January

January

யாழ். குடாநாடு முழுவதும் தற்போது படையினர் வசம் – இராணுவப் பேச்சாளர்

_army.jpgயாழ்.  சுண்டிக்குளம் முழுவதும் நேற்று மாலையளவில் படையினரின் முழுமையான கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. இதன் மூலம் யாழ். குடாநாடு முழுவதும் தற்போது படையினர் வசமாகியிருப்பதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.

சுண்டிக்குளத்துக்குள் நேற்றுக் காலை பிரிவேசித்த படையினர் மாலை வரை தொடர்ந்து புலிகளுடன் மேற்கொண்ட மோதலையடுத்தே அப்பகுதி முழுவதையும் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளதாக பிரிகேடியர் கூறினார். ஆனையிறவுக்கு கிழக்காக அமைந்துள்ள சுண்டிக்குளம் பிரதேசத்தை கடற் புலிகள் தமது நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு முக்கியத்துவம் வாய்ந்த கேந்திர நிலையமாக பயன்படுத்தி வந்துள்ளனர்.

சுண்டிக்குளம் முழுவதையும் தமது பூரண கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந் துள்ள படையினர் புலிகளால் கைவிடப் பட்டுச் சென்ற நூறுக்கும் அதிகமான கடற் புலிகளின் படகுகள், 400க்கும் மேற்பட்ட அமுக்க வெடிகள், 40 இற்கும் மேற்பட்ட யுத்த தாங்கிகள், இரண்டு லொறிகள், ஐந்து ட்ரக்டர்கள், ஒரு கனரக வாகனம், 1000 கிலோ வெக்ற் உடைகள், ஜெனரேட்டர் உள்ளிட்ட பல வெடிபொருட்களை அங்கிருந்து மீட்டுள்ளனர். புலிகளிடமிருந்து இதுவரை கைப்பற்றப்பட்டு வந்த இடங்களிலிருந்து இத்தனை கனரக வாகனங்களையும் படகுகளையும் கைப்பற்றியுள்ளமை இதுவே முதல் தடவையெனவும் பிரிகேடியர் சுட்டிக்காட்டினார்.

யாழ். குடாநாட்டில் சுண்டிக்குளம் பிரதேசம் மாத்திரமே இறுதியாக புலிகளின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்தது. இப்பகுதியையும் இராணுவத்தினர் நேற்று மாலை புலிகளிடமிருந்து விடுவித்துள்ளனர். யாழ். குடா நாடு முழுவதும் தற்போது படையினர் வசமாகியுள்ளது. இது இராணுவத்தினர் முன்னெடுத்து வந்த அயராத முயற்சிக்கு கிடைத்த மாபெரும் வெற்றியாகுமென்றும் இராணுவப் பேச்சாளர் தெரிவித்தார்.

55 ஆம் கட்டளைத் தளபதி பிரிகேடியர் பிரசன்ன சில்வா தலைமையிலான படையினரே சுண்டிக்குளம் முழுவதையும் தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளனர். நேற்றுக் காலை சுண்டிக்குளம் பகுதிக்குள் பிரிவேசித்த படையினருக்கும் புலிகளுக்குமிடையில் மாலை வரை கடும் மோதல் இடம்பெற்றதாகவும் அவர் தெரிவித்தார்.

தார்மீக பெறுமானங்களின் அபிவிருத்தி இன்றி நாடு முன்னேற்றமடையாது -ஜனாதிபதி

presidentmahinda.jpgதார்மீக பெறுமானங்களின் அபிவிருத்தியில்லாமல் நாடு முன்னேற்றமடையாது என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அபிவிருத்தி திட்டங்கள் பல மேற்கொள்ளப் பட்டுள்ள போதிலும் தார்மீக துறையின் அபிவிருத்தியற்ற முன்னேற்றத்தினால் எதிர்கால சந்ததியினருக்கு எவ்வித பயனும் கிடைக்கப் போவதில்லை. நாட்டில் அபிவிருத்தியில் ஆன்மிக முன்னேற்றத்திற்கு சமபங்கு உண்டென்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

