March

March

இலங்கை அகதி முகாம்களில் இடமில்லை: ஐரோப்பிய மனிதாபிமான உதவி அமைப்பு

mullairefugees.gifஇலங்கையில் போர் பகுதியிலிருந்து வெளியேறி வரும் பொதுமக்களைத் தங்கவைக்க வவுனியாவில் அமைக்கப்பட்டுள்ள இடைத்தங்கல் முகாம்களில் அளவுக்கு அதிகமான மக்கள் தங்கியிருப்பதாக எகோ எனப்படும் ஐரோப்பிய கமிஷனின் மனிதாபிமான உதவி அமைப்பு தெரிவித்துள்ளது.

சமீபத்தில் எகோ குழு வவுனியா முகாம்களுக்குச் சென்று பார்வையிட்டுத் திரும்பியுள்ளது. அந்த மக்களுக்கு எகோ சார்பில் உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இதுபற்றி புதுடெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய எகோ குழுவின் ஆசிய மற்றும் லத்தீன் அமெரிக்கப் பிரிவுத் தலைவர் எஸ்கோ கென்சின்ஸ்கி அவர்கள், இலங்கையில் மனிதாபிமான நிலைமை கவலைப்படும் வகையில் இருப்பதாகவும், இதில் சர்வதேச நாடுகளின் பங்களிப்பு இன்னும் அதிகமாக இருக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

சோதனைச் சாவடிகளில் பொதுமக்களைப் பரிசோதனை செய்யும் நடைமுறைகளில் சர்வதேச அமைப்புக்களையும் அனுமதிக்க வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்தார்

மட்டக்களப்பு கிராம அபிவிருத்தி சங்க பிரதிநிதிகளின் மாநாடு 1000 பேர் பங்கேற்பு; புதிய அணுகுமுறை குறித்து ஆராய்வு

கிராம அபிவிருத்திச் சங்கங்களின் அபிவிருத்தியை நோக்கமாகக் கொண்ட மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள கிராம அபிவிருத்திச் சங்கங்களின் பிரதிநிதிகளை உள்ளடக்கிய மாநாடு நேற்று மட்டக்களப்பு சென்மைக்கல் தேசிய பாடசாலை மண்டபத்தில் நடைபெற்றது.

கிழக்கு மாகாண கிராம அபிவிருத்தி திணைக்களத்தினால் நடாத்தப்பட்ட இம்மாநாட்டை கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசத்துறை சந்திரகாந்தன் வைபவரீதியாக ஆரம்பித்து வைத்தார்.

கிழக்கின் பேண்தகு அபிவிருத்தியினை நோக்கி கிராமிய அபிவிருத்தியின் தந்திரோபாயங்களை ஆராயும் இலக்குடன் இம்மாநாடு நடைபெற்றது.

இம்மாநாட்டில், கிழக்கு மாகாண அமைச்சர்களான துரையப்பா நவரத்தினராஜா, எம். எஸ். உதுமாலெ வ்வை, கிராமிய அபிவிருத்தி திணைக்களத்தின் கிழக்கு மாகாண பணிப்பாளர் திருமதி ராமச்சந்திரன் பலரும் கலந்து கொண்டனர்.

இம்மாநாட்டில் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 577 கிராம அபிவிருத்திச் சங்கங்கள் மற்றும் மாதர் கிராம அபிவிருத்திச் சங்கங்களின் பிரதிநிதிகள் ஆயிரம் பேர் கலந்துகொண்டனர்.

புல்மோட்டைக்கு அழைத்துவரப்பட்டோரில் 188 பேர் பதவியா வைத்தியசாலையில்

navy.jpgமுல்லைத் தீவிலிருந்து கடல்மார்க்கமாக வியாழக்கிழமை புல்மோட்டைக்கு கூட்டிவரப்பட்ட 488 பொதுமக்களில் 188 பேர் பதவியா வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.

இவர்களில் 76 பேர் நோயாளர்கள் (பெரியவர்களில் 32 பேர் ஆண்கள், 07 பெண்கள், சிறுவர் 8, சிறுமியர் 5) மற்றும் உதவியாளர்களாக வந்தவர்கள் 112 (பெரியவர்களில் 26 ஆண், 36 பெண், சிறுவர் 23, சிறுமியர் 28) வவுனியாவில் உள்ள நலன்புரி நிலையங்களுக்கு 200 பேர் அனுப்பிவைக்கப்பட்டனர். புல்மோட்டை கள வைத்தியசாலையில் 129 பேருக்கு சிகிச்சை அழிக்கப்பட்டது.

தற்போது புல்மோட்டை கள வைத்தியசாலையில் தற்போது 100 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 47 பேர் காயமடைந்தவர்கள் மற்றும் நோயாளர்கள் ஆவர். அவர்களில் பெரியவர்கள் 37 (ஆண்13, பெண்24) சிறார்கள் 10 (ஆண் 7, பெண் 3) உதவியாளர்கள் 53 பேர் (பெரியவர்களில் 10 ஆண்கள், 22 பெண்கள், சிறார்கள் 12, சிறுமியர் 10)

முல்லைத்தீவிலிருந்து கப்பல் மூலம் இன்னொரு தொகுதி நோயாளர்கள் இன்று சனிக்கிழமை மாலை புல்மோட்டைக்கு அழைத்து வரப்படவிருப்பதாக மாகாண சுகாதார அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்தன.

