July

July

நாடு கடந்த அரசாங்கமும் அரசியல் தீர்வு முயற்சிகளும் – கலாநிதி எஸ்.ஐ. கீதபொன்கலன்

sri-lanka.jpgஇலங்கையில் தமிழ் அரசியல் என்பது சுவையானதும் முக்கியமானதுமான ஒரு காலகட்டத்தில் இருப்பதினாலும், தென்னிலங்கையில் கூறிக்கொள்ளக்கூடிய நிகழ்வுகள் எதுவும் இன்மையினாலும் தவிர்க்க முடியாதபடி தமிழ் அரசியல் பற்றியே கவனம் செலுத்த வேண்டிய ஒரு அவசியம் காணப்படுகின்றது. தமிழ் அரசியல் செயற்பாடுகளின் எதிர்காலம் அல்லது எதிர்கால செயற்பாடுகள் பற்றிய கலந்துரையாடல் ஒன்று அவசியப்படுகின்ற பின்னணியில் இவ்விடயம் பற்றிய ஆவுகள் பயனற்றவையாக இருக்கப்போவதில்லை.

2009 ஆம் ஆண்டு மே மாதம் வரை தமிழ் சமூகத்தினுள் காணப்பட்ட மாற்றுக் கருத்துகள் மென்மையான ஒரு முறையிலேயே முன்வைக்கப்பட்டிருந்தன. மாற்றுக் கருத்துகள் உரத்துக் கூறப்படவில்லை அல்லது அவ்விதம் கூறக்கூடிய சூழ்நிலை ஒன்று காணப்பட்டிருக்கவில்லை. இதன் கருத்து என்னவெனில் குறைந்தது மிக அடிப்படையான பிரச்சினைகளில் பெரும்பான்மை அபிப்பிராயம் ஒருமுகப்படுத்தப்பட்டதாக இருந்தது. இந்நிலை இன்று காணப்படவில்லை. அடிப்படையான பிரச்சினைகளில் தமிழ் அபிப்பிராயம் பாரிய அளவிற்குப் பிளவுபட்டுள்ளது போன்றே தோன்றுகின்றது. தேசிய மட்டத்தில் இவ் அபிப்பிராயம் வேறுபாடு வெளிப்படுத்தப்படுகின்றதோ இல்லையோ சமூக மட்டத்தில் தெளிவானதாகவே உள்ளது. இதற்குப் பல்வேறு உதாரணங்கள் சுட்டிக்காட்டப்படலாம்.

அவ்வகையில் பிரதானமான ஒரு விடயம் அரசியல் இலக்கு என்பது பற்றி இலங்கையில் தற்போது வாழ்ந்துவரும் தமிழர்களுக்கும் புலம்பெயர்ந்த தமிழர்களுக்கும் இடையிலான அபிப்பிராய வேறுபாடு அல்லது வேறுபட்ட நிலைப்பாடு ஆகும். இவை இரண்டும் முழுமையாக வேறுபட்ட திசைகளில் பயணிக்கத் தொடங்கியுள்ளது போல் தோன்றுகின்றது. சுருக்கமாகக் கூறுவதாயின் உள்ளூர் அபிப்பிராயம் ஒன்றிணைந்த இலங்கையினுள் அரசியல் தீர்வு என்ற நிலைப்பாட்டை நோக்கி நகரத் தொடங்குகின்றபோது புலம்பெயர்ந்த தமிழர்கள் தனிநாடு என்ற நிலைப்பாட்டை கைவிடாதிருக்கின்ற நிலை ஏற்பட்டுள்ளது. இதன் விளைவே நாடு கடந்த அரசாங்கம் என்கின்ற வாசகம், அல்லது கோஷம்.

