April

April

பிரபாகரனைக் காப்பாற்றுவது சர்வதேசத்தின் நோக்கமல்ல மக்களுக்காக குரல் கொடுப்பதாகக் கூறுகிறார் டேவிட் மிலிபான்ட்

pr-con.jpgபிரபாகரனை காப்பாற்றுவது சர்வதேச சமூகத்தின் நோக்கமில்லை. அங்கு சிக்கியுள்ள பொதுமக்கள் மீது அக்கறை கொண்டே செயற்படுவதாக பிரிட்டிஷ் வெளிவிவகார அமைச்சர் டேவிட் மிலிபான்ட் தெரிவித்தார்.

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள அவர் அமைச்சர் ரோஹித போகொல்லாகமவுடனான சந்திப்பைத் தொடர்ந்து கூட்டு ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டார். இங்கு கருத்துத்தெரிவித்த அமைச்சர் மேலும் கூறியதாவது:

25 வருடமாக தொடரும் பயங்கரவாத நடவடிக்கை காரணமாக பெருமளவு மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்பொழுது மோதல்களை முடிவுக்கு கொண்டுவரும் காலம் உருவாகியுள்ளது. யுத்தம் இறுதிக் கட்டத்தை நெருங்கியுள்ள போதும் சமாதானத்தின் மூலமே உண்மையான வெற்றி ஏற்படும். தடுத்து வைத்துள்ள பொதுமக்களை புலிகள் சுதந்திரமாகச் செல்ல அனுமதிக்க வேண்டும்.

பாதுகாப்பு வலயத்திற்குள் சென்று பணியாற்ற ஐ.நா., ஐ.சி.ஆர்.சி. மற்றும் தொண்டு நிறுவனங்களுக்கு அனுமதி வழங்க ப்படவேண்டும். அரசாங்கம் மோதல்களை முடிவுக்கு கொண்டு வந்திருப்பதை நாம் வரவேற்கிறோம். மனிதாபிமான செயற்பாடு களை முன்னெடுப்பது தொடர்பில் நாம் அரசாங்கத்துடன் இணைந்து செயற்படத் தயாராக உள்ளோம் நிவாரணக் கிராமங்களில் உள்ள மக்களை மீள்குடியேற்ற அரசாங்கம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பிரித்தானியாவிலுள்ள தூதரகங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதை நாம் வன்மையாகக் கண்டிக்கிறோம். பொலிஸாரும் பாதுகாப்புத் தரப்பினரும் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றனர்.

பிரிட்டனில் வாழும் இலங்கை வாழ்தமிழ் மக்கள் தமது மக்களுக்காக இவ்வாறு போராட்டம் நடத்தி வருகின்றனர், அரசாங்கம் துரிதமாக மனிதாபிமான உதவிகளை வழங்குவதோடு அம்மக்களுக்கு ஏனைய மக்களைப் போன்று சம உரிமையுடன் வாழ நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்களை சுதந்திரமாக செல்ல அனுமதிக்க வேண்டும் என்றார்.

பிரான்ஸ் அமைச்சர்

இங்கு உரையாற்றிய பிரான்ஸ் தூதுவர் பேர்னாட் குச்னர் கூறியதாவது:

மோதல் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள சிவிலியன்கள் குறித்து நாம் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறோம். 25 வருட காலமாக தொடரும் யுத்தத்திற்கு முடிவு கட்டப்படவேண்டும். பாதுகாப்பு வலயத்தினுள் 20 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரையான பொதுமக்கள் சிக்கியுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. அந்த மக்களுக்கு உதவி வழங்குவதற்கு தொண்டு நிறுவனங்களுக்கு அனுமதி வழங்க வேண்டும்.

மோதல் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவ சகல நாடுகளும் முன்வரவேண்டும். பாதுகாப்பு வலயத்தினுள் உள்ள மக்களை பாதுகாக்கவும் மீட்கவும் ஆவன செய்யப்பட வேண்டும் என்றார்.

