::சர்வதேச விடயங்கள்

::சர்வதேச விடயங்கள்

சர்வதேச விடயங்கள் தொடர்பான செய்திகள் கட்டுரைகள்

யுத்தமற்ற ஒரு சமுதாயத்தை உருவாக்க ஒன்றுபடுவோம்: சேனன்

12309911698101.jpgகாசாவில் இஸ்ரேலிய இரானுவத்தின் தாக்குதலை வன்மையாக கண்டித்து உலகெங்கும் போராட்டங்கள் நடந்துவருகிறது. கடந்த 10ம் திகதி இரண்டாவது முறையாக ஆயிரக்கணக்கானவர்கள் லன்டனில் கூடி இஸ்ரேலிய தூதரகத்துக்கு எதிர்வரை சென்று தமது எதிர்ப்பை தெரிவித்தனர். அக்கூட்டத்தில் வளங்கிய பேச்சின் சுருக்கம்.
——

இந்த நூற்றாண்டின் ஆரம்பத்தில் இருந்து – கடந்த எட்டு வருடத்துக்குள் – மில்லியன் கணக்கான மக்களை நாம் யுத்தத்துக்கு இழந்துள்ளோம்.

கொங்கோவில் நாலு மில்லியனுக்கும் மேல், ஈராக்கில் ஒரு மில்லியனுக்கும் மேல், டாபூர் சூடானில் அரை மில்லியனுக்கு மேல் என்று உலகெங்கும் யுத்தம் பலிகொண்ட மனித உயிர்களின் எண்ணிக்கையின் தொகை அதிகரித்துகொண்டு செல்கிறது.

தற்போது காசாவில் வறுமையில் வாடிக்கொண்டிருக்கும் மக்கள்மேல் கற்பனை பண்ணமுடியாத கொடிய தாக்குதலை பார்க்கிறோம்.  மனிதர் படும் துன்பங்கள் புது எல்லைகளை தாண்டிக் கொண்டிருக்கிறது.

ஏன் இது? ஒரு சொற்ப – ஆயிரக்கணக்கான பணக்கார முதலைகளின் சொத்துக்களை பாதுகாக்கத்தான் இத்தனையும்.

சொத்துக்களை குவித்தலும் அதை பாதுகாத்தலும் முதலாளித்துவத்தின் இயல்பு என்பது எமக்கனைவருக்கும் தெரியும். தமது சொத்துக்களை பாதுகாக்க முதலாளித்துவ வர்க்கம் யுத்தத்துக்கு தாவுவதை வரலாறு முழுக்க நாம் பார்த்துள்ளோம்.

மத்திய கிழக்கில் அமைதி நிலவுவது பற்றி அமெரிக்க – மேற்கத்தேய பணக்கார ஆளும் வர்க்கத்துக்கு எந்த அக்கறையும் இல்லை என்பது ஆச்சரியமான விடயமில்லை. உடனடி தீர்வை எடுக்க அவர்கள் வக்கற்றவர்கள் என்பது எமக்கு நன்றாக தெரியும்.

காசாவில் வறிய மக்கள் கொடூரமாக கொல்லப்பட்டுக் கொண்டிருக்கும் அதே தருனத்தில் கவலை முக பாவனை காட்டி ‘மனித இனத்துக்கு கவலைப்படுவதாக’ ஊடகங்களுக்கு பேட்டி கொடுக்கும் அதிகார மூஞ்சிகளை நாம் ஒருபோதும் நம்புவதில்லை.

ஏனெனில் எமக்கு தெரியும் – எம் நலனில் இருந்து அவர்கள் நலன் முற்றிலும் மாறுபட்டது. எண்ணை வள மத்திய கிழக்கின் வளத்தை தமது கட்டுபாட்டில் தொடர்ந்து வைத்திருக்க இஸ்ரேலிய ஆளும் வர்க்க ஆதரவு தமக்கு தேவை என்பதில் அவர்கள் தெட்டதெளிவாக இருக்கிறார்கள். வாடும் வறிய மக்கள் நலன் சார்ந்து அவர்கள் ஒருபோதும் சிந்திக்கப் போவதில்லை. வளங்களை சுறண்டுவது சொத்துக்களை சேர்ப்பது என்பதை மடடும் குறிவைத்து இயங்குவதே அவர்கள் சிந்தனை.

முதலாளித்து பொருளாதாரம் உலகெங்கும் கடும் ஆட்டங்கண்டுள்ள நிலையில் ஆளும் வர்க்கத்தின் கோப நடவடிக்கைகளின் வேகமும் அட்டூளியமும் பல மடங்கு அதிகரிப்பதை நாம் பார்க்கடியதாக இருக்கிறது. பச்சை பொறுக்கித்தனமான செயல்களை – மிக கொடூரமான நடவடிக்கைகளை எந்த வெக்கமும் ஒளிப்பு மறைப்புமின்றி வெளிப்படையாக செய்வதில் ஆளும்வர்க்கத்தின் தெனாவட்டு அதிகரித்திருப்பதை அவதானிக்க கூடியதாக இருக்கிறது. தங்களை கேள்வி கேட்க ஆளில்லை – கதைச்சுபேசி சடைஞ்சு எப்பிடியும் தப்பிவிடுவோம் என்ற அபார நம்பிக்கையுடன் அவர்கள் இந்த அட்டூளியங்களில் ஈடுபடுகிறார்கள்.