முதலில் உள்ளூர் அபிப்பிராயத்தை எடுத்துக் கொள்வோமாயின், நாம் ஏற்கனவே சுட்டிக்காட்டியது போன்று தற்போது அவர்களது அரசியல் எதிர்பார்ப்பும் தன்நம்பிக்கையும் பாரியளவில் நகர்ந்துள்ளது. இதன் காரணமாக எதைக் கொடுத்தாலும் பெற்றுக் கொள்ளத் தயாராக இருக்கின்ற ஒரு சாரார் காணப்படவே செய்கின்றனர். இன்னுமொரு சாரார் இதுவரை ஏற்றுக்கொள்ளப்பட முடியாதது என்று கருதப்பட்ட 13 ஆவது திருத்தத்தை வலியுறுத்தத் தொடங்கியுள்ளனர். உண்மையில் இன்று பேசப்படுகின்ற 13 ஆவது திருத்தம் 1987 ஆம் ஆண்டு பேசப்பட்டதிலும் குறைவானதாகும். ஏனெனில் 87 ஆம் ஆண்டு வடக்கும் கிழக்கும் இணைந்த பொதியையே நாம் சட்டமாக்கியிருந்தோம். இன்றைய நிலை அதுவல்ல.

தமிழ் ஈழம் என்பது உரத்துக் கூறப்பட்ட காலத்திலேயே இலங்கை வாழ் தமிழ் மக்களிடையே சமஷ்டி, (அதாவது ஒன்றிணைந்த இலங்கையினுள் தீர்வு) என்பதற்கு பாரிய ஆதரவு காணப்பட்டிருந்தது. அதன் காரணமாகவே 2002 ஆம் ஆண்டு ஒஸ்லோவில் சமஸ்டி பற்றிய இணக்கம் காணப்பட்டபோது அதற்கு தமிழ் மக்களிடையே பாரிய வரவேற்பு இருந்தது. ஆயினும் இந்த தமிழ் சமூகத்தினுள் இருந்து சமஸ்டி என்ற பதத்தை பார்ப்பதோ கேட்பதோ கடினமானதாக மாறிவிட்டுள்ளது. இது அவர்களது அரசியல் தன்னம்பிக்கையில் ஏற்பட்ட தளர்வின் வெளிப்பாடே அன்றி வேறில்லை. இருப்பினும் தெரிவு ஒன்று வழங்கப்படுமாக இருப்பின் அவர்கள் சமஸ்டி தீர்வு ஒன்றை நாடுவார்கள் என்பதில் எவ்வித சந்தேகங்களும் இல்லை. இதன் கருத்து ஒன்றிணைந்த இலங்கை என்ற எண்ணக் கருவினுள் வழங்கப்படக் கூடிய தீர்வு இலங்கையில் இருக்கின்ற தமிழ் மக்கள் மட்டில் ஏற்புடையதாகவே இருக்கும் என்பதாகும்.

இதன் மறுபக்கம் என்னவெனில் இலங்கையில் வாழ்கின்ற தமிழ் மக்களிடையே தனிநாடு என்ற எண்ணக்கரு பலவீனமானதாகவே காணப்படுகின்றது. இலங்கையில் தமிழ் மக்களுக்கான தனியான ஒரு நாடு என்ற எண்ணக்கரு என்றுமே நடைமுறைச் சாத்தியமான அரசியல் இலக்காக இருக்கவில்லை. அன்று அது பிராந்திய அரசியல் யதார்த்தங்களினால் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. உதாரணமாக 1980 களில் இந்தியா, தமிழ் இராணுவர் குழுக்களுக்கு ஆதரவு வழங்கிய செயற்பாடே கூட ஈழ எதிர்ப்பு கொள்கையின் மீதே தோற்றுவிக்கப்பட்டிருந்தது. புலிகள் இந்தியாவில் தடை செய்யப்பட்ட போது சட்டரீதியாகக் கூறப்பட்ட காரணம் தனிநாடு எனும் புலிகளின் அரசியல் இலக்கு இந்திய தேசிய நலனுக்கு எதிரானது என்பதே ஆகும்.

செப்டெம்பர் 11 தாக்குதலும், அதனைத் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட பயங்கரவாதத்திற்கு எதிரான சர்வதேச யுத்தமும் இலங்கையில் மட்டுமல்ல உலகின் எந்த ஒரு பாகத்திலும் அரசுக்கு எதிரான போராட்டங்களை, குறிப்பாக வன்முறைப் போராட்டங்களை வெற்றி பெற முடியாதவையாக மாற்றி இருந்தன. இந்த யதார்த்தத்தை புரிந்துகொண்ட சமூகங்களில் தந்திரோபாயங்களை மாற்றிக் கொள்வதன் மூலம் கூடியளவான அரசியல் இலாபத்தை அடைந்து கொள்ளும் செயன்முறை தோற்றுவிக்கப்பட்டிருந்தது. துரதிஷ்ட வசமாக இலங்கையில் இந்த யதார்த்தம் புரிந்துகொள்ளப்படவில்லை. இதன் காரணமாக ஏற்பட்ட அரசியல், சமூக நட்டங்கள் சாதாரணமானவை அல்ல.

