்த சூழ்நிலையில் காயம் அடைந்தவர்களை சிகிச்சைக்கு அனுப்பும்போது தேசிய அடையாள அட்டையுடன் அனுப்பும் நிலை எச்சந்தர்ப்பத்திலும் எவருக்கும் ஏற்படாது. இவ்வகையில் தேசிய அடையாள அட்டை வரவில்லை என்ற காரணத்திற்காக அனுராதபுரம் வைத்தியசாலைக்கு தீவிர சிகிச்சைக்கு அனுப்பப்பட்டவர்கள் சிலர் மரணத்துடன் போராடிக் கொண்டிருக்கின்றனர். இவ்விடயம் எந்த நியாய புத்தி உடையவர்களாலும் கருணை உள்ளம் கொண்டவர்களாலும் ஏற்றுக்கொள்ள முடியாத விடயமாகும்.

எமக்கு வாக்களித்து நாம் பிரதிநிதித்துவப்படுத்தும் இம் மக்கள் மோதலினால் உயிர்கள் உடமைகள் மற்றும் அவர்களுடைய அங்க அவையங்களை இழந்து பெரும் மனிதபேரவலத்துக்கு உள்ளாகி நடைபிணங்களாக உலாவித்திரியும் சந்தர்ப்பத்தில் இன்று நடைபெறும் மக்களின் நலனில் அக்கறை கொள்ளாத குறித்த மாவட்ட அபிவிருத்தி குழுக் கூட்டத்தை நாம் எமது மக்களின் துன்ப நிலையை வெளிஉலகத்துக்கு தெரியப்படுத்தும் நோக்கில் பகிஷ்கரிக்கின்றோம்

வன்னி மக்களின் துயர்துடைக்க அனைவரும் ஒன்றுபட்டு செயற்பட முன்வரவேண்டும்

கிழக்கு மாகாணசபை உறுப்பினர் துரைரத்தினம் பெரும் அவலத்திற்குள் சிக்குண்டுள்ள வன்னி மக்களின் துயர்துடைக்க அனைத்து சக்திகளும் ஒன்றுபட்டு செயற்பட வேண்டுமென்று கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரத்தினம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.  இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

வன்னி நிலப்பரப்பில் பயங்கரவாதத்திற்கெதிராக அரசாங்கம் மேற்கொள்ளும் யுத்தம் காரணமாக பயங்கரவாதம் ஒழிக்கப்படுகின்றது. பயங்கரவாதம் ஒழிக்கப்படுவதில் இலங்கைப் பிரஜை ஒருவருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. பயங்கரவாதம் அடியோடு உடைத்தெறியப்பட வேண்டும்.

இதேவேளை, பயங்கரவாத அழிப்பு என்னும் பெயரில் கொழும்பில் ஊடகத்துறை திட்டமிட்டு அளிக்கப்படுவதும், மட்டக்களப்பில் கடத்திக் கொலை செய்யப்படுவதும், குண்டுவைத்து அப்பாவி மாணவர்கள் கொலை செய்யப்படுவதும், வன்னி நிலப்பரப்பில் ஷெல் தாக்குதல் காரணமாக மக்கள் இடம்பெயர்வு, தங்குமிடமின்றிப் பரிதவித்தல் , பட்டினிச்சாவு, குழந்தை தொடக்கம் முதியோர் வரை ஷெல் தாக்குதல்களுக்கு இலக்காகி மரணிப்பதும் அங்கவீனமாக்கப்படுவதும் , கோடிக்கணக்கான ரூபா பெறுமதியான பொருளாதாரம் அளிக்கப்படுவதும் , கல்வி முற்றாகப்பாதிப்படைந்து மாணவர்கள் பரீட்சை எழுதமுடியாத நிலை தோற்றுவிக்கப்படுவதும், ஒட்டுமொத்தமாக தமிழின அழிப்பு இடம்பெறுவது உறுதிப்படுத்தப்படுகின்றது.

இப்படிப்பட்ட செயலைச் செய்பவர்களை சர்வதேச நாடுகளும் மனித உரிமை அமைப்புகளும், ஜனநாயக சக்திகளும் , பயங்கரவாதச் செயலெனக் கூறுவார்கள். இச்சம்பவத்தைப் பொறுத்தவரையில் எமது அரசும் பயங்கரவாதச் செயலில் இறங்கியுள்ளதா? தமிழினச் சுத்திகரிப்பில் இறங்கியுள்ளதா? எனும் சந்தேகம் சகல சக்திகளுக்கும் தோன்றி உள்ளது.

வன்னியில் உலருணவு கொண்டு சென்ற ஐ.நா.வின் பிரதிநிதிகளையும் வாகனங்களையும் புலிகள் தடுத்தி நிறுத்தி வைத்திருப்பது மனிதாபிமானமற்ற செயலாகும். இத்தோடு இது ஒரு பயங்கரவாதச் செயலாகவே கருதப்படுகிறது.

புலிகள் தங்களது பயங்கரவாதச் செயலைக் கைவிட்டு ஜனநாயக சூழலுக்கு வருவதற்கு இன்னும் காலம் போகவில்லை. உயிரழிவுகளைத் தடுக்க வேண்டுமாயின் இலங்கை அரசினூடாகவோ அல்லது ஏனைய சக்திகளினூடாகவோ, ஜனநாயக வழிக்கு வருவதற்கு ஏற்பாடு செய்யப்பட வேண்டும்.

அரசைப் பொறுத்தவரையில் இதுவரை நடந்த யுத்தத்தில் அப்பாவித் தமிழ் மக்களுக்கு அழிவுகள் ஏற்பட்டுள்ளன என்பதை அரசு ஏற்றுக் கொள்ள வேண்டும். இலங்கை இறைமை உள்ள அரசு என்ற அடிப்படையில் அப்பாவித் தமிழ் மக்கள் பாதிக்கப்படுவதை அனுமதிக்கக் கூடாது. இதைத் தடுப்பதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் அரசியல் தீர்வு அவசியமாகும்.இத் தீர்வை முன்வைப்பது அரசின் தலையாய கடமையாகும். இது சர்வதேச அவதானிப்புடன் இடம்பெற வேண்டும். குறிப்பாக இந்தியாவின் பங்களிப்புடன் இடம்பெற வேண்டும்.

வன்னியிலுள்ள மக்களை உடனடியாகக் காப்பாற்ற வேண்டியது அரசின் பொறுப்பாகும். வேலியே பயிரை மேயக் கூடாது. இல்லாத பட்சத்தில் சர்வதேசம் தலையிட்டு மக்களைக் காப்பாற்ற வேண்டும். எனவே, பயங்கரவாதத்தை அழிப்பதற்கும் மக்களை பாதுகாப்பதற்கும், அரசியல் தீர்வை முன்வைப்பதற்கும் சக சக்திகளும் ஒன்றுபட்டு உழைக்க முன்வர வேண்டும்.

பிரித்தானிய வெளிவிவகார அமைச்சின் அறிக்கைக்கு பிரித்தானிய தமிழர் பேரவை கண்டனம்

BTF Banner._._._._._.

அண்மைய இலங்கை நிலவரம் தொடர்பாக ஜனவரி 21ல் பிரித்தானிய வெளிவிவகார மற்றும் பொதுநலவாய அமைப்பு விவகார அமைச்சு வெளியிட்ட அறிக்கையை பிரித்தானிய தமிழர் பேரவை கண்டித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளது. பிரித்தானிய வெளிவிககார மற்றும் பொதுநலவாய விவகார அமைச்சு வெளியிட்ட அறிக்கையையும் பிரித்தானிய தமிழர் ஒன்றியத்தின் அறிக்கையையும் கீழே காணலாம்.
._._._._._.