ரஜினி ரசிகர் தீக்குளிக்க முயற்சி: ரஜினி வீட்டின் முன்பு பரபரப்பு

சென்னையில் போயஸ் கார்டனில் உள்ள நடிகர் ரஜினி வீட்டின் முன்பு ரஜினி ரசிகர் ஒருவர் தீக்குளிக்க முயற்சி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகரை சேர்ந்த ரஜினி ரசிகர் ஒருவர், ரஜினியை பார்க்க வந்துள்ளார். போயஸ் கார்டனில் உள்ள ரஜினி வீட்டில் நுழைய முயன்றபோது, காவலாளிகள் அவரை அனுமதிக்கவில்லை. இதையடுத்து ஆத்திரம் அடைந்த ரசிகர் தீக்குளிக்க முயன்றுள்ளார்.

தீக்குளிக்க முயன்றவரை அங்கிருந்தவர்கள் தடுத்து நிறுத்தி, போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். விருதுநகரை சேர்ந்த ரஜினி ரசிகளை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஊடகவியலாளர்கள் நடுநிலைமையுடன் செயற்படவேண்டும் ஊடக சுதந்திரத்திற்கு அரசாங்கம் தடைவிதிக்கவில்லை -அமைச்சர் யாப்பா

laxman_yapa_abeywardena.jpg
ஊடகவியலாளர்கள் நடுநிலைமையுடன் செயற்பட வேண்டும் எனக் கூறிய ஊடகத்துறை அமைச்சர் லக்ஷமன் யாப்பா அபயவர்தன ஊடகச் சுதந்திரத்திற்கு அரசாங்கம் தடை எதுவும் விதிக்கவில்லை எனவும் தெரிவித்தார். மாத்தறை ராகுலக் கல்லூரியில் இடம் பெற்ற சிறுவர்களுக்கான “எமது தாய் கூறும் கதை’என்ற புத்தகத்தை வெளியிட்டபின் உரையாற்றுகையிலே இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், பத்திரிகைச் சுதந்திரம் நாட்டில் இல்லையென்று கூறுவதில் எவ்வித உண்மையுமில்லை. ஒரு அரசாங்கத்தின் செயற்பாடுகளை முன்னெடுத்துச் சென்று அந்த அரசாங்கத்திற்கு சக்தியையும் வலுவையும் முன்னெடுத்துச் செல்பவர்கள் பத்திரிகையாளர்கள். அவர்கள் மேற்கொண்டு வரும் இந்த அர்ப்பண சேவையை அரசாங்கம் மறந்துவிட்டது.

அதேபோல் ஊடகவியலாளர்கள் அரசாங்கத்தின் தவறுகளையும் வெளிப்படையாகவே வெளியிட்டு அவைகளைத் திருத்திவரவும் பின் நிற்பதில்லை. துணிச்சலுடன் நேர்மையாகச் செயல்படுபவர்களே உண்மையான ஊடகவியலாளர்கள். ஊடகவியலாளர்கள் எப்போதும் உண்மைகளை எழுத வேண்டும். எதையும் மிகைப்படுத்தி பிழையான செய்திகளை எழுதுவது பத்திரிகைத் தர்மத்துக்கு பிழையானது. சிலர் சில பத்திரிகையாளர்களை தமது கைக்குள் வைத்துக்கொண்டு தவறான கருத்துகளை வெளியிட முனைவது பிழையாகும்.

ஊடகவியலாளர்கள் எப்பக்கமும் சாராது எப்போதும் நடு நிலைமையிலேயே எழுத வேண்டும். இந்தநாட்டின் பத்திரிகைச் சுதந்திரம் எக்காரணம் கொண்டும் இருட்டடிப்புச் செய்யப்படமாட்டாது. சிறுவர்களை நல்லொழுக்கத்துடனும் கலாசாரப் பண்புகளுடனும் வளர்த்தெடுக்கவும் இவ்வாறான புத்தகங்கள் மென்மேலும் படைக்கப்பட வேண்டும். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மஹிந்த சிந்தனையை இப்போது மக்கள் அனைவரும் ஏற்றுள்ளனர். மேலும் இச் சிந்தனையின் மூலம் சகல வேலைத்திட்டங்களும் நடைமுறைப்படுத்தப்படுவதையும் காணக் கூடியதாகவுள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.

