May

May

வெள்ளமுள்ளிவாய்க்கால் பகுதியில் இருதரப்புக்கிடையில் கடும் மோதல்

waroooo.jpgவன்னியில் முன்னெடுக்கப்பட்டு வரும் இராணுவ நடவடிக்கைகள் காரணமாக சுமார் 7சதுர கிலோமீற்றர் நிலப்பரப்புக்குள் விடுதலைப் புலி உறுப்பினர்களை முடக்கியுள்ள படையினருக்கும் புலிகளுக்கும் இடையில் முல்லைத்தீவு வெள்ளமுள்ளிவாய்க்கால் பகுதியில் கடும் மோதல்கள் இடம்பெற்றுள்ளன என்று படைத்தரப்பு தெரிவிக்கினறது.

முசலியில் 122 குடும்பங்கள்; நேற்று மீளக் குடியமர்வு

house_new.jpgவடக்கின் வசந்தம் திட்டத்தின் கீழ் மன்னார், முசலி பிரதேச செயலகப் பிரிவிலுள்ள சவேரியர்புரம் கிராமசேவகர் பிரிவில் 122 குடும்பங்களை மீளக் குடியமர்த்தும் பணிகள் நேற்று நடைபெற்றன. ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் பசில் ராஜபக்ஷ எம். பி. வட மாகாண விசேட செயலணியின் தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, மீள்குடியேற்ற அமைச்சர் ரிஷாத் பதியுதீன், தேசிய நல்லிணக்க அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்), கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், அமைச்சர் சந்திரசேன, வடமாகாண ஆளுநர் டிக்ஷன் தால, கடற்படை தளபதி வசந்த கரண்ணாகொட ஆகியோரின் பங்களிப்புடன் 409 பேரைச் சேர்ந்த 122 குடும்பங்கள் மீளக்குடியமர்த்தப்பட்டன.

எதிர்வரும் 11ஆம் திகதி முசலி பிரதேச செயலகத்துக்குட்பட்ட 10 கிராம சேவகர் பிரிவுகளிலும் 2100 பேரைக் கொண்ட 525 குடும்பங்கள் மீளக் குடியமர்த்தப்படவும் உள்ளன. மீளக் குடியமர்த்தப்பட்டவர்களில் மீனவர்கள் கடலுக்குச் சென்று மீன்பிடிப்பதற்கான அனுமதியும் நேற்று பெற்றுக்கொடுக்கப்பட்டன. கடற்படைத் தளபதி மற்றும் பசில் ராஜபக்ஷ எம். பி. ஆகியோர் கைச்சாத்திட்டு அனுமதி வழங்கப்பட்டது.

மேலும் மன்னாரிலிருந்து முசலிக்கு போக்குவரத்து சேவைகளுக்கு என இரண்டு பஸ் வண்டிகளும் சேவையில் நேற்று முதல் ஈடுபடுத்தப்பட்டன. பாடசாலைகள்  ஆரம்பமாகின்றன. 11 ஆசிரியர்கள் கற்பித்தல் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

40 அத்தியாவசியப் பொருட்கள் உள்ளடக்கப்பட்ட நிவாரணப் பொருட்களும் இந்த மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டன. சுமார் 6 மாத காலத்திற்கு போதுமான அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டதுடன் அத்தியாவசிய பொருட்களை நியாய விலையில் பெற்றுக் கொள்வதற்காக கூட்டுறவு கடையும், மருத்துவ வசதிகளும் நேற்று செய்துகொடுக்கப்பட்டன. முசலி பிரதேச செயலக பிரிவில் எஞ்சியுள்ள எட்டு கிராம சேவகர் பிரிவில் நிலக்கண்ணி வெடிகள், மிதிவெடிகள் அகற்றும் பணிகள் முடிவடைந்ததும் மீள்குடியேற்றத்திற்கான திகதி அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

வவுனியா நிவாரணக்கிராமங்களுக்கு ரூ. 38 மில் செலவில் குடிநீர் திட்டம்

mahinda-samarasinha.jpgவவுனியா நிவாரணக் கிராமங்களிலுள்ள மக்களுக்கு தடையின்றி தண்ணீர் வசதி அளிப்பதற்காக 38 மில்லியன் ரூபா செலவில் குடிநீர் திட்டமொன்று அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அனர்த்த நிவாரண மற்றும் மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார். இதனூடாக மே மாதம் நடுப்பகுதி முதல் சகல முகாம்களுக்கும் நீர்க்குழாய்களினூடாக நீர் வழங்க உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