2600 ஆம் ஆண்டு புத்த ஜயந்தி கொண்டாட்டங்கள் தொடர்பாக திட்டமிடுவதற்கென அலரிமாளிகையில் நடைபெற்ற கூட்டமொன்றில் அவர் இந்த கருத்துகளை வெளியிட்டார். 2011 ஆம் ஆண்டில் இந்த கொண்டாட்டங்கள் நடைபெறவுள்ளன. புத்தஜயந்தி கொண்டாட்டங்களுடன் இணைந்ததாக மகா சங்கத்தின் வழிகாட்டலுடன் நாட்டில் வாழும் பெளத்த மக்களின் ஒத்துழைப்புடன் மேலும் பல நிகழ்ச்சிகளை நடத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இந்தக் கூட்டத்தின்போது 2600 புத்தஜயந்தி கொண்டாட்டங்கள் பற்றி மகா சங்கத்தினர் ஜனாதிபதிக்கு விளக்கிக் கூறினர். புத்தஜயந்தியை குறிக்கும் வகையில் அரசாங்கத்தின் பூர்வாங்க நிகழ்ச்சியொன்று பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் பிரதம மந்திரி ரத்னசிறி விக்கிரமநாயக்க தலைமையில் இன்று நடைபெறவுள்ளது.

புலிகளின் சதித்திட்டங்களுக்கு துணைநிற்கும் கைக்கூலிகள் ரணிலும் ஜே.வி.பி யினருமாம்! – விமல் வீரன்ஸ

vimalveera.jpgபுலிகளின் தலைவர் பிரபாகரன் மேற்கொள்ளும் சதித்திட்டங்களை உள்நாட்டிலும், சர்வதேச மட்டத்திலும் முன்னெடுத்துச் செல்லும் கைக்கூலிகளாக – முகவர்களாக எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவும், ஜே.வி.பியினரும் செயற்பட்டு வருகின்றனர்.  – இவ்வாறு நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ஸ கூறியுள்ளார்.

கொழும்பில் (13) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் கூறியவை வருமாறு :- முன்னர் புலிகளின் தலைவர் பிரபாகரன் உள்நாட்டிலும் சர்வதேச நாடுகளிலும் பாரிய சேதங்களை ஏற்படுத்திவந்தார். இப்போது அவரால் அவ்வாறு செய்ய முடியாது. புலிகள் யுத்த ரீதியாக பலத்த தோல்விகளைச் சந்தித்து வருகின்றனர். அவர்களின் இறுதி மூச்சு மிக விரைவில் அடங்கவுள்ளது. இந்தநிலையில் பிரபாகரனால் எந்தவிதமான தாக்குதல்களையும் மேற்கொள்ள முடியாது.

பிரபாகரன் தற்போது மேற்கொள்ளும் சதித்திட்டங்கள் அனைத்தும் முறியடிக்கப்படுகின்றன. இதனால் அவரின் சதித்திட்டங்களை உள்நாட்டிலும் சர்வதேச மட்டத்திலும் அரங்கேற்றும் கையாட்களாக எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவும் ஜே.வி.பியினரும் செயற்படுகின்றனர்.  தேசப்பற்றாளர்கள் போல் தங்களைக் காட்டிக்கொண்டு தேசத்துரோகச் செயற்பாட்டில் அவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். பிரபாகரனின் சதித்திட்டங்கள் மாத்திரமன்றி அவரின் கையாட்களின் செயற்பாடுகளும் அரசால் தோற்கடிக்கப்படும். அதற்கான சக்திகளை நாம் அரசுக்கு வழங்குவோம். – என்றார்.

வட மாகாண எதிர்காலத் தலைநகரம் – மாங்குளம்

jaffna.jpgவட மாகாணத்தின் எதிர்காலத் தலைநகராக மாங்குளத்தை அபிவிருத்தி செய்வதென்றும் வடக்கு மாகாண சபையின் பிரதம செயலகத்தை மாங்குளத்தில் நிர்மாணிப்பது என்றும் அமைச்சரவை தீர்மானித்திருப்பதாக உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சு தெரிவித்துள்ளது. மாங்குளம் தலைநகராக அபிவிருத்தி செய்யப்படுவது, வட மாகாண பிரதம செயலக வளாகத்தை மாங்குளத்தில் நிர்மாணம் செய்வது ஆகியன பற்றி பாரிய திட்டம் ஒன்றை சமர்ப்பிப்பது தொடர்பாக நிபுணத்துவ சேவைகள் நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பங்களை கோரும் விளம்பரங்களை உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சு அரசாங்க பத்திரிகைகளில் நேற்று செவ்வாய்க்கிழமை வெளியிட்டிருந்தது.

