::சர்வதேச விடயங்கள்

::சர்வதேச விடயங்கள்

சர்வதேச விடயங்கள் தொடர்பான செய்திகள் கட்டுரைகள்

யூலியன் அசான்ஜ் – மக்ஸின் குஸ்ஸிநோவ்: ஒருவருக்கு கதாநாயகன் மற்றவருக்கு துரோகி – தொடரும் சர்வதேச படுகொலைகள்!

இவ்வாரம் சர்வதேச அரசியல் சூழலில் மிக முக்கியமான வாரம். சர்வதேச அரசியலில் யார் எந்தப் பக்கம் நிற்கின்றார்கள் என்பதைப் பொறுத்தே அதன் சாதக பாதகங்களும் அமையும். பல் துருவ அரசியல் வலுப்பெற்று அமெரிக்கா தலைமையிலான மேற்குலகின் இராணுவ அரசியல் ஆளுமையின் பலம் முன்னைய நிலையிலிருந்து சற்று பலவீனப்பட்டுப் போயுள்ளதன் பின்னணியில் இவற்றைக் காணலாம்.

மேற்குலகின் முழு ஒத்துழைப்புடன் இஸ்ரேல் மேற்கொண்டுவரும் இனப்படுகொலை, இனச்சுத்திகரிப்பு நடவடிக்கைக்கு எதிராக சர்வதேச நீதிமன்றத்தில் மற்றுமொரு வழக்கு 53 நாடுகளும் மூன்று நிறுவனங்களும் இணைந்து தொடுத்துள்ளன. பெப்ரவரி 19இல் ஆரம்பமான இவ்வழக்கில் 76 ஆண்டுகள் பாலஸ்தீனிய மண் சட்டவிரோதமாக அபகரிக்கப்பட்டது மற்றும் பாலஸ்தீனிய மக்கள் மீதான ஆக்கிரமிப்பின் சட்டத்தன்மை பற்றியும் சர்வதேச நீதிமன்றம் முடிவெடுக்க உள்ளது. சர்வதேச நீதிமன்றத்தின் முடிவுக்கு, இஸ்ரேவேலின் ஊழல் குற்றவாளியும் இனப்படுகொலை பிரதமருமான பென்ஜமின் நெதன்யாகு கட்டுப்படப்போவதில்லை.

ஆனாலும் இந்த இனப்படுகொலைக்கு முழு ஒத்துழைப்பை வழங்கிவரும் அமெரிக்க, பிரித்தானிய, மேற்குலக மற்றும் ஐரோப்பிய அரசுகள் தொடர்ந்தும் இஸ்ரேலின் இனப்படுகொலைக்கும் இனச்சுத்திகரிப்புக்கும் துணை போனால் அவர்கள் போட்டிருக்கும் ஜனநாயகப் போர்வை முற்றாகப் பொசுங்கிவிடும். சர்வதேசத்தில் அவர்களும்; கொலையாளிகளாகவும் காட்டான்களாகவுமே பார்க்கப்படும் நிலையுள்ளது. அதனால் அமெரிக்கா தலைமையிலான நேட்டோ நாடுகள் தற்போது இஸ்ரேலை சற்று கண்டிக்க ஆரம்பித்துள்ளன. யுத்த நிறுத்தம் என்பது தீண்டத்தகாத சொல்லாக இருந்த நிலைமை மாறி யுத்த நிறுத்தம் வேண்டும் என்று கோரும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். அப்படியிருந்தும் ஐநாவில் அல்ஜீரியாவால் கொண்டுவரப்பட்ட உடனடி யுத்த நிறுத்தத் தீர்மானத்தை மீண்டுமொரு தடவை இன்று பெப்ரவரி 20 அமெரிக்கா எதிர்த்து வாக்களித்துள்ளது. பிரித்தானியா வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை.

பாலஸ்தீனத்தில் 30,000 உயிர்கள், பெரும்பாலும் குழந்தைகளும் பெண்களும் கொல்லப்பட்ட போதும் ஒரு இனமே அழிக்கப்பட்டு வருகின்ற போதும் மனித உரிமைகள் பற்றி மூச்சுக்காட்டாமல் இருந்த அமெரிக்க நேட்டோ அணி ரஷ்யாவின் எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவால்னி பெப்ரவரி 17இல் சிறையில் மறைந்தார் என்ற செய்தி கேட்டு அதிர்ந்து போனது. மேற்கு நாட்டு ஊடகங்கள் அனைத்தும் ரஸ்யாவை ‘பறையா ஸ்ரேட் – paraiah state’ என்று கூப்பாடு போட்டன. பல மேற்கு நாட்டு ஊடகங்கள் இஸ்ரேலுக்கு எதிராக சர்வதேச நீதிமன்றில் கொண்டுவரப்பட்ட வழக்குப் பற்றி மௌனமாக இருக்கின்றன. ஆனால் பிரேஸில் ஜனாதிபதி லூல டி சில்வா காஸாவில் நடைபெறுவது இனப்படுகொலை எனத் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

எதியோப்பியாவில் நடைபெற்ற ஆபிரிக்க ஒன்றிய நாடுகளின் கூட்டத்தில் கலந்துகொண்டிருந்த போதே பிரேஸில் ஜனாதிபதி லூல இக்குற்றச்சாட்டை முன்வைத்தார். மேலும் அன்று ஹிட்லர் யூதர்களுக்கு செய்த அநீதியை இஸ்ரேல் தற்போது பாலஸ்தீனியர்களுக்கு இழைக்கின்றது என்றும் அன்று ஹிட்லர் செய்தது ஹொலக்கோஸ்ட். இன்று இஸ்ரேல் செய்வதும் ஹொலக்கோஸட் என்றும் ஒப்பிட்டு பெப்ரவரி 19இல் கருத்து வெளியிட்டார். ஒரு கண்ணியமிக்க அரசுத் தலைவர் இஸ்ரேலை இவ்வளவு பச்சையாகச் சாடியது இதுவே முதற்தடவை. இதே கருத்துப்பட துருக்கியின் ஆட்சித் தலைவர் ஏடவானும் கண்டித்ததும் குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து பிரேஸில் – இஸ்ரேல் ராஜதந்திர உறவுகள் அடிமட்டத்துக்குச் சென்றுள்ளது.

இந்த அமளிதுமளிகள் அரங்கேறுவதற்கு சில தினங்களுக்கு முன் சரியான திகதி இன்னமும் உறுதிப்படுத்தப்படவில்லை, ரஷ்யரான மக்ஸின் குஸ்ஸிநோவ் என்பவர் ஸ்பெயினில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டதுடன் அவர் மீது வாகனத்தையும் ஏற்றியுள்ளனர். ரஷ்ய இராணுவ ஹெலிகொப்டரை ஓட்டிச்சென்ற ரஷ்யர் மக்ஸின் குஸ்ஸிநோவ் உக்ரைனில் ஓகஸ்ட் 9, 2023இல் தரையிறங்கி உக்ரைனிடம் இருந்து 500,000 டொலரை சன்மானமாகப் பெற்றார். இதனை மிகப்பெரிய தேசத்துரோகம் என ரஷ்ய ஜனாதிபதி புட்டின் அறிவித்ததுடன் அதற்கான தண்டணை வழங்கப்படும் எனவும் தெரிவித்து இருந்தார். கொல்லப்பட்டவர் விளாடிமிர் புட்டினால் சுட்டிக்காட்டப்பட்ட ரஷ்ய ஹெலிகொப்டரைக் கடத்திச் சென்று கூட இருந்த இரு ரஷ்ய வீரர்களைப் படுகொலை செய்த மக்ஸின் குஸ்ஸிநோவ் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ரஷ்யாவுக்கு துரோகி உக்ரைனுக்கும் நேட்டோ அணிக்கும் கதாநாயகனாக இருந்து இப்போது தியாகி ஆகிவிட்டார் மக்ஸி;ன் குஸ்ஸிநோவ்.

அலெக்ஸி நவால்னி, மக்ஸின் குஸ்ஸிநோவ் ஆகியோரின் மரணங்கள் பற்றி அவர்களது மனித உரிமைகள் பற்றி நேட்டோ அணி புலம்பிக்கொண்டிருக்கையில் உலகின் மிகப் பிரபல்யமான ஊடகவியலாளரான யூலியன் அசான்ஜ் யை அமெரிக்காவுக்கு நாடுகடத்துவது பற்றிய வழக்கு பிரித்தானிய நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. சர்வதேச மனித உரிமைகள் அமைப்புகள் ஊடகவியலாளர் யூலியன் அசான்ஜ்யை விடுவிக்குமாறு கோரிய போதும் அதை எதனையும் பொருட்படுத்தாமல் யூலியன் அசான்ஜை சிறையில் வைத்துள்ளது, தன்னை மனித உரிமைகள் மற்றும் ஜனநாயகத்தின் காவலாளியாகக் காட்டிக்கொள்ளும் பிரித்தானியா.