வன்னி நிலைமை தொடர்பாக விளக்கும் ஊடகவியலாளர் மாநாடு ஜனாதிபதி செயலகத்தில் நேற்று (30) நடைபெற்றது. இங்கு கருத்துத் தெரிவித்த அமைச்சர் மேலும் கூறியதாவது, நலன்புரி முகாம்களில் உள்ள மக்களுக்கு தற்பொழுது பவுசர் ஊடாகவே நீர் வழங்கப்படுகிறது. இடம்பெயர்ந்த மக்களுக்கென அகதிகளுக்கான ஐ. நா. உயர் ஸ்தானிகராலயம் 25 ஆயிரம் கூடாரங்களும் 25 இலட்சம் லீட்டர் குடிநீர் என்பன வழங்கியுள்ளன. இது தவிர வவுனியாவில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிரந்தமாக நீர்வசதி அளிக்கும் வகையில் குடிநீர் திட்டமொன்றை வழங்கவும் அகதிகளுக்கான ஐ.நா உயர் ஸ்தானிகராலயம் முன்வந்துள்ளது. இதற்கு 38 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது. நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை இதில் 20 மில்லியன் ரூபா வழங்க உள்ளது என்றார்.

இங்கு கருத்துத் தெரிவித்த வெளிவிவகார அமைச்சின் செயலாளர் பாலித கொஹன கூறியதாவது, சில அரச சார்பற்ற நிறுவனங்கள் மக்களுக்கு வழங்கும் வசதிகள் தொடர்பான தவறான செய்திகளை பரப்பி வருகின்றன. வவுனியா முகாமிலுள்ள மக்கள் தண்ணீர் வசதியின்றி இருப்பதாக ஒரு அரச சார்பற்ற தொண்டு நிறுவனமொன்று குறுஞ்செய்தியூடாக அறிவித்தது. ஆனால் நாம் அங்கு சென்ற போது நீண்ட வேலிகளில் பெருமளவு உடைகள் காயப்போடப்பட்டிருந்ததைக் காணக்கூடியதாக இருந்தது.

ஆள்திரட்ட பண நாயகமும், மதுநாயகமும் உதவும் பரிதாப நிலைக்கு சர்வதேச தொழிலாளர் தினம் – புன்னியாமீன்

mayday01.jpgஇன்று மேதினம்  Day of the International Solidarity of Workers. அதாவது ஆண்டுதோறும் மே மாதம் முதலாம் திகதி உலகமெங்கும் உழைக்கும் வர்க்கத்தின், தொழிலாளர்களின் தினமாக கொண்டாடப்படுகின்றது. இன, மத, மொழி, நாடு என்ற யாதொரு வேறுபாடுமின்றி உழைக்கும் வர்க்கத்தின் ஒன்றுபட்ட சக்தியை, ஒற்றுமையைப் பறைசாற்றும் தினமாகக் கொண்டாடப்படுகின்றது.

உலக கைத்தொழில் புரட்சியின் பயனாக ஆலைகளின் பெருக்கம்,  இயந்திரமயமாக்கம், பேரளவு உற்பத்தி ஆகிய காரணிகள் தொழிலாளரை ஒரு வர்க்கமாக ஒன்றுபட வைத்தது. ஒருபுறம் முதலாளிகள் உற்பத்தி முயற்சியில் இலாபம் பெறுகின்றனர். தொழிலாளரிடமிருந்து ஊழியத்தைப் பெறுகின்ற அளவு அவர்களுக்கான உரிமைகள், ஊதியம், சலுகைகள் என்பவற்றை வழங்குவதில் உற்பத்தியாளர் ஆர்வம் காட்டவில்லை. கால்வயிற்றுக் கஞ்சிக்காக தம் உழைப்பை நல்கும் தொழிலாளர் வேறு வழியின்றி முதலாளிகள் விதிக்கும் நிபந்தனைகளுக்குக் கட்டுப்பட்டனர். இதனால் தொழிலாளர் வாழ்க்கையை சிறுமையும், வறுமையும் ஆட்கொண்டன. அதே நேரம் தொழில் உரிமையாளர்களால் நாளொன்றுக்கு 12 முதல் 18 மணி நேரக் கட்டாய வேலை செய்யவேண்டுமென  தொழிலாளிகள் நிர்ப்பந்திக்கப்பட்டனர்.

இப்படிப்பட்ட பின்னணியில் கட்டாய வேலைநேரத்திற்கு எதிராக பல்வேறு நாடுகளில்  குரல்களும் ஆங்காங்கே எழ ஆரம்பித்தன. குறிப்பாக இங்கிலாந்தில் தோன்றிய  ஆவண இயக்கம் 6 முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து தொடர் போராட்டங்களை நடத்தியது. இதில்  10 மணி நேர வேலைக் கோரிக்கை முதன்மை பெற்றிருந்தது.