தகுதி படைத்த நிபுணத்துவ சேவை நிறுவனங்களிடமிருந்து வட மாகாண சபையின் சார்பாக விண்ணப்பங்களைக் கோருவதாகவும் அமைச்சு விளம்பரம் மூலம் தெரிவித்துள்ளது. விரும்பும் நிபுணத்துவ சேவைகள் (Consultanly Services) நிறுவனங்கள் தங்கள் விண்ணப்பங்களை பெப்ரவரி 1 ஆம் திகதி நண்பகல் 12 மணிக்கு முன்பாக திருகோணமலை, கன்னியா வீதியில் வரோதய நகரில் அமைந்துள்ள வடக்கு மாகாண சபையின் பிரதம செயலகத்திற்குக் கிடைக்கக் கூடிய வகையில் அனுப்பி வைக்குமாறு உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சின் செயலாளர் எச்.பி.கஷியன் ஹேரத் விளம்பரத்தில் தெரிவித்துள்ளார்.

அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வந்துள்ள மக்களுக்கு அனைத்து அத்தியாவசிய உதவிகளும் வழங்கப்பட்டுள்ளன – றிஸாட் பதியுதீன் தெரிவிப்பு

risard.jpgவிடுவிக்கப்படாத பகுதிகளிலிருந்து அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வந்திருக்கும் மக்களுக்குத் தேவையான அனைத்து அத்தியாவசிய உதவிகளையும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆலோசனைக்கமைய செய்து கொடுப்பதற்கு உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மீள்குடியேற்றம் மற்றும் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் றிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். மீட்கப்படாத பகுதிகளிலிருந்து அரச படையினரின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்திற்கு இதுவரை 1,168 பேர் வந்து சேர்ந்துள்ளனர். இவர்கள் அனைவரும் வவுனியா மெனிக் பாம் மற்றும் நெலுக்குளம் ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள நலன்புரி நிலையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதுடன் இவர்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் மீள் குடியேற்றம் மற்றும் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சு செய்து கொடுத்து வருகின்றது.

அமைச்சின் நிதிமூலம் வவுனியா பிரதேசத்தில் 80 ஏக்கர் நிலப்பரப்பு புனரமைப்புச் செய்யப்பட்டுள்ளதுடன் இடம்பெயர்ந்து வந்துள்ளவர்கள் தங்குவதற்கென தற்காலிக வீடமைப்பு வசதிகளைச் செய்து கொடுப்பதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. தற்போது 150 வீடுகள் அமைப்பதற்கான வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதுடன் 75 வீடுகளின் நிர்மாண வேலைகள் பூர்த்தியடைந்துள்ளன. இதற்கமைய 47 குடும்பங்களைச் சேர்ந்த 240 பேர் தற்சமயம் தற்காலிகமாகக் குடியமர்த்தப்பட்டுள்ளனர். ஏனையோரை மிக விரைவில் குடியமர்த்துவதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மீட்கப்படாத பகுதிகளிலிருந்து வந்துள்ள மக்களுக்கு சமைத்த உணவு, குடிநீர், சுகாதாரம், மின்சாரம், உடைகள், சிறுவர்களுக்கான உணவு வகைகள் மற்றும் சமையலறை உபகரணங்கள் உட்பட அனைத்து வசதிகளும் அரசாங்கத்தினால் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாகவும், நிவாரண நடவடிக்கைகளுக்கென ரூபா 30 மில்லியன் நிதி இதுவரை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சின் செயலாளர் ஏ.சி.எம்.றாசிக் தெரிவித்துள்ளார்.  எதிர்வரும் நாட்களிலும் அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வரும் மக்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் உடனுக்குடன் செய்து கொடுக்க அரசாங்கம் தயாராகவுள்ளதாகவும், மீள் குடியேற்றம் மற்றும் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் றிஷாட் பதியுதீன் மேலும் தெரிவித்துள்ளார்.

புலிகளின் முக்கிய உறுப்பினர்கள் மூவர் கைது

arrest.jpgபுலிகள் இயக்கத்தைச் சேர்ந்த மூவரை பாதுகாப்பு படையினர் நேற்று முன்தினம் கைது செய்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார். முல்லைத்தீவை நோக்கி முன்னேறிவரும் இராணுவத்தின் 58வது படைப் பிரிவினரிடம் முரசுமோட்டை பிரதேசத்தில் வைத்தே படையினரால் இம் மூவரும் கைது செய்யப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.

