கரடியனாறு வெடிவிபத்தில் முன்னாள் புலி உறுப்பினர்கள் கொல்லப்பட்டதாக வெளியான செய்தியை பொலிஸ் தரப்பு மறுத்துள்ளது.
கரடியனாறு குண்டுவெடிப்பில் புனர்வாழ்வு முகாமில் தடுத்துவைக்கப்பட்டிருந்த முன்னாள் போராளிகளும் உயிரிழந்துள்ளதாக தமிழீழ விடுதலைப் புலிகளின் உத்தியோகபூர்வமான இணையத்தளம் என்று அறியப்பட்ட தமிழ்நெற் இணையத்தளத்தில் வெளியான செய்தியை பொலிஸ் மறுத்துள்ளது.
மட்டக்களப்பு கரடியனாறு குண்டுவெடிப்புச் சம்பவத்தில் முன்னாள் புலிப்போராளிகள் பலியாகியிருக்க சாத்தியமில்லை எனவும், இது குறித்து தமக்கு எவ்வித தகவலோ அறிக்கையோ கிடைக்கவில்லை எனவும் பொலிஸ் பேச்சாளர் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரசாந்த ஜெயக்கொடி தெரிவித்துள்ளார்.
புனர்வாழ்வு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த முன்னாள் புலிப்போராளிகள் சீன நிறுவனத்தால் பணிக்கு அமர்த்தப்பட்டிருந்தனர் என்றும், குறித்த குண்டு வெடிப்புச் சம்பவத்தில் அவர்களும் பலியாகினர் என்றும் தமிழ்நெற் இணையத்தளம் செய்தி வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இக்குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டவர்களின் தொகை 60 என சம்பவம் நடைபெற்றவுடன் முதலில் வெளியான செய்திகள் தெரிவித்திருந்தன. பின்னர் கொல்லப்பட்டவர்களின் தொகை 26 என பொலிஸார் தெரிவித்திருந்தனர். பொலிஸ்மாஅதிபர் மகிந்த பாலசூரிய வெளியட்டிருந்த அறிக்கையில் கொல்லப்பட்டவர்கள் 19 பேர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இம்மாறுபட்ட தகவல்கள் குறித்து சந்தேகங்கள் தோன்றியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
பொலிஸ் குழுக்கள், புலனாய்வு பிரிவு தீவிர விசாரணை
மட்டக்களப்பு, கரடியனாறு பொலிஸ் நிலையத்திற்கு வெளியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டைனமைற் நிரப்பிய கொள்கலன் வெடிப்புக்கு திடீர் விபத்தே காரணம்; நாசவேலை காரணமல்ல என்று பொலிஸ் மா அதிபர் மஹிந்த பாலசூரிய நேற்றுத் திட்டவட்டமாக அறிவித்துள்ளார். இச் சம்பவம் தொடர்பாக அரசாங்க இரசாயனப் பகுப்பாய்வாளரும், குற்ற புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளும் நடாத்திய புலன் விசாரணைகளில் இந்த விடயம் உறுதிப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டிருக்கின்றார்.
கரடியனாறு பொலிஸ் நிலையத்திற்கு வெளியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டைனமைற் வெடி மருந்து நிரப்பிய இரு கொள்கலன்கள் நேற்று முன்தினம் வெடித்துச் சிதறிய சம்பவத்தைக் கேள்வியுற்றதும் நேரில் சென்று திரும்பிய பொலிஸ் மா அதிபர் மஹிந்த பாலசூரிய நேற்று விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டிருக்கின்றார்.
இச் சம்பவத்தில் 12 பொலிஸாரும், 07 பொது மக்களும், 02 சீன பிரஜைகளுமாக 21 பேர் உயிரிழந்துள்ளனர். அதேநேரம் இச் சம்பவத்தில் 19 பொலிஸாரும் 21 பொது மக்களும் காயமடைந்துள்ளனர். இவர்கள் உடனடியாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த பொலிஸாரில் நால்வர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு இடமாற்றப்பட்டனர். இவர்களில் இருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் விபத்து சிகிச்சை பிரிவில் தீவிர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டிருப்பதாக ஆஸ்பத்திரி வட்டாரங்கள் நேற்று கூறின.