அன்னமலை சு.க அலுவலக தாக்குதலில் இருவர் பலி

சவளக்கடை அன்னமலை பிரதேசத்திலிருந்த சு. கட்சி அலுவலகம் மீது கடந்த வியாழன் இரவு இனந் தெரியாத ஆயுதக் குழுவினரால் நடத்தப்பட்ட தாக்குதலில் அலுவலகத்திலிருந்த இருவர் உயிரிழந்துள்ளதாக சவளக்கடை பொலிஸார் தெரிவித்தனர். முகுந்தன் (சதீஸ்), ஜீவராஜ் ஆகிய இருவருமே உயிரிழந்த உறுப்பினர்களாவர்.

இரவு 7.45 மணியளவில் திடீரென கைக்குண்டுத் தாக்குதல்களும், துப்பாக்கி வேட்டுச் சத்தங்களும் சரமாரியாகக் கேட்டுள்ளது. உடன் ஸ்தலத்திற்கு விரைந்த விசேட அதிரடிப்படையினரும், சவளக்கடை பொலிஸாரும் அலுவலகத்திலிருந்து இரு சடலங்களை மீட்டுள்ளனர்.

இலங்கை தமிழ் மக்களின் இன்னல் தீர தமிழக இந்துத் துறவியர் பேரவையின் சார்பாக உண்ணாவிரத போராட்டம்

hindu.pngஇலங்கை தமிழ் மக்களின் இன்னல் தீர தமிழக இந்துத் துறவியர் பேரவையின் சார்பாக சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகைக்கு எதிரே நேற்று ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

பல்வேறு தமிழ் அமைப்புகளும், அரசியல் கட்சிகளும் போராடி பலனில்லாததால் தடைகளை களைந்து விடை காண தமிழக துறவியர் பேரவியின் சார்பில் இந்த அடையாள உண்ணா நிலை அறப்போராட்டம் நடைபெற்று வருவதாக இந்த போராட்டத்திற்கு தலைமை தாங்கி நடத்தி வரும் தமிழக இந்து துறவியர் பேரவையின் அமைப்பாளர் சுவாமி ஸ்தாசிவானந்தா தெரிவித்தார். இந்த போராட்டத்தில் திரளான இந்து துறவிகள் பங்கேற்றனர். உண்ணாவிரதத்தின் முடிவில் இலங்கைக்கு செல்லும் தூதுக்குழுவில் இடம்பெற வேண்டிய அம்சங்கள் குறித்து தீர்மானம் இயற்றப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இலங்கையில் யுத்த நிறுத்தத்தை வலியுறுத்தி பார்வையற்ற இளைஞர்கள் பாதயாத்திரை

இலங்கையில் யுத்த நிறுத்தத்தை வலியுறுத்தும் பதாதைகளுடன் நான்கு பார்வையற்ற இளைஞர்கள் சென்னையிலிருந்து கன்னியாகுமரி வரை பாதயாத்திரை மேற்கொள்கின்றனர்.  சென்னையைச் சேர்ந்த கே.வீரப்பன் (வயது 34), என்.மாரிசாமி (வயது 36), எஸ்.ஆறுமுகம் (வயது 40) மற்றும் எம்.சக்திவேல் (வயது 34) ஆகிய நால்வருமே சுடும் வெயிலில் அதிவேக வாகன போக்குவரத்துடைய சாலைகளினூடாக பாதயாத்திரை மேற்கொண்டுள்ளனர்.

சென்னையிலுள்ள மரீனா கடற்கரையிலிருந்து கடந்த பெப்ரவரி 28 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட இவர்களின் பாதயாத்திரை திட்டமிட்டவாறு மார்ச் 28 ஆம் திகதியான கன்னியாகுமரியில் நிறைவடையும் என்ற நம்பிக்கை காணப்படவில்லை. இருப்பினும், மாரிசாமி தலைமையில் அந்நான்கு இளைஞர்களும் மெதுவாகவும், அதேசமயம் திடமாகவும் தமது இலக்கை நோக்கிச் செல்வதை மக்கள் ஆச்சரியத்துடன் நோக்குகின்றனர்.

இலங்கையில் இடம்பெறும் பாரிய படுகொலைகளுக்கு எதிராக பெரும்பான்மையான தமிழர்கள் குரல் கொடுக்கத் தொடங்கியுள்ளனர். அவர்களுடன் நாமும் கரம் கோர்க்கும் நோக்குடன் இலங்கையில் உடனடியாக யுத்தநிறுத்தத்தை வலியுறுத்தியே சென்னை முதல் கன்னியாகுமரி வரையான இப்பாதயாத்திரையை ஆரம்பித்துள்ளோம் என வீரப்பன் தெரிவித்தார்.

