2010

2010

நல்லிணக்க ஆணைக்குழு 29ஆம் திகதி பூஸா முகாமிற்கு செல்கிறது.

Magazine_Prisonநல்லிணக்க ஆணைக்குழு எதிர்வரும் 29ஆம் திகதி காலியிலுள்ள பூஸா தடுப்பு முகாமிற்கு செல்லவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் நிலைமைகளை பார்வையிடுவதோடு அவர்களை விடுதலை செய்வதற்கான வழிவகைகள், சாத்தியங்கள் குறித்தும் ஆராயுவுள்ளதாக ஆணைக்குழுவின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

நல்லிணக்க ஆணைக்குழுவின் அமர்வுகள் வெளி மாவட்டங்களில் நடைபெறும்போது அனைத்து தடுப்பு முகாம்களுக்கும் விஜயம் செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் மன்னார் மற்றும் புத்தளம் மாவட்டங்களுக்கு நல்லிணக்க ஆணைக்குழு விஜயம் செய்யவுள்ளது

புத்தளத்தில் வாழும் யாழ்ப்பாணத்திலிருந்து 1990ஆம் ஆண்டு வெளியெற்றப்பட்ட முஸ்லிம் மக்களின் சாட்சியங்களை நல்லிணக்க ஆணைக்குழு பதிவு செய்யவுள்ளதாகவும் தெரிவிக்கபபட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் பிரச்சனைகளை மையமாக வைத்து தயாராகும் ‘பனை மரக்காடு’ திரைப்படம்.

Seveal_K_JHCபாதிக்கப்பட்ட வடபகுதி மக்களின் வாழ்வை மையமாக வைத்து ‘பனை மரக்காடு’ என்ற திரைப்படம் இலங்கையில் படமாக்கப்பட உள்ளது. இதன் ஆரம்ப பூஜை யாழ்ப்பாணத்தில் நடைபெற்றுள்ளது. தமிழ் மக்களின் விருப்பங்களைப் பிரதிபலிக்கும் வகையிலும், தமிழரின் கலை, காலாசார பாரம்பரியங்கள் பாதிக்கப்படாத வகையிலும் இத்திரைப்படம் தயாரிக்கப்படவுள்ளதாக இப்படத்தின் தயாரிப்பாளர் கே. செவ்வேள் தெரிவித்துள்ளார்.

காதலித்து திருமணம் செய்து, ஐந்து வயதுக் குழந்தையுடன் வாழும் பெண்ணொருத்திக்கும் இளைஞன் ஒருவனுக்கும் ஏற்படும் காதல் இக்கதையின் கரு என தெரிவிக்கப்பட்டுள்ளது. ‘பனை மரக்காடு’ திரைப்படத்தை கேசவராஜா இயக்குகின்றார். இசையமைப்பை தென்னிந்திய இசையமைப்பாளர் சிற்பி மேற்கொள்கின்றார். இந்திய தொழில்நுட்பக் கலைஞர்களுடன் இலங்கையிலுள்ள தமிழ் தொழில்நுட்பக் கலைஞர்களும் இத்திரைப்படத்தில் பங்களிப்பு செய்யவுள்ளதாக தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார். படத்தின் பிரதான நடிகர்களை உள்நாட்டில் தெரிவு செய்வதற்காக காத்திருப்பதாகவும் அவ்வாறு யாரும் முன்வராவிடில் அவர்களை இந்தியாவிலிருந்து தெரிவு செய்ய வேண்டி வரும் எனவும் படத்தின் தயாரிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.

லண்டனில நீண்ட காலமாக வாழும் சட்ட ஆலோசகரான செவ்வேள் ஏற்கனவே ஓரிரு படங்களை தமிழகத்தில் தயாரித்தவர். யாழ் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் லண்டன் பிரிவுத் தலைவராக இருந்த இவர் நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் சுயேட்சைக் குழுவில் போட்டியிட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

வடக்கில் மீண்டும் அடைமழை, வெள்ளம்.

Jaffna_Floodயாழ்ப் பாணம் வன்னி உட்பட வடக்கில் கடந்த மூன்று நாட்களாக தணிந்திருந்த மழை நேற்று திங்கள் இரவிலிருந்து மீண்டும் கடுமையாக பெய்யத் தொடங்கியுள்ளது. இதனால் கிளிநொச்சி உட்பட பல பிரதேசங்களில் மீண்டும் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வீதிகளில் பொது மக்கள் பயணம் செய்ய முடியாதபடி வெள்ளம் தேங்கி நிற்கும் காட்சிகளை காணமுடிகிறது.

கிளிநொச்சியின் பிரதான ஏ-9 பாதையிலும் பல குறுக்கு வீதிகளில் வடிகாலமைப்புகளில்லாத காரணத்தினால் வெள்ளம் வழிந்தோட வழியின்றி தேங்கிநிற்கும் நிலை காணப்படுகின்றது. தாழ்வான நிலப்பகுதிகளில் வாழும் மக்கள் மீண்டும் வெள்ள அனர்த்தத்தை எதிர்கொண்டு வருகின்றனர்.

சென்னை முதல் டெல்கி வரை ஈழத் தமிழர்களின் நடைபயணம்! : ஈ.என்.டி.எல்.எப்.

ENDLF_Logoஇன்று 20-12-2010 அன்று சென்னையில் ஈழ தேசிய ஜனநாயக விடுதலை முன்னணினரால் ஏற்பாடு செய்யப்பட்ட பத்திரிகையாளரின் சந்திப்பில் கொடுக்கப்பட்ட அறிக்கை!

தமிழர்களைப் புறக்கணித்து, பிரித்தானியரை ஏமாற்றி இலங்கை அரசாங்கத்தைக் கைப்பற்றிய சிங்கள ஆட்சியாளர் 1948ம் ஆண்டு முதல் தமிழ் இனத்தை அழித்து வருகின்றனர்.

ஈழத் தமிழர்களின் விவசாய நிலங்களைக் கைப்பற்றி சிங்களக் குடியேற்றங்களை வடக்குக் கிழக்கு மாகாணங்களில் புகுத்தி வந்த சிங்கள அரசு இப்போது தமிழர்களின் வாழ்விடங்களையும் ஆக்கிரமித்துச் சிங்களக் குடியேற்றங்களை வலுக்கட்டாயமாகத் திணித்து வருகிறது.

இலங்கையின் மொத்தக் கடல் பரப்பில் 85 சதவீதமான கடல்பகுதிகள் தமிழர்களுக்குச் சொந்தமானவை. இன்று அனைத்துக் கடல் பகுதிகளையும் கைப்பற்றி, தென்பகுதியிலிருந்து யாழ்ப்பாணத்தையும் தாண்டி சிங்கள மீனவர்கள் எங்களது கடல் செல்வங்களை அள்ளிச் செல்கின்றனர். அரசாங்கம் அவர்களுக்கு (சிங்களவர்களுக்கு) நவீன படகுகளை வழங்கி கடல் வளத்தை அள்ளி தென் பகுதிக்குக் கொண்டு செல்கின்றனர். தமிழ் மீனவர்கள் தங்களது சொந்தப் பகுதியில் குறிப்பிட்ட தூரத்தைக் கடக்கக் கூடாது என்று வாய்வழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஈழத் தமிழர்களின் பூர்விகப் பிரதேசங்களை ஆக்கிரமிப்பது சிங்கள அரசின் கடமையாக கடந்த 62 ஆண்டுகளாக செய்து வருகிறது. 1987ம் ஆண்டு முதல் 1990ம் ஆண்டு வரை இந்திய அமைதிப்படை இலங்கையிலிருந்த காலத்தில் மட்டும்தான் சிங்களக் குடியேற்றங்களை நடத்த முடியாமல் நிறுத்தி வைத்திருந்தது சிங்கள அரசாங்கம். ஏனைய அத்தனை ஆண்டுகளும் ஏன் இன்றும் கூட சிங்களக் குடியேற்றங்களை அரசின் சொந்தச் செலவில் தமிழர் பகுதிகளில் திட்டமிட்டுப் புகுத்தி வருகிறது.

இது தமிழ் இனத்தின் அடையாளங்களை முற்றாக அழிக்கும் நடவடிக்கைதான். தமிழ் இனத்துக்கும் சிங்கள இனத்துக்கும் பிரச்சினையே இந்தச் சிங்களக் குடியேற்றங்கள்தான். இதனைத் தடுத்து நிறுத்தும் அளவுக்கு தமிழர்கள் பலம் குறைக்கப்பட்டுள்ளது.

1983ஆம் ஆண்டு இனக்கலவரத்தை ஏற்படுத்தி தமிழ் இனத்தை அடித்து விரட்டிய பின்பு ஏற்படுத்தப்பட்டதுதான் வெலிஓயா (மணல் ஆறு) என்று பெயர் மாற்றப்பட்ட சிங்களக் குடியேற்றமாகும். இக்குடியேற்றம் திருகோணமலையையும் முல்லைத்தீவையும் பிரிக்கும் சிங்களக் குடியேற்றமாகும். இப் பகுதி தமிழ் இனத்தின் பூர்விகப் பகுதியாகும்.

இது போன்ற நூற்றுக்கும் மேற்பட்ட சிங்களக் குடியேற்றங்களை தமிழர் பகுதிகளில் திணித்து தமிழர் நிலங்களைக் கைப்பற்றியுள்ளனர். அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை, வவுனியா மாவட்டங்களில் பல லட்சக்கணக்கானவர்களைக் குடியமர்த்திய சிங்கள அரசு இப்போது முல்லைத் தீவு, மன்னார், யாழ்ப்பாண மாவட்டங்களில் முழுவீச்சில் சிங்களவர்களைக் குடியமர்த்தி வருகிறது.