அடுத்த தேர்தலை வெல்ல வேண்டும் என்ற ஒரு காரணத்துக்காக பல இஸ்ரேலிய பாலஸ்தீன உயிர்களை பலிகொடுக்க தயங்காது நிற்கிறது இஸ்ரேலிய ஆளும் வர்க்கம். உலகெங்கும் வாழும் பெரும்பான்மை மக்களின் கடும் எதிர்ப்பிருந்தும் தான்தோன்றி தனமாக கடும் தெனாவட்டுடன் பட்ட பகலில் பச்சை கொலை செய்கிறது இஸ்ரேலிய ஆளும் வர்க்கம்.

ஆளும்வர்க்கம் உலகெங்கும் இதைதான் செய்துவருகிறது.  அமெரிக்க – மேற்கத்தேய – இஸ்ரேலிய ஆளும் வர்க்கம் கடும் அட்டூளியங்களை செய்தபிறகும் கேட்பாரற்று தப்பிவிடுவதை படிப்பினையாக எடுத்து முன்றாம் உலக நாடுகளை உலுப்பும் ஆளும் வர்க்கங்களும் இதே பாணியை பின்பற்றுகின்றன.

நான் இலங்கையில் இருந்து வந்தவன். காசாவை இஸ்ரேலிய இராணுவம் கடுமையாக தாக்கும் இதே தருனத்தில் இலங்கை இராணுவமும் வடக்கில் கடும் தாக்குதல்களில் ஈடுபட்டு வருகிறது. தற்போது இராணுவம் நுழைந்த பகுதியில் வாழ்ந்த ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் இடம்பெயர்ந்து விட்டனர். அவர்கள் எங்கே. அவர்கள் என்ன நிலையில் இருக்கிறார்கள் என்பது பற்றி யாரும் கதையில்லை.

இலங்கை இரானுவத்தால் சுற்றிவளைக்கப்பட்டிருக்கும் இம்மக்கள் காசா மக்களை போல்தான் கடும் பயக்கெடுதியில் வாழ்ந்து கொண்டிருப்பார்கள் என்பது உறுதி. இவர்களிள் பெரும்பான்மையானவர்களை தீவிரவாதிகள் என்று இராணுவம் நம்புவதால் இவர்களில் ஆயிரக்கணக்கானவர்கள் விரைவில் கொல்லப்படக்கூடிய சாத்தியமுண்டு. அது மட்டுமின்றி ஒரு சொற்பன் தன்னிச்சையாக இயங்க முற்படும் ஊடகங்கள் மேல் கடும் தாக்குதல்களை செய்து வருகிறது அரசு. அண்மையில் ஒரு முக்கிய ஊடகவியலாளரை அரச கூலிகள் சுட்டு கொண்டுள்ளார்கள். வரும் இந்த கிழமை இலங்கை தூதரகம் முன்னாலும் இவற்றுக்கு எதிரான ஆர்ப்பாட்டம் ஒழுங்கு படுத்தப்படவுள்ளது.

யுத்தத்தால் சிதைந்த ஒரு நாட்டில் இருந்து வந்தவன் என்ற முறையில் இன்று காசா மக்கள் படும் துன்பத்தை ஓரளவாவது என்னால் புரிந்துகொள்ள முடிகிறது.

சா எப்ப வரும் என்று தெரியாமல் எந்த நிமிடமும் சாவை எதிர்நோக்கி வாழ்வது மிக கொடிய வாழ்வு. ஒவ்வொரு குண்டு சத்தத்திலும், ஒவ்வொரு துப்பாக்கி சத்தத்திலும், விமானம் பதிந்து பறக்கும் ஒவ்வொரு தருனத்திலும் சாவை எதிர்கொண்டு தப்பி துடிக்கும் அவர்களின் துன்பம் அளப்பரியது.

அத்துடன் அவர்களுக்கு குடிக்க தண்ணியில்லை – சாப்பிட எதுவுமற்ற கடும் பட்டிணி – இதற்குள் தமது உறவுகள் நண்பர்கள் சக மனிதர்கள் தமக்கு முன்னால் கோரத்தனமாக கொல்லப்படுவதை செய்ய வழியற்று அவர்கள் பார்த்துக் கொண்டிருக்க பணிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களின் இதயத்தின் அடியில் நெருப்பாக துடிக்கும் இயலாமையை எம்மால் உணர முடிகிறது. இதை உணரும் இங்கிருக்கும் யாரும் அவர்களை தனியாக துன்பப்பட விடமாட்டோம்.