யுத்தத்தில் வெற்றிபெற்றதன் மூலம் இலங்கை இராணுவம் சந்தேகத்திற்கிடமற்ற வகையில் நிரூபித்துள்ள ஒரு விடயம் இலங்கையில் தமிழர்களுக்கு தனியான ஒரு நாடு சாத்தியமற்றது என்பதாகும். இதுவும் ஒன்றிணைந்த இலங்கையினுள் தீர்வு என்பதற்கான ஆதரவு அதிகரிப்பதற்கான ஒரு காரணமாக இருக்கலாம்.

இத்தகைய ஒரு நிலையிலேயே புலம்பெயர்ந்த தமிழர்களிடையே இருந்து நாடு கடந்த அரசாங்கம் ஒன்றை அமைக்கும் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பில் பல்வேறு விமர்சனங்கள் ஏற்கனவே, குறிப்பாக தென்னிலங்கையில் முன்வைக்கப்பட்டுள்ளது. இவ்விமர்சனங்களுக்கு அப்பால், இந்த யோசனை உள்ளூர் ரீதியாக பல சிக்கல்களை ஏற்படுத்தும் என்பது சுட்டிக்காட்டப்பட வேண்டும்.

இதுதொடர்பில் நோக்கப்பட வேண்டிய பிரதானமான விடயம் நாடுகடந்த அரசாங்கத்தின் நோக்கம் என்ன என்பதாகும். பொதுவாக நாட்டிற்கு வெளியிலான அரசாங்கங்கள் குறுகிய எதிர்காலத்தில் நாடு திரும்பி உண்மையான அரசாங்கத்தை அமைக்கும் நோக்கத்திலேயே தோற்றுவிக்கப்படுகின்றன. இலங்கையில் அவ்விதமான அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்கான கோட்பாட்டு ரீதியான, நடைமுறை ரீதியான சாத்தியம் இல்லை என்பது தெளிவாகப் புரிகின்றபோது நாடுகடந்த அரசாங்கத்தின் நோக்கம் பற்றிய கேள்விகள் நியாயமானவையாகவே காணப்படும்.

அதேசமயம், யோசனை புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் வரலாற்றில் இருந்து சரியான பாடங்களைக் கற்றுக் கொள்ளவில்லையோ என்ற சந்தேகத்தையும் தோற்றுவிக்கின்றது. நடைமுறை சாத்தியமற்ற இலக்கு மீதான பற்று பல அரசியல் தவறுகளுக்கு இட்டுச் சென்றுள்ள பின்னணியில் இது முக்கியமானதொரு கேள்வியாக அமைந்து விடுகின்றது. இதன் கருத்து நடைமுறை சாத்தியமான இலக்குகளை வகுத்துக் கொள்வது சகல தரப்பினருக்கும் நலன்களைக் கொண்டுவரும் என்பதாகும். உதாரணமாக புலம்பெயர்ந்த தமிழர்கள் நாடுகடந்த அரசாங்கமாக அன்றி தமிழர்களுக்கு நியாயமான அரசியல் தீர்வொன்றை அடைந்து கொள்வதற்கான இயக்கமாக செயற்படுகின்றபோது சர்வதேச ரீதியாக ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய சாத்தியம் அதிகமாகும்.