அன்றைய ஈராக் ஜனாதிபதி சதாம் ஹசைனிடம் பேரழிவு ஆயதங்கள் உள்ளது என அமெரிக்காவும் – பிரித்தானியாவும் கூட்டாகச் சதி செய்து ஈராக்கைத் தாக்கி அந்நாட்டை அதன் எண்ணை வளத்தை அபகரிக்க சின்னனாபின்னமாக்கினர். ஈராக்கில் அமெரிக்க இராணுவம் அப்பாவி மக்கள் மீதும் மிக மோசமான தாக்குதல்களை நடத்தியது. இஸ்லாமியர்களை பயங்கரவாதிகள் என்று முத்திரை குத்தி அவர்களைச் சித்திரவதை செய்தது. இவற்றை அம்பலப்படுத்தியதற்காக தலைசிறந்த ஊடகவியலாளரான யூலியன் அசான்ஜ் மீது அமெரிக்கா தேசத் துரோகக் குற்றச்சாட்டை சுமத்தியுள்ளது. இவர் அமெரிக்காவுக்கு திருப்பி அனுப்பப்பட்டால் அலெக்ஸி நவால்னி போல் மரணத்தைத் தழுவுவார் என யூலியன் அசான்ஜ் உடைய மனைவி அச்சம் வெளியிட்டுள்ளார்.

அத்தோடு யூலியன் அசான்ஜ்யை படுகொலை செய்ய அமெரிக்க உளவு நிறுவனமான சிஐஏ திட்டமிட்டுள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். இக்குற்றச்சாட்டை யூலியன் அசான்ஜ்க்கு நீண்டகாலம் தனது தூதரகத்தில் அடைக்கலம் கொடுத்த ஈக்குவடோரும் உறுதிப்படுத்தியுள்ளது. யூலியன் அசான்ஜ் ஒரு நாள் அலெக்ஸி நிவால்னி போன்றோ அல்லது மக்ஸின் குஸ்ஸிநோவ் போன்றே ஆகலாம் என்ற நிலையேற்பட்டுள்ளது.

மேற்குலகு விதந்துரைக்கும் மனித உரிமைகள், ஜனநாயகம் என்பதெல்லாம் அவரவர் நலன்சார்ந்ததே. “ஊருக்குத் தான் உபதேசம் உனக்கில்லையடி” என்றும் கொள்ளலாம் இல்லையேல் “படிப்பது தேவாரம் இடிப்பது சிவன்கோயில் என்றும் கொள்ளலாம்”.

அன்று இனவாத பிரிட்டோரியா அரசோடு இணைந்து நெல்சன் மண்டேலாவை பயங்கரவாதி என்று முத்திரை குத்திய பிரித்தானியா இறுதியில் அதே நெல்சன் மண்டேலாவுக்கு தன்னுடைய நாட்டிலேயே சிலை எழுப்ப நிர்ப்பந்திக்கப்பட்டது. பாலஸ்தீனியர்கள் இனப்படுகொலைக்கு செய்யப்படுவதற்கு ஒத்துழைக்கும் பிரித்தானியா எதிர்காலத்தில் பாலஸ்தீன அரசை ஏற்றுக்கொள்ள நிர்ப்பந்திக்கப்பட்டால் ஆச்சரியப்படுவதற்கில்லை. பிரித்தானியா உலகில் மிக மோசமான குரூரமான காலனித்துவத்தை ஈவிரக்கமின்றி விஸ்தரித்த நாடு. ஆனால் அரசியல் சூழல்கள் மாற்றமடையும்போது அதற்கேற்ப மாறி தன்னுடைய குறைந்தபட்ச நன்மதிப்பை முற்றிலும் இழக்காமல் காப்பாற்றிக் கொண்டுள்ளது.

தற்போது நான்கு மாதம் கழிந்தபின் முன்வைக்கின்ற யுத்தநிறுத்தக் கோரிக்கையும் தன்னுடைய ஜனநாயகப் போர்வை பொசுங்கி தான் அம்பலப்பட்டுப் போவேன் என்ற அச்சமே. அது போல் யுலியன் அசான்ஜ் நாடுகடத்தல் வழக்கில், அவர் நாடுகடத்தப்பட்டால் உலகில் கருத்துச் சுதந்திரம், ஊடக சுதந்திரத்துக்கு விழும் மிகப்பெரும் அடியாக அது அமையும். அது வரலாற்றில் பிரித்தானியாவின் நீதித்துறைக்கு ஏற்படும் மிகப்பெரும் கறையாக அமையும். ஏனைய நாடுகளும் பிரித்தானிய சட்டத்துக்கு இணங்க ஊடகவியலாளர்களை படுகொலை செய்வதை நியாயப்படுத்தும்.

ஊழல் குற்றச்சாட்டு – தனது பதவியை ராஜினாமா செய்தார் சிங்கப்பூர் அமைச்சர் சுப்ரமணியம் ஈஸ்வரன் !

சிங்கப்பூர் அமைச்சர் சுப்ரமணியம் ஈஸ்வரன் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.இ லஞ்சம் பெற்றமை உள்ளிட்ட 27 குற்றச்சாட்டுகள் அவர் மீது சுமத்தப்பட்டுள்ளன.

 

இருப்பினும், தாம் குற்றமற்றவரென அமைச்சர் சுப்ரமணியம் ஈஸ்வரன் வாதிட்டுள்ளார்.

Formula One Grand Prix கார் பந்தயம் சிங்கப்பூரில் நடைபெற்ற போது, அந்நாட்டு சுற்றுலாத்துறையை மேற்பார்வை செய்தவராக அவர் நன்கு அறியப்படுகின்றார்.

 

குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டதையடுத்து, அவர் இன்று தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

ஊழல், மோசடிகள் அற்ற ஆட்சி நடத்துவதாக சிங்கப்பூர் தெரிவித்து வருகின்ற நிலையில், அமைச்சர் ஒருவர் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளமை அந்நாட்டு மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

பாகிஸ்தான் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் – இரண்டு சிறுவர்கள் பலி – அதிகரிக்கும் பதற்றம் !

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் ஜெய்ஷ் உல்-அட்ல் பயங்கரவாதக் குழுவுக்குச் சொந்தமான இரண்டு தளங்களைத் தாக்கி அழித்ததாக ஈரானின் இஸ்லாமியப் புரட்சிக் காவலர் படை (IRGC) செவ்வாயன்று தெரிவித்ததாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குஹே சப்ஸ் பகுதியில் குறிவைக்கப்பட்ட ஜெய்ஷ் உல்-அட்லின் தளங்கள் பயங்கரவாதக் குழுவின் மிகப்பெரிய தளங்களில் ஒன்றாகும் என்று அரசு நடத்தும் மெஹ்ர் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

“இந்த தளங்கள் ஏவுகணைகள் மற்றும் ஆளில்லா விமானங்களால் தாக்கப்பட்டு அழிக்கப்பட்டன” என்று ஈரானிய அரசு ஊடகம் விரிவாகக் கூறாமல் செய்தி வெளியிட்டுள்ளது.

 

இதேவேளை ஈரானின் தாக்குதலுக்கு கடும் கண்டனம் வெளியிட்டுள்ள பாகிஸ்தான், இந்த தாக்குதலில் இரண்டு சிறுவர்கள் கொல்லப்பட்டதுடன் மேலும் மூவர் படுகாயமடைந்ததாக தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட கண்டனத்தில்

“பாகிஸ்தானின் வான்வெளியில் ஈரான் அத்துமீறி நுழைந்து இரண்டு அப்பாவி குழந்தைகளின் மரணத்திற்கு காரணமானதுடன் மூன்று சிறுமிகளை காயப்படுத்தியதை கடுமையாக கண்டிக்கிறது” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பாகிஸ்தானின் இறையாண்மையை மீறுவது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது மற்றும் இந்த சம்பவம் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும்.

“ஒருங்கிணைந்த நடவடிக்கை தேவைப்படும் பிராந்தியத்தில் உள்ள அனைத்து நாடுகளுக்கும் பயங்கரவாதம் பொதுவான அச்சுறுத்தல் என்று பாகிஸ்தான் எப்போதும் கூறியுள்ளது. இத்தகைய ஒருதலைப்பட்சமான செயல்கள் அண்டை நாடுகளின் உறவுகளுக்கு எதிரான செயற்பாடாகும்.அத்துடன் இருதரப்பு நம்பிக்கையையும் கடுமையாகக் குறைமதிப்பிற்கு உட்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேலிய இராணுவத்தின் புலனாய்வு பிரிவின் தலைமையகத்தின் மீது  ஈரான் இராணுவம் ஏவுகணை தாக்குதல் !

ஈராக்கில் உள்ள இஸ்ரேலிய இராணுவத்தின் புலனாய்வு பிரிவின் தலைமையகத்தின் மீது  ஏவுகணை தாக்குதலை மேற்கொண்டதாக  ஈரான் இராணுவம் தெரிவித்துள்ளது.

சிரியாவில் உள்ள ஐஎஸ் அமைப்பின் இலக்குகள் மீதும் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளதாக ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை தெரிவித்துள்ளது.

ஈராக்கின் அரைசுயாட்சி குர்திஸ் பிரதேசத்தின் தலைநகரான எர்பிலில் பல வெடிப்புசத்தங்கள் கேட்டுள்ளன. நால்வர் கொல்லப்பட்டுள்ளனர் ஆறுபேர் காயமடைந்துள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

புலனாய்வு நிலையங்கள் மற்றும் பிராந்தியத்தில் ஈரான் எதிர்ப்பாளர்கள் கூடும் பகுதிகளை இலக்குவைத்து ஏவுகணைதாக்குதல்களை மேற்கொண்டுள்ளதாக ஈரான் இராணுவம் தெரிவித்துள்ளது என அந்த நாட்டு ஊடகம் தெரிவித்துள்ளது.

