லாகூருக்கு அருகே உள்ள மனாவான் பகுதியில் செயல்பட்டு வரும் காவலர் பயிற்சி மையத்தின் மீது திடீர் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளில் 6 பேரை பாதுகாப்புப் படையினர் கைது செய்துள்ளனர்.மேலும் 4 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து பிணையக் கைதிகளாக இருந்த பயிற்சிக் காவலர்கள் மீட்கப்பட்டனர்.
இன்று காலை 7.30 மணியளவில் காவலர்கள் போல் உடையணிந்த 10 பயங்கரவாதிகளைக் கொண்ட குழு, மனாவான் காவலர் பயிற்சி மையத்திற்குள் நுழைந்து கையெறி குண்டுகளை வீசியும், துப்பாக்கிச்சூடு நடத்தியும்,அங்கிருந்த 500க்கும் அதிகமான காவலர்களை பிணையக் கைதிகளாகப் பிடித்து வைத்தது.
இதையடுத்து பயங்கரவாதிகளை பிடிக்க மனாவான் காவலர் பயிற்சிப் பள்ளியில் ராணுவ வீரர்ர்கள் குவிக்கப்பட்டனர். ராணுவ ஹெலிகாப்டர்களும் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டன. பயிற்சி மையத்திற்குள் அதிரடியாக நுழைந்த ராணுவ வீரர்களுக்கும், உள்ளே இருந்த பயங்கரவாதிகளுக்கும் நீண்ட நேரம் சண்டை நீடித்தது.
இந்நிலையில், இன்று மாலை 4 மணியளவில் பயங்கரவாதிகளில் 6 பேரை ராணுவம் கைது செய்ததாகவும், மீதமுள்ள 4 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் அந்நாட்டு தொலைக்காட்சிகள் செய்தி வெளியிட்டுள்ளன. இதன் காரணமாக சுமார் ஏழு மணி நேரம் நீடித்த காவலர் பயிற்சி மையத் தாக்குதல் முடிவுக்கு வந்துள்ளது.இத்தாக்குதலில் 31 காவலர்கள் உயிரிழந்ததாகவும், 90 க்கும் அதிகமானோர் காயமடைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த தாக்குதலுக்கு எந்த ஒரு பயங்கரவாத இயக்கமும் பொறுப்பேற்கவில்லை என்ற போதிலும், லஸ்கர் – இ – தயீபா அல்லது ஜெய்ஷ் – இ – முகமது காரணமாக இருக்கலாம் என சந்தேகிப்பதாக பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ரெஹ்மான் மாலிக் தெரிவித்துள்ளார்.
இம்மாதத்தின் துவக்கத்தில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்க லாகூர் வந்த இலங்கை கிரிக்கெட் அணி வீரர்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய பரபரப்பு முற்றிலுமாக அடங்குவதற்கு முன்பாகவே, லாகூர் புறநகர்ப் பகுதியில் உள்ள காவலர் பயிற்சி மையத்தின் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.