படையினர் முன்னேறி நடத்திய தாக்குதல்களின் பின்னர் நடத்திய தேடுதலின் போது புலிகளின் நான்கு சடலங்கள், மோட்டார் சைக்கிள் ஒன்று, கனரக ட்ரக் வண்டி ஒன்றையும் மீட்டெடுத்துள்ளனர். இந்த மோதல்கள் நடந்த சில மணி நேரத்திற்கு பின்னர் அங்கிருந்து இரகசியமாக தப்ப முயன்ற மூவரையே படையினர் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட மூவரில் அலக்ஸ் மற்றும் யசோதரன் ஆகிய இருவரும் புலிகள் இயக்கத்தின் முக்கிய உறுப்பினராவர். அலக்ஸ் என்பவர் பொட்டு அம்மானுடன் இணைந்து செயற்பட்டுள்ளதுடன், புலிகளின் புலனாய்வு துறையிலும் இணைந்து செயற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். அத்துடன் யசோதரன் என்பவர் புலிகள் இயக்கத் தலைவர் வேலுபிள்ளை பிரபாகரனின் பாதுகாப்பு பிரிவிலும் இணைந்து செயற்பட்டுள்ளார்.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையம் முற்றுகை

air.jpgசிங்கப்பூரில் வேலை பெற்றுத் தருவதாக கூறி 30 இற்கும் மேற்பட்டோரிடமிருந்து 10 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான பணத்தை வசூலித்து மோசடி செய்த முகவர் நிலையமொன்றை இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தின் அதிகாரிகள் நேற்று முன்தினம் மருதானையில் முற்றுகையிட்டதாக வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தின் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க தெரிவித்தார்.

இதேவேளை வெளிநாட்டு கல்வி ஆலோசகர்களென தம்மை அடையாளப்படுத்திக் கொண்டு மோசடியில் ஈடுபட்டுவந்த மேலும் இருவரையும் அண்மையில் குருணாகலையில் வைத்து கைது செய்ததாகவும் அவர் தெரிவித்தார். சிங்கப்பூரில் வேலை வாய்ப்புப் பெற்றுத் தருவதாகக் கூறி 30 இற்கும் மேற்பட்டோரிடமிருந்து தலா 4 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா வீதம் இவர்கள் வசூலித்திருப்பதாக எமக்கு முறைப்பாடுகள் கிடைத்தன. இதனையடுத்து சம்பவ இடத்தை முற்றுகையிட்ட எமது அதிகாரிகள் அங்கு பணியகத்தினால் அங்கீகரிக்கப்படாத பல துறைளுக்கு வேலை பெற்றுத் தருவதாக கூறி எழுதப்பட்டிருந்த போலி ஆவணங்கள் மற்றும் 60 இற்கும் மேற்பட்ட கடவுச்சீட்டுகள் என்பவற்றை அங்கிருந்து மீட்டிருப்பதாகவும் பணியகத்தின் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க கூறினார்.

42 புலி உறுப்பினர்களின் சடலங்கள் அடக்கம்

வவுனியா ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டிருந்த புலி உறுப்பினர்களின் 42 சடலங்களும் நேற்று (14) அரசாங்க செலவில் புதைக்கப்பட்டன. மேற்படி சடலங்கள் வவுனியா பூந்தோட்டம் மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டதாக வவுனியா பொலிஸார் நேற்று கூறினர். முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி பகுதிகளில் இடம்பெற்ற மோதல்கள் காரணமாக கொல்லப்பட்ட புலி உறுப்பினர்களின் சடலங்கள் ஒரு வாரத்துக்கும் மேலாக வவுனியா ஆஸ்பத்திரிகளில் வைக்கப்பட்டிருந்தன.

இவற்றில் பல சடலங்கள் அழுகியிருந்ததாக அறிவிக்கப்படுகிறது. மேற்படி சடலங்களை ஐ. சி. ஆர். சி. ஊடாக புலிகளிடம் ஒப்படைக்க முடியாத நிலை ஏற்பட்டதால் அவற்றை அரச செலவில் புதைக்குமாறு வவுனியா நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதன்படி நேற்று 26 ஆண்களினதும் 16 பெண்களினதும் சடலங்கள் புதைக்கப்பட்டன.

பொதுமக்கள் வாழ்விடங்களில் தாக்குதலை நிறுத்தவும்

jet-1301.jpgவன்னியில் பொதுமக்கள் வாழும் பகுதிகளில் எறிகணைத் தாக்குதலை நிறுத்துமாறு யாழ. மறை மாவட்ட ஆயர் தோமஸ் சௌந்தரநாயகம் தெரிவித்துள்ளார்

இதுபற்றி அவர் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிற்கு விடுத்துள்ள வேண்டுகோளில் குறிப்பிட்டுள்ளதாவது விமாமனத் தாக்குதல்கள் மற்றும் ஷெல் தாக்குதல்களினால் மக்கள் நாளாந்தும் பலியாவதுடன் பலர் காயமடைந்தும் வருகின்றனர். வன்னியில் பரந்தன் முதல் முல்லைத்தீவு வரையிலான ஏ35 வீதியை அண்டிய பகுதிகள் மற்றும் தருமபுரம் புதுக்குடியிருப்புப் பகுதியில் இடம்பெயர்ந்துள்ள மக்கள் படையினரின் ஷெல் தாக்கதல்களினால் பெரும் பாதிப்புக்குள்ளாகின்றனர்.