அண்மைய இலங்கை நிலவரம் தொடர்பாக ஜனவரி 21ல் பிரித்தானிய வெளிவிவகார மற்றும் பொதுநலவாய அமைப்பு விவகார அமைச்சு வெளியிட்ட அறிக்கை :
._._._._._.

பிரித்தானிய பிரதமர் கோர்டன் பிரவுண் அண்மைய இலங்கை நிலவரம் தொடர்பாக இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு உத்தியோகபூர்வமான கடிதம் ஒன்றை அனுப்பி வைத்து உள்ளார். அதனைக் குறிப்பிட்டு பிரித்தானிய வெளிவிவகார மற்றும் பொதுநலவாய அமைப்பு விவகார அமைச்சர் டேவிட் மிலபான்ட் ஜனவரி 21 எழுத்து மூலமான அறிக்கையை வெளியிட்டு உள்ளார். அவ்வறிக்கையின் தொகுப்பு இங்கு தமிழில் பதிவு செய்யப்பட்டு உள்ளது. குறிப்பு: நேரடி மொழிபெயர்ப்பல்ல.

Sri Lanka Written Ministerial Statement (21/01/2009) Written Ministerial Statement by the Secretary of State for Foreign & Commonwealth Affairs on Sri Lanka, 21 January 2009.
http://www.fco.gov.uk/en/newsroom/latest-news/?view=PressS&id=12533815

._._._._._.

கடந்த 26 ஆண்டுகளில் 70,000 உயிர்கள் பறிக்கப்பட்ட நிலையில் உள்ள இலங்கையில் பிரித்தானிய அரசாங்கம் சமாதானத்தை முன்னெடுப்பதில் கரிசனையாக இருந்து வருகிறது. நாங்கள் தற்போது ஒரு முக்கிய காலகட்டத்தில் இருக்கிறோம்.

2002 யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை ஜனவரி 2008ல் முடிவுக்கு கொண்டு வந்த இலங்கை அரசு எல்ரிரிஈ யை இராணுவ ரீதியில் வெற்றிகொள்வதை கொள்கையாகக் கொண்டு உள்ளது. அண்மைக் காலத்தில் எல்ரிரிஈ யின் நிர்வாகத் தலைநகரமான கிளிநொச்சியைக் கைப்பற்றியது மற்றும் யாழ்ப்பாணக் குடாநாட்டில் எல்ரிரிஈயின் சில பகுதிகளைக் கைப்பற்றியது உட்பட இலங்கை அரசாங்கம் குறிப்பிடத்தக்க இராணுவ வெற்றிகளைப் பெற்று உள்ளது. இந்த வெற்றிகள் அரசியல் தீர்வை நோக்கி முன்னேற வேண்டியதன் அவசியத்தையும் அவசரத்தையும் ஏற்படுத்தி உள்ளது. எல்ரிரிஈ ஒரு தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பு. அதற்கு தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற ஜனநாயகப் பொறுப்பு இல்லை. கடந்த மூன்று சகாப்தங்களாக அனைத்து சமூகங்களைச் சார்ந்த இலங்கை மக்களுக்கு எதிராகவும் பயங்கரவாதத்தை மேற்கொண்டதற்கு எல்ரிரிஈயே பொறுப்பு.

2006ல் மீண்டும் யுத்த முனைப்புகள் ஆரம்பிக்கப்பட்டது முதல் ஆயிரக்கணக்கான உயிர்கள் இழக்கப்பட்டு உள்ளது. இலங்கை அரசாங்கம் பயங்கரவாதத்தை வேரறுக்க வேண்டும் என்பதை நாங்கள் விளங்கிக்கொள்கிறோம். அதேசமயம் தனது மக்களுடைய உரிமைகளைப் பாதுகாக்கும் அவர்களுடைய அரசியல் நியாயங்களை சரியான வகையில் வெளிப்படுத்தும் பொறுப்பு இலங்கை அரசாங்கத்திற்கு உண்டு. நிரந்தரமான சமாதானம், இலங்கையில் உள்ள அனைத்து சமூகங்களினதும் – சிங்களம் தமிழ் முஸ்லீம் என அனைவரையும் உள்ளகப்படுத்தும் அரசியல் செயற்பாடு அவசியம். அதுவே எங்களுடைய நிலைப்பாடாக தொடர்ந்தும் இருந்து வருகிறது. நாங்கள் இந்த மோதல் முற்றுப் பெறுவதைப் பார்க்க வேண்டும். நிரந்தரமான அரசியல் தீர்வை நோக்கிச் செல்ல வேண்டும். இந்த நோக்கத்திற்காக நாங்கள் இலங்கையில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளுடனும் சகல சமூகங்களுடனும் தொடர்புகளை வைத்திருப்போம் அவர்களுக்கு ஆதரவளிப்போம்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள மனித அவலச் சூழல் – அதிகரித்துவரும் உள் இடப்பெயர்கள் பற்றி நாங்கள் மிகவும் கரிசனையாக உள்ளோம். இதுபற்றி கடந்த செப்ரம்பரில் இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச லண்டன் வந்திருந்த போது என்னுடைய நண்பர் மதிப்பிற்குரிய பிரித்தானிய பிரதமர் கோர்டன் பிரவுன் பேசியிருந்தார். உள்ளக இடப்பெயர்வு தொடர்பாக உயர்மட்டத்தில் எங்கள் கரிசனையை வெளிப்படுத்தி இருக்கிறோம். மோதல் இடம்பெறுகின்ற பகுதிகளில் 200 000 – 300 000 வரையான உள்ளிடம் பெயர்ந்தவர்கள் சிக்குண்டு உள்ளதாக ஐநா மதிப்பிட்டு உள்ளது. மனிதாபிமான உதவிகள் அனுப்பப்பட்ட போதும் அவை போதக் கூடியவை அல்ல என நம்பகரமான அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இலங்கை இராணுவத்தின் வெற்றிகள் உள்ளிடம் பெயர்ந்தவர்களை மிகவும் குறுகிய ஒரு பிரதேசத்திற்கள் தள்ளுகின்றது. இந்த நிலை இன்னும் மோசமானால் மனித வலமும் மோசமடையும்.

கடந்த செப்ரம்பரில் Department for International Development (DFID)  எடுத்த தீர்மானங்களின் தொடர்ச்சியாக DFID மனிதாபிமான பணி நிபுணர்கள் குழு இன்னும் சில வாரங்களில் இலங்கைக்குச் சென்று அங்குள்ள நிலைமைகளை மதிப்பிட உள்ளது. மேலும் அவர்கள் வடக்கில் இடம்பெயர்ந்தவர்களின் மனிதாபிமானப் பணிகளுக்கு வழங்கப்பட்ட 2.5 மில்லியன் பவுண்கள் எவ்வாறு விநியோகிக்கப்பட்டு உள்ளது என்பது பற்றியும் அறிக்கை வழங்குவார்கள். குறிப்பாக பொது மக்களின் பாதுகாப்பு, அவர்களின் சுதந்திரமான நடமாட்டம், மனிதாபிமான உதவிகளைப் பெறுவது விடயங்களில் களத்தில் உள்ள சர்வதேச அமைப்புகளுடன் தொடர்புபட்டு அங்குள்ள அனைத்து தரப்பினரும் சர்வதேச மனிதாபிமான விதிகைளக் கடைப்பிடிக்க வேண்டும். மோதல் இடம்பெறும் இடங்களில் இருந்து பொது மக்கள் தப்பிக் கொள்வதற்கான பாதுகாப்பான வழியை அனைத்து தரப்பினரும் உறுதிப்படுத்த வேண்டும். பாதுகாப்பான மனிதாபிமான வலயம் உருவாக்கப்பட வேண்டும். இடம்பெயர்ந்தவர்களுடைய மனிதாபிமான தேவைகள் பற்றிய சுயாதீன மதிப்பீடு ஒன்று அவசியம் என்று நாங்கள் நம்புகிறோம். இவ்வாறான ஒரு மதிப்பீடு தான் பாதிக்கப்பட்ட அந்த மக்களுக்கு செய்யக் கூடிய அனைத்தும் செய்யப்பட்டு உள்ளது என்பதனை வெளிப்படுத்தும். நாங்கள் தொடர்ந்தும் இந்த விடயங்களுக்கு அழுத்தம் கொடுப்போம்.

