February

February

கட்டுநாயக்க விமான நிலைய தாக்குதல் வழக்கு சி.ஐ.டி. பொறுப்பதிகாரிக்கு அழைப்பாணை

sri-lanka-airport.jpgகட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தாக்குதல் சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணைக்கு சமூகமளிக்காத குற்றப்புலனாய்வுப்பிரிவு விசேட விசாரணைப்பகுதி பொறுப்பதிகாரிக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் அழைப்பாணை பிறப்பித்துள்ளது. இந்த வழக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி டபிள்யூ.ஏ.ரி. ரட்னாயக்க முன்னிலையில் நடைபெற்ற போது இந்த அழைப்பாணையை நீதிபதி பிறப்பித்தார்.

முக்கியமான வழக்கு குற்றப் புலனாய்வுப் பிரிவில் இருந்து எந்த ஒரு அதிகாரியும் நீதிமன்றத்திற்கு வருவதில்லை என நீதிபதியின் கவனத்திற்கு சுட்டிக்காட்டப்பட்டதையடுத்து எதிர்வரும் ஏப்ரல் 25 ஆம் திகதி பொறுப்பதிகாரியை மன்றில் ஆஜராகுமாறு நீதிபதி அழைப்பாணை பிறப்பித்தார்.

2001 ஜூலை 24 ஆம் திகதி கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் மீது விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தியதாக வழக்கில் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன். இரத்தின சிங்கம் புஷ்பகுமரன், விக்டர் அல்பிறட் டொமினி, சுப்பிரமணியம் தவராஜசிங்கம், நாகேந்திரம் நாகலஷ்மன் மற்றும் தனபாலசிங்கம் ஜெயலக்ஷ்மி ஆகியோர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

எதிரிகளில் சுப்பிரமணியம் தவராஜசிங்கம் என்பவர் சிலரால் கடத்திச் செல்லப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளதாக எதிரிகளின் சார்பில் ஆஜரான சட்டத்தரணி நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

இந்த வழக்கில் 422 சாட்சிகள் உள்ளன. அவர்களில் அதிகமானோர்கள் பொலிஸார். கட்டு நாயக்க விமான நிலையத்தாக்குதலில் பதினொரு விமானங்கள் அழிக்கப்பட்டன. இருபத்தைந்து விமானங்கள் சேதமடைந்தன.

அத்துடன் விமானப்படையைச் சேர்ந்தவர்கள் இராணுவத்தைச் சேர்ந்தவர்கள் உட்பட பலர் இச்சம்பவத்தில் கொல்லப்பட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இடதுசாரிகள் மீதுள்ள பெரும்கடமை : நாதன்

Communism_Logoquestion_mark ._._._._._.
தேசம்நெற் கருத்தாளர்களில் ஒருவரான நாதன் இக்கட்டுரையைக் கருத்துக் களம் பகுதியில் பதிவு செய்திருந்தார். இன்றைய காலத்தேவையின் அடிப்படையில் நாதனின் கருத்துக்கள் தொடர்பான விவாதத்திற்குக் களம் கொடுக்க வேண்டிய அவசியமும் இருப்பதால் கருத்துக் களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட கருத்தை பிரதான கட்டுரையாக பிரசுரிக்கிறோம். இக்கட்டுரை ஆசிரியரை ‘நாதன்’ என்ற பெயரிலேயே தேசம்நெற் அறிந்துள்ளது. நாம் அறிந்தவரை இக்கட்டுரை வேறு இணையத் தளங்களில் அல்லது ஊடகங்களில் வெளிவந்ததாகத் தெரியவில்லை. அவ்வாறு பிரசுரமாகி இருந்தால் மீள்பிரசுரத்திற்கு அவர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
._._._._._.

மனித அவலங்கள் தொடர்ந்து கொண்டு இருக்கையில் எதனை தலையங்கமாக வைத்து தொடங்குவது எனத் தெரியிவில்லை. பலகொடுமைகள் நடந்து கொண்டிருக்கின்றன. தற்காலத்தில் இராணுவ நடவடிக்ககையின் காலத்திலும் பின்னரான காலத்திலும் கவனிக்கபட வேண்டிய பல விடயங்கள் இருக்கின்றன.

சிறிலங்கா அரசு…
இன்று மூர்க்கத்தனமாக புலிகளின் கட்டுப் பாட்டுப் பிரதேசம் மீதான தாக்குதல். அரசே அறிவித்திருக்கின்றது சில நூற்றுக்கணக்கான போராளிகள் தான் கட்டுப்பாட்டுப் பகுதியில் இருந்து போராடுவதாக அப்படியாயின் அரசின் இலக்கானது எவ்வகை விலை கொடுத்தாவது இடத்தைக் கைப்பற்றுவதாகும். இதன்காரணமாக மனிதாபிமானம் என்பதற்கே இடமில்லாதவாறு அரச படைகள் செய்ற்படுகின்றன.

அரசிடம் வந்து சரணடைபவர்கள் மீதான துப்பாக்கிச் சூடு
வடிகட்டி கைது செய்யப்படல்
காயப்பட்டவர்களையும் உறவினரையும் பிரித்து வைத்தல்
காயப்பட்டவர்களை கவனிப்பதற்கு மருத்துவர்கள் பற்றாக்குறை
காணாமல் போதல்

குண்டு போட்டுக் கொல்லப்படுபவர்கள் அவர்கள் தங்கியிருந்து பதுங்குமுழிகளே அவர்களின் புதைகுழிகளாக மாறியிருக்கின்ற நிலமை. இதனால் தமது உறவுகளின் முகத்தைக் இறுதியாகக் கூட பார்க்க முடியாத அலவம். என அவலங்கள் தொடர்கின்றன. இவைகள் வெறும் ஊடகச் செய்திகள் அல்ல மாறாக எமது உறவுகளிடம் இருந்து நேரிடையாகப் பெறப்பட்ட கள தகவல்களாகும். பாசீட்டுக்களுக்குள்ளாக உளவியல் நிலையினை சிறிலங்கா ஆட்சியாளர்களிடம் காணப்படுகின்றது.

இன்றையப் பொழுதில் அனைவரும் புலிகள் அழிய வேண்டும் எனக் கொள்கின்றனர். ஆனால் அழியப்படுவது அடிமட்டப் போராளிகளும் மக்களுமாவர். புலிகளின் தலைமையானது ஆயுதங்களையும் தமது குடும்பத்தையும் தம்மையும் பல போராளிகள் புடைசூழ பாதுகாப்பாக வாழ்கின்றனர். இதனை அறியாதவர்களாக அனைவரும் நடந்து கொள்கின்றனர்.

யுத்த நிறுத்தத்தை கொண்டுவரமாட்டேன் என்று கூறுகின்ற பாசீச அரச தலைமை புலிகளின் கட்டுப்பாட்டு பகுதியில் இருந்து வரக்கூடியவர்களும் வெளியே வர முடியாது இருக்கும் மக்களுக்கும் பற்பல காரணங்கள் இருக்கின்றனர். இவர்கள் விரும்பியோ விரும்பாமலே புலிகளின் கட்டுப்பாட்டிற்குள் இருந்து விட்டார்கள். இதனால் அனைவரும் அழிக்கப்படுவதற்கு துணை போக வேண்டுமா? அப்படி அரசிடம் சரணடைந்தால் அவர்களை புனருத்தாரனம் செய்யும் வகையில் வெளிப்படையாக ஒரு நிர்வாக அலகு இருக்கின்றதா? சுதந்திரமானதும் ஜனநாயக விழுமியங்களுக்கும் அமைய கட்டமைக்கப்பட்ட நிர்வாக அலகு இல்லாது வந்து சரணடையுங்கள் எனக் கூறுவதில் எவ்விதமான நேர்மையாக செயல்முறை அங்கு இல்லை. இது ஓரு பாசீசக் கட்டமைப்பு சுதந்திரமான கட்டமைப்பைக் கொண்டிருக்காது. சுதந்திரமான ஜனநாயக விழுமியங்களை மதிக்கின்ற ஒரு அலகை உருவாக்கப் கோருவது அவசியமாகும்.