இடம்பெயர்ந்துள்ள மக்கள் பாதுகாப்புத் தேடி எங்கு செல்வது என்று தெரியாது தவிக்கின்றனர் நாம் மக்களை தேவாலையங்களில் ஒன்று கூடுமாறு அழைக்கலாம் அங்கு எமது குருவானவர்களும் உள்ளனர் தற்போது உள்ள நிலயில் தேவாலயங்களும் கோவில்களும் அகதிகளுக்கான புகலிடமாக அமையலாம். எனவே பொது மக்களின் பகுதிகளில் ஷெல் மற்றும் விமானத் தாக்குதல்களை அரசாங்கம் நிறுத்தவேண்டும்

இவ்வாறு ஜனாதிபதிக்கு அவர் அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார் அக் கடிதத்தின் பிரதிகள் பிரதமர் ரட்ணசிறி விக்கிமநாயக்கää பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ,  மற்றும வவுனயா மாவட்ட இராணுவத் தளபதி ஜெகத் ஜெயசூரிய, அமெரிக்கத் தூதுவர் பிரித்தானியத் தூதுவர் ஆகியோர்க்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

வலிகாமம் கிழக்கு இடம்பெயர்ந்த மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக டக்ளஸ் நடவடிக்கை

daglas.jpgவலிகாமம் வட பகுதியில் இருந்து இடம்பெயர்ந்த நிலையில் வலிகாமம் கிழக்குப் பகுதியில் வாழ்ந்துவரும் பொதுமக்கள் சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சரும் வட மாகாணத்திற்கான விசேட செயலணியின் தலைவருமான டக்ளஸ் தேவானந்தாவைச் சந்தித்து தங்களது தேவைகள் தொடர்பில் கலந்துரையாடினர். இதன் பிரகாரம் தங்களுக்கு இடம்பெயர்ந்தோருக்கான நிவாரணம் மட்டுமே வழங்கப்பட்டுவருவதாகவும் இது தமக்கு போதாமல் இருப்பதால் இதனை கூட்டித்தரும்படியும் கோரிக்கை விடுத்தனர்.

யாழ்.குடாநாட்டில் வழங்கப்படும் நிவாரணங்கள் மக்களுக்குப் போதுமானதாக இல்லை என்பதால் இவ்விடயம் குறித்து வெகுவிரைவில் மாற்றங்கள் ஏற்படவிருப்பதாகவும் இதற்கான நடவடிக்கைகளைத் தான் மேற்கொண்டுவருவதாகவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். தங்களது கிராமசேவையாளரை மாற்றித்தரும்படி இம்மக்கள் விடுத்த கோரிக்கைக்கு இணக்கம் தெரிவித்துள்ள அமைச்சர், தெல்லிப்பழை கிராம சேவையாளரை இரு தடவைகள் இம்மக்கள் வாழும் பகுதியில் உள்ள நலன்புரி நிலையத்தில் பணியாற்ற நடவடிக்கை எடுக்கும்படி விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு உரிய ஏற்பாடு செய்துதருவதாகவும் தெரிவித்தார்.

தங்களது பதிவுகளை மாற்றித்தரும்படி இவர்கள் விடுத்த கோரிக்கைக்கு இணங்கியுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கோப்பாய் பிரதேச செயலாளருக்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி பணித்ததுடன் அண்மைக்கால வெள்ள அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட இம்மக்களுக்கு உரியமுறையில் நிவாரணங்கள் கிடைக்கப்பெறவில்லை என்ற குற்றச்சாட்டு தொடர்பில் பிரதேச செயலாளரிடமிருந்தும் அப்பகுதி கிராமசேவையாளரிடமிருந்தும் அறிக்கை கோரியிருப்பது குறிப்பிடத்தக்கதாகும். அத்துடன், இம்மக்கள் வாழும் பகுதியில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் அலுவலகமொன்றை அமைக்குமாறு இம்மக்கள் விடுத்த கோரிக்கைக்கு இணக்கம் தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இவ்விடயம் தொடர்பில் விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.  இச்சந்திப்பின்போது கோப்பாய் பிரதேச செயலாளர் உட்பட வலி. வடக்கு மற்றும் கிழக்கு கிராமசேவையாளர்களும் கலந்துகொண்டதாகவும் சமூக சேவைகள் மற்றும் சமூகநலத்துறை அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.