நாட்டின் தற்போதைய சூழ்நிலை காரணமாக மேதினத்தை அமைதியாக அனுஷ்டிக்கத் தீர்மானம் -திகாம்பரம் தெரிவிப்பு

unp.jpgநாட்டின் இன்றைய சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு தொழிலாளர் தேசிய சங்கம் இவ்வருட மேதினத்தினை அமைதியான முறையில் அனுஷ்டிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் மத்திய மாகாண சபை உறுப்பினருமான பி.திகாம்பரம் தெரிவித்தார்.

தொழிலாளர் தேசிய சங்கத்தின் தோட்டக் கமிட்டித் தலைவர்கள், பிரதேச அமைப்பாளர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள், தொழிற்சங்கத்தின் ஏனைய முக்கியஸ்தர்களுக்கான விசேட கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய போதே இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்தக் கூட்டத்தில் தொழிலாளர் தேசிய சங்கத்தின் பொதுச் செயலாளர் எஸ்.பிலிப், நிருவாகச் செயலாளர் சிவலிங்கம், நிதிச் செயலாளர் எஸ்.செபஸ்டியன், மத்திய மாகாண சபை உறுப்பினர் எம்.உதயகுமார், பிரதேச சபை உறுப்பினர்களான நாகராஜ், சிவானந்தன், கிறிஸ்டோபர், மனோகர் சங்கத்தின் பிரதி தலைவர் புண்ணிய மூர்த்தி, உபதலைவர் தங்கவேலு, செயற்குழு உறுப்பினர் கே.ஸ்ரீதரன் ஆகியோர் கலந்து கொண்டனர். பி.திகாம்பரம் தொடர்ந்து பேசுகையில் கூறியதாவது;

நடந்து முடிந்த மத்திய மாகாணசபைத் தேர்தலில் நுவரெலியா மாவட்டத் தமிழ் மக்கள் எமக்கு உரிய அரசியல் அங்கீகாரத்தினை வழங்கியுள்ளனர். இந்த அங்கீகாரத்தின் ஊடாக மலையகத் தமிழ் மக்களுக்காக நாம் நேர்மையாக சேவையாற்ற திடசங்கற்பம் கொண்டுள்ளோம்.

இன்று வடக்கில் இடம்பெறுகின்ற மோதல் சம்பவங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எம்மால் இயன்ற நிவாரணப் பொருட்களை வழங்குவதற்கு தீர்மானித்துள்ளோம். இவ்வாறானதொரு நிலையில் மக்களைத் திரட்டி மே தினக் கூட்டங்களைக் கொண்டாடும் மனநிலை எவருக்குமில்லை. ஆகவே இந்த மேதினத்தன்று தொழிலாளர்கள் ஒவ்வொரு தோட்டத்திலும் எமது தொழிற்சங்க கொடிகளை ஏற்றி தொழிலாளர் வர்க்க உரிமைகளுக்காகவும் நாட்டின் சமாதானத்துக்காகவும் பிரார்த்திக்குமாறு கேட்டுக் கொள்கின்றேன்.