இலங்கையின் ஊடக சுதந்திரத்தின் மீது அதன் உயர்மட்டத்தில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையான தாக்குதல்கள் அண்மைய வாரங்களில் இடம்பெற்று உள்ளதைக் காண்கிறோம். நாங்கள் இவ்வாறான தாக்குதல்களை கண்டிக்கிறோம். குறிப்பாக ஜனவரி 8ல் சண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க கொலை செய்யப்பட்டது. இது தொடர்பாக உடனடியாக முழுமையான சுயாதீனமான விசாரணையை மேற்கொள்ள வேண்டிய பொறுப்பு இலங்கை அதிகாரிகளுக்கு உண்டு. அதற்கு பொறுப்பானவர்கள் நீதிக்கு முன் நிறுத்தப்பட வேண்டும். இவ்வாறான வழக்குகளில் குற்றம் நிரூபிக்கப்படுவதில் ஏற்படும் அசிரத்தை உடனடி நடவடிக்கை அவசியம் என்பதை வலியுறுத்துகிறது.

ஆட்கடத்தல், காணாமல் போதல், வன்முறை, அவமதித்தல் என்பன இலங்கையில் தொடர்வதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. சுயாதீன மனித உரிமைகள் அறிக்கைகளுக்கான உறுதியான பொறிமுறையின்றி இப்பிரச்சினையை மதிப்பிடுவது கடினமானது. மனித உரிமைகளை மீறுபவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது உட்பட மனித உரிமை மீறல்களை கையாள்வதற்கான உறுதியான நடவடிக்கையை இலங்கை அரசாங்கம் எடுக்க வேண்டும் என்று நாங்கள் தொடர்ந்தும் கோருகிறோம். இந்த முரண்பாட்டை நிரந்தரமாக முடிவுக்கு கொண்டு வருவதற்கான சூழ்நிலையை ஏற்படுத்த இலங்கையில் உள்ள சமூகங்கள் அனைத்தும் அச்சம் இல்லாமல் வாழ்வதற்கான சூழல் ஏற்டுத்தப்பட வேண்டும். எங்களுடைய அழுத்தங்களைத் தொடர்ந்து அயுதக் குழுக்களால் சிறுவர் படையணயில் உள்ளவர்கள் விடுவிக்கப்பட்டதை வரவேற்கிறோம். இவை இன்னும் தொடர வேண்டும்.

என்னுடைய மதிப்பிற்குரிய நண்பர் பிரதமர் கோர்டன் பிரவுண் ஜனாதிபதி ராஜபக்சவுக்கு தன்னுடைய நிலைப்பாட்டை எழுதி உள்ளார்.

(The Secretary of State for Foreign & Commonwealth Affairs on Sri Lanka, 21 January 2009.)

பிரித்தானிய தமிழர் பேரவை வெளியிட்ட அறிக்கை :

இலங்கையில் உள்ள தமிழர்களின் நிலை தொடர்பாக பிரதமரின் கருத்துக்கு முரண்பாடான வெளிவிவகார அலுவலகத்தின் நிலைப்பாடு:

பிரித்தானிய வெளிவிவகார மற்றும், பொதுநலவாய நாடுகளின் அலுவலகம் 21-01-2009 ஆம் திகதியிட்டு வெளியிட்ட கருத்தை பிரித்தானிய தமிழர் ஒன்றியம் வன்மையாகக் கண்டிக்கின்றது. வெளிவிகார அலுவலகத்தின் இந்த அறிக்கையில் ஸ்ரீலங்கா அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் தமிழின படுகொலை தொடர்பான கண்டனம் எதுவும் வெளியிடப்படவில்லை.

இந்த அறிக்கை பிரித்தானிய பிரதமரின் நிலைப்பாட்டுடன் முற்றிலும் முரண்படுவதாக உள்ளதை பிரித்தானிய தமிழர் ஒன்றியம் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றது. ஜனவரி 14ஆம் தகதி இடம்பெற்ற பிரதமருடனான கேள்வி நேரத்தின் போது பதிலளித்த பிரதமர் “ஸ்ரீலங்காவில் இடம்பெறும் மோசமான வன்முறைகள் தொடர்பாக (திரு. வாஸ்) அவர்கள் தெரிவித்த கருத்துடன் நான் உடன்படுகின்றேன். அத்துடன் யுத்த நிறுத்தத்தின் தேவைபற்றிய அவரது கருத்துடனும் நான் உடன்படுகின்றேன். ஜனாதிபதி சாக்ரோசியுடனும் சான்சிலர் மேக்லுடனும் பேசும் போது இதுகுறித்தும் பேசவுள்ளேன்” எனத் தெரிவித்த கருத்துக்கு முற்றிலும் மாறுபட்ட விதமாக வெளிவிவகார அமைச்சின் கருத்து உள்ளது. வெளிவிகார அமைச்சின் அறிக்கையில் யுத்த நிறுத்தம் தொடர்பான கோரிக்கை முற்றாக தவிர்க்கப்பட்டுள்ளது.

ஜேர்மன் வெளிவிவகார அமைச்சு வெளியிட்ட அறிக்கையில் “ அவர்கள் கடந்த பத்து நாட்களுக்கு மேலாக சர்வதேச உதவிகளை பெறுவதில் இருந்து முற்றாக துண்டிக்கப்பட்ட நிலையில் உள்ளார்கள்…. பாதிக்கபட்ட பிரதேசங்களில் உள்ள பொதுமக்களுக்கு தேவையான நிவாரண மற்றும் மருத்துவ உதவிகள் சென்றடைய ஏதுவாக யுத்த நிறுத்தத்தை கொண்டு வருவதற்கான சமரச முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்” எனத் தெரவிக்கப்பட்ட கருத்துடன் பிரித்தானிய வெளிவிவகார அமைச்சின் கருத்து முற்றிலும் முரண்பட்டதாக உள்ளது.

‘ஸ்ரீலங்காவில் இருந்து பயங்கரவாதத்தை இல்லாதொழித்தல்’ என்ற பதத்தை பாவித்து வன்னியில் ஏற்பட்டிருக்கும் பாரிய மனித அவலம் பற்றிய உண்மை நிலவரம் மூடி மறைக்கப்பட்டிருப்பதோடு சில மேற்குலக நாடுகள் ஸ்ரீலங்கா அரசின் இத்தகைய நடவடிக்கைளுக்க இராஜதந்திர பாதுகாப்பு வழங்க முற்படுகின்றன என பிரித்தானிய தமிழர் ஒன்றியத்தின் மூத்த உறுப்பினர் ஒருவர் இது தொடர்பாக கருத்து தெரிவித்தார். வெளிவிவகார அமைச்சின் இந்த அறிக்கை அமெரிக்காவின் புதிய நிர்வாகம் பதவியேற்ற சிலநாட்களில் வெளியாகியிருப்பது தவறான வழிகாட்டுதலை நோக்கமாக கொண்டு வெளியிடப்பட்ட ஒன்றென கருத தோன்றுகின்றது.