இருப்பினும், நாடுகடந்த அரசாங்கத்தினால் உள்ளூர் ரீதியாக ஏற்படக்கூடிய பிரதான பிரச்சினை என்னவெனில், அது உள்ளூர் ரீதியாக அரசியல் தீர்வு ஒன்றை தேடுகின்ற செயன்முறையைக் கடினமானதாக ஆக்கிவிடக்கூடும். இச் செயன்முறையில் இரு பிரதானமான காரணிகள் காணப்படுகின்றன. ஒன்று தமிழ் மக்கள் மத்தியில் அரசியல் தீர்வு ஒன்றைத் தேடுவதற்கான ஆர்வம் காணப்படவேண்டும். நாடுகடந்த அரசாங்கத்தின் செயற்பாடுகள் காரணமாக தனிநாடு பெற்றுவிடலாம் என்ற நம்பிக்கை அதிகரிக்கின்றபோது தீர்வை தேடும் நாட்டம் குறைந்து விடலாம். இரண்டாவது நியாயமான அரசியல் தீர்வு ஒன்றின் மூலம் பெறப்படுகின்ற அதிகாரங்களும், நலன்களும் தமிழர்களினால் தேசிய ஒருமைப்பாட்டிற்கு எதிராகப் பயன்படுத்தப்பட மாட்டாது என்ற நம்பிக்கை சிங்கள மக்கள் மத்தியில் ஏற்படுவது அவசியம். இந்த நம்பிக்கை அதிகரிக்கின்றபோது தீர்வின் மூலம் பெறப்படுகின்ற கட்டமைப்பின் அதிகாரங்கள் உறுதியாக இருப்பதற்கான சாத்தியங்கள் அதிகமானவையாகும்.

இருப்பினும், தனிநாடு என்கின்ற சுலோகமும் கடல்கடந்து செயற்படுகின்ற அரசாங்கம்போன்றதொரு குழுவும் விஸ்வரூபமெடுத்து நிற்கின்ற போது சிங்கள மக்களிடையே இந்த நம்பிக்கை ஏற்படுவதற்கான சாத்தியம் குறைவானதாகும். எனவே, நாடு கடந்த அரசாங்கம் என்கின்ற எண்ணக்கரு தென்னிலங்கையில் அரசியல் தீர்விற்கான எதிர்ப்பியக்கத்தை உறுதிப்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.

அதேசமயம், இராணுவ வெற்றியை அடிப்படையாகக் கொண்டு சிறுபான்மையினர், குறிப்பாக தமிழர்கள் ஒடுக்கி வைக்கப்பட்டிருக்க வேண்டும் என்ற அபிப்பிராயம் ஒன்றும் காணப்படுகின்றது. இவ்வித அடக்கி ஆளும் செயற்றிட்டத்தை நாடுகடந்த அரசாங்கம் போன்ற எண்ணக்கருக்கள் இலகுபடுத்தி நியாயப்படுத்திவிடக் கூடும்.

நாடு கடந்த அரசாங்க யோசனை ஏற்படுத்திய நடைமுறை ரீதியான சிக்கல்களுக்கு ஒரு உதாரணம் தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசாங்கத்தின் உள்ளூர் முகவராக செயற்படும் என்று அறிவித்தமையாகும். புலிகளின் தோல்வியைத் தொடர்ந்து த.தே.கூட்டமைப்பை தனிமைப்படுத்துவதற்கான முயற்சி ஒன்று காணப்பட்டிருந்தது. இது அவர்கள் புலிகளின் முகவர்களாக செயற்பட்டவர்கள் என்ற குற்றச்சாட்டினடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட ஒரு முயற்சி ஆகும். ஆயினும் ஏற்பட்டுள்ள அரசியல் வெற்றிடத்தின் பின்னணியில் தலைமைத்துவத்தை வழங்குவதில் த.தே.கூட்டமைப்பிற்கு முக்கிய பங்கு ஒன்று காணப்படுகின்றது. இப்பங்கு தம்மை கடந்த காலத்தில் இருந்து விடுவித்துக் கொண்டு சுயாதீனமான அரசியல் கட்சியாக மாறுவதன் மூலமே பூர்த்தி செய்யப்படலாம். இதனை அறிவிப்பு நிச்சயமாகப் பாதித்திருந்தது. உண்மையில் இவ் அறிவிப்பு த.தே.கூட்டமைப்பை தனிமைப்படுத்தும் நோக்கில் பயன்படுத்தப்பட்டிருகக்கூடும். எனவே, த.தே.கூட்டமைப்பு இவ் அறிவிப்பிற்கும் தமக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்ற நிலைப்பாட்டை எடுத்துள்ளது. இந்நிலைப்பாடு கட்சியின் எதிர்கால செயற்பாட்டிற்கு உதவும் என்பதில் சந்தேகமில்லை.