இதேவேளை மஸ்கெலியா, றம்பொடை, புரட்டொப், பூண்டுலோயா பகுதிகளில் ஏற்படுத்தப்பட்டுள்ள குடிநீர் விநியோகத்திட்டங்களை மே தினத்தன்று திறந்து வைக்கவுள்ளோம். இவ்வாறு மலையகத்தில் சுயநலம் கருதாத அரசியல் கலாசாரமொன்றினை நாம் ஆரம்பித்து வைக்கின்றோம். இதேவேளை, தோட்டத்தொழிலாளர்களின் சம்பள மீளாய்வு தொடர்பாக இலங்கைத் தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் ஊடாக அழுத்தம் கொடுக்குமாறு நாம் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்துப் பேசியுள்ளோம் என்றார்

வடக்கில் இடம்பெயர்ந்த மக்களை டிச.31க்கு முன் மீள்குடியேற்ற முடிவு – செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் போகொல்லாகம

pr-con.jpgவன்னியில் இருந்து இடம் பெயர்ந்து வந்துள்ள பொது மக்களை டிசம்பர் 31 ஆம் திகதிக்கு முன் தமது சொந்த இடங்களில் மீள் குடியேற்ற திட்டமிட்டுள்ளதாக வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் ரோஹித போகொல்லாகம தெரிவித்தார்.

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள பிரித்தானிய வெளியுறவு அமைச்சர் டேவிட் மிலிபான்ட் மற்றும் பிரான்ஸ் வெளியுறவு அமைச்சர் பேர்னாட் குச்னர் ஆகியோருடன் இடம் பெற்ற இரு தரப்பு பேச்சுவார்த்தைகளை தொடர்ந்து இடம் பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார். இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் இரு நாட்டு வெளிவிவகார அமைச்சர்களும் கலந்து கொண்டனர்.

அமைச்சர் ரோஹித போகொல்லாகம மேலும் கூறியதாவது:-எனது அழைப்பின் பேரில் இலங்கை வந்துள்ள இரு நாட்டு தூதுவர்களும் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளனர். இரு நாட்டுத் தலைவர்களுடனும் நீண்ட நேரம் பேச்சு நடத்தப்பட்டது. வட பகுதியில் இடம் பெறும் மனிதாபிமான நடவடிக்கை குறித்து இங்கு முக்கியமாக ஆராயப்பட்டது. எதிர்வரும் காலங்களில் எவ்வாறு மனிதாபிமான செயற்பாடுகளை முன்னெடுப்பது என்பது குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது.

வட பகுதி மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்க பிரித்தானிய மற்றும் பிரான்ஸ் நாட்டு வெளியுறவு அமைச்சர்கள் முன்வந்துள்ளனர். இது குறித்து எமது அரசின் நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன். இடம் பெயர்ந்த மக்களுக்கு அளிக்கப்பட்டுள்ள வசதிகள், மீள் குடியேற்ற நடவடிக்கைகள் சரணடைந்தவர்களுக்கு புனர்வாழ்வு அளித்தல் என்பன குறித்தும் எமது சந்திப்பில் ஆராயப் பட்டது.

பயங்கரவாதம் இறுதிக் கட்டத்தை நெருங்கியுள்ளது. புலிகள் 6 சதுர கிலோ மீற்றருக்குள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளனர். பாதுகாப்பு வலயத்தில் உள்ள மக்களை மீட்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதோடு அம் மக்களுக்குத் தேவையான உணவு, மருந்து வகைகளும் அங்கு அனுப்பப்பட்டு வருகின்றன.

சுமார் ஒரு இலட்சத்து 20 ஆயிரம் பேர் கடந்த தினங்களில் அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கு வந்துள்ளனர். அவர்கள் நிவாரணக் கிராமங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதோடு அவர்களுக்குத் தேவையான சகல வசதிகளும் அளிக்கப்பட்டுள்ளது. இவர்களை துரிதமாக சொந்த இடங்களில் மீள் குடியேற்ற உள்ளோம்.

டிசம்பர் 31 ஆம் திகதிக்கு முன் மீள் குடியேற்ற நடவடிக்கைகளை பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். இடம்பெயர்ந்து வரும் மக்களுக்கு மேலதிக வசதிகள் அளிப்பதற்காக 2.5 மில்லியன் பவுண் உதவி வழங்க பிரித்தானிய முன்வந்துள்ளது.மீள்குடியேற்ற நடவடிக்கைகளுடன் இணைந்ததாக சரணடைந்த புலி உறுப்பினர்களுக்கு புனர்வாழ்வு அளிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.

