January

January

எத்தியோப்பிய விமானம் கடலில் வீழ்ந்து விபத்து – 85 பயணிகள் பலி

85 பயணிகளுடன் சென்ற எதியோப்பிய விமானம் விபத்துக்குள்ளானது. லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் இருந்து எதியோபியன் ஏர்லைன்சுக்கு சொந்தமான போயிங் 737 ரக விமானம் நேற்றுக் காலையில் எதியோப்பிய தலைநகர் அடிஸ் அபாபாவுக்கு புறப்பட்டது.

விமானம் புறப்பட்டு சென்ற 45 நிமிடங்களுக்குப் பிறகு விமானத்துக்கும், விமான கட்டுப்பாட்டு அறைக்குமான தொடர்பு துண்டிக்கப்பட்டது.

விமானம் மத்திய தரைகடல் மேல் பறந்த போது விபத்துக்குள்ளாகியிருக்கலாம் என கூறப்படுகிறது. விமானத்தில் இருந்தவர்களில் 54 பேர் லெபனானை சேர்ந்தவர்கள், எஞ்சியவர்களில் பெரும்பாலானோர் 22 பேர் எதியோபியாவை சேர்ந்தவர்கள். ஒருவர் ஈராக்கியர், பிரான்ஸ், சிரியா நாட்டை சேர்ந்த தலா ஒருவரும் உள்ளனர். இவர்களைத்தவிர விமான பைலட்டு உட்பட சிப்பந்திகள் 7 பேர் மொத்தம் 92 பேர் விமானத்தில் இருந்தனர்.

விமானம் நடுவானில் திடீரென தீ பிடித்து எரிந்து விழுந்ததாக மத்திய தரைக்கடல் பகுதி கடலோர மக்கள் சிலர் தெரிவித்துள்ளனர். விமான விபத்து குறித்து செய்தி அறிந்தவுடன் லெபனான் நாட்டு அதிகாரிகள் ரபீக் ஹரிரி, விமான நிலையம் விரைந்துள்ளார். இங்கு இருந்துதான் அந்த விமானம் புறப்பட்டுள்ளது.

விமானத்தில் இருந்த அனைவரும் பலியாகியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. மீட்பு பணிகளில் லெபனான் நாட்டின் இராணுவம், கடற்படை மற்றும் ஐ.நா., பாதுகாப்பு படையினரும் ஈடுபட்டுள்ளதாக அந்நாட்டு அரசு செய்தி குறிப்பு தெரிவிக்கிறது.

ஹெய்ட்டியில் மீண்டும் நிலநடுக்கம்

haitibuidling-pd.jpgஹெயிட் டியில் நேற்று மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. போர்ட் அப் பிரின்ஸ்  நகருக்கு மேற்கே இந்த நில அதிர்வு ஏற்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ரிக்ஸ்டர் அளவில் இது 4.7 ஆகும். சேத விபரங்கள் உடனடியாகத் தெரியவில்லை.

ஏற்கனவே போர்ட்-அப்-பிரின்ஸ் நகரில் ஏற்பட்ட நில நடுக்கத்தால் கட்டிடங்கள் இடிந்து கிடக்கின்றன. அவற்றை அகற்றும் பணியில் பன்னாட்டு மீட்பு குழுவினர் ஈடுபட்டுள்ளனர். இடிபாடுகளில் இருந்து தொடர்ந்து பிணங்களை அகற்றும் பணி நடந்து வருகிறது.

இருந்தும் இடிபாடுகளில் பிணங்கள் கருகி கிடப்பதால் துர்நாற்றம் வீசுகிறது. மேலும், வீடுகளை இழந்த இலட்சக்கணக்கான மக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு போதிய சுகாதார வசதி அங்கு இல்லை எனவே ஹெய்டியில் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது.

இடிபாடுகளில் சிக்கி காயமடைந்தவர்களில் பலர் கண்களை இழந்துள்ளனர். கால், கைகளையும் இழந்து தவிர்க்கின்றனர் தலைக் காயங்களால் அவதிப்பட்டு வருகின்றனர். அவர்கள் முகாம்களிலும் ஆஸ்பத்திரிகளிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கண்டி, வத்தேகம கல்வி வலயம்: 68 பாடசாலைகள் பெப்ரவரி 15 வரை பூட்டு

கண்டி மாநகர சபை வட்டாரம் உட்பட கண்டி, வத்தேகம ஆகிய கல்வி வலயங்களைச் சேர்ந்த 68 பாடசாலைகள் நேற்று மூடப்பட்டன. பெப்ரவரி மாதம் 15 ஆம் திகதி வரை பாடசாலைகள் மூடப்பட்டிருக்கும்.