தமிழினம் கல்வி, மொழி, தொழில், வாழ்வு, உயிர் என்று அனைத்தையும் இழந்து இன்று அவர்களது பூர்விகப் பிரதேசங்களையும் சிங்களவரால் இழந்து வருகின்றனர். ஈழத்தில் வாழும் தமிழர்களால் இந்தக் கொடுமையைத் தடுத்து நிறுத்தும் பலம் சிறிதளவும் இல்லாமல் செய்யப்பட்டுள்ளது. இதனைத் தடுத்து நிறுத்தும் உரிமையும், தகுதியும் இந்தியாவுக்கு மட்டுமே உண்டு என்று நாங்கள் நம்புகிறோம்.

ஈழப் போராளிகள் பல குழுக்களாக ஒற்றுமையில்லாதிருந்தபடியால், இந்தியா ஈழத் தமிழர் சார்பாக இலங்கையுடன் 1987ஆம் ஆண்டு ஒப்பந்தம் செய்து கொண்டது. அந்த ஒப்பந்தத்தின் வலிமை தெரியாமல் பலரும் தங்களது அரசியல் லாபங்களுக்காக எதிர்த்தனர். சிங்கள அரசும் சிங்கள இனத்தவரும் இந்தியாவை எதிர்த்தனர். தமிழ் இனத்தின் சார்பாகவும், தமிழ் இனத்தைப் பாதுகாக்கவும்தான் இந்தியா இலங்கைக்கு வந்ததாகக் கருதினர் சிங்களவர்.
இதனால் இந்திய அமைதிப்படையை வெளியேற்ற வேண்டும் என்று தீர்மானித்தனர் சிங்கள அரசும், சிங்கள இனத்தவரும். சில உண்மைகளைச் சொன்னால் பலருக்கும் கோபம் வரும். விடுதலைப் புலிகள் இந்தியாவுக்கு எதிராகத் துப்பாக்கியைத் திருப்பாது விட்டிருந்தால் நாங்கள் இப்போது ஒரு லட்சம் தமிழர்களை இழந்திருக்க வேண்டியதில்லை, தமிழர் பிரதேசங்களும் காப்பாற்றப்பட்டிருக்கும். குறைந்தபட்சம் எங்கள் அனைத்து உரிமைகளாவது மீட்;டிருப்போம்.

விடுதலைப் புலிகள் செய்துவிட்ட தவறு எங்கள் இனத்தை மொத்தமாகவே பாதித்துவிட்டது. இப்போது எஞ்சியிருக்கும் மக்களையும், தமிழரின் பூர்விகப் பகுதிகளையும் நாம் காப்பாற்ற வேண்டும் என்றால் இந்தியா ஈழத் தமிழர் விடயத்தில் நேரடியாகத் தலையிட வேண்டும். 2009 ஆம் ஆண்டுக்குப் பிறகு சிங்கள அரசியல்வாதிகளும், பௌத்த பிக்குகளும் தமிழ் இனத்துக்கு எதிராக சிங்கள மக்களை தூண்டிவிடும் வகையில் பேசியும் செயற்பட்டும் வருகின்றனர்.

தமிழ் இனத்தை விரட்டுவதற்கும் அழிப்பதற்கும் தங்களுக்கு உரிமை உண்டு என்று பிரசாரம் செய்கின்றனர். ஈழத் தமிழர்கள் இலங்கையில் வாழ்ந்ததற்கான ஆதாரங்களை அழிக்கும் செயல்களை புத்தப் பிக்குகளும் இராணுவமும் இணைந்து செயற்படுத்தி வருகின்றனர். 1981ஆம் ஆண்டு யாழ்ப்பாண நூல் நிலையம் இவர்களால் எரிக்கப்பட்டது. இதுவும் தமிழினத்தின் வரலாற்றை அழிக்கும் அவர்களது பாரிய திட்டமிட்ட சதிச் செயலாகும். ஒரு இனத்தின் வரலாற்றுப் பதிவுகள் வைக்கப்பட்டிருந்த யாழ்ப்பாணம் நூல் நிலையத்தை அரசாங்கமே தீயிட்டு அழித்த நடவடிக்கை மன்னிக்க முடியாத குற்றச் செயலாகும். அந்த இனத்தவர் இச்செயலுக்காக வருத்தப்பட்டதோ, வெட்கப்பட்டதோ கிடையாது.

இப்போது தமிழர்களது எஞ்சியிருக்கும் விவசாய நிலங்களைக் கைப்பற்ற முன்னர் S.W.R.D. பண்டாரநாயக்க “நெற்காணி மசோதா” என்று ஒரு சட்டத்தினை 1958ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் கொண்டு வந்து தமிழர் நிலங்களைப் பறித்தது போன்று ராஜபக்சேயும் சட்டம் கொண்டு வந்து மீதி நிலங்களையும் பறிப்பதற்கு நாடாளுமன்றத்தில் முன்மொழியவுள்ளார்.

தமிழர்களது உரிமைகளையும், பூர்விக நிலங்களையும் பாதுகாக்க வேண்டுமானால் எங்களுக்கு இந்தியாவின் துணை அவசியமாகிறது.
1987ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட “இந்திய-இலங்கை” ஒப்பந்தத்தினை ஈழ தேசிய ஜனநாயக விடுதலை முன்னணி (ஈ.என்.டி.எல்.எப்.)யினராகிய நாங்கள் ஏற்றுக்கொண்டோம். ஏன் ஏற்றுக்கொண்டோமென்றால்,

இந்த “ஒப்பந்தம் கையெழுத்தானவுடன், வடக்கு மற்றும் கிழக்கில் இருக்கும் இலங்கை இராணுவம் தங்களுடைய முகாம்களுக்குள் திரும்பிவிட வேண்டும்! ஒரு இராணுவம் கூட வெளியில் கடமையாற்றுவதற்கு முகாம்களைவிட்டு வெளியில் வரக்கூடாது! இலங்கை இராணுவம் எந்தத் தமிழரையும் கைது செய்யக்கூடாது இலங்கை இராணுவத்துக்கு அதற்கு உரிமை இல்லை! என்ன குற்றம் செய்திருந்தாலும் சரி, சிறையில் இருக்கும் அத்தனை தமிழரும் விடுதலை செய்யப்பட வேண்டும்”

வடக்குக் கிழக்கு இணைந்த ஒரு மாநிலமும் அதற்கான நிர்வாகமும் அமைக்கப்படும், அந்த மாநிலத்துக்கான அதிகாரங்கள், குறிப்பாக நிலம், தொழில், கல்வி, இது சம்பந்தமாக தீர்மானம் எடுக்கிற உரிமை, அந்த மாகாண அரசையும் தமிழ் மக்களையும் பாதுகாக்கவென பொலிஸ் மற்றும் ஆயுதம் தாங்கிய தமிழ்த் தேசிய இராணுவம் போன்ற உரிமைகள் அந்த ஒப்பந்தத்தில் இருந்தபடியால் நாங்கள் அந்த ஒப்பந்தத்தை ஒரு ஆரம்பகட்ட தீர்வாக ஏற்றுக்கொண்டோம்.

மேற்கூறிய இந்திய-இலங்கை ஒப்பந்தத்தில் உள்ள அத்தனை சரத்துக்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டு, இந்தியாவால் நிறைவேற்றப்பட்டது. இதனைத்தான் விடுதலைப்புலிகளும் சிறிலங்கா அரசாங்கமும் இணைந்து முறியடித்தார்கள். ஆயினும், “இந்திய-இலங்கை” ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கு நாங்கள் எங்கள் முழு ஆதரவையும் வழங்கினோம். இதனால் எங்கள் இயக்கத் தோழர்கள் ஆயிரக்கணக்கானவர்களை இழந்துள்ளோம்.

சிறிலங்கா அரசும், புலிகள் இயக்கமும் இணைந்து தமிழர்களுக்கு ஓரளவுக்கு உரிமையுள்ள மாகாண அரசைக் கலைக்க வேண்டும், அமைதிப்படை நாட்டைவிட்டு வெளியேற வேண்டும் என்று ஒன்றாகக் கோரிக்கை வைத்தனர். இந்தியாவுக்கு அவர்கள் பெரும் அவமானத்தையும் ஏற்படுத்தினர். இதனைத் தொடர்ந்து மாநில அரசில் அங்கம் வகித்த நாமும் நாட்டை விட்டு வெளியேறினோம்.

அப்படி வெளியேறிய நாம் இன்றுவரை இந்தியாவில் வாழ்ந்து வருகிறோம். தமிழ் மக்களது ஏகப் பிரதிநிதிகள் நாங்கள் மட்டும்தான் என்று புலிகள் உரிமை கோரினர். அது தவறு என்பதைக் காலம் கடந்தும் உணர்வதாகத் தெரியவில்லை.

இந்தியா ஏற்படுத்திய ஒப்பந்தத்தினை ஏற்றுக்கொண்டவர்கள் என்ற அடிப்படையிலும், மிகவும் பாதிக்கப்பட்டுள்ள எம் மக்களிடையே மீண்டும் ஒரு யுத்தத்தைப் புகுத்தி இழப்புகளை ஏற்படுத்தாமல், எமது மக்களையும், எமது பிரதேசங்களையும் எமது உரிமைகளையும் கைப்பற்ற ஒரே வழி “இந்திய-இலங்கை” ஒப்பந்தம்தான் என்பதை நாம் உணர்ந்து, இந்தக் காலகட்டத்தில் மீண்டும் இந்தியாவைக் கோருகிறோம்.

