::சர்வதேச விடயங்கள்

::சர்வதேச விடயங்கள்

சர்வதேச விடயங்கள் தொடர்பான செய்திகள் கட்டுரைகள்

பைபாஸ் ஆபரேஷன் வெற்றி – நலமாக இருக்கிறார் இந்திய பிரதமர்

pm-india.jpgஇதயக் குழாய்களில் ஏற்பட்டுள்ள அடைப்புகளை சரி செய்ய இந்திய பிரதமர் மன்மோகன் சிங்குக்கு இன்று நடந்த பைபாஸ் ஆபரேஷன் வெற்றி பெற்றுள்ளது. அறுவை சிகிச்சைக்குப் பின்னர் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு பிரதமர் மாற்றப்பட்டுள்ளார்.

சர்வதேச அளவில் புகழ் பெற்ற இருதவியல் நிபுணரான டாக்டர் ரமாகாந்த் பான்டா தலைமையில் பெர்சனல் மருத்துவருமான டாக்டர் கே.ஸ்ரீநாத் ரெட்டி, டாக்டர் விஜய் டி சில்வா, டாக்டர் பிரதியோத் குமார் ராத், மயக்க மருந்து நிபுணர் டாக்டர் நரேந்திர கரச் உள்ளிட்ட 11 பேர் கொண்ட மருத்துவர் குழு இன்று காலை ஏழே கால் மணிக்கு அறுவைச் சிகிச்சையை தொடங்கியது. தொடர்ந்து நடந்து வந்த அறுவைச் சிகிச்சை மாலை 4 மணியளவில் வெற்றிகரமாக முடிந்தது.

முதல் கட்ட அறுவைச் சிகிச்சை மாலை 3 மணிக்கு முடிவடைந்தது. அடுத்து அதேபோல இரண்டு நடைமுறைகள் அடுத்தடுத்து மேற்கொள்ளப்பட்டன. இத்தகவலை ஆசிய இருதவியல் கழக டாக்டர் சுதிர் வைஷ்ணவ் தெரிவித்தார். முதல் அறுவைச் சிகிச்சைக்குத்தான் கிட்டத்தட்ட எட்டு மணி நேரம் பிடித்தது.

ஒபாமாவின் 2வது பதவிப்பிரமாணம்

us_obama-003.jpgசுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் செய்த பிழையால், அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா மீண்டும் பதவிப்பிரமாணம் எடுத்துக் கொண்டார். அமெரிக்க நேரப்படி புதன்கிழமை இரவு 7.35 மணிக்கு ஜான் வெள்ளை மாளிகையின் மேப் அறையில் பதவிப்பிரமாண நிகழ்ச்சி நடைபெற்றது.

செவ்வாய்க்கிழமை நடந்த பதவியேற்பு விழாவின்போது ‘faithfully’ என்ற வார்த்தை தவறான இடத்தில் உச்சரிக்கப்பட்டு விட்டதால், மறுபடியும் பதவிப்பிரமாணம் எடுத்த நிகழ்ச்சி நடந்துள்ளது. நீதிபதியின் இந்த பிழையால் ஒபாமாவின் அதிபர் பதவி சட்டப்பூர்வமானதா என்ற பிரச்சினை பின்னாளில் வந்து விடக் கூடாது என்பதற்காக இந்த 2வது பதவிப்பிரமாணம் நடந்துள்ளது.

ஆனால், உண்மையில், பதவிப்பிரமாணம் எடுக்காமலேயே அன்றைய தினம் ஒபாமா அதிபராகி விட்டார் (அமெரிக்க சட்டப்படி, பதவியேற்பு தினத்தன்று, பிற்பகல் 12 மணி முதல், அதிபர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர் தானாகவே அதிபராகி விடுவார்) என்பது குறிப்பிடத்தக்கது.

ஒபாமாவின் 2வது பதவிப்பிரமாணம் குறித்து வெள்ளை மாளிகை வழக்கறிஞர் கிரேக் கிரேக் வெளியிட்ட அறிக்கையில், பதவி்ப்பிரமாண நிகழ்ச்சி எந்தவித பிரச்சினையும் இன்றி முடிந்தது. பொருத்தமான முறையில் அதிபர் ஒபாமா பதவிப்பிரமாணம் எடுத்துக் கொண்டார்.

அரசியல் சட்டத்திலேயே பதவிப்பிரமாணம் குறித்து தெளிவாக உள்ளது. இருப்பினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவும், குழப்பம் ஏதும் இருக்கக் கூடாது என்பதற்காகவும் இந்த 2வது பதவிப்பிரமாண நிகழ்ச்சி நடைபெற்றது. 2வது முறை நடந்த பதவிப்பிரமாணத்தையும் தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸே செய்து வைத்தார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹிலாரி அமைச்சரானார்:

இதற்கிடையே, அமெரிக்க வெளியுறவு அமைச்சராகியுள்ளார் ஹில்லாரி கிளிண்டன். ஒபாமா அதிபராகி விட்டதைத் தொடர்ந்து அவரது அமைச்சரவையில் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர். வெளியுறவுத்துறை அமைச்சர் பதவிக்கு ஹில்லாரி கிளிண்டனின் பெயரை செனட் சபைக்கு முன்மொழிந்தனர். அதில், 94 – 2 என்ற வாக்குகள் அடிப்படையில்,ஹில்லாரியின் நியமனம் ஏற்கப்பட்டது. இதைத் தொடர்ந்து ஹில்லாரி அமைச்சராகப் பொறுப்பேற்றார்.