இத்தகவலை மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க தெரிவித்தார். ஜனாதிபதி தேர்தல் உட்பட 62 ஆவது சுதந்திர கொண்டாட்டங்கள் இம்முறை பள்ளேகலையில் நடைபெற இருப்பதால், முன்கூட்டியே இதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளும் பொருட்டு இவ்வாறு 68 பாடசாலைகளும் மூடப்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

“தெயட்ட கிருல” என்ற கண்காட்சிகள் இதில் முக்கிய இடம் பெறுவதால் அங்கே கடமை புரியும் பொலிஸாருக்கும் ஏனைய ஊழியர்களுக்கும் தங்குமிடம் வசதியாகவே இவை மூடப்படுகின்றன. ஜீ. ஸி. ஈ. விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் மேற்கொள்ளப்படும் கண்டி புஷ்பதான மகளிர் பாடசாலை தவிர நகரில் உள்ள ஏனைய பாடசாலைகளும் இதன் காரணமாக மூடிவிட தீர்மானிக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு மூடப்படும் பாடசாலைகளின் லீவு நாட்களுக்குப் பதிலாக பெப்ரவரி மாதம் 15ஆம் திகதியின் பின்னர் இடம்பெறும் சனிக்கிழமை நாட்களில் வகுப்புகளை நடத்தவும் திட்டம் வகுக்கப்பட்டிருப்பதாக மத்திய மாகாண கல்விப் பணிப்பாளர் ஊடகங்களுக்கு எடுத்துரைத்தார்.

ஜனாதிபதித் தேர்தல் இன்று

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட 8வது ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான ஆறாவது ஜனாதிபதி தேர்தல் இன்று நடைபெறுகிறது. சுமார் 30 வருடங்களுக்கு பின்னர் நாடு முழுவதும் ஒரே நேரத்தில் நடைபெறும் தேர்தல் இதுவாகும்.

இதற்கமைய, வடக்கு, கிழக்கு உட்பட நாடு முழுவதிலும் அமைக்கப்பட்டுள்ள 11 ஆயிரத்து 98 வாக்களிப்பு நிலையங்களில் இன்று காலை 7.00 மணி தொடக்கம் மாலை 4.00 மணி வரை வாக்களிப்பு நடைபெறவுள்ளது.

இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் 22 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இவற்றில் 17 கட்சிகளின் சார்பில் 17 பேரும், சுயேச்சை வேட்பாளர்கள் ஐவரும் அடங்குவர்.

சுதந்திரமானதும், நியாயமானதுமான தேர்தல் ஒன்றை நடத்தி முடிப்பதற்கான சகல நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன. நெருக்கடிகளை தவிர்க்கும் வகையில் நேர காலத்துடன் வாக்களிப்பு நிலையங்களுக்கு சென்று வாக்களிக்குமாறு தேர்தல்கள் ஆணையாளர் தயானந்த திசாநாயக்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தேர்தலில் ஒரு கோடியே 40 இலட்சத்து 88 ஆயிரத்து 500 பேர் வாக்களிப்பதற்குத் தகுதி பெற்றுள்ளனர்.

பாதுகாப்பு ஏற்பாடுகள்

இதேவேளை, அமைதியானதும், வன்முறையற்றதுமான தேர்தல் ஒன்றை நடத்தி முடிப்பதற்குத் தேவையான சகல பாதுகாப்பு ஏற்பாடுகளை திட்டமிட்ட அடிப்படையில் பொலிஸ் திணைக்களம் மேற்கொண்டுள்ளதென பொலிஸ் மாஅதிபர் மஹிந்த பாலசூரிய தெரிவித்தார்.

வடக்கு, கிழக்கு உட்பட நாடு முழுவதிலும் தேர்தல் பாதுகாப்பு கடமையில் 68,800 பொலிஸாரும் அவர்களுக்கு உதவியாக முப்படையினரும் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதற்கு மேலதிகமாக பொலிஸாரும், முப்படையினரும் உள்ளடக்கப்பட்ட 2523 நடமாடும் சேவைகள் ஈடுபடுத்தப் பட்டுள்ளன. ஒவ்வொரு குழுவிலும் பொலிஸ் அதிகாரி ஒருவர், இரண்டு பொலிஸார், முப்படை வீரர்கள் இருவர் என்றடிப்படையில் ஐவர் இந்தக் குழுவில் அடங்குவர்.