அதேசமயம், தற்போதைய நிலையில் அனைத்து தமிழ் அரசியல் குழுக்களுமே வன்முறையை நிராகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. நிச்சயமாக இது அகிம்சை பயனளிக்கும் என்ற நம்பிக்கையினால் ஏற்பட்ட நிலைப்பாடு அல்ல. மாறாக தமிழ் மக்களைப் பொருத்தவரை வேறு மாற்றுவழி ஒன்று காணப்படவில்லை. ஜனநாயகக் கட்டமைப்பினுள் அமைந்த ஒன்றிணைந்த இலங்கையினுள் நியாயமான தீர்வு ஒன்றை அடைந்து கொள்வதற்கான வன்முறை அற்ற இயக்கம் புதிய நண்பர்களை உருவாக்கக் கூடும் என்பது முக்கியமானது.

நன்றி: தினக்குரல் 05.07.2009

யாழ்தேவி இன்ரசிற்றி ரயிலில் தீ- பயணிகளுக்கு சேதமில்லை சாலியபுர பகுதியில் சம்பவம்

train_.jpgகொழும்பி லிருந்து இன்று அதிகாலை புறப்பட்டுச் சென்ற யாழ் தேவி இன்ரசிற்றி ரயிலில் சாலியபுரம் பதியில் தீப்பற்றியதாகவும் எனினும் பயணிகளுக்கு உயிர்ச்சேதமில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வவுனியா தாண்டிக்குளம் நோக்கிச் சென்று கொண்டிருந்த இந்த ரயில் அனுராதபுரத்தைக் கடந்து சாலியபுரம் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது காலை 10.30 மணியளவில் இந்த தீவிபத்து ஏற்பட்டுள்ளது.

ரயிலில் இணைக்கப்பட்டிருந்த உணவு வண்டியில் பயன்படுத்தப்பட்ட காஸ் சிலிண்டர் வெடித்ததனால் தீவிபத்து ஏற்பட்டதாகவும், உணவு வண்டியும், முதலாம் வகுப்புப் பெட்டியும் தீயினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ரயில்வே வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. எனினும் ரயில் உடனடியாக நிறுத்தப்பட்டதாகவும், பயணிகளுக்கு சேதமில்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது. ஆயினும் உணவு வண்டியில் பணியாற்றும் பணியாளர்களுக்கு என்ன நடந்தது என்பது பற்றி உடனடியாகத் தகவல் எதுவும் கிடைக்கவில்லை.

மட்டு, வவுனியாவில் மூவர் சுட்டுக்கொலை

udaya_nanayakkara_brigediars.jpg வவுனியா பாரதிபுரத்திலும் மட்டக்களப்பு கிரான் குளம் வாவி பகுதியிலும் நேற்று மூவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். வவுனியா பாரதிபுரத்தில் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்த இருவர் மீது இனந்தெரியாத நபர்கள் துப்பாக்கிப் பிரயோகம் செய்ததுடன் மோட்டார் சைக்கிளையும் எடுத்துக் கொண்டு சென்றுள்ளனர்.

பாரதிபுரம் வித்தியாலய அதிபரான நடராசா ரமேஷ்கந்தா (வயது 34) என்பவரும், அரிசி ஆலை முகாமையாளரான குணரத்தினம் சிவரூபன் (வயது 31) என்ற நபருமே இனந்தெரியாத நபர்களினால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் நேற்று மாலை சுமார் 3.00 மணியளவில் நடைபெற்றுள்ளது.

மட்டக்களப்பு கிரான்குளம் பகுதியில் புலி உறுப்பினர் ஒருவர் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் இராணுவ வீரர் ஒருவர் கொல்லப்பட்டதுடன் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்ட புலி உறுப்பினரும் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார நேற்று தெரிவித்தார்.