சியோனிஸ்ட் அரசாங்கத்தின் சமீபத்தைய அநீதிகளுக்கு பதிலடியாக ஈராக்கின் குர்திஸ்தானில் உள்ள மொசாட்டின் புலனாய்வு அலுவலகம் ஏவுகணைகளால் அழிக்கப்பட்டது என தெரிவித்துள்ள ஈரான் இராணுவம் தியாகிகளின் இரத்தத்தின் கடைசி துளிகளிற்கு பதில் வாங்கும் வரை தாக்குதல் தொடரும் என தேசத்திற்கு உறுதியளிப்பதாக ஈரான் இராணுவம் தெரிவித்துள்ளது.

இந்த தாக்குதல் மனிதாபிமானமற்றது பயங்கரவாத தாக்குதல் என  எர்பில் ஆளுநர் கண்டனம் வெளியிட்டுள்ளார்.

ஒரு  ஏவுகணைவீடொன்றிற்குள் விழுந்து வெடித்ததில் குர்திஸ்தானை சேர்ந்த கோடீஸ்வர வர்த்தகரும் குடும்பத்தினரும் கொல்லப்பட்டுள்ளனர்.

ஈரானின்  இந்த தாக்குதலை அமெரிக்கா கண்மூடித்தனமான நடவடிக்கை  என வர்ணித்துள்ளது.

ரஸ்யா, சீனா, மத்திய கிழக்கு, செங்கடல் என வருங்காலங்களில் பல யுத்தங்களுக்கு பிரித்தானியா தயார்! பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சர் கிரான் சாப்ப் போர் முழக்கம்! மக்கள் பொருளாதார நெருக்கடியில் சுகாதார நெருக்கடியில் திண்டாட்டம்!!!

“ரஸ்யா, சீனா, மத்திய கிழக்கு, செங்கடல் என வருங்காலங்களில் பல யுத்தங்களுக்கு பிரித்தானியா தயார்” என காலனித்துவ மிடுக்குடன் பிரித்தானியா யேமன் மீது தாக்குதல் நடத்தியதை நியாயப்படுத்தி நடத்தப்பட்ட பாராளுமன்ற விவாதத்திலேயே பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சர் கிரான் சாப் இன்று ஜனவரி 15, போர் முழக்கமிட்டுள்ளார்.

We're running out of patience': Defence Sec Grant Shapps warns Iran to stop  Houthi... - LBC

ஆளும் கட்சியான கொன்சவேற்றிவ் கட்சியும் எதிர்க் கட்சியான தொழிற்கட்சியும் யேமர் மீதான தாக்குதலை ஆதரித்த நிலையில், அடுத்த வருடம் தேர்தலை எதிர் நோக்கும் இரு கட்சிகளும் கொள்கை வேறுபாடு இன்றி போர் முழக்கம் செய்து, போர்களை உற்பத்தி செய்யவும் ஊக்குவிக்கவும் ஏட்டிக்குப் போட்டியாக செயற்படுகின்றன. குறிப்பாக அமெரிக்க – பிரித்தானிய ஆளும் கட்சிகள் தங்கள் வாக்கு வங்கிகள் சரிகின்ற போது ஏதாவது காரணத்தைக் கண்டுபிடித்து யுத்தத்திற்குச் செல்வது இது முதற்தடவையல்ல. ஈரானிய சார்புடைய யேமன் குர்த்திஸ் போராளிகளையும் மக்களையும் அழிக்க சவுதி அரேபியா மேற்கொண்ட யுத்தத்திற்கு பிரித்தானியாவும் அமெரிக்காவும் ஆயுதங்களை வாரி இறைத்தனர். அந்த நாட்டை இவர்கள் ஏற்கனவே சீரழித்த அப்கானிஸ்தான், ஈராக், லிபியா, சிரியாவின் பட்டியலில் சேர்த்தனர்.

Yemen | History, Map, Flag, Population, Capital, & Facts | Britannica

இப்போது யேமன் அடுத்த அழித்தலுக்கு உரிய இலக்காக மாறியுள்ளது. யாசீர் அரபாத் தலைமையிலான பாலஸ்தீன விடுதலை இயக்கத்தை பலமிழக்கச் செய்ய இஸ்ரேல் மோசாட்டினால் வளர்த்து விடப்பட்ட ஹமாஸ் தற்போது வளர்த்த கடா மார்பில் பாய்ந்தது போல் இஸ்ரேல் மீது பாய ஆரம்பித்து ஒக்ரோபர் 7இல் இஸ்ரேலை கதிகலங்க வைத்தது. 1200 குடியேற்றவாசிகள் நிராயுத பாணிகளான மக்கள் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் குற்றம்சாட்டுகின்றது. அதற்குப் பதிலடியாக இஸ்ரேல் பெரும்பாலும் சிறார்கள் பெண்கள் என கொல்லப்பட்டும் காணாமல் ஆக்கப்பட்டவர்களினதும் எண்ணிக்கை 30,000த்தை எட்டுவதாக பிரித்தானிய பாராளுமன்ற விவாதத்தில் முன்னாள் தொழிற்கட்சித் தலைவரான ஜெரிமி கோபின் இன்று ஜனவரி 16 தெரிவித்தார்.

யேமனின் குத்திஸ் இராணுவம் இஸ்ரேல் காசாவில் இனப்படுகொலை யுத்தத்தை நிறுத்தாவிடில் செங்கடல் வழியாக இஸ்ரேலுக்குச் செல்லும் அல்லது இஸ்ரேலுக்குச் சொந்தமான கப்பல்களைத் தாக்குவோம் என்று எச்சரித்ததுடன், சில பல தாக்குதல்களையும் நடத்தி இருந்தனர். இதனால் செங்கடலூடாக சரக்குக் கப்பல்கள் பயணிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதனால் கப்பல்கள் ஆபிரிக்க கண்டத்தைச் சுற்றி பயணிக்க நிர்ப்பந்திக்கப்பட்டு உள்ளது. உலக வர்த்தகத்தில் 12 வீதமான சரக்குக் கப்பல்கள் செங்கடல் வழியாகவே பயணிக்கின்றன. தற்போது ஒரு கொள்ளளவுப் பெட்டியின் பயணச் செலவீனம் 750 பவுண்களில் இருந்து 3250 பவுண்களாக அதிகரித்துள்ளது. மேலும் பிரித்தானியா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் மீண்டும் பொருட்கள் விலையேறும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

அமெரிக்கா, பிரித்தானியா கூட்டுத் தாக்குதலால் அதிரும் ஏமன்! - கனடாமிரர்

அமெரிக்க – பிரித்தானிய யுத்த ஆர்வம் மத்திய கிழக்கில் அமைதியின்மையை மேலும் அதிகரித்துள்ளது. யேமனின் குத்திஸ் படைகள் அமெரிக்க – பிரித்தானிய – இஸ்ரேலிய படைபலத்தோடு ஒப்பிடுகையில் மிகப்பலவீனமான படைகள். ஆனால் அவர்கள் ஏற்படுத்தும் தாக்கம் குறிப்பிடத்தக்கதாக உள்ளது. அத்தோடு உக்ரைனில் யுத்தம் முடிவுக்கு வந்துவிடக் கூடாது என்பதில் பிரித்தானியாவும் – அமெரிக்காவும் மிகத் தீவிரமாக உள்ளனர். பல பில்லியன் டாலர்களை இறைத்து உக்ரைன் மக்களையும் இளைஞர்களையும் பலிகொடுத்து ரஸ்யாவுக்கு பாடம் புகட்ட வேண்டும் தேர்தலில் தங்கள் ஆளும் குழுமம் வெற்றி பெற வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டுள்ளனர். அதற்காக கூலிப்படைகளும் உக்ரைனில் இறக்கப்பட்டுள்ளனர்.

 

இதுவரை யுத்தத்தில் இறங்காத சீனாவை நோக்கியும் பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சர் கிரான் சாப் போர் முழக்கமிட்டுள்ளார். பிரித்தானிய ஊடகங்களும் பெரும்பாலும் ஆட்சியாளர்களின் போர் முழக்கத்துக்கு ஒத்து ஊதி வருகின்றனர். அமெரிக்க, பிரித்தானிய மற்றும் சில ஐரோப்பிய நாடுகள் இஸ்ரேலின் இனப்படுகொலைக்கு பண உதவியும் இராணுவ உதவியும் வழங்க மற்றைய உலக நாடுகள் இந்தியா நீங்கலாக அனைத்தும் காசா படுகொலைகளை மிக வன்மையாகக் கண்டித்து வருகின்றன. வெள்ளையினத் துவேசத்தால் போராடி மீண்ட தென் ஆபிரிக்கா ஒருபடி மேலே சென்று சர்வதேச நீதி மன்றத்திடம் காசாவின் படுகொலையை நிறுத்தும்படி கோரி உலகின் கவனத்தையும் தலைமைத்துவத்தையும் நிரூபித்துள்ளது.