பிரித்தானிய தமிழர் பேரவை பிரித்தானியாவில் உள்ள 2 இலட்சத்துக்கும் மேற்பட்ட தமிழர்களை பிரதிநிதித்துவப் படுத்தும் பல நிறுவனங்களை உள்ளடக்கிய ஒரு குடைஅமைப்பு என்ற வகையில் வெளிவிவகார அமைச்சின் இந்த அறிக்கை தொடர்பாக எமது அமைப்பு மிகுந்த கவனம் செலுத்துகின்றது. வெளிவிவகார அமைச்சின் இந்த நடவடிக்கை உலகெங்கும் உள்ள தமிழர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருப்பதுடன் இந்த விடயம் தொடர்பாக பிரித்தானிய அரசின் நடுநிலைத் தன்மையை கேள்விக்கு உள்ளாக்கியிருக்கின்றது.

வெளிவிவகார அமைச்சின் அறிக்கையில் விடுதலைப் புலிகளுக்கு மக்கள் ஆணை இல்லை என்ற கருத்து வெளியிடப்பட்டிருக்கின்றது. 2004ஆம் இலங்கையில் நடைபெற்ற பொதுத் தேர்தலின் போது விடுதலைப் புலிகளே தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் என்ற கொள்கையை தமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெரிவித்து போட்டியிட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பெரு வெற்றியீடடியிருந்ததை பிரித்தானிய வெளிவிவகார அமைச்சுக்கு பிரித்தானிய தமிழர்கள் தாழ்மையுடன் சுட்டிக்காட்ட விரும்புகின்றனர். அத்துடன் 1977ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் தமிழர் தாயகத்தை (தமிழீம) மீள உருவாக்க மக்கள் ஆணை வழங்கப்பட்டது என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.

பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்ற தவறான போர்வைக்குப் பின்னால் ஒளிந்து கொண்டு அடக்குமுறை அரசுகளுக்கு உதவும் வகையிலான அணுகுமுறையை தவிர்ததுக் கொள்ள வேண்டும் என பிரித்தானிய தமிழர்களான நாம் இந்த அரசிடம் வேண்டிக் கொள்கின்றோம். ஸ்ரீலங்கா அரச படைகளால் கண்மூடித்தனமாக நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதல்களினால் கடந்த மூன்று நாட்களில் மாத்திரம் தேவிபுரம், வள்ளிபுனம் ஆகிய இடங்களில் 66 இற்கும் மேற்பட்ட அப்பாவித் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். ஸ்ரீலங்கா அரசின் அரச பயங்கரவாதத்திற்கு சிறந்த எடுத்துக்காட்டாக இன்று பாதுகாப்புப் பிரதேசத்தில் அமைந்திருந்த மருத்துவமனை மீது தாக்குதல் நடத்தி 5 அப்பாவிப் பொது நோயாளர்களைக் கொன்றிருப்பதோடு 15 நோயாளர்களை காயப்படுத்தியுமுள்ளனர். அத்துடன் அங்கிருந்த மிக முக்கியமான உயிர்காப்புச் சாதனங்களும் அழிக்கப்பட்டுள்ளன.

வன்னி மக்கள் மீது தொடுக்கப்பட்டிருக்கும் போரை நிறுத்தி பாதிக்கப்பட்ட மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை அனுப்பி வைக்க ஸ்ரீலங்கா அரசுக்கு அழுத்தம் கொடுக்குமாறு பிரித்தானிய தமிழர் பேரவையானது கோருகின்றது. அத்துடன் பிரித்தானிய வெளிவிவகார அமைச்சு தவறான ஆலோசனைகளின் அடிப்படையில் உணர்வுகளைப் புண்படுத்தும் விதத்திலான அறிக்கைகளை வெளியிடுவதை தவிர்க்குமாறும் வேண்டுகின்றோம்.

யூலை முற்பகுதியில் பிரித்தானிய தமிழர் பேரவையின் தலைவர் சுரேன் சுரேந்திரன் தேசம்நெற்க்கு வழங்கிய நேர்காணல் :

”புலிகளுக்கும் தமிழீழம் வேணும். பிரிஎப் க்கும் தமிழீழம் வேணும். ஆனால் புலிகளின் மெதடோலஜியை பிரிஎப் சஸ்கிறைப் பண்ணவில்லை” சுரேன் சுரேந்திரனுடன் நேர்காணல் : த ஜெயபாலன்

16ம் திகதி 4.30 மணிக்கு, லசந்த கொலைக்கெதிரான கண்டன ஆர்ப்பாட்டம்

தனது மக்கள்மேல் தொடர்ந்து குண்டுபோட்டு கொன்று கொண்டிருக்கும் ஒரே ஒரு நாடு இலங்கை என்று தான் இறந்த பிறகு வெளியிட எழுதிய தலையங்கத்தில் எழுதினார் லசந்த விக்கிரமதுங்க. தினமும் குறைந்தது மூன்று உயிர்களாவது இலங்கை இராணுவ குண்டுகளுக்கு பலியாகி வரும் தருணத்தில் பயங்கரவாதத்திற்கு எதிராக யுத்தம் செய்வதாக அதை நியாயப்படுத்தி வருகிறது அரசு. அரசின் பிரச்சாரத்துக்கு உறுதுணையாக தெற்கின் இனவாதிகள் உக்கிர பணி செய்துவருகிறார்கள். ராஜபக்ச சகோதரர்கள் தமது கூலிக்குழுக்களை வைத்து கட்டற்ற பயக்கெடுதியை ஏற்படுத்தி பக்கச்சார்பற்ற குரலை ஒட்டுமொத்தமாக நசுக்கி வருகிற இத்தருணத்தில் துணிந்து எழும் ஒவ்வொருவரும் சாவை நோக்கியே எழுகிறார்கள். சமரசமற்ற ஊடகவியலை செய்ய விரும்பிய லசந்த தனக்கு சாவு நிச்சயம் என்று நம்பியிருந்ததில் யாருக்கும் ஆச்சரியம் வரப்போவதில்லை. ராஜபக்ச மன்னராட்சிக்கு எதிராக மூச்சு பேச்சு வரமுடியாத படிக்கு வன்முறை குழுக்கள் -கைக்கூலிகள் பயக்கெடுதி பரப்பி வைத்திருக்கிறார்கள்.

சன்டே லீடர் லசந்தவின் கொலை ராஜபக்ச அதிகாரத்தின் திரையை உலகுக்கு கிளித்து காட்டியுள்ளது. அரசின் யுத்த முன்னெடுப்புகளின் பின்னிருக்கும் அதிகார வெறியையும் மனித உரிமை மீறல்களையும் ஊழலையும் வெட்ட வெளிச்சத்துக்கு கொண்டுவந்துள்ளது இக்கொலை.

ஊடகத்துக்கெதிரான வன்முறையில் இலங்கை உலகின் முன்ணனி நாடு. அதிலும் தற்போதய அரசு ஊடகங்களுக்கு எதிரான வன்முறையை புதிய உச்சத்துக்கு இட்டுசென்றுள்ளது. இந்த போக்குக்கு எதிராக நாம் கடும் எதிர்ப்பு கிளப்பியாக வேண்டும். மக்களை வேட்டையாடிக்கொண்டு அதை எழுத முற்பட்ட ஒரு தரமான ஊடகவியலாளனை நாயை சுடுவது போல் சுட்டு தள்ளிக்கொண்டு சர்வாதிகாரம் செய்யும் இந்த அரசுக்கெதிரான எல்லாவித எதிர்ப்பையும் நாம் செய்தாகவேண்டும்.