பொலிஸாரும், முப்படையினரும் இணைந்து ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.

வடக்கு, கிழக்கு மற்றும் தென் பகுதிகளில் இனங்காணப்பட்ட பிரதேசங்களில் பொலிஸாரும் முப்படையினரும் கூட்டுப் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

தெரிவத்தாட்சி உத்தியோகத்தர் காரியாலயத்திற்கான பாதுகாப்பு, வாக்குப் பெட்டிகளை எடுத்துச் செல்லுதல், வாக்கெண்ணும் நிலையங்களைப் பாதுகாத்தல், தேர்தலுக்குப் பிந்திய பாதுகாப்பு ஒழுங்கு போன்ற நடவடிக்கைகளுக்காக இவர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

தேர்தல் கடமைகளில் ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

வாக்குகள் எண்ணும் நிலையங்கள்

வாக்களிக்கும் நடவடிக்கைகள் இன்று காலை 7 மணிக்கு ஆரம்பமாகி 4 மணிக்கு முடிவடைவதை அடுத்து வாக்குப் பெட்டிகள் பலத்த பாதுகாப்புகளுடன் எடுத்துச் செல்வதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இம்முறை, நாடு முழுவதும் வாக்குகளை எண்ணுவதற்கென 888 நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இவற்றில் சாதாரண வாக்குகளை எண்ணுவதற்கென 737 நிலையங்களும், தபால் மூல வாக்குகளை எண்ணுவதற்கென 139 நிலையங்களும், இடம்பெயர்ந்தவர்களின் வாக்குகளை எண்ணுவதற்கென 12 நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளன.

தேர்தல் முடிவுகள்

வாக்குப்பெட்டிகள் வாக்குகள் எண்ணும் நிலையங்களைச் சென்றடைந்தவுடன் இன்று இரவு 7 மணியளவில் வாக்குகள் எண்ணும் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.

நள்ளிரவுக்குப் பின்னர் முதலாவது தேர்தல் முடிவை வெளியிட முடியும் என்று தேர்தல் திணைக்கள உயர் அதிகாரி தெரிவித்தார்.

இதேவேளை, அவசரத் தேவைகளுக்கு ஹெலிகொப்டர்களை பயன்படுத்துவதற்கும் தேர்தல் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

வேட்பாளர்கள்

இந்த ஜனாதிபதித் தேர்தலில் 17 கட்சிகளின் சார்பில் 17 பேரும் சுயேச்சை வேட்பாளர்கள் ஐவருமாக 22 பேர் போட்டியிடுகிறார்கள். எனினும், ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளராக போட்டியிடும் சரத் பொன்சேகாவுக்கும் இடையில் -ஸிஷி(யிt போட்டியாக இந்தத் தேர்தல் இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.

பதவியிலிருக்கும் ஜனாதிபதி ஒருவருடன் முன்னாள் இராணுவ அதிகாரி ஒருவர் போட்டிக்கு களமிறங்கியிருப்பது இதுவே இலங்கையில் முதல் தடவையாகும். அதேநேரம், ஜனாதிபதி பதவியில் இருப்பவர் பதவிக் காலம் முடிவதற்கு இரண்டு ஆண்டுகள் முன்னதாக தேர்தல் நடைபெறுவதும் இதுவே முதல் தடவையாகும்.

அடையாளத்தை உறுதிப்படுத்தல், வாக்களித்தல்

மக்கள் வாக்களிப்பதற்கு ஆளடை யாளத்தை நிரூபிப்பதற்காக தேசிய அடையாள அட்டை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