அவரது கணவரும், முன்னாள் அதிபருமான பில் கிளிண்டன் கைகளில் பைபிளைப் பிடித்துக் கொள்ள அதன் மேல் கை வைத்தபடி ஹில்லாரி பதவிப்பிரமாணம் எடுத்துக் கொண்டார்.

வைகோ – உண்ணாவிரதப் போராட்டம்

22-vaiko.jpgஈழத் தமிழர்களுக்கு இந்திய அரசு செய்யும் துரோகத்தைக் கண்டித்தும், ராணுவ உதவிகளைத் தடுப்பதற்கும் பிப்ரவரி 12ம் தேதி நாடாளுமன்றம் கூடும் நாளில் டெல்லியில் நாடாளுமன்றம் அருகே உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப் போவதாக மதிமுக பொதுச் செயலாளர்  வைகோ கூறியுள்ளார்.அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

முல்லைத் தீவில் 6 லட்சம் ஈழத் தமிழர்கள், சிங்கள ராணுவத்தின் கோரத் தாக்குதலால் மரணத்தின் பிடியில் சிக்கி உள்ளனர். இடைவிடாத பீரங்கித் தாக்குதல் வேறு. இரவு பகலாக விமானக் குண்டு வீச்சு, அதிலும் உலக நாடுகள் தடை செய்துள்ள கொத்துக் குண்டுகளை வீசுகிறது. நேற்று மட்டும் 37 அப்பாவித் தமிழர்கள் கொல்லப்பட்டு, நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயமுற்றுள்ளனர். ஜனவரி 7ம் தேதி காஸா பகுதியில் ஒரு கட்டிடத்தின் மேல் இஸ்ரேல் குண்டு வீசியதில் 45 பேர் கொல்லப்பட்டபோது, உலக நாடுகள் அதற்கு எதிர்ப்பாக கடும் கண்டனத்தை தெரிவித்தன. ஆனால் 6 கோடித் தமிழ் மக்களாகிய நாம், 20 கல் தொலைவில் கடலுக்கு அப்பால் படுகொலைக்கு உள்ளாகும் ஈழத் தமிழர்களைக் காக்கக் கதியற்றுப் போனோம்.

தற்போது நடைபெறும் தமிழ் இன அழிப்பு யுத்தத்தை, இந்தியாவின் மத்திய அரசு கொடிய நோக்கத்தோடு திட்டமிட்டு ஊக்குவித்து உதவுகிற மன்னிக்க முடியாத துரோகத்தைத் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. உலகெங்கும் உள்ள தமிழர்களின் உள்ளங்கள் பதறுகின்றன. அங்கமெல்லாம் நடுங்குகிறது. ராஜபக்சே அரசு மூர்க்கத்தனமான இனக் கொலையில் ஈடுபட்டுள்ளது.

ஈழத் தமிழர்களுக்கு இந்திய அரசு செய்யும் துரோகத்தைக் கண்டித்தும், ராணுவ உதவிகளைத் தடுப்பதற்கும், ஈழத் தமிழர்களுக்கு ஏற்பட்டுள்ள கொடுந்துயரத்தைப் போக்க அனைத்து மட்டங்களிலும் ஆதரவைத் திரட்டவும் பிப்ரவரி 12ம் தேதி இந்திய நாடாளுமன்றம் கூடும் நாளில் டெல்லியில் நாடாளுமன்றத்துக்கு அருகே மதிமுக சார்பில் என் தலைமையில் உண்ணாநிலை அறப்போர் நடைபெறும் என்று கூறியுள்ளார் வைகோ.

சாதனை:ஒபாமாவின் தேர்தல் பிரச்சார புத்தகம்

obama-2001.jpg
அமெரிக்காவின் புதிய அதிபராக பதவி ஏற்ற பராக் ஒபாமா ஜனநாயக கட்சி வேட்பாளர் தேர்வின்போது பேசிய ஆங்கில பேச்சுக்கள் புத்தகமாக தொகுக்கப்பட்டு ஜப்பானில் விற்கப்படுகிறது. புத்தக கடைகளில் இந்த புத்தகம்தான் அதிகமாக காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. 95 பக்கங்கள் கொண்ட அதன் விலை 550 ரூபாய். கடந்த 2 மாதத்தில் மட்டும் 4 லட்சம் பிரதிகள் விற்பனையாகி உள்ளன. இந்த புத்தகத்துக்கு ஜப்பானிய மொழி பெயர்ப்பும் விற்பனைக்கு இருக்கிறது.