புலியெதிர்ப்பாளர்கள்…
நேரிடையாகவே அரசுடன் சேர்ந்தியங்கும் டக்கிளஸ், கருணா, பிள்ளையான், சிறிரொலோ எனவும் – புளொட், இபிஆர்எல்எவ நாபா, ஈரோஸ், சங்கரி எனவும் இவர்களின் மூலம் தமிழ் மக்களுக்காக உரிமையை பெற்றுக் கொடுக்க முடியுமா? இன்று புலியெதிர்ப்பாளர்கள் பக்கத்தை எடுத்துக் கொண்டால் கிழக்கின் விடிவெள்ளிகள் தங்களுக்கிடையே ஆப்பு வைத்து யார் யாரை முதலில் போடுவது எனப் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். கருணா தேசிய நீரோட்டத்தில் இணையப் போகின்றாராம். ஏனெனில் அவரை தலைவர் என ஏற்றுக் கொள்ளவில்லையாம். பிள்ளையானோ 13 சட்டதிருத்தத்திற்கு அமைய அதிகாரம் இல்லை எனக்கூறுகின்றார்.

இதில் இவர்களின் மூத்த அண்ணா டக்கிளஸ் வடக்கிலேயே தங்கி மக்களுக்கு சேவை செய்து கொண்டிருக்கின்றார். இதில் சங்கரிக்கு பெரிய இடைஞ்சலாக டக்கிளஸ் இருக்கின்றார். வடக்கினதும் கிழக்கினதும் நிர்வாகிகள் தமிழ் மக்களுக்கு புலிகளே பிரச்சனை என்பதை மறக்காது அரசவிசுவாசமாக நடந்து கொள்கின்றனர். மற்றைய ஜ.த.தே.கூட்டமைப்பினர் சங்கரியை வைத்துக் கொண்டு ஆங்காங்கே தமது குரலை தெரியப்படுத்திக் கொண்டிருக்கின்றனர். இவர்களின் நிலையானது அண்ணன் எப்போ சாவான் திண்ணை எப்போ காலியாகும் என்பதாகும்.

புலம்பெயர் மக்கள்…
புலம்பெயர் நாடுகளின் உள்ள மக்களை திரட்டுவது என்பது இலகுவான விடயம் அல்ல. மக்களைத் திரட்டுவது என்பது அரசியல் கட்சிகளின் உறுப்பினர்களை கூப்பிட்டு தமது ஊர்வலங்களில் அல்லது கூட்டங்களின் பேசவைப்பது என மாத்திரம் என்று தான் விளங்கிக் கொள்கின்றனர். இதன் காரணத்தினால் அரசியல் கட்சி உறுப்பினர்களை தமது கூட்டங்களில் பேசவைப்பதில் திருப்பி அடைகின்றனர்.

மக்களின் ஆதரவிற்கு சிறந்த உதாரணமாக பலஸ்தீனர்களுக்கு ஆதரவாக உலகெங்கிலும் நடைபெறும் போராட்டத்தையே உதாரணமாக கொள்ள முடியும். பலஸ்தீனர்களுக்கு கிடைக்கின்ற ஆதரவிற்கு இணையாக வேண்டாம், ஒரு சிறிய அளவில் தன்னும் அந்தந்த நாட்டு மக்கள் குரல்கொடுக்க ஏன் முன்வரவில்லை என்பதை புலிகளின் ஆதரவாளர்கள் தமக்குத் தாமே கேள்வி கேட்கவேண்டும். ஏன் அவ்வாறு நடைபெறவில்லை என நாம் காரணம் கூறுகின்ற போது அவை புலயெதிர்ப்பாளர்கள் இவ்வாறுதான் கூறுவார்கள் என்ற கருத்தியலுக்குள் கொண்டுபோய் விடும்.

புலிகள் மக்களை அனாதரவாக விட்டுவிட்டு சென்று விட்டார்கள் என புலிகளின் விசுவாசிகள் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை. இன்று புலிகளைப் பொறுத்தவரையில் மக்களுடைய இழப்புக் மூலமாக தமது குறிக்கோளை அடைய முடியும் என தமது ஆதரவாளர்களுக்கு அறிவுறுத்துகின்றனர். அதாவது இழப்புக்கள் மூலமாக சர்வதேச அங்கீகாரம் கிடைக்கும் என நம்புகின்றனர். புலம்பெயர் மக்கள் போராட்டம் மற்றும் தமிழக மக்களிடையே ஏற்றபட்ட எழுச்சி மூலமாக தமக்கு சாதகமான நிலை உருவாகும் என நம்புகின்றனர். மக்களின் இழப்பைக் கொண்டு பணம் சேகரிக்க முடியும்.

புலம்பெயர்ந்த மக்களிடையே இழப்பினால் ஏற்படும் அனுதாப அலையென்பது கசப்பான நினைவுகளை மறப்போம் என்று புலிகளின் ஆதரவாளர்கள் கூறுகின்றனர். ஆனால் தமது போராட்ட முறையில் ஏற்பட்ட தவறுகளுக்கு விமர்சனம் செய்ய இவர்களால் முடிவில்லை. இழப்பினால் பெறப்படும் சூழ்நிலையை தொடர்ந்து வைத்திருப்பதன் மூலம் குறுகிய காலத்தில் தமது தேவையை அடைந்து விடலாம் என்பதே புலிகள் மாறாத யுக்தியாக இருக்கின்றது.

ஆனால் இன்றைய நிலையில் புலிகளுக்கான அங்கீகாரம் கிடைப்பது என்பது முடியாத நிலையாகும். அப்படி அங்கீகாரம் கிடைக்க வேண்டுமெனில் ஏகாதிபத்திய மற்றும் பிராந்திய வல்லரசுகளிடையே எதிர்பாராத பகைமுரண்பாடு ஏற்பட்டால் தவிர வேறு சந்தர்ப்பமே இல்லை.

மக்களை அணிதிரட்டவதானது புலம்பெயர் மக்களையும் மற்றும் புலம்பெயர்ந்த நாடுகளில் உள்ள தொழிலாளர் வர்க்கத்தவருடன் ஒன்றிணைவதாககும். புலம்பெயர் நாடுகளில் உள்ள மக்களை திரட்டுவது என்பது 1984களில் தமிழ் நாட்டு அரசியல்வாதிகளை நம்பி மாத்திரமே அரசியல் செயற்பாடுகள் மேற்கொள்ளப் பட்டன. சில விதிவிலக்கான சந்தர்ப்பங்களைத் தவிர பெரும் கட்சிகளை மையப்படுத்தியே அரசியல் வேலைகள் இடம்பெற்றன. அவ்வாறில்லாது. உழைக்கும் மக்களை அடிஅத்திவாராமாக கொண்டு ஆதரவுத்தளமானது உருவாக்கப்பட வேண்டும்.

சிவாஜிலிங்கம் கூறுவது போல இந்துக்கள் பாதிக்கப்படுகின்றார்கள் என்பதற்காக சிறுபான்மையினரின் உரிமையை ஒடுக்கும் பா.ஜ.க என்ற இந்துத்துவவாத பாசீசக் கட்சியை நோக்கி செல்ல முடியாது. மற்றையது 22 நாடாளுமன்ற உறுப்பினர்களின் நிலையாது சிவாஜிலிங்கத்தின் பேட்டியை அவதானித்த பின்னர் அவர்களிடையே ஒற்றுமையான கருத்து இல்லை என்பதை அறிய முடிகின்றது. இவர்கள் ஒன்றாகச் செயற்படவில்லை என்பதை சுட்டிக் காட்டுகின்றார். சிவாஜிலிங்கத்தின் கருத்தென்பது இன்றும் சுயாதீனமாக இயங்கவல்ல கருத்துக்கள் அவரிடம் இல்லை. தற்காலச் சூழலை மையமாக் கொண்டு ஒரு போராட்டத்தை செயற்படுத்த முடியாத நிலையைத் தான் சிவாஜிலிங்கத்தின் பேட்டியின் மூலம் அறிய முடிகின்றது. இன்றைக்கு மக்கள் புலி என்ற எல்லைக்குள் மாத்திரம் நின்று சிந்திக்கின்றார்களோ அவ்வாறே த.தே.கூட்டமைப்பினர் கருத்து ரீதியாக வளராது மலடாகிப் போய்யுள்ளனர்.