மட்டக்களப்பு, கிரான் வாவியோரப் பகுதியில் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருந்த படையினர் அவ்வழியே வந்த நபர் ஒருவரை சோதனை செய்யமுற்பட்டுள்ளனர். இச்சமயத்தில் குறித்த நபர் படையினரின் துப்பாக்கியை பறித்து சுட்டுள்ளார். படையினரும் திருப்பிச் சுட்டதில் புலி உறுப்பினரும் படுகாயமடைந்துள்ளார்.

படுகாயமடைந்துள்ள புலி உறுப்பினர் மோகன் என அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், உயிரிழந்த படைவீரர் அம்பாறையைச் சேர்ந்த சுமனதிஸ்ஸ என்றும் காயமடைந்த படைவீரர்கள் இருவரும் பண்டார, ராஜபக்ஷ என்றும் இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.

காத்தான்குடி மீரா ஜும்ஆப்பள்ளிவாசலில் நேற்று ஒப்படைக்கப்பட்ட ஆயுதங்கள்

kattankudy_arms.gifஅரசாங் கத்தின் வேண்டுகோளுக்கிணங்க காத்தான்குடி மீரா ஜும்ஆப்பள்ளிவாசலில் நேற்று பெருந்தொகையான ஆயுதங்கள் கையளிக்கப்பட்டன. முஸ்லிம் இளைஞர்கள் நேற்று நண்பகல் 12 மணி முதல் 3.30 வரை ஆயுதங்களைக் கையளித்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பாக மேற்படி பள்ளிவாசலில் நடந்த நிகழ்வில் மாகாண அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், கிழக்கு மாகாண பிரதிப் பொலிஸ் அதிபர் எடி சன் குணதிலக உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் கீர்த்தி பால, ஆரையம்பதி பொலிஸ் பொறுப்பதிகாரி கப்டன் ராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஒப்படைக்கப்பட்ட ஆயுதங்களின் விபரம் வருமாறு; ரீ-56 ரக துப்பாக்கி -17, எஸ்.எம்.ஜீ. 01, சொட்கன்-01, 03 ரக துப்பாக்கி-04, ஜே.ஆர். ரக கைக்குண்டு-03, எஸ்.எம்.ஜீ. கைக்குண்டு-10, 38 ரக குண்டு-01, ரீ-56 ரக ரவைகள்-1076, ரீ-56 ரக மகkன்-25, ல்கட்டாஸ்-01, 9 எம்.எம்.பிஸ்டல்-01, 9எம்.எம்.மகkன்-07

மேற்படி ஆயுத ஒப்படைப்பின் பின்னர் கூட்டம் இடம்பெற்றது. கிழக்கு மாகாணங்களுக்கான பிரதி பொலிஸ் மாஅதிபர் எடிசன் குணதிலக உரையாற்றினார்

முல்லைத்தீவு ஈழம் வங்கி – மீட்கப்பட்ட நகைகளை உரியோரிடம் ஒப்படைக்க இராணுவம் ஏற்பாடு

முல்லைத்தீவு மக்களால் ஈழம் வங்கியில் அடகு வைக்கப்பட்ட நகைகளை நிவாரணக் கிராமங்களில் உரியவர்களிடம் கையளிக்க இராணுவத்தினர் ஏற்பாடுகளை செய்துள்ளனர்.

புதுக்குடியிருப்பு ஈழம் வங்கியில் அடகு வைத்த நகைகளை படையினர் அண்மையில் மீட்டனர். அடகுவைத்தவர்களின் விபரங்களுடன் கூடிய தங்க நகைகள் அடங்கிய 8709 பொதிகளை படையினர் கைப்பற்றியிருந்தனர்.

அடகு வைத்தவர்களுக்கு வழங்கிய பற்றுச்சீட்டின் பிரதிகள் நகையுடன் பொதி செய்யப்பட்டு வங்கியில் வைப்பு செய்யப்பட்டிருந்தது.

இதேவேளை, புதுக்குடியிருப்பு பகுதியில் தேடுதல்களை மேற்கொண்ட இராணுவத்தின் எட்டாவது அதிரடிப்படையினர் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 1040 தங்க வளையல்களையும் கண்டெடுத்துள்ளனர்.