ஜப்பானில் பிரபலமான எழுத்தாளர்கள் எழுதிய நாவல்கள்கூட ஆண்டுக்கு 10 லட்சம் பிரதிகள்தான் விற்பனை ஆகும். ஆனால், அவற்றை மிஞ்சும் வகையில் ஒபாமா புத்தக விற்பனை சக்கை போடு போடுகிறது. இதற்கு முன் அதிபராக இருந்த புஷ் பேச்சு அடங்கிய புத்தகம்கூட இந்த அளவு விற்பனை ஆகவில்லை. ஜப்பான் அரசியல்வாதிகள்கூட ஒபாமா புத்தகத்தை வாங்கி படிக்கிறார்கள்.

அமெரிக்காவின் 44வது அதிபராக பதவியேற்றார் பராக் ஒபாமா: நாடு முழுவதும் விழாக்கோலம் (படம் இணைப்பு) – ஏகாந்தி

obama.jpgவாஷிங்டன் நகரில் நடந்த கோலாகல விழாவில், அமெரிக்காவின் அதிபராக, பராக் ஒபாமா நேற்று (20.01.2009) பதவி ஏற்றார். கருப்பர் இனத்தைச் சேர்ந்தவர், அமெரிக்க அதிபராக பதவியேற்பது இதுவே முதல் முறை.

கடும் பொருளாதார நெருக்கடியையும், வேலை இழப்பையும் அமெரிக்கா சந்தித்துவரும் நிலையில், 44வது அதிபராக ஒபாமா பதவியேற்பது, அந்நாட்டு மக்கள் மத்தியில் பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

கென்ய நாட்டைச் சேர்ந்த கருப்பின தந்தைக்கும், அமெரிக்காவின் கென்சாசை சேர்ந்த வெள்ளையின தாய்க்கும் பிறந்தவர் ஒபாமா. தந்தை கருப்பர் இனத்தைச் சேர்ந்தவர் என்பதால், ஒபாமாவும் கருப்பர் இனத்தவராக கருதப்படுகிறார். அவர் ஹவாயிலும், இந்தோனேசியாவிலும் சில காலம் வளர்ந்தவர். சாதாரண பணியாளராக வாழ்க்கையை துவக்கி, அமெரிக்காவின் மிக உயரிய பதவியை அடைந்துள்ளார்.

ஹாவர்டு பல்கலைக் கழகத்தில் வக்கீலாக பட்டம் பெற்றவர். இதுவரை, இனப் பாகுபாடு காரணமாக அடிமைகளாகவும், அதைத் தொடர்ந்து இரண்டாம் தர குடிமக்களாகவும் தாங்கள் பாவிக்கப்படுவதாக கருதிவரும் ஆப்ரிக்க அமெரிக்கர்கள் மத்தியில், ஒபாமா அதிபராக பதவியேற்றது எதிர்பார்ப்பையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் அதிபராக பொறுப்பேற்கும் முன் ஒபாமாவை, வெள்ளை மாளிகையின் வடக்கு போர்டிகோவில் வரவேற்றார், பதவி விலகிய அதிபர் புஷ். பின் அங்கிருந்து, பதவியேற்பு விழா நடக்கும் அரங்குக்கு இருவரும் சென்றனர். கடந்த 1861ம் ஆண்டு, அமெரிக்க அதிபராக ஆபிரகாம் லிங்கன் பதவியேற்ற போது, அவர் பயன்படுத்திய பைபிள் புத்தகத்தில் கைவைத்தபடியே, அதிபர் பதவியேற்பு உறுதிமொழியை எடுத்துக் கொண்டார் ஒபாமா. பதவியேற்பு விழாவை ஒட்டி, காபிடல் அரங்கம் பகுதி முழுவதும் வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. உளவுத்துறையை சேர்ந்தவர்கள், குறிபார்த்து சுடுவதில் பெரும் திறமை பெற்றவர்களும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டு இருந்தனர். எந்தவித அசம்பாவிதங்களும் நடக்காத வகையில், விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

அமெரிக்கா மட்டுமின்றி, வெளிநாட்டில் வசிக்கும் அமெரிக்கர்களும் லட்சக்கணக்கில், அங்கு குழுமியிருந்து, ஒபாமாவுக்கு வாழ்த்து கோஷங்கள் எழுப்பினர். வாஷிங்டன் நகரம் மட்டுமின்றி, அமெரிக்கா முழுவதும் விழாக்கோலம் பூண்டிருந்தது. இலங்கை நேரப்படி இரவு 10.00 மணிக்கு அமெரிக்க காபிடல் கட்டடத்தின் மேற்கு அரங்கில் இசை நிகழ்ச்சியுடன் விழா துவங்கியது. அமெரிக்க அரசின் கடற்படை பேண்டு குழுவினர், சான் பிரான்சிஸ்கோ , சான் பிரான்சிஸ்கோ கிரிஸ் இசைக்குழு அமைப்பினர் கலந்து கொண்டு இசை நிகழ்ச்சியை பிரமாதப்படுத்தினர்.