“இந்திய-இலங்கை” ஒப்பந்தத்தினை முழுமையாக நடை முறைப்படுத்த வேண்டும். ராஜபக்சே “இந்திய-இலங்கை” ஒப்பந்தத்தில் உள்ள தனக்கு வேண்டிய பகுதிகளை மட்டும் நடைமுறைப்படுத்தி தமிழ் மக்களுக்கு பாதுகாப்பான பிரிவுகளை நிராகரித்து தனது ஆதிக்கத்தை நிலைநாட்டுகிறார்.

எனவே நாங்கள் இரண்டு கோரிக்கையினை மட்டும் முன்வைத்து சென்னை சிறிபெரும்புதூரிலிருக்கும் ராஜீவ்காந்தி நினைவு மண்டபத்திலிருந்து புது டெல்கியில் உள்ள ராஜீவ்காந்தி நினைவிடம் வரையில் 2500 கிலோ மீட்டர் தூரம் நடைபயணம் மேற்கொள்ளவிருக்கிறோம். ஈழத் தமிழர்களின் பிரச்சினைகள் தீர்க்கப்பட ஈழத் தமிழர்களே நடத்தும் இந்தக் கோரிக்கை நடை பயணத்துக்கு அனைவரும் ஆதரவு வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.
ஈழத் தமிழரது கீழ்க்காணும் கோரிக்கையினை மாண்புமிகு ஜனாதிபதி ஸ்ரீமதி. பிரதீபா பாட்டில் அவர்களிடமும், மாண்புமிகுப் பாரதப் பிரதமர் டாக்டர். மன்மோகன் சிங் அவர்களிடமும், எதிர்கட்சித் தலைவர் திருமதி. சுஸ்மா சிவராஜ் அவர்களிடமும் காங்கிரஸ் தலைவர் திருமதி. சோனியாகாந்தி அவர்களிடமும், கம்யூனிஸ்ட் கட்சிகளின் தலைவர்கள் உயர்திரு. பிரகாஸ் கரத் அவர்களிடமும், யு.டீ. பரதன் அவர்களிடமும் மற்றும் அனைத்து எதிர்கட்சிகளின் தலைவர்களிடமும் கையளிக்கவுள்ளோம்.

(01) “இந்திய-இலங்கை” ஒப்பந்தத்தினை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும்.

(02) 1948ஆம் ஆண்டுக்குப் பின்னர் (இலங்கைக்கு சுதந்திரம் கிடைத்த பின்னர்) தமிழரது பூர்விகப் பகுதிகளில் சிங்கள அரசினால் குடியேற்றம் செய்யப்பட்ட சிங்களக் குடியேற்றங்களை முற்றாக வெளியேற்ற வேண்டும்.

என்ற இந்த இரு கோரிக்கைகளையும் முன்வைத்து நாங்கள் இந்த நடைபயணத்தை மேற்கொள்ளவிருக்கிறோம்.
இந்த நடை பயணத்தை காங்கிரஸ் முன்னைநாள் பாராளுமன்ற உறுப்பினரும், காங்கிரசின் தமிழ் நாட்டு மூத்த தலைவருமான திரு. இரா. அன்பரசு அவர்கள் ஆரம்பித்து வைக்கிறார்கள்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் தோழர். தா. பாண்டியன் அவர்கள் இந்த நடைபயணத்தை வழியனுப்பி வைப்பார்கள்.

மாக்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் திரு. G.இராமகிருஸ்ணன் அவர்களையும் கலந்துகொள்ளும்படி நாங்கள் கோரியுள்ளோம். மேலும் தமிழகத்தின் ஏனைய அனைத்துக் கட்சிகளையும் சந்தித்து ஆதரவு கோரவுள்ளோம், அவர்களுக்கு இது தொடர்பாக கடிதங்கள் அனுப்பியுள்ளோம், ஆதரவு வழங்குவார்கள் என்று நம்புகிறோம்.

பத்திரிகைத் துறையும் எங்களது இந்த நடைபயணத்துக்கு மட்டுமல்லாமல், ஈழத் தமிழர்களுக்கு ஒரு தீர்வு கிடைக்கும் வரை தொடர்ந்தும் எம்மினத்துக்கு ஆதரவு வழங்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

நாள்: 16-01-2011 ஞாயிறு
நேரம்: காலை 10:00 மணி.
இடம் : இராஜீவ்காந்தி நினைவு மண்டபம், சிறிபெரும்புதூர்.

இவ்வண்ணம்,
ஞா.ஞானசேகரன்
தலைவர்,
ஈழ தேசிய ஜனநாயக விடுதலை முன்னணி
(ஈ.என்.டி.எல்.எப்.)

இரத்ததானத்தில் யாழ். புனித பத்திரிசியார் கல்லூரி தேசிய மட்டத்தில் முதலிடம்.

Blood_Donationஇவ் வருடம் பாடசாலைகளில் இடம்பெற்ற இரத்ததான நிகழ்வுகளில் தேசிய மட்டத்தில் யாழ்.புனித பத்திரிசியார் கல்லூரி முதன்மை பெற்று சாதனை படைத்துள்ளது. குறித்த கல்லூரியில் இவ்வருடம் இடம்பெற்ற இரத்ததான முகாமில் 230 பேர் இரத்ததானம் செய்துள்ளனர் என யாழ். போதனா வைத்தியசாலை இரத்த வங்கியின் வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார்.

கடந்த வருடம் பருத்தித்துறை ஹாட்லி கல்லூரியில் 210 பேர் இரத்ததானம் செய்து அக் கல்லூரி தேசியமட்டத்தில் முன்னணியில் திகழ்ந்தமை குறிப்பிடத்தக்கது.

யாழ். பல்கலை மருத்துவர்கள் இரு வருடங்கள் வடக்கு கிழக்கில் பணியாற்ற வேண்டும்

Faculty_of_Medicine_UoJயாழ்ப் பாண பல்கலைக் கழகத்திலிருந்து மருத்துவர்களாக வெளியேறுவோர் இரு வருடங்கள் வடக்கு கிழக்கு பகுதிகளில் பணியாற்ற வேண்டும் என்கிற நடைமுறை கொண்டு வரப்படவுள்ளது. அவ்வாறு இரு வருடங்கள் வடக்கு கிழக்கு வைத்தியசாலைகளில் பணியாற்றியதன் பின்னரே அவர்கள் வேறு பிரதேசங்களுக்கு இடமாற்றம் பெறமுடியும் எனவும் தெரிவிக்கபட்டுள்ளது. யாழ்ப்பாணம் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ. கேதீஸ்வரன் இத்தகவலைத் தெரிவித்துள்ளார்.

யாழ். மாவட்டத்தில் வைத்தியர்கள் பற்றாக்குறை நிலவுதாகவும், இந்த நடைமுறை கொண்டு வரப்பட்டால் இப்பற்றாக்குறையை ஓரளவிற்கு குறைக்க முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

யாழ். பல்கலைக் கழகத்திலிருந்து வெளியேறும் வைத்தியர்கள் ஒரு வருடம் மட்டும் தங்கள் பகுதிகளில் சேவையாற்றிவிட்டு தாங்கள் விரும்பிய இடங்களுக்கு மாற்றம் பெற்று செல்லலாம் என்கிற நடைமுறையே இவ்வளவு காலமும் இருந்து வந்தது. ஆனால் எதிர்வரும் வருடம் ஜனவரி மாதம் தொடக்கம் இரு வருடங்கள் பணியாற்ற வேண்டும் என்கிற நடைமுறை அமுலுக்கு வரவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

யாழ். தீவகத்தில் எட்டு வைத்தியசாலைகள் உள்ளன. ஆனால், அவற்றில் ஆறு வைத்தியர்களே தற்போது கடமையாற்றி வருகின்றனர். சில வைத்தியர்களுக்கு இடமாற்றமும் கிடைத்துள்ளது இந்நிலையில் குறித்த பிரதேச வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற வரும் நோயாளிகளுக்கு உரிய சிகிச்சைகளை வழங்குவதில் சிக்கல் நிலை தோன்றியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

குடாநாட்டில் மீள்குடியேறியுள்ள முஸ்லிம் குடும்பங்களுக்கு ஐயாயிரம் ரூபா கொடுப்பனவு.

Muslim_IDPs_Get_Supportயாழ். குடாநாட்டில் மீள்குடியமர்ந்துள்ள முஸ்லிம் குடும்பங்களுக்கு ஐயாயிரம் ரூபா கொடுப்பனவு வழங்க அனுமதி கிடைத்துள்ளதாக யாழ்.அரசாங்க அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் தெரிவித்துள்ளார்.

யாழ்.குடாநாட்டில் மீள்குடியமர்ந்துள்ள 622 முஸ்லிம் குடும்பங்களுக்கு இக்கொடுப்பனவு வழங்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இவர்களுக்கான உடனடிக் கொடுப்பனவாக இத்தொகை வழங்கப்படவுள்ளதாகவும். இதற்கான அனுமதி மீள்குடியேற்ற அமைச்சிடமிருந்து கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இவர்களுக்கான கொடுப்பனவுகள் வழங்கப்படுவதற்கு அவர்கள் முன்னர் வசித்து வந்த வெளி மாவட்டங்களிலுள்ள பதிவுகள் நீக்கப்பட்டிருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சங்கானை குருக்களும் அவரது மகன்களும் சுடப்பட்டமை தொடர்பாக கைதாகியுள்ள நால்வருக்கும் 14 நாட்கள் விளக்க மறியல் உத்தரவு.

chankanai-kurukkal.jpg
சங்கானையில் குருக்களும் அவரது இரு மகன்மாரும் துப்பாக்கியால் சுடப்பட்ட வழக்கில் கைதான இரு படையினரையும் இரு தமிழ் இளைஞர்களையும் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 11ஆம் திகதி சங்கானையில் குருக்கள் மீதும் அவர் இரு மகன்கள் மீதும் இரு இளைஞர்கள் துப்பாக்கிப்பிரயோகம் செய்ததில் காயமடைந்த 55 வயதான குருக்கள் கடந்த புதன் இரவு உயிரிழந்தார். கொள்ளையடிக்கச் சென்ற வேளையில் இவர்கள் மீது துப்பாக்கியினால் சுடப்பட்டது. இவர்களை துப்பாக்கியால் சுட்ட இரு இளைஞர்களும், அவர்களுக்கு துப்பாக்கியைக் கொடுத்து அதற்கு உடந்தையாக இருந்த இரு படையினரும் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டனர். இவர்கள் நால்வரும் மல்லாகம் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டபோது மல்லாகம் நீதிமன்றம் இவர்களை 14 நாட்கள் தொடர்ந்து விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளது.