852 பெரிய தங்க வளையல்களும், 188 சிறிய தங்க வளையல்களும், 45 தங்க வளையல் துண்டுகள், கைச்சங்கிலி என்பவற்றையும் படையினர் மீட்டுள்ளனர்.

இலங்கை பாகிஸ்தான் டெஸ்ட் போட்டி தமிழில் நேர்முக வர்ணனை

cricket20-20.jpgகாலியில் நேற்று ஆரம்பமாகிய இலங்கை பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகளுக்கிடையிலான டெஸ்ட் போட்டி தொடர்பான தமிழ் நேர்முக வர்ணனை இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தினால் முழு நேரமாக ஒலிபரப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கிரிக்கெட் தொடர்பாக 30 வருடங்களுக்கு மேற்பட்ட அனுபவத்தைக் கொண்ட முன்னாள் அமைச்சரும் ஜனாதிபதியின் ஆலோசகருமான ஏ.எம்.எச். அஸ்வர் தமிழ் மொழியில் நேர்முக வர்ணனையை செய்கிறார்.
இதுவரை காலமும் கிரிக்கெட் போட்டி நேர்முக வர்ணனை முழு நேரமாக சிங்கள மொழியிலும் இடையிடையே ஆங்கில, தமிழ் மொழிகளிலும் நடத்தப்பட்டு வந்தன. இனிமேல் தமிழ் மொழியிலும் முழுநேரமாக நேர்முக வர்ணனை இடம்பெறுமெனவும் அஸ்வர் தெரிவித்தார்.

காலியில் நேற்று காலை 10 மணிக்கு இலங்கை, பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான டெஸ்ட் போட்டி ஆரம்பமாகியது. நேற்று ஆட்டமுடிவின் போது இலங்கை அணி முதலாவது இனிங்சில் சகல விக்கட்டுகளையும் இழந்து 292 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது. முதலாவது இனிங்சில் பாகிஸ்தான் அணி 2 விக்கட் இழப்புக்கு 15 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

தேர்தல் கடமைகளுக்கான பயிற்சிகள் அடுத்த வாரம் ஆரம்பம்

election.gifயாழ்.  மாநகரசபை மற்றும் வவுனியா நகரசபைகளுக்கான  தேர்தல் கடமைகளில் ஈடுபடும் உத்தியோகத்தர்களுக்கான பயற்சி செயலமர்வுகள் அடுத்தவாரம் இடம்பெறவுள்ளதாகவும் மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை வாக்காளர்கள்  பட்டியல்கள் தயாரிக்கும் பணிகள் தற்போது இடம்பெற்று வருவதுடன் வாக்காளர் அட்டை விநியோக நடவடிக்கைகள் எதிர்வரும் 15ம் திகதி ஆரம்பமாகுமென்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

வவுனியா நகரசபைத் தேர்தலுக்காக இம்முறை 500 அரச உத்தியோகத்தர்களும்  யாழ். மாநகரசபைத் தேர்தலுக்கென இம்முறை ஆயிரம் அரச உத்தியோகத்தர்களும்  கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளனர் இவர்களுக்கான நியமனக் கடிதங்கள் அனுப்பப்பட்டு வருகின்றன.

தேர்தல் தொடர்பான முன்னோடி நடவடிக்கைகள் எவ்வித தங்கு தடையுமின்றி இடம்பெற்று வருவதாகவும்  உதவித் தேர்தல் ஆணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மைக்கேல் ஜக்சனின் பெயரில் மின்னஞ்சலில் பரவும் வைரஸ் – கணினி பாவனையாளர்களுக்கு எச்சரிக்கை

மைக்கேல் ஜக்சனின் பெயரைப் பயன்படுத்தி மின்னஞ்சல் மூலம் வைரஸ் பரவி வருகிறது. எனவே ஜக்சன் என்ற பெயரில் ஈமெயில் வந்தால் திறந்து பார்க்காமல் அழித்து விடுமாறு எச்சரிக்கப்பட்டுள்ளது.