கலிபோர்னியாவை சேர்ந்த ஜனநாயகக் கட்சி செனட்டர் டயயானி பெயன்ஸ்டீன், கூட்டு பார்லிமென்ட் கமிட்டியின் தலைவர் என்ற வகையில் வரவேற்புரை ஆற்றி, விழாவை துவக்கி வைத்தார். துணை அதிபர் ஜோ பிடெனுக்கு சுப்ரீம் கோட் இணை நீதிபதி ஜான் பால் ஸ்டீவன்ஸ் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். பின், ஜான் வில்லியம்சின் இசை நிகழ்ச்சி நடந்தது.

நாட்டின் முதல் பெண்மணியாகும் மிச்சேல், ஆபிரகாம் லிங்கன் பயன்படுத்திய பைபிளை எடுத்து வந்து, கையில் பிடித்திருக்க, அதன் மீது கைவைத்தபடி பதவி பிரமாணம் எடுத்தார் புதிய அதிபர் ஒபாமா. சரியாக 10.38 மணிக்கு அவர் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டார். 10.45 மணிக்கு உரை நிகழ்த்தினார். பின்னர் வெள்ளை மாளிகைக்கு சென்றார். ஒபாமா பதவியேற்பு விழாவை ஒட்டி நகரின் மையப்பகுதிகளில் தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டு, வாகனப் போக்குவரத்து முழுமையாக நிறுத்தப்பட்டு இருந்தது. தற்போது, 47 வயதாகும் ஒபாமாவிடம் இருந்து, சிக்கலான நிலையை சந்தித்துவரும் அமெரிக்கர்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. எதிர்கட்சியினர், கடுமையான விஷயங்களில் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று ஏற்கனவே, ஒபாமா அழைப்பு விடுத்திருந்தார்.

ஒபாமாவின் பேச்சிலிருந்து …

நாம் அனைவரும் மிகப் பெரும் நெருக்கடிகளுக்கு மத்தியில் உள்ளோம். இதை அனைவரும் அறிவோம். அமெரிக்கா இத்துடன் முடியப் போகிறது, இதை தவிர்க்க முடியாது என்ற அச்சம் உள்ளது.

பொருளாதாரம் பலவீனமடைந்துள்ளது. கடந்த காலத்தில் பொறுப்பற்றதனமாகவும், வீம்பாகவும் நடந்து கொண்டதால் ஏற்பட்ட நிலை இது. அதேசமயம், அடுத்த தலைமுறைக்கு நமது நாட்டை கொண்டு செல்லத் தவறியதும், மாற்று வாய்ப்புகள் குறித்து யோசிக்காததுமே இந்த நிலைக்கு இன்னொரு முக்கிய காரணம்.

பொருளாதார நெருக்கடியால் பலர் வீடுகளை இழந்துள்ளனர். வேலைகள் போயுள்ளன. வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. நமது சுகாதார செலவுகள் அதிகரித்து விட்டன. பள்ளிகள் கூட சரிவர செயல்படாத அவல நிலை. எரிபொருள் நிலையும் கவலை அளிக்கிறது.

நமது நாடு போரில் ஈடுபட்டுள்ளது. வன்முறை, துவேஷம், தீவிரவாதத்திற்கு எதிராக போராடிக் கொண்டிருக்கிறோம். ஆனால் இப்போது நமக்கு என்ன தேவை என்றால், பொறுப்புணர்ச்சியுடன் கூடிய செயல்பாடுகள்தான். ஒவ்வொரு அமெரிக்கருக்கும் ஒரு அங்கீகாரம் தேவை. அவரவர் கடமையை சிறப்பாக செய்ய வேண்டும். நமது நாட்டுக்கு, நமது உலகுக்கு நாம் செய்ய வேண்டிய கடைமையை நாம் செய்வோம்.

பொருளாதாரத்தை சீரமைக்க வேண்டிய பொறுப்பு நாம் அனைவருக்கும் உண்டு. பொருளாதாரத்தை சரி செய்ய உறுதியான, விரைவான நடவடிக்கை தேவைப்படுகிறது.

புதிய வேலைகளை உருவாக்குவதோடு, புதிய வளர்ச்சிக்கான அடிக்கல்லையும் நாம் நாட்டியாக வேண்டும்.

நிறைய சாலைகளையும், பாலங்களையும், மின் கட்டமைப்புகளையும் நாம் கட்டுவோம். நமது வர்த்தகத்தை தூக்கி நிறுத்துவோம். அறிவியலை மதிப்புமிக்க இடத்திற்கு உயர்த்துவோம். தொழில்நுட்பத்தை சரியாக பயன்படுத்தி மருத்துவத்திற்கு ஆகும் செலவுகளைக் குறைப்போம்.

நமது வாகனங்களுக்கும், தொழிற்சாலைகளுக்கும் தேவையான எரிபொருளை சூரியன், காற்று, மண்ணிலிருந்து எடுப்போம்.

நமது பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்களை புதிய தலைமுறைக்கு ஏற்றபடி மாற்றுவோம். இவை அனைத்தையும் நம்மால் செய்ய முடியும். நாம் நிச்சயம் செய்வோம்.