சங்கானை குருக்களின் கொலைக்கு இந்து மத அமைப்புக்கள் கண்டனம்.
17 12 2010

கடந்த சனிக்கிழமை சங்கானையில் கொள்ளையர்களின் துப்பாக்கிச்சூட்டிற்கு இலக்காகி, கடந்த புதன்கிழமை யாழ். போதனா வைத்தியசாலையில் மரணமான நித்தியானந்த குருக்களின் கொலையைக் கண்டித்து பல இந்து மத அமைப்புக்கள் கண்டனங்களைத் தெரிவித்துள்ளன.

குருக்களது மரணச்சடங்குகள் நேற்று வியாழன் பிற்பகல் அவரது இல்லத்தில் இடம்பெற்றது. இதில் சமய, சமூகப் பிரதிநிதிகள்- பொதுமக்கள் என நூற்றுக் கணக்கானோர் கலந்து கொண்டனர். மானிப்பாய் பொலிஸார் மற்றும் இராணுவ அதிகாரிகளும் இதில் கலந்து கொண்டனர்.

சங்கானையில் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி காயமடைந்த குருக்கள் வைத்தியசாலையில் மரணம். படையினர் இருவர் கைது.
16 12 2010

கடந்த சனிக்கிழமை இரவு சங்கானையில் குருக்கள் ஒருவரும் அவரது மகன்மார் இருவரும் சுடப்பட்டு அவர்களது மோட்டார் சைக்கிளையும் நகைகளையும் கொள்ளையடித்துச் சென்ற இருவரும் அவர்களுக்கு துப்பாக்கியை வழங்கிய இரு படைச் சிப்பாய்களும் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் விடுதலைப்புலிகள் இயக்கத்திலிருந்து பின்னர் படையினரிடம் சரணடடைந்து புனர்வாழ்வு பெற்றவர்கள் என்றும், இவர்களுக்கு துப்பாக்கிகளை வழங்கியவர் கஞ்சா போன்ற போதைப் பொருள்களுக்கு அடிமையான இராணுச் சிப்பாய் எனவும் மற்றொரு சிப்பாயும் இதற்கு உடந்தையாக இருந்துள்ளார் எனவும் யாழ்.மாவட்ட கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் ஹத்துருசிங்க தெரிவித்துள்ளார்.

படையினரின் துப்பாக்கியைக் கொண்டு கொள்ளைச் சம்வத்திலீடுபட்டதுடன், குருக்கள் மீதும் அவரின் மகன்மார் மீதும் துப்பாக்கியால் சுட்டவர்களான புனர்வாழ்வு பெற்ற முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்களில் ஒருவர் சக்தி என அழைக்கப்படும் காசிநாதன் முகுந்தன், மற்றவர் ரமணன் என்றழைக்கப்படும் பாலசுப்பிரமணியம் சிவரூபன் எனவும், இவர்களுக்கு உதவியதாக கைது செய்யப்பட்டுள்ள படையினரில் ஒருவர் இராணுவ கோப்ரல் குணசேன, மற்றவர் சிப்பாயான ரட்ணாயக்க எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கபட்டு விசாணைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருடப்பட்ட மோட்டார் சைக்கிள் மீட்கப்பட்டுள்ளது.

படையினரின் இது போன்ற நடவடிக்கைகள் இடம்பெற அனுமதிக்கப்பட மாட்டாது எனவும், போர் முடிவுற்ற பின்னர் படையினரால் கட்டியெழுப்பப்பட்டு வந்த நல்ல விடயங்கள் சிலரால் நாசமாக்கப்பட்டு வருவதாகவும, இவர்களைப் போன்றவர்களுக்கு இராணுவத்தில் மன்னிப்பு வழங்கப்படமாட்டாது எனவும் மேஜர் ஜெனரல் ஹத்துருசிங்க தெரிவித்துள்ளார். இவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கும்படி பிரதிப் பொலிஸ் மாஅதிபரிடம் தான் நேரடியாக கோரியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளர். யாழ்.குடாநாட்டில் இடம்பெற்ற வேறு சில இது போன்ற சம்பவங்களுடன் இவர்களுக்கு தொடர்புள்ளதா என்பது குறித்தும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை. கொள்ளையர்களின் துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகி காயமடைந்த சங்கானை இழுப்பைத்தாழ்வு முருகமூர்த்தி ஆலயதத்தின் குருக்களான நித்தியானந்த குருக்கள் (வயது 55) யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிக்கிச்சை பலனளிக்காது நேற்று புதன் கிழமை இரவு மரணமானார் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது மகன்மாரான சிவானந்த சர்மா, ஜெகானந்த சர்மா இருவரும் தொடர்ந்து யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

யாழ்ப்பாணத்தில் இன்று மின்சாரம் துண்டிப்பு.

Electricity_Cableயாழ்ப் பாணம் நகர்ப்பகுதி உட்பட சில பகுதிகளில் இன்று ஞாயிற்றுக்கிழமை மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்தது. காலை 8மணி தொடக்கம் மாலை 5மணிவரை மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்தது.

உயர் மின்அழுத்த மார்க்கங்களில் திருத்த வேலைகள் மேற்கொள்ளப்படுவதால் இவ்வாறு மின்சாரம் துண்டிக்கப்பட்டதாக யாழ். மின்பொறியியலாளர் தெரிவித்துள்ளார். மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்ததன் காரணமாக இன்று நகரின் வங்கிகள், தனியார் கல்வி நிறுவனங்கள் உட்பட்ட முக்கிய நிறுவனங்கள் என்பன தனிப்பட்ட மின்பிறப்பாகிகளின் மூலம் மின்சாரத்தைப் பெற்று இயங்கியமை குறிப்பிடத்தக்கது. வழமையாக ஞாயிற்றுக் கிழமையும் திறந்திருக்கும் சில நிறுவனங்கள் இன்று மின்சாரமின்மையால் மூடப்பட்டிருந்தன.

கற்றுக்கொண்ட பாடங்கள் ஆணைக்குழுவுக்கு ரிபிசி வானொலி வழங்கிய அறிக்கை.

TBC_Logoபிரித்தானியாவில் செயற்படும் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தினால் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை 22-11-2010

கற்க வேண்டிய பாடங்களையும் நல்லெண்ணத்திற்கான வழிமுறைகளையும் கண்டறிவதற்கென நியமிக்கப்பட்டுள்ள இந்த ஆணைக்கழு முன்னிலையில் எமது அவதானிப்புகளை வழங்கச் சந்தர்ப்பம் தந்தமைக்கு எமது நன்றியை முதலில் தெரிவித்துக் கொள்கிறோம்.

மேற்குலக நாடான பிரித்தானியாவில் கடந்த 10 ஆண்டுகளாக செயற்பட்டுவரும் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் என்ற பெயரில் இயங்கும் எமது வானொலிச் சேவை ஆபிரிக்கா, ஐரோப்பா, மத்திய கிழக்கு போன்ற பகுதிகளில் நேரடியாகவும், சர்வதேச அளவில் இணையத்தளத்திலும் தனது சேவையை வழங்கி வருகிறது. வெளிநாடுகளில் வாழும் தமிழ் மக்கள் தமது அடையாளங்களைப் பேணும் வகையில் செயற்படுமாறு தூண்டுதல், இன, மத, நிற, மொழி வேறுபாடுகளுக்கு அப்பால் மனித உரிமை, மனித நேயம், ஜனநாயகம், சமத்துவம், சமஉரிமை என்ற சர்வதேச விழுமியங்களின் அடிப்படையில் பிரச்சனைகளுக்கான தீர்வுகளை எட்டுதல், இலங்கையின் ஐக்கியம், இனங்களுக்கிடையேயான நல்லுறவுகளை வளர்த்தல், பயங்கரவாதம், வன்முறை, மனித உரிமை மீறல் என்பவற்றிற்கெதிராக செயற்படுதல் என்பவற்றை பிரதான குறிக்கோள்களாகக் கொண்டு தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் தனது சேவையை வழங்கி செயற்பட்டு வருகிறது.

எமது வானொலியின் சேவைகளும் செயற்பாடுகளும் இலகுவாக அமைந்ததில்லை. இலங்கை வாழ் மக்கள் குறிப்பாக தமிழ் மக்கள் எவ்வாறு விடுதலைப்புலிகளின் ஒடுக்கு முறைக்குள் வாழ நிர்ப்பந்திக்கப்பட்டார்களோ, அதே மாதிரியான அழுத்தங்களுக்கு எமது சேவையும் முகம் கொடுத்தது. எமது சேவை வெறுமனே ஒலிபரப்புடன் நிறுத்திக் கொள்ளாது மக்கள் மத்தியில் சென்று பிரச்சனைகளை நேரடியாகவும் கலந்துரையாடல்கள் மூலமும் விளக்கி வந்தது. இதனால் பலர் பல்வேறு மிரட்டல்களுக்கு உள்ளாக்கப்பட்டதோடு வானொலி நிலையமும் பல தடவைகள் தாக்குதல்களுக்கு உள்ளாகியது.