தீக்குளிப்பது முதலான அரசியல் நடவடிக்கைகள் மூலம் புலம்பெயர்நாடுகளில் உள்ள தமிழ் மக்களை புலிப்பாசீசம் தமக்கு புத்துயிர்ப்புக் கொடுப்பதிலேயே கவனத்தைச் செலுத்துகின்றனர். ஆழமான அரசியல் உள்ளடக்கம் இல்லாத போராட்ட வடிவங்களும் பணம் திரட்டுவதை மையமாகக் கொண்ட கோரிக்கைகளையுமே புலிகள் திரைமறைவில் செயற்படுகின்றனர்.

இடதுசாரிகள் மீதுள்ள பெரும்கடமை தான் என்ன?
புலிகளின் ஆதரவு தொலைக்காட்சிகள் தற்கொலையை தூண்டுவதிலும் இனவாதத்தை விதைப்பதிலும் பணம் பிடுங்குவதிலும் கண்ணும் கருத்துமாக இருக்கின்றனர். இவற்றை தடுப்பது என்பது மக்களுக்காக கோரிக்கையை முன்வைத்த போராட்டங்களை இடதுசாரிகள் இணைந்து போராட்டம் நடத்தவதன் மூலமே ஒரு காத்திரமாக தாக்கத்தை கொடுக்க முடியாது. இன்று இடதுசாரி அரசியல் பேசுபவர்கள் பல பிரிவுகளாகவும் உதிரிகளாகவும் பிரிந்திருக்கின்றனர். இவர்கள் வெறும் விமர்சனம் செய்து கொண்டிருப்பதால் இன்றும் இன்றும் பாசீசம் தொடர்ச்சியாக தனது வேரை ஆழ ஊன்றிக் கொள்ளச் சந்தர்ப்பம் கொடுத்துவிட முடியாது. இடதுசாரிகள் நிலவரத்தை ஆய்வு செய்து அதற்கு தகுத்தாற் போன்றதான அரசியல் செயல் வடிவங்களை கொடுக்க வேண்டும். ஏனெனில் இனப்பிரச்சனையில் ஆரம்பகாலத்தில் விட்ட தவறுபோல இந்தக்க காலத்திலும் விடக் கூடாது.

பரந்துபட்ட ஐக்கிய முன்னணி என்பது பல தளங்களை மையப்படுத்தியதாக இருக்க வேண்டும். எமக்கான கோரிக்கைகள் உடனடித் தேவை எனவும் நீண்டகாலத் தேவை என திட்டத்தில் கொண்டிருக்க வேண்டும். ஏனெனில் நாம் எமது மக்களுக்காக தேவையை எந்தவிதமான பாசீச சக்திகளை ஆதரிப்பதன் மூலம் பெற்றுக் கொள்ள முடியாது என்பதே உண்மையானதாகும். பாசீச எதிர்ப்பு என்ற அடித்தளத்தில் இருந்து உழைக்கும் மக்களுக்கான தேவை என்பதை நோக்கி விரிவடைந்து செல்ல வேண்டும்.

எவ்வாறு எதிர்காலத்தை வழிநடத்தப் போகின்றோம் என்பதைப் பொறுத்தே இலங்கையில் உழைக்கும் மக்களுக்கான விடிவைக் கொடுக்கும் போராட்டத்தை மாத்திரம் அல்ல. அனைத்து இனமக்களின் சுயநிர்ணயஉரிமையை பெற்றக் கொள்ளக் கூடிய ஒரு போராட்ட கட்டமைப்பை தொடர்ச்சியாக கொண்டு செல்லமுடியும். அதாவது புலிகளுடனோ அல்லது புலியெதிர்ப்பு அணியினரின் துரோத்தனத்தினால் தமிழ் மக்களுக்காக போராட்டம் முற்றுப் புள்ளபெற்றதாக இருகக்கூடாது. சிறிலங்கா பாசீச அரசோ அல்லது ஏகாதிப்பத்தியங்களோ எமது மக்களுக்கான நியாயமான தீர்வை முன்வைக்கப் போவதில்லை. அரசியல் ரீதியாக வளர்ச்சியடையாது மலடாகிப் போன ஒரு சமூகத்தை போராட்ட ரீதியாக தொடர்ந்தும் வளர்த்தெடுப்பது என்பது பரந்து பட்ட ஒரு அரசியல் செயற்பாட்டினால் தான் சாத்தியமாகும்.

வன்னியில் பொதுமக்கள் இழப்பு தொடர்ந்து அதிகரிப்பு

artilary13.jpgமுல்லைத்தீவு தேவிபுரம் மற்றும் வள்ளிபுனம் பகுதிகளில் நேற்று முன்தினம் வியாழக் கிழமை இடம்பெற்ற கடும் ஷெல் மற்றும் பீரங்கித் தாக்குதல்களினால் 132 பொதுமக்கள் கொல்லப்பட்டும் 358 பேர் காயமடைந்துமுள்ளனர்.  வியாழக்கிழமை அதிகாலை முதல் மாலை வரை தொடர்ச்சியாக நடத்தப்பட்ட இந்த தாக்குதல் குறித்து “புதினம்’ மற்றும் “தமிழ்நெற்’ இணையத்தளங்கள் கூறுகையில்;

தேவிபுரம் மற்றும் வள்ளிபுனம் பகுதிகளில் ஷெல், பீரங்கி மற்றும் பல்குழல் ரொக்கெட் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. நாள் முழுவதும் ஆறாயிரம் ஷெல்கள் வரை வீழ்ந்து வெடித்ததில் 132 பொதுமக்கள் கொல்லப்பட்டும் 358 பேர் காயமடைந்துமுள்ளனர்.

காயமடைந்தவர்களில் 91 பேர் மாத்தள ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதில் பத்துப்பேர் சிகிச்சை வழங்கப்பட்டுக்கொண்டிருக்கையில் உயிரிழந்துள்ளனர்.

காயமடைந்தவர்களில் பலரது நிலைமை மிகவும் ஆபத்தாயிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“இடம் பெயர்ந்தோர் 3 வருடங்கள் தடுத்து வைக்கப்படுவர் என்ற செய்தி உண்மை அல்ல’

risard.jpgவன்னியிலி ருந்து இடம்பெயர்ந்து அரச கட்டுப்பாட்டுப் பிரதேசங்களுக்கு வந்த பொது மக்கள் 3 வருடங்களுக்கு நலன்புரி முகாம்களிலேயே தடுத்து வைக்கப்படுவர் என்ற செய்திகளில் எந்த உண்மையும் கிடையாதென மறுத்திருக்கும் மீள்குடியேற்ற மற்றும் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன், வன்னிப் பிரதேசத்தில் சிங்கள, முஸ்லிம் மக்களை குடியேற்றும் நோக்கமெதுவும் அரசாங்கத்துக்குக் கிடையாதென்றும் சுட்டிக்காட்டினார்.

அத்துடன், வன்னிப் பகுதியிலிருந்து நேற்று (காலை) வரை மொத்தமாக 34,430 பொதுமக்கள் அரச கட்டுப்பாட்டு பிரதேசத்தை வந்தடைந்திருப்பதாகவும் அமைச்சர் இதன்போது கூறினார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் பேசும் போதே அமைச்சர் பதியுதீன் இந்த கருத்துகளை வெளியிட்டார்.

அவர் இங்கு மேலும் பேசுகையில்:

“”வன்னியிலிருந்து அரச கட்டுப்பாட்டுப் பிரதேசங்களுக்கு வரும் பொது மக்கள் 4 கட்டங்களாக உள்வாங்கப்படுகின்றனர். வரும் மக்களுக்கு படையினரால் முதலில் சத்துணவுகள் வழங்கப்பட்டு பின்னர் ஏனைய வசதிகளும் ஏற்படுத்திக் கொடுக்கப்படுகின்றன. இன்று (நேற்று) வரை 34,430 பொதுமக்கள் அரச கட்டுப்பாட்டு பகுதிக்கு வந்துள்ளனர். இன்னும் சுமார் 65 ஆயிரம் மக்களே அரச கட்டுப்பாடற்ற பகுதியில் எஞ்சியிருக்கின்றனர்.

இடம்பெயர்ந்து வரும் மக்களுக்கென அரை நிரந்தர வீடுகள் வழங்கப்படவுள்ளன. இதற்கமைய 10 ஆயிரம் வீடுகள் அமைக்கும் பணிகள் ஆரம்பமாகியுள்ளன.