கிறிஸ்தவர், முஸ்லிம்கள், யூதர்கள், இந்துக்கள் மற்றும் மத நம்பிக்கை இல்லாதவர்களை உள்ளடக்கிய நாடே அமெரிக்கா. இதில், எந்த மதமும் ஏற்றத்தாழ்வு உடையதல்ல.

நாம் பல்வேறு மொழி, கலாசாரத்தால் பிணைக்கப்பட்டிருக்கிறோம். நாம் மனிதநேயத்துடனும், அமைதியுடனும் நமது வெற்றிகளை படைப்போம்.

அமெரிக்கா அனைத்து நாடுகளுக்கும் நண்பன். அந்த வகையிலேயே நாம் நடந்து கொள்வோம்.

நாம் இன்று சந்தித்துக் கொண்டிருக்கும் சவால்கள் உண்மையானவை. மிகக் கடுமையானவை. பல சவால்கள் உள்ளன. ஆனால் அவற்றை எளிதில் சமாளிக்க முடியாது. குறுகிய காலத்தில் அவற்றை சமாளிப்பது இயலாத காரியம். ஆனால் அமெரிக்கா இவற்றை சந்திக்கும், சமாளிக்கும் என்றார் ஒபாமா.

பிபிசி உலக சேவையின் அனுசரணையில் நடத்தப்பட்ட புதிய கருத்துக்கணிப்பு ஒன்றில் கலந்துகொண்டவர்களில் 67 வீதமானவர்கள், பராக் ஒபாமா அவர்கள் அதிபராக தெரிவு செய்யப்பட்டமையால், அமெரிக்காவுக்கும், உலகின் ஏனைய நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் மேம்படும் என்று கூறியிருக்கிறார்ர்கள். கடந்த கோடைகாலத்தில் நடத்தப்பட்ட இதுபோன்ற முன்னைய கருத்துக்கணிப்பு ஒன்றில், இந்த விடயத்தில் எந்தவிதமான நம்பிக்கையும் காண்பிக்காத ரஷ்யா, துருக்கி, எகிப்து மற்றும் சீனா ஆகிய நாடுகளைச் சேர்ந்த பெருந்தொகையான மக்கள் கூட தற்போதைய கருத்துக்கணிப்பில் அதிபர் பராக் ஒபாமாவின் தெரிவின் காரணமாக மிகுந்த எதிர்பார்ப்பை வெளிப்படுத்தியுள்ளார்கள்.

அவர் தொடர்பில் அதீத நம்பிக்கையுடனான கருத்து வெளியிட்டவர்கள் ஐரோப்பியர்கள்தான். உதாரணமாக, ஜேர்மனி மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களில் 80 வீதமானவர்கள் ஏனைய நாடுகளுடனான உறவுகள் மேம்படும் என்பதில் நம்பிக்கை கொண்டிருக்கிறார்கள்.

ஒபாமா போன்ற ஒரு அதிபர், உலக பொருளாதார நெருக்கடிக்கே தனது நிகழ்ச்சித்திட்டத்தில் முன்னுரிமை கொடுக்க வேண்டுமென்றே பெரும்பான்மையினர் விரும்புவதாகவும் இந்த கருத்துக்கணிப்பு தெளிவாகக் கூறுகிறது. ஆனால், அவர் எதிர்கொள்கின்ற சவால்களின் ஒரு சமிக்ஞையாக, உலகெங்கும் பெருந்தொகையானவர்கள், உலக காலநிலைமாற்றம், மத்திய கிழக்கு அமைதி மற்றும் இராக் விவகாரம் ஆகிய பிரச்சினைகளையும் அவர் முன்னுரிமை கொடுத்து தீர்த்து வைக்க வேண்டும் என்றும் எதிர்பார்க்கிறார்கள்.

இதில் வித்தியாசமான விசயம் என்னவென்றால், ஒபாமா எந்த விடயத்துக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்பதில், அமெரிக்க மக்களுக்கும், உலகின் ஏனைய நாடுகளின் மக்களுக்கும் இடையில் கருத்தில் வேறுபாடு இருக்கிறது.
உலக பொருளாதார நெருக்கடிக்கே ஒபாமா முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்று அமெரிக்க மக்களும் ஒப்புக்கொள்வதாக இந்தக் கருத்துக்கணிப்பு கூறுகின்ற போதிலும், உலகின் ஏனைய மக்களைப் போலல்லாது, அமெரிக்கர்கள் ஆப்கானிஸ்தான் பிரச்சினைக்கே அடுத்த இடத்தை தருகிறார்கள். வெறுக்கப்பட்ட கடந்த 8 வருட புஷ்ஷின் ஆட்சியின் மூலமான பலனை ஒபாமா பூரணமாக அடைந்திருக்கிறார் என்று இந்த கருத்துக்கணிப்பை ஏற்பாடு செய்தவர்கள் கூறுகிறார்கள். ஆனால், தற்போதுள்ள உற்சாகத்துடனான இந்த எதிர்ப்பார்ப்புக்களை அவர் தக்க வைத்துக்கொள்வது என்பது அவருக்கு பெரும் சவாலாகத்தான் இருக்கும்.

