இலங்கை இந்திய ஒப்பந்த பிரகாரம் ஜனநாயக வழிக்கு வந்த நான் தமிழ் மக்களுடைய உரிமைகளை பெறுவதற்காகத் தொடர்ந்தும் உழைப்பேன். அதற்கு மக்களுடைய ஆதரவு தேவையாகும் என சமூக சேவைகள் சமூக நலத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வவுனியா நெளுக்குளம் நலன்புரி நிலையத்தில் தங்கியுள்ள இடம்பெயர்ந்த மக்கள் மத்தியில் பேசும்போது கூறினார்.
தமிழ் மக்களுடைய பிரச்சினைகளை அரசியல் ரீதியாகத் தீர்ப்பதற்கு புலிகளுக்கு ஐந்து தடவைகள் நிறையச் சந்தர்ப்பங்கள் வழங்கப்பட்டது. அவர்கள் அனைத்து சந்தர்ப்பங்களையும் தவறவிட்டார்கள். நானும் கூட ஒரு காலத்தில் ஆயுதமேந்தி போராடியவன். பின்னர் அதன் மூலம் எதனையும் சாதிக்க முடியாது என அறிந்து கொண்டு ஜனநாயக வழிக்குத் திரும்பியவன் எனவும் குறிப்பிட்ட அமைச்சர் தேவானந்தா மேலும் தெரிவித்ததாவது;
ஜனாதிபதியின் பிரதிநிதியாகவும் உங்களின் ஒருவனாக இருப்பதினால் தான் இங்கு வந்துள்ளேன். யுத்தம் எவ்வளவு கஷ்டமானது என்பதனையும் இடம்பெயர்வு என்பது அதனைவிட கஷ்டமானது என்பதையும் உணர்ந்தவன். இடம்பெயர்ந்த மக்களுடைய தேவைகள் என்ன என்பதை ஏற்கனவே அறிந்து கொண்டபோதிலும் இங்குள்ள மக்களுக்கு ஆறுதலையும் நம்பிக்கையையும் ஏற்படுத்தவே நான் வந்துள்ளேன்.
மக்களுடைய உயிர் வாழ்வதற்குரிய உத்தரவாதம் முக்கிய பிரச்சினை. இராணுவ கட்டுப்பாட்டுப் பிரதேசத்திற்கு வந்துள்ள உங்களுக்கு அந்த உத்தரவாதம் ஜனாதிபதியினால் வழங்கப்பட்டுள்ளது.
ஜனநாயக வழிக்கு வந்த பின்னர் மக்களுடைய நலன்சார்ந்த விடயங்களை ஆக்கபூர்வமாக தான் முன்னெடுத்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். புலி தலைமையானது தமிழ் மக்களுக்கு நன்மை தரக்கூடிய அனைத்துச் சந்தர்ப்பங்களையும் புறந்தள்ளிவிட்டு அழிவை ஏற்படுத்தும் யுத்தத்தினை நடத்திவருகின்றார்கள். அவர்களுடைய பிடியிலிருந்து விடுபட்டு வரும் மக்கள் இந்தச் சந்தர்ப்பத்தினை சரியாக பயன்படுத்திக் கொள்ளவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.