அத்துடன், வவுனியாவில் ராமநாதன், கதிர்காமர், ஆனந்தகுமாரசுவாமி, அருணாசலம் ஆகிய பெயர்களில் 4 நலன்புரி கிராமங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் பாடசாலை, வங்கி, சுகாதாரம் என சகல வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

இதேநேரம், ஜனாதிபதியின் ஆலோசனைக்கமைய இப்போதே மீள்குடியேற்ற நடவடிக்கைகளை ஆரம்பித்து விட்டோம். மன்னார்சிலாபத்துறை பிரதேசங்களுக்கு மின்சார விநியோகம் வழங்க ஆரம்பிக்கப் பட்டுவிட்டன. பூநகரிசங்குப்பிட்டி பாலத்தின் புனரமைப்புகள் ஆரம்பமாகிவிட்டன. யாழ்ப்பாணம்மன்னார் “”ஏ32′ வீதியை கூடிய விரைவில் செப்பனிடும் பொருட்டு 12 ஒப்பந்தகாரர்களிடம் அந்தப் பணிகள் ஒப்படைக்கப்பட்டிருக்கின்றன. மாங்குளம் பகுதிக்கும் அடுத்த வாரமளவில் மின்சாரம் வழங்க அரசாங்கம் தயாராக இருக்கிறது.

இடம்பெயர்ந்து வந்தவர்களை கூடிய விரைவில் அவர்களது சொந்த இடங்களில் மீள்குடியேற்றுவதே அரசாங்கத்தின் நோக்கம். அதைவிடுத்து நலன்புரி முகாம்களிலேயே மக்கள் 3 வருடங்களுக்கு தடுத்து வைக்கப்பட போவதாக வெளிவரும் செய்திகளில் எந்த உண்மையும் கிடையாது.

அதுமட்டுமல்லாது, வன்னியில் சிங்கள, முஸ்லிம் மக்களை அரசாங்கம் குடியேற்றப் போவதாக சிலர் இப்போதே பிரசாரம் தொடங்கிவிட்டனர். ஆனால் வன்னியில் சிங்கள, முஸ்லிம் மக்களை குடியேற்றும் நோக்கம் அரசாங்கத்துக்கு இல்லை. அதற்கான அவசியமும் எமக்கில்லை.

இதேநேரம், இடம்பெயர்ந்து வந்த மக்களுடன் 8, 9 புலி உறுப்பினர்களும் வந்துள்ளனர். சிலர் அவர்களே அதை ஒப்புக் கொண்டனர். அவர்கள் திருந்தி மக்களுடன் வாழ விருப்பம் தெரிவித்துள்ள போதிலும் அவர்களை மக்களுடன் இணைத்து வைத்திருக்க முடியாது.

எனவே, அவர்களை நீதி அமைச்சின் பொறுப்பில் ஒப்படைத்து புனர்வாழ்வளித்து, அத்துடன் தொழிற் பயிற்சிகளையும் வழங்கி, வெளிநாடுகளில் வேலை வாய்ப்புகளை வழங்க திட்டமிடப் பட்டுள்ளன’ என்றார்.

ஐ.நா. அமைதி காக்கும் குழுவை அனுமதிக்க பான் கீ மூன் இலங்கையை வலியுறுத்த வேண்டியவேளை வந்துவிட்டது

robert-evans.jpgஇலங் கையில் பொது மக்கள் அழிவைத் தவிர்ப்பதற்கு ஐ.நா.அமைதிகாக்கும் படையை அனுப்புமாறு கோருவதற்கான வேளை செயலாளர் நாயகம் பான் கீ மூனுக்கு வந்துள்ளதாக தெற்காசியாவுடனான உறவுகளுக்கான ஐரோப்பிய பாராளுமன்றத் தூதுக் குழுவினர் தலைவர் ரொபேர்ட் இவான்ஸ் வலியுறுத்தியுள்ளார்.
இலங்கையில் தமிழ்மக்களுக்கு மனிதாபிமான உதவிகள் வழங்கப்படவேண்டியது அவசியம் என்ற தலைப்பில் ரொபேர்ட் இவான்ஸ் ஐ.நா.செயலாளர் நாயகத்துக்கு அனுப்பியுள்ள கடிதம் நேற்று வெள்ளிக்கிழமை லண்டன் ரைம்ஸ் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டிருக்கிறது.

அதில் ரொபேர்ட் இவான்ஸ் தெரிவித்திருப்பதாவது:

ஐயா! இலங்கையில் இரு தரப்பினராலும் நிபந்தனையற்ற யுத்தநிறுத்தமொன்று உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டுமென்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன்.

எவ்வாறாயினும் பொதுமக்கள் குருதிப்பெருக்கைத் தவிர்ப்பதற்கு நாட்டுக்குள் ஐ.நா. அமைதிகாக்கும் குழுவை அனுமதிக்குமாறு ஐ.நா.செயலாளர் நாயகம் பான் கீ மூன் வலியுறுத்துவதற்கான வேளைவந்துள்ளதாக நான் நம்புகிறேன்.

இலங்கையின் வடக்குப்பகுதியில் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டிலுள்ள பகுதிகளிலிருந்து மருத்துவர்கள், மருத்துவ ஊழியர்களை வெளியேறுமாறு பணிக்கப்பட்டிருப்பதாக நாட்டிலிருந்து வெளியாகும் அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

தனது பக்கத்திற்கு வருமாறு இலங்கை அரசு தமிழ் பொதுமக்களை வலியுறுத்தியுள்ளது. ஆனால், அவ்வாறு வருவதுதொடர்பான இயற்கையான தயக்கமும் அச்சமும் உள்ளன. இதற்கு சமாந்தரமாக தனது கட்டுப்பாட்டுப் பகுதியிலிருக்கும் மக்கள் தப்பிச்செல்ல முயற்சித்தால் புலிகள் அவர்களை சுட்டுவிடுவார்கள் என்பது தொடர்பான செய்திகளும் உள்ளன.

தமிழ் மக்கள் அதிகளவுக்கு இழப்புகளையும் அழிவுகளையும் எதிர்கொண்டிருப்பதைக் காணமுடிகிறது.இலங்கை படையினர் மற்றும் அவர்களின் முகாம்கள் தொடர்பாக அவர்கள் அச்சமடைந்துள்ளனர். அவர்களின் வித்தியாசமான மொழி குறித்துக் குறிப்பிடத்தேவையில்லை. சர்வதேச சமூகம் உடனடியாக செயற்படாவிடின் சுமார் 2 1/2 இலட்சம் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் பேரனர்த்தத்தை எதிர்கொள்ள நேரிடும்.

மேலதிகமாக ஐ.நா.வும் சர்வதேச சமூகமும் இந்த மக்களுக்கு மனிதாபிமான உதவி சென்றடைவதற்கு இலங்கை அரசு அனுமதிக்க வேண்டுமென வலியுறுத்துமாறு நான் அழைப்பு விடுகின்றேன். அத்துடன் சர்வதேச பத்திரிகையாளர்கள், ஊடகத்துறையினர் செல்வதற்கு முழு அளவில் அனுமதி வழங்கவேண்டும். காலம் கைநழுவிச் சென்று கொண்டிருக்கிறது. முன்னுரிமை கொடுத்து இந்த உதவியை மேற்கொள்ள வேண்டும்.

1600 பேர் வருகை.

mullai-ahathi.jpgபுலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்திலிருந்து இன்று அதிகாலை 1657 சிவிலியன்கள் அரச கட்டுப்பாட்டு பிரதேசத்துக்கு வருகை தந்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

இதில் 1208 பேர் விஸ்வமடு பகுதியில்  படையினரிடம் தஞ்சம் கோரியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிவிலியன்கள் பஸ் மீது கைக்குண்டுத் தாக்குதல்: ஒருவர் பலி, 12 பேர் காயம்

udaya_nanayakkara_.jpgதமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியிலிருநது இராணுவத்தினரின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களுக்கு மக்களை ஏற்றி வந்த பஸ் மீது விடுதலைப் புலிகள் நடத்திய கைக்குண்டுத் தாக்குதல் துப்பாக்கிப் பிரயோகம் காரணமாக ஒரு சிவிலியன் கொல்லப்பட்டதுடன் 13 பேர் காயமடைந்தனர். இந்தச் சம்பவம் இன்று  அதிகாலையில் இடம் பெற்றதாக இராணுவப் பேச்சாளர் உதய நாணயக்கார தெரிவித்தார்.