தினமும் சராசரியாக 30 கிலோ மீற்றர் தூரத்தை, இவர்கள் கடந்து செல்கின்றனர். எமது சமூகத்திற்கு சிறந்த ஆக்கபூர்வமான விளைவுகளைப் பெற்றுத் தரும் இலக்கை நாம் முன்னெடுக்கின்றோம். இலங்கைத் தமிழர் பிரச்சினைகள் தொடர்பாக நாம் சந்தித்த சிலரும் வேறு விதமான போராட்டங்களை மேற்கொள்வார்கள் என நம்புகின்றோம். அத்துடன் எமது போராட்டம் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது மகிழ்வை அளிக்கின்றது என வீரப்பன் மேலும் தெரிவித்தார்.

கடன் வழங்க சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து 17 நிபந்தனைகள் – விரட்டியோர் இன்று மண்டியிடுவதாகக் கூறுகிறது ஐ.தே.க.

spdesanayaka.jpgசர்வதேச நாணய நிதியத்தை விரட்டியவர்கள் இன்று அதன் காலடியில் மண்டியிட்டுவருவதாக தெரிவித்த மத்திய மாகாண எதிர்க்கட்சித்தலைவரும் ஐக்கிய தேசியக் கட்சி தேசிய அமைப்பாளருமான எஸ்.பி.திசாநாயக்க, 17 நிபந்தனைகளுக்கு கட்டுப்பட்டே கடனு தவியைப்பெற்றுக் கொள்ளவிருப்பதாகவும் குறிப்பிட்டார்.

நாட்டில் அடிப்படை மனித உரிமைகளை பாதுகாக்கவும், ஊழல், மோசடிகள், வீண்விரயங்களைத் தவிர்க்கவும் நடவடிக்கை எடுக்கவும் அரசு தவறினால் கடனுதவி கிடைப்பது சந்தேகத்துக் கிடமானது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் கருத்துத் தெரிவிக்கையிலேயே எஸ்.பி.திசாநாயக்க மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் விளக்கமளிக்கையில் கூறியதாவது;

உலகப் பொருளாதார வீழ்ச்சியின் தாக்கம் எமது நாட்டைப்பாதிக்காது என்று அரசு கூறிவந்தது இன்று பொய்யாகிவிட்டது. நாட்டின் நிதி நெருக்கடியும், பொருளாதார நெருக்கடியும் ஒரே சமயத்தில் விஸ்வரூபமெடுத்துள்ளது. 2002 இல் ரணில் விக்கிரமசிங்க வின் ஆட்சியில் பொருளாதார வளர்ச்சி 4.4 சதவீதமாக வளர்ச்சிகண்டு படிப்படியாக 2007 ஆம் ஆண்டாகும் போது 4.9 சதவீதம் வரை உயர்ச்சியடைந்தது. 2008 ஆம் ஆண்டில் ஏற்பட்ட வீழ்ச்சியின் ஆரம்பம் இன்று முற்றிலும் எதிர்மறையான நிலைக்குத்தள்ளப்பட்டுள்ளது. 0.5 சதவீத படுமோசமான வீழ்ச்சிநிலையை அடைந்துள்ளது. உலகின் எந்தவொரு நாடும் காணாத பொருளாதார வீழ்ச்சி நிலைக்கு எமது நாடு தள்ளப்பட்டுள்ளது.

உலகின் மிகப் பெரிய பங்குச் சந்தை நிறுவனமான சி.ரி.ஸ்மித் நிறுவனத்தின் அண்மைய அறிக்கையின் பிரகாரம் பங்குச்சந்தை 81 சதவீதத்தால் வீழ்ச்சி கண்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளது. இதில் இலங்கையும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பெற்றுச் சென்ற 16 இலட்சம் பேரில் மூன்று இலட்சம் பேர் வேலைவாய்ப்பை இழந்து நாடு திரும்பியுள்ளனர்.

பண வீக்கத்தைக் கட்டுப்படுத்தி இருப்பதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. உண்மையிலேயே அரசு கட்டுப்படுத்தவில்லை. புதிதாக நாணயத்தாள்களை புழக்கத்தில் விடுவதைத் தவிர்த்து வருவதால் டொலரின் பெறுமதி கட்டுப்படுத்தப்படுகின்றது. அதன் காரணமாக பண வீக்கத்தை ஒரே நிலையில் வைத்திருக்க முடிகிறது.அரசாங்கத்தின் கடன் பளு படுமோசமாக அதிகரித்துள்ளது. இதனால் விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த முடியாத நிலையும் காணப்படுகிறது. இந்தநிலை மேலும் தொடருமானால் 1970-77 காலப்பகுதிக்கு நாடு மீண்டும் தள்ளப்படலாம். கியூவும் உருவாக்கக்கூடிய அபாயம் தெரிகிறது.