லசந்தவின் கொலையை கண்டித்து ‘தொழிலாளர் அகிலத்துக்கான அமைப்பு’ (Committee for Worrkers International) பல நாடுகளில் எதிர்ப்பு போராட்டங்களை ஒழுங்கமைத்துள்ளது.


இங்கிலாந்தில் வெள்ளிக்கிழமை 16ம் திகதி 4.30 மணிக்கு, இலங்கை தூதரகத்துக்கு வெளியே நடக்க இருக்கும் எதிர்ப்பு போராட்டத்தில் கலந்து கொள்ளுங்கள்.

இந்த எதிர் நடவடிக்கைக்கு முழு ஆதரவும் வழங்கி கலந்து கொள்ளுங்கள். நன்றி

தேசம்நெற்

எக்சைல் யேர்னலிஸ்ட் நெட்வேர்க் –

மேலதிக தகவல்களுக்கு தொடர்புகொள்ள;
சேனன் 07908050217
ஜெயபாலன் 07800596786

இக்கொலை சம்பந்தமாக ‘தொழிலாளர் அகிலத்துக்கான அமைப்பு’ வெளியுட்டுள்ள அறிக்கையின் மொழிபெயர்ப்பு பின்வருமாறு. (இது நேரடி மொழிபெயர்ப்பல்ல)

கடந்த 8ம் திகதி சண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்கிரதுங்க கொல்லப்பட்டதை நாம் வன்மையாக கண்டிக்கிறோம்.

எம் ரி வி நிலையதின் மேலான காடைத்தனமான தாக்குதல் நடந்து மூன்று மணித்தியாளத்துக்குள் இன்னுமொரு முக்கிய ஊடகவியலாளர் கொல்லப்பட்டுள்ளார்.

இலங்கையில் தொடரும் ஊடகவியலாளர் மேலான அரச வன்முறையை நாம் வன்மையாக கண்டிக்கிறோம். துணிந்து உண்மையை கதைக்க நினைப்பவர்களை ராஜபக்ச அரசு எவ்வாறு அடக்க முயலுகிறது என்பதற்கு இந்த இரண்டு உதாரணங்களும் நல்ல உதாரணம்.

உண்மைகள் – இலங்கை மக்கள் படும்துன்பங்கள் வெளியில் வராமல் இருக்க இந்த அரசு எதைச்செய்யவும் தயாராக இருக்கிறது. புலிகளுக்கு எதிரான தமது புதிய வெற்றி பெருமித்துடன் அரசின் அட்டூளியங்கள் கேட்பாரற்று கூடிக்கொண்டிருக்கிறது. தமது ஊழல்களையும் சர்வாதிகார முறைகளையும் கபடமாக மறைக்கவும் இவர்கள் ஊடகங்களுக்கு எதிராக தமது பலத்தை காட்டி வருகிறார்கள்.

நாட்டின் மிக முக்கியமான ஒரு ஊடகவியலாளருக்கு ஏற்பட்டுள்ள இக்கதி, சாதாரண மனித உரிமை போராளிகள் மற்றும் அரசியல் போராளிகள் ஆகியோரின் எதிர்காலத்தை கேள்விக்குள்ளாக்கியுள்ளது.

பக்கசார்பற்ற ஊடகவியலாளர் மற்றும் மனித உரிமைவாதிகள் தொழிலாளர் பிரதிநிதிகள் கொண்ட தனியார் விசாரனைக்குழு உடனடியாக உருவாக்கப்பட்டு லசந்த விக்கிரமதுங்கவின் கொலை உட்பட யுத்த காலகட்டத்தில் கொல்லப்பட்ட அனைத்து ஊடகவியலாளர்களின் கொலைகளும் சரியாக விசாரிக்கப்படவேண்டும்.

யுத்தம் உடனடியாக நிறுத்தப்பட்டு அரச எதிர்தரப்பினரையும் ஊடகவியலாளர்களையும் கொல்வதும் தாக்கப்படுவதும் முடிவுக்கு கொண்டுவரவேண்டும்.

ஊடகங்களுக்கான உண்மையான சுதந்திரம் வழங்கப்படுவதுடன் ஜனநாயக மனித உரிமைகள் மீளமைக்கப்படவேண்டும்.

இந்த கருணை நிறைந்த பௌத்த தேசத்தில்……….. : லங்காடிசன்ட்

freethepress._._._._._. 

‘ஜனநாயகமும் கருணையும் நிறைந்த இந்த தேசத்தில் மாற்றுக் கருத்துக்களுக்கு இடமில்லை. அதனை கற்றுக் கொள்ள முயற்சிப்பவர்கள் சாவிலேயே கற்றுக் கொள்ள வேண்டும் என்றாகிவிட்டது. அதனால் வாழ விரும்பும் நாங்கள் மாற்றுக் குரல், ஒரு சனநாயக உரிமையாக ஏற்றுக் கொள்ளப்பட்டு அனுபவிக்கப்படும் ஒரு நவீன நாட்டில் மற்றவர்களின் பாடுகளுடன் இணைந்து நிற்கும் ஒரு நாட்டில் மீண்டும் வருவோம்’

லங்காடிசன்ற்

._._._._._.

இது கருணை நிறைந்த ‘புத்தரின் தேசம்’ என சிங்கள பௌத்தர்கள் நம்புவதுடன் ஜனநாயக சோசலிச குடியரசு என அரசியலமைப்பில் பெயரிடப்பட்டுள்ள தேசமாகும். அதனால்

‘அறிவின் ஒளியில் புதிய வலுவுடன்
வெறுப்பும் வேறுபாடுகளும் இல்லாதொழிந்து
அன்பின் வலுவடைந்த தேசமாக
எல்லோரும் ஒருவராக அணிவகுத்துச்செல்ல
எம்மை முழுமையான சுதந்திரம் நோக்கி வழிநடத்து தாயே!’
எனத் தமது தேசிய கீதத்தையும் பெருமையுடன்
இசைக்கிறார்கள்.
 
எனினும் கருணையும் ஜனநாயகமும் நிறைந்த இந்த பௌத்த தேசத்தில் ஊடகங்கள் மாற்று கருத்துக்களை கொண்டிருக்க அனுமதியில்லை. ஆட்சியாளர்களின் சட்டங்களை விமர்சிக்க ஊடகங்களுக்கு உரிமையில்லை. மக்களுக்காக பேசும் உரிமையும் ஊடகங்களுக்கு இல்லை.

ஊடகங்களுக்கு கருத்துக்களை தெரிவிக்கும் உரிமை இருப்பதாக சிலர் நினைத்தனர். தகவல்களை அறிந்து கொள்ளும் உரிமை இருப்பதாகவும் சிலர் நினைத்தனர். நூதனமான ஒழுக்கம் நிறைந்த சமூகத்தில் உள்ள மக்களுக்கு, இந்த உரிமையை ஒரு அடிப்படை உரிமையாக அனுபவிக்க உரிமை உள்ளது என நினைத்தனர்.

ஜனநாயகமும், கருணையும் நிறைந்த இந்த தேசத்தில் இவ்வாறான உரிமை இல்லை என தேசத்தை ஆளும் தேசப்பற்றுள்ள தரப்பினர் பகிரங்கமாவே தெரிவித்துள்ளனர்.

வடக்கில் இருந்த தமிழ் ஊடகங்களே முதலில் இந்த முகத்தில் அறையும் உண்மையை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. இது முதலில் மிகவும் பகிரங்கமாகவும் கொடூரமாகவும் கற்பிக்கப்பட்டது.