இதேநேரம், பராக் ஒபாமாவின் பதவியேற்பு நிகழ்வைக் காணவென அமெரிக்க நேரப்படி காலை 9 மணிக்கே 20 பாகையை விட சற்று அதிகம் என்ற குளிரான காலநிலையையும் பொருட்படுத்தாமல் பல்லாயிரக் கணக்கான மக்கள் வாஷிங்டனில் நஷனல்மால் வீதியில் கூடி விட்டனர். இங்கு கூடிய மக்கள் கூட்டமானது தசாப்தங்களிலேயே மிகப் பெரிய கூட்டமென்று சில சமயங்களில் இதுவே எப்போதுமே மிக பெரிய மக்கள் திரள்வாக இருக்கக் கூடுமென்றும் அமெரிக்க ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

ஒபாமா வாழ்க்கை குறிப்பு:

முழுப் பெயர் – பாரக் ஹுசேன் ஒபாமா.
வயது – 47
பிறந்த நாள் – 1961, ஆகஸ்ட், 4.
பிறந்த இடம் – ஹோனலுலு, ஹவாய்.
படிப்பு – கொலம்பியா பல்கலைக்கழகம், ஹார்வர்ட் சட்ட பள்ளி.
மனைவி – மிச்சல் ராபின்சன் ஒபாமா.
குழந்தைகள் – மலியா (10), சாஷா (7).
மதம் – ஐக்கிய கிறிஸ்தவ சர்ச்.
கட்சி – ஜனநாயகக் கட்சி.

குடும்பம் – கென்ய தந்தைக்கும், வெள்ளையர் இன அமெரிக்க தாய்க்கும் பிறந்தவர் ஒபாமா. தந்தை பாரக் ஒபாமா சீனியர், ஹவாய் பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருந்தபோது ஒபாமாவின் தாயான ஆன் துங்காமை மணந்தார்.

ஒபாமா பிறந்த 2 வருடத்திலேயே இருவரும் பிரிந்து விட்டனர். பின்னர் ஒபாமாவின் தந்தை கென்யாவுக்குத் திரும்பி விட்டார். அங்கு தலை சிறந்த பொருளாதார நிபுணராக அவர் விளங்கினார். 1982ம் ஆண்டு கார் விபத்தில் அவர் மரணமடைந்தார்.

ஒபாமாவின் தாயார் ஆன், இந்தோனேசியாவைச் சேர்ந்த லோலோ சொயட்டரோ என்பவரை 2வது திருமணம் செய்து கொண்டு இந்தோனேசியாவுக்கு இடம் பெயர்ந்தார். அங்குதான் ஒபாமா தனது 10 வயது வரை வாழ்ந்தார்.

பின்னர் ஹவாய் திரும்பிய அவர் தனது தாத்தா, பாட்டியுடன் வசித்தார்.

ஒபாமாவுக்கு அவரது தந்தையின் பிற திருமணங்கள் மூலம் 7 சகோதர, சகோதரிகள் கென்யாவில் உள்ளனர். அதேபோல அவரது தாயாரின் 2வது திருமணத்தின் மூலம், மாயா சொயோட்டரோ என்ற சகோதரி உள்ளார்.

us_obama.jpg

us_obama002-2001.jpg

obama-20-01.jpg

us_obama-003.jpg

us_obama-04.jpg

இந்தியாவில் தீவிரவாதிகளின் தாக்குதல் தொடரலாம் அந்த நாட்டின் பலவீனமே மும்பைத் தாக்குதல் – அமெரிக்க நிபுணர்கள்

world_news.jpgஇந்தி யாவில் மும்பைத் தாக்குதல் போன்ற மேலும் பல தாக்குதல்கள் பாகிஸ்தான் தீவிரவாதிகளால் நடத்தப்படும் அபாயம் இருப்பதாக அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. மும்பைத் தாக்குதல் தொடர்பாக, இந்தியாவுக்கான முன்னாள் அமெரிக்க தூதுவர் ரொபேர்ட் பிளெக்வில் உள்ளிட்ட நிபுணர்கள் நடத்திய ஆய்வொன்றைத் தொடர்ந்தே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிபுணர் குழுவால் வெளிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது;

இந்தியாவின் வர்த்தக மற்றும் உல்லாச மையமாக மும்பை திகழ்கிறது. அங்குள்ள முக்கிய கட்டிடங்கள் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் உளவியல் ரீதியாக தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. மும்பை தாக்குதல் அம்சங்களை வைத்து பார்க்கும்போது இரக்கமற்ற கொலைகள் மட்டுமன்றி அதற்கான திட்டமிடலும் அதிர்ச்சியூட்டுவதாக உள்ளது.