பிரபாகரன் இன்னும் புதுமாத்தளனிலா இருக்கிறார் அல்லது தப்பி விட்டாரா என கேட்கப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர்; பிரபாகரன் இன்னும் பாதுகாப்பு வலயத்திலே மறைந்திருக்கிறார். இது தொடர்பாக எமக்கு தகவல்கள் கிடைத்துள்ளது என்றார்.

பாதுகாப்பு வலயத்திற்குச் செல்வதற்கு ஐ. நா. தொண்டு நிறுவனங்கள், அரச சார்பற்ற நிறுவனங்கள் என்பவற்றுக்கு அனுமதி வழங்கப்பட வேண்டுமென சில நாடுகள் கோரியிருப்பது குறித்து வினவியதற்கு பதிலளித்த அமைச்சர்; ஐ. நா. தொண்டு நிறுவனங்கள், 16 அரச சார்பற்ற நிறுவனங்கள் என்பன வவுனியாவில் இயங்கி வருகின்றன. பல நாடுகள் மருத்துவ உதவிகள் அளித்துள்ளன. பாதுகாப்பு வலயம் அடங்கலான ஏனைய பகுதிகளில் சென்று பணியாற்றுவது தொடர்பில் பாதுகாப்புச் சிக்கல்கள் உள்ளன. இந்த கோரிக்கை குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது என்றார்.

சுவீடன் அமைச்சரின் வருகை

இலங்கைக்கு விஜயம் செய்யும் இராஜதந்திரிகள் தொடர்பிலான ஒழுங்கு முறைகளை கடைப்பிடிக்க கால அவகாசம் தேவை. அதனாலேயே சுவீடன் வெளியுறவு அமைச்சரின் வருகை தாமதமானது. அடுத்த வாரம் இலங்கை வருமாறு அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் சொன்னார்.

கனரக ஆயுதத்தாக்குதல் நடத்தப்படமாட்டாது என்ற வாக்குறுதியினை அரசு மீறியுள்ளது : பிரிட்டன் வெளியுறவு அமைச்சரிடம் கூட்டமைப்பு தெரிவிப்பு

samthan-2.jpgபாதுகாப்பு வலயப் பகுதி மீது கனரக ஆயுதத்தாக்குதல் நடத்தப்படமாட்டாது என்ற வாக்குறுதியினை அரசாங்கம் மீறியுள்ளது. தமிழ் மக்களை இதுவரை ஏமாற்றிய அரசாங்கம் முழு உலகத்தையும் தற்போது ஏமாற்றி வருகின்றது. இத்தகைய நிலையில் இனியும் சர்வதேச சமூகம் வேடிக்கை பார்க்கக்கூடாது. உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் டேவிட் மிலிபான்டிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

இலங்கைக்கு விஜயம் செய்திருந்த பிரித்தானிய வெளிவிகார அமைச்சர் டேவிட் மிலிபான்டை இன்று மாலை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான இரா சம்பந்தன், சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆகியோர் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இந்தச் சந்திப்பின்போது கடந்த ஜனவரி மாதம் முதல் வன்னியில் பெருந்தொகையான பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் ஏராளமானோர் காயமடைந்துமுள்ளனர். இந்த நிலையில் சர்வதேச சமூகம் சரியான முறையில் நடவடிக்கை எடுக்காமை கவலையளிக்கின்றது. இலங்கையில் ஆட்சிசெய்த அரசாங்கங்கள் தமிழ் மக்களுக்கு பல்வேறு சந்தர்ப்பங்களில் பல உறுதிமொழிகளை வழங்கியபோதும் அவற்றைக் காப்பாற்றவில்லை. தற்போது சர்வதேச சமூகத்திற்கு வழங்கும் உறுதிமொழிகளையும் அரசாங்கம் நிறைவேற்றத் தவறுகிறது என்று தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் இடம்பெயர்ந்த மக்களுடன் பிரிட்டிஷ், பிரெஞ்சு அமைச்சர்கள் சந்திப்பு

