November

November

தமிழ் பேசும் கட்சிகளின் மாநாட்டின் திரைக்குப் பின்னால்: த ஜெயபாலன்

hri_Logoதமிழ் பேசும் கட்சிகள் – தமிழ் மற்றும் இஸ்லாமியக் கட்சிகளின் மாநாடு நவம்பர் 19, 20, 21ம் திகதிகளில் சூரிச்சில் இடம்பெறுகிறது. இம்மாநாடு தமிழ் பேசும் கட்சிகளிடையே புரிந்துணர்வை ஏற்படுத்துவதற்கு என்று சொல்லப்பட்ட போதும் அவர்கள் எட்ட நினைக்கும் புரிந்துணர்வு தமிழ் பேசும் கட்சிகளிடையேயானதல்ல என்ற சந்தேகங்கள் எழ ஆரம்பித்து உள்ளது. இம்மாநாடு நவம்பர் 12ல் லண்டனில் நடாத்த திட்டமிட்டு இருந்த போதிலும் பின்னர் சூரிச்சுக்கு இடமாற்றம் செய்யப்பட்டது. இம்மாநாட்டில் ஓரிரு கட்சிகளின் தலைவர்கள் தவிர ஏனைய 20 தமிழ் பேசும் கட்சிகளின் தலைவர்கள் கலந்துகொள்ள உள்ளதாகத் தெரியவருகிறது.

இம்மாநாட்டுக்கு இன்னமும் ஒரு சில தினங்களேயே உள்ள நிலையில் இம்மாநாடு யாரால் நடத்தப்படுகின்றது என்பது பற்றியோ அதன் நோக்கம் பற்றியோ எவ்விதமான உத்தியோகபூர்வமான தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. அழைக்கப்பட்ட கட்சிகளின் முக்கிய உறுப்பினர்களுக்குமே தெரியாமல் இம்மாநாடு பற்றிய விபரம் இரகசியமாக வைக்கப்பட்டுள்ளது.

இம்மாநாட்டுக்கு முன்னணியில் நின்று அழைப்புவிட்டவர்களின் விபரம் தற்போது ஓரளவு தெரியவந்துள்ளது. இம்மாநாட்டை சட்டத்தரணி மனோகரன் என்பவரே ஏற்பாடு செய்வதாக சொல்லப்பட்டு வந்தது. ஈஎன்டிஎல்எப் அமைப்பைச் சேர்ந்த இவர் பின்னர் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் ரிஎம்விபி அமைப்புடன் இணைந்து செய்ற்பட்டவர் எனத் தெரியவருகின்றது. பெரும்பாலும் அழைப்புகள் சட்டத்தரணி மனோகரனூடாகவே விடுக்கப்பட்டும் இருந்தது. சட்டத்தரணி மனோகரனுக்குப் பின்னணியில் மற்றுமொரு ரிஎம்விபி முக்கியஸ்தரான கிருஸ்ணன் பின்னணியிலுள்ளர். ஆனால் இந்த மாநாட்டில் மனோகரனுக்கு வழங்கப்பட்ட பொறுப்பையே மனோகரன் மேற்கொண்டதாகவும் ஏனைய விடயங்களில் அவர் ஈடுபட்டு இருக்கவில்லை என்றும் தெரியவருகின்றது. இம்மாநாட்டின் பின்னணயில் தமிழர் தகவல் நடுவம் இருப்பதாக இந்நிகழ்வுகளில் பங்குபற்றவுள்ள முஸ்லிம் கட்சி ஒன்றின் பிரதிநிதி தேசம்நெற்க்குத் தெரிவித்தார்.

இம்மாநாட்டு ஏற்பாட்டில் தமிழர் தகவல் நடுவம் முக்கிய பங்கு வகிப்பதாக லண்டனில் உள்ள தமிழ் அரசியல் கட்சிவட்டாரங்களில் பேச்சு அடிபடுகின்றது. மேலும் மனோகரன் தமிழர் தகவல் நடுவம் இந்தியாவில் செயற்பட்ட வேளையில் அதனுடன் அங்கு தொடர்புபட்டு இருந்துள்ளார். மனோகரனுடைய கடந்தகால அரசியல் செயற்பாடுகள் பற்றி பல்வேறு விமர்சனங்களும் உள்ளது.

இம்மாநாட்டில் கட்சியின் தலைவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்ற கடுமையான கட்டுப்பாடும் விதிக்கப்பட்டு உள்ளதாக இதில் கலந்துகொள்ள உள்ளவொரு கட்சிப் பிரதிநிதி தேசம்நெற்க்கு தெரிவித்தார். இலங்கையில் இருந்து வரவுள்ள கட்சிகளின் தலைவர்களின் பயணச் செலவு ஒரு வாரகாலம் தங்குவதற்கான செலவு என்பனவற்றை மாநாட்டு ஏற்பாட்டாளர்களே ஏற்றுக்கொண்டுள்ளனர். அண்ணளவாக இம்மாநாட்டை ஏற்பாடு செய்வதற்கு 100 000 பவுண்கள் வரை ஆகும் என மதிப்பிடப்படுகின்றது.

இவ்வாறான ஒரு மாநாட்டை ஏற்பாடு செய்வதற்கான பொருளாதார பலமும் அரசியல் பலமும் இலங்கை இந்திய அரசுகளுக்கும் புலம்பெயர் நாடுகளில் உள்ள பிரிஎப் போன்ற புலி ஆதரவு அமைப்புகளுக்குமே உள்ளது. ஆனால் இம்மாநாட்டு ஏற்பாடுகளில் தமிழர் தகவல் நடுவத்தின் ஈடுபாடும் இலங்கையின் ஆளும் கட்சி வட்டாரங்களில் இருந்து வரும் தகவல்களும் இலங்கை அரசு இம்மாநாட்டின் பின்னணியில் இல்லை என்பதை தெளிவாக்குகின்றது.

இங்கு வரவுள்ள கட்சிகளின் லண்டன் அமைப்பாளர்கள் சிலருடன் உரையாடியதில் இந்திய அரசும் இம்மாநாட்டின் பின்னணியில் இல்லையென உறுதியாகத் தெரிவிக்கின்றனர். இந்த மாநாட்டை ஒழுங்கு செய்யக் கூடியவர்கள் பொருளாதார பலமுடைய பிரிஎப் ம் அரசியல் ஆளுமையைக் கொண்ட தமிழர் தகவல் நடுவமும், மட்டுமே. ஆனால் தங்களுக்கென்று ஒரு தலைமைத்துவ ஆளுமையைக் கொண்டிராமல் தலைமறைவாக இருந்து அவர்களின் பினாமிகளால் வழிநடாத்தப்படும் அமைப்பு 100 000 பவுண் செலவில் இம்மாநாட்டை ஏற்படுத்துமா என்பது சந்தேகமே. மேலும் பிரிஎப் பின்னணியில் ஏற்பாடு செய்யும் ஒரு கூட்டத்திற்கு இத்தமிழ் பேசும் தலைமைகள் அழைப்பையேற்று வர முற்படாது.

ஆக இந்த மாநாட்டின் பின்னணியில் தமிழர் தகவல் நடுவம் மட்டுமே எஞ்சி நிற்கின்றது. ஆனால் இவ்வாறான ஒரு பாரிய செலவில் ஒரு மாநாட்டை ஏற்பாடு செய்கின்ற வல்லமை தமிழர் தகவல் நடுவத்திற்கு இல்லை என்பதும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான அமைப்பாகக் கருதப்படும் தமிழர் தகவல் நடுவத்தின், அதன் தலைவர் ஆர் வரதகுமாரின் அழைப்பையேற்று இந்த தமிழ் பேசும் கட்சிகளின் தலைவர்கள் வரமாட்டார்கள் என்பதும் உறுதியானது. ஆகையால் தமிழர் தகவல் நடுவத்திற்குப் பின்னணியில் உள்ளவர்களே இம்மாநாட்டை ஏற்பாடு செய்கின்றனர் என்ற முடிவுக்கு வருவது தவிர்க்க முடியாததாகின்றது.

அந்த வகையிலும் மேலதிகமாக தேசம்நெற்க்கு கிடைக்கும் தகவல்களும் மேற்கு நாடுகள் குறிப்பாக பிரித்தானிய அரசு இம்மாநாட்டின் பின்னணியில் இருப்பதாக தெரிவிக்கின்றன. அதனாலேயே ஆரம்பத்தில் லண்டனில் இம்மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டதாகவும் பின்னர் பிரித்தானிய அரசின் ஈடுபாடு வெளிப்படாமல் தவிர்க்கப்படுவதற்காக சூரிச்ற்கு இம்மாநாடு இடமாற்றப்பட்டதாகவும் தெரியவருகின்றது.

மாநாட்டின் திரைக்குப் பின்னால் உள்ளவர்கள் யார்?

International Working Group on Sri Lanka என்ற அமைப்பே இம்மாநாட்டை ஒழுங்கு செய்வதாகவும் Initative on Conflict Prevention through Quiet Diplomacy, தமிழர் தகவல் நடுவம் ஆகியனவே இம்மாநாட்டின் ஏற்பாடுகளைச் செய்வதாக அழைப்பிதழில் குறிப்பிடப்பட்டு உள்ளதாக தெரியவருகின்றது.