அடையாள அட்டை இல்லாதவர்கள் தேர்தல்கள் ஆணையாளரால் அங்கீகரி க்கப்பட்ட ஏதாவதொரு ஆளடையாள அட்டையைக் காண்பித்து வாக்களிக்க முடியும். வாக்காளர் அட்டைகள் கிடைக்கப் பெறாதவர்கள் ஆளடையாளத்தை நிரூபித்து வாக்களிக்க முடியும் என்றும் ஆணையாளர் அறிவித்துள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலில் வாக்காளர்கள் மூன்று வேட்பாளர்களுக்கு வாக்களிக்க முடியும். ஒரு வேட்பாளருக்கு வாக்கை அளிப்பதாயின் வாக்காளரின் பெயருக்கும் சின்னத்திற்கும் எதிரே புள்ளடியிடலாம். மூன்று வேட்பாளருக்கும் அளிப்பதாயின் முதலாமவருக்கு ‘1’ என்றும் இரண் டாமவருக்கு ‘2’ என்றும் மூன்றாமவருக்கு ‘3’ என்றும் அடையாளமிடலாம்.

முதலாவது வேட்பாளரைத் தெரிவு செய்யாமல் இரண்டாம் மூன்றாம் விருப்பு வாக்கு அளிக்கப்பட்டிருக்குமாயின் அந்த வாக்கு செல்லுபடியற்றதாகும்.

மீறினால் துப்பாக்கிச் சூடு

தேர்தலின் போது எந்தவொரு தனிநபரோ குழுக்களோ சட்டத்தைப் புறக்கணித்து வன்முறைகளைத் தூண்டும் நடவடிக்கைக ளில் ஈடுபட்டால் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளும் நிலை ஏற்படும் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

வன்முறைகளைத் தூண்டும் நடவடி க்கைகளில் எவராவது ஈடுபட்டால் முதலில் பொலிஸார் எச்சரிக்கை அறிவு றுத்தல்களை விடுப்பார்கள். வாக்களிப்பு நிலையத்தில் சொத்துக்களுக்குச் சேதம் விளைவித்தல் மற்றும் வன்முறைகளைத் தூண்ட எவராவது முயற்சித்தால் பொலிஸார் முதலில் எச்சரிக்கை விடுப்பார்கள்.

எச்சரிக்கைக்கு மதிப்பளிக்காவிடின் சுடுமாறு பொலிஸாருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்று தேர்தல் நடவடிக்கைகளுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மாஅதிபர் காமினி நவரட்ன தெரிவித்தார்.

கண்காணிப்பு பணிகள்

இம்முறை தேர்தலில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டைச் சேர்ந்த சுமார் 35 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கண்காணிப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டு ள்ளனர்.

பொதுநலவாய மற்றும் தெற்காசிய பிராந்திய நாடுகளிலிருந்து இலங்கை வந்திருக்கும் 85க்கு மேற்பட்ட வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் கண்காணிப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இதற்காக சுமார் ஆயிரம் வாகனங்களும் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.

முறைகேடு நடந்தால் வாக்கெடுப்பு ரத்து

வாக்களிப்பு நிலையங்கள் அமையப் பெற்றுள்ள இடத்திலிருந்து ஐநூறு மீற்றர் தூரம் வாக்கெடுப்பு நிலையத்திற்குச் சொந்தமான பிரதேசமாகக் கருதப்படும். இந்தப் பிரதேசங்களிலோ அல்லது தேர்தல் சட்டங்களை மீறும் வகையிலோ எங்கேனும் எவரேனும் செயற்பட்டால் குறித்த வாக்கெடுப்பு நிலையத்தின் வாக்கெடுப்பு இரத்துச் செய்யப்படும் என்று தேர்தல்கள் ஆணையாளர் அறிவித்துள்ளார்.

இன்றைய தினம் குறித்த பிரதேசத்திற்குள் கூட்டம் கூட்டுவது, ஒருவருக்கு ஆதரவாக பிரசுரங்கள் விநியோகிப்பது, அழுத்தம் கொடுப்பது சட்ட விரோதமாகும் என்று தெரிவித்த பொலிஸார் பிடியாணை இன்றி இவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்றும் குறிப்பிட்டனர்.

‘சரத் பொன்சேகாவுக்கு ஆதரவு’ – சந்திரிகா குமாரதுங்க

chandrika.jpgஇலங் கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க, எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகாவை ஆதரிப்பதாக அறிவித்துள்ளார்.

தற்போதைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமை வகிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் முன்னாள் தலைவியான சந்திரிக்கா குமாரதுங்க, நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள வன்முறைகள் மற்றும் ஊழல் மோசடிகளால் கவலையடைந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

அதனை மாற்றியமைப்பதற்காக தனது ஆதரவாளர்கள் ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு வாக்களிக்க வேண்டுமென கேட்டுக்கொண்டுள்ளார்.