ஆனால் யு. என். இன் நீண்ட கொரிடோர்களில் அங்கும் இங்குமாக நடந்து விலைகூடின கமராக்களுக்கு போஸ் குடுக்கும் மேற்கத்தேய அரசியல்வாதிகளுக்கு இந்த உணர்வுகள் ஒருபோதும் புரியப்போவதில்லை. காசா மக்களின் அடி மன வேதனையை அவர்கள் ஒருபோதும் உணரப்போவதில்லை. அவர்கள் சிந்தனை வேறு விதமானது. மக்கள் மேலும் மேலும் வறுமைப்பட அவர்கள் தமது சொத்துக்களை அதிகரித்துகொண்டு யுத்த நடவடிக்கைகளுக்கான செலவையும் அதிகரித்து வருகிறார்கள். கடந்த மாதத்தில் மட்டும் அரை மில்லயனுக்கும் மேலான அமெரிக்க மக்கள் வேலை இழந்த நிலையில் அது பற்றி எந்த அக்கறையுமற்ற அமெரிக்க அரசு தனது பாதுகாப்பு நடவடிக்கை பட்ஜெட்டை அதிகரித்து வருகிறது. மொத்த ஜி.என்.பி யில் கிட்டத்தட்ட 4 வீதத்தை பாதுகாப்புக்கு ஒதுக்கியுள்ளது அரசு. கடந்த ஆண்டில் அதிகூடிய ஆயுத விற்பனை செய்தது இந்த இங்கிலாந்து அரசுதான். மூன்றாம் உலக நாடுகளின் கொடிய ஆளும்வர்க்கங்களை ஆயுதமயப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது இஸ்ரேலிய அரசு.

நாம் இதை பார்த்து கொண்டிருக்க முடியாது. நாம் யுத்தத்துக்கு எதிராக –யுத்தத்தின் மூல காரணத்துக்கு எதிராக கடுமையாக போராட வேண்டும். யுத்தத்தின் மூல காரணம் முதலாளித்துவம்தான். முதலாளித்துவம் இருக்கும் வரைக்கும் யுத்தம் இருந்து கொண்டுதான் இருக்கும். யுத்த நடவடிக்கைகளை நிரந்தரமாக முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்றால் நாம் முதலாளித்துவத்துக்கு முற்றுபுள்ளி வைத்தாக வேண்டும்.

மில்லயன் கணக்கான நாம் – தொழிலாளர்களான நாம் – உலக சொத்துக்களை சூறையாடும் ஒரு சிறு குழுவை விட மிகப் பலம் வாய்ந்தவர்கள். முதலாளித்துவத்துக்கு எதிராக நாம் ஒன்றுபட வேண்டும்.

காசா – முழு பாலஸ்தீனம் – இஸ்ரேல் – அமெரிக்க – இலங்கை என்று ஆங்காங்கு போராடிவரும் தோழர்களுடன் இணைந்து ஒன்றுபட்ட போராட்டத்தை நாம் முன்னெடுக்க வேண்டும். மனிதர் துன்பப்படாத – யுத்தமற்ற ஒரு சமுதாயத்தை உருவாக்க ஒன்றுபடுவோம்.

நாம் எமது யுத்தத்தை – இறுதி யுத்தத்தை செய்தாக வேண்டும். மனித துன்பத்துக்கு நிரந்தர தீர்வு கட்டும் இறுதி போராட்டத்திற்கு இணைவோம். எமது யுத்தத்தில் இனைந்து கொள்ளுங்கள். சோசலிஸ்டுகளுடன் சேர்ந்து கொள்ளுங்கள்.

ராஜபக்சே கூட்டத்துக்கு சமாதி கட்டும் நாள்தான் தமிழர்கள் சாப்பிட்ட சாப்பாடு செரிக்கும் நாளாகும் – வைகோ

ponkal.jpgராஜபக்சே கூட்டத்துக்கு சமாதி கட்டும் நாள்தான் தமிழர்கள் சாப்பிட்ட சாப்பாடு செரிக்கும் நாளாகும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறினார். விடுதலைப் புலிகளை இலங்கை ராணுவத்தால் வெல்ல முடியாது என்று ஈரோட்டில் நடந்த ம.தி.மு.க தேர்தல் நிதியளிப்பு விழாவில் பொதுச்செயலாளர் வைகோ பேசினார்.

இலங்கையில் அப்பாவித் தமிழர்கள் ஈவு இரக்கமின்றி கொலை செய்யப்படுகிறார்கள். 4 ஆண்டுகளாக இந்திய அரசு இலங்கை அரசுக்கு அனைத்து வகையிலும் உதவி செய்து வருகிறது. அதனால் தான் இந்த அளவு பாதிப்பு இலங்கை தமிழர்களுக்கு ஏற்பட்டுள்ளது. ஆனால், விடுதலைப் புலிகளை வெல்ல முடியாது. மத்திய அரசின் கூட்டணியில் இருக்கும் எந்த கட்சிகளும் இலங்கை தமிழர் விரோத போக்கை கண்டுகொள்ளவில்லை. ஹிட்லர் ஆட்சியில் கூட நடக்காத கொடுமை இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நடத்தப்படுகிறது. இதைத்தான் சினிமா இயக்குனர் சீமான், கொளத்தூர் மணி, மணியரசன் ஆகியோர் பேசினார்கள். இதில் என்ன தவறு உள்ளது?.