சர்வதேச நாணய நிதியிடம் கைநீட்டப் போவதில்லை எனவும் அதில் அடிக்கப்பட்ட ப்ளக் கழற்றப்படுமெனவும் வீராவேசம் பேசிய அரசாங்கம் இன்று சர்வதேச நாணய நிதியிடம் மண்டியிட்டுள்ளது. சர்வதேச நாணய நிதியின் உறுப்பு நாடுகளில் இலங்கையும் ஒன்று அதில் நிதிஉதவி கோருவது தவறென்று நான் கூறப்போவதில்லை அதிலிருந்து உதவி பெறும் உரிமை இலங்கைக்கு இருக்கின்றது.

ஆனால், அதன் உதவி தேவையில்லை என்று அதன் அனுபவத்திலேயே மூடச்செய்து விரட்டியவர்கள் இன்று அதன் காலடியில் வீழ்ந்துள்ளனர். சர்வதேச நாணயநிதி கேட்டவுடன் அள்ளிக் கொடுக்கும் நிலையில் இல்லை. அதன் நிபந்தனைகளுக்குக் கட்டுப்பட்டால் மட்டுமே நிதி உதவி கிடைக்கும் . இந்தத் தடவை 17 நிபந்தனைகளை சர்வதேச நாணய நிதியம் முன்வைத்திருப்பதாக நான் அறிய வருகின்றேன். இதில் நாட்டின் அபிவிருத்தி நடவடிக்கை, அடிப்படை மனித உரிமைகளுக்குட்பட்ட பாதுகாப்பு, ஊடக சுதந்திரம் பேணப்படுதல், ஆட்கடத்தல்களுக்கு முற்றுப்புள்ளி, ஊழல், மோசடி, வீண் விரயங்களைத் தவிர்த்தல் போன்றவை முக்கிய அம்சங்களாகக் காணப்படுகின்றன. இந்த 17 நிபந்தனைகளுக்கும் அரசாங்கம் இணங்கியே ஆகவேண்டும்.

அரசாங்கம் நிதியை வீண்விரயம் செய்யவில்லை என்று கூறுவதை நாம் முற்றாக நிராகரிக்கின்றோம். 108 அமைச்சர்களைக் கொண்ட அரசு எவ்வாறு நடந்துகொள்கின்றது என்பதை பார்த்தாலே இதனை புரிந்துகொள்ள முடியும். அமைச்சர்களுக்கு எத்தனை வாகனங்கள், எத்தனை பாதுகாப்பு அதிகாரிகள், வீதியில் அவர்கள் போகும்போது பொதுமக்களுக்கு எவ்வாறு நெருக்கடி என்பதையெல்லாம் காணும்போது வீண்விரயம் செய்யவில்லை என்பதை நம்ப முடியுமா? அரசு நிவாரணத்துக்காக ஒதுக்கும் நிதியை விட இரண்டுமடங்கு நிதி அமைச்சர்களுக்காக ஒதுக்கிக் கொடுத்துள்ளது.

60 வருடங்களில் முன்னெப்போதும் காணப்படாத மோசமான பொருளாதார நெருக்கடியை நாடு எதிர் கொண்டுள்ளது. இதிலிருந்து விடுபட சரியான பொருளாதாரக் கொள்கையொன்று வகுக்கப்படாவிட்டால் நாடு பிச்சைக்கார நாடாக மாறும் அச்சுறுத்தலை எதிர்கொள்ள நேரிடலாம் எனவும் அவர் எச்சரித்தார்.

உயர்கல்விக்கான விரிவுபடுத்தல் நாட்டில் பாரியதொரு சவால் மாற்றுவழி அவசியம் -விஷ்வ வர்ணபால

உயர் கல்வி கற்று ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பல்கலைக்கழக தகுதியைப் பெற்றுக்கொள்கின்றபோதும் மிகக் குறைவானோருக்கே பல்கலைக்கழக அனுமதி கிடைக்கின்றது. இதற்கான மாற்று வழிகள் அவசியமென உயர் கல்வியமைச்சர் பேராசிரியர் விஷ்வ வர்ணபால தெரிவித்தார்.

சார்க் நாடுகளின் உயர் கல்வியமைச்சர்கள் மாநாடு கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் நடைபெற்றபோது மாநாட்டில் ஆரம்ப உரை நிகழ்த்தும்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

பூகோளமயமாக்கலின் கீழ் புதிய உயர் கல்வி வாய்ப்புகள் சாத்தியமற்றதாகிவரும் நிலையில் சார்க் நாடுகள் தமது சொந்த வளங்களையும் மூலோபாயங்களையும் ஆற்றல்களையும் பயன்படுத்தி இத்தேவையைப் பூர்த்தி செய்ய வேண்டியுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்கவின் தலைமையில் நடைபெற்ற மேற்படி மாநாட்டில் தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர் வர்ணபால, உயர் கல்விக்கான வசதிகளை விரிவுபடுத்துவது ஒரு சவாலான விடயமாகவே எம்முன் உள்ளது எனவும் தெரிவித்தார்.