அப்போது வடக்கில் இருந்து வந்த மாறுபட்ட குரல்களை வேறு இடங்களில் ஒலிக்கச் செய்ய கொழும்பு ஊடகங்கள் விரும்பியிருக்கவில்லை. வடக்கில் எழுந்த அந்த உரிமையின் குரலைக் கேட்பதற்கும் தெற்கில் உள்ள ஊடகங்கள் தயாராக இருக்கவில்லை.

சிலர் அவர்கள் பாடம் படிக்கட்டும் என்றே விட்டுவிட்டனர். எங்களுடன் இல்லாத அவர்கள் படித்த பாடம் எங்களுக்கு தேவையில்லையெனவும் கருதியிருந்தனர். அவர்கள் படித்த பாடங்களை எங்களுக்குச் சொல்ல அவர்கள் உரிமையற்றிருந்தார்கள். அவர்கள் அதைச் சொல்லியிருப்பின் இன்னும் சில காலம் வாழும் உரிமையை இழந்திருப்பார்கள். தற்போது தென் பகுதி ஊடகங்கள் அதனை அனுபவிக்க நேர்ந்துள்ளது.

எனினும் அந்தப் பாடத்தைக் கற்றுக் கொடுக்க, அதனை கற்றறிந்தவர் பலர் இன்று எம்மிடத்தில் இல்லை. சிலர் மேலும் சில காலம் உயிர் வாழும் உரிமைக்காக, கற்றுக் கொடுக்கும் அந்த உரிமையை ரத்துச் செய்து கொண்டுள்ளனர். மேலும் சிலரின் உரிமைகள் அவர்களின் ஊடக நிறுவவனங்களுடன் தீப் பற்றி எரிந்து போனது. இந்தப் பாடத்தைக் கற்றுக் கொள்ளவே சிரச ஊடக நிறுவனம் எரியூட்டப்பட்டது.

இந்த நிலையில் எவருக்கும் அடிபணியாத ஊடக செயற்பாடுகளுக்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்ட பத்திரிகை ஆசிரியர் லசந்த விக்ரமதுங்கவுக்கு இது வெற்றி கொள்ள வேண்டிய சவாலாக இருந்தது. இதனை எதிர் கொள்ளும் போது, அவர் வார்த்தைகளை மறைத்து வைக்கவில்லை. இந்த சவாலை எதிர்கொள்ள அவர் தனக்கே உரித்தான பாணியை கைக்கொண்டிருந்தார். இதற்காக அவர் பாராட்டப்பட்டார். கௌரவிக்கப்பட்டார். அரசியல் ரீதியாக தனிமைப்படுத்தப்பட்டார். இதனால் சவாலை வெற்றி கொள்ள முடியாது அவர் தனிமையானார்.

இது அடிக்கடி படித்துக் கற்றுக்கொள்ளும் பாடம் இல்லை. ஜனநாயகமும் கருணையும் நிறைந்த இந்த தேசத்தில் மாற்றுக் கருத்துக்களுக்கு இடமில்லை. அதனை கற்றுக் கொள்ள முயற்சிப்பவர்கள் சாவிலேயே கற்றுக் கொள்ள வேண்டும் என்றாகிவிட்டது. அதனால் வாழ விரும்பும் நாங்கள் மாற்றுக் குரல், ஒரு சனநாயக உரிமையாக ஏற்றுக் கொள்ளப்பட்டு அனுபவிக்கப்படும் ஒரு நவீன நாட்டில் மற்றவர்களின் பாடுகளுடன் இணைந்து நிற்கும் ஒரு நாட்டில் மீண்டும் வருவோம். அதுவரையில்….

லங்காடிசன்ட் ஆசிரியர்.

இலங்கை ‌பிர‌ச்சனை‌யி‌ல் முறை‌யிடுவது கடை‌சி முய‌ற்‌‌சி: சோனியா காந்திக்கு ராமதாஸ் கடிதம்

raamadas.jpgமுல்லைத் தீவில் இன்று பெருமளவில் மனித உயிரிழப்பைத் தடுப்பதற்கு, முறையிடுவதற்கான கடைசிப் புகலிடமாக உங்களை (சோ‌னியாகா‌ந்‌தி) நான் அணுகி இருக்கிறேன் எ‌ன்று தெ‌ரி‌வி‌த்து‌ள்ள பா.ம.க. ‌நிறுவன‌ர் ராமதா‌ஸ், இலங்கையில் உடனடி போர்நிறுத்தம் ஏற்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தியை கே‌ட்டு‌க் கொ‌ண்டு‌ள்ளா‌ர்.

இது தொட‌ர்பாக அவ‌ர், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி தலைவர் சோனியாகாந்திக்கு எழுதியுள்ள கடிதத்தில், ‌விடுதலைப்புலி போராளிகளுக்கு எதிராக இலங்கைப் படையினர் போர் நடத்துகிறார்கள் என்ற போர்வையில், இலங்கையில் அப்பாவித் தமிழ் மக்கள் அடக்கி ஒடுக்கிக் கொல்லப்படுவது குறித்துத் தமிழக மக்கள் கொந்தளிப்பு அடைந்திருக்கிறார்கள் என்பதை நீங்கள் அறிவீர்கள். இலங்கையில் நிலவும் அநீதியான நிலைமை குறித்துத் தமிழ்நாட்டில் உள்ள அனைத்துக் கட்சிகளும் கவலை தெரிவித்துள்ளன.

இலங்கையில் போர் நிறுத்தத்தை ஏற்படுத்துவதற்கு அவர் தலையிட வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங்கைச் சந்தித்து வேண்டுகோள் விடுப்பதற்காக, கடந்த டிசம்பர் 4ஆம் தேதி தமிழகத்தில் இருந்து அனைத்துக் கட்சி தூதுக்குழுவைத் தமிழக முதலமை‌ச்சர் கருணாநிதி தலைமை ஏற்று அழைத்துச் சென்றார்.

அமைதி முயற்சிகளைத் தொடங்குவதற்கு அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜியை இலங்கைக்கு அனுப்புவதாகத் தமிழகத் தூதுக்குழுவினரிடம் பிரதமர் உறுதி அளித்தார். ஆனால் பிரதமர் வாக்குறுதி அளித்தபடி பிரணாப் முகர்ஜியை இலங்கைக்குச் செல்லவில்லை என்பதையும், தமிழக மக்களின் ஒட்டுமொத்த குரலுக்கு மதிப்பளிக்கப்படவில்லை என்பதையும் வருத்தத்துடன் உங்களுக்கு நான் தெரிவித்துக் கொள்கிறேன்.

இலங்கையில் தமிழ் மக்கள் பாதுகாப்புடன் வாழ்வதை உறுதிப்படுத்த வேண்டும் என்று கோரி ஆறு கோடி தமிழ் மக்களும் மத்திய அரசை அணுகினர். ஆனால் எதுவும் நடக்கவில்லை. எனினும், இலங்கைத் தமிழ் மக்களும், இந்தியத் தமிழ் மக்களும் நீங்கள்தான் தங்களின் பாதுகாவலர் என்று உங்கள் மீது முழு நம்பிக்கை வைத்துள்ளனர்.

முல்லைத் தீவில் இன்று பெருமளவில் மனித உயிரிழப்பைத் தடுப்பதற்கு, முறையிடுவதற்கான கடைசிப் புகலிடமாக உங்களை நான் அணுகி இருக்கிறேன். மத்திய அரசை ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைவர் என்ற முறையில் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்குப் பல்வேறு நடவடிக்கைகளை நீங்கள் எடுத்திருக்கிறீர்கள்.