போபர்ஸ் பீரங்கி ஊழல் பிரச்சினையில் இருந்து விடுபட ராஜீவ் காந்தி இலங்கைக்கு ராணுவத்தை அனுப்பினார். ராணுவம் தமிழர்களுக்கு எதிராக செயல்பட்டது. இதை சீமான் சொன்னதில் என்ன தவறு உள்ளது? தற்போது ராணுவ உதவி மட்டுமின்றி உளவு அமைப்பான ரா மூலமும் இலங்கை ராணுவத்துக்கு இந்திய அரசு உதவி செய்து வருகிறது. இந்தியா கொடுத்த பணத்தில் ஆயுதம் வாங்கி இலங்கை அரசு நம் இனத்துக்கு எதிராக பயன்படுத்துகிறது.

உண்மையில் விடுதலைப் புலிகள் முல்லைத்தீவில் உள்ள 6 லட்சம் தமிழர்களுக்கு அரணாக உள்ளனர். அவர்களை வீழ்த்த முடியாது. ராஜபக்சே கூட்டத்துக்கு சமாதி கட்டும் நாள்தான் தமிழர்கள் சாப்பிட்ட சாப்பாடு செரிக்கும் நாளாகும் என்றார் வைகோ.

பயங்கரவாதத் தாக்குதலில் சதித் திட்டம் தீட்டியவர்களை பாகிஸ்தான் சட்டத்தின் முன் நிறுத்தவில்லை என்றால் இந்தியா நடவடிக்கைகளை எடுக்கும்

pranab-1312.jpgகடந்த நவம்பர் மாதம் மும்பையில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் சதித் திட்டம் தீட்டியவர்களை பாகிஸ்தான் சட்டத்தின் முன் நிறுத்தவில்லை என்றால் இந்தியா மேலதிக நடவடிக்கைகளை எடுக்கும் என்று இந்திய வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார்.  எவ்விதமான நடவடிக்கை என்பதை முகர்ஜி விபரித்துக்கூறவில்லை என்றாலும், பாகிஸ்தானிடம் ஆதாரங்கள் அடங்கிய ஆவணங்களை இந்தியா கையளித்துவிட்டது என்றும், பாகிஸ்தான் அரசு அது தொடர்பில் நடவடிக்கை எடுக்கும் என்று இந்தியா எதிர்பார்க்கிறது எனவும் அவர் குறிப்பிட்டார்.

 மும்பையில் தாக்குதல் நடத்தியவர்களுக்கு பாகிஸ்தானின் அரசு நிறுவனங்களுடைய ஆதரவு இருந்திருக்கத்தான் வேண்டும் என்று இந்தியா வலியுறுத்துவதை பாகிஸ்தான் நிராகரித்துள்ளது.  இப்படியான அறிக்கைகளால் போர் பீதிதான் மேலோங்குகிறது என பாகிஸ்தானின் முன்னாள் அதிபர் பெர்வேஸ் முஷாரஃப் எச்சரித்துள்ளார்.

திருமங்கலம் இடைத் தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் லதா வெற்றி

latha-adiyaman.jpgதமிழ் நாடு திருமங்கலம் சட்டப் பேரவை இடைத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கையில் தி. மு. க. வேட்பாளர் லதா அதியமான் 39 ஆயிரத்து 266 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார்.

திருமங்கலம் தொகுதி இடைத் தேர்தல் 190 வாக்குச் சாவடிகளில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அ. தி. மு. க. சார்பில் முத்துராமலிங்கம், தி. மு. க. சார்பில் லதா அதியமான், தே. மு. தி. க. சார்பில் தனபாண்டியன் மற்றும் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி சார்பில் பத்மநாபன் உட்பட 26 பேர் போட்டியிட்டனர். மொத்தம் 1,38,369 வாக்குகள் பதிவாகியிருந்தன.

இதில் 67,748 ஆண்களும், 70,621 பெண்களும் வாக்களித்தனர். வாக்கு எண்ணிக்கை தொடங்கியதிலிருந்தே, தி. மு. க. வேட்பாளர் லதா அதியமான் 79,422 வாக்குகளையும், அவரைத் தொடர்ந்து அ. தி. மு. க. வேட்பாளர் முத்து ராமலிங்கம் 40,156 வாக்குகளையும் பெற்றிருந்தனர். அதாவது அ. தி. மு. க. வேட்பாளரைவிட தி. மு. க. வேட்பாளர் 39,266 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். மேலும் தே. மு. தி. க. வேட்பாளர் தனபாண்டியன் 13,136 வாக்குகளையும், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி வேட்பாளர் பத்மநாபன் 831 வாக்குகளையும் பெற்றனர்.