கைக்குண்டுத் தாக்குதலில் வயதான ஐந்து ஆண்கள், இரு சிறுவர்கள், வயதான ஐந்து பெண்கள், இரு பெண்கள் ஆகியோர் அடங்குவர். இந்தச் சம்பவம் புளியங்குளம்-வவுனியா வீதியில் இடம்பெற்றுள்ளது. காயமடைந்த அனைவரும் இராணுவ பஸ் வண்டிகள் மூலம் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தரப்பு தெரிவித்துள்ளது. கொல்லப்பட்டவரின் சடலமும் வவுனியா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவிலிருந்து வருகின்றவர்களுக்கு தற்காலிக உறுதியான வீடுகள்!

srilanka_displaced.jpgமுல்லைத் தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் இருந்து அரச கட்டுப்பாட்டுப் பிரதேசத்துக்கு வருகின்றவர்களுக்கென தற்காலிக உறுதியான வீடுகளை நிர்மாணிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.

மீள் குடியேற்றம் மற்றும் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் ரிஷார்ட் பதியுதீன் இதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை சமர்பித்திருந்தார். இத்திட்டத்தின் கீழ் வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்களில் ஐந்து நலன்புரி கிராமங்கள் அமைக்கப்பட்டு அவற்றில் 8ஆயிரம்  வீடுகள் நிர்மாணிக்கப்படவுள்ளன.

வடமேல், மத்திய மாகாண சபைகளுக்கு இன்று தேர்தல் : 106 உறுப்பினரை தெரிவுசெய்ய 34,08,182 பேர் வாக்களிக்கத் தகுதி – மொஹமட் அமீன்

sri-lanka-election-01.jpgமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் இன்று நடைபெறவுள்ள மாகாணசபைகளுக்கான தேர்தலில் 5 மாவட்டங்களிலிருந்தும் 106 உறுப்பினர்களை தெரிவுசெய்வதற்காக 34 இலட்சத்து 8,182 பேர் வாக்களிக்கத் தகுதிபெற்றுள்ளனர். 1209 வாக்களிப்பு நிலையங்களில் இவர்கள் வாக்களிக்கவுள்ளனர்.

இன்று காலை 7.00 மணிக்கு ஆரம்பித்திருக்கும் இரு மாகாண சபைகளுக்குமான தேர்தல்; ஐந்து மாவட்டங்களிலுள்ள 40 தொகுதிகளில் 2579 வாக்குச் சாவடிகளில் நடைபெறுகிறது

மத்திய மாகாணம்

மத்திய மாகாணத்தின் கீழ் உள்ள மாவட்டங்களான கண்டி, மாத்தளை மற்றும் நுவரெலியா ஆகியவற்றில் 56 உறுப்பினர்களை தெரிவுசெய்வதற்கு 17,46,449 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். 1370 வாக்களிப்பு நிலையங்களில் இவர்கள் வாக்களிக்கவிருக்கின்றனர்.

அதாவது, கண்டி மாவட்டத்தில் 30 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக 9,55,108 வாக்காளர்களும், நுவரெலியாவில் 16 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கு 4,52,395 வாக்காளர்களும் மாத்தளையில் 10 உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கு 3,38,946 வாக்காளரும் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

கண்டியில் 10 அரசியல் கட்சிகள் மற்றும் 8 சுயேச்சைக் குழுக்கள் சார்பாக 594 வேட்பாளர்களும், நுவரெலியாவில் 14 அரசியல் கட்சிகள் மற்றும் 10 சுயேச்சைக் குழுக்களுமாக மொத்தமாக 456 வேட்பாளர்களும் மாத்தளை மாவட்டத்தில் 12 அரசியல் கட்சிகள் மற்றும் 8 சுயேச்சைக் குழுக்கள் சார்பில் 260 வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர். மத்திய மாகாணத்தில் 3 மாவட்டங்களிலிருந்தும் 14 அரசியல் கட்சிகளையும்,26 சுயேச்சைக் குழுக்களையும் சேர்ந்த 1,310 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

இம்மூன்று மாவட்டங்களிலுமிருந்து வாக்காளரின் வாக்குகள் மூலம் 56 உறுப்பினர்களும் 2 போனஸ் உறுப்பினர்களுமாக மொத்தமாக 58 உறுப்பினர்கள் மாகாண சபைக்குள் தெரிவு செய்யப்படவுள்ளனர். 

இலங்கையில் மத்திய மாகாணமும், மேல் மாகாணமும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவான மாகாணங்கள் என்பது பொதுவான கருத்து. மத்திய மாகாண சபைக்கான தேர்தலில் இம்முறை பொதுசன ஐக்கிய முன்னணியினரின் தேர்தல் பிரசாரங்கள் மிகவும் உச்சநிலையிலிருந்ததை காணக்கூடியதாக இருந்தது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ கூட கூடிய கரிசனை காட்டியதாக அவதானிகள் தெரிவிக்கின்றனர். பொதுவாக இத்தேர்தலில் வன்னியுத்தம் முதன்மைப்படுத்தப்பட்டமை காரணமாக பொதுசன ஐக்கிய முன்னணியினர் வெற்றியீட்டலாம் என தற்போதைய நிலையின் பிரகாரம் எதிர்பார்க்கப்படுகின்றது. மத்திய மாகாணம் முதன்மை வேட்பாளர்களாக ஐக்கிய தேசியக் கட்சியின் எஸ்.பி. திசாநாயக்க போட்டியிடுகின்றார். இத்தேர்தலில் எஸ்.பி. திசாநாயக்க அதிக விருப்பு வாக்குகளைப் பெறுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது. இம்மாகாணத்தில் பொதுசன ஐக்கிய முன்னணி முதலமைச்சர் வேட்பாளராக சரத் ஏக்கநாயக்க போட்டியிடுகின்றார். இவர் கடந்த மாகாண சபையின் முதலமைச்சராக இருந்தவர்.

வடமேல் மாகாணம்

sri-lanka-election.jpgவடமேல் மாகாணத்தில் குருநாகல் மற்றும் புத்தளம் மாவட்டங்களில் இருந்து 50 பேர் தேர்ந்தெடுக்கப்படவுள்ள நிலையில் 16,61,733 பேர் வாக்களிக்கத் தகுதிபெற்றுள்ளனர்.

அதாவது, குருநாகல் மாவட்டத்திலிருந்து 34 பேரும் புத்தளம் மாவட்டத்திலிருந்து 16 பேரும் தேர்ந்தெடுக்கப்படவுள்ள அதேநேரம், போனஸாக 2 பேரும் தேர்ந்தெடுக்கப்படவுள்ளதால் 52 பேர் மாகாண சபைக்கு செல்லவுள்ளனர். வடமேல் மாகாணத்தில் 12 அரசியல் கட்சிகளையும்ää 17 சுயேச்சைக் குழுக்களையும் சேர்ந்த 937 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

வடமேல் மாகாணத்தில் ஜே.வி.பி.யின் சார்பில் முதலமைச்சர் வேட்பாளராக நிமல் ஹேரத்தும், ஐக்கிய தேசியக் கட்சியின் முதலமைச்சர் வேட்பாளராக சமல்செனரத் அவர்களும், பொதுசன ஐக்கிய முன்னணியின் முதலமைச்சர் வேட்பாளராக அத்துல சரத் விஜேசிங்க அவர்களும் போட்டியிடுகின்றனர்.

தேர்தல் வாக்களிப்பு ஆரம்பம்.

sri-lanka-election-02.jpgஇன்று காலை 7.00மணிக்கு தேர்தல் வாக்களிப்பு ஆரம்பமாகிவிட்டது. ஐந்து தேர்தல் மாவட்டங்களிலும் தேசம்நெற் செய்தி முகவர்களுடன் தொடர்பு கொண்டு கதைத்த நேரத்தில் இதுவரை (காலை 8.00மணி) தேர்தலில் வாக்களிப்பு வேகம் மிகவும் மந்தகரமாக இருப்பதாகவே தெரிய வருகின்றது. இவ்விரு மாகாணங்களிலும் முன்னைய தேர்தல்களுடன் ஒப்பிட்டு நோக்கும்போது இந்த மாகாண சபைத் தேர்தலை வாக்காளர்களின் ஆர்வம் மிகவும் குறைவாகவே காணப்பட்டிருந்தது. இரு கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்கள் சுழல் பிரசார நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்த போதிலும்கூட, மக்களின் ஆர்வம் அதிகரிக்கப்படவில்லை என்பதாக குறிப்பிட்டனர். பொதுவாக இரு மாகாணங்களிலும் வாக்களிப்பு விகிதம் குறைவடையலாம் என சில சிரேஸ்ட அரசியல் அவதானிகள் கருத்துக்களைத் தெரிவித்திருந்தனர்.