International Working Group on Sri Lanka என்ற அமைப்பு கடந்த பத்து ஆண்டுகளுக்கு மேலாக இலங்கை விடயங்கள் தொடர்பாக ஆராய்ந்து வருகின்ற அமைப்பு. அதன் தலைவராக Richard Reoch என்பவர் இருந்துள்ளார். அதன் பொதுச் செயலாளராக Peter Bowling என்பவர் இருந்துள்ளார். இவ்வமைப்பு இலங்கை மனித உரிமைகள் விடயம் தொடர்பாக மேற்கு நாட்டு அரசுகளுக்கு தகவல்களை பரிமாறியுள்ளனர். ஒரு சில அறிக்கைகளையும் வெளியிட்டுள்ளன. ஆனால் இலங்கை அரசும் தமிழீழ விடுதலைப் புலிகளும் மிகமோசமான மனித உரிமைகளை மீறிய இறுதி யுத்தம் தொடர்பாக இவ்வமைப்பு மௌனமாகவே இருந்துள்ளது. இவ்வமைப்புப் பற்றி டிசம்பர் 11 1998ல் அமெரிக்க கொங்கிரஸ்ற்கு அதன் தலைவர் Richard Reoch பின்வருமாறு கூறுகிறார் ‘The International Working Group on Sri Lanka is an independent, non-partisan network of organisations and individuals concerned with the promotion of human rights, development and peace in Sri Lanka. It has a management board in London and an international network that currently comprises humanitarian and advocacy groups in Asia, Australasia, Canada, Europe and the USA as well as Sri Lankan organisations working in the fields of development, peace and human rights.” இவ்வமைப்பின் சார்பில் Richard Reoch யை பிரித்தானிய அரசின் சர்வதேச அபிவிருத்திக்கான திணைக்களம் (Department for International Development of the UK Government) இரு வார வேலைத் திட்டத்தில் இலங்கைக்கு அனுப்பி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

தமிழர் தகவல் நடுவத்துடன் இம்மாநாட்டின் ஏற்பாடுகளைக் கவனிக்கும் Initative on Conflict Prevention through Quiet Diplomacy அமைப்பு கனடாவைத் தளமாகக் கொண்டு செயற்படுகின்ற Human Rights Internet அமைப்பின் ஒரு பிரிவாகும். 2007ல் இவ்வமைப்பு ஒரு மில்லியன் டொலர் நிதித் திட்டத்தைக் கொண்டிருந்தது.  இவ்வமைப்பிற்கு கனடிய சர்வதேச அபிவிருத்தி முகவரகம் நோர்வே வெளிநாட்டு அமைச்சு உட்பட பல நிறுவனங்கள் நிதி வழங்குகின்றன. இவ்வமைப்புகள் நிதியுதவிக்காக அழைப்பிதழில் சேர்க்கப்பட்டது என்று தங்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டதாக அழைக்கப்பட்ட கட்சி ஒன்றின் பிரமுகர் தேசம்நெற்க்கு தெரிவித்தார். Human Rights Internet அமைப்பு பற்றிய மேலதிக தகவல்களுக்கு http://www.hri.ca/pdfs/HRI%20Annual%20Report%202006-2007.pdf

Human Rights Internet அமைப்பின் வேலைத்திட்டங்களில் ஒன்றான Initative on Conflict Prevention through Quiet Diplomacyஅமைப்பு செயற்படுகின்றது. இதன் ஆலோசணைக் குழுவில் பல்வேறு நர்டுகளின் முக்கிய அரசியல் தலைவர்கள் உள்ளனர். பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சர் டொக்டர் பெர்னாட் கோச்னர், இந்தியாவில் இந்திர் குமார் குஸ்ரால், முன்னால் இலங்கை ஜனாதிபதி சத்திரிகா குமாரதுங்க ஆகியோர் அவர்களில் சிலர். இவ்வமைப்பின் வேலைத்திட்டங்களில் தமிழ் முஸ்லீம் தேசியக் கட்சிகளை இயக்கங்களை வன்முறையற்ற வழிகளில் பலப்படுத்துவதும் ஒன்றாக உள்ளது. மேலும் சர்வதேசத் தொடர்புகளை ஏற்படுத்தி பேச்சுவார்த்தைகளில் சர்வதேச தொடர்பை பேணுவதும் அதன் வேலைத்திட்டங்களில் ஒன்றாக உள்ளது.

ஆனால் இப்பின்னணிகள் பற்றியெல்லாம் முழுமையான இருட்டடிப்பைச் செய்து இம்மாநாடு ஒழுங்கு செய்யப்படுவதன் நோக்கம் மிகுந்த சந்தேகத்தை ஏற்படுத்துவது தவிர்க்க முடியாதது. இம்மாநாட்டில் பங்குகொள்ளும் கட்சிகளுக்கே இவை பற்றிய முழுமையான விபரங்கள் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இலங்கையில் உள்ள தமிழ், முஸ்லீம் கட்சிகள் ஒன்றுடன் ஒன்று புரிந்துணர்வை ஏற்படுத்தி பொதுக்கூட்டமைப்பை உருவாக்கவே என்று மட்டும் சொல்லப்பட்டே அனைத்து தமிழ், முஸ்லீம் கட்சிகளும் அழைக்கப்பட்டு உள்ளன.

கட்சித் தலைவர்களுக்குள் மட்டும் ஏற்படுத்தப்படும் புரிந்தணர்வு இலங்கையில் நீண்டகாலம் புரையோடிப் போயுள்ள இன முரண்பாட்டைத் தீர்க்க எவ்வாறு உதவும். தமிழ் தேசியக் கட்சிகளுக்கும் முஸ்லீம் தேசியக் கட்சிகளுக்கும் சிங்கள தேசியக் கட்சிகளுக்கும் ஏற்கனவே காலத்திற்குக் காலம் புரிந்துணர்வும் பொது உடன்பாடும் ஏற்பட்டு வந்திருக்கின்றது. அடுத்து வருகின்ற தேர்தலிலும் அந்தப் புரிந்தணர்வும் பொது உடன்பாடும் ஏற்படும். ஆனால் மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளுக்கு மட்டும் எப்போதும் தீர்வு எட்டப்படுவதில்லை. அதற்கு சுவிஸ் சொக்லேட் கொடுத்து திரைமறைவில் இன்னுமொரு மாநாடு எதற்கு என்ற கேள்வியை எழுப்பியே ஆக வேண்டியுள்ளது.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையிலான இலங்கை அரசு மேற்குலகுக்கு எதிரான அணியில் அணிவகுத்து நிற்பதாலும் மேற்குலகின் ராஜதந்திரங்களுக்கு ஏற்பட்ட தோல்வியினாலும் மகிந்த ராஜபக்ச அரசுக்கு எதிரான நடவடிக்கையின் ஒரு அங்கமாகவே இம்மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றதா என்ற கேள்வி எழுப்பப்படுவது தவிர்க்க முடியாததாகின்றது. அண்மையில் அமெரிக்கா சென்றிருந்த ஓய்வுபெறப் போகின்ற இராணுவத் தளபதி சரத் பொன்சேக்காவை அமெரிக்க உள்ளக பாதுகாப்பு அதிகாரிகள் அவரை ஒரு சந்திப்பிற்கு அழைத்து இருந்தனர். ஆனால் இச்சந்திப்பு போர்க்குற்றங்கள் பற்றிய விசாரணைக்கானது என்ற அடிப்படையில் செய்திகள் வெளியாகின. ஆனால் இச்சந்திப்பு சரத் பொன்சேகாவை மகிந்த சகோதரர்களுக்கு எதிராக கொம்பு சீவிவிடும் ஒரு யுக்தியாக இருக்கலாம் என்றும் கருத இடமுண்டு.

எப்போதும் திறந்த பொருளாதாரக் கொள்கைகொண்ட மேற்குலகுக்கு உவப்பான ஒரு கட்சி ஐக்கிய தேசியக் கட்சி. ஆளுமையான தலைவரில்லாமல் உள்ள அக்கட்சிக்கு இன்று ஜனாதிபதி மகிந்தவை எதிர்க்கின்ற ஆளுமையை உடையவராக வரக்கூடியவர் சரத்பொன்சேகாவே என்ற வகையில் அமெரிக்க உள்ளக பாதுகாப்பு அதிகாரிகளின் சந்திப்பு குறிப்பிடத்தக்கது. இவற்றின் பின்னணியிலேயே தமிழ் பேசும் கட்சிகளின் தலைவர்களின் மாநாடும் நோக்கப்பட வேண்டும். இன்று மேற்குலகு இலங்கையில் ஒரு ரெஜிம் சேன்ஜ்யை எதிர்பார்க்கின்றது. புலித் தேசியமும் ரெஜிம் சேன்ஜ் ஒன்றை செய்வதன் மூலம் தனது மனதை ஆற்றிக் கொள்ளத் துடிக்கின்றது.

புரஜக்ற் பீக்கன் திட்டத்தை சர்வதேச நாடுகள் மகிந்த ராஜபக்ச அரசோடும் இந்தியாவுடனும் இணைந்து வெற்றிகரமாக நிறைவேற்றி உள்ளன. Initative on Conflict Prevention through Quiet Diplomacy யின் மொழியில் சொல்வதானால் தமிழ் தேசியவாதத்தை வன்முறையற்ற வழிக்குக் கொண்டு வந்து நிறுத்தியுள்ளன. அடுத்து மகிந்த ராஜபக்சவின் ரெஜிமைச் சேஞ் பண்ணுவதை நோக்கி நகர்கின்றன.