காஸா பொதுமக்களுக்கு – இஸ்ரேல் எச்சரிக்கை

gaza_war02.jpgகாஸாவில் உள்ள பொதுமக்கள் ஹமாஸ் பயன்படுத்தும் கட்டிடங்கள் அருகே செல்ல வேண்டாம் என இஸ்ரேல் துண்டுச்சீட்டுகள் மற்றும் தொலைபேசி மூலமாக எச்சரிக்கை விடுத்துள்ளது.  இதன் மூலம் பாலஸ்தீன தீவிரவாதிகளுக்கு எதிராக இஸ்ரேல் புதிய சண்டை யுக்தியை பயன்படுத்தலாம் என்ற பலத்த யூகம் நிலவுவதாக ஜெருசேலத்தில் இருக்கும் பிபிசி செய்தியாளர் கூறுகிறார். இதற்கிடையே, வடக்கு காஸாவில் ஜபல்யா வீதியில் இஸ்ரேலின் எறிகணை தாக்குதலில் எட்டு பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாக மருத்துவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த இரண்டு வாரமாக நடைபெறும் மோதலில் எண்ணூறுக்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளதாக அவர்கள் கூறியுள்ளனர். இதில் பதிமூன்று இஸ்ரேலியர்களும் கொல்லப்பட்டுள்ளனர், இவர்களில் பெரும்பாலானவர்கள் இராணுவத்தினர்.

ஐ.நா. தீர்மானத்தை இரு தரப்பும் நிராகரிப்பு இஸ்ரேல் தொடர்ந்து காஸா மீது தாக்குதல்

gaza_.jpgகாஸா வில் உடனடி யுத்த நிறுத்தத்தை மேற்கொள்ள வேண்டுமென்ற ஐ.நா.வின் அழைப்பை இரு தரப்பும் நிராகரித்திருக்கும் நிலையில் காஸாவில் பாலஸ்தீன அதிகாரசபை புதிதாக கால்தடம் பதிப்பதற்கும் சர்வதேச கண்காணிப்பாளர்களை வர வழைப்பதற்குமான திட்டமொன்று நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை இராஜதந்திரிகளால் தயாரிக்கப்பட்டுள்ளது.

மதச்சார்பற்ற பாத்தா பிரிவின் தலைமையின் கீழ் அதிகாரசபை மீண்டும் அங்கு திரும்புவதற்கு இடமளிப்பது திட்டத்தின் ஓரங்கமாகும். காஸாப்பகுதியிலிருந்து 18 மாதங்களுக்கு முன்னர் ஹமாஸ் அமைப்பால் பாத்தா அமைப்பு வெளியேற்றப்பட்டது. அத்துடன் காஸாவுக்குள் ஆயுதக் கடத்தலை நிறுத்துவதற்கு துருக்கி மற்றும் பிரான்ஸ் கண்காணிப்பாளர்களை எகிப்துக்கான ராபாகடவை, இஸ்ரேலுக்கான கிரெம் சாலொம் கடவை உள்ளடங்கலாக காஸாவின் தெற்கு முனையில் நிறுத்துவதும் இத்திட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது.

காஸாப் பிராந்தியத்தில் சர்வதேச அங்கீகாரத்துடனான அரசாங்கமாக அதிகார சபை இயங்கும். 2007 ஜூனின் பின்னர் காஸாவில் ஹமாஸ் அதிகாரத்தை கைப்பற்றியதையடுத்து அப்பகுதியிலிருந்து போக்குவரத்து முழுமையாக துண்டிக்கப்பட்டிருக்கிறது. புதிய திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால் போக்குவரத்து மீள ஆரம்பிக்கப்படும்.

எகிப்தின் சமாதான முயற்சியின் ஓரங்கமாக இத்திட்டம் ஆராயப்பட்டுள்ளது. பிரான்ஸ் ஜனாதிபதி சார்கோஸியுடன் பேச்சு வார்த்தை நடத்தியபின் எகிப்திய ஜனாதிபதி முபாரக் இதனை அறிவித்திருக்கிறார். உடனடி யுத்த நிறுத்தம் ஏற்பட வேண்டும் என்றும் அதன் பின்னர் காஸா எகிப்து எல்லைப்பாதுகாப்பு தொடர்பாக பேச்சு வார்த்தை இடம் பெற வேண்டும் எனவும் கடவைகளை திறந்து விடவேண்டுமெனவும் இத்திட்டத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