65% க்கும் அதிகமான வாக்குகளால் ராஜபக்ஷ வெற்றிபெறுவது உறுதி – ஆளும் கட்சி செயலாளர்

mahindaஜனாதிபதித் தேர்தல் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வேட்பாளரான ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் வெற்றி ஏற்கனவே உறுதியாகிவிட்ட நிலையில் 65 சத வீதத்துக்கும் அதிகமான வாக்குகளுடன் ஜனாதிபதியின் வெற்றியை உறுதி செய்வதே தங்களது நோக்கமென அக்கட்சி தெரிவித்துள்ளது. கொழும்பு, மகாவலி கேந்திர நிலையத்தில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்கான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் இறுதி ஊடகவியலாளர் சந்திப்பில் அக்கட்சியின் பொதுச் செயலாளரான அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இந்த கருத்தை வெளியிட்டார்.

அவர் இங்கு மேலும் பேசுகையில்;

ஜனாதிபதி ராஜபக்ஷ 2005 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்று நாட்டின் பிரதான பிரச்சினையாக இருந்த விடுதலைப் புலிகள் பிரச்சினையை துடைத்தெறிந்து அவ்வமைப்பைச் சேர்ந்த சர்வதேச ரீதியான சந்தேகநபர்களையும் கைது செய்து அபிவிருத்தித் திட்டங்களையும் வகுத்து தற்போது அதை செயற்படுத்துவதற்காக மக்கள் முன்னிலைக்கு வந்துள்ளார். மக்கள் மீதுள்ள நம்பிக்கையுடனேயே அவர் வந்திருக்கிறார்.

2005 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலின் சூழலும், பின்னணியும், தற்போதைய சூழ்நிலையும் வெவ்வேறானவை. தற்போது துப்பாக்கிச் சத்தங்களோ, குண்டு வெடிப்பு சத்தங்களோ, கிடையாது. மக்கள் எல்லைகளை கடந்து வந்து வாக்களிக்க வேண்டியதில்லை.

இதேநேரம், நாம் ஆரம்பத்திலிருந்தே முறையாக திட்டமிட்டு பிரசாரங்களை முன்னெடுத்துள்ளோம். கிராமங்கள் வரை எமது பிரசாரங்கள் சென்றுள்ளன. எதிரணியினரை பொறுத்தவரை 5 சத வீதம் கூட கீழ் மட்டத்திற்கு அவர்களது பிரசாரம் சென்றடையவில்லை.

எம்மைப் பொறுத்தவரை இது புதுமையான தேர்தலில்லை. ஜனாதிபதியின் வெற்றி உறுதியாகிவிட்டது. எனினும் 65 சத வீதத்துக்கும் அதிகமான வாக்குகளுடன் அவரது வெற்றியை உறுதி செய்வதிலேயே இந்த தேர்தல் எமக்கு முக்கியமாகிறது. இதுவே எமது நோக்கம். அத்துடன் நானும் ஐக்கிய தேசியக் கட்சி பொது செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்கவும் இணைந்து வன்முறையில் ஈடுபட வேண்டாமென விடுத்த வேண்டுகோளுக்கு நல்ல பிரதிபலன் கிடைத்துள்ளது. ஒவ்வொருவரும் தனக்குத் தானே செய்து கொண்டதே தவிர கடந்த சில தினங்களில் பாரிய வன்முறை சம்பவங்கள் எதுவும் இடம்பெறவில்லை.

எனவே, 27 ஆம் திகதி ஜனாதிபதியின் வெற்றியின் பின்னரும் ஏனைய கட்சியினருக்கு எந்த கஸ்டங்களும், அசௌகரியங்களும், துன்புறுத்தல்களும் ஏற்படாத வகையில் வெற்றியை கொண்டாடுமாறு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஆதரவாளர்களிடம் கேட்டுக் கொள்கிறேன் என்றார்.

புதன்கிழமை நண்பகல் ஜெனரல் ஜனாதிபதியாவார் எவராலும் தடுக்க முடியாது; ரணில்

sa.jpgநாட்டில் இன்று ஜனநாயக ஆட்சியொன்று நடைபெறுவதில்லை எனவும் இராணுவ ஆட்சியை விடவும் மோசமானதொரு சர்வாதிகாரச் செயற்பாடுகள் இடம்பெற்று வருவதாகவும் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க 26 ஆம் திகதியுடன் இந்த அராஜக ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க மக்கள் ஓரணியில் திரண்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.