எய்தவன் இருக்க அம்பை நோவானேன் என்ற கணக்கில் தமிழ் தலைமைகள் சரத்பொன்சேகாவின் கீழ் அணிதிரள காரணங்களைக் கண்டுபிடிக்க ஆரம்பித்துள்ளனர். முஸ்லீம் காங்கிரஸ் ஏற்கனவே யுஎன்பி அணியில் அணிவகுத்து ஏனைய தமிழ் கட்சிகளையும் சிறுபான்மைக் கட்சிகள் என்ற ஸ்லோகத்தில் அணிவகுப்பதற்கான அடுக்குகளில் தீவிரமாக இறங்கி உள்ளது. புலித் தேசியம் பேசிய கட்சிகளுக்கும் நபர்களுக்கும் சர்தபொன்சேக்காவை ஏற்றுக் கொள்வதில் சற்றுத் தயக்கம் இருக்கும். ஆனாலும் மேலக மலையக மக்கள் முன்னணித் தலைவர் மனோ கணேசன் ஏற்கனவே சரத் பொன்சேக்காவை ஆதரிப்பதற்கான காரணங்களைக் கண்டுபிடித்துள்ளார். மனோ கணேசனுடன் தோளுக்குத் தோள் கொடுத்த சிறிதுங்க ஜெயசூரிய ஜனாதிபதித் தேர்தலில் நின்றாலும் மனோ கணேசன் சரத் பொன்சேகாவின் அணியிலேயே நிற்கப் போகின்றார். ஏனையவர்கள் பலரும் தங்களுக்கான காரணங்களைத் தேடத் தொடங்கி உள்ளனர். தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை அங்கிகரிக்கும்படி கேட்கும் தமிழ் கட்சிகள் அந்த சுயநிர்ணய உரிமையை வழங்க முன்வருபவர்களுக்கு வாக்களிக்கும்படி எப்போதும் கோரியதில்லை. இப்போதும் அவ்வாறு கோரப் போவதில்லை என்ற நிலையே தென்படுகின்றது.

இலங்கையில் இனமுரண்பாடுகளை கூர்மைப்படுத்தி தமிழ் மக்கள் மீது ஒடுக்குமுறையைக் கட்டவிழ்த்துவிட்டதில் முக்கிய பங்கு ஐக்கிய தேசியக் கட்சிக்கும் சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்கும் உண்டு. குறிப்பாக ஐக்கிய தேசியக் கட்சியின் ஜே ஆர் ஜெயவர்த்தனவுக்கு உண்டு. ஆனாலும் தமிழ் தேசியவாதிகள் பெரும்பாலும் ஐக்கிய தேசியக் கட்சிக்குப் பின்னேயே அணிதிரண்டனர். தற்போதும் சரத் பொன்சேகா, கோதபாய ராஜபக்ச ஆகியோருக்கு எதிராக மனித உரிமை மீறல், யுத்தக் குற்றங்கள், இனப்படுகொலைக் குற்றச்சாட்டுக்களை வைத்த தமிழ் தேசியம், சரத்பொன்சேகா ஐக்கிய தேசியக் கட்சியில் நின்றவுடன் அவருக்கு பாவ மன்னிப்பு வழங்கி அவரின் கீழ் அணி திரளத் தயாராகின்றனர்.

சாதாரணமாகவே பேரினவாதக் கட்சிகளில் தொங்கிக் கொள்ளும் இலங்கை சிறுபான்மையினக் கட்சிகளுக்கு, தமிழ் பேசும் இனங்களின் கட்சிகளுக்கு இப்போது சூவிஸ் சொக்லேட்டு தருவதாக மேற்குலகம் சமிஞ்சை செய்கின்றது.

இலங்கை இனப்பிரச்சினையை அரசியல் ரீதியாகத் தீர்த்து வைப்பதற்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையிலான அரசு எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதற்கான நம்பிக்கையையும் ஏற்படுத்தவில்லை. காலம்காலமாக இருந்துவருகின்ற பேரினவாத நடவடிக்கைகள் இன்னமும் தொடரவே செய்கின்றது. இவை தமிழ் மக்களின் உள்ளங்களையும் இதயங்களையும் வென்றெடுப்பதற்கு மாறாக அவர்களை இலங்கை அரசியலில் நம்பிக்கை அற்றவர்களாக்கி உள்ளது. இந்த நம்பகமற்ற சூழலைத் தங்களுக்குச் சாதகமாக்கி தமிழ் மக்களின் வாக்கு வங்கியை வைத்து பேரம் பேசுவதற்கு தமிழ்த் தேசிய சக்திகள் தயாராக உள்ளன.

சரத்பொன்சேகா என்ன கோத்தபாய ராஜபக்சவே வந்து ஐக்கிய தேசியக் கட்சியில் நின்றாலும் அவர்கள் தங்கள் நலன்கள் பாதுகாக்கப்படும் என்றால் யாருக்கும் வாக்களிக்கும்படி கோருவார்கள். தமிழ் மக்களின் நலன்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்று அவர்கள் என்றைக்காவது எண்ணி இருந்தால் எப்படி ஐக்கிய தேசியக் கட்சிக்கு அல்லது ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்கு வாக்களிக்கும்படி கோரியிருக்க முடியும்.

இம்மாநாட்டில் கலந்துகொள்ளவுள்ள கட்சிகளும் அதன் தலைவர்களும் :

இம்மாநாட்டில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா (ஈபிடிபி) கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (ரிஎம்விபி), தமிழரசுக் கட்சித் தலைவர் சம்பந்தன், ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், மலையக மக்கள் முன்னணித் தலைவர் பொ சந்திரசேகரன், மேல்மாகாண மக்கள் முன்னணித் தலைவர் மனோ கணேசன் உட்பட 22 தமிழ் முஸ்லீம் கட்சிகளின் தலைவர்கள் கலந்துகொள்ள உள்ளனர்.

பேரியல் அஸ்ரப் இம்மாநாட்டில் கலந்து கொள்ளவில்லை எனத் தெரியவருகின்றது. ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன் இம்மாநாட்டில் கலந்துகொள்ள விரும்பவில்லை என்றும் அக்கட்சியின் மற்றுமொரு உறுப்பினரே கலந்துகொள்வதாகவும் மேலும் தெரியவருகின்றது. சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் உப தலைவர் அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன், ஜேவிபி பா உ சந்திரசேகரன் ஆகியோர் எந்தவொரு கட்சியின் தலைவராகவும் இல்லாததால் அவருக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்றும் தெரியவருகின்றது.

தமிழ் அமைப்புகளை கைப்பற்றும் பிரிஎப் இன் முயற்சி தோல்வி!!! : த ஜெயபாலன்

BTF_Bannerபிரிஎப் இன் பெட்டிசத்தால் கிங்ஸ்ரன் கவுன்சிலுக்கு 10000 பவுண்கள் செலவு!
பிரிஎப் அடித்த பெட்டிசத்திற்கு ஆதரவளிக்க பிரிஎப் உறுப்பினர்களே முன்வரவில்லை!!

(குறிப்பு: அண்மையில் பிரிஎப் பற்றி வெளியான செய்திகள் தொடர்பாக பிரிஎப் இன் கருத்தை அறித்து கொள்வதற்காக அனுப்பி வைக்கப்பட்ட கடிதம் : Letter_to_BTF )

ரொல்வேர்த் பெண்கள் பள்ளியில் இயங்கிவரும் கிங்ஸ்ரன் தமிழ் பள்ளிக்கு எதிராக பிரிஎப் – பிரித்தானிய தமிழ் போறம் அடித்த பெட்டிசம் தள்ளுபடியானது. பிரிஎப் அடித்த பெட்டிசத்திற்கு ஆதரவளித்து சாட்சியமளிக்க பிரிஎப் உறுப்பினர்களே முன்வராததால் பெட்டிசம் தள்ளுபடியானது. கிங்ஸ்ரன் தமிழ் பாடசாலைக்கு இரண்டாம் ஆண்டுக்கு ஒதுக்கப்பட்ட 12989 பவுண்களை வழங்க கவுன்சில் செயற்குழு முடிவெடுத்துள்ளது.