இந்தப் பின்னணியிலிருந்தே கடந்த 2002 ம் ஆண்டு முதல் 2009ம் ஆண்டு வரையான காலப்பகுதியில் ஐரோப்பிய நாடுகளில் நிலமை, மக்களின் மனநிலை எவ்வாறு இருந்தது? என்பதனையும் அக் காலப்பகுதியில் மக்களின் மத்தியில் காணப்பட்ட எதிர்பார்ப்புகள் என்ன? என்பதனையும் உங்கள் கவனத்திற்கு தர விரும்புகிறோம். எமது வானொலி பல ஆயிரக் கணக்கான நேயர்களைக் கொண்டிருப்பதோடு, மிகப் பெருந் தொகையானவர்களுடன் இடையறாத தொடர்புகளையும் பேணி வருகிறது. அந்த வகையில் ஐரோப்பாவில் மற்றும் மத்திய கிழக்கில் தங்கி வாழும் தமிழ் மற்றும் இஸ்லாமிய மக்களின் மனப் போக்கினை எம்மால் ஒரளவு தர முடியும் என நம்புகிறோம்.

விடுதலைப்புலிகளுக்கும் ரணில் அவர்கள் தலைமையிலான அரசிற்குமிடையே நோர்வே நாட்டில் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்ற போது எமது வானொலிச் சேவை இலங்கை வானொலி ஊடாக தனது சேவையை அங்கும் விரிவுபடுத்தியது. இச் சேவையின் தாக்கங்கள் ஐரோப்பாவில் மட்டுமல்லாது தாயகத்திலும் பாதிப்புகளை ஏற்படுத்தியதால் விடுதலைப்பலிகள் எமது இலங்கைச் சேவையை தடைசெய்யுமாறு இலங்கை அரசை வற்புறுத்தி அதிலும் வெற்றி கண்டார்கள்.

ஐரோப்பாவின் பல பாகங்களிலே தமிழர்கள் பலர் அகதிகளாக குடியேறினர். இவர்களில் கணிசமான தொகையினர் அரசியல் நடிவடிக்கைகளில் மற்றும் வன்முறைகளோடு ஏதோ ஒரு வகையில் சம்பந்தப்பட்டவர்களாக இருந்தனர். இதில் ஒரு சாரார் புலிகளுடன் தொடர்புகொண்டவர்களாக அல்லது போராளிகளின் குடும்ப உறுப்பினர்களாக அல்லது நெருக்கமான சம்பந்தம் கொண்டவர்களாக காணப்பட்டனர். மற்றொரு சாரார் தமிழ் தேசியத்தை நேசிப்பவர்களாக இருந்தனர். இவர்களில் ஒரு பகுதியினர் தமிழீழம் புலிகளால் சாத்தியமாகும் என நம்பினார்கள். மிக நீண்ட காலத்திற்கு போராட்டம் தொடர்ந்ததாலும், ஆயுதப் போராட்டம் காரணமாக கிடைத்த வெற்றிகளும், ராணுவத்திற்கு கிடைத்த தோல்விகளும், அவ்வப்போது அரசு புலிகளுடன் பேச எடுத்துக்கொண்ட எத்தனிப்புகளும் அவர்களது நம்பிக்கையை பலப்படுத்தின. தமிழ் தேசியத்தினை ஆதரித்த மற்றொரு சாரார் இலங்கை அரசின் நிகழ்ச்சி நிரலில் இனப்பிரச்சனைக்கான தீர்வு இல்லை என்ற நிலை காணப்பட்டதாலும், ராணுவ ஒடுக்குமுறை மூலம் இனப் பிரச்சனையை நசுக்க எடுத்த முயற்சிகளால் மனமுடைந்ததாலும் வேறு வழியின்றி புலிகளை ஆதரித்தார்கள்.

இவர்கள் பிரச்சனைக்கான தீர்வு என்பது ஆயுத வன்முறை மூலமாகவோ அல்லது தமிழீழக் கோரிக்கையின் மூலமாகவோ சாத்தியமாகாது எனத் தெரிந்துள்ள போதிலும் புலிகளின் ஜனநாயக மீறலை மௌனமாக ஏற்றுக்கொள்ள புறச் சூழல்களால் நிர்ப்பந்திக்கப்பட்டார்கள்.

ஐரோப்பிய நகரங்களில் பல்வேறு ஆரப்பாட்டங்கள், கூட்டங்கள் என்பவற்றில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்குபற்றியதற்கான பிரதான காரணம் தமிழீழம் அல்லது வன்முறைக்கான ஆதரவு என்பதை விட தமிழ் மக்களின் ஜனநாயகத்திற்கான குரலை ராணுவத்தை பயன்படுத்தி ஒடுக்க விழையும் போக்கிற்கு எதிரான மன உணர்வின் வெளிப்பாடு என்றே எம்மால் குறிப்பிட முடியும். ஐரோப்பாவில் குறிப்பாக பிரித்தானியாவில் தமிழர்கள் சில உள்ளுராட்சி எல்லைகளுக்குள் கணிசமான தொகையில் வாழ்வதால் அவர்கள் தேர்தலின் போக்கை நிர்ணயிப்பவர்களாகவும் உள்ளனர். இதனால் சில பிரதேசங்களிலுள்ள தொகுதிகளின் பாராளுமன்ற உறுப்பினர்கள் இலங்கைத் தமிழர் பிரச்சனையில் அதிக கவனம் செலுத்துவதோடு புலிகளுக்கு ஆதரவாகவும் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.

இலங்கை அரசு இனப் பிரச்சனையில் ஆக்கபூர்வமான முடிவுகளை எடுக்காத வரை ஐரொப்பிய அரசுகள் அழுத்தங்களைப் பிரயோகிப்பது தவிர்க்க முடியாதது எனக் குறிப்பிட விரும்புகிறோம். இதனை புலிகளுக்கு ஆதரவான சக்திகளின் அரசுக்கு எதிரான பிரச்சாரமென அரசு கருதுமாயின் அது தவறாகும். ஐரோப்பாவில் வாழும் தமிழர்களில் ஒரு சாரார் குறிப்பிடத்தக்க வகையில் அமைப்பு வடிவில் செயற்படுவது குறிப்பிடத்தக்கது. இதற்கான பிரதான காரணம் புலிகளுக்கான நிதி திரட்டலுக்கு இது அவசியமாக இருந்தது. ஆர்ப்பாட்டங்கள், ஊர்வலங்கள், கூட்டங்கள் என்பவற்றை அடிக்கடி வைப்பதன் மூலம் இவர்களை உற்சாகம் குறையாமல் வைப்பதும் அவசியமாக இருந்தது. இத்தகைய நடவடிக்கைகளின்போது அரசியல் தீர்வு குறித்த அறிவுபூர்வமான கருத்துக்களோ அல்லது விவாதங்களோ இடம்பெறுவதில்லை. மக்களின் உணர்ச்சிகளைத் தூண்டும் வகையில் ராணுவ அத்துமீறல்கள் வர்ணிக்கப்பட்டன. வன்னியில் முப்படைகளின் துணையுடன் அரசு ஒன்று இயங்குவதாகவும் அதனைப் பலப்படுத்த பணம் தேவை என்பதே பிரதான பேச்சாக அமைந்திருந்த போதிலும், இவ்வாறான பலம் பொருந்திய அமைப்பு ஒன்று அமைந்தால் மட்டுமே அரசு பேச்சுவார்த்தையை நோக்கித் திரும்பும் என்பதே மையப் பொருளாக அமைந்து வந்தது.

எனவே புலம்பெயர் தமிழர்களின் அரசியல் நிலைப்பாடு என்பது தனி அரசு என்பதை விட தனியான பலமான நிர்வாகக் கட்டமைப்பு உருவாக்கப்படுவது ஐக்கிய இலங்கைக்குள் கௌரவமான தீர்வைப் பெறுவதற்கு ஓர் பலமான உந்துதலை அளிக்கும் என்பது பொதுவான போக்காக அமைந்திருந்தது. இதனை மே 19ம் திகதிக்கு பின்னதான நிகழ்வுகளும் எமக்கு உணர்த்திநிற்கின்றன. மேற்குலக நாடுகளில் கடந்த காலங்களில் காணப்பட்ட அரசியல் கொந்தளிப்பு நிலை என்பது புலிகளின் பண வசூலிப்புடன் பொருத்தியே அவதானிக்கப்பட வேண்டும்.

மே 19 ம் திகதிக்கு பின்னர் இடம்பெற்ற நிகழ்வுகளை அவதானிக்கும்போது புலிகளின் பினாமிகளால் செயற்கையாக தூண்டிவிடப்பட்ட போலித் தமிழ் தேசியவாதம் அதன் தோல்வியை அடைந்துள்ளது என்றே கூறவேண்டும். ஆனால் உண்மையான தமிழ்த் தேசியவாதம் தற்போது விழிப்பு நிலைக்கு வந்துள்ளதையும் நாம் குறிப்பிட்டே ஆகவேண்டும். இதற்குப் பிரதான காரணம் தமிழர் தேசியக் கூட்டமைப்பின் இயலாத் தன்மை அம்பலமாகியதும், புலிகளின் தோல்வி, முள்ளி வாய்க்கால் அனுபவங்கள், இடம் பெயர்ந்த மக்களின் அவலங்களும் அனுபவங்களும், இன்றைய அரசின் இனப் பிரச்சனை தொடர்பான போக்கு என்பன புதிய விழிப்புணர்வை ஏற்படுத்தி வருவதேயாகும்.

