உள்நாட்டு யுத்தத்தினால் ஏற்பட்ட மனித அவலம் வன்னி மக்களை நீண்ட துயர்மிகு வாழ்விற்குள் தள்ளியுள்ளது. இளம்தலைமுறை மாணவர் சமூகம் காணாமல் போய்விட்டது. அன்புக்குரியவர்களை இழந்தவர்களும் அங்கங்களை இழந்தவர்களுமாக வாழ்வாதாரங்களை இழந்துள்ள மக்களுக்கு பல்வேறு வகையிலும் கைகொடுக்க வேண்டிய கடமைப்பாடு புலம்பெயர்ந்த தமிழர்களுக்கு உள்ளது. இது உடனடியான நாளாந்த வாழவியல் தேவைகளுடன் மட்டுப்படுத்தப்படாமல் நீண்டகால நோக்கிலும் மேற்கொள்ளப்படுவது அவசியம்.
இந்நிலையில் ஏப்ரல் 4ல் வன்னிப் பகுதி வலயக் கல்விப் பணிப்பாளர் த மேகநாதன் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்ற இருக்கும் 1057 மாணவர்கள் (மார்ச் இறுதிப்பகுதி புள்ளிவிபரம்) இடம்பெயர்ந்தவர்களுக்காக அமைக்கபக்பட்ட 13 நலன்புரி முகாம்களில் இருப்பதாகவும் அவர்களுக்கான பாட நூல்களை வழங்கி உதவுமாறும் தேசம்நெற்றைக் கேட்டுக்கொண்டார்.
தற்போது நலன்புரி முகாம்களில் உள்ள மாணவர்கள் மிகவும் கடினமான காலகட்டத்தில் வாழ்ந்துகொண்டு இருக்கின்றீர்கள். அதற்கு மத்தியிலும் அவர்கள் கல்வியை கைவிடாமல் தொடர்வது மிக மிக அவசியம். இளமையில் கல்வி சிலையில் எழுத்து என்பது முதுமொழி மட்டுமல்ல உண்மையானதும் கூட. ஒரு சமூகத்தின் அத்திவாரம் அந்த சமூகத்தின் இளம் தலைமுறையினருக்கு வழங்கப்படும் கல்வி. அது பரீட்சையுடன் மட்டும் முடிந்துவிடாது.
புலம்பெயர்ந்து வாழும் உங்கள் உறவுகளாகிய நாம் அவர்கள் எதிர்கொள்ளும் மிகத்துயரமான வாழ்வை எண்ணி வேதனைப்படுகின்றோம். சிலசமயம் குற்ற உணர்வுக்கும் உள்ளாகிறோம். அக்குற்ற உணர்வில் இருந்து எம்மை சற்று விடுவித்துக் கொள்ள அவர்களுக்கு ஆறுதலாக இருக்க நினைக்கின்றோம். அந்த வகையில் சிறுவர் சிறுமியராகிய அவர்கள் எதிர்கொள்ள இருக்கும் புலமைப் பரிசில் பரீட்சைக்கு படிப்பதற்கு உதவும் வகையில் இப்பாடநூல்களை மாணவர்களுக்கு வழங்கும் பொறுப்பை தேசம்நெற் ஆசிரியர் குழு ஏற்றுக்கொண்டு உள்ளது.
பரீட்சைக்காக மட்டுமல்ல மாணவர்கள் தங்கள் அறிவை வளர்த்துக் கொள்ள இப்புத்தகம் உதவியிருக்குமானால் அது எமக்கு மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுக்கும்.
இப்பாடநூல் பதிப்பினை சிந்தனை வட்டம் மேற்கொள்கிறது. இப்பாடநூலிற்காகும் செலவின் மூன்றில் ஒரு பகுதியான 200 000 ரூபாய்களைச் சிந்தனை வட்டம் பொறுப்பேற்பதாக அதன் அமைப்பாளார் புன்னியாமீன் தெரிவித்து உள்ளார். மிகுதியான 400 000 ரூபாயை தேசம்நெற் ஆசிரியர் குழுவினர் பொறுப்பேற்கின்றனர். ஆனால் தற்போது மாணவர் தொகை அதிகரித்து இருப்பதால் இத்தொகை அதிகரிக்க வேண்டி இருக்கும்.