மேற்படி மாநாட்டில் உரையாற்றிய சார்க் அமைப்பின் செயலாளர் நாயகம் டாக்டர் iல் காந்த் சர்மா, உயர் கல்வித்துறையில் அபிவிருத்தியின் தேவை இன்றியமையாதது என்பதுடன், சார்க் பிராந்திய நாடுகள் ஒரேவிதமான உயர் கல்விக் கொள்கையைப் பற்றி ஆராய்வதும் சிறந்தது எனத் தெரிவித்தார்.

இம் மாநாட்டில் இந்தியாவின் சார்பில் உயர் கல்வித் திணைக்களத்தின் செயலாளர் ஸ்ரீ ஆர். பி. அகர்வால், பாகிஸ்தானின் சார்பில் உயர் கல்வி ஆணைக்குழு உறுக்பினர் பேராசிரியர் ரியாஸ் அல்ஹக் தாரிக், ஆப்கானிஸ்தானின் சார்பில் உயர் கல்வியமைச்சர் கலாநிதி மொகமட் அஸாம் டட்பார், பங்களாதேஷ் சார்பில் கல்வியமைச்சர் நூருல் இஸ்லாம் நஹீட், பூட்டான் சார்பில் கல்வியமைச்சர் லியோன்போ தாஹீர் எஸ். யெளடியல், மாலைதீவின் சார்பில் கல்வியமைச்சர் அஹமட் அலி மனிக்கு, நேபாளம் சார்பில் கல்வியமைச்சர் ரேணுகுமாரி யாதவ், இலங்கையின் சார்பில் பிரதிக் கல்வியமைச்சர் மயோன் முஸ்தபா உட்பட அமைச்சின் அதிகாரிகள், முக்கியஸ் தர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

தமிழ் பேசும் மக்களுக்கான பொதுத்தளம் ஒன்றினை உருவாக்க முடியுமா? TIC முயற்சி. : த சோதிலிங்கம்.

tic_logoஎத்தனையோ சந்தர்ப்பங்கள் கிடைத்தும் நழுவவிட்ட தமிழர் போராட்ட வரலாறு இன்று ஆரம்பிக்கப்பட்ட புள்ளிக்கே மீண்டும் வந்து நிற்கிறது. வன்னியில் மக்கள் மரணத்தின் விளிம்பில் கொண்டு வந்து நிறுத்தப்பட்டு உள்ளனர். ஒவ்வொரு தமிழ்பேசுவோரும் இதனை உணர்ந்து செயற்ப்பட வேண்டிய காலம் இது.

கடந்த தமிழ்பேசும் மக்களின் போராட்டப் பாதையில் பல ஒற்றுமைப்படுத்தும் ஒன்றிணைக்கும் கூட்டுமுன்னணி அமைக்கும் செயற்ப்பாடுகள் நடைபெற்றபோதும் அவை முன்னேற்றம் காணாமைக்கான காரணங்களை மீளப்பார்த்து விமர்சித்து தவறுகள் மீளவும் நடைபெறாது செயற்ப்பாடுகளில் ஈடுபடுவதும், தொடரச்சியாக முன்னேறிச் செல்லும் வழிமுறைகளை உருவாக்கிக்கொண்டும் திட்டமிட்டு செயற்ப்படுவது அவசியமானது. அதேவேளை விடுதலைப் புலிகள் உட்பட அத்தனை அமைப்புக்களையும் உள்ளடக்கிய முயற்ச்சிகளில் ஈடுபட வேண்டிய தேவை உள்ளதையும், முரண்பட்ட அரசியல் நோக்கம் கொண்டவர்களும் இணைந்து செயற்ப்படும் தளம் உருவாக்கப்பட வேண்டியது காலத்தின் கட்டாயமாக உள்ளது.

மார்ச் 22 அன்று தமிழர் தகவல் நடுவம் TIC ஒழுங்கு செய்த கூட்டம் தமிழர் தகவல் நிலையத்தின் மண்டபத்தில் மாலை 4 மணிக்கு நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு தமிழ் மாணவர் பேரவையின் முன்னாள் உறுப்பினர்கள் உட்பட பல தரப்பட்ட அரசியல்ப் பின்னணிகளை கொண்டவர்கள் அங்கு பிரசன்னமாகியிருந்தனர், தமிழ் மாணவர் பேரவையினரின் உரைகளுடன் கூட்டம் ஆரம்பமானது.

தமது போராட்டம் கல்வி தரப்படுத்தலுக்கு எதிராக ஆரம்பிக்கப்பட்டது என்றும் திட்டமிட்ட அரசியல் நோக்கு இதற்கு இருக்கவில்லை என்றும் அன்று அப்போதுள்ள பிரச்சினைகளுக்காகவே அது செயற்ப்பட்டது என்றும் மாணவர் பேரவை சார்பாக ஒருவர் கருத்து முன்வைத்தார்.