ஐரோப்பா மற்றும் மேற்குலக நாடுகளில் வாழ்ந்து வரும் தமிழ் மக்களை ஒட்டு மொத்தமாக புலிகளின் ஆதரவாளர்கள் என அரசு தொடர்ந்து கூறிவரும் போக்கும், நாடு கடந்த தமிழீழம் என்ற பெயரில் இடம்பெற்று வரும் நாடகத்தினை பூதாகரமாக காட்ட முனைவதும், இவற்றினைக் காரணம் காட்டி தமிழ்ப் பிரதேசங்களில் ராணுவ முகாம்களை பலப்படுத்துவதும், அபிவிருத்தி என்ற பெயரில் மறைமுகமான குடியேற்றங்களை நிறுவ எத்தனிப்பதும், பௌத்த விகாரைகளை தனியார் நிலங்களில் நிறுவப்படுவதை பாராமுகமாக ஆதரிப்பதும் அரசின் மீதான அதிருப்தியையும், அவநம்பிக்கைiயும் அதிகரித்திருப்பதை அவதானிக்க முடிகிறது.

நாம் ஏற்கெனவே குறிப்பிட்டது போல மே 19ம் திகதிக்கு பின்னர் இடம்பெற்று வரும் நிகழ்வுகள் தமிழ், முஸ்லீம் மற்றும் சிங்கள மக்கள் மத்தியிலே ஏதோ ஒரு வகையில் தாம் ஏமாற்றப்பட்டிருப்பதை உணரும் போக்கை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த ஏமாற்ற உணர்வு ஒரு புறத்தில் ஓர் புதிய தேசத்தை நோக்கிய அணுகுமுறையை நோக்கி ஒரு சாராரை தள்ளியுள்ள அதேவேளை இன்னொரு சாரார் சர்வதேச ஆதரவை நோக்கித் திரும்பியுள்ளதையும் நாம் குறிப்பிட்டே ஆகவேண்டும்.

இந்த அணுகுமுறை இலங்கை அரசுக்கு அழுத்தங்களைப் பிரயோகிக்கும் அணுகுமுறையாக அமையலாம் அல்லது தேசவிரோத சக்திகளுக்கு துணைபோவதாகவும் அமையலாம். இவை எந்த விதத்திலும் விரும்பத்தக்க ஒன்று அல்ல என்ற போதிலும் இவ்வாறான ஓர் நிலமைக்கு காரணம் அதிகாரத்தில் உள்ளவர்களே என்பதை மிகவும் வருத்தத்துடன் தெரிவிக்க விரும்புகிறோம்.

ஆணையாளர்களே!

வெளிநாடுகளில் வாழும் தமிழ் மக்களில் பலர் ஐக்கிய இலங்கைக்குள் கௌரவமான அரசியல் தீர்வை நோக்கி சிந்திக்கிறார்கள். செயற்படுகிறார்கள். கடந்த காலத்தில் தமிழ் மக்கள் தமிழ்த் தலைமைகளாலும் ( புலிகள்உட்பட ) சிங்களத் தலைமைகளாலும் ஏமாற்றப்பட்டுள்ளதை நன்கு உணர்கிறார்கள். மாற்று அணுகுமுறை ஒன்றின் அவசியத்தை நோக்கிச் செல்ல விழைகிறார்கள்.

2002ம் ஆண்டு போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்ட பின்னர் இவர்கள் மிகுந்த நம்பிக்கையோடு தமிழ்ப் பகுதிகளிலேயும், கொழும்பிலும் நிலங்களையும், வீடுகளையும் வாங்கினார்கள். இத் தருணத்தில் புலிகள் போருக்குத் தம்மைத் தயார்ப்படுத்திய போதிலும் இத் தயாரிப்பு என்பது தமிழ்ப் பிரதேச பாதுகாப்பு சம்பந்தப்பட்டதாகவே கருதினார்கள். புலிகளும் அப் பிரதேசம் தமது கட்டுப்பாட்டிற்குள் வரப்போவதாகக் கருதி தங்களது ஒடுக்குமுறை மூலம் பூரண கட்டுப்பாட்டில் வைத்திருப்பதற்காகவே தயாரிப்புகளை மேற்கொண்டார்கள்.

புலிகளின் ஆதரவாளர்கள் பலர் வன்னியில் காணிகளை வாங்கிய நிகழ்வுகளும் இடம்பெற்றுள்ளன. எனவே போர் என்பது மணலாற்றில் ஆரம்பிக்கப்பட்டது என்ற போதிலும் அது ராணுவத்தினால் திணிக்கப்பட்ட ஒன்றாகவே கருதவேண்டியுள்ளது. போர் நிறுத்த காலத்தில் மேற்குலக நாடுகளிலிருந்து பலர் இலங்கை சென்றிருந்த போதிலும் அவர்களது அனுபவங்கள் எதிர்மறையாக இருந்தன.

கொழும்பில் தங்கியவர்கள் பொலீஸ் நிலையங்களில் பதிவு செய்யவும், உறவினர்களின் வீடுகளில் தங்கியதால் உறவினர் துன்புறுத்தப்பட்ட சம்பவங்கள், விடுதிகளின் உரிமையாளர்கள் துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கப்பட்டமை, வடக்கு-கிழக்கு பகுதியிலிருந்து கொழும்பில் தங்கிய இளைஞர்கள் இரவோடிரவாக வாகனங்களில் ஏற்றப்பட்டு அனுப்பப்பட்டமை, வர்த்தகர்கள், வெளியிலிருந்து சென்றவர்கள் வெள்ளை வான்களில் கடத்தப்பட்டு பணம் பறிக்கப்பட்டமை, படுகொலை செய்யப்பட்டமை என பல நிகழ்வுகளால் பெரும் மனப் பாதிப்பிற்கு உள்ளானார்கள். தலை நகரத்தில் பாதுகாப்பற்ற தன்மையும், குற்றவாளிகள் எவருமே நீதியின் முன்னால் நிறுத்தப்படாததும் தமிழர்களின் எதிர்காலம் குறித்த அச்சங்களை அனுபவ ரீதியாக ஏற்படுத்திருந்தன. இது ஒரு புறம் தொடர மறு பக்கத்தில் குறிப்பாக வடபகுதி சென்றவர்களின் கடவுச் சீட்டுகள் பறிக்கப்பட்டு, பணம் பறிக்கப்பட்டு பயமுறுத்தப்பட்ட சம்பவங்கள் நடந்தேறின. இவை புலிகளால் மேற்கொள்ளப்பட்டன. இவை சமாதானத்தின் மீதான நம்பிக்கையை இழக்கச் செய்ததோடு மீண்டும் தாயகம் திரும்பும் நம்பிக்கையைச் சிதறடித்தது.

தற்போது நிலவும் சூழலும் அவ்வாறான மனநிலையையே மீண்டும் தோற்றுவித்துள்ளது என்பதனைத் தெரிவிக்க விரும்புகிறோம். நீண்ட காலம் தொடர்புகளை இழந்திருந்த தமது உறவினர் நண்பர்களை மீளச் சந்திக்கும் வாய்ப்பு கிட்டியதாக கருதுகிறார்களே தவிர சமாதானத்தின் மீது நம்பிக்கை எழவில்லை. போரின் கொடுமைகளிலிருந்து தப்பியுள்ளதாக கருதுகிறார்களே தவிர உரிமை பெற்ற இனமாக வாழமுடியும் என்ற எதிர்பார்ப்பை இழந்தே வாழ்கிறார்கள்.

ஆணையாளர்களே!

ஐரோப்பிய நாடுகளில் வாழ்ந்துவரும் தமிழ் மக்கள் போருக்குப் பின்னதான நிகழ்வுகள், மாற்றங்களின் அனுபவங்கள் மூலம் அரசியல் எதிர்காலம் குறித்து பரந்த அளவில் விவாதித்து வருகின்றனர். குறிப்பாக சர்வகட்சி மாநாட்டுக் குழுவின் தலைவர் திஸ்ஸ விதாரண அவர்களால் முன்வைக்கப்பட்ட தீர்வுகள் குறித்து எமது வானொலி பரந்த அளவில் விவாதங்களை நடத்தியது.

இதில் அமைச்சர் திஸ்ஸ விதாரண அவர்கள், முஸ்லீம் காங்கிரஸ் தலைவர் ரவூப் கக்கீம், மற்றும் நிசாம் காரியப்பர் போன்றோர் பங்களித்தனர். அதுமட்டுமல்லாமல் பிரான்ஸ், ஜேர்மனி, சுவிற்சலாந்து, பிரித்தானியா போன்ற நாடுகளில் பல கூட்டங்கள் நடத்தப்பட்டு விவாதிக்கப்பட்டன.

குறிப்பாக அதிகார பரவலாக்கத்திற்கான குறைந்தபட்ச அலகாக மாகாணசபைகளை ஏற்றுக்கொள்ளுதல், அரசியல் அமைப்பின் 13வது திருத்தத்தின் பிரகாரம் மாகாணசபைக்கு வழங்கப்பட்ட 3வது அட்டவணை ( யுnநெவசந உ) நீக்கப்படுவதை ஆதரித்தல், மாகாணசபையின் செயற்பாட்டு எல்லையை தெளிவாக வரையறுத்தலும், சட்டம் இயற்றும் அதிகாரத்தை வழங்குதலும், இரண்டாவது சபையான செனட் சபை உருவாக்கத்தின் தேவையையும் உள் நோக்கங்களையும் ஆதரித்தல் என்பவற்றில் பலத்த உடன்பாடு காணப்பட்டது. சர்வகட்சி மாநாட்டின் அமர்வுகளின்போது ஐரோப்பிய நாடுகளில் பொதுவான ஆர்வம் காணப்பட்டதும், போரின் பின்னர் அதற்கான ஆதரவு அதிகரித்து வருவதும் கவனத்தற்குரியதாகும்.