1830களில் பிரான்சில் நெசவுத் தொழிலில் ஈடுபட்டிருந்த தொழிலாளிகள் தினமும் கட்டாயமாக 15 மணி நேரம் உழைக்க வேண்டி இருந்தனர். இதை எதிர்த்து அவர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தை நடத்தினர். 1834இல் ஜனநாயகம் அல்லது மரணம் என்ற கோஷத்தை முன்வைத்து பெரும் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். ஆனால் இப்போராட்டங்கள் தோல்வியில் முடிவடைந்தன.

இந்நிலையில் அவுஸ்திரேலியாவில் மெல்பேர்னில் கட்டிடத் தொழிலில் ஈடுபட்டிருந்த தொழிலாளிகள் உலகிலேயே முதன் முதலாக 8 மணி நேர வேலை கோரிக்கையை முன்வைத்து 1856இல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு, வெற்றியும் பெற்றனர். மெல்பேர்ன் கட்டிடத் தொழிலாளர்களின் போராட்டம் 8 மணி நேர வேலை, 8 மணி நேர பொழுதுபோக்கு, 8 மணி நேர ஓய்வு என்ற அடிப்படையில் அமைந்திருந்தது. மெல்பேர்ன் தொழிலாளர்களின் வெற்றி தொழிலாளர்  வர்க்க போராட்டத்தின் மைல்கல்லாக அமைந்தது எனலாம்.

சார் மன்னரின் ஆட்சியின் கீழ் ரஷ்யத் தொழிலாளிகள் பெரும் துன்பங்களுக்கு ஆளானார்கள். இங்கும் 1895 – 1899க்கு இடைப்பட்ட காலத்தில் நூற்றுக்கணக்கான வேலை நிறுத்தங்கள் நடைபெற்றன. 1896 ஏப்ரல் மாதத்தில் லெனின் மே தினத்திற்காக எழுதிய சிறு பிரசுரத்தில், ரஷ்யத் தொழிலாளிகளின் நிலைமை குறித்து விரிவாக எடுத்துரைத்திருந்ததுடன் ரஷ்யத் தொழிலாளர்களின் பொருளாதார போராட்டம் – அரசியல் போராட்டமாக எழுச்சிக் கொள்ள வேண்டும் என்பதையும் வலியுறுத்தினர். தொழிலாளிகளின் 8 மணி நேர வேலைக்கான போராட்டங்களே 1917- ரஷ்யப் புரட்சிக்கு வித்திட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவில் 1832இல் பொஸ்டன் நகரில் கப்பலில் பணியாற்றிய தச்சுத் தொழிலாளர்கள் 10 மணி நேர வேலை கோரிக்கையை முன்வைத்து வேலை நிறுத்தம் செய்தனர். அதே போல், 1835இல் பிலடெல்பியாவிலும், பென்சில்வேனியாவிலும் இதே கோரிக்கையை முன்வைத்து போராட்டங்கள் நடத்தப்பட்டன. பென்சில்வேனியாவில் நிலக்கரிச் சுரங்கத் தொழிலாளர்களும், இரயில்வே தொழிலாளர்களும் குறைவான வேலை நேரத்தை வலியுறுத்தி 1877இல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.அமெரிக்க முதலாளிகள் ஆரம்பத்தில் இதனைக் கண்டு கொள்ளவில்லை.

இதைத் தொடர்ந்து அமெரிக்காவின் பல்வேறு மாநிலங்களில் உள்ள தொழிலாளர் இயக்கங்களை இணைத்து “அமெரிக்க தொழிலாளர் கூட்டமைப்பு” என்ற இயக்கம் 1884ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இவ்வியக்கம் அடிப்படையில் 8 மணி நேர வேலை கோரிக்கையை முன்வைத்து தொடர்ந்து பல போராட்டங்களை நடத்தியது. அத்தோடு மே 1, 1886 அன்று நாடு தழுவிய வேலை நிறுத்தத்திற்கு அறைகூவல் விடுத்தது. இவ்வியக்கமே மே தினம் பிறப்பதற்கு காரணமாகவும் அமைந்தது.