wanni-visit.jpgஇலங்கைக்கு ஒருநாள் விஜயமொன்றை மேற்கொண்ட பிரிட்டிஷ் மற்றும் பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சர்கள் நேற்று புதன்கிழமை பிற்பகல் வவுனியா சென்று வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து வந்த மக்களை சந்தித்ததுடன் அவர்கள் தங்கியுள்ள நலன்புரி நிலையங்களையும் பார்வையிட்டுள்ளனர். பிரிட்டிஷ் வெளிவிவகார அமைச்சர் டேவிட் மிலிபன்ட் மற்றும் பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சர்கள் பேர்னாட் குச்னர் ஆகியோர் நேற்றுக் காலை கொழும்பு வந்தனர். அங்கு இலங்கை வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகமவைச் சந்தித்தபின் வவுனியாவுக்கான விஜயத்தை மேற்கொண்டனர்.

பிற்பகல் 2 மணியளவில் விமானப்படையின் ஹெலிகொப்டர் மூலம் செட்டிகுளம் வந்த இவர்களை மீள் குடியேற்ற அமைச்சர் ரிசாட் பதியுதீன், வடக்கு மாகாண ஆளுநர் டிக்ஷன் சரத் சந்திர தேல பண்டா, வன்னிக் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜெகத் ஜெயசூரிய, வன்னிப் பிராந்திய பிரதிப் பொலிஸ் மா அதிபர் நந்தன முனசிங்க, மாவட்ட அரச அதிபர் திருமதி. சாள்ஸ் மற்றும் சிரேஷ்ட இராணுவ, பொலிஸ் அதிகாரிகள் வரவேற்றனர்.

இருநாட்டு அமைச்சர்களுடன் இலங்கை வெளிவிவகாரச் செயலாளர் பாலித கோஹணவும் வந்திருந்தார். செட்டிகுளம் மெனிக் பாம் பகுதியிலுள்ள நலன்புரி நிலையங்களில் வன்னியிலிருந்து வருகைதந்த 75,000 க்கும் மேற்பட்ட மக்கள் தங்கியுள்ளனர்.

இவர்கள் தங்கியிருக்கும் சில முகாம்களுக்குச் சென்ற இரு நாட்டு அமைச்சர்களும் அங்குள்ள வசதிகள் குறித்து சம்பந்தப்பட்டவர்களிடம் கேட்டறிந்து கொண்டனர். இதன்போது அவர்கள் அங்குள்ள மக்களைச் சந்தித்து அவர்களது நிலைமைகள் குறித்தும் வன்னியில் அவர்கள் பட்ட துன்ப துயரங்கள் குறித்தும் கேட்டறிந்தனர்.

இதன்பின் செட்டிகுளத்தில் பிரான்ஸின் உதவியுடன் அமைக்கப்பட்டுள்ள வைத்தியசாலைக்கும் சென்ற இருநாட்டு அமைச்சர்களும் அங்குள்ள நிலைமைகளையும் பார்வையிட்டனர். சுமார் இரு மணிநேரம் அங்கு தங்கியிருந்த இவர்கள் மாலை நான்கு மணியளவில் ஹெலிகொப்டர் மூலம் கொழும்பு திரும்பினர்.

யசூசி அகாசி இன்று இலங்கை விஜயம்

akashi2.jpgஜப்பானின் இலங்கைக்கான விசேட தூதுவர் யசூசி அகாசி மூன்று நாள் விஜயம் மேற்கொண்டு இன்று இரவு இலங்கை வரவுள்ளார். இன்று இரவு இலங்கை வரவுள்ள ஜப்பானின் விசேட தூதுவர் யசூசி அகாசி வவுனியா விஜயம் செய்து செட்டிக்குளம் மனிக்பாம் நிவரண கிராமத்திற்கு செல்லவுள்ளதாக தெரிவியவருகிறது.