அதே தகுதியில், இலங்கையில் உடனடியாகப் போர்நிறுத்தம் ஏற்படத் தலையிட வேண்டும் என்றும், இலங்கை அரசுக்கும் இலங்கைத் தமிழர்களுக்கும் இடையே பேச்சுக்களுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் இந்திய அரசுக்கு நீங்கள் ஆணையிட வேண்டும் என்று நான் வேண்டுகோள் விடுக்கிறேன்.

இந்தச் சிக்கலை மிகுந்த மனிதநேயத்துடனும், அனுதாபத்துடனும் நீங்கள் அணுகுவீர்கள் என்றும், இலங்கையில் தமிழ் மக்களுக்கு அமைதியையும், பாதுகாப்பையும் மீட்டுத் தருவீர்கள் என்றும் நான் உறுதியுடன் நம்புகிறேன் எ‌ன்று அ‌ந்த கடி‌த‌த்‌தி‌ல் ராமதா‌ஸ் கூ‌றியு‌ள்ளா‌ர்.

தனது உளவு விமானத்தை ‘ரோ’ ‘பிரபாகரனைக் கண்காணிக்கவே பயன்படுத்தி வருகிறது. – திருமாவளவன்

thiruma.jpgதனது உளவு விமானத்தை ‘ரோ’ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனைக் கண்காணிக்கவே பயன்படுத்தி வருவதாக விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

அண்மைக் காலமாக சிங்கள இனவெறி அரசு ஈழத்தமிழர்களைக் கொன்று குவிக்க இந்திய அரசு ராணுவ உதவிகளும் பண உதவிகளும் பெருமளவில் செய்து வருவது உறுதிப்பட்டு வருகிறது. கிளிநொச்சியை விட்டு விடுதலைப்புலிகளும் பொது மக்களும் இடம் பெயர்ந்துள்ள ஓரிரு நாட்களுக்குள் இந்திய அரசின் உளவு நிறுவனமான ரோ அமைப்பின் நவீன விமானம் ஒன்று தமிழீழத்தின் கடலோரப்பகுதிகளையும் காடுகளையும் கண்காணிப்பு ஆய்வு செய்வதற்கு 3-ம் தேதி அதிகாலை சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்திலிருந்து சில ‘ரோ’ அதிகாரிகளுடன் புறப்பட்டுச் சென்றுள்ளது.

உயர்ந்த தொழில் நுட்ப வேவு கருவிகளைக் கொண்ட இந்த வானூர்தி இரவு நேரத்திலும் தரையில் நடந்து செல்லும் ஒருவரை மிகத்துல்லியமாக புகைப்படம் எடுக்குமளவிற்கு ஆற்றலுடையது என்று தெரிய வருகிறது.

முதல் – அமைச்சர் கருணாநிதியின் முயற்சியில் இந்திய பிரதமரை சந்தித்து அனைத்துக்கட்சித் தலைவர்களின் கோரிக்கையையும், தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட போர் நிறுத்தத்தை வலியுறுத்திய தீர்மானத்தையும் புறந்தள்ளியது மட்டுமில்லாமல் முல்லைத்தீவுப் பகுதிகளைக் கண்காணிக்க ரோ அமைப்பின் அதிகாரிகளை உயர் தொழில் நுட்ப உளவு விமானத்தில் அனுப்பியிருப்பது அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது. பிரபாகரனை காட்டிக் கொடுக்கும் நடவடிக்கையில் இந்திய அரசு ஈடுபட்டுள்ளது என்பதையே இது உறுதிப்படுத்துகிறது. தமிழீழ விடுதலைப்போரை நசுக்கவும், அதன் தலைவரை அழித்தொழிக்கவும் இந்திய அரசு வெளிப்படையாக ஈடுபட்டிருப்பது தமிழ்ச் சமூகத்தால் மன்னிக்கவே முடியாத செயலாகும்.

இந்திய அரசு,  இந்தக் காட்டிக் கொடுக்கும் கேவலத்தை உடனடியாகக் கைவிடவில்லையெனில் பொங்கியெழும் தமிழக மக்களுக்கு பதில் சொல்லியேத் தீர வேண்டும் என்று கூறியுள்ளார் திருமாவளவன்

இலங்கைப் பிரச்சினையில் மத்திய, தமிழக அரசுகள் இரட்டை வேடம்: இல.கணேசன்

மத்திய அரசும், தமிழக அரசும், இலங்கைத் தமிழர் விவகாரத்தில் இரட்டை வேடம் போடுகின்றன என்று பாஜக மாநிலத் தலைவர் இல.கணேசன் கூறியுள்ளார்.

இது குறித்து இல.கணேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கை தமிழர் பிரச்சனையில் மத்திய அரசும், தமிழக அரசும் இரட்டை வேடம் போடுகின்றன. தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட போர் நிறுத்தத்தை கோரும் தீர்மானத்தை அமல்படுத்த தமிழக முதல்வர் நேரில் சென்று வலியுறுத்தியும் பிரதமர் மவுனம் சாதிக்கிறார். பிரணாப் முகர்ஜி கொழும்பு செல்வார் என அறிவித்து விட்டு இதுவரை செல்லாமல் இருப்பதும், அதை நியாயப்படுத்தி அமைச்சர் டி.ஆர்.பாலுவே அறிக்கை விடுவதும் திமுக மீது சந்தேகத்தை கிளப்புகின்றன.

தங்களது பதவியை தக்க வைத்துக் கொள்ளவும், ஸ்பெக்ட்ரம் ஊழல் குற்றச்சாட்டிலிருந்து தப்பித்துக் கொள்ளவும், சொத்துக்களை காப்பாற்றிக் கொள்ளவும் ஈழத் தமிழரின் உடமையை காவு கொடுக்க திமுக தயாராகிவிட்டது என்பதையே இந்த மெத்தனம் நிரூபிக்கிறது. அதேபோல சிங்கள ராணுவத்துக்கு ஆயுதமும், ஆலோசனைகளையும் பயிற்சியையும் இந்தியா தான் வழங்கி வருகிறது என்கிற குற்றச்சாட்டையும் மத்திய அரசு மறுக்கவில்லை.

சீனாவுடனும், பாகிஸ்தானுடனும் நாம் போரினை சந்தித்த போது இலங்கை அரசு நம்மை ஆதரிக்கவில்லை. ராணுவத் தீர்வு சாத்தியமல்ல என்று இந்தியா உட்பட உலக நாடுகள் எல்லாம் கருத்து சொல்லிய பிறகும் தீர்வு என்ன என்பதைச் சொல்லாமலேயே இனப்படுகொலை நடத்திக் கொண்டிருக்கும் சிங்கள அரசின் அரசே நடத்தும் பயங்கரவாதத்தை கண்டிக்கிறேன். மத்திய, மாநில அரசுகள் தங்களது இரட்டை வேடத்தை கலைத்துவிட்டு இலங்கையில் உடனடியாக போர் நிறுத்தத்தை அமல்படுத்தி பேச்சு வார்த்தை துவங்கிட இலங்கை அரசை வற்புறுத்த வேண்டும்.

மாறாக இலங்கை அரசு போரைத் தொடருமானால் இந்தியா தனது அணுகுமுறையை மறுபரிசீலனை செய்ய நேரிடும் என எச்சரிக்க வேண்டும். சம உரிமை இலங்கைத் தமிழரது பிறப்புரிமை என்பதை சுட்டிக் காட்டவும், இலங்கையில் உடனடியாக போர் நிறுத்தத்தை வலியுறுத்தியும் அப்பாவித் தமிழ் மக்கள் படுகொலை செய்யப்படுவதை தடுத்து நிறுத்தவும் மத்திய அரசை வற்புறுத்தி சென்னையில் 12.1.09 திங்கட்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை உண்ணாவிரதம் எனது தலைமையில் நடைபெறும்.