இதேவேளை மட்டக்களப்பு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுபவர்களில் எவரும் தீவிர சிகிச்சைபிரிவில் அனுமதிக்கப்படவில்லை. இச் சம்பவத்தில் காயமடைந்து எமது ஆஸ்பத்திரியில் தங்கியிருந்து சிகிச்சை பெறுபவர்களின் உடல் நிலை தேறிவருவதாக ஆஸ்பத்திரி பணிப்பாளர் டொக்டர் கந்தசாமி முருகானந்தம் கூறினார். சிகிச்சை பெற்று வருபவர்களில் ஒரு தொகுதியினர் இன்று அல்லது நாளை வீடு திரும்ப முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
துக்கம் அனுஸ்டிப்பு
கரடியனாறு பொலிஸ் நிலையத்தில் இடம்பெற்ற வெடி விபத்தில் பலியானவர்களுக்காக இன்று மட்டக்களப்பில் துக்கம் அனுஸ்டிக்கப்பட்டுகிறது. மட்டக்களப்பு நகரின் பிரதான மணிக்கூட்டுக் கோபுரம், அரசடி ஆஞ்சநேயர் மணிக்கூட்டுக்கோபுரம், மற்றும் பிரதான வீதிகள் , ஏனைய பிரதேசங்களிலும் வெள்ளைக்கொடிகள் கட்டப்பட்டு துக்கம் அனுஷ்டிக்கப்பட்டது.
மட்டக்களப்பு கரடியானாறு வெடிவிபத்து குறித்து சீனத்தூதரகம் விசாரணை நடத்துகிறது.
மட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ் நிலைய வளாகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற வெடிவிபத்து தொடர்பாக விசாரணை நடத்த கொழும்பிலுள்ள சீனத் தூதரகம் நடவடிக்கை எடுத்துள்ளது. இக்குண்டு வெடிப்பு நடைபெற்ற கரடியனாறு பகுதிக்கு சீனத்தூதரகம் குழுவொன்றை அனுப்பிவைத்துள்ளது.
கிழக்கில் பல்வேறு அபிவிருத்திப்பணிகளில் ஈடுபட்டு வரும் சீன நிறுவனம் ஒன்றிற்கு சொந்தமான கொள்கலனிலிருந்த வெடிப்பொருட்களே நேற்று வெடித்து பெரும் உயிர்ச்சேதங்களை ஏற்படுத்திருந்தது. இதில் இரு சீனப்பிரஜைகளும் உயிரிழந்தனர். இவ்வெடிவிபத்து எவ்வாறு எற்பட்டது என்பது தொடர்பாக முழுமையான விசாரணைகளை சீனத்தூதரக அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர்.
இதேவேளை, இவ்விபத்து தொடர்பான விசாரணைகளை உடனடியாக நடத்துமாறு தற்போது அமெரிக்கால் தங்கியுள்ள ஜனாதிபதி மகந்த ராஜபக்ச அங்கிருந்து பாதுகாப்புத்தரப்பிற்கு உத்தரவிட்டுள்ளார்.
மட்டக்களப்பில் இடம்பெற்ற பாரிய குண்டு விபத்தில் 25 பேர்வரை மரணம்
மட்டக்களப்பில கரடியனாறு பகுதியில் கட்டிட வேலைக்கு பயன்படுத்த வழங்கப்பட்ட வெடிபொருட்கள் வெடித்ததில் 25 பேர் கொல்லப்பட்டதாகத் தெரியவருகின்றது. இச்சம்பவத்தில் 60 ற்கு மேற்பட்டோர் பலியானதாகத் தகவல்கள் வெளிவந்த போதும் பாதுகாப்புத் தரப்புகளிலிருந்து கிடைத்த செய்திகளின் படி 25 பேரின் மரணமே உறுதிப்படுத்தப்பட்டன. 52 பேர் பலத்த காயங்களுக்குள்ளாகியுள்ளனர். பலியானவர்களில் இருவர் சீன பிரஜைகளாவர். காயமடைந்தவர்களில் 24 பேர் பொலிஸார் எனவும் 28 பேர் சிவிலியன்கள் எனவும் பொலிஸ் தலைமையக வட்டாரங்கள் தெரிவித்தன.
கட்டிட வேலைகளுக்கு வெடிபொருட்களை வழங்க நிறுத்தப்பட்ட வாகனம் அப்பகுதியில் இருந்த பொலிஸ் வெடிபொருள் சேமிப்புக் கிடங்கிற்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்துள்ளது. அதனைத் தொடர்ந்து பொலிஸ் வெடிபொருள் சேமிப்புக் கிடங்கும் வெடிப்புக்கு உள்ளாகியதால் பாரிய உயிரிழப்புகள் ஏற்பட்டு உள்ளது.