ஆனால் எல்லைகளை எவ்வாறு பாதுகாப்பது என்பது தொடர்பாக இணக்கப்பாடு இல்லாததால் எகிப்தின் முயற்சிகள் நிராகரிக்கப்பட்டு விடுமென இராஜதந்திரிகள் கூறுகின்றனர். எகிப்துடனான எல்லையில் அவதானிப்பாளர்களை அனுமதிப்பது தொடர்பாக பரிசீலிப்பதாக கூறியுள்ள ஹமாஸ் அமைப்பு ஆனால் சர்வதேச படையினர் பிரசன்னத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. அதேசமயம் ஹமாஸின் 3 தலைவர்கள் பேச்சு வார்த்தைக்காக எல்லையைக் கடந்து இஸ்ரேலுக்கு வந்துள்ளதையும் ஹமாஸ் சுட்டிக்காட்டியுள்ளது.  ஆனால் எல்லைப்பகுதிகளிலுள்ள சுரங்கப்பாதைகளூடாக ஆயுதங்கள் கடத்தப்படுவதாகவும் அவற்றை அழிக்க சர்வதேசப்படை அவசியமெனவும் இஸ்ரேல் வலியுறுத்துகிறது.

தமது எல்லைப்பகுதியில் சர்வதேசப் படையின் பிரசன்னத்தை எகிப்து விரும்பவில்லை. ஆயினும் 2005 இல் மேற்கொள்ளப்பட்ட இணக்கப்பாட்டை மீண்டும் புதுப்பிக்க வேண்டுமென கெய்ரோ விரும்புகின்றது. அந்த உடன்படிக்கையின்பிரகாரம் நடமாட்டம், விநியோகம் என்பன ஐரோப்பிய ஒன்றிய கண்காணிப்பாளர்களின் மேற்பார்வையில் இடம் பெறும். ராபா கடவையூடாக மக்கள் போக்குவரத்து கேரம் சாலெம் கடவையூடாக வாகனங்களில் போக்குவரத்துக்கு அந்த உடன்படிக்கை வழிவகுத்திருந்தது. ஹமாஸ் அதிகாரத்திற்கு வந்ததையடுத்து அந்த உடன்படிக்கை செயலிழந்தது. ஐ.நா.வின் யுத்த நிறுத்த யோசனைக்கு பாதுகாப்பு சபை 140 அங்கீகாரமளித்திருந்தது. அமெரிக்கா வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை. ஆனால் உடனடியாகவே ஐ.நா.வின் தீர்மானம் நிராகரிக்கப்பட்டுவிட்டது.

அமெரிக்கா ஐ.நா.பாதுகாப்பு சபை தீர்மானத்திற்கு ஆதரவளிக்குமென எதிர்பார்க்கப்பட்டிருந்த போதும் கடைசி நிமிடத்தில் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை. ஜனாதிபதி புஷ்ஷிடமிருந்து வந்த தொலைபேசி அழைப்பை அடுத்து அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் கொண்டலீசா ரைஸ் தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டதாக இராஜதந்திரிகள் தெரிவித்தனர்.

நேற்று முன்தினமும் நேற்றும் இஸ்ரேல் காஸா மீது தொடர்ந்து தாக்குதல்களை நடத்தியது. தனது பிரஜைகளை பாதுகாப்பதற்கான உரிமை தொடர்பாக தீர்மானிப்பதற்கு வெளியார் செல்வாக்கு செலுத்த இஸ்ரேல் ஒரு போதும் இணங்கவில்லை என்று இஸ்ரேல் பிரதமர் ஈகுட் ஒல்மேர்ட் கூறியுள்ளார். இஸ்ரேல் மட்டும் தாக்குதல்களை நடத்தவில்லை. காஸாவிலிருந்தும் டோராட், பீர்சிபா போன்ற குடியேற்றப்பகுதிகளை நோக்கி ரொக்கட் தாக்குதல்கள் இடம்பெற்றன.

புலிகளிடம் பணம் வாங்கினேனா?- பாரதிராஜா ஆவேசம்

bharathiraja.jpgவிடு தலைப் புலிகளிடம் நாங்கள் பணம் வாங்கியதாக எந்த அரசியல்வாதியாவது நிரூபிக்க முடியுமா என சவால் விட்டுள்ளார் இயக்குநர் பாரதிராஜா. பாரதிராஜா தலைமையில் ராமேஸ்வரத்தில் இலங்கைத் தமிழர் ஆதரவுப் போராட்டம் தொடங்கிய பிறகு தமிழகத்தில் உணர்ச்சிமயமான பல காட்சிகள் அரங்கேறின. அதுவரை மௌனம் காத்தவர்கள் கூட பாரதிராஜாவுக்குப் பிறகுதான் வெளிப்படையாக இலங்கைத் தமிழருக்கு ஆதரவாகப் பேசத் தொடங்கினர்.