பிரித்தானிய பிரிஎப் தலைவர் நாதன் குமார் (நல்லைநாதன் சுகந்தகுமார்) கிங்ஸ்ரன் தமிழ் பள்ளியைப் பற்றிய குற்றச்சாட்டுக்களையும் தகவல்களையும் கிங்ஸ்ரன் எதிர்க்கட்சி ரொறி கவுன்சிலர் ஹவார்ட் ஜோன்ஸிடம் பெப்ரவரியில் இடம்பெற்ற நிதியுதவி அளிப்பது தொடர்பான கூட்டத்திற்கு முன்னதாக வழங்கி இருந்தார். ஆனால் ஒக்ரோபர் 20ல் ஸ்குறுட்னி பனலுக்கு முன்வந்து நின்ற பிரிஎப் தலைவர் நாதன் குமார் தான் வழங்கிய குற்றச்சாட்டுக்களும் தகவல்களும் இரண்டாம் நபரூடாகக் கிடைத்ததாகவும் அக்குற்றச்சாட்டுக்களை ஆதரிக்க யாரும் முன்வரவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

Kinsston_Tamil_Schoolசுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 9500 பவுண்களை (வரிச்சலுகையையும் உள்ளடக்கி 11 000 பவுண்) கிங்ஸ்ரன் பள்ளி அனுப்பி வைத்தது. கவுன்சில் வழங்கும் நிதியை சுனாமி நிவாரணத்திற்கு அனுப்பியதாக பிரிஎப் குற்றம்சாட்டி இருந்தது. சுனாமி நிவாரணத்திற்கு கவுன்சில் வழங்கும் நிதியை வழங்கியதால் தமிழ் பள்ளிக்கு நிதி அதிகம் வழங்கப்படுகின்றது என்பது குற்றச்சாட்டாக இருந்தது. ஆனால் சுனாமிக்கு அனுப்பப்பட்ட நிதி கிங்ஸ்ரன் கவுன்சில் வழங்கிய நிதியல்ல. அது கிங்ஸ்ரன் தமிழ் பள்ளியின் பெற்றோர்கள் ஆசிரியர்கள் நண்பர்கள் வழங்கிய நிதி. 30 000 பவுண்கள் சேமிப்பில் உள்ளது என்றும் அதனை தங்களுக்கு ஒரு கட்டடம் வாங்குவதற்காக சேமிப்பில் வைத்திருந்ததாக கிங்ஸ்ரன் தமிழ் பள்ளியின் முன்னாள் கவனரும் தற்போதைய உறுப்பினருமான டொக்கடர் பகீரதன் லண்டன் குரலுக்குத் தெரிவித்தார். விசாரணைகளில் கிங்ஸ்ரன் தமிழ் பள்ளியின் மீதான குற்றச்சாட்டு நிராகரிக்கப்பட்டது.

இந்த விசாரணைகளுக்கு முன்னதாக கிங்ஸரன் கவுன்சில் மேற்கொண்ட விசாரணையிலும் குற்றாசாட்டுகள் அடிப்படையற்றவை என நிரூபிக்கப்பட்டதாக டொக்டர் பகீரதன் லண்டன் குரலுக்குத் தெரிவித்தார். ஆயினும் பிரிஎப் தொடர்ச்சியாக கவுன்சிலின் எதிர்க்கட்சியினூடாக அழுத்தம் கொடுத்து ஸ்குறுட்னி பனலினூடாக இந்த விசாரணையைத் தூண்டியது குறிப்பிடத்தக்கது.

இவ்விசாரணைகள் பற்றி கருத்து வெளியிட்ட கவுன்சிலர் ஹவாட் ஜோன்ஸ் பிரிஎப் தலைவர் நாதன் குமாரை தான் முதலில் சந்தித்த போது கேள்விப்பட்டவற்றின் அடிப்படையிலேயே விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டதாகவும் ஆனால் தற்போது நாதன் குமார் சொல்வதன்படி அவரால் அவற்றை நிரூபிக்க முடியவில்லை என்றும் தெரிவித்தார். தற்போது குற்றச்சாட்டுக்களை முன்வைத்து ஆவணங்களைத் தந்தவர்கள் இது தங்களுடைய ஆவணம் அதற்கு தாங்கள் ஆதரவளிக்கின்றோம் என்று எவரும் முன்வரவில்லை எனவும் கவுன்சிலர் ஹவாட் ஜோன் தெரிவித்தார்.

பிரிஎப் வழங்கிய மேற்படி மொட்டைப் பெட்டிசத்தை விசாரிப்பதற்கு 173 மணித்தியாலங்கள் 10300 பவுண் பொதுப் பணம் செலவிடப்பட்டதாகவும் கிங்ஸ்ரன் கவுன்சில் கணக்கை கண்காணிக்கும் ஓடிட் அலுவலகம் தெரிவித்துள்ளது. ஓடிட் அலுவலகத்தின் உள்ளக இயக்குனர் ஜெரிமி கைற் கிங்ஸ்ரன் தமிழ் பள்ளிக்கு நிதி உதவி தேவை என்பதை ஏற்றுக்கொள்வதாகவும் ஆனால் கேட்கப்பட்ட தொகையிலும் குறைவான நிதியுதவி போதுமானது என்றும் தெரிவித்துள்ளது. மேலும் ஓடிட்டர் அலுவலகம் சில பரிந்துரைகளையும் கிங்ஸ்ரன் தமிழ் பள்ளிக்கு வழங்கி உள்ளது. தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள பரிந்துரைகளை ஏற்றுக் கொள்வதாக கிங்ஸ்ரன் தமிழ் பள்ளியின் சார்பில் இளங்கோவன் தெரிவித்துள்ளார். கிங்ஸ்ரன் தமிழ் பள்ளியும் கிங்ஸ்ரன் கவுன்சிலும் நீண்ட காலமாக இணைந்து செயற்படுகின்றது என்று தெரிவித்த கிங்ஸ்ரன் கவுன்சிலர் பொப் ஸ்ரீட் கவுன்சில் வழங்கும் நிதியுதவி குறைக்கப்பட்டால் தமிழ் பள்ளி நிதிக் கஸ்டத்தை எதிர்கொள்ளும் என்று தெரிவித்தார்.

பிரிஎப் பெட்டிசத்தின் பின்னணி : 

தொண்ணூறுக்களின் ஆரம்ப காலத்தில் தங்களை தமிழ் மக்களின் ஏகதலைமையாக அறிவித்துச் செயற்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் புலம்பெயர்ந்த நாடுகளில் உருவாக்கப்பட்ட தன்னார்வ அமைப்புகள் தமிழ் பள்ளிகள் ஆலயங்கள் என்பனவற்றின் நிர்வாகத்தில் இருந்த ஓட்டை உடைசலுகளுக்குள் புகுந்து தன்கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. மேற்குலகில் தமிழீழ விடுதலைப் புலிகள் தடை செய்யப்பட்ட போது தமிழீழ விடுதலைப் புலிகளின் பினாமி நிறுவனங்களாக இயங்கிய அமைப்புகள் அந்தக் கட்டுப்பாட்டை தங்களுக்குள் வைத்திருந்தன. பிரித்தானியாவிலும் பிரித்தாகிய தமிழ் போறம் என்று பெயரளவில் இயங்கினாலும் பிரித்தானிய ரைகர் போறம் என்றளவிலேயே அதன் செயற்பாடுகள் அமைந்தது.

Surrey_Tamil_Schoolஅந்த வகையில் 1986ல் உருவாக்கப்பட்ட கிங்ஸ்ரன் தமிழ் பள்ளியின் நிர்வாகத்தில் இலங்கையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் அ அமிர்தலிங்கத்தின் குடும்பத்தவர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். ஆனால் அரசியல் சாராத பலரும் அப்பள்ளியின் நிர்வாகத்தில் உள்ளனர். அவர்கள் இலங்கை அரசியலை பிள்ளைகளின் கல்வியுடன் கலக்கத் தேவையில்லை என்கின்றனர். ஆனால் பள்ளியின் நிர்வாகத்தில் இருந்த பிரிஎப் உறுப்பினர்கள் சிலர் ஏனைய அமைப்புகள் போல் கிங்ஸ்ரன் பள்ளியையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயற்சி எடுத்தனர். ஆனால் அந்த முயற்சி பலனளிக்காத நிலையில் கடந்த ஆண்டு யூன் 7ல் போட்டியாக மற்றுமொரு பள்ளியை ஆரம்பித்தனர். சறே தமிழ் பள்ளி என்ற பெயரில் இயங்கும் இப்பள்ளி கோம்பே ஆண்கள் பள்ளியில் செயற்படுகின்றது. விஜயகுமார், விமலதாசன், சிவானந்தராசா, டொக்டர் மகிதரன், டொக்டர் புவி ஆகியோரே இதன் பின்னணியில் செயற்பட்டுள்ளனர். ‘படிப்பது தேவாரம் இடிப்பது சிவன் கோவில் – கிங்ஸ்ரன் பிள்ளைகளின் பெயரில் மோதல்’ என்ற தலைப்பில் லண்டன் குரலின் 24 இதழில் இதுபற்றிய விரிவான செய்தி வெளியானது.

தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்ட வர முடியாது போனதால் கிங்ஸ்ரன் பள்ளிக்கு பல வகையிலும் பிரிஎப் இல் உறுப்பினராக இருந்தவர்கள் நெருக்கடி வழங்கினர். மொட்டைத் துண்டுப் பிரசுரங்கள் வெளியிடப்பட்டன. தங்கள் புதிய பாடசாலைக்கு மாணவர்களையும் பெற்றோரையும் கவர்ந்திழுக்கும் போட்டி ஒன்றும் அங்கு பாடசாலை ஆரம்பிக்கப்பட்ட காலப்பகுதியில் இடம்பெற்றது. இந்தப் பழிவாங்கலின் தொடர்ச்சியாக கிங்ஸ்ரன் தமிழ் பள்ளி மீது பெட்டிசங்களும் அடிக்கப்பட்டது. இதன் பின்னணியில் பிரிஎப் உறுப்பினர்கள் இருந்தனர் என்பதையும் அன்று லண்டன் குரலில் சுட்டிக்காட்டி இருந்தோம்.