தமிழ் மாணவர் பேரவையின் ஆரம்பகால கர்த்தாக்கள் பற்றியும் பேசப்பட்டது. இவை போன்ற பல அமைப்புக்கள் ஆரம்பகாலத்தில் உருவாகி அவை தொடர்ந்து செயற்ப்படாமல் போயிருந்தன என்றும் இந்த ஆரம்பகால நடவடிக்கைகளுக்கு இங்கு முன்னுரிமை கொடுக்காமல் தற்போது மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் பற்றியும் தற்போதய ஈழத்து நிலைமைகள் பற்றியும் பேசவேண்டும் என்ற கருத்துக்கள் கூட்டத்தில் எழுந்தன.

கூட்டத்தை ஓழுங்கு செய்தவர்கள் இக் கூட்டமானது எது சரி? எது பிழை? என விவாதிக்க முடியாது, இங்கு யாரும் அதற்கு பதில் வைத்திருக்கவில்லை, இக் கூட்டத்தின் நோக்கம் ஒரு சமூகமாக Political Initiationஜ உருவாக்க தனிப்பட்டவர்கள் ஒன்று சேர்ந்து செய்யும் முயற்ச்சியே இது என்றனர்.

கூட்டத்தில் இங்கு தமிழர்க்கு positive ஆன கருத்துக்களையே முன்வைக்கும்படி ஒரு கருத்து எழுந்த போது: தமிழர்களுக்கு சார்பான (positive) விடயங்களை முன்வைப்பதே நல்லது என்றாலும் விமர்சனம் மிக மிக முக்கியம் என்றும் கடந்த காலங்களில் நடைபெற்ற தவறுகள்இ எது? என்ன? எப்படி உருவானது? சரி பிழைகள் போன்றன விமர்சனம் மூலமே தீர்க்க முடியும் என்றும் அதிலிருந்தே முன்னேற முடியும் என்றும் அங்கே கருத்து வைக்கப்பட்டது.

கடந்த காலங்களில் தமிழர்கள் தமிழ் அமைப்புகள் இயக்கங்கள் reactive ஆகவே நடந்துள்ளார்கள் என்றும் proactive ஆக செயற்ப்படவில்லை என்றும் இது ஈழத்திலும் போராட்ட நடவடிக்கைகளிலும் கூட இந்த நிலையே உள்ளதாக எடுத்துக் கூறப்பட்டது.

மேற்கூறிய விடயங்களின் அடிப்படையில் எல்லோரும் சேர்ந்து தமது கருத்துக்களை முன்வைக்கவும் அதனூடாக தமிழர்க்கான எதிர்காலத்தை உருவாக்கும் (நிலைமைகளை) கூட்டணிகளை,

ஆதரவாளர்கள் அமைப்புக்களை, உருவாக்க வேண்டும் என்றும் கருத்து பரவலாக பரிமாறப்பட்டது. வித்தியாசமான கருத்துக் கொண்டவர்களையும் முரண்பாடான கருத்துக் கொண்டவர்களையும் இணைத்துச் செயற்ப்படக் கூடிய நிலைமைகளை உருவாக்கவே TIC விரும்புவதாக அங்கு கூறப்பட்டது. அது இக் கூட்டத்தின் வெளிப்பாடாகவும் இருந்தது. இதற்கு உதாரணமாக இந்திய அமைச்சர் ப சிதம்பரம் தமிழர்கள் ஒன்றிணைந்து செயற்ப்படாது இருப்பது பற்றியும் சுட்டிக்காட்டப்பட்டது.

தொடர்ச்சியாக இராணுவ நடவடிக்கைகளில் நம்பிக்கை வைத்து செயற்ப்பட்டதாலேயே எமது போராட்டத்திற்கு குந்தகம் விளைவிக்கப்பட்டுள்ளது என்றும் கிழக்கு மாகாணத்தைப் பொறுத்த வரையில் யாழ்ப்பாணத்தில் உருவாகிய மாணவர் பேரவையின் விடயங்கள் ஒரு பொருட்டாக என்றுமே இருந்ததில்லை என்றும் கிழக்கு மாகாணம் வடக்கு மாகாணத்தை விட வித்தியாசானமான சூழ்நிலையில் இருப்பதாயும், கிழக்கு மாகாணத்தவர்களின் அரசியல் நிலைப்பாடு வடக்கு மாகாணத்தவர்கள் போன்று அல்ல என்றும் கருத்து முன்வைக்கப்பட்டது. இதைவிட முஸ்லீம்கள் மலையக மக்கள் பற்றிய அவர்களது நிலைப்பாடுகளும் கவனத்திற்கு எடுக்கப்பட வேண்டும் என்றும் கூறப்பட்டது.

ஈழப் போராட்டம் தோல்வியுற்று விட்டது, இப்போராட்ட நடவடிக்கைகள் காரணமாகவே 60சத வீதமான மக்கள் வட கிழக்கு பிரதேசங்களை விட்டு நிரந்தரமாக வெளியேறி வாழும் நிலை உருவானது, ஆகவே சிறுபான்மையினர் இலங்கையின் எந்தப் பிரதேசங்களில் வாழ்ந்தாலும் அவர்களுக்கு அரசியல் உரிமைகள் அளிக்கும் வகையிலும், அவர்களது உரிமைகள் பாதுகாக்கப்படக் கூடிய வகையிலுமான தமிழ் பேசும் மக்களின் அரசியல்த்தீர்வு பற்றி சிந்திக்க வேண்டும் என்றும் கருத்துத் தெரிவிக்கப்பட்டது.