ஆனால் இங்குள்ள சில அரசியல்வாதிகள், பாரதிராஜாவும் மற்றவர்களும் புலிகளிடம் பணம் வாங்கிக் கொண்டுதான் இப்படி ஆதரவாகப் போராட்டங்கள் நடத்தி வருவதாகக் குற்றம்சாட்டினர். இதனால் கொதித்துப் போன பாரதிராஜா, நான் பணம் வாங்கியதாக எந்த அரசியல் தலைவராவது நிரூபிக்க முடி்யுமா? இதை நான் ஒரு சவாலாகவே விடுகிறேன். முடிந்தால் நிரூபித்துக் காட்டுங்கள் பார்க்கலாம் என்று ஆவேசமாகக் கூறியுள்ளார்.

தேவையற்ற விதத்தில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த பாக். தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பதவி நீக்கம்

tajmahal-hotel27112008.jpgபாகிஸ் தான் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மெஹ்மூட் அலி துர்ரானி பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மும்பாய் தாக்குதலையடுத்து இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்குமிடையில் பதற்றம் உருவாகியுள்ள நிலையில் இவர் பதவி நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார். ஓய்வுபெற்ற இராணுவ ஜெனரலான துர்ரானியை பிரதமர் யூசுப் ராசா ஹிலானி பதவி நீக்கியதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முக்கியமான கருத்துகளைத் தெரிவிக்கும் பொழுது உயர்மட்ட அரசியல் தலைவர்களுடன் கலந்தாலோசிக்காமல் கருத்து வெளியிட்டமைக்காகவே மெஹ்மூட் அலியைப் பணி நீக்கம் செய்துள்ளதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது.

மும்பைத் தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்ட அஜ்மல் பாகிஸ்தானைச் சேர்ந்தவரென இந்தியா தொடர்ந்தும் குற்றம் சாட்டி வருவதுடன் அதற்கான ஆதாரங்களையும் பாகிஸ்தானிடம் இந்தியா கையளித்துள்ளது.

ஆனால், இந்தியாவின் குற்றச்சாட்டுகளை நிராகரித்துள்ள பாகிஸ்தான், அஜ்மல் பாகிஸ்தானைச் சேர்ந்தவரல்லவெனவும் தெரிவித்து வருகின்றது.  இந்நிலையில், மும்பைத் தாக்குதல் தீவிரவாதி அஜ்மல் பாகிஸ்தானைச் சேர்ந்தவரென பாகிஸ்தான் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் மெஹ்மூட் அலி துர்ரானி தெரிவித்த சில மணித்தியாலங்களின் பின்னர் அவர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை, அஜ்மல் பாகிஸ்தானைச் சேர்ந்தவரென்று பாகிஸ்தானின் தகவல் அமைச்சர் செர்றி ரகுமானும் அறிவித்துள்ளார்.  இவ்விடயம் தொடர்பாக பாகிஸ்தானின் பாதுகாப்பு ஆலோசகர் மெஹ்மூட் அலி துர்ரானி தெரிவிக்கையில்;

மும்பைத் தாக்குலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் அஜ்மல் பற்றி பாகிஸ்தானின் சட்ட அமுலாக்க அதிகாரிகள் நடத்திய ஆரம்ப கட்ட விசாரணையில் அவர் பாகிஸ்தானைச் சேர்ந்தவர் தான் என்பது தெரிய வந்துள்ளது.

அவர் பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலம் ஒகரா மாவட்டத்திலுள்ள பரித்கோட் கிராமத்தில் பிறந்தவர். அவரது பெற்றோர் அமீர் கசா இலாகி.

விசாரணை அதிகாரிகளிடம் அஜ்மலின் பெற்றோர் கூறும் போது, தங்கள் மகன் அஜ்மல் 4 வருடங்களுக்கு முன்பு வீட்டை விட்டுச் சென்று விட்டதாகவும் அதற்குப் பிறகு இடைப்பட்ட காலங்களில் சில தடவைகள் அவர் தங்களுடன் தொடர்பு கொண்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

மேலும், மும்பைத் தாக்குதலின் போது ஊடகங்களில் வெளியான புகைப்படங்கள் மூலம் அவரைத் தங்கள் மகன்தான் என்று அடையாளம் கண்டுகொண்டதாகவும் அஜ்மலின் பெற்றோர் கூறியிருக்கிறார்கள்.

இந்த விசாரணை அறிக்கையின் நகல்கள் உள்துறை அமைச்சகத்திடமும் பிரதமர் கிலானியிடமும் சமர்ப்பிக்கப்பட்டு இருக்கிறது. இது பற்றிய முறைப்படியான அறிவிப்பு இன்னும் சில நாட்களில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் ஆரம்ப கட்ட விசாரணையில் மும்பையில் தீவிரவாதிகள் தங்களாகவே தாக்குதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார்கள் எனவும் பாகிஸ்தானின் பாதுகாப்பு அமைப்புக்கும் அவர்களுக்கும் எந்த விதத் தொடர்பும் இல்லை என்றும் தெரியவந்துள்ளதென தெரிவித்தார்.