Suren_Surendiranஇது தொடர்பாக பிரிஎப் இன் அப்போதைய தலைவர் சுரேன் சுரேந்திரனிடம் லண்டன் குரல் இதழ் 25க்காக ஒரு நேர்காணலைச் செய்திருந்தோம். அப்போது ‘பிரித்தானிய தமிழர் பேரவை, கோயில்கள், பாடசாலைகள் ஆகியவற்றின் நிர்வாகங்களைக் கைப்பற்ற முயற்சிப்பதாக  அண்மைக்காலமாக சில குற்றச்சாட்டுகள் உள்ளது. இவ்வாறான சம்பவங்கள் 1991ல் லண்டணில் இடம்பெற்றது. இவ்வாறான விசயங்களை பிரித்தானிய தமிழர் பேரவை மேற்கொள்கிறதா?’ எனக் கேட்ட போது ‘எனக்கு அந்த குற்றச்சாட்டுப் பற்றி தெரியாது. எங்கள் அமைப்பு நான் சொன்னமாதிரி, சிறிலங்காவில் தமிழர்களுக்கு எதிராக நடக்கிற வன்முறைகள், அட்டூழியங்களை சர்வதேச ரீதியில வெளிக்கொண்டு வந்து சர்வதேச அழுத்தத்தை சிறிலங்கா அரசுக்கு எற்படுத்தவது தான் எங்களுடைய நோக்கம். குறிக்கோள். அவ்வளவு தான். வெல் டிபைன் கொன்ஸ்ரிரியூசன். தமிழ் ஸ்கூல் கோயில் எங்களுக்கும் அதுக்கும் சம்பந்தமில்லை.’ என்று பதிலளித்தார்.

அத்துடன் விட்டுவிடாமல் ‘கிங்ஸ்ரன் தமிழ் பாடசாலை, பிரித்தானிய தமிழர் பேரவை பாடசாலை நிர்வாகத்தில் தலையீடு செய்ததாக நேரடியாக குற்றம்சாட்டி உள்ளது.’ எனக் கேட்டபோது ‘நான் அப்படி ஒன்றும் கேள்விப்படவில்லை. ஆனால் நான் போய் நாளைக்கு ஒரு களவு செய்தால் அதை தமிழ் போறம் செய்தது என்று சொல்லேலாது என்ன. பிளவுகள் அதுகள் இதுகளுக்கு சும்மா தமிழ் போறம் காரணம் என்று சொல்றது எல்லாம் சில்லறைக் கதையல்.’ எனப் பதிலளித்தார்.

ஆனால் ஒக்ரோபர் 20ல் பிரிஎப் இன் இப்போதைய தலைவர் விசாரணைக் குழுவின் முன் தோன்றி மண்கவ்வியுள்ளார். பிரிஎப் நேரடியாக தன்னார்வ நிறுவனங்கள் தமிழ் பள்ளிகள் ஆலயங்களில் தலையீடு செய்வதும் தமது கட்டுப்பாட்டுக்குள் வராத அமைப்புகள் மீது தங்கள் உறுப்பினர்களை கொண்டு பெட்டிசம் அடிப்பதும் மொட்டைக்கடிதம் அடிப்பதும் தற்போது அம்பலமாகி உள்ளது.

Seevaratnam_Nஇதே போன்றதொரு முயற்சி டொக்கடர் நித்தினானந்தனின் வெஸற் லண்டன் தமிழ் பாடசாலையில் சிவயோகம் சீவரத்தினம் அவர்களால் மேற்கொள்ளப்பட்டுத் தோல்வியில் முடிவடைந்தது. சிவயோகம் சீவரத்தினம் ஆர் ஜெயதேவனின் ஈழபதீஸ்வரர் ஆலயத்தைக் கைப்பற்ற எடுத்த முயற்சியிலேயே தமிழீழ விடுதலைப் புலிகளால் தடுத்து வைக்கப்பட்டு சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டார். ஆர் ஜெயதேவன் தடுத்து வைக்கபட்ட காலத்தில் சிவயோகத்தின் பலகையை மாட்டி சிலநாட்கள் ஆலயத்தை உரிமை கொண்டாடினார். அது தோல்வியில் முடியவே அக்ரன் கார் ரென்ரலின் இடத்தை பல மடங்கு விலை அதிகம் கொடுத்து (900 000 பவுண்) வாங்கி ஈழபதீஸ்வரருக்குப் போட்டியாக ஆலயம் கட்டத்திட்டமிட்டார். ஆனால் அப்பகுதி கவுன்சில் கோயில் கட்ட அனுமதி மறுத்துவிட்டதால் மீண்டும் மண் கவ்வினார்.

அண்மையில் டெய்லி மிரர் மற்றும் சண் பத்திரிகைகளில் வெளியான உண்ணாவிரதம் இருந்த பரமேஸ்வரன் உண்ணாவிரத காலத்தில் மக்டோனால்ட் சாப்பிட்டது பற்றிய செய்தியை ரிவைஓ உறுப்பினர்களுடன் ஏற்பட்ட மனஸ்தாபம் காரணமாக பிரிஎப் உறுப்பினர்களே கசியவிட்டதாகவும் உண்ணாவிரதத்தில் முன்னின்ற தமிழ் இளையோர் சிலர் குற்றம்சாட்டுகின்றனர்.

இவை தொடர்பான பிரிஎப் இன் நிலைப்பாட்டை அறிய பிரிஎப் உடன் தொடர்பு கொண்ட போது அதன் தவைவர் நாதன் குமார் அங்கிருக்கவில்லை. எமது தொலைபேசி இலக்கத்தை அவருக்கு வழங்குவதாக அலுவலக உதவியாளர் ஜனா தெரிவித்தார். நாதன் குமார் தொடர்பு மேற்கொள்ளாமையால் அவருக்கும் பிரிஎப் முக்கியஸ்தர் சிலருக்கும் எமது கேள்விகளை மின் அஞ்சலினூடாக அனுப்பி வைத்திருந்தோம் அவை எதற்கும் எமக்கு பதிலில்லை. அதனால் அக்கேள்விகளை தேசம்நெற் இணையத்தில் பிரசுரிக்கின்றோம். Letter_to_BTF அவர்கள் பதிலளிக்கும் பட்சத்தில் அவற்றினை லண்டன் குரலிலும் பிரசுரிப்போம்.

ரிஎன்ஏ வன்னிமுகாம் விஜயம் – முரண்பட்ட தகவல்கள்

வன்னி முகாம்களில் அடிப்படை வசதிகள் வழங்கப்பட்டு உள்ளது அரசு மீள்குடியேற்றும் விடயங்களில் அக்கறையுடன் ஈடுபட்டு வருகின்றது என ரிஎன்ஏ குழுவில் சென்ற ரெலோ பாராளுமன்ற உறுப்பினர் சிறிகாந்தா டெய்லி மிரர் பத்திரிகைக்குத் தெரிவித்துள்ளார். ஆனால் அங்கு முகாம்களில் இருந்து அழைத்துச் செல்லப்படுபவர்கள் பெரும்பாலும் மீண்டும் வருவதில்லை என மக்கள் தன்னிடம் முறையிட்டதாக பி அரியநேந்திரன் குளோபல் தமிழ் செய்திக்கு தெரிவித்து இருக்கின்றார். ஆனால் இது பற்றி என் சிறிகாந்த டெய்லி மிரருக்குத் தெரிவிக்கையில் புலிகள் என்று சந்தேகிக்கப்படுபவர்கள் அவர்களது குடும்பங்களில் இருந்து பிரிக்கப்பட்டு தனியாக தடுத்து வைக்கப்பட்டு இருப்பதாக மக்கள் கூறியதாகக் கூறியுள்ளார். தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் வன்னி முகாம்களுக்குச் சென்று திரும்பிய சில மணிநேரங்களுக்குள் வெளிவந்த செய்திகள் ஒன்றுக்கொன்று முரண்பாடாக உள்ளது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பில் என் சிறிகாந்தா, பி அரியநேந்திரன், சிவநாதன் கிஸோர், விநோ நோதரலிங்கம், செல்வம் அடைக்கலநாதன், ஆர் எம் இமாம், தோமஸ் வில்லியம் தங்கத்துரை ஆகியோரே வன்னி முகாம்களுக்கு பயணித்திருந்தனர். இவர்கள் அரசினால் தெரிவு செய்யப்பட்டு அனுப்பியதாக குளொபல் தமிழ்செய்தி குறிப்பிட்டு இருந்தது. ஆனால் இது பற்றி பிபிசி தமிழோசையில் செவ்வி வழங்கிய செல்வம் அடைக்கலநாதன் தமிழ் தேசியக் கூட்டமைப்பு இரு பிரிவுகளாக வன்னி முகாம்களுக்குச் செல்லவே திட்டமிட்டு இருந்ததாகவும் இரண்டாவது பிரிவு விரைவில் வன்னி செல்லும் என்றும் தெரிவித்துள்ளார். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர் சம்பந்தன் நாளை சுவிஸ்மாநாட்டுக்குச் செல்ல இருப்பதால் அவருடைய வயது காரணமாக அலைச்சலைத் தவிர்க்கும்படி உறுப்பினர்கள் கேட்டுக் கொண்டதாகவும் தெரிவித்தார்.