தொழில் நகரங்களான நியூயார்க், சிகாகோ, பிலடெல்பியா, மில்விக்கி, சின்சினாட்டி, பால்டிமோர் என அமெரிக்கா முழுவதும் 3,50,000 தொழிலாளர்கள் பங்கேற்ற மாபெரும் வேலை நிறுத்தம் துவங்கியது. இவ்வேலை நிறுத்தத்தில் 1200க்கும் மேற்பட்ட நிறுவனங்களில் உள்ளதொழிலாளர்கள் பங்கெடுத்துக் கொண்டனர் என கூறப்படுகின்றது. தொழிலாளர்களின் எழுச்சிமிக்க வேலை நிறுத்தத்தினால், அமெரிக்காவின் பெரிய நிறுவனங்கள் மூடப்பட்டன. இரயில் போக்குவரத்து நடைபெறவில்லை. வேலை நிறுத்தத்தில் பங்கேற்ற தொழிலாளர் ஊர்வலங்கள் அமெரிக்காவை உலுக்கியது. மிச்சிகனில் மட்டும் 40,000 தொழிலாளர்களும், சிக்காகோவில் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்களும் கலந்துக் கொண்டனர்.

இந்த எழுச்சி சிக்காகோவிலும் ஏனைய பிரதேசங்களிலும் தொடர்ந்தன. சிக்காகோவில் வேலை நிறுத்தப்போராட்டம் சூடுபிடித்தது. மே 3, 1886 அன்று “மெக்கார்மிக் ஹார் வஸ்டிங் மெஷின் நிறுவனத்தின்” வாயிலில் 3000-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் அணி திரண்டு கண்டனக் கூட்டத்தை நடத்தினர். இங்கு இடம்பெற்ற கலவரத்தில் 4 தொழிலாளர்கள் பொலிஸாரின்  துப்பாக்கிச் சூட்டிற்குப் பலியாயினர். இச்சம்பவத்தை கண்டிக்கும் வகையில் ஹேமார்க்கெட் சதுக்கத்தில் மே 4 அன்று மாபெரும் கண்டன கூட்டம் ஒன்றை தொழிலாளர்கள் நடத்தினர் . ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் கலந்து கொண்ட கண்டனக் கூட்டம் அமைதியான முறையில் நடைபெற்றது. இந்நேரத்தில் காவல்துறையினர் அனைவரையும் கலைந்து செல்லுமாறு கூறினர். இவ்வேளையில் திடீரென்று கூட்டத்தில் வெடிகுண்டு வீசப்பட்டதில் அந்த இடத்திலேயே ஒரு காவல்துறையினர் பலியானார். பின்னர் போலீசார் கூட்டத்தினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தித் தொழிலாளரைத் தாக்கினர். இச்சம்பவத்தில் 7 பொலிஸாரும், 4 தொழிலாளர்களும் கொல்லப்பட்டனர். இச்சம்பவத்தைத் தொடர்ந்து  தொழிலாளர் தலைவர்கள் கைது செய்யப்பட்டு வழக்குத் தொடுக்கப்பட்டது. இந்த வழக்கு விசாரணை ஜூன் 21, 1886 ஆரம்பமாகியது. இறுதியில் 7  தொழிலாளர் தலைவர்களுக்கு  தூக்குத் தண்டனை வழங்கப்பட்டது.

அமெரிக்க தொழிலாளர்களின் 8 மணி நேர வேலைக்கான போராட்டமும், சிகாகோ தியாகிகளின் தியாகமும்தான் இன்றைக்கு மே தினமாக – உழைப்பவர் தினமாக நம்முன் நிற்கிறது. 1889 ஜூலை 14 அன்று பாரீசில் சோசலிசத் தொழிலாளர்களின் ‘’சர்வதேச தொழிலாளர் பாராளுமன்றம்’’ கூடியது. 18 நாடுகளில் இருந்து 400 பிரதிநிதிகள் இக்கூட்டத்தில் பங்கேற்றனர். பிரெட்ரிக் ஏங்கெல்ஸ் உட்படப் பலர் கலந்துகொண்ட இக்கூட்டத்தில் கார்ல் மார்க்ஸ் வலியுறுத்திய 8 மணி நேர போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வது என்றும், சிக்காகோ சதியை இம்மாநாடு கடுமையாக கண்டித்ததோடு, 1890 மே 1 அன்று அனைத்துலக அளவில் தொழிலாளர்கள் போராட்டங்களை நடத்திட வேண்டும் என்றும் அறைகூவல் விடப்பட்டது. இந்த அறைகூவலே மே முதல் நாளை, சர்வதேச தொழிலாளர் தினமாக, மே தினமாக அனுஷ்டிப்பதற்கு வழிவகுத்தது.

mayday01.jpg1890 மே 1 இலிருந்து இன்று வரை ஒவ்வொராண்டும் மே 1ம் திகதி சர்வதேச தொழிலாளர் தினமாக கொண்டாடப்பட்டு வருகின்றது.