 

உலகின் பல பாகங்களிலும் தங்களுடைய அரசியல் நலன்களுக்காக தலையீடு செய்து அந்நாடுகளை அரசியல் பொருளாதார ரீதியாகச் சீரழித்த அமெரிக்க – பிரித்தானியக் கூட்டு பாதிக்கப்பட்ட நாடுகளில் இருந்து தஞ்சம் கோரி வருபவர்களை இனவாதத்துடன் நடத்துவதுடன் அவர்களுக்கு அடைக்கலம் வழங்கவும் மறுக்கின்றனர். அந்தந்த நாடுகளில் அமெரிக்கா – பிரித்தானியா தலையீடு செய்யாமல் இருந்திருந்தால் அம்மக்கள் இங்கு அகதியாக வருவதற்கு எந்தத் தேவையும் இருந்திருக்காது. மேலும் கரீபியன் நாடுகளில் இருந்து தங்கள் தேவைகளுக்காக அழைத்து வரப்பட்டவர்களை அவர்களது இறுதிக் காலத்தில் – வின்ரஸ் ஜெனரேசன் – திருப்பி அனுப்பவும் அடம்பிடிக்கின்றனர். அவர்களுக்கு உறுதிப்படுத்தப்பட்ட கொடுப்பனவுகளையும் கொடுக்க மறுக்கின்றது இனவாத கட்டமைப்புடைய பிரித்தானிய உள்துறை அமைச்சு.

பிரதமராகும் வாய்ப்பு யாருக்கு அதிகம்? ஆதரவை குவிக்கும் ரிஷி சுனக், போரிஸ்  ஜோன்சன்: முந்துவது யார்? - லங்காசிறி நியூஸ்

குடித்து வெறித்து யுத்தத்திற்கு வாரி வழங்கிய முன்னாள் பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்சன், தற்போதைய பிரதமர் ரிஸி சுனாக் கோவிட்டில் தங்கள் மக்கள் ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்ட போதே 20 பில்லியன் டொலரை லஞ்சத்தில் காணாமல் ஆக்கியவர்கள். பில்லியன் கணக்கில் பெரி சேவை நடத்தாத நிறுவனங்களுக்கு அதை நடத்துவதற்கே எண்ணியிராத நிறுவனங்களுக்கு அள்ளிக் கொடுத்து மாட்டிக்கொண்டனர். இப்போது யுத்தங்களை வரவழைத்து கொள்ளை லாப மீட்டும் நிறுவனங்களுக்கு துணைபோகின்றனர் என்ற அச்சமே பிரித்தானிய மக்களிடம் உள்ளது.

 

பிரித்தானிய சுகாதார சேவைகள் வரலாறு காணாது கீழ் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. மருத்துவர்கள், ஆசிரியர்கள் நாட்டைவிட்டு வெளியேறுகின்றனர். சம்பள உயர்வுப் போராட்டங்கள் அதிகரித்துள்ளது. நடுத்தர குடும்பங்கள் வறுமைக் கோட்டுக்கு தள்ளப்படுகின்றனர். மாணவர்கள் பட்டினியோடு பாடசாலை வருகின்றனர். உள்ளுராட்சி மன்றங்கள் வழங்கும் அடிப்படைச் சேவைகள் ஒன்றன் பின் ஒன்றாக குறைக்கப்படுகின்றது அல்லது நிறுத்தப்படுகின்றது. தபாலக பொறுப்பாளர்கள் அப்பாவிகள் குற்றவாளிகள் ஆக்கப்பட்டு 20 வருடங்களாகியும் அவர்களுக்கு நியாயம் வழங்க பிரித்தானியா தயாராகவில்லை. பொய்க் குற்றச்சாட்டுக்களால் தண்டணை பெற்ற பலர் குற்றவாளிகளாகவே இறக்கின்றனர். இவர்களுக்கான கொடுப்பனவு வழங்கப்படவில்லை. பிரித்தானியா யுத்தத்தைத் தூண்டுவதிலும் ஏனைய நாடுகளில் மக்களைக் கொல்வதிலும் காட்டும் ஆர்வத்தை தன்னுடைய மக்களுடைய வாழ்க்கையை அவர்களுக்கு வழங்க வேண்டிய சேவைகளை சீரமைப்பதில் காட்டவில்லை.  அதிகார வெறியும் யுத்த வேட்கையும் தான் பிரித்தானிய ஆட்சியாளர்களிடம் உள்ளது. அவர்களிடம் எவ்வித மனிதத்துவப் பண்புகளும் கிடையாது. அமெரிக்க – பிரித்தானிய கூட்டு உலகத்தின் அமைதியின்மைக்கான முக்கிய காரணிகளாக மாறியுள்ளனர். அப்பாவிப் பிரித்தானிய மக்களின் பெயரில் இந்தக் குடிகாரக் கும்பல் சதிராடுகின்றது.

காசா மீது இஸ்ரேல் இராணுவம் நடத்திவரும் தொடர் தாக்குதல் – நாளாந்தம் அங்கவீனர்களாகும் நாளாந்தம் 10 க்கும் மேற்பட்ட சிறுவர்கள் !

காசா மீது இஸ்ரேல் இராணுவம் நடத்திவரும் தொடர் தாக்குதல் காரணமாக கடந்த ஒக்டோபர் மாதம் 7 ஆம் திகதியில் இருந்து நாளாந்தம் 10 க்கும் மேற்பட்ட சிறுவர்கள் தமது கால்களை இழந்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து Save the Children அமைப்பின் அதிகாரியொருவர் கருத்துத் தெரிவிக்கையில் ”3 மாதங்களுக்கும் மேலாக இஸ்ரேல், காசாவின் மீது மனிதாபிமானமற்ற தாக்குதல்களை நடத்தி வருகின்றது. இத்தாக்குதல்களினால் ஏராளமான சிறுவர்கள் கொல்லப்படுவதும், ஊனமாக்கப்படுவதும் ஏற்றுக் கொள்ள முடியாதவொன்றாக உள்ளது.

இத்தாக்குதல் தொடங்கிய காலத்தில் இருந்து இதுவரையான காலப்பகுதியில் சுமார் 1000 க்கும் மேற்பட்ட சிறுவர்கள் ஒன்று அல்லது இரண்டு கால்களையும் இழந்துள்ளனர்”என்று குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை கடந்த ஒரு வாரத்தில் மாத்திரம் சுமார் 50 % க்கும் அதிகமான சிறுவர்கள் வயிற்றுப் போக்கினால் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும், இதனால் சிறுவர்களின் உடல் நலத்துக்கு பாரிய அச்சுறுத்தல் காணப்படுவதாகவும் யுனிசெப் அமைப்பு கவலை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

2024 ஜனாதிபதிதேர்தல் முடிவுகள் என்னை இரவு முழுவதும் உறங்காமல் வைத்திருக்கிறது – மிசெல் ஒபாமா

2024 ஜனாதிபதிதேர்தல் முடிவுகள் குறித்து அச்சமடைந்துள்ளதாக மிசெல் ஒபாமா தெரிவித்துள்ளார்.

என்னை இரவு முழுவதும் உறங்காமல் வைத்திருக்கும்  விடயங்களில் ஒன்று எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் என்ன  நடக்கப்போகின்றது நான்  என்ன நடக்கலாம் என்பது குறித்து அச்சமடைந்துள்ளேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஏனென்றால் எங்கள் தலைவர் யார் என்பது மிகவும் முக்கியமான விடயம் நாங்கள் யாரை தெரிவு செய்கின்றோம் யார் எங்களிற்காக பேசப்போகின்றார் என்பது முக்கியம் என மிச்செல்ஒபாமா  தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் மக்கள் எதனையும் செய்யவில்லை மக்கள் நினைக்கின்றனர் என தெரிவித்துள்ள முன்னாள் முதல் பெண்மணி அரசாங்கம் எல்லாவற்றையும் எங்களிற்கு செய்யவேண்டுமா என்பதே எனது கேள்வி ஜனநாயகத்தை நாங்கள் சில வேளைகளில் அலட்சியமாக எடுத்துக்கொள்கின்றோம் எனவும் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ஜோ பைடன் தனது தேர்தல் பிரச்சாரத்தை தீவிரப்படுத்த தொடங்கியுள்ள சூழலிலேயே மிச்செல் ஒபாமாவின் இந்த கருத்து வெளியாகியுள்ளது.

ஜனநாயகத்தின் எதிர்காலத்தை இந்த வருட தேர்தலே தீர்மானிக்கும் என்ற செய்தியை பைடன் முன்னிறுத்திவருகின்றார்.

எனினும் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்பிற்கும் பைடனிற்கும் இடையில் கடும் போட்டி காணப்படுவதை சுட்டிக்காட்டியுள்ள  ஜனநாயக கட்சியினர் பைடனின் செய்தி மக்களை சென்றடையவில்லை என தெரிவித்து வருகின்றனர்.