வன்னி முகாம்களில் உள்ள மக்கள் தாங்கள் உடனடியாகவே தங்கள் வீடுகளுக்கு செல்லும் தங்கள் விருப்பத்தை வெளியிட்டதாக என் சிறிகாந்தா, செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் தெரிவித்தனர். மீள்குடியேற்றப்பட்ட மக்கள் தாங்கள் தங்கள் சொந்த இடங்களுக்குத் திரும்பியதில் மகிழ்ச்சி அடைவதாகத் தெரிவித்ததாக செல்வம் அடைக்கலநாதன் பிபிசி தமிழோசைக்கு தெரிவித்துள்ளார்.

அங்குள்ள மக்கள் சூழ்நிலையைப் புரிந்துகொண்டுள்ளார்கள் என்று தெரிவித்துள்ள என் சிறிகாந்தா அரச அதிகாரிகள் இராணுவ அதிகாரிகள் மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். ஒரு பகுதி மக்கள் மீள்குடியேற்றப்பட்டதால் முகாம்களில் இருந்த சுகாதார மற்றும் குடிநிர்ப் பிரச்சினைகள் சற்றுக் குறைந்துள்ளதை ரிஎன்ஏ குழு சுட்டிக்காட்டி இருந்தது.

முகாம்களில் மக்களின் நிலைமை தன்னை நெகிழ்ச்சி கொள்ளச் செய்தது. – அடைக்கலநாதன் : அவர்கள் மிகவும் திருப்தியான முறையில் உள்ளனர் – கிஷோர்

kishoor.jpgவவுனியா முகாம்களில் வாழும் மக்களின் நிலைமை தன்னை நெகிழ்ச்சி கொள்ளச் செய்ததாக அவர்களைச் சென்று பார்வையிட்டுத் திரும்பிய நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளதாக பீ.பீ.ஸி தமிழோசை தெரிவித்துள்ளது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் 7 உறுப்பினர்க்ள் கொண்ட குழு ஒன்று இலங்கை அரசாங்கத்தின் ஏற்பாட்டில் நேற்று வவுனியாவில் உள்ள முகாம்கள் மற்றும் வன்னியில் மக்கள் சிலர் மீள்குடியேற்றப்பட்ட இடங்கள் ஆகியவற்றைச் சென்று பார்வையிட்டுத் திரும்பியது. அந்தக் குழுவில் இடம்பெற்ற செல்வம் அடைக்கலநாதன் அவர்கள், தமிழோசையிடம் பேசுகையில், அந்த மக்களை உடனடியாக மீள்குடியேற்றம் செய்வதற்கான நடவடிக்கைகளை விரைவுபடுத்துமாறு அரசாங்கத்துக்கு தாம் ஒரு அறிக்கை சமர்ப்பிக்கவிருப்பதாக தெரிவித்திருந்தார். தற்போதை மழை காரணமாக முகாம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், ஆயினும், தமது உடனடி மீள்குடியேற்றத்தையே அந்த மக்கள் அவசரமாகக் கோருவதாகவும் தெரிவித்திருந்தார்.

இந்த விஜயம் தொடர்பாக சிவநாதன் கிஷோர் எம். பியுடன் தினகரன் தொடர்பு கொண்டு கேட்டபோது அவர் பின்வருமாறு கருத்து தெரிவித்ததாக பிரதான செய்தியில் குறிப்பிட்டிருந்தது. “நாங்கள் எதிர்பார்த்ததைவிட மிகவும் குறுகிய காலத்திற்குள் எமது மக்களுக்குத் தேவையான சகல வசதிகளையும் அரசாங்கம் செய்து கொடுத்து அவர்களை மீளக்குடியமர்த்தவும் செய்துள்ளது. நிவாரணக் கிராமங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களையும், மீளக் குடியமர்ந்துள்ள மக்களையும் நாங்கள் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினோம். அந்த மக்கள் மிகவும் திருப்தியான முறையில் உள்ளனர். அந்த மக்கள் மத்தியில் சந்தோஷத்தை காணக் கூடியதாக இருந்தது. மக்களின் சந்தோஷமே எமது திருப்தியாகும்.”

இதேவேளை மன்னார் கட்டுக்கரைக்குளம், மன்னார் பாலம் புனரமைப்பு வேலைத் திட்டம் நடைபெறும் இடங்களுக்கும் விஜயம் செய்ததாக வன்னி எம்.பி. சிவநாதன் கிஷோர் தெரிவித்திருந்தார்.

இரத்மலானை விமான நிலையத்திலிருந்து விமானம் மூலம் வன்னி சென்றடைந்த எம். பிக்களை வரவேற்ற வன்னி தளபதி மேஜர் ஜெனரல் கமல் குணரட்ன மீள்குடியேற்றம் தொடர்பாக அரசாங்கம் முன்னெடுத்து வரும் அபிவிருத்தி தொடர்பாக விரிவான விளக்கத்தை வழங்கியுள்ளார். இந்த நிகழ்வு வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தில் இடம் பெற்றுள்ளது. அதனைத் தொடர்ந்து எம். பிக்கள் செட்டிக் குளம், ஆனந்த குமாரசுவாமி, அருணாச்சலம் ஆகிய நிவாரண கிராமங்களுக்கும் சென்று மக்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். அடம்பன், மல்லாவி, துணுக்காய், மாங்குளம் போன்ற பிரதேசங்களுக்கு விஜயம் செய்த இவர்கள் மீளக் குடியேறிய மக்களுடனான சந்திப்பிலும் கலந்து கொண்டனர். இவர்களுடன் மீள்குடியேற்ற அனர்த்த நிவாரண அமைச்சர் றிசாட் பதியுதீன், வன்னி பாதுகாப்பு படைகளின் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் கமல் குணரட்ன, வட மாகாண ஆளுநர் உட்பட பாதுகாப்பு தரப்பு உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர். மன்னார் மாவட்டத்தில் உயிலங்குளம் கருங்கண்டல் ஆகிய இடங்களுக்கும் இவர்கள் விஜயம் செய்தனர். மன்னார் தள்ளாடி இராணுவ முகாமில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வன்னியில் இடம் பெறும் மீள்குடியேற்றம் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

வெளிநாடுகளிலிருந்து வரவழைக்கப்பட்ட இயந்திரங்கள் மூலம் நிலக் கண்ணி வெடி அகற்றல் இடம்பெறும் இடங்களையும் பார்வையிட இவர்கள் அனுமதிக்கப்பட்டனர். 2010 ஆண்டு ஜனவரியுடன் நிவாரண கிராமங்களில் தங்கியுள்ளவர்களின் மீள்குடியேற்றம் நிறைவுக்கு வரும் என படை தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

ஈழக்கொடியை மீண்டும் உயர்த்த எவருக்கேனும் இடமளிக்கப்போவதில்லை – ஜனாதிபதி

041109ma.jpgஈழக் கொடியை வீழ்த்த உதவியவர்கள் மீண்டும் அதனை உயர்த்த இடமளிக்க முடியாதென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறினார். இவர்கள் வெளிநாடுகளில் ஈழக்கொடியினை உயர்த்த முற்படுவார்களேயானால் நாட்டு மக்கள் அதற்குத் தகுந்த பதிலடி கொடுப்பர் என்றும் ஜனாதிபதி மேலும் கூறினார்.

அரச காணிகளிலுள்ள விஹாரைகளுக்கு காணி உறுதிப்பத்திரம் வழங்கும் வைபவம் நேற்று ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் காணி உறுதிப்பத்திரங்களை வழங்கிவைத்து உரையாற்றிய ஜனாதிபதி, அங்கு மேலும் பேசுகையில், இனத்துரோகிகளுக்கு வீரர்களை உருவாக்க முடியாது. தேசப்பற்று உள்ளோரால் மாத்திரமே அது முடியும். நாம் சரியான பாதையை வகுத்துவருகிறோம். எத்தகைய சவால்களை எதிர்கொள்ளவும் நாம் தயாராகவுள்ளோம் என்றார். இந்நிகழ்வில் ஜனாதிபதி மேலும் தெரிவித்ததாவது;

ஈழக் கொடியை வீழ்த்துவதற்கு எம்மோடு உறுதுணையாக பெளத்த மதகுருமார்களுடன் மேலும் பலர் இருந்தனர். அதற்குத் தலைமைத்துவம் வழங்கியும் செயற்பட்டனர். அவர்கள் எவருமே இந்த நாட்டில் ஈழக் கொடியைக் காண விரும்பமாட்டார்கள். எனினும் எவருக்காகவாவது உலகில் எங்காவது ஈழக்கொடி உயர்த்தப்படுமானால் அதற்கு இந்நாட்டு மக்கள் தகுந்த பதிலடி கொடுப்பது உறுதி, சர்வதேச சூழச்சிகள் வெற்றி பெறுவதற்கு உதவியாக இந்நாட்டில் மேற்கொள்ளப்படும் சூழ்ச்சிகளுக்கு ஆயுள் மிகக் குறைவானது என்பது உறுதி.