ஆணைக்குழுவின் விசாரணைக்கான கால எல்லை 2002-2009 எனக் குறிப்பிடப்பட்டுள்ள போதிலும் பிரச்சனைகள் நீண்ட வரலாற்றைக் கொண்டிருப்பதால் இக் கால எல்லை என்பது மொத்தப் பிரச்சனைகளின் ஓர் குறிப்பிட்ட பகுதியே ஆகும். எனவே 2002ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தமும் அதன் தோல்விகளும் வெறுமனே புலிகளின் திட்டமிட்ட மீறல் என்ற வரையறைக்குள் அடக்கிவிட முடியாது. சுதந்திரத்திற்கு பின்னர் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகள், அதன் காரணமாக எழுந்த ஒப்பந்தங்கள், அவை தோல்வியில் முடிந்தமைக்கான பின்னணிகள் என்பனவும் இதற்குக் காரணிகளாக அமைந்தன. பண்டா-செல்வா ஒப்பந்தம், டட்லி-செல்வா ஒப்பந்தம் என்பன முக்கியமானவை. இருந்த போதிலும் இலங்கை- இந்திய ஒப்பந்தம் குறிப்பிடத்தக்க மைல்கல்லாகும். முதன் முதலாக வெளிநாடு ஒன்றின் உதவியுடன் உள் நாட்டின் பிரச்சனைக்கு தீர்வு காண எடுக்கப்பட்ட முயற்சி ஆகும். இதற்கு சர்வதேச ஆதரவும் கிட்டியது. இந்த ஒப்பந்தத்தில் தமிழர்கள் தரப்பு ஓர் பகுதியாக அமையாத போதிலும் இரு அரசுகள் சம்பந்தப்பட்ட சர்வதேச ஒப்பந்தம் என இதனைக் கருத முடியும்.

இந்த ஒப்பந்தமும் இனங்களிடையே பரஸ்பர நல்லிணக்கத்தையும் அமைதியையும் தருவதற்குப் பதிலாக மேலும் இடைவெளியை அதிகமாக்கிய ஒன்றாகவே அமைந்தது. இலங்கை அரசு விடுதலைப்புலிகளைப் பயன்படுத்தி இந்த ஒப்பந்தத்தினை பலவீனப்படுத்திய நிலமைகளும், இந்திய சமாதானப் படைகளுக்கும், புலிகளுக்குமிடையே போர் ஏற்பட்ட வரலாறுகளும் அதன் பின்னர் ஜனாதிபதி பிரேமதாச அவர்கள் படுகொலை செய்யப்பட்ட அனுபவங்களும் 2002ம் ஆண்டின் போர் நிறுத்த ஒப்பந்தமும் வெற்றியைத் தரும் என்ற நம்பிக்கையை எவருக்கும் தரவில்லை.

போர் நிறுத்த ஒப்பந்தம் பலவீனப்படுத்தப்பட்டதும், இதன் குறைபாடுகளை மையமாக வைத்து ஐ தே கட்சி மேல் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளும், விமர்சனங்களும், போருக்கான தயாரிப்புகளும் இனப் பிரச்சனை தீர்க்கப்படுவதற்காக எடுத்துகொண்ட முயற்சிகளின் உள் நோக்கங்களை இப்போது நன்கு உணர்த்துகின்றன. புலிகளுக்கு எதிராக நடத்தப்பட்ட போர் பயங்கரவாதத்திற்கு எதிரான போர் எனவும், தாய் நாட்டைப் பாதுகாப்பதற்கான போர் எனவும், போரை விமர்சிப்பவர்கள் தேசத் துரோகிகள் எனவும் வர்ணிக்கப்பட்டது. இதன் சாராம்சம் இனப் பிரச்சனைக்கான அடிப்படைக் காரணங்களை முற்றாக மறைத்தது மட்டுமல்லாமல் தமிழ் மக்களை தேச விரோத சக்திகளாக அடையாளம் காட்டும் எத்தனமும் இடம் பெற்றுள்ளது. தாய் நாட்டைக் காப்பாற்றுவதாகக் கூறும் பிரச்சாரம் அதுவாகவே அமைந்தது. போர் நிறுத்த ஒப்பந்தத்தின் மூலம் நாட்டைப் பிரிக்க உதவியதாகவும், ஐ தே கட்சி புலிகளின் தோழர்கள் என வர்ணிக்கப்பட்டதன் மூலம் தமிழர்களும் ஐ தே கட்சியும் தேசத்துரோகிகள் என அடையாளப்படுத்தப்பட்டார்கள்.

போரின்போது முன் வைக்கப்பட்ட பிரச்சாரங்கள் இனப் பிரச்சனைக்கான புதிய பாதையை அறிவிக்காமல் தீவிர சிங்கள தேசியவாத கண்ணோட்டத்தில் எடுத்துச் செல்லப்பட்டதால் அவை சிறுபான்மை இனங்கள் மத்தியிலே மிகவும் அச்ச உணர்வை ஏற்படுத்தியிருந்தன.

போர் நிறுத்த ஒப்பந்தம் நடைமுறையிலிருந்த போது புலிகளின் முக்கிய தலைவர்கள் மேற்கு நாடுகளில் மேற்கொண்ட பிரச்சாரங்கள் போர் நிறுத்த ஒப்பந்தம் தமிழர்களுக்கான தனியான. சுயமான நிர்வாகத்தைப் பெறுவதற்கு வாய்ப்பை அளித்துள்ளதாகவம், சம பலமே இச் சந்தர்ப்பத்தை அளித்தது எனவும் கூறி பலமான ராணுவக் கட்டமைப்பிற்கான பண உதவியின் தேவையை மறைமுகமாக வலியுறுத்தினார்கள்.

இலங்கை அரசு போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்ட போது வன்னி நிர்வாகத்தை ஏற்றுக்கொண்டே பேச்சவார்த்தையில் இறங்கினார்கள் எனவும், தமது படை வலிமையையும் ஏற்றுக் கொண்டார்கள் எனவும் கூறினார்கள். இந்த வாதத்தை ஏற்றுக்கொண்டால் போர் நிறுத்த தோல்விக்கு ஒப்பந்தம் சரியாக அமுல்படத்தப்படவில்லை. கண்காணிப்புக்குழு உரிய முறையில் செயற்படவில்லை என்ற முடிவுக்கே நாம் செல்ல முடியும். அவ்வாறானால் இரு சாராருமே சமாதானத்தைத் தரக்கூடிய வலுவான ஒப்பந்தத்தை எதிர்பார்க்கவில்லை. பெயரளவிலான ஒன்றை நோக்கியே செயற்பட்டுள்ளார்கள் என்பது வெளிப்படை.

ஐரோப்பிய நகரங்களில் புலிகளின் செயற்பாடுகள் வன்னி அரசைப் பலப்படுத்தும் போக்கை மட்டுமே கொண்டிருந்தபோது அதனால் ஏற்படக்கூடிய எதிர் விளைவுகள் குறித்து இதர ஜனநாயக சக்திகள் எச்சரிக்கை செய்து வந்தன. ஆனாலும் இவற்றின் பலம் மிகவும் மட்டுப்படுத்தப்பட்டதாகவே இருந்தது. இதற்கான பிரதான காரணம் இலங்கை அரசின் திட்டமிட்ட அசமந்த போக்கே எனலாம்.

வடக்கு கிழக்கில் புலிகளின் ஜனநாயக விரோத, பயங்கரவாத, வன்முறை ஒடுக்கு முறைகளுக்கு எதிராக குரல் எழுப்பிய அமைப்புகள், தனி நபர்கள் என்போரைப் பலப்படுத்தவோ அல்லது பாதுகாக்கவோ அல்லது ஒன்றிணைக்கவோ எந்தவிதமான ஆக்கபூர்வமான முயற்சிகளும் எடுக்கப்படவில்லை. இவர்கள் தமக்குள்ளே போரிட்டு அழிய வேண்டும் என்பதே நிலைப்பாடாகவே இருந்தது. இதே நிலமைதான் மேற்கு நாடுகளிலும் காணப்பட்டது. இலங்கை அரசுக்கு எதிரான பிரச்சாரங்கள் அதிக அளவில் இடம்பெற்றபோது கவலை அடைந்திருந்த அரசு இப் பாகங்களில் செயற்பட்ட ஜனநாயக சக்திகளை இனம் கண்டுகொள்ளவில்லை. இவர்கள் புலிகளின் ஜனநாயக விரோத செயற்பாடுகளுக்கு எதிராக செயற்பட்ட போதும் அரசுக்கு ஆதரவாக இல்லை என்பதால் கைவிடப்பட்டார்கள்.