“பேரரசு இறையியலும் காசா இனப்படுகொலையும் – மேற்குலகின் மனிதத்துவத்தில் ஏதோ தவறு இருக்கிறது?” பெத்தலகேம் பாதிரியார் முன்தார் ஐசாக்

பெத்தலகேம் தேவாலயத்தின் பாதிரியார் முன்தர் ஐசாக் டிசம்பர் 22 அன்று வழங்கிய பிரசங்கத்தில், மேற்குலக நாடுகள் ஒன்றன்பின் ஒன்றாக அணிவகுத்து இன அழிப்புக்கு ஆதரவளிப்பதை வன்மையாகச் சாடினார். மேற்குலக கிறிஸ்தவ நாடுகள் தார்மீகப் பண்பை இழந்துவிட்டதாகத் தெரிவித்த அவர், பாலஸ்தீனம் அழிவுகளில் இருந்து மீண்டெழும் ஆனால் இன்று இன அழிப்புக்கு ஆதரவு வழங்கியவர்கள் என்றைக்கும் தங்கள் கறையைக் கழுவிக்கொள்ள முடியாது எனத் தெரிவித்தார். டிசம்பர் 10 சர்வதேச மனித உரிமைகள் தினத்தன்று தேசம்நெற் நடத்திய கூட்டத்தில் பேசிய ஒவ்வொரு பேச்சாளர்களினதும் உரைகளை எதிரொலிப்பது போல் பாதிரியார் முன்தார் ஐசாக்கின் பேச்சு அமைந்தது.

குழந்தை யேசு பிறந்த மாட்டுத்தொழுவம் அமைந்த பெத்தலகேமில் கட்டப்பட்ட மிகப் பழமையான தேவாலயம். வழமையாக இத்தேவாலயத்தில் கிறிஸ்மஸ் பண்டிகை மிகச் சிறப்பாக நடைபெறுவது வழமை. ஆனால் இம்முறை காசாவில் இடம்பெற்ற இனவெறித் தாக்குதல்களுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் அத்தேவாலயம் சோடித்து அழகு படுத்தப்படவில்லை. இஸ்ரேல் இராணுவம் காஸா மீது நடத்தும் கண்மூடித்தனமான தாக்குதலையும் யுத்தத்தில் 10,000 சிறார்கள் வரை படுகொலை செய்யப்பட்டதையும் குறிக்கும் வகையில் குழந்தை யேசு இடிபாடுகளுக்கு மத்தியில் படுத்திருக்கும் வகையில் யேசுவின் பிறப்பு உருவகப்படுத்தப்பட்டது.

பிறக்க இருக்கும் குழந்தை யேசுவைக் கொலை செய்ய ஆட்சியாளர்கள் கொலைத்திட்டம் தீட்ட நாஸரத்தில் இருந்து மரியாள் ஜோசப்புடன் அகதியாக பெத்தலகேம் வந்து குழந்தையைப் பிரசவித்தார். இதுவே தற்போது காஸாவில் நடைபெறுகின்றது. பாலஸ்தீனப் பெண்கள் பயங்கரவாதிகளை ஹமாஸைப் பிரசவிப்பதாகக் கூறி இஸ்ரேல் இராணுவம் காஸாவில் உள்ள பெண்களையும் குழந்தைகளையும் படுகொலை செய்கின்றது. கடந்த இரு மாதங்களிற்கு மேலாக கிறிஸ்மஸ் தினம் அன்றும் கூட இஸ்ரேல் நடத்திய கொலைவெறித் தாக்குதலில் இருபதினாயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இவர்களில் 80 வீதமானவர்கள் பெண்களும் குழந்தைகளுமே. இதனை உருவகப்படுத்தும் வகையிலேயே பெத்தலகேம் தேவாலயம் குழந்தை யேசுவை இடுபாடுகளுக்கு இடையே படுக்க வைத்திருந்தது.

பாதிரியார் முன்தர் ஐசாக், தனது பிரசங்கத்தில், மேற்கத்திய உலகின் போலித்தனம் மற்றும் அவர்களின் இனவெறியை கடுமையாக விமர்சித்துள்ளார், காசா உலகின் தார்மீக திசைகாட்டியாக மாறியுள்ளது என்றும் அவர் கூறினார். பெத்லகேமில் உள்ள எவாஞ்சலிக்கல் லூத்தரன் தேவாலயத்தில் டிசம்பர் 22 அன்று தனது கிறிஸ்துமஸ் செய்தியை வழங்கிய பாதிரியார் ஐசக், “மகிழ்ச்சியின் நேரமாக இருந்திருக்க வேண்டிய இத்தருணம் மரண துக்கம் ஆகி பயப்படுகின்றோம்” என்று கூறினார்.

“காசா, எங்களுக்குத் தெரியும் அன்று இருந்தது போல் இனி இல்லை என்று, இது ஒரு அழிவு. இது இனப்படுகொலை” என்று முன்தார் ஐசாக் கூறினார். “இதனை இந்த உலகம் மௌனமாக இருப்பதைப் பார்த்து நாங்கள் வேதனைப்படுகிறோம். சுதந்திர நாடுகள் என்று அழைக்கப்படுபவர்களின் தலைவர்கள் ஒன்றன் பின் ஒன்றாக அணிவகுத்து, சிறைபிடிக்கப்பட்ட மக்களுக்கு எதிரான இந்த இனப்படுகொலைக்கு பச்சை விளக்கு காட்டுகிறார்கள்” என்றும் முன்தர் ஐசாக் குறிப்பிட்டார்.

அவர் தொடர்ந்தும் தன் பிரசங்கத்தில் சேனனின் மொழியில் சொல்வதானால் ‘கொலை மறைக்கும் அரசியல்’ செய்வதாகக் குற்றஞ்சாட்டினார். “மேற்கு நாடுகள் உண்மைச் சூழலை மறைக்கும் அரசியல் மறைப்பை இனப்படுகொலைகளுக்கு வழங்குகின்றனர்” என்று அவர் குற்றம்;சாட்டினார். “இவர்கள் இனப்படுகொலைகளுக்கு “இறையியல் சாயம் பூசுகின்றனர்” என்றும் காட்டமாகக் கடிந்து கொண்டார். முன்தார் ஐசாக் ‘மேற்கத்திய தேவாலயங்கள்’ இந்த சாயம் பூசுவதற்கு பயன்படுத்தப்படுகின்றது” என்றும் சுட்டிக்காட்டினார். பாலஸ்தீன மக்களுடன் ஒற்றுமையுடன் பெத்லகேமில் கிறிஸ்துமஸ் கொண்டாடும் கிறிஸ்தவ தலைவர்களின் சர்வதேச பிரதிநிதிகள் சபையில் இருந்தனர்.

அரசு – பேரரசு இறையியல்:

தென்னாப்பிரிக்கர்கள், “அரசு இறையியல் பற்றிய கருத்தை எங்களுக்குச் சுட்டிக்காட்டினார்கள். “அரச இறையியல் இனவாதம், முதலாளித்துவம் மற்றும் சர்வாதிகாரம் ஆகியவற்றை நியாயப்படுத்த பயன்படுத்துகின்றது” என்றும் மேலும் விளக்கினர்.

“அரசுகள் அதன் சொந்த அரசியல் நோக்கங்களுக்காக இறையியல் கருத்துகளையும் விவிலிய நூல்களையும் தவறாகப் பயன்படுத்துகின்றது” என்றும் முன்தார் ஐசாக் தெரிவித்தார். “இங்கே பாலஸ்தீனத்தில் பைபிள் – நமது சொந்த புனித நூல். நமக்கு எதிரான ஆயதமாகப் பயன்படுத்தப்படுகின்றது”, என்று மேலும் கூறினார், “இங்கு நாம் பேரரசின் இறையியலை எதிர்கொள்கிறோம், இது மேன்மை, மேலாதிக்கம், தேர்ந்தெடுக்கப்பட்ட தன்மை மற்றும் உரிமைக்கான மாறுவேடமாகும்” என்றும் பாதிரியார் முன்தார் ஐசாக் குற்றம்சாட்டினார். “பேரரசின் இறையியல் தெய்வீக அனுமதியின் கீழ் அடக்குமுறையை மறைக்க ஒரு சக்திவாய்ந்த கருவியாக மாறுகிறது” என்று முன்தார் ஐசாக் குற்றம்சாட்டினார்.

“பேரரசு இறையியல் மக்களையும் நிலத்தையும் பிரிக்கின்றது. இது மக்கள் இல்லாத நிலத்தைப் பற்றி பேசுகின்றது. அது மக்களை நமக்கும் அவர்களுக்கும் என்று பிரிக்கின்றது. இது ஒடுக்கப்படுபவர்களை மனிதாபிமானமற்ற மற்றும் கொடூரமானவர்களாக பிரித்துக் காட்டுகின்றது. நிலத்தில் ஆட்கள் இருப்பதை நன்கு அறிந்திருந்தும் மீண்டும் மக்கள் இல்லாத நிலம் என்ற கருத்தாக்கத்தை உருவாக்குகின்றது. அவர்கள் எந்த மக்களுமல்ல, மிகவும் சிறப்பு வாய்ந்த மக்கள்” என்றும் அவர் குறிப்பிட்டார்.

“பேரரசின் இறையியல் காசாவை இல்லாமல் செய்ய அழைக்கிறது. 1948 இல் இனச் சுத்திகரிப்புக்கு அழைப்பு விடுத்தது போல், ஒரு அதிசயம் அல்லது தெய்வீக அதிசயம் என்று இதனை அழைக்கின்றனர். பாலஸ்தீனியர்களான எங்களை ஏன் எகிப்து, ஒருவேளை ஜோர்டானுக்கு செல்லக் கூடாது என்று கேட்கின்றனர். இனி, ஏன் கடலுக்குச் செல்லக்கூடாது?” என்றும் கேட்பார்கள் என்றார் பாதிரியார் முன்தார் ஐசாக்.