எஸ். எம். எஸ். மூலம் ஜனாதிபதியாக முடியாமற்போனது போல இணையத்தளங்கள் மூலம் ஈழக் கொடியை உயர்த்த முற்படுவதும் முடியாத காரியம். அதற்கு இந்நாட்டின் தேசப்பற்றுள்ளவர்கள் இடமளிக்க மாட்டார்கள். எவராவது அவ்வாறு கனவு காண்பார்களானால் அது ஒருபோதும் பலிக்காது.

இனத் துரோகிகளால் வீரர்களை உருவாக்க முடியாது. வரலாற்றில் தொடர்ச்சியாக தேசப்பற்றாளர்களே நாட்டை நேசிக்கும் மனிதர்களை உருவாக்கியுள்ளனர். நாட்டிற்கான புதிய பாதையை நாம் வகுத்துள்ளோம். அன்று போலவே என்றும் பயமின்றி சவால்களை வெல்வோம் என ஜனாதிபதி அங்கு கூறினார்.

பெளத்த மத விஹாரைகள் கடந்த காலங்களில் சந்தித்த அவலங்கள் சம்பந்தமாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி; கிழக்கில் பெளத்த மதத்தவர்கள் வழிபாடுகளில் ஈடுபட முடியாதிருந்த காலகட்டத்தைக் குறிப்பிட்டதுடன், திருகோணமலையில் புத்தர் சிலை முட்கம்பிகளால் வளைக்கப்பட்டு அதனருகே பெளத்த மதத்தவர்கள் சென்று வழிபடமுடியாமலிருந்த சம்பவத்தையும் குறிப்பிட்டார். வடக்கு, கிழக்கில் பெளத்த தேரர்கள் கஷ்டமான வாழ்க்கையை அனுபவித்தனர். வெளியில் நடமாட முடியாதிருந்தனர். அதற்கான சுதந்திரமும் அவர்களுக்கு இருக்கவில்லை. அரந்தலாவையில் பிக்குமார் கொலை செய்யப்பட்ட போதும், அவர்கள் அப்பிரதேசத்தைக் கைவிட்டு ஓடவில்லை. விஹாரைகளைப் பாதுகாத்தனர்.

இதனால் நாம் பெளத்த விஹாரைகளை புனரமைக்க நடவடிக்கை எடுத்தோம். இப்போதும் சூழ்ச்சிகள் உள்ளன. எனினும் மீண்டும் இந்த நாட்டில் விஹாரைகள் முள்வேலிகளுக்குள் அடைக்கப்படும் யுகம் உருவாக இடமளிக்கப் போவதில்லை. இது எமது பொறுப்பு மட்டுமல்ல எமது உரிமையுமாகும்.

மத்திய வங்கி குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பில் 200 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட ஒருவர் கைது

1996 ஆம் ஆண்டு இலங்கை மத்திய வங்கி கட்டிட தாக்குதல் சம்பவத்துடன் தொடர்பு கொண்டவர் என்ற குற்றச்சாட்டின்  பேரில் தண்டனை விதிக்கப்பட்ட ஒருவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். இவர் நீதிமன்றில் சமூகம் அளிக்காத நிலையிலேயே இவருக்கான தண்டனை முன்னர் விதிக்கப்பட்டிருந்தது.
 
மத்திய வங்கியின் மீது குண்டுத்தாக்குதல் மேற்கொள்வதற்காக வெடிபொருள் நிரப்பிய லொறியை கொழும்பிற்கு கொண்டு வந்தார் என குற்றஞ்சாட்டப்பட்ட நிலையில் அவருக்கு 200 வருட சிறைத்தண்டனை வழங்கப்பட்டிருந்தது.
 
இந்தநிலையில் கைது செய்யப்பட்டவர் தற்போது குற்றத் தடுப்புப் பிரிவினரின் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். செல்லத்தம்பி நவரட்னம் என்ற இவர், செட்டிக்குளம் பிரதேசத்தில் வைத்தே கைது செய்யப்பட்டுள்ளார்.

ஜோன்ஹோம்ஸ் இலங்கை வருகை

John_Holmes_UNஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமான விவகாரங்களுக்கான பிரதிச் செயலாளர் ஜோன் ஹோம்ஸ் நான்கு நாள் விஜயமொன்றை மேற்கொண்டு இன்று (17) இலங்கை வருகிறார்.

அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் இலங்கை வரும் அவர் இன்று யாழ்ப்பாணம், வவுனியா மற்றும் முல்லைத்தீவு பகுதிகளுக்கு செல்ல உள்ளதாக வெளிவிவகார அமைச்சு கூறியது.

இதன் போது அவர் மீள் குடியேற்ற நடவடிக்கைகள் குறித்து ஆராய உள்ளதோடு வவுனியா நலன்புரி முகாம்களில் உள்ள மக்களின் நலன் குறித்து நேரில் சென்று பார்வையிட உள்ளதாக அறிவிக்கப்படுகிறது.

நோர்வே ஈழத் தமிழர் அவைக்கான தேர்தல்

ncet_elected.jpgநோர்வே ஈழத் தமிழர் அவைக்கான தேர்தல்  நடைபெற்றது.  இலங்கைதீவில் இருந்து புலம் பெயர்ந்தாலும் தமிழீழ தனியரசுக்கான தேடலுடன் நோர்வேயில் வாழம் ஈழத் தமிழ் மக்கள் தமது உரிமைப் போராட்ட இலட்சியப் பணயத்தினை ஐனநாயக வழியில் மக்களின் பரந்த பங்களிப்புடன் உறுதியாக முன்னெடுத்தும் செல்லும் நோக்கில் இந்த மக்களவையானது உருவாக்கம் பெற்றுள்ளது.

தமிழீழ தனியரசு கோட்பாட்டை உறுதியாகவும் வெளிப்படையாகவும் வலியுறுத்தி தமிழ மக்களின் விருப்பங்களை பிரதிபலிக்கும் வகையில் நோர்வே முழுவதிலும் 16 வாக்குச்சாவடிகள் வைக்கப்பட்டு நடைபெற்ற தேர்தலில் 2767 பேர் வாக்களித்துள்ளனர்.

தேசிய ரீதியாக போட்டியிட்ட 9 வேட்பாளர்களில் 5 வேட்பாளர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
விபரங்கள் வருமாறு
1. பியோனார் மொக்ஸ்நெஸ்
2. பஞ்சகுலசிங்கம் கந்தையா
3. ஜெயசிறீ பாலசுப்பிரமணியம்
4. ஆதித்தன் குமாரசாமி
5. தர்மசீலன் தர்மலிங்கம்

பிராந்திய ரீதியாக போட்டியிட்டு வெற்றிபெற்ற வேட்பாளர்கள் வருமாறு
வடக்கு பிராந்தியம்
1. றூபன் ஐயாத்துரை
தெற்கு தென்மேற்கு
1. றெஐி டேவிட்ராஐ்
மேற்கு பிராந்திரயம்
1. விஐயசங்கர் அசோகன்
மத்திய பிராந்தியம்
1. இராசகுமார் குமாரசாமி
கிழக்கு பிராந்தியம்
1. சிவகணேஸ் வடிவேலு
2. இராசேந்திரம் பொன்னுத்துரை
3. சிவராஐா வல்லிபுரம்
4. கண்ணன் நாகேந்திரம்
5. மேரி புளோரிடா யூடின் பிரான்சிஸ்
6. ராஐரட்ணம் வேலுப்பிள்ளை

மேற்படி தெரிவு செய்யப்பட்ட பிரதி நிதிகள் அனைவரும் நோர்வே ஈழத் தமிழர் அவையின் இரண்டு அவைகளில் ஒன்றான நோர்வே ஈழத் தமிழ் மக்கள் அவை(House of Eelam Tamils in Norway-HETN) என்ற அவையில் அங்கம் வகிப்பர்.
 

45 மாணவர்கள் திடீர் மயக்கம்

கட்டுவான பிரதேசத்தைச் சேர்ந்த 45 மாணவர்கள் நேற்று திடீரென உடல் உபாதைக்கு உள்ளாகி மயக்கமுற்ற நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தச் சம்பவம் நேற்றுக்காலை 8.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஐ. எம். கருணாரட்ன தெரிவித்தார்.

தங்கல்ல பிரதேசத்தைச் சேர்ந்த கட்டுவான அம்பகாஹேன மகாவித்தியாலயத்தைச் சேர்ந்த மாணவர்களே உடல் உபாதைக்கு உள்ளாகி மயங்கி விழுந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

வட்டுக்கோட்டைத் தீர்மானக் குழுவிற்கு பிரிஎப் எச்சரிக்கை

Paramakumarடிசம்பர் 12ல் நடைபெறவிருக்கும் வட்டுக்கோட்டைத் தீர்மானத்திற்கான கருத்துக் கணிப்பு முடிவடைந்ததும் அக்கருத்துக் கணிப்பை மேற்கொள்ளும் தமிழ் தேசிய சபை கலைக்கப்பட வேண்டும் என பிரிஎப் ஒழுங்கு செய்த கூட்டத்தில் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. லண்டனில் நவம்பர் 1ல் இடம்பெற்ற இச்சந்திப்பிலேயே இவ்வெச்சரிக்கை விடுக்கப்பட்டது. பிரித்தானியா தமிழர்களுக்கு தாங்களே ஏகபிரதிநிதிகள் என்ற தோரணையில் தன்னார்வ அமைப்புகள் பலவற்றுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. வட்டுக்கோட்டைத் தீர்மானம், நாடுகடந்த தமிழீழம், தமிழ் கூட்டமைப்பு எனப் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் தெரிவு செய்யப்பட்டு அழைக்கப்பட்டனர்.