இவ் ஜனநாயக சக்திகள் ஜனநாயக விரோத செயற்பாடுகளை ஒட்டு மொத்தமாக எதிர்த்தார்கள். புலிகளினதும், அரசினதும் மனித உரிமை மீறல்களை அம்பலப்படுத்தினார்கள். உதாரணமாக புலிகள் சிறுவர்களை ஆயுதக்குழுவில் இணைக்கும் மனித உரிமை மீறல்களை ஆதாரங்களுடன் மனித உரிமை அமைப்புகளிடம் சமர்ப்பித்தார்கள். இலங்கை அரசின் தூதுவராலயங்கள் இச் செயற்பாடுகள் பற்றிய மதிப்பீட்டைமேற்கொண்டு உரிய வகையில் செயற்பட்டிருக்க வேண்டும். ஆனால் தூதுவராலயங்களும் ஆட்சியாளர்களின் கட்சி சார்பான நியமனங்களாக அமைந்ததால் அவர்களும் தமக்கு ஏற்ற வகையில் அவ்வப் பகுதிகளில் வாழும் சிங்கள மக்களுடனான உறவகளோடு மட்டும் நிறுத்திக் கொள்கிறார்கள்.

பிரித்தானியாவிலுள்ள இலங்கைத் தூதுவராலயத்தின் உயர் ஸ்தானிகராக பெண்மணி ஒருவர் நியமிக்கப்பட்டிருந்தார். அவர் ராஜதந்திர சேவையில் நீண்ட கால அனுபவம் கொண்டிருந்ததால் சகல பிரிவினரும் சந்தித்து விவாதிக்கும் ஒரு தளமாக சிலகாலம் அமைந்தது. இது அதிக காலம் நீடிக்கவில்லை. இது குறுகிய கால நிகழ்வு என்ற போதிலும் புதிய அனுபவத்தை அதாவது தூதுவராலயம் இன நல்லிணக்கத்தில் வகிக்கக்கூடிய பாத்திரத்தை புரிந்து கொள்ளும் வாய்ப்பை எமக்கு அளித்தது. ஆனால் இப் பெண்மணிக்கு முதலும் அதன் பின்னரும் நியமிக்கப்பட்டவர்கள் தமிழர்களின் உறவை புலிகளுக்கு எதிரான பிரச்சாரமாக பயன்படுத்த தலைப்பட்டார்களே தவிர இன இணக்கத்தின் அவசியத்தை புரிந்துகொண்டவர்களாக இல்லை. இத் தூதுவராலயங்கள் உளவுத்துறை நிறுவனங்களாகவே செயற்படுகின்றன. புலிகளின் நடவடிக்கைகளைக் கண்காணிப்பனவாக உள்ளனவே தவிர இன இணக்கத்தை ஏற்படுத்தக்கூடிய ஜனநாயக சக்திகளுடன் நெருக்கமான உறவுகளை ஏற்படுத்தவும் தயாராக இல்லை. அவர்கள் அரசுக்கு ஆதரவு நிலைப்பாட்டை எதிர்பார்க்கின்றனரே தவிர சகலரும் இலங்கையர் என்ற பொது அடையாளத்தில் இணைக்க தயாராக இருக்கவில்லை.

அடுத்து தமிழ்ப் பிரதேசங்களில் அபிவிருத்தி தொடர்பாக காணப்புடும் நிலமைகள் குறித்து மிகவும் கவலை கொண்டிருப்பதை பதிவு செய்ய வேண்டியுள்ளது. அப் பிரதேச அபிவிருத்தியில் அப் பிரதேச மக்களின் பங்களிப்பு பெறப்படாமல் அரச அதிகாரிகள், ராணுவம் என்பனவே முக்கிய தீர்மானம் எடுக்கும் கருவிகளாக உள்ளன. இது ஊழல், வீண் விரயம் என்பவற்றிற்கான வடிகால்களாக அமைவதை சர்வதேச அனுபவம் எடுத்துக் காட்டுகிறது. போரின் காரணமாக இருப்பிடங்களை விட்டு வெளியேறிய மக்கள் மீண்டும் தமது நிலங்களுக்குச் செல்வது பல்வேறு காரணங்கள் கூறப்பட்டு தடுக்கப்பட்டுள்ளது. ராணுவ முகாம்கள் அமைத்தல், நிலக்கண்ணி அகற்றப்படாது இருத்தல், நிலங்களின் உரிமை தொடர்பான சர்ச்சைகளைக் காரணம் காட்டி தடுத்தல், புலிகளால் சட்ட விரோதமாக மாற்றப்பட்ட நில உரிமம் தொடர்பான பிரச்சனைகள், புதிய சுதந்திர வர்த்தக வலையங்கள் அமைத்தல் என்ற போர்வையில் மக்கள் நீண்ட காலமாக வாழ்ந்த பாரம்பரிய பகுதிகளிலிருந்து வெளியேற்றப்படுதல் என மிக நீண்ட பட்டியல் தொடர்கிறது. இத் தீர்மானங்கள் அப் பகுதி மக்களின் நன்மை கருதி மேற்கொள்ளப்படுகிறது என்றால் அவை பற்றி போதிய தகவல்களை வழங்காமல் தவிர்க்கப்படுவது சந்தேகங்களை வலுப்படுத்துவதாக உள்ளது.

நிலப் பிரச்சனை என்பது உள்ளுரில் ஓர் சிவில் யுத்தத்தினை ஏற்படுத்துவதற்கான புறச் சூழலை ஏற்படுத்தியுள்ளது. ராணுவம் விலக்கப்பட்டால் சிவில் யுத்தம் தவிர்க்க முடியாமல் போகும் என்ற அச்சம் பரவலாகக் காணப்படுகிறது. எனவே இப் பிரச்சனை சட்ட ரீதியாக தீர்ரக்கப்படுவது அவசியம் என்பதால் அங்கு சிவில் நிர்வாக செயற்பாடு தேவையாகவே உள்ளது. வெளிநாடுகளில் வாழ்வோர் பலரின் நிலங்கள், வீடுகள் என்பன சட்ட விரோதமாக கையகப்படுத்தப்பட்டுள்ள நிலை குறித்து பெரும் கவலை பலரின் மத்தியில் காணப்படுகிறது. இந்த அச்சம் போக்கப்படுவதற்கு மக்களின் பங்களிப்புடனான பொது நிறுவனங்கள் செயற்பட வழி செய்யப்பட வேண்டும்.

தாயகத்தில் முதலீடுகளை எதிபார்க்கும் அரசு அம் மாதிரியான முதலீட்டீற்கு குந்தகமாக உள்ள நிலமைகளை மாற்ற உதவ வேண்டும். இதில் பிரதான தடையாக இருப்பது முதலீட்டிற்கான பாதுகாப்பு ஆகும். அரசின் மீது காணப்படும் சந்தேகங்கள் குறிப்பாக முதலீடுகள் நேரடியாக குறிப்பிட்ட பிரதேசத்திற்குப் பயன்படுத்தப்படும் என்பதற்கான நிர்வாக ஒழுங்குகள் அங்கு காணப்படவில்லை. அப் பிரதேசத்திலுள்ள மாகாண சபைகள் பூரண அதிகாரத்துடன் செயற்பட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டால் அதற்கான வாய்ப்புகள் அதிகமாகவே உண்டு. மத்திய அரசு எண்பார்வைக் குழுவை நியமித்தால் அது போதுமானதாக அமையும்.

இலங்கையில் இன இணக்கம், வடக்கு கிழக்கு அபிவிருத்தி என்பன எற்பட வேண்டுமாயின் வெளிநாடுகளில் பிரஜா உரிமை பெற்றிருக்கும் இலங்கையர் இரட்டைப் பிரஜா உரிமை பெறும் வகையில் நாட்டின் சட்டங்கள் மாற்றப்பட வேண்டும். இது முதலீட்டுககான வாய்ப்புகளை அதிகரிக்கும். மேற்கு நாடுகளில் புலம் பெயர்ந்துள்ள பலர் தமது இறுதிக் காலத்தை தமது தாயகத்தில் கழிக்க வேண்டும் என்ற விருப்போடு வாழ்கின்றனர். அத்துடன் பல கல்வியாளர்கள், முதலீட்டாளர்கள், அனுபவஸ்தர்கள் என்போரின் வருகை நாட்டின் அரசியல், சமூக, பொருளாதார வளர்ச்சிக்கு பெரும் உதவியாக அமையும்.

மேற்குலக நாடுகளில் வாழும் தமிழ்,முஸ்லீம் மற்றும் சிங்கள மக்களுடன் நெருங்கிய தொடர்புள்ள ஓர் ஊடகமாக உள்ள தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் தனது அனுபவங்களையும், அபிப்பிராயங்களையும் பகிர்ந்து கொள்வதற்கு கிடைத்த இந்த வாய்ப்பிற்கு மீண்டும் நன்றி கூறும் அதே வேளை இலங்கையர் என்ற பொதுவான அடையாளத்தை நாட்டில் வாழும் சகல சிறுபான்மை இனங்களும் மகிழ்ச்சியோடு ஏற்று செழுமை பெறுவதற்கு பெரும்பான்மை இனத்திலிந்து காத்திரமான மாற்றங்கள் ஏற்படவேண்டும். இந்த மாற்றங்கள் ஸ்தாபன ரீதியாகவும், அரசியல், சமூக, கலாச்சார மாற்றத்தினூடாகவும் மட்டுமே சாத்தியம் என உறுதியாக நம்புகிறோம். இந்த ஆணைக்குழுவின் பணி மிகவும் காத்திரமானது என்பதால் இதன் அமர்வுகள் வெளிநாடுகளுக்கும் விஸ்தரிக்கப்பட்டால் நாட்டின் சகல பிரிவினரினதும் ஒட்டுமொத்தமான அபிப்பிராயத்தின் வெளிப்பாடாக அதன் அறிக்கை அமையும் என்பது எமது அவா ஆகும் என்பதை தெரிவித்து முடித்துக் கொள்கிறோம்.

வீ.இராமராஜ்
வி.சிவலிங்கம்
செ.ஜெகநாதன்