மத வரலாற்றுப் பின்னணி:

பாதிரியார் முன்தார் ஐசாக்கின் மிகுந்த முற்போக்கான இப்பேச்சின் பின்னால் ஒரு பலமான அரசியல் நியாயம் தெளிவாகப் புலப்பட்டது. பிதா, சுதன், பரிசுத்த ஆவி, இறை தூதர் என்பதைச் சுற்றியே யூதம், கிறிஸ்தவம், இஸ்லாம் மதங்கள் கட்டப்பட்டது. பிதா என்பதை முழுமுதற் கடவுளாக யூதம் கருதுகின்றது. அவர்கள் மேசியா – இறைதூதுர் இன்னும் வரவில்லை இனிமேல் தான் வருவார் என்று நம்புகின்றது. அவர்கள் யேசுவின் கதையை நம்பவில்லை. கிறிஸ்தவம் மக்களை பாவங்களில் இருந்து மீட்க பிதாவின் மகன் யேசு பிறந்து அவர்களின் பாவங்களைத் தானே சுமந்து அதற்காக சிலுவையில் அறையப்பட்டு மூன்றாம் நாள் உயிர்தெழுந்து அவர் பிதாவிடம் செல்ல மக்களை ரட்சிக்க பூமிக்கு பரிசுத்த ஆவி அனுப்பப்ப என்று கிறிஸ்தவம் நம்புகின்றது. இஸ்லாம் யேசுவை ஈசா என்ற இறை தூதர் என்று நம்புகின்றது. அவ்வாறான பல இறைதூதர்கள் வந்து கடைசியாக வந்த இறைதூதர் மொகமட் என்கிறது. இந்த மூன்று மதங்களினதும் உருவாக்கம் தோற்றம் பாலஸ்தீனத்திலும் அதனையொட்டிய பகுதிகளிலுமே நடைபெற்றது.

அதன் பின் கிறிஸ்தவம் பல பிரிவுகளாக உடைந்து பரவிய போதும் தற்போது அமெரிக்காவினால் உலகெங்கும் பரப்பப்படும் ஆவிக்குரிய சபைகளே இஸ்ரேலை பாதுகாக்கும் கைங்கரியத்தில் மிகத் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது. இஸ்ரேலை நாற்பது நாடுகள் தாக்கி அழிக்கப் போகின்றது என்றும் இஸ்ரேல் என்ற நாட்டைப் பாதுகாக்க வேண்டும் என்றும் அமெரிகாவில் இருந்து கிளைவிட்டுப் பரவியுள்ள ஆவிக்குரிய சபைகள் தங்கள் பிரார்த்தனைகளில் செபிக்கின்றனர்.

கருக்கலைப்புக்கு எதிராக பெண்களது உரிமைகளை மறுக்கும் தீவிர கிறிஸ்தவ மத நாடான அமெரிக்காவின் நவீன காலனித்துவத்தை விரிவுபடுத்துவதற்கு பரிசுத்த ஆவிகளின் சபையை பேரரசு இறையியலாகப் பயன்படுத்துகின்றது. அமெரிக்கா தற்போது இஸ்ரேலுடைய இன அழிப்புக்கு முழமையான ஒத்துழைப்பை வழங்குவதற்குக் காரணம் அவர்களுடைய பொருளாதாரநலன்களே. அதனைக் காப்பதற்கும் நியாயப்படுத்துவதற்கும் ஆவிக்குரிய சபைகளுடாக காரணம் கற்பிக்கின்றது. தற்போது நடைபெறுவதும் ஒரு சிலுவை யுத்தமே. அதனையே பாதிரியார் முன்தார் ஐசாக் தனது பிரசங்கத்தில் தெளிவுபடுத்தி யுள்ளார்.

மேற்கத்திய உலகின் போலித்தனம்

“மேற்கத்திய உலகின் போலித்தனமும் இனவெறியும் பயங்கரமானது” என்று தனது பிரசங்கத்தில் குற்றம்சாட்டிய பாதிரியார் முன்தார் ஐசாக், “எங்கள் ஐரோப்பிய நண்பர்கள், எங்களுக்கு மனித உரிமைகள் அல்லது சர்வதேச சட்டம் பற்றி விரிவுரை செய்வதை நான் ஒருபோதும் ஏற்கப்போவதில்லை. நாங்கள் வெள்ளையர்கள் அல்ல, அதனால் உங்கள் சொந்த தர்க்கத்தின்படி அது எங்களுக்குப் பொருந்தாது” என்று அவர் அதிரடியாகத் தெரிவித்தார்.

“மேற்கத்திய உலகில் உள்ள பல கிறிஸ்தவர்களை” அவர் விமர்சித்தார், “மேற்கத்திய உலகம் இந்த போரில், பேரரசுக்கு தேவையான இறையியல் இருப்பதை உறுதிசெய்தனர். இது அவர்களின் தற்காப்பு என்று எங்களிடம் கூறப்பட்டது” என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

“9,000 குழந்தைகளைக் கொன்றது எப்படி தற்காப்பு ஆகும்? 1.9 மில்லியன் பாலஸ்தீனியர்களின் இடப்பெயர்வு எவ்வாறு தற்காப்பு ஆகும்?” என்றும் அவர் கேள்வி எழுப்பினார். அவர் தொடர்ந்தார்: “பேரரசின் நிழலில் அவர்கள் காலனித்துவவாதிகளான ஆக்கிரமிப்பாளர்களைப் பாவிகளாகவும், ஒடுக்கப்பட்ட பாலஸ்தீனியர்களை ஆக்கிரமிப்பாளராகவும் மாற்றினர். அவர்கள் பேசும் நகரங்கள் மற்றும் கிராமங்கள் பாலஸ்தீனியர்களின் இடிபாடுகளில் கட்டப்பட்டது என்பதை நாம் மறந்துவிட்டோமா?”

பாதிரியார் முன்தார் ஐசாக் மேலும் தனது விசனத்தை வெளிப்படுத்துகையில், “இந்த ஆக்கிரமிப்பாளர்களுக்கு தேவாலயங்களின் சம்மதம் இருப்பதால் நாங்கள் கோபமடைந்துள்ளோம். தெளிவாக இருக்கட்டும் நண்பர்களே, மௌனம் சம்மதம். மேலும் போர் நிறுத்தம் இல்லாமல் அமைதிக்கான வெற்று அழைப்புகள் மற்றும் ஆக்கிரமிப்பிற்கு முடிவு கட்டுதல், மற்றும் நேரடி நடவடிக்கை இல்லாமல் பச்சாதாபத்தின் ஆழமற்ற வார்த்தைகள் அனைத்தும் சம்மதம் என்றே அர்த்தம்” என்று சொல்லி தேவாலயங்களின் மௌனத்தை, அவர்கள் யுத்த நிறுத்தத்தைக் கோரி அழுத்தம் கொடுக்காததை காத்திரமான நடவடிக்கைகள் எடுக்காததை கடுமையாகச் சாடினார் அவர்.

காசா: உலகின் தார்மீக திசைகாட்டி

“எனவே எனது செய்தி இதோ, காசா இன்று உலகின் தார்மீக திசைகாட்டியாக மாறியுள்ளது. அக்டோபர் 7ஆம் தேதிக்கு முன் காசா ஒரு நரகமாகவே இருந்தது. ஆனால் உலகம் அமைதியாக இருந்தது. இப்போது அந்த உலகின் அமைதியைக் கண்டு நாம் ஆச்சரியப்பட வேண்டுமா?” என்று கேள்வி எழுப்பினார் பாதிரியார் முன்தார் ஐசாக். அவர் மேலும் தொடர்கையில், “காஸாவில் என்ன நடக்கிறது என்று நீங்கள் திகைக்கவில்லை என்றால். உங்கள் உணர்வுகளை அது தொட்டுவிடவில்லை என்றால், உங்கள் மனிதத்துவத்தில் ஏதோ தவறு இருக்கிறது”, என்று தன் ஆதங்கத்தை மிகத் தெளிவாக வைத்தார் முன்தார் ஐசாக்.

“கிறிஸ்தவர்களாகிய நாம் இனப்படுகொலையால் கோபப்படாவிட்டால், அதை நியாயப்படுத்த பைபிளை ஆயுதமாக்கினால், எங்கள் கிறிஸ்தவ சாட்சியில் ஏதோ தவறு உள்ளது, மேலும் எங்கள் நற்செய்தியின் நம்பகத்தன்மையை நாங்கள் சமரசம் செய்கிறோம்” என்றும் அவர் எச்சரித்தார். “இதை நீங்கள் ஒரு இனப்படுகொலை என்று அழைக்கத் தவறினால், அது ஒரு பாவம். இந்தப் பாவத்தை நீங்கள் விரும்பி ஏற்றுக்கொள்கிறீர்கள். காசா இடிபாடுகளுக்கு அடியில் இயேசு பிறப்பார்.