கொழும்பு ஜெய்க் ஹில்டனில் நேற்று நடைபெற்ற எதிரணிகளின் கட்சித் தலைவர்களின் செய்தியாளர் மாநாட்டிலேயே ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் விளக்கமளிக்கையில் கூறியதாவது;

ஜெனரல் பொன்சேகா ஜனாதிபதியானால் இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு செல்லும் என்ற எதிரணியின் கூற்று பற்றி இங்கு கேள்வி எழுப்பப்பட்டது. நான் உங்களிடம் கேட்கின்றேன் இன்று நடப்பது ஜனநாயக ஆட்சியா? இராணுவ ஆட்சியை விடவும் மோசமான தொரு ஆட்சியல்லவா? நடந்து கொண்டிருக்கின்றது. இதிலிருந்து நாட்டையும் மக்களையும் மீட்டெடுக்கவேண்டும். இதன் பொருட்டே ஜனநாயகத்தை நேசிக்கும் சகல அரசியல் சக்திகளும் ஒன்றுபட்டுள்ளன.

1983 இல் ஜே.ஆர்.ஜெயவர்தன நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையைக் கொண்டு வந்தது நாட்டின் எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டாகும். ஆனால் அந்த அதிகாரம் இன்று தவறானவர்களின் கரங்களில் சிக்கி நாட்டை அழிவு நிலைக்கு கொண்டு செல்லப்பட்டுக் கொண்டிருக்கின்றது. எனவேதான் இந்த நிறைவேற்று அதிகாரத்தை ஒழித்து பூரண அதிகாரத்தை பாராளுமன்றத்துக்குப் பெற்றுக்கொடுக்க நாம் ஒன்றுபட்டுள்ளோம்.

அடுத்துவரும் புதிய அரசாங்கத்தில் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட்டு அடுத்த கட்ட நடவடிக்கையாக நாட்டில் நல்லாட்சியை மலரச் செய்வோம். அதனூடாக இன நெருக்கடிக்கான அரசியல் தீர்வும் காணப்படும்.

ஜெனரல் சரத்பொன்சேகாவின் 10 அம்ச வேலைத்திட்டமானது மிகப்பெரிய விடயமாகவே நாம் கருதுகின்றோம். நூறு பக்கங்களில் கூட விபரிக்க முடியாதவற்றை 10 அம்சத்திட்டமாக முன்வைத்துள்ளார். இந்த வேலைத்திட்டத்தை அவரோடு இணைந்துள்ள அனைத்துக் கட்சிகளும் ஏற்றுக்கொண்டுள்ளன. இறுதியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கூட ஏற்றுக்கொண்டது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முதலில் எம்மோடு பேச்சு நடத்தினர். அது ஆரோக்கியமானதாக அமைந்தது. பின்னர் அவர்கள் ஜே.வி.பி.யுடன் பேசவிரும்பினர். அதனை நாம் வரவேற்றோம். அந்தப் பேச்சுகளும் ஆரோக்கியமுள்ளதாக அமைந்ததன் காரணமாக ஜெனரல் பொன்சேகாவை ஆதரித்து தமது ஆதரவை வெளிப்படுத்தினர். இதனை எப்படி இரகசிய உடன்படிக்கை என்று கூறுவது.

ராஜபக்ஷ சகோதரர்கள் பிரபாகரனுடனும் புலிகளுடனும் 2005 இல் செய்துகொண்டது தான் இரகசிய உடன்படிக்கை. அது ஜனாதிபதி தேர்தலில் என்னை தோற்கடிப்பதற்கு செய்துகொள்ளப்பட்டது. அதன் பின்விளைவுகள் தான் இன்றைய சர்வாதிகார ஆட்சிக்கு வித்திட்டன.

26 ஆம் திகதி நடக்கும் தேர்தலில் ஜெனரல் பொன்சேகா வெற்றி பெறுவதை தடுப்பதற்காக மகிந்த ராஜபக்ஷ எத்தகைய வேலையையும் செய்யத்தயாராக உள்ளார். ஆனால், நாட்டு மக்கள் இன, மத, மொழி, கட்சிபேதமின்றி சரத் பொன்சேகாவை ஜனாதிபதியாகத் தெரிவு செய்யத்தீர்மானித்து விட்டனர். 27 ஆம் திகதி புதன்கிழமை நண்பகலாகும் போது நாட்டின் ஜனாதிபதியாக ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவாவதை இனிமேல் எவராலும் தடுக்க முடியாது என்று ரணில் தெரிவித்தார்.