தொழிலாளரின் அவர்களது ஆற்றலின் தேவையை உணர்த்த வேண்டிய, போற்ற வேண்டிய இந்நாள் உண்மையான நோக்கத்திலிருந்து தலைகுப்புறப் புரண்டுவிட்டது. தொழிலாளர் வர்க்கத்தின் உரிமைகளை வென்றெடுப்பதை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கம் பெற்ற இந்நாளானது இன்று உருவாக்கத்தின் நோக்கத்தையே மறந்து விட்டு  ஒரு கேளிக்கை தினமாக மாறி வருவது சிந்திக்க வேண்டியதொரு விடயமாகும். தொழிலாளரின் ஒற்றுமையை உறுதிப்படுத்த சபதமேற்கும் இந்நாள் தொழிலாளரின் உரிமைகள் வெற்றிகொள்ள ஒன்றுபட்டுக் குரல் எழுப்ப வேண்டிய இந்நாள் பல்வேறு பிரிவினைகளுக்கு உரமூட்டும் நாளாக அமைந்துவிட்ட அவலத்தை நாம் மூன்றாம் உலக நாடுகளின் காணக்கூடியதாக உள்ளது.

உழைப்பாளரின் சக்தியை, ஒற்றுமையை ஓங்கியொலிக்க வேண்டிய இந்நாள் இன்று அரசியல் மயப்படுத்தப்பட்ட அவல நிலையையே வெளிப்படுத்துகின்றது. இத்தினத்தின் நோக்கம் இன்று புறந்தள்ளப்பட்டு இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் ஒவ்வொரு அரசியல் கட்சிகளதும் ஆள்பலத்தை வெளிப்படுத்தும் தேசிய நாளாக அமைந்துவிட்டது என்றால் அதுவே யதார்த்தம். அதுவே உண்மை. பிள்ளையார் பிடிக்க குரங்கானது என்பது போல் தொழிலாளரின் உரிமை பற்றி குரல் கொடுக்க வேண்டிய மேதின ஊர்வலங்களும், கூட்டங்களும் இன்று அரசியல் ஊர்வலங்களாகவும் அரசியல் மேடைகளாகவும் மாறிவிட்டன. ஜனநாயக நாடான நமது நாடுகளில் மேதினம் நடத்த, ஊர்வலம் செல்ல, கூட்டத்திற்கு ஆள்திரட்ட பண நாயகமும், மதுநாயகமும் உதவும் பரிதாப நிலையும் காணப்படுகின்றது.

மேதினத்தின் நோக்கத்தையே, அதன் உண்மைத் தாற்பரியத்தையே குழிதோண்டிப் புதைத்துவிட்டு அதன் மேல் நின்று ஒப்பாரி வைப்பது போன்றே இன்றைய காலத்தில் மேதினம் கொண்டாடப்படுகின்றது. தொழிலாளர் வர்க்கமே ஒன்றுபட உரிமைகளை வென்றெடு, நிலைநாட்டு என்று குரல் எழுப்ப வேண்டிய பெறுமதிமிக்க இத்தினத்தில் மூன்றாம் உலக நாடுகளின் நவீன சுரண்டல்கள் பற்றியும்,  நமது நாடுகளின் தொழிலாளர் நிலைபற்றி சிந்திப்பது காலத்தின் தேவையாகும்.

பின்னிணைப்பு

சர்வதேச தொழிலாளர் தினமான மே 1ம் திகதியை அரசாங்க பொது விடுமுறை தினமாக பிரகடனப்படுத்தியுள்ள நாடுகள்

Albania, Argentina, Aruba, Austria, Bangladesh, Belgium, Bolivia, Bosnia, Brazil, Bulgaria, Cameroon, Chile, Colombia, Costa Rica, China, Croatia, Cuba, Cyprus, Czech Republic, Denmark,Dominican Republic Ecuador, Egypt, Finland, France, Germany, Greece, Guatemala, Haiti, Hungary, Iceland, India, Italy, Jordan, Kenya, Latvia, Lithuania, Lebanon, Malaysia, Malta, Mauritius, Mexico, Morocco, Myanmar (Burma), Nigeria, North Korea, Norway, Pakistan, Paraguay, Peru, Poland, Philippines ,Portugal, Romania, Russian Federation, Singapore, Slovakia, Slovenia, South Korea, South Africa, Spain, Sri Lanka, Serbia, Sweden, Syria, Thailand, Turkey, Ukraine, Uruguay, Venezuela, Vietnam and Zimbabwe.