இது குறித்து தேசம்நெற் ஐந்து மாவட்டங்களைச் சேர்ந்த வாக்காளர்களுடன் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்ட நேரத்தில், தேர்தலுக்காக நாங்கள் பகைத்துக் கொள்ளவோ, பிரச்சினைகளை உருவாக்கிக் கொள்ளவோ தேவையில்லை. வாக்களிப்பு நேரத்தில் போய் வாக்களித்தால் போதும் என்ற அடிப்படையிலேயே கருத்துக்களைத் தெரிவித்தனர். எவ்வாறாயினும், 50சதவீதத்துக்கும் மேற்பட்ட வாக்குகள் பதிவாக்கப்படுமென எதிர்பார்க்க முடிகின்றது.

கடந்த கால தேர்தல்களுடன் ஒப்புநோக்கும்போது தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் தேர்தலில் வாக்காளர்களின் நடவடிக்கைகள் ஓர் உயர்தன்மையைக் காட்டுகின்றது. குறிப்பாக இனிவரும் காலங்களில் இதேபோன்ற வாக்காளர்களின் நிலைமைப் பேணப்படுமாயின் மேலைத்தேய நாடுகளில் காணப்படக்கூடிய தேர்தல்களை ஒத்தவகையில் இலங்கை தேர்தல் நிலைகளும் மாற்றமடையலாம் எனக் கருத இடமுண்டு.

இலங்கைத் தேர்தல் வரலாற்றில் ஒரு கரைபடிந்த தேர்தல் வரலாற்றை ஏற்படுத்தியது 1999ஆம் ஆண்டு வடமேல் மாகாணசபை தேர்தலாகும். வடமேல் மாகாண சபையைச் சேர்ந்த குருணாகல், புத்தளம் போன்ற மாவட்டங்களிலும் போல இத்தடவை வாக்காளர்களின் போக்கு மிகவும் நிதானமாகவே உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதுவரை இரு மாகாணங்களிலும் பாரியளவிலான தேர்தல் வன்முறைகள் பதிவாகியிருக்கவில்லை என்பது கெபே, பெபரல் மற்றும் பொலிஸ் தலைமையக அறிக்கைகளின்படி தெரியவருகின்றது. நேற்று வெள்ளிக்கிழமை வரை 200க்கும் குறைவான வன்முறை சம்வபங்களே இவ்வமைப்புகளின் கீழ் பதிவாகியிருந்தபோதிலும்கூட, இவற்றுள் பெரும்பாலானவை சிறு சிறு சம்பவங்களே.

129 வன்முறைச் சம்பவங்கள் குறித்து பொலிஸில் புகார்

வடமேல் மற்றும் மத்திய மாகாண சபைத் தேர்தலில் தேர்தல் சட்டங்களை மீறியது தொடர்பாக 129 சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வேட்பு மனுத்தாக்கல் செய்வதற்கான திகதி அறிவிக்கப்பட்டது முதல் நேற்றுமுன்தினம் புதன்கிழமை வரையிலான காலப்பகுதியிலேயே இந்த முறைப்பாடுகள் கிடைத்திருப்பதாக சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ஜயந்த கமகே தெரிவித்துள்ளார்.

இதேவேளை, வடமேல் மாகாணத்திலுள்ள ஹோட்டல்கள் முதல் தங்குமிடங்கள் என 34 இடங்களை பொலிஸார் தேடுதலுக்கு உட்படுத்தியதாகவும் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் மேலும் தெரிவித்துள்ளார்.

தேர்தல் சாவடிகளில் குழப்பம் விளைவித்தால் வாக்குகள் ரத்து; முடிவுகளும் வெளிவராது – ஆணையாளர் எச்சரிக்கை

election-commissioner.jpgவாக்குச் சாவடிகளில் குழப்பங்கள், கலவரங்கள் செய்யப்படுமாயின் குறிப்பிட்ட வாக்குச் சாவடியின் வாக்குகள் ரத்துச் செய்யப்படுவதோடு அந்த மாகாணத்தின் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படமாட்டாது என தேர்தல் ஆணையாளர் தயானந்த திஸாநாயக்க தெரிவித்தார். எக்காரணம் கொண்டும் வாக்குச் சாவடிகளில் கலவரங்கள், குழப்பங்கள் நடைபெறுவதற்கு இடமளிக்க வேண்டாம் என அனைத்து கட்சிகள், சுயேட்சைக் குழுக்களிடமும் வேண்டுகோள் விடுப்பதாகவும் ஆணையாளர் தயானந்த திஸாநாயக்க தெரிவித்தார். ராஜகிரியவில் உள்ள தேர்தல் திணைக்களத்தில்  சில தினங்களுக்கு முன் நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டிலேயே தயானந்த திஸாநாயக்க இதனைத் தெரிவித்தார்.

தேர்தல் முகவர்கள்

வாக்களிப்பு நிலையத்தில் கட்சிகளால் நியமிக்கப்படும் கட்சி முகவர்கள் தேர்தலன்று காலை ஆறு மணிக்கே வாக்குச் சாவடிகளுக்கு வரவேண்டும் என்று தேர்தல் ஆணையாளர் தயானந்த திஸாநாயக்க முன்கூட்டியே அறிவித்தல் கொடுத்திருந்தார். வாக்குப் பெட்டி, வாக்குச் சீட்டு புத்தகங்கள் அனைத்தும் பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் வாக்குகள் எண்ணப்படும் நிலையம் வரை கட்சியின் பிரதிநிதிகள் செல்வதற்கு அனுமதி வழங்கப்படும். வாக்களிப்பு முடிவடைந்த பின்னர் வாக்குப் பெட்டிகள் விசேட ஸ்டிக்கர் ஒன்றின் மூலம் சீல் வைக்கப்படும். தேர்தலில் போட்டியிடும் கட்சிகளும் தமது நம்பகத் தன்மையை உறுதிப்படுத்துவதற்காக தமது ஸ்டிக்கர் ஒன்றையும் ஒட்டலாம்.

வாக்குகள் எண்ணும் நிலையம் வரை செல்லும் கட்சிகளின், சுயேட்சைக் குழுவின் பிரதிநிதி வாக்குகள் எண்ண ஆரம்பிக்கும் வரை தங்கியிருக்கலாம். வாக்குகள் எண்ணும் நிலையத்திற்காக கட்சிகளால், சுயேச்சைக் குழுக்களால் நியமிக்கப்படும் பிரதிநிதி வந்ததன் பின்னர் மற்றவர் அங்கிருந்து செல்ல வேண்டும். வாக்குகள் எண்ணும் நிலையத்திலுள்ள கட்சிகளின், சுயேச்சைக் குழுக்களின் பிரதிநிதிகளிடம் உத்தியோகபூர்வ தேர்தல் முடிவுகளின் பிரதி ஒன்றும் அவர்களது கையெழுத்தைப் பெற்று வழங்கப்படும்.

வாக்குச் சாவடிகளில் கட்சிகளால் சுயேச்சைக் குழுக்களால் நியமிக்கப்படும் பிரதிநிதிகள் தமது பொறுப்புகளை உணர்ந்து செயற்பட வேண்டும். இதற்கென விசேட பயிற்சிகளை பெறுமாறு அறிவுறுத்தப்பட்ட போதும் ஜே. வி. பி. மட்டுமே பெப்ரல் அமைப்பின் உதவியுடன் பயிற்சிகளை பெற்றதாகவும் அறியமுடிகின்றது.