இதேவேளை, அஜ்மல்கஸாப் பாகிஸ்தானை சேர்ந்தவர் தான் என்பதை பாதுகாப்பு அமைப்புகள் தனக்கு உறுதிப்படுத்தியுள்ளதாக துர்ரானி தெரிவித்துள்ளார்.

சென்னை மாநாட்டில் இலங்கைப் பிரச்சினை குறித்து இந்தியப் பிரதமரும் கலைஞரும் மௌனம்

singh.jpgசென் னையில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற வெளிநாடு வாழ் இந்தியர்கள் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங், காஸாவில் இஸ்ரேல் நடத்தும் தாக்குதலினால் அப்பாவிப்பொதுமக்கள் கொல்லப்படுவது குறித்து கவலைதெரிவித்தபோதும் இலங்கைத் தமிழர் பிரச்சினை குறித்து அவர் எதுவும் பேசாமல் மௌனம் காத்தார்.  இந்த விழாவில் கலந்து கொண்ட தமிழக முதல்வர் கருணாநிதியும் இலங்கை பிரச்சினை பற்றி மௌனம் சாதித்தார்.

நந்தம்பாக்கத்தில் நடைபெறும் வெளிநாட்டுவாழ் இந்தியர் விழாவை முறைப்படி ஆரம்பித்துவைத்து பேசிய பிரதமர் மன்மோகன் சிங், காஸா பகுதியில் பாலஸ்தீன அப்பாவிகள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் குறித்து கவலை தெரிவித்தார். பாலஸ்தீன பிரச்சினையில் இந்தியா பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த பகுதியில் அமைதி திரும்ப வேண்டும் என்றும் அவர் கூறினார். எனினும் இலங்கைத் தமிழர் பிரச்சினை பற்றி எதுவும் அவர் குறிப்பிடவில்லை. அதே போல முன்னதாக உரையாற்றிய தமிழக முதல்வர் கருணாநிதியும் இலங்கை பிரச்சினை பற்றி குறிப்பிடவில்லை.

‘காஸா தாக்குதல்’ பதவியேற்கமுன் ஒபாமா இஸ்ரேலுக்கு அளித்துள்ள பரிசு. – சவாஹிரி

israeli-aircraft.jpgஅமெ ரிக்காவின் புதிய ஜனாதிபதி பராக் ஒபாமா இஸ்ரேலின் நண்பரென்றும் காஸா மீதான தாக்குதலை நிறுத்த முயற்சிக்கமாட்டாரெனவும் அல்-கைதாவின் இரண்டாம் மட்டத்தலைவர் அய்மன் அல்ஸவாஹிரி தெரிவித்துள்ளார். இவரின் உரையடங்கிய ஒலிநாடா அல் கைதாவின் இணையத்தளத்தில் வெளியானது. காஸா மீதான தாக்குதல் நடத்தப்பட்ட பின்னர் அல்-கைதாவால் வெளியிடப்பட்ட முதல் ஒலி நாடா இதுவாகும்.

அல்-கைதாவின் இரண்டாம் மட்டத் தலைவர் அய்மன் ஸவாஹிரி இதில் அமெரிக்கா இஸ்ரேல் மற்றும் எகிப்திய ஜனாதிபதி ஹொஸ்னி முபாரக் ஆகியோரைக் கடுமையாக விமர்சித்துள்ளார். அந்த ஒலி நாடாவில் தெரிவிக்கப்பட்டதாவது :- பராக் ஒபாமா அமெரிக்காவின் வெளிநாட்டுக் கொள்கைகளை மாற்றுவார். முஸ்லிம்களுக்கு சாதகமாக நடந்துகொள்வார் என்ற எதிர்பார்ப்பெல்லாம் போலியானது. ஒபாமா எப்போதும் இஸ்ரேலின் நண்பர். காஸா தாக்குதல் அவர் இஸ்ரேலுக்குக் வழங்கியுள்ள பரிசு.

காஸா மக்களையும், குழந்தைகளையும் இஸ்ரேலின் தாக்குதலிலிருந்து காப்பாற்ற அவர் முன்வரமாட்டார். இஹ்வால் முஸ்லிம்களை அடக்கியாள நினைக்கும் எகிப்திய ஜனாதிபதி முஸ்லிம்களின் ஒட்டு மொத்த துரோகி இஸ்ரேலின் கொலைகளுக்கான விளைவுகளை டெல்அவிவ் விரைவில் எதிர்கொள்ளுமெனவும் அவ்வுரை யிலே ஸவாஹிரி கூறியுள்ளார். அரபு ஆட்சியாளர்களையும் அல்-கைதா சாடியுள்ளது. பலஸ்தீனச் சிறுவர்கள், குழந்தைகள் முதியோர்கள் கொல்லப்படுவதானது உலகெங்குமுள்ள யூதர்களைக் கொலை செய்யப்படவுள்ளதை நியாயப்படுத்தியுள்ளதாக காஸாவை ஆளும் ஹமாஸ் தெரிவித்துள்ளதும் தெரிந்தது.