அவர் கூறினார், “சிலர் போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்கவில்லை, சில தேவாலயங்கள் போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்கவில்லை. நான் உனக்காக வருத்தப்படுகிறேன். இருப்பினும், பாலஸ்தீனியர்கள் மீது வீழ்ந்த பெரும் அடியையும் மீறி, நாங்கள் மீண்டு வருவோம், எழுவோம், நாங்கள் பாலஸ்தீனியர்களாக எப்பொழுதும் செய்தது போல் அழிவின் மத்தியில் இருந்து மீண்டும் எழுந்து நிற்போம்” என்று கூறி பாலஸ்தீனியர்களை சாம்பல் மேடுகளில் இருந்து உயிர்த்தெழும் பீனிக்ஸ் பறவைகளுக்கு ஒப்பாகக் கருதினார் பாதிரியார் முன்தார் ஐசாக்.

ஆனால் இந்த இன அழிப்புக்கு ‘சம்மதம்’ தெரிவித்தவர்களுக்காக, நான் வருத்தப்படுகிறேன். நீங்கள் எப்போதாவது மீண்டு வருவீர்களா? இனப்படுகொலைக்குப் பிறகு உங்கள் நீலிக் கண்ணீர்கள் முதலைக் கண்ணீர்கள் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது. ஆனால் உங்கள் ஆறதல் வார்த்தைகள் உங்களுக்கே போதுமானதாக இருக்காது” என்று எச்சரித்த பாதிரியார் முன்தார் ஐசாக் “இனப்படுகொலைக்குப் பிறகு உங்கள் மன்னிப்பை நாங்கள் ஏற்க மாட்டோம்” என்று உறுதியுடன் தெரிவித்தார். “காசா: உலகின் தார்மீக திசைகாட்டி எனவே எனது செய்தி இதோ, அவர் கூறினார்: “காசா இன்று தார்மீக திசைகாட்டியாக மாறிவிட்டது” என்று கூறி நீங்கள் யாருடன் நிற்கின்றீர்கள் இனப்படுகொலை செய்பவர்களுடனா அல்லது இனப்படுகொலைகளை நிறுத்தச் சொல்பவர்களுடனான என கருப்பு வெள்ளையாக தன் கேள்வியை முன் வைத்தார் பாதிரியார் முன்தார் ஐசாக்.

 

லண்டனில் பாலஸ்தீன விடுதலைப் போராட்டமும் ஈழப் போராட்டமும் – கருத்துப் பகிர்வும் கலந்துரையாடலும்!

நாளை டிசம்பர் 10, சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு பாலஸ்தீனப் போராட்டமும் ஈழப் போராட்டமும் எனும் தலைப்பிலான கருத்துப் பகிர்வும் கலந்துரையாடலும் தேசம் ஊடகத்தால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

ஐநா செயலாளார் நாயகம் அன்ரனியோ பூட்ரஸ் அவர்களின் ‘யுத்த நிறுத்தம்’ வேண்டும் என்ற அவசர தீர்மானத்தை அமெரிக்கா மீண்டும் நிராகரித்துள்ளது. பிரித்தானியா வாக்கெடுப்பிலிருந்து விலகியிருந்தது. அமெரிக்கா பிரித்தானியா மற்றும் அவற்றின் நேசநாடுகள் பாலஸ்தீனியர்களுக்கு எதிரான இஸ்ரேலின் இனப்படுகொலைக்கு முழுமையான ஆதரவை மீண்டும் வழங்கியுள்ளன. அமெரிக்க அதிபர் தன்னை ‘Genocide Joe’ என்று மீண்டும் ஒரு முறை உறுதிப்படுத்தியுள்ளார். இந்த சர்வதேசப் பின்னணியிலேயே இக்கருத்துப் பகிர்வு நடைபெறுகின்றது.

எதிர்வரும் 10ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 2.30 தொடக்கம் இரவு 7மணி வரை 10th village way, Rayners Lane, Pinner இல் இடம்பெறவுள்ள இந்த நிகழ்வில், முரண்பட்ட அரசியல் பின்புலத்திலிருந்து தங்கள் அனுபவங்களை வளவாளர்கள் பகிரவுள்ளனர்.

நிகழ்வுக்கு தேசம் எழுத்தாளர் த. ஜெயபாலன் தலைமைதாங்கவுள்ளார். ஒடுக்குமுறைகளும் மக்கள் எழுச்சிகளும் எனும் தலைப்பில் எழுத்தாளரும் Committee for Workers International கட்சியின் International Secretariat ட்டருமான சேனன் உரை நிகழ்த்தவுள்ளார்.

யூடாயிசம் – சியோனிசம் – சர்வதேசம் எனும் தலைப்பில் அரசியல் ஆய்வாளரும் சட்ட வல்லுனருமான சையத் பஷீர் உரை நிகழ்த்தவுள்ளார்.

ஹொலக்கோஸ்ட் முதல் காசா வரை : ஜேர்மனியின் அரசியல் போக்கு எனும் தலைப்பில் சமூக செயற்பாட்டாளர் கங்கா ஜெயபாலன் உரை நிகழ்த்தவுள்ளார்.

பாலஸ்தீன – ஈழ மக்களின் எதிர்காலமும் சர்வதேசத்தின் அணுகுமுறைகளும் எனும் தலைப்பில் Asatic.org இன் Academic Secretriatரும் முன்னாள் ஈரோஸ் உறுப்பினருமான ரவி சுந்தரலிங்கம் உரை நிகழ்த்தவுள்ளார்.

வளவாளர்களின் உரைகளைத் தொடர்ந்து கருத்துப் பகிர்வும் கலந்துரையாடலும் இடம்பெறும். தமிழ் மக்களின் தமிழீழ விடுதலைப் போராட்டத்துக்கும் பாலஸ்தீன விடுதலைப் போராட்டத்துக்கும் நெருக்கமான உறவுகள் காணப்பட்டது. பாலஸ்தீன விடுதலை இயக்கம் தமிழீழ விடுதலைப் போராளிகளுக்கு பயிற்சிகளை அழித்தது. அவ்வாறு பயிற்சி பெற்ற பலர் இன்னமும் எம்மத்தியில் வாழ்கின்றனர். தமிழ் மக்கள் மத்தியில் இவ்வாறானதொரு கலந்துரையாடல் இடம்பெறுவது இதுவே முதற்தடவை. அந்த வகையில் இந்தக் கலந்துரையாடல் நிகழ்வில் பங்கெடுத்து ஆக்கபூர்வமாக கருத்துப் பகிர்வில் ஈடுபடுமாறு ஆர்வலர்கள் அனைவருக்கும் தேசம் அழைப்புவிடுத்துள்ளது.

தமிழ் மக்களும் ஒரு நீண்ட போராட்டத்துக்கூடாக வாழ்ந்துவரும் ஒடுக்கப்பட்ட சமூகம் என்ற வகையில் மேற்குநாடுகள் அனைத்தும் இஸ்ரேல் உடன் ஒன்றிணைந்து பாலத்தீனமக்களை கொண்றொழிக்கும் இந்த இனப்படுகொலையைக் கண்டிப்பது ஒவ்வொரு மனிதாபிமான மிக்க மனிதனதும் கடமையும் பொறுப்பும். இவ்வாறான இனப்படுகொலைகளை கண்டிக்கத் தவறுவது இவ்வாறான படுகொலைகள் தொடருவதற்கும் மோசமடைவதற்கும் வழிவகுக்கும்.

நரகாசுரன்களைக் கொண்டாடும் பிரித்தானிய பிரதமர் சுனாக்! கொன்சவேடிவ் நாஸ்திக் கட்சியாகவும் நாஸிக் கட்சியாகவும் மாறுகிறது!! அதன் குடிவரவு அமைச்சர் பதவி விலகினார்!!!

டிசம்பர் 6 சில மணி நேரங்களுக்கு முன் பிரித்தானிய ஆளும் கட்சியின் குடிவரவு அமைச்சர் ரொபேட் ஜென்ரிக் அமைச்சுப் பதவியிலிருந்து விலகினார். ‘அகதிகளை ருவான்டாவுக்கு விமானம் ஏற்றுவதே தனது கனவு’ என்று குறிப்பிட்ட முன்னாள் உள்துறை அமைச்சர் சுவலா பிரவர்மன் கடந்த சில வாரங்களுக்கு முன் பதவியிலிருந்து தூக்கப்பட்டார். 1968இல் கொன்சவேடிவ் கட்சியின்பா உ (Enoch Powell) எனொச் பவலின் மிகப் பிரபல்யமான “Rivers of Blood இரத்த ஆறுகள்” உரைக்குப் பின் மிக மோசமான இனவாதக் கருத்துக்களை நவீன பிரித்தானியாவில் கக்கியவர் ஒரு முன்னாள் குடிவரவாளரான சுவலா பிரவர்மன். எனொச் பவலின் இனவாதக் கருத்துக்கள் அலைமோதிய காலத்தில் 1960க்களில் சுவலா பிரவர்மன்னின் பெற்றோர் கென்யா – மொரிஸியஸில் இருந்து புலம்பெயர்ந்தனர். இவருடைய பெற்றோரைப் போன்ற குடிவரவாளர்களால் தான் பிரித்தானியாவுக்கு பொருளாதார நெருக்கடி, பாடசாலைகளில் நெருக்கடி, மருத்துவமனைகளில் நெருக்கடி என எனொச் பவல் தன்னுடைய இனவாத வக்கிரத்தை கக்கினார். இப்போது அக்குடிவரவாளர்களுக்கு பிள்ளையாகப் பிறந்த சுவலா பிரவர்மன் அகதிகளை மட்டும் ஏளனம் செய்யவில்லை வறுமைக் கோட்டில் வாழ்பவர்களையும் வீடற்றவர்களையும் கூட அது அவர்களின் வாழ்க்கைத் தெரிவு என்று நளினம் செய்கின்றார்.