சங்குப்பிட்டியில் இரும்புப் பாலம்!

Mahinda Rajapaksaநாவற்குழி காரைதீவு மன்னார் ஊடாகச் செல்லும்  ஏ32  வீதியில் படகுச்சேவை நடைபெறும் சங்குப்பிட்டிப் பகுதியில் தடையின்றி வாகனங்கள் செல்லக்கூடிய வகையில் இரும்புப் பாலம் ஒன்றை அமைப்பதற்கான ஆரம்பக்கட்ட நிர்மானப்பணிகளை மேற்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி அமைச்சர் என்ற ரீதியில்  இதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை சமர்பித்திருந்தார். இதற்கு 150 மில்லியன் ரூபா செலவாகும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளதுடன் அரசாங்கத்தின் ஒருங்கிணைக்கப்பட்ட நிதியம் ஊடாக அந்தத் தொகையை ஒதுக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

உரிமைகளை பாதுகாத்து அபிவிருத்தியை முன்னெடுக்க திடசங்கற்பம் பூணுவோம்

may-day.jpgதொழிலாளர் வர்க்கம் தமது உரிமைகளைப் பாதுகாத்து நாட்டின் அபிவிருத்தியினை உயர்த்துவதற்கு திடசங்கற்பம் பூணுவதற்கு இன்றைய நாளில் தொழிலாளர் வர்க்கத்தினர் கடமைப்பட்டுள்ளனரென பிரதமர் ரட்னசிறி விக்கிரமநாயக்க விடுத்துள்ள மே தினச் செய்தியில் தெரிவித்துள்ளார். அதில் அவர் மேலும் கூறியுள்ளதாவது:-

தொழிலாளர் வர்க்கத்தின் ஞாபகார்த்த தினமாக கருதப்படும் உலக தொழிலாளர் தினமான மே தினத்தை உலகின் ஏனைய நாடுகளைப் போன்று இலங்கை வாழ் தொழிலாளர் மக்களும் மிகவும் அபிமானத்துடன் கொண்டாடுகின்றனர்.

இலங்கை வாழ் தொழிலாளர் வர்க்கத்தின் உரிமைகளைப் பெற்றுக் கொடுப்பதற்கும், அவர்கள் போராடி இது வரையில் பெற்றுக் கொண்ட உரிமைகள் மற்றும் சலுகைகளைத் தொடர்ந்தும் பேணிப் பாதுகாப்பதற்கும் நடவடிக்கை எடுப்பது மக்களின் அரசாங்கமொன்றின் பொறுப்பும் கடமையுமாகும். தொழிலாளர் மக்கள் தமது உரிமைகளை தொடர்ந்து பெற்றுக்கொள்ளும் அதே நேரம் நாட்டின் பொருளாதார அபிவிருத்திக்கு அவர்கள் வழங்கும் பங்களிப்பானது எதிர்கால முன்னேற்றத்திற்கு பெரிதும் உதவும்.

முப்பது வருடங்களுக்கும் அதிகமான காலம் தொட்டு இலங்கையின் இறைமைக்கும், ஆட்புல ஒருமைப்பாட்டிற்கும் சமாதானத்திற்கும் பாரிய அச்சுறுத்தலாக அமைந்த பயங்கரவாத போராட்டத்துக்கு முடிவினை கண்டுவரும் இச் சந்தர்ப்பத்தில் இலங்கை போன்ற முன்னேற்றமடைந்து வரும் நாடுகளுக்கு உலக பொருளாதாரப் பிரச்சினைகளின் விளைவுகளுக்கும் முகம்கொடுக்க வேண்டி ஏற்பட்டுள்ளது. அது முக்கியமாக தொழில் துறைக்கும் வெளிநாட்டு வருமான வழிகளுக்கும் பொதுவாக நாட்டின் பொருளாதார அபிவிருத்திக்கும் மோசமான முறையில் தாக்கம் செலுத்துகின்றது.

எவ்வாறாயினும் அனைத்து தடைகளையும், சவால்களையும் வெற்றிகொண்டு நாட்டைக் கட்டியெழுப்பும் பாரதூர பொறுப்பினை ஓர் அரசாங்கம் என்றவகையில் நாம் பொறுப்பேற்றுள்ளோம். இந்தப் பணியினை நிறைவேற்றுவதற்காக வேண்டி தொழிலாளர் வர்க்கத்தின் ஒத்துழைப்பானது ஏனைய காலங்களை விடவும் இன்று இன்றியமையாததாகக் காணப்படுகின்றது. இந்தக் குறிக்கோளை முன்வைத்து மே தினத்தைக் கொண்டாடும் இலங்கையின் தொழிலாளர் வர்க்கத்தினருக்கு எனது வாழ்த்துரைகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு பிரதமர் விடுத்துள்ள செய்தியில் தெரிவித்துள்ளார்.