அத்துடன் தமது இலங்கை விஜயத்தின் போது அரசாங்கத்தின் முக்கிய அதிகாரிகளையும் சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தகவல்கள் தெரிவிக்கின்றன.

சர்வதேச நாணய நிதியத்தின் கடனை பெறுவதில் தாமதம் இல்லை: இலங்கை மத்திய வங்கி

சர்வதேச நாணய நிதியத்தின் கடன் தொகையை பெறுவதில் எவ்வித தாமதமும் இல்லை என இலங்கை மத்திய வங்கி இன்று தெரிவித்துள்ளதாக ரொய்டர்ஸ் தெரிவித்துள்ளது.

“இது முற்றிலும் தவறு. கடன் தொகையை பெறுவதில் எந்தவித தாமதமும் இல்லை.  இறுதி பேச்சுவார்த்தைகல் முடிவடைந்துள்ளன. அத்துடன் தொழில்நுட்பம் சார்ந்த கணிப்பீடுகளும் முடிவடைந்துள்ளது” என மத்திய வங்கியின் பொருளாதார ஆராய்ச்சித் திணைக்கள பதில் தலைவர் கே.டி.ரணசிங்க ரொய்டர்ஸ் செய்திச் சேவைக்கு தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் பாதுகாப்பு மதிப்பீட்டு குழு தற்போது கொழும்பில் அரச தரப்பின் சிரேஷ்ட அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

“கடன் தொடர்பான சகல நடவடிக்கைக்ளையும் பூர்த்தி செய்ய காலம் தேவை.கடனுக்கான சகல கோரிக்கைகளும் சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று குழுவிற்கு சமப்பிக்கப்படும்” என ரணசிங்க தெரிவித்தார்.

இலங்கையில் இடம்பெறும் மோதல்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான அத்தியாவசிய உதவிகளை மேற்கொள்ள இலங்கை அரசாங்கத்தை தூண்டும் பொருட்டு சர்வதேச நாணய நிதியத்தின் 1.9 பில்லியன் அமெரிக்க டொலர் கடன் தொகையினை வழங்க காலம் தாமதித்துள்ளதாக அமெரிக்கா நேற்று தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது

இடம்பெயர்ந்தோருக்கான நிவாரண உதவியில் கல்வி அமைச்சும் பங்கேற்பு!

donation_food_anandacollage.jpg வடக்கிலிருந்து இடம்பெயர்ந்து வவுனியாவிலுள்ள நலன்புரி முகாம்களில் வாழும் மாணவர்கள் உள்ளிட்ட பொதுமக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்க கல்வி அமைச்சும் முன்வந்துள்ளது.

கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்தவின் பணிப்புரைக்கமைய அமைச்சின் செயலாளர் நிமல் பண்டாரவின் வழிகாட்டலுடன் இலங்கை பரீட்சைத் திணைக்களம், கல்வி வெளியீட்டுத் திணைக்களம், தேசிய கல்வி நிறுவகம் மற்றும் கல்வியியற் கல்லூரிகள் என்பன ஒன்றிணைந்து புதிய ஆடைகள்,  டவல்கள்,  தண்ணீர் போத்தல்கள், உலர்உணவு வகைகள்,  மருந்துப் பொருட்கள்,  பாத்திரங்கள்,  சவர்க்காரம்,  பற்பசை போன்றவற்றை அனுப்பவுள்ளன.

எதிர்வரும் மே மாதம் 5ஆம் திகதிக்கு முன்னர் கல்வி அமைச்சின் மேலதிக செயலாளருடன் தொடர்புகொண்டு இடம்பெயர்ந்த மக்களுக்கு வழங்குவதற்காக சேகரிக்கப்பட்ட பொருட்களின் விபரம் பற்றி தெரிவிக்குமாறு அமைச்சு மேல்குறிப்பிடப்பட்ட நிறுவனங்களைக் கேட்டுக்கொள்கிறது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.