இதற்கு தேசிய செயலாளர் சு.திருநாவுக்கரசர் முன்னிலை வகிப்பார். கட்சியின் அனைத்து முன்னணி நிர்வாகிகளும் இதில் கலந்து கொள்கின்றனர். இதன் காரணமாக சென்னையில் 9ம் தேதி பிஜேபி நடத்த திட்டமிட்டிருந்த ஆர்ப்பாட்டம் ஒத்தி வைக்கப்படுகிறது. தமிழகத்தில் சரக்குந்துகள் வேலை நிறுத்தம், வாகனங்களுக்கான எரி பொருளை நிரப்ப நீண்ட வரிசை, எரிபொருள் இருப்பு இல்லை என்கின்ற வாசக அட்டைகள் எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் தொங்குகின்றது. காரணம் எண்ணெய் வளத்துறையினர் வேலை நிறுத்தம் செய்துள்ளார்கள்.

நம்நாட்டின் பொருளாதாரத்தை தூக்கி நிறுத்திக் கொண்டிருக்கும் 9 நிறுவனங்களுக்கு நவரத்னா எனப் பெயர் சூட்டி அதற்கான விசேஷ விதிமுறைகளும் பின்பற்றப்பட்டது. அந்த நிறுவனங்கள்தான் அரசுக்கு கோடிக்கணக்கில் லாபம் ஈட்டி வருகிறது. அந்த லாபத்திற்கு நிர்வாகி கள் தொழிலாளர்கள் ஆகியோரும் காரணம் என்பதால் அந்த லாபத்தில் ஓரளவு அவர்களுக்கு ஊதியமாக வழங்கப்படுகிறது.ஆனால் அரசு சமீபத்தில் சம்பள சீர்திருத்தம் குறித்து கணக்கிடும் போது இந்த லாபம் ஈட்டும் நிறு வனங்களுடன் நஷ்டத்தையே சந்தித்துக் கொண்டிருக்கும் நிறுவனங்களையும் சமமாக்கி பரிந்துரைத்தது.

பொதுவாகவே சம்பள சீர்திருத்தம் என்றாலே ஏதேனும் கொஞ்சமாவது சம்பள உயர்வு இருக்கும் என எதிர் பார்ப்பது இயற்கை. விசித்திரமான முறையில் எண்ணெய் நிறுவனங்களில் பணிபுரியும் அதிகாரிகளுக்கு சம்பளம் குறைந்துள்ளது. பணிபுரிபவர்கள் மட்டுமல்ல, நிர்வாகமே கூட சம்பள உயர்வு வரும் என எதிர்பார்த்து முன்பணமாக ஒரு தொகையை தந்தது. மாறாக சம்பளம் குறைந்த தால் ஏற்கனவே நிர்வாகமே தந்த பணத்தை ஊழியர்கள் திரும்பக் கட்டும் நிலை ஏற்பட்டுள்ளது.

நாட்டின் பொருளாதாரத்தை கட்டிக் காக்கும் நிறுவனங்களின் அதிகாரி களுக்கு உரிய சம்பளம் வழங்கப் படுதல் அவசியம்; நியாயமும் கூட. மாறாக அவர்கள் வஞ்சிக்கப்படுவார் களானால் தனியார் துறை நிறுவனங் கள் அவர்களது திறமையை பயன் படுத்திக் கொள்ள அதிக சம்பளம் தர காத்துக் கிடக்கின்றன. இதைத்தான் அரசு சார்பான சில பெரியவர்கள் விரும்புகிறார்ளோ என நான் சந்தேகிக்கிறேன். தனியாரிடம் லஞ்சம் பெற்றுக் கொண்டு அரசின் பொதுத்துறை நிறுவனங்களை அழிக்க முயற்சிக்கும் சிலரது திட்டமோ என சந்தேகிக்கின்றேன்.

எனவே அரசு உடனடியாக போராடும் ஊழியர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி உடனடியாக வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வர அரசு முயற்சிக்க வேண்டும். மாறாக வேலை நிறுத் தத்தை ஒடுக்க கடுமை தண்டனை வழங்கும் நடவடிக்கைகளை மேற் கொள்வதை வன்மையாக கண்டிக்கிறேன் என்றார்.

கருத்துக்களை அடக்கவோ அழிக்கவோ முற்படுவது கடும் கண்டனத்துக்குரியதாகும்.

daglas.jpg
பயங்கரவாதத்துக்கு எதிராக யுத்தமொன்று நடைபெறுகையில் ஊடகங்கள் சமூக அக்கறையோடும் தேவையற்ற பதற்றத்துக்கு இடம்தராத வகையிலும் பணியாற்ற வேண்டும். அதேவேளையில் ஊடகங்கள் மற்றும் ஊடகவியலாளர்களை கருவிகொண்டு அழிப்பது, அச்சுறுத்துவது, ஊடக நிறுவனங்களைத் தாக்குவது போன்ற மிலேச்சத்தனமான செயற்பாடுகளை எவரும் அனுமதிக்க முடியாது. இவ்வாறான சம்பவங்கள் மிக வன்மையான கண்டனத்துக்குரியவையாகும் என்று செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தனது கண்டனச் செய்தியில் தெரிவித்துள்ளார்.  ஒவ்வொருவருக்கும் கருத்துச் சொல்லும் சுதந்திரம் உண்டு. அதை இன்னொரு கருத்தினால் எதிர்கொள்வதே சரியானதாகும். மாறாக ஆயுதங்களைக் கொண்டு கருத்துக்களை அடக்கவோ அழிக்கவோ முற்படுவது கடும் கண்டனத்துக்குரியதாகும்.

அது ஒருவகையில் இயலாமையின் வெளிப்பாடுமாகும். பத்திரிகை விநியோகங்களுக்குத் தடை விதிப்பது, அச்சுறுத்துவது, ஊடக நிறுவனங்களைத் தாக்குவது ஊடகவியலாளர்களைக் கொலை செய்வது என்பன கருத்துக்களின் குரல் வளையை நெரிக்கின்ற கொடூரமாகும். இதை எவராலும் ஏற்றுக் கொள்ள முடியாது. அண்மையில் எம்.ரி.வி. நிறுவனம் தாக்கப்பட்டது, சண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க படுகொலை செய்யப்பட்டது போன்ற சம்பவங்கள் எமக்கு அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளன.

இவ்வாறான சம்பவங்கள் மேலும் தொடராதிருக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டுமென கேட்டுக் கொள்கின்றோம். மக்களுக்கு செய்திகளையும் நாட்டு நடப்புக்களையும் அறிந்து கொள்ளும் உரிமையை ஒவ்வொருவரும் மதிக்க வேண்டும். அதற்காக ஊடகங்கள் ஆற்றும் பணி மகத்தானதாகும். கருத்து ரீதியாக விமர்சனங்கள் இருக்கின்றபோதும் இன்னொருவரின் கருத்துச் சொல்லும் சுதந்திரத்தை ஈ.பி.டி.பி. யினராகிய நாம் என்றும் மதிக்கின்றோம். எனவே, நடைபெற்றுள்ள கசப்பான மற்றும் துயரமான சம்பவங்களுக்குக் காரணமானவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும். தவிரவும் இதுபோன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் நடைபெறாது என்பதையும் உரியவர்கள் உத்தரவாதப்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கின்றேன் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.