1999 ஆம் ஆண்டு வடமேல் மாகாணத்தில் நடைபெற்ற தேர்தலே மிகவும் விரும்பத்தகாத தேர்தலாக அமைந்தது. 2003ஆம் ஆண்டு முன்னாள் நீதியரசர் மார்க் பெர்னாண்டோவினால் வழங்கப்பட்ட தீர்ப்பின் பின்னர் இவ்வாறான நிகழ்வுகள் குறைவாகவே காணப்பட்டன. அவரது தீர்ப்பின் பிரகாரம் வாக்குச் சாவடிகளில் கலவரம், மற்றும் குழப்பம் ஏற்படுமாயின் வாக்குகள் ரத்துச் செய்யப்படும். அத்துடன் தேர்தல் முடிவுகளும் அறிவிக்கப்படமாட்டாது. அத்துடன் குறிப்பிட்ட பகுதிக்கு மீண்டும் தேர்தல் நடத்தி பெறுபேறுகள் கிடைத்ததன் பின்னரே தேர்தல் முடிவுகள் வெளியிடப்படும். இந்த நடைமுறையையே கடைப்பிடிக்கப்படும் என்றும் தேர்தல்கள் ஆணையாளர் தயானந்த திஸாநாயக்க தெரிவித்திருந்தமையும் இங்கு அவதானிக்கத்தக்கது.

ஒப்பீட்டளவில் நோக்கும்போது நீதியும், நியாயமான தேர்தலொன்றை நடத்துவதற்கு தேர்தல் திணைக்களம் கூடிய கரிசனையை எடுத்து வருவதையும் அவதானிக்கக் கூடியதாகவுள்ளது. 

தேசிய அடையாள அட்டை இல்லாவிடின் மாற்று ஏற்பாடு. ஆளடையாளம் நிரூபிக்க வேறு ஆவணங்களும் ஏற்பு

election_ballot_.jpgதற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் மத்திய வடமேல் மாகாணசபைகளுக்கான தேர்தலின்போது இலங்கைத் தேர்தல் வரலாற்றில் முதல்தடவையாக கணனிப்படுத்தப்பட்ட வாக்காளர் அட்டைகள் வாக்காளர்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளது. கூடவே வாக்காளர் அட்டைகளை வாக்காளர்களின் ஆள் அடையாள அட்டை இலக்கங்களும் பதிவாக்கப்பட்டுள்ளது. எனவே, இத்தேர்தலில் வாக்களிக்க ஆள்அடையாள அட்டை மிகவும் அத்தியாவசியமானது.
மத்திய மாகாண சபைத் தேர்தலில் வாக்காளர்கள் தமது ஆளடையாளத்தை நிரூபிப்பதில் நிலவிய சிக்கல்களுக்கு முழுமையான தீர்வு காணப்பட்டுள்ளதாக இந்த மாகாணத்திலுள்ள மாவட்டங்களின் அரசாங்க அதிபர்கள்  தெரிவித்துள்ளனர்.
தேர்தலில் வாக்களிப்பதற்கு அடையாள அட்டை கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில் மத்திய மாகாணத்தில் வாக்காளர்கள் அநேகருக்கு தேசிய அடையாள அட்டை இல்லையெனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. எனினும் அந்தப் பிரச்சினை தற்போது தீர்க்கப்பட்டுள்ளதாகவும் அரசாங்க அதிபர்கள் தெரிவித்தனர்.

நுவரெலியா மாவட்டத்தில் புதிதாக தேசிய அடையாள அட்டைகள் 1200 கிடைக்கப் பெற்று அவை உரியவர்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும், 11 ஆயிரம் தற்காலிக அடையாள அட்டைகள் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளதாகவும் மாவட்ட அரசாங்க அதிபர் டி.பீ.ஜீ. குமாரசிறி தெரிவித்தார்.

இந்த மாவட்டத்தில் சுமார் எழுபதாயிரம் பேருக்கு தேசிய அடையாள அட்டை இல்லையென்று தெரிவிக்கப்பட்டாலும், அது சரியான தகவல் அல்லவென்றும் வாக்களிப்பதற்கான அடையாள அட்டை பிரச்சினை தற்போது தீர்க்கப்பட்டுள்ளதாகவும் அரசாங்க அதிபர் தெரிவித்தார்.

ஆளடையாளத்தை நிரூபிப்பதற்கு தேசிய அடையாள அட்டை இல்லாதவர்கள் அதற்குப் பதிலாக எட்டு வகையான அடையாள அட்டைகளில் ஏதாவதொன்றைக் காண்பித்து வாக்களிக்க முடியும்.

கடவுச்சீட்டு, சாரதி அனுமதிப்பத்திரம், ஓய்வூதிய அட்டை, புகையிரத பருவகாலச் சீட்டு, முதியோர் அடையாள அட்டை, அஞ்சல் அறிமுக அட்டை, மதகுருமார் அடையாள அட்டை, தோட்ட நிர்வாகங்களால் வழங்கப்படும் அடையாள அட்டை என்பவற்றில் ஏதாவதொன்றைச் சமார்ப்பித்து வாக்காளர்கள் தமது ஆளடையாளத்தை நிரூபிக்க இயலும்.

இவை எதுவுமே இல்லாதவர்கள் கிராம சேவை அதிகாரியிடம் புகைப்படமொன்றைச் சமர்ப்பித்து தற்காலிக ஆளடையாள ஆவணமொன்றைப் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் தேர்தல்கள் திணைக்களம் அறிவித்திருந்தது.

எனவே அடையாள அட்டை இல்லாததால் வாக்களிக்க முடியாது என்ற பிரச்சினைக்கு இடமில்லை என்று நுவரெலியா அரச அதிபர் தெரிவித்தார்.
இதேவேளை மாத்தளை, கண்டி மாவட்டங்களிலும் அடையாள அட்டை பிரச்சினை தீர்க்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

மாத்தளை மாவட்டத்தில் அடையாள அட்டை இல்லாதவர்களுக்கு நாலாயிரம் தற்காலிக அட்டைகள் வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் காமினி செனவிரட்ன தெரிவித்தார்.

வாக்காளர்களின் அடையாள அட்டைகளை பரிசீலிக்க தனியான அதிகாரிகள் நியமனம்

identity-card-sri-lanka.jpgஇன்று   நடைபெற்றுக் கொண்டிருக்கும் வடமேல் மத்திய மாகாண சபைகளுக்கான வாக்களிப்பின் போது, வாக்காளர்களின் அடையாள அட்டைகளை பரிசீலிப்பதற்கு தனியான அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது. போலி அடையாள அட்டைகள் பயன்படுத்தப்படுவதை தடுக்கும் நோக்கில் தேர்தல் திணைக்களத்தால் வழங்கப்பட்ட தற்காலிக அடையாள அட்டைகளில் இரகசிய இலக்கங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்
 
தேர்தல் முடிவுகள்

வாக்களிப்பு 4 மணிக்கு முடிவுற்றதும் உடனடியாக தபால்மூல வாக்குகள் எண்ண ஆரம்பிக்கப்படும். சகல வாக்களிப்பு நிலையங்களிலுமிருந்து வாக்குப் பெட்டிகள் வந்தடைந்ததும் இரவு 8.30 மணியளவில் வாக்கு எண்ணும் பணிகள் தொடங்கும். நள்ளிரவுக்குப் பின்னரே முதலாவது முடிவு வெளிவரக்கூடியதாக இருக்கும். 15 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நண்பகலாகும் போது அனைத்து முடிவுகளும் வெளியாகிவிடும்.

கட்சிகள், சுயேச்சைக் குழுக்கள் பெற்ற வாக்களிப்பு முடிவுகள் அறிவிக்கப்பட்டதன் பின்னர் விருப்பு வாக்குகள் எண்ணப்படும், விருப்பு வாக்கு முடிவுகள் திங்கட்கிழமை மாலையாகும் போதே வெளியிடக் கூடியதாக இருக்கும் எனவும் தேர்தல் ஆணையாளர் தயானந்த திசாநாயக்கா தெரிவித்தார் 

விசேட ஏற்பாடு

தேசம்நெற் செய்திப் பிரிவு இலங்கையிலிருந்து தேர்தல் தொடர்பான செய்திகளைத் தருவதற்கு விசேட ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளது.

தேர்தல் ஆரம்பமாகி ஒரு மணி நேரத்துக்குள் குறிப்பிடத்தக்க தேர்தல் வன்முறைகள் ஏற்படவில்லை என்றும்,  மிகவும் அமைதியான வாக்களிப்பு நடைபெற்றுக் கொண்டிருப்பதாகவும் தெரியவருகின்றது.

இன்றைய தின தேர்தல் நிகழ்வுகள் தொடர்பாக முக்கிய சம்பவங்கள் இடம்பெறுமிடத்து இதை கட்டுரையில் அச்சம்பவங்கள் பின்னிணைப்பாக இணைக்கப்படும்.