இங்கு குறிப்பிட்ட ஈழப்போராட்டத் தோல்வி என்பது தமிழர்களிடையேயும், இலங்கையிலும், இந்திய உறவிலும, சர்வதேச உறவிலும் தோல்விகளை ஏற்ப்படுத்தியுள்ளது என்றும் கருத்து வெளிப்படுத்தப்பட்டது.

புனர்வாழ்வு, அரசியல்ப் புனர்த்தானம் செய்தல் போன்ற வேலைகளினுடாக தமிழர்க்கான அரசியல் தலைமைகள் உருவாக்கப்பட வேண்டும் என்றும் இபபடியான அரசியல்த் தலைமைகள் மேலெழ முடியாமல் கடந்த காலங்களில் அடக்கப்பட்டுள்ளது என்றும் அங்குகூறப்பட்டது.

நீண்டகாலமாக நடைபெற்ற இப்போராட்டத்தை தொடர்ச்சியான அரசியல்ப் போராட்டமாக, தமிழர்களின் உரிமைகளை அங்கீகரிக்கும் வரை தொடர நாம் முனைய வேண்டும் என்றும் இந்நடவடிக்கைகளில் விடுதலைப் புலிகள் உட்பட அனைத்து அமைப்புக்களும் பொதுவான அரசியல்த் தலைமையின் கீழ் உடன்பட வேண்டும் என்றும் கருத்து வெளியிடப்பட்டது.

கூட்டத்தில் அடுத்த கட்டமாக ரவி சுந்தரலிங்கத்தினால் சுருக்கமாகவும் நான்கு பிரிவாகவும் வரையப்பட்ட பிரதிகள் கையளிக்கப்பட்டது. Navigating our peoples struggle through uncharted territories Please read Ravi’s Document here.

இது பற்றி ரவி சுந்தரலிங்கம் தனது கருத்தை முன்வைக்கும் போது தமிழீழம் என்ற பதத்தை கைவிடவேண்டும் இது இன்று சரியான பாதையை தெரிவுசெய்வதற்கு தடையாக இருப்பதையும், அதிகாரப் பரவலாக்கல், எமது பிரதேசத்தை நாமே முன்னேற்றும் உரிமைகள், பாதுகாப்பு போன்ற விடயங்களில் இருந்து எமது பேச்சுக்களை ஆரம்பிக்க வேண்டும் என்றும் கூறினார்.

கடந்த காலங்களில் நடைபெற்ற ஜக்கியத்திற்கான முன்னெடுப்புக்கள் பற்றியும் அதில் ஏற்ப்பட்ட தடங்கல்கள் பற்றியும் அதில் தோழர் டக்ளஸ்சின் ஆதரவுகள் பற்றியும் கூறினார். அதேவேளை ENC (Eelam National Council) ஜ மீள புனரமைப்பு செய்யக்கூடாதா என்றும் கேட்டுக் கொண்டார். இக் கூட்டத்தில் ரவி சுந்தரலிங்கத்தின் எழுத்து சமர்ப்பித்தலும் அவரின் விளக்கமும் முக்கியமாக இடம் பெறவிருந்ததும் பின்னர் வேறு விடயங்கள் இழுத்துச்செல்லும் வழியில் சென்றதாலும் நேரம் போதாமையாகியது.

இந்த அரசியல் முன்னெடுப்புக்களுக்கு முன்னதாக தமிழர்கள் சாரி சாரியாக கொல்லப்படுவது அழிக்கப்படுவது தடுத்து நிறுத்தப்பட வேண்டும் அதன் பின்னரே அரசியல்த்தீர்வு முன்வைக்கப்பட வேண்டும் என்றும் இதுவே எமக்கு முன் உள்ள முக்கிய விடயம் என்றும் கருத்து முன்வைக்கப்பட்டது.

அதேபோல TYO, BTF போன்ற அமைப்புகள் போராட்டம் பற்றிய தவறான கருத்துகளுடன் செயற்பபடுகின்றது, புலி ஆதரவு மட்டுமேதான் போராட்டம் என்று கருதுகிறார்கள் எனவும் சுட்டிக் காட்டி அவர்கள் புலிகளின் கொடிகளுடனும் பிரபாகரனின் படத்துடனும் செய்யும் போராட்டங்கள் பற்றியும் பிரஸ்தாபிக்கப்பட்டது. அதேவேளை BTFன் சமீபத்திய போராட்டங்களில் புலிகளை ஆதரிக்காதவர்களும் பெருவாரியாக பங்குபற்றியுள்ளனர் என்ற கருத்தும் சுட்டிக்காட்டப்பட்டது.