மேலும் மாணவர்களின் கல்விக்கான மேலதிக பாடப்புத்தகங்களை வழங்கவும் சிந்தனை வட்டம் நடவடிக்கைகளை மேற்கொண்டு உள்ளது.
இலங்கையில் அரசாங்கப் பரீட்சை என்ற அடிப்படையில் 03 பிரதான பரீட்சைகள் நடைபெறுகின்றன.
1. தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை
2. க.பொ.த சாதாரணதர பரீட்சை
3. க.பொ.த உயர்தர பரீட்சை
இப்பரீட்சைகளுள் தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையை பாடசாலை மாணவனொருவன் எதிர்நோக்கும் முதலாவது பரீட்சையாகும். தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையானது மாணவர்களை உயர்தர பாடசாலைகளுக்குத் தேர்ந்தெடுப்பதற்கும், மாணவர்களுக்கு உதவிப் பணம் வழங்குவதற்குமான பரீட்சையாக அமைந்துள்ளது. இப்பரீட்சையில் அதிகூடிய புள்ளிகளைப்பெறும் மாணவர்கள் இலங்கையிலுள்ள மிகவும் பிரபல்யமான பாடசாலைகளுக்கு அனுமதிக்கப்படுவர். அதேநேரம், இப்பரீட்சையில் சித்தியடையும் மாணவர்களுக்கு க.பொ.த. உயர்தரம் சித்தியடையும் வரை மாதந்தோறும் (தற்போது) ரூபாய் 500 உதவிப் பணமாக அரசாங்கத்தால் வழங்கப்படும். உரிய மாணவன் பல்கலைக்கழகத்துக்குத் தெரிவு செய்யப்பட்டாலும் இத்தொகை அதிகரிக்கப்பட்டு வழங்கப்படும்.
தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையானது ஒரு போட்டிப் பரீட்சையாகும். சராசரியாக ஆண்டொன்றுக்கு 70000 மாணவர்கள் மட்டில் அகில இலங்கை ரீதியில் தமிழ்மொழி மூலமாக தோற்றுவர். இவர்களுள் சுமார் 3500 மாணவர்கள் மட்டில் சித்தியடைவர்.
வன்னியில் இடம்பெயர்ந்துள்ள 1057 மாணவர்கள் 13 இடைத்தங்கல் முகாம்களில் தரம் 05 பரீட்சையை எழுதுகின்றனர். இம்மாணவர்களுக்கு மேலதிக உசாத்துணை வழிகாட்டிகளான தேசம்நெற் உம், சிந்தனைவட்டமும் இணைந்து புதிய பாடத்திட்டத்திற்கமைய (2009ஆம் ஆண்டில் புதிய பாடத்திட்டத்திற்கமைய முதற் தடவையாக தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.) 30 மாதிரி வினாத்தாள்களையும் நான்கு வழிகாட்டிப் புத்தகங்களையும் வழங்கவுள்ளது.
மே 2ல் (எதிர்வரும் சனிக்கிழமை) மனித அவலத்தில் இருந்து மீண்ட வன்னி மக்களை நோக்கி – சந்திப்பு என்ற தலைப்பிலான கலந்தரையாடல் ஒன்றினை தேசம்நெற் ஈழவர் திரைக்கலை ஒன்றியத்துடன் இணைந்து மேற்கொண்டு உள்ளனர். எதிர்கால உதவி நடவடிக்கைகள் பற்றி கலந்துரையாடப்படுவதுடன் உதவி வழங்க முன்வரும் ஆர்வலர்கள் மற்றும் அமைப்புகளுடன் இணைந்து உதவிகளை பாதிக்கப்பட்ட மக்களுக்குச் சென்றடைவதை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகள் பற்றியும் இச்சந்திப்பில் ஆராயப்பட உள்ளது.
வலயக் கல்விப் பணிப்பாளர் த மேகநாதனால் சிந்தனை வட்டத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட மடல்:
.