இலங்கைப் பிரச்சனையை முன் வைத்து மக்களவைத் தேர்தலை புறக்கணிக்க சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.
இந்தக் கட்சியுடனும் கார்த்திக்கின் நாடாளும் மக்கள் கட்சியுடனும் கூட்டணி அமைக்க பாஜக முயன்றது. ஆனால், சரத்குமார் திடீரென மனித நேய மக்கள் கட்சியுடன் பேச்சுவார்த்தையை ஆரம்பித்து பாஜகவை கழற்றிவிட்டார். கார்த்திக் பாஜகவுடன் பேச்சுவார்த்தையை நடத்திக் கொண்டே சில தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்துவிட்டார். இதனால் இந்த இருவரையும் விட்டு விட்டு தனித்துப் போட்டி என பாஜக அறிவித்துவிட்டது.
இந் நிலையில் சரத்குமார்-கார்த்திக் கூட்டணி அமைக்கலாம், இருவரும் இணைந்து மனித நேய மக்கள் கட்சியுடன் கூட்டணி அமைக்கலாம் என்று கூறப்பட்டது. ஆனால், இந்த இருவரும் இல்லாமலேயே இன்று புதிய தமிழகம், மனித நேய மக்கள் கட்சி, இந்திய தேசிய லீக் ஆகியவை இணைந்து புதிதாக ஒரு கூட்டணியை உருவாக்கிவிட்டன. இதில் சரத்குமாரையும் சேர்க்க இந்தக் கூட்டணியைச் சேர்ந்த கட்சிகள் முயன்று வருகின்றன.
இந் நிலையி்ல் சமத்துவ மக்கள் கட்சியின் தேர்தல் ஆலோசனை குழுக் கூட்டம் அதன் தலைவர் சரத்குமார் தலைமையில் நடந்தது. இதில் நாடாளுமன்றத் தேர்தல் நிலைபாடு குறித்து முடிவெடுக்க சரத்குமாருக்கு முழு அதிகாரமும் வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
முன்னதாக கூட்டத்தில் பேசிய தலைவர்கள் பலரும் முதலில் கட்சிக்கு அனைத்து மாவட்டங்களிலும் நிர்வாகிகளை நியமிக்க வேண்டும், பின்னர் தான் தேர்தலை சந்திக்க முடியும் என்று கூறியதாகத் தெரிகிறது. மாவட்ட நிர்வாகிகளையே நியமிக்காமல் தேர்தலில் போட்டியிடுவது வேஸ்ட் என பலரும் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
இந் நிலையில் இலங்கையில் நடக்கும் தமிழர் படுகொலையை கண்டித்து தேர்தலையே புறக்கணிக்கலாம் என்றும் கட்சியின் சில தலைவர்களும் யோசனை கூறியுள்ளனர். இதையடுத்து தேர்தலை புறக்கணிப்பதா அல்லது சில தொகுதிகளில் ம்டடும் போட்டியிடுவதா, கூட்டணி அமைப்பதா என்பதை சரத்குமார் இன்றோ நாளையோ அறிவிப்பார் என்று தெரிறது.