அதிகமான மக்களை கொல்வது மட்டுமன்றி சில குறிப்பிட்ட நாட்டினரை குறிவைத்து தாக்குவதும் தீவிரவாதிகளின் நோக்கமாக இருந்துள்ளது. இதன்மூலம் அவர்களின் வியூகம் புலப்படுகிறது.தீவிரவாதத்தை தடுப்பதில் இந்தியாவின் பலவீனத்தையே இத்தாக்குதல் வெளிப்படுத்துகிறது.

மும்பை தாக்குதலை முன்மாதிரியாக கொண்டு பாகிஸ்தானில் உள்ள வேறு சில தீவிரவாத அமைப்புகள் அதேபாணியில் இந்தியா மீது நிறைய தாக்குதல்களை நடத்தும் அபாயம் உள்ளது. நிறைய உயிரிழப்புகளை ஏற்படுத்தும் வகையில் இத்தாக்குதல்கள் நடக்கும். இந்த அபாயத்தை இந்தியாவோ அமெரிக்கவோ குறைக்க முடியாது.

இந்தியாவும்,பாகிஸ்தானும் அணுஆயுத நாடுகள். எனவே ஏதாவது இராணுவ நடவடிக்கை எடுத்தால் அது ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தும். அதே சமயத்தில் இந்தியா நடவடிக்கை எடுக்கத்தவறினால் அது இந்தியாவின் உறுதி இன்மையை காட்டுவதாக அமைந்து விடுமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் 44வது ஜனாதிபதியாக பராக் ஒபாமா இன்று பதவியேற்பு

obama-2001.jpg
அமெரிக்காவின் 44வது ஜனாதிபதியாக பராக் ஒபாமா இன்று பதவியேற்கின்றார். தலைநகர் வாஷிங்டனில் இதற்கான ஏற்பாடுகள் பிரமாண்டமான முறையில் செய்யப்பட்டுள்ளன. அமெரிக்காவின் முதலாவது கறுப்பின ஜனாதிபதி பராக் ஒபாமா என்பதால் என்றுமில்லாதளவில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதுடன் ஏராளமான கலை நிகழ்ச்சிகளும் அரங்கேற்றப்படவுள்ளன.

கடும் பாதுகாப்பு ஏற்பாடுகளையொட்டி வைபவத்தில் கலந்துகொள்வோர் அனைவரையும் இரண்டரை மணி நேரத்திற்கு முன்னரே வந்து சேருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அனைவரதும் ஆடைகள், உடல்கள் சோதனை செய்யப்படவுள்ளன. வெளிநாட்டு தூதுவர்கள், அரச, மதப் பிரமுகர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தூதுவர்களுக்கான அழைப்பை பதவி விலகிச் செல்லும் வெளிநாட்டமைச்சர் கொண்டலிசா ரைஸ் எழுத்து மூலம் அனுப்பி வைத்திருந்தார். எனினும் ஈரான், வெனிசூலா, வடகொரியா, பொலிவியா போன்ற நாடுகளுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. ஆனால் தான் பதவியேற்ற பின்னர் மத்திய கிழக்குப் பிரச்சினைக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதுடன் பகைமை நாடுகளுடன் உறவுகளை வளர்ப்பதில் அக்கறை செலுத்தப்போவதாக முன்னர் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பதவியேற்பு வைபவங்களில் பங்கேற்கும் பொருட்டு விசேட ஆடைகள் ஒபாமாவுக்கு தயார் செய்யப்பட்டுள்ளன. இன்றைய தினம் இவ்வைபவத்தைப் பார்வையிட பெருந்தொகையானோர் நேரில் வருவர். மற்றும் தொலைக் காட்சிகளில் இந்நிகழ்ச்சி ஒளிபரப்பு செய்யப்படவுள்ளன. உலகெங்கிலுமிருந்து ஏராளமான ஊடகவியலாளர்கள் வாஷிங்டனுக்கு வந்துள்ளனர். வெள்ளை மாளிகையில் குடியேறும் பொருட்டு பராக் ஒபாமா கடந்த வாரம் வாஷிங்டன் வந்தார்.  இவரது புதல்விகள் இருவரது கற்றல் நடவடிக்கைகள் வாஷிங்டனில் தொடரவுள்ளன.

அமெரிக்கவின் முதலாவது கறுப்பின ஜனாதிபதி பராக் ஒபாமா பதவியேற்ற பின்னர் உலக அரசியல் கொள்கைகளில் மாற்றம் ஏற்படுமென பெருமளவிலானோர் எதிர் பார்க்கின்றனர்.  இவ் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் பராக் ஒபாமா இன்று பதவியேற்கின்றார். ஜனாதிபதி புஷ் பதவி விலகிச் செல்கின்றார்.