பாரிய சத்தத்துடன் இடம்பெற்ற இந்த வெடிவிபத்து வேலைநேரத்தில் இடம்பெற்ற விபத்து என பொலிஸார் தெரிவிக்கின்றனர். மே 18இன் பின் ஏற்பட்ட மிகப்பெரும் குண்டு வெடிப்பு இதுவாகும். இலங்கையில் அண்மைக் காலத்தில் நிகழ்ந்த பாரிய விபத்து மரணமாகவும் உள்ளது. வெடிபொருட்களைப் பயன்படுத்தம் போது உரிய பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாமையினாலேயே இப்பாரிய அழிவு இடம்பெற்றுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இவ்விபத்தில் அருகில் இருந்த பொலிஸ் நிலையம் முற்றாக அழிக்கப்பட்டு உள்ளது. கொல்லப்பட்டவர்கள் பெரும்பாலும் பொலிஸ் உத்தியோகஸ்தர்களும் பணியாளர்களும் எனத் தெரியவருகின்றது. கொல்லப்பட்டவர்களில் சீனப் பணியாளர்கள் இருவரும் அடங்குவதாகத் தெரியவருகிறது.
இதுபற்றி தேசம்நெற் இணையத்திற்கு தகவல் அளித்த வி மகேந்திரன் கூட்டம் ஒன்றை நடாத்திக் கொண்டிருக்கும் போது இவ்வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றதாகத் தெரிவித்தார். இலங்கை நேரம் காலை 10:40 க்கு நிகழ்ந்த இப் பாரிய குண்டுவெடிப்பு 20 நிமிடங்கள் வரை நீடித்ததாகவும் தெரிவித்தார்.
கொழும்பு – மட்டக்களப்பு பாதையை திருத்தி அமைக்கும் சீன நிறுவனம் புல்லுமலையில் உள்ள குன்றுகளைத் தகர்ப்பதற்கு பெருமளவு டைனமைட் வெடிபொருட்களை அப்பகுதிக்கு கொண்டு வந்துள்ளது. மேலும் இவ்வெடிபொருட்கள் கரடியனாறு பொலிஸ் ஆயுதக்கிடங்கிலும் சேகரிக்கப்ட்டு இருந்து. இந்த டைனமைட்டை கையாளும் போதே இந்த வெடிவிபத்து நிகழ்ந்து பொலிஸ் ஆயுதக் கிடங்கிலும் விபத்தை ஏற்படுத்தி உள்ளது என வி மகேந்திரன் தேசம்நெற்க்குத் தெரிவித்தார்.
இந்பாரிய விபத்தால் பொலிஸ் நிலையம் முற்றாக அழிக்கப்பட்டதாகவும் அப்பகுதி மருத்துவமனையும் அப்பகுதியால் சென்று கொண்டிருந்த பேருந்தும் பாதிக்கப்பட்டு உள்ளதாக தாங்கள் அறிவதாகவும் வி மகேந்திரன் தெரிவித்தார். மேலும் பொலிஸ் நிலையத்திற்கு தங்கள் முறைப்பாடுகள் மற்றும் காரணங்களுக்காகச் சென்ற சிலரும் கொல்லப்பட்டு இருக்கலாம் என அவர் தெரிவித்தார்.
இப்பகுதி முற்றாக பொதுமக்களுக்கு தடுக்கப்பட்டு இருப்பதாகவும் வி மகேந்திரன் கூறினார்.
பாதுகாப்பு அமைச்சு தகவல்
கரடியனாறு வெடிப்புச் சம்பவத்தில் 10 பொலிஸார், 2 சீன நாட்டவர்கள் மற்றும் 7 பொதுமக்கள் உட்பட 19 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 52 பேர் காயமுற்றவர்கள் எனவும் பாதுகாப்பு அமைச்சு தகவல் தெரிவித்துள்ளது.
இதேவேளை 44 பேர் காயமுற்ற நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், இவர்களில் 4 பொலிஸ் உத்தியோகத்தரகள் கொழும்பு தேசிய வைத்தியசாலையிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் ஏனைய 40 பேரில் 21 பொதுமக்களும் 19 பொலிஸார்கள் உள்ளடங்குவதாகவும் மட்டு.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் முருகானந்தன் தெரிவித்துள்ளார்.
மேலும் 6 பொதுமக்கள், 2 பொலிஸார், 2 சீனநாட்டவர்கள் உட்பட 10 பேரின் சடலங்கள் வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.