அரசியல் தலைமை வகிப்பில் புலிகள் தவறிவிட்டார்கள், இதன் காரணமாகவே போர் நிலைமைகள் மோசமடைந்தன, அதனாலேயே மக்கள் பாதிப்படைகின்றனர், கொல்லப்படுகின்றனர் என்றும் அதேவேளை யுத்த நிறுத்தம் கொண்டுவர நாம் ஒன்று சேர்ந்து இயங்க வேண்டும் என்றும் தமிழ் மக்களின் மீதான கொலை சாதாரணமானது அல்ல, இது Genicide என்றும் அழிவுகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும், அது நிரந்தரமாக நிறுத்தப்பட வேண்டும், அதேவேளை அரசியல்த்தீர்வும் நிரந்தர தீர்வாக கொண்டுவரப்பட வேண்டும், என்றும் கருத்து வைக்கப்பட்டது.

புதுக்குடியிருப்பு பிரதேசத்திலுள்ள மருத்துவமனை இடமாற்றம் செய்யப்ட்டது மனித உரிமை மீறல் எனவும் அதைவிட பாதுகாப்பு வலயத்தினுள் குண்டுகள் போடுவதும் அடிப்படை உணவுகள் வழங்கப்படாது இருப்பதும் மனித உரிமை மீறல்களே என்றும் இவை பற்றிப் பேச எம்மிடம் பொதுவான அமைப்பு இல்லை அப்படியான ஒரு பொது அமைப்பு எமக்கு இப்போதுள்ள தேவை என்ற கருத்து முன்வைக்கப்பட்டது.

ஒரு பொதுத்தளம் உருவாக்கப்பட வேண்டும் என்பதில் அனைவரும் உடன்பட்டனர். இதற்கான முன்முயற்ச்சியில் ஈடுபடுவது என்றும் அதில் ஒரு கட்டமாக BTF உடன் கதைப்பதற்கு ஒரு குழு தெரிவாகி உள்ளது. ஜக்கிய இலங்கைக்குள்ளேயே உள்ள சிறுபான்மையின மக்களின் பிரச்சினைகள் பற்றிய கூட்டங்களில் இதர சிங்கள முஸ்லீம் மக்களின் பிரதிநிதிகளும் பங்கு கொள்ளும் வகை செய்ய வேண்டும் என்ற கருத்தை எழுப்பிய போது இதற்கு பதிலளித்த வரதகுமார் இதற்கான நடவடிக்கைகளில் தாம் அக்கறையுடன் செயற்ப்படுவதாக கூறினார்.

திம்பு பேச்சு வார்த்தையில் ஏற்றுக் கொள்ளப்பட்ட கருத்துக்களின் அடிப்டையிலிருந்தே தமிழர்களின் அரசியல்த் தீர்விற்கான முயற்ச்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் இதன் அடிப்டையிலேயே நாம் ஒரு பொது நிலைப்பாட்டை தமிழர்களிடையேயும் தமிழ் அரசியல் அமைப்புக்களிடையேயும் உருவாக்கி தமிழ் பேசும் மக்களின் உரிமைகளை வென்றெடுக்க வேண்டும் என்ற கருத்துடன் கூட்டம் முடிவு பெற்றது.

ஜி 20 மாநாடு தொடர்பாக லண்டனில் ஆர்ப்பாட்டம்

protest_london.jpgஉலக பொருளாதார நெருக்கடி பற்றி அடுத்த வாரம் லண்டனில் நடக்கவிருக்கும் 20 முக்கிய நாடுகளின் மேனிலை மாநாட்டுக்கு முன்னொடியாக ஆயிரக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் நேற்று லண்டன் வீதிகளின் ஊடாக அணிவகுத்துச் சென்றார்கள்.

வறுமை, வேலைவாய்ப்புகள், பருவநிலை மாற்றங்கள் ஆகியவை குறித்து அவசர நடவடிக்கை வேண்டும் என்று குரல் எழுப்பிய இந்த அணிவகுப்பாளர் கூட்டணியில் பல தொழிற்சங்கங்கள் பல அறநிலையங்கள், மதசார்புக் குழுக்கள், சுற்றாடல் பாதுகாப்பு பிரச்சாரகர்கள், இப்படிப் பலர் இணைந்திருந்தார்கள். தாம் சொல்ல விரும்புவது சமாதானமான முறையில் போய் சேரவேண்டும் என்று ஏற்பாட்டாளர்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

ஆனாலும்,  அடுத்த சில தினங்களில் நடத்தப்படவுள்ள மற்றைய ஆர்ப்பாட்டங்கள் தெருக்கலவரங்களை உருவாக்கக்கூடும் என்று கருதும் பாதுகாப்பு அதிகாரிகள் உஷார் நிலையில் இருக்கிறார்கள். இதேபோல பொருளாதார நெருக்கடி பற்றிய கண்டன ஆர்ப்பாட்டங்கள் ஜெர்மனியிலும் நடத்தப்படுகின்றன.