பாதெனிய அநுராதபுரம் வீதி மறுசீரமைப்பு

tbekanayake.jpgபாதெனிய – அநுராதபுரம் வீதியை மறுசீரமைக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை பதில் நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி அமைச்சர் ரீ.பீ.ஏக்கநாயக்க சமர்பித்திருந்தார்.

இத்திட்டத்தின் கீழ் பாதெனிய அநுராதபுரம் வீதியின் 80 கிலோ மீட்டர் தூரம் மறுசீரமைக்கப்படவுள்ளது கொரியா எக்ஷிமி வங்கியின் கடனுதவித்திட்டத்தின் கீழ் இதற்கான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 5722 மில்லியன் ரூபா இதற்குச் செலவாகும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

தமிழக அரசின் நிவாரணப் பொருட்கள் செஞ்சிலுவைச் சங்கத்திடம் நேற்று ஒப்படைப்பு

நிவாரணப் பொருட்களை கையளிக்கும் இந்தியத் தூதர் இலங்கையின் வடக்கே இராணுவத்தினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே நடைபெற்று வரும் கடும் மோதல்களினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கென தமிழக அரசு சுமார் 900 மெட்ரிக் டண்கள் அளவிலான நிவாரணப் பொருட்களை வியாழக்கிழமை வழங்கியுள்ளது.

சுமார் 40,000 குடும்பங்களுக்கு பகிர்ந்தளிக்கக்கூடிய வகையில் தனித்தனி பொதிகளாக கட்டப்பட்டுள்ள இதில் அரிசி, பருப்பு, சீனி, சமையல் பாத்திரங்கள், உடைகள் ஆகியவை உட்பட குடும்பம் ஒன்றுக்கு இரண்டு வாரகாலம் தேவையான பொருட்கள் இருப்பதாக இந்தியத் தூதரகம் தெரிவித்துள்ளது.

இந்தப் பொருட்களை கொழும்பிலுள்ள இந்தியத் தூதர் அலோக் பிரசாத் நேற்று முறைப்படி சர்வதேச செஞ்சிலுவைச் சங்கப் பிரதிநிதிகளிடம் அளித்துள்ளார். வன்னியில் மோதல்கள் ஆரம்பித்த பிறகு தமிழக அரசு அனுப்பும் இரண்டாவது தொகுதி உதவிப் பொருட்கள் இவை என்பது குறிப்பிடத்தக்கது

தொழிலாளர் ஐக்கியம் பிளவு படாமலிருக்க இம் மேதினத்தில் உறுதியெடுப்போம் -ஐக்கிய தோட்ட தொழிலாளர் சங்கம்

may-day.jpgஉலகத் தொழிலாளர் வர்க்கத்தின் உயிர்ப்புத் தினமும் உரிமைத் தினமுமான உன்னத மே தினம் இன்று உலகெங்கும் கொண்டாடப்படுகிறது. உழைக்கும் வர்க்கத்தினர் இன்னல்களையும் எதிர்ப்புகளையும் கண்டுவரும் காலகட்டத்திலேயே மீண்டுமொரு மே தினம் இன்று வந்துள்ளது.

இவ்வாறு ஐக்கிய தோட்டத் தொழிலாளர் சங்க தலைவர் ஏ.பி.கணபதிப்பிள்ளை விடுத்துள்ள மே தினச் செய்தியில் தெரிவித்துள்ளார்.அதில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது;

திசைமாறிப்போகும் மேதினம் களியாட்டங்களுக்கு கைகொடுக்கின்றதே தவிர, தொழிலாளரின் அவஸ்தைகளை தூரவைத்தே பார்க்கின்றது. உழைப்புக்கேற்ற ஊதியமில்லாத நிலையில், விஷம் போல் ஏறிவரும் விலைவாசி உயர்வும் அமைதியற்ற சூழலும் தொழிலாளர் நசுக்கப்படுவதை நிரூபணமாக்கிறது. அரசியல்மயப்பட்ட தொழிற்சங்க நடவடிக்கைகளே தொழிலாளரின் ஒற்றுமை சீர்குலைவுக்கு வித்திடுகின்றன. தொழிலாளரின் சீர்குலைவானது அவர்களைச் சுரண்டும் கம்பனிகாரர்களுக்கு மாத்திரமல்லாமல் அரசுக்கும் கூட இலாபமாக அமைகின்றது.