பின்னிணைப்பு 01
தேர்தல் நிலை- பி.ப. 11.30

தேர்தல் வாக்களிப்பு ஆரம்பித்த நேரத்தில் வாக்களிப்புகள் மந்தநிலையில் காணப்பட்டாலும்கூட, சற்றுநேரத்தில் வாக்களிப்பு சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது.

இதுவரை கிடைக்கும் தகவல்களின்படி மக்கள் கூட்டம் கூட்டமாகச் சென்று வாக்களிப்பில் ஆரம்வம் காட்டிவருவதாகவும், வாக்களிப்புக்காக நீண்ட கியூ வரிசைகள் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. கண்டி பொலிஸ் நிலையம் தேர்தல் கண்காணிப்புத் தொடர்பான அதிகாரியொருவர் தகவல் தருகையில் காலை 11.30 வரை கண்டி மாவட்டத்தில் 20 தொடக்கம் 25 வீதத்தினர் வாக்களித்துள்ளதாக தேசம்நெற்க்குத் தெரிவித்தார்.

பொதுவாக இதுவரை  அளிக்கப்பட்ட வாக்கு வீதம் உத்தியோகபூர்வமான கணக்கீடு எடுக்கப்படாவிட்டாலும்கூட,  சகல மாவட்டங்களிலும் 20 – 25 வீதத்தினர் வாக்களித்துள்ளதாக தெரியவருகின்றது. இதேவேகத்தில் செல்லுமிடத்து 65 முதல் 70 வீதத்தினர் இம்மாகாணசபைத் தேர்தலில் வாக்களிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

தேர்தல் வாக்களிப்பு ஆரம்பிக்கப்பட்டு நான்கு மணித்தியாலங்கள் கடந்த நிலையில் குறிப்பிட்டுக் கூறக்கூடிய பாராதூரமாக அசம்பாவிதங்கள் எதுவும் 40 தேர்தல் தொகுதிகளிலும் பதிவாகவில்லை.  சில சிறு சம்பவங்கள் மாத்திரமே இடம்பெற்றுள்ளன. இச்சம்பவங்கள் தேர்தலை பாதிக்கக்கூடியதாக இல்லை என தெரியவருவதுடன்,  பொலிஸார் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

ஹட்டன், நுவரெலியா, மஸ்கெலிய,  ஹங்குராங்கத்த, மாத்தளை, ரத்தொட, ஹேவாஹெட போன்ற பிரதேசங்களில் அடையாள அட்டை அல்லது அடையாளத்தை உறுதிப்படுத்தக்கூடிய ஆவணணங்களின்மை காரணமாக  சிலர் வாக்களிப்பு நிலையங்களிலிருந்து திருப்பி அனுப்பப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பின்னிணைப்பு 02
குறுந்தகவல்கள் மூலம் தோதல் முடிவுகள்!

மத்திய மற்றும் வடமேல் மாகாண சபைத் தேர்தல் உத்தியோகபூர்வ முடிவுகளை மொபிட்டல் வாடிக்கையாளர்கள் குறுந்தகவல்கள் (எஸ்.எம்.எஸ்) மூலம் உடனுக்குடன் அறிந்துகொள்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அரசாங்க தகவல் திணைக்களமும் மொபிட்டல் டெலிகொம் நிறுவனமும் ஒன்றிணைந்து இதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளன.

தேர்தல் முடிவுகள் உறுதிப்படுத்தப்பட்ட பின்னர் அவற்றை உத்தியோகபூர்வமாக வெளியிடும் உரிமை தேர்தல் ஆணையாளரால் அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளருக்கு வழங்கப்பட்டுள்ளது. மத்திய மற்றும் வடமேல் மாகாண சபைத் தேர்தல் முடிவுகளை 25 வானொலி நிலையங்களும் 10 தொலைக்காட்சி நிறுவனங்களும் அரசாங்க தகவல் திணைக்கள வளாகத்திலிருந்து உடனுக்குடன் வெளியிடுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் அனுஷ பெல்பிட்ட தெரிவித்தார்.

அதேவேளை, அரசாங்கத்தின் உத்தியோகபூர் இணையத்தளம் மூலம் தேர்தல் முடிவுகளை குறுந்தகவலாக உடனுக்குடன் வெளியிட மொபிட்டல் டெலிகொம் நிறுவனம் ஏற்பாடுகளைச் செயதுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பின்னிணைப்பு 03
தேர்தல் நிலை- பி.ப. 04.30

இன்று காலை 7.00 மணிக்கு தொடங்கிய வாக்களிப்பு அமைதியான முறையில் 4.00 மணிக்கு நிறைவடைந்தது. மக்கள் கூட்டம் கூட்டமாகச் சென்று வாக்களிப்பில் ஆரம்வம் காட்டினர். சகல மாவட்டங்களிலும் ஒப்பீட்டளவில் 62 – 68 வீதத்தினர் வாக்களித்துள்ளதாக தெரியவருகின்றது.

தேர்தல் வாக்களிப்பு ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து குறிப்பிட்டுக் கூறக்கூடிய பாராதூரமாக அசம்பாவிதங்கள் எதுவும் 40 தேர்தல் தொகுதிகளிலும் பதிவாகவில்லை. சில சில சிறு சம்பவங்கள் மாத்திரமே இடம்பெற்றுள்ளன. இச்சம்பவங்கள் தேர்தலை பாதிக்கக்கூடியதாக இல்லை என தெரியவருவதுடன்ää பொலிஸார் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

புதிய பாதுகாப்பு வலயத்தினுள் பெருந்தொகை மக்கள் வருகை – அமைச்சர் மஹிந்த சமரசிங்க

vanni.jpgமோதல்கள் இடம்பெறும் பகுதிகளில் இருந்த பொதுமக்கள் அனைவரும், அரசாங்கம் அறிவித்துள்ள புதிய பாதுகாப்பு வலயத்திற்குள் வந்து சேர்ந்துள்ளதாகத் தகவல் கிடைத்துள்ளதென்று மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார்.

எனவே, அவர்களை படகுகள் மூலம் இலகுவாக முல்லைத்தீவுக்கு அழைத்து வந்துவிட முடியும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

ஏற்கனவே, அறிவித்திருந்த பாதுகாப்பு வலயத்தை விடவும், புதிய வலயத்திற்கு சிவிலியன்கள் அதிகம் வருகை தர ஆரம்பித்துள்ளதாகக் கூறிய அமைச்சர் சமரசிங்க அவர்களை அரசாங்கக் கடடுப்பாட்டுப் பகுதிக்குக் கொண்டு வந்து தேவையான நிவாரணங்களை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவித்தார். மக்களை அழைத்து வருவதில் தொடர்ந்தும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் ஒத்துழைப்பு நாடப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.

இதேவேளை, நேற்றுக் காலை ஆறு மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலத்திற்குள் கட்டுப்பாடற்ற வன்னிப் பகுதியிலிருந்து 1613 பேர், அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கு வந்துள்ளதாகக் கூறிய அமைச்சர் இது வரை 34 ஆயிரம் பேர் இவ்வாறு வந்துள்ளதாகக் கூறினார். இவர்கள் 30 ஆயிரம் பேர் வவுனியாவிலும், ஏனையோர் யாழ்ப்பாணம், ஓமந்தை மன்னார் ஆகிய இடங்களிலுள்ள இடைத்தாங்கல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

இது தவிர நேற்றைய தினம் 225 பேர் கிளிநொச்சிக்கு வந்துசேர்ந்துள்ளதாகக் கூறிய அமைச்சர், அவர்கள் அனைவரையும் ஓமந்தைக்கு அழைத்து வர ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

நேற்று முன்தினம் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் உதவியுடன் புதுமாத்தளன் பகுதியிலிருந்து திருகோணமலைக்கு 404 பேர் அழைத்துச் வரப்பட்டுள்ளனர். இவர்களுள் 351 பேர் நோயாளர்கள் என்றும் ஏனைய 53 பேர் அவர்களுடன் உதவிக்கு வந்தவர்கள் என்றும் அமைச்சர் தெரிவித்தார். நோயாளர்களுள் 137 ஆண்கள், 136 பெண்கள், 43 சிறுவர்கள் 35 சிறுமிகள் ஆகியோர் அடங்குவரெனத் தெரிவித்த அமைச்சர் சமரசிங்க, இரு நோயாளர்கள் மேலதிக சிகிச்சைக்காக கண்டிக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.