இனவாதமும் ஸ்லாமோபோபியாவும் கொன்சவேட்டிவ் கட்சியின் வாக்கு வங்கியின் பலமாகி உள்ளது. அதனால் அந்த வாக்கு வங்கியை இலக்கு வைத்து சுவலா பிரவர்மன் காய்களை நகர்த்துகிறார். அடுத்த வருடம் நடைபெறவுள்ள தேர்தலில் தற்போதைய மற்றுமொரு குடிவரவுத் தம்பதிகளின் புத்திரனான ரிசி சுனாக் மண் கவ்வுவார் என்று கணக்குப் பண்ணியுள்ள சுவலா பிரவர்மன் ருவான்டாக் கனவை வைத்துக்கொண்டு ரிசி சுனாக்கை பந்தாடுகின்றார்.

‘ருவான்டா அகதிகளுக்கு பாதுகாப்பான நாடு அல்ல’ என்று பிரித்தானிய உச்ச நீதிமன்றம் நவம்பர் 16 திகதி வழங்கிய தீர்ப்பில் அழுத்தம் திருத்தமாகத் தெரிவித்துவிட்டது. இருந்தாலும் கொன்சவேடிவ் கட்சியின் இனவாத வாக்கு வங்கியைப் பாதுகாப்பதில் சுவலா பிரவர்மன்னும் ரிசி சுனாக்கும் தங்களில் யார் பெரும் இனவாதி என்பதை நிரூபிப்பதில் போட்டி போடுகின்றனர். ‘ரிசி சுனாக் நீர் வெறும் அலம்பல் பேர்வழி உம்மால் ஒரு ஆணியும் புடுங்க முடியாது’ என்ற பாணியில் சுவலா பிரவர்மன் அறிக்கைகள் விடுகின்றார். ‘நான் சொன்னால் சொன்னது தான் ஆணியைப் புடுங்குகிறேன். ருவாண்டாவுக்கு அகதிகளை அனுப்புகிறேன்’ என்று சவால் விட்டுள்ளார் ரிசி சுனாக். அதுமட்டுமல்ல அவசர அவசரமாக புதிய உள்துறை அமைச்சர் ஜேம்ஸ் கிளவர்ளியை ருவாண்டாவுக்கு அனுப்பி புதிய உடன்படிக்கை ஒன்றைக் கைச்சாத்திட்டு வந்து ‘ருவான்டா இப்போது அகதிகளுக்கு பாதுகாப்பானதாக மாறிவிட்டது’ என்று சொல்கின்றது கொன்சவேடிவ் காட்சி. நாங்கள் ‘வெள்ளை’ என்று சொன்னால் அது ‘வெள்ளை’ என்று நிரூபிப்போம் என்கிறது கொன்சவேடிவ்கட்சி. ஆனால் உச்சநீதிமன்றமோ அது நிச்சயமாக ‘கறுப்பு’ என்று அழுத்தம் திருத்தமாகத் தெரிவித்துவிட்டது.

உச்ச நீதிமன்றம் கொன்சவேடிவ்கட்சி சொல்வதை கேட்டு தங்களை ‘கோல்’ அடிக்க விடாவிட்டால் ‘கோல்ட் போஸ்றை’ தாங்கள் மாற்றத் தயார் என இன்று மிரட்டினர். அதாவது டிசம்பர் 6 அவசர ருவாண்டா சட்டமுலம் ஒன்றை அமூலாக்க முயற்சித்தனர். கொன்சவேடிவ் இனவாதப் பிரிவின் இச்சட்டமூலத்தை கொண்டு செல்ல விரும்பாத ரொபேட் ஜென்ரிக் ‘உந்த ஆட்டத்துக்கு நான் தயாரில்லை’ என்று தன்னுடைய அமைச்சுப் பதவியில் இருந்து விலகினார். இன்று கொண்டுவரப்பட்ட இந்த அவசரச் சட்டமூலம் ஐரோப்பிய ஒன்றியத்தின் மனித உரிமைகள் பாதுகாப்பை வெட்டி ஓடும் ஒரு தந்திரோபாயம் என்றும் சர்வதேச சட்ட விதிமுறைகளை மீறும் செயல் என்றும் ரொபேட் ஜென்ரிக் தெரிவித்துள்ளார்.

பிரித்தானியாவில் உள்ள ‘Conservetive for Tamils – கொன்சவேடிவ் போர் ரமிளஸ்’ தற்போதைய நிலையை இட்டு மௌனமாக இருப்பது வெட்கித் தலைகுனிய வேண்டிய செயல் என முன்னாள் கிழக்கு லண்டன் கவுன்சிலர் ஒருவர் தேசம்நெற்க்குத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில் கொன்சவேடிவ் கட்சி இந்தக் குடிவரவுத் தலைமைகளின் வழிநடத்தலில் மிகத் தீவிர இனவாதக் கட்சியாக மாறிவருகின்றது எனக் குறிப்பிட்டார். இலங்கையில் உள்ள இனவாதக் கட்சிகளிலும் பார்க்க மிகத் தீவிரமான இனவாதத்தை ஆழமான உள்நோக்கத்தோடும் நீண்டகாலத் திட்டமிடலில் இக்கட்சி மேற்கொண்டுவருகின்றது என்ற அச்சம் சிறுபான்மை இனங்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

பிரித்தானியக் கட்சிகள் அமெரிக்க அரசோடு இணைந்து உலகின் பல பாகங்களிலும் தங்கள் நாடுகளின் நலனுக்காகவும் ஆட்சியாளர்களின் சொந்த நலனுக்காகவும் வாக்கு வங்கிகளைத் தக்க வைப்பதற்காக ஆக்கிரமிப்புகளைச் செய்து அந்நாடுகளைச் சீரழித்தனர். அந்த நாடுகளிலிருந்தே இங்கு பெரும்பாலான அகதிகள் வருகின்றனர். இப்போது அவர்களை ஐரோப்பாவிற்குள் வரவிடாமல் தடுப்பதற்கு துருக்கி, ருனிசியா, ருவாண்டா போன்ற நாடுகளுக்கு பெரும்தொகைப் பணத்தை வாரி வழங்குகின்றனர். சில அரசுகள் மிக மோசமான மனித உரிமைகளை மீறி அகதிகளாக வருபவர்களை சித்திரவதை, பாலியல் பலாத்காரம் ஏன் கொலையும் செய்து அவர்கள் ஐரோப்பாவிற்கு வருவதைத் தடுக்கின்றனர். இவை அனைத்தும் மேற்கு ஐரோப்பிய நாடுகளின் உதவியோடு திட்டமிட்டு மேற்கொள்ளப்படுகின்றது.

தற்போது இதற்கும் அப்பால் சென்று மற்றுமொரு இன அழிப்பு நடவடிக்கைக்கு பிரித்தானியா, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் தோளோடு தோள் நிற்கின்றனர். ஆம் இஸ்ரேல் பாலஸ்தீனம் மீது நடத்தும் இனப்படுகொலைக்கு இந்நாடுகள் முழமையான ஆதரவை வழங்குவதோடு ஆயுதமும் வழங்குகின்றனர். தற்போது இந்த யுத்தத்தை எப்படியும் முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்பதற்காக ஐநா செயலாளர் நாயகம் அன்ரனியோ குர்ரரஸ் பாதுகாப்பு செயலக நாடுகளின் கூட்டத்திற்கு அவசர அழைப்பு விடுத்துள்ளார். அதேசமயம் அரபு நாடுகளின் குழுவொன்றும் அமெரிக்கா செல்கின்றது. அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் ஐரோப்பிய நாடுகள் தொடர்ந்தும் இஸ்ரேலின் பாலஸ்தீன மக்களின்இன அழிப்பில் தங்களை பங்காளிகளாக வைத்திருக்கப் போகின்றார்களா இல்லையா என்பது தெரியவரும்.

அண்மைய தீபாவளிப் பண்டிகையில் பிரித்தானிய பிரதமரின் உத்தியோகபூர்வ வாஸஸ்தலத்தில் தீபம் ஏற்றிய சுனாக் தம்பதிகள் நிஜஉலகில் நரகாசுரர்களைக் கொண்டாடுவது ஒன்றும் ஆச்சரியமான செயல் அல்ல. சுனாக் தலைமையிலான கொன்சவேடிவ் கட்சி தற்போது அருவருக்கத் தக்க நாஸ்திக் கட்சியாகவும் நாஸிஸக் கட்சியாகவும் மாறிவருகின்றது. அன்று ஒரு Enoch Powell இன்றோ பலர். “Rivers of Blood இரத்த ஆறுகள்”. நாற்றம் தாங்க முடியவில்லை.