கூட்டு ஒப்பந்தத்தின் காலக்கெடு முடிந்து அடுத்த கட்ட நகர்வு என்னவென்று பெருந்தோட்ட தொழிலாளர்கள் எதிர்பார்த்துள்ள நிலையில், நியாயமான சம்பள உயர்வு கிடைக்கவென போராடியும் வீண்வாத பிரதிவாதங்களால் தொழிற்சங்க மற்றும் தொழிலாளர் ஐக்கியம் பிளவுபடாமல் போவதையும் தடுத்து நிறுத்த இம் மே தினத்தில் உறுதிபூணுவோமாக. தொழிலாளர் வர்க்கத்திற்கும் அவர்களது போராட்டத்திற்கும் எனது புரட்சிகரமான வாழ்த்துகள்.

ஷெல் – 191/=, லாஃப் – 238/= சமையல் எரிவாயு விலை அதிகரிப்பு

சமையல் எரிவாயுவின் விலை நேற்று நள்ளிரவு முதல் அதிகரிக்கப்பட்டுள்ளது.  “ஷெல்” சமையல் எரிவாயுவின் விலை 191 ரூபாவாலும் “லாப்” சமையல் எரிவாயுவின் விலை 238 ருபாவாலும் அதிகரிக்கப்பட்டிருப்பதாக வர்த்தக நுகர்வோர் விவகார அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். இதன்படி 1309 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்ட “ஷெல்” சமையல் எரிவாயு நேற்று நள்ளிரவு முதல் 1500 ருபாவுக்கும் 1069 ரூபாவுக்கு விற்கப்பட்ட “லாப்” சமையல் எரிவாயு 1307 ரூபாவுக்கும் விற்கப்படுகின்றது. உலக சந்தையில் எரிவாயு விலையில் ஏற்பட்ட மாற்றமே இவ் அதிகரிப்புக்கு காரணமென அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். இது தொடர்பான செய்தியாளர் மாநாடு நேற்று அமைச்சில் நடைபெற்றது.

சமையல் எரிவாயு விலைச் சுட்டெண்ணின் அடிப்படையில் ஒரு வருடத்தில் இரண்டு மாதங்களுக்கு ஒர தடவையாக ஆறு முறை அதன் விலையில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படும். இதனடிப்படையில் கடந்த வருடம் செப்டம்பர் மாதம் முதல் ஜனவரி வரையான காலப் பகுதியில் “ஷெல்” மற்றும் “லாப்” சமையல் எரிவாயுவின் விலை அடுத்தடுத்து குறைவடைந்து வந்தது. கடந்த மார்ச் மாதம் 358 அமெரிக்க டொலர்களாகவிருந்த ஒரு மெற்றிக் தொன் உலக சமையல் எரிவாயுவின் விலை தற்போது 480 அமெரிக்க டொலர்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன் காரணமாகவே மேமாத்துக்கான விலைதிருத்தத்தில் தவிர்க்க முடியாத அதிகரிப்பை மேற்கொள்ள வேண்டியிருப்பதாகவும் அமைச்சர் கூறினார்.

“ஷெல்” நிறுவனம் 337 ரூபா வரையிலும் “லாப்” நிறுவனம் 250 ரூபா வரையிலும் விலையதிகரிப்பு மேற்கொள்ள வேண்டுமென கோரிக்கை விடுத்திருந்தன. எனினும் பாவனையாளர்கள் நன்மை கருதி முறையே 191 ரூபா மற்றும் 238 ரூபா விலையதிகரிப்பை மேற்கொள்ளவே நுகர்வோர் அதிகார சபை அனுமதித்திருப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். இதேவேளை, தமிழ், சிங்கள புதுவருடத்தை முன்னிட்டு சீனி, பருப்பு ஆகியவை ஆகக் குறைந்த விலையில் விற்கப்பட்டு வந்தன.

அதற்கான சுற்று நிருபமும் நேற்று நள்ளிரவு முதல் காலாவதியாகியிருப்பதால் மீண்டும் அவை பழைய விலைக்கே விற்கப்படுமெனவும் அமைச்சர் கூறினார். பால்மா, சீனி, பருப்பு ஆகியவற்றின் விலைகளை குறைத்து விநியோகிப்பதற்காக உலகச் சந்தையில் ஆகக் குறைந்த விலைகளில் அவற்றை இறக்குமதி செய்வது தொடர்பாக ஆராய்ந்து வருவதாகவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.