இவ்வெச்சரிக்கை தொடர்பாக வட்டுக்கோட்டைத் தீர்மானம் தொடர்பான கருத்துக் கணிப்பை முன்னெடுக்கும் தமிழ் தேசிய சபையின் முன்னணி உறுப்பினரான பரமகுமரனைத் தொடர்புகொண்ட போது எமது அமைப்பை ‘கலைக்கிறதோ நிப்பாட்டுறதோ அவர்களின் கையில் இல்லைத் தானே’ எனத் தெரிவித்தார். நவம்பர் 1ல் இடம்பெற்ற கூட்டத்தில் ‘எல்லா விதமான எல்லாமும் கதைக்கப்பட்டது தான். ஜனநாயகம் பேச்சுச் சுதந்திரம் எதையும் நம்பாதவர்கள்’ என்று தெரிவித்த பரமகுமரன் ‘காலகட்டத்தில் அவர்களை மாற்றி எடுக்கிற பொறுப்பு எங்களுக்கும் இருக்கு. மாறுகிற தேவை அவர்களுக்கும் இருக்கிறது’ எனத் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் தங்களது கட்டுப்பாடுகளை மீறி அமைப்புகள் செயற்படுவதாகவும் இவ்வமைப்புகளைச் சார்ந்தவர்கள் சிலர் தங்கள் பற்றிய விமர்சனங்களை ஊடகங்களில் வெளியிட்டு வருவதாகவும் அவை நிறுத்தப்பட வேண்டும் என அழைக்கப்பட்டவர்கள் மறைமுகமாக எச்சரிக்கப்பட்டனர். அண்மைக் காலமாக பிரிஎப் ற்கு சார்பானவர்கள் அல்லது சார்பான அமைப்புகளைச் (வட்டுக்கோட்டைத் தீர்மானம், நாடுகடந்த தமிழீழம், தமிழ் கூட்டமைப்பு) சேர்ந்தவர்கள் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் இந்நிலை தொடர்பான விமர்சனங்களை வெளிப்படையாக வெளியிட ஆரம்பித்துள்ளனர். அவர்களை எச்சரிக்கும் வகையிலேயே நவம்பர் 1ல் நடைபெற்ற பிரிஎப் கூட்டத்தில் கருத்துக்கள் வெளியிடப்பட்டு உள்ளது.

பிரிஎப் நிர்வாகம் நாதன் குமார் தலைமையில் இருந்த போதும் ‘தனம்’, ‘ரூட் ரவி’ ஆகியோரே பிரிஎப் யை கட்டுப்படுத்துகின்றனர். நவம்பர் 1ல் இடம்பெற்ற பிரிஎப் கூட்டத்தில் எச்சரிக்கைகள் ‘தனம்’ என்பவரிடம் இருதே வந்துள்ளது. பிரித்தானியாவில் வெவ்வேறு வகைகளில் சேகரிக்கபட்ட மொத்த நிதிகளுக்கும் இவரே பொறுப்பாக இருந்துள்ளார். இந்த நிதி பற்றிய கட்டுப்பாடு தனம், ரூட் ரவி, ரெஜி ஆகியோரின் பொறுப்பிலேயே இருந்துள்ளது.

ரூட் ரவி தாயகத்தில் தமிழீழ விடுதலைப் பொருண்மிய மேம்பாட்டுக் கழகத்திற்குப் பொறுப்பாக செயற்பட்டவர். பின்னர் அமைப்பில் இருந்து வெளியேற்றப்பட்டவர். எண்பதுக்களின் நடுப்பகுதியில் இவர் யாழில் இருந்த போது கிருஸ்ணானந்தன்; என்பவரால் இயக்கப்பட்டு வந்த ஊற்று ஆய்வு நிறுவனத்தை பலாத்பாரமாக அவரிடம் இருந்து பறித்துக் கொண்டனர். கிருஸ்ணானந்தன் அவரது வீட்டிலேயே சிறை வைக்கப்பட்டு அவரது வீடும் அங்கு இயங்கி வந்த ஆய்வு நிறுவனமும் புலிகளின் அலுவலகம் ஆக்கப்பட்டது. 1987ல் இந்திய இராணுவத்தின் ஆக்கிரமிப்பின் போது அவ்வீடும் ஊற்று நிறுவனமும் தமிழீழ விடுதலைப் புலிகளின் அலுவலகமாகக் கருதப்பட்டு இந்திய இராணுவத்தின் தாக்குதலுக்கு இலக்காகி அழிக்கப்பட்டது. அதன் பின்னர் இலங்கையில் தமிழ் பகுதிகளில் அவ்வாறான ஒரு ஆய்வு நிறுவனமும் ஊற்று போன்ற அறிவியல் சஞ்சிகையும் இதுவரை தோன்றவில்லை.

இது பல்லாயிரம் மைல்களுக்கு அப்பாலும் தொடர்ந்தது. கனடாவில் தேடகம் போன்ற அமைப்புகள் தமிழீழ விடுதலைப் புலிகள் சார்ந்தவர்களால் அச்சுறுத்தலுக்கு உள்ளானது. மஞ்சரி சஞ்சிகை எரிக்கப்பட்டது. ரிரிஎன் தொலைக்காட்சியைச் சேர்ந்தவர்கள் லண்டன் குரல் பத்திரிகைகளின் பிரதிகளை தூக்கி எறிந்த சம்பவங்களும் நடந்துள்ளது.

இச்சிந்தனை முறை இவ்வளவு அழிவுகளின் பின்னரும் மாற்றமடையவில்லை என இந்நிகழ்வில் கலந்துகொண்ட நண்பர் ஒருவர் குறைப்பட்டுக் கொண்டார். இந்த நிகழ்வு தனக்கிருந்த நம்பிக்கையை தகர்த்து விட்டதாகவும் தெரிவித்தார்.

அகதி அந்தஸ்து நிராகரிக்கப்பட்டோரை அவுஸ்திரேலியா பொறுப்பேற்கவேண்டும் இந்தோனேசியா அறிவிப்பு

Oceanic_Viking_Refugeesஅவுஸ்தி ரேலியாவின் சுங்கப் பிரிவுக்கப்பலான ஓசனிக் வைக்கிங்கிலிருந்து இந்தோனேசிய கரைக்கு வந்துள்ள 22 இலங்கையரும் தங்களது நாட்டில் 3 மாதங்கள் தங்கியிருக்க அனுமதி வழங்கப்படும் என்று அந்நாட்டு அதிகாரி ஒருவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார். அவர்களின் அகதி அந்தஸ்தை தீர்மானிக்கும் நடவடிக்கைகளுக்காக 4 வாரங்களிலிருந்து ஆகக்கூடியது 2 வாரங்களுக்கு அவர்கள் இந்தோனேசியாவில் தங்கியிருக்க அனுமதிக்கப்படுவர்.அதன்பின் அவர்கள் வெளியேறுவது அவசியம் என்று இந்தோனேசிய வெளிவிவகார அமைச்சுப் பேச்சாளர் தீகு பைசாசியா ஏ.எவ்.பி. செய்திச்சேவைக்கு கூறினார்.

இந்தோனேசிய கடற்பரப்பில் கடந்த மாதம் இடைமறிக்கப்பட்ட அவுஸ்திரேலிய கப்பலான ஓசனிக் வைக்கிங்கிலுள்ள புகலிடம் கோரும் 78 இலங்கையரும் இந்தோனேசியாவின் தன்ஜுங் பினாங்கிலுள்ள தடுப்பு நிலையத்திற்குச் செல்வதற்கு இணங்கியதாக வெள்ளிக்கிழமை செய்திகள் வெளியாகியிருந்தன.

நான்கு தொடக்கம் 6 வாரங்களுக்கிடையில் அவர்களை அவுஸ்திரேலியாவில் மீளக்குடியமர்த்துவதென்ற உறுதிமொழியை அடுத்தே அவர்கள் இந்தோனேசியாவுக்குச் செல்ல இணங்கியிருந்தனர். இந்த இலங்கையரில் ஏற்கனவே யூ.என்.எச்.சி.ஆரினால் அகதிகளென ஏற்றுக்கொள்ளப்பட்டவர்கள் நான்கு வாரங்களில் மற்றொரு நாடொன்றில் மீளக் குடியமர்த்தப்படுவர் என்று இந்தோனேசியாவின் பிரதி வெளிவிவகார அமைச்சர் திரியோனோ வியோபோ சனிக்கிழமை கூறியுள்ளார். அகதி அந்தஸ்தைப் பெற்றுக்கொள்ளத் தவறுவோரை இந்தோனேசிய கடற்பரப்பிலிருந்து அவுஸ்திரேலியா திரும்ப பொறுப்பேற்க வேண்டும் அல்லது அவர்களின் சொந்த நாட்டுக்கு நாடு கடத்த வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.தற்போது ஓசனிக் வைக்கிங் கப்பலில் 56 பேர் தங்கியுள்ளனர். அவர்களை இந்தோனேசியாவுக்குள் செல்லுமாறு அவுஸ்திரேலியா தூண்டி வருகிறது.