ஜக்சனின் நினைவாக என்ற பொருளில் அனுப்பப்படும் அந்த மின்னஞ்சலில் ஜிப் பைல் ஒன்று இணைக்கப்பட்டுள்ளது. அதில் மைக்கேல் ஜக்சனின் இசை வடிவங்கள், இதுவரை பார்த்திராத படங்கள் உள்ளிட்டவை உள்ளதாக அந்த மின்னஞ்சல் கூறுகிறது. அடடா என்று ஆச்சரியப்பட்டுத் திறந்து பார்த்தால் அவ்வளவுதான் கணினி காலியாகி விடுகிறதாம்.

இந்த மின்னஞ்சலைத் திறந்து பார்த்தால் நமது கணினி மட்டுமல்லாது, யு.எஸ்.பி. மெமரி ஸ்டிக்கையும் இது பாதிக்கிறதாம். அதேபோல, மைக்கேல் ஜக்சனின் கடைசிப் படைப்பு வீடியோ என்ற பெயரில் இன்னொரு வைரஸும் பரவுகிறதாம்.

கூட்டமைப்பினரை ஜனாதிபதி தனியாக சந்திப்பதற்கு தீர்மானம்

sampanthr.jpgதமிழ் தேசியக்கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனியாக சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

ஜனாதிபதி தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற அபிவிருத்தி மற்றும் நல்லிணக்கம் தொடர்பான சர்வகட்சி குழுக்கூட்டத்தில் கலந்துகொண்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு எம்.பிக்களிடமே ஜனாதிபதி தனது தீர்மானம் தொடர்பில் கலந்துரையாடியதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

கூட்டம் நிறைவடைந்ததன் பின்னர் தமிழ் தேசியக்கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் நீண்டநேரம் தனியாகச் சந்தித்து பேசிய ஜனாதிபதி கூட்டமைப்பினரை அடுத்த வாரமளவில் தனியாக சந்தித்துக் கலந்துரையாடுவதற்குத் தீர்மானித்துள்ளதாக தெரிவித்துள்ளார். ஜனாதிபதியின் தீர்மானத்தின் பிரகாரம் தமிழ் தேசியக் கூட்டமைப்பு எம்.பிக்களை அவர் இம்மாதத்திற்குள் சந்திப்பார் என்றும் அதற்கான அழைப்பு ஜனாதிபதியின் செயலாளர் ஊடாக விரைவில் அனுப்பப்படும் என்றும் ஜனாதிபதி செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.

கிழக்கு பாடசாலை வெற்றிடங்களை நிரப்ப 332 விஞ்ஞான பட்டதாரிகளுக்கு நியமனம்

கிழக்கு மாகாணத்திலுள்ள பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையினை நிவர்த்தி செய்வதற்காக 332 விஞ்ஞான பட்டதாரி ஆசிரியர்களை நியமனம் செய்ய கிழக்கு மாகாணக் கல்வித் திணைக்களம் தீர்மானித்துள்ளது. கிழக்கு மாகாணத்திலுள்ள பின்தங்கிய மற்றும் மிகவும் பின்தங்கிய பிரதேசங்களிலுள்ள பாடசாலைகளில் நிலவும் விஞ்ஞான ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதன் மூலம் சிறந்த கல்வியினை மாணவர்களுக்கு வழங்க முடியும் என கிழக்கு மாகாணக் கல்வியமைச்சின் செயலாளர் உபுல் வீரவர்தன தெரிவித்துள்ளார்.

இதன்படி நியமனம் செய்யப்படவுள்ள 332 விஞ்ஞானப் பட்டதாரி ஆசிரியர்களுள் 131 பேர் கிழக்கு மாகாணத்திலுள்ள சிங்களமொழிப் பாடசாலைகளுக்கு நியமிக்கப்படவுள்ளனர்.

இவ்வாறு நியமிக்கப்படும் ஆசிரியர்கள் நியமனம் பெறும் பாடசாலையில் மூன்று வருடங்களும் மாகாணத்தில் 5 வருடங்களும் கடமையாற்றுவதுடன், எதிர்காலத்தில் மாகாணங்களுக்கிடையிலான இடமாற்றம் இடம்பெறும்போது தாம் விரும்பிய மாகாணப் பாடசாலைக்கு இடமாற்றம் பெற்றுச் செல்லலாம் என செயலாளர் உபுல் வீரவர்தன மேலும் தெரிவித்தார்.