இலங்கை பிரச்சினைக்கு தீர்வுகாண இருதரப்பும் பேசவேண்டும் – இல.கணேசன் கூறுகிறார்

eela-ganash.jpgஇலங்கைப் பிரச்சினைக்குத் தீர்வுகாண இரு தரப்பினரும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டுமென்றும் அதன் முடிவுகள் அமுல்படுத்தப்படுவதை இந்திய அரசு கண்காணிக்க வேண்டுமென்றும் தமிழக பாரதிய ஜனதாக் கட்சித் தலைவர் இல.கணேசன் கூறியுள்ளார்.  இது குறித்து அவர் கோவையில் (18) செய்தியாளர்களிடம் கூறியதாவது;

இலங்கையில் இலட்சக்கணக்கான அப்பாவித் தமிழர்கள் கொல்லப்படுகிறார்கள். எனவே, இதனை அந்நாட்டின் உள்நாட்டு பிரச்சினையாகக் கருதாமல் இந்திய அரசு இதில் நேரடியாகத் தலையிட வேண்டும். இந்தச் சண்டையின் மூலம் பிரபாகரனைப் பிடிக்க முடியாது. ஆகையால், இரு தரப்பினரும் பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினைக்குத் தீர்வுகாண முயல வேண்டும். ராஜீவ்காந்தி ஜெயவர்தன ஒப்பந்தத்தை முழுமையாக செயல்படுத்த இலங்கை அரசு முன்வர வேண்டும். தற்போதைய காங்கிரஸ் கூட்டணி அரசு இலங்கைப் பிரச்சினையில் போதிய அக்கறை காட்டவில்லை. பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் 6 மாதங்களுக்குள் இப்பிரச்சினைக்குத் தீர்வுகாண நடவடிக்கை எடுக்கப்படுமென்றும் தெரிவித்தார்.

தமிழர் விரோத நடவடிக்கைகளை சோனியாகாந்தி தடுத்துநிறுத்த வேண்டும்

vmani.jpgகாங் கிரஸ் கட்சியின் எதிர்காலத்தை கருதியாவது இலங்கையில் போரை தடுத்து நிறுத்த இந்திய மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  “இலங்கையில் போரை நிறுத்தவும் இலங்கைத் தமிழர்களுக்கு ஏற்படும் இழப்பை தடுக்கவும் மத்திய அரசு இனியாவது தனது மௌனத்தை கலைக்கவேண்டும்’ என்றும் கூறியுள்ளார்.

தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டு வரும் நிலையில் இலங்கைக்கு கிரிக்கெட் அணியை அனுப்புவது நீரோ மன்னனின் செயல் போன்றது என்று தெரிவித்துள்ள வீரமணி, பாகிஸ்தானுக்கு அனுப்பமாட்டோம் என்று அறிவித்த இந்திய அரசு இலங்கைக்கு மட்டும் கிரிக்கெட் அணியை அனுப்பலாமா? என்று கேள்வி எழுப்பியுள்ளார். காங்கிரஸ் கட்சியின் எதிர்காலத்தை கருதியாவது தமிழர் விரோத நடவடிக்கைகளை அதன் தலைவர் சோனியா காந்தி தடுத்து நிறுத்த நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என்று கூறியுள்ளார்.

காஸாவில் இஸ்ரேல் போர் நிறுத்தம்

gaza_war02.jpg
பாலஸ்தீனத்தின் காஸா பகுதியில் கடந்த 22 நாட்களாக நடத்தி வந்த படுகொலைத் தாக்குதலை நிறுத்திக் கொள்வதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. இஸ்ரேல் நடத்திய பயங்கர ஏவுகணை, விமானப் படை, டாங்கிப் படை தாக்குதலில் 1,200க்கும் மேற்பட்ட அப்பாவிகள் கொல்லப்பட்டுள்ளனர். காஸா பகுதியின் அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் அனைத்தும் நொறுக்கப்பட்டுவிட்டன. மின்சாரம், குடிநீர் சப்ளை கட்டமைப்பையும் இஸ்ரேல் தகர்த்துவிட்டது. மேலும் ஆயிரக்கணக்கான வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகள், பாலங்கள், சாலைகள் ஆகியவற்றையும் இஸ்ரேல் சிதறடித்துள்ளது.

காஸாவில் தாக்குதலை நிறுத்துமாறு உலக நாடுகள் இஸ்ரேலை வலியுறுத்தினாலும் அதை அந்த நாடு காதில் போட்டுக் கொள்ளவில்லை. இஸ்ரேலை நெருக்குவது போல அமெரிக்கா வழக்கம் போல நடித்தாலும் தாக்குதலை நிறுத்த உருப்படியான நடவடிக்கை எதையும் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந் நிலையில் போதி அளவுக்கு காஸாவை உருக்குலைத்துவிட்டதையடுத்து போர் நிறுத்தம் செய்வதாக இஸ்ரேல் பிரதமர் எகுட் ஓல்மார்ட் இன்று அறிவித்தார். அதே நேரத்தில் படைகள் தொடர்ந்து காஸா பகுதியில் நிலை கொண்டிருக்கும் என்றார்.

காஸாவில் இயங்கி வரும் ஹமாஸ் தீவிரவாத அமைப்பு மீது கடுமையான தாக்குதல் நடத்தப்பட்டுவிட்டதால் தற்போது இந்தப் போரை நிறுத்திக் கொள்வதாக அவர் கூறியுள்ளார். ஆனால், இஸ்ரேல் மீதான தங்களது தாக்குதல் தொடரும் என்று ஹமாஸ் அறிவித்துள்ளது.