இலங்கையிலிருந்து தேர்தல் நிலைப்பாடுகள் பற்றி ரிபிசி வானொலியில் தேசம்நெற் ஆசிரியர். – த சோதிலிங்கம்

இன்றைய இலங்கை அரசியல் நிலைப்பாடுகள் பற்றி ரிபிசி வானொலியில் 24ம் திகதி நடைபெற்ற அரசியல் கருத்துப்பகிர்வும் ஆய்வும் என்ற நிகழ்வின்போது தேசம்நெற் ஆசிரியர் ஜெயபாலன் தனது அவதானங்களை இலங்கையில் இருந்து தொலைபேசி மூலம் தெரிவித்திருந்தார். அவற்றை இங்கு தொகுத்துத் தருகிறோம்.

ஜெயபாலன் தனது இலங்கைக்கான பயண நோக்கம் பற்றி தெரிவிக்கையில்: செஞ்சோலை காந்தரூபன் குழந்தைகள் இல்லத்தின் நிதிப்பொறுப்பை லண்டன் ‘அகிலன் பவுண்டேசன் பொறுப்பெடுக்கும் நிகழ்வில் கலந்து கொள்ளவதற்காக மன்னார் வன்னிப் பிரதேசத்திற்குப் போயிருந்ததாகவும், இந்த செயற்திட்டத்தை ஏற்படுத்திய ‘லிட்டில் எயிற்’ மற்றும் ‘தேசம்நெற்’ சார்பில் தான் கலந்து கொண்டதாகவும் கூறினார். இந்தக்காலங்களில் தான் அவதானித்த அரசியல் நிலைமைகளை ரிபிசி நேயர்களுடன் பகிர்ந்து கொண்டார்.

கொழும்பு விமான நிலையம் முதல் மட்டக்களப்பு யாழ்ப்பாணம் மன்னார் வவுனியா வரையிலான தெருக்கள் வீதிகள் எங்கும் உள்ள பதாகைகள் சுவரொட்டிகள் யாவுமே மகிந்த ராஜபக்கவின் விளம்பரங்களாகவே இருந்தன. கிட்டத்தட்ட 90 சதவிகிதமானவை மகிந்தாவினுடையதாகவும் 10 சதவிகிகதமானவைகள் சரத்தினுடையதாகவும் இருந்தன. இவை தவிர இதர வேட்பாளர்களின் விளம்பரங்களோ அன்றி வேறெந்த அடையாளங்களோ காணப்படவில்லை. இந்த தேர்தல் பிரச்சாரங்கள் மிகவும் ஏற்றத்தாழ்வு கொண்டதாகவும் பாரபட்சம் நிறைந்ததாகவும் சமத்துவமற்ற பிரச்சாரமாகவும் இருந்தன. மகிந்த ராஜபக்ச பலமடங்கு அதிகமான பணம் செலவு செய்து இத்தேர்தலைச் சந்திக்கின்றார்.

பிரதான வேட்பாளர்கள் தவிர்ந்த மற்றைய வேட்பாளர்களில் சிவாஜிலிங்கம் விக்கிரமபாகு போன்றோரை மக்கள் அறிந்து கொண்டுள்ளனர் ஆனால் ஏனையோரை அறிந்திருக்கும் வாய்புக்கள் மிகவும் குறைவானதாகவே தென்படுகிறது. இலங்கையில் உள்ள ஊடகங்களின் செயற்பாடுகள் பற்றி ஜெயபாலன் குறிப்பிடுகையில் முழு அரசு சார்பு ஊடகங்களும் தமது நேரடி ஆதரவினை மகிந்தாவிற்கு வெளிப்படையாகவும் மற்றைய தேர்தல் வேட்பாளர்களை சிறிதும் கவனத்தில் கொள்ளாது இருப்பதையும் அவதானிக்கக் கூடியதாக உள்ளது. இவர்களிடம் பக்க சார்பு ஊடகமுறைமை உள்ளது. இது சமூகத்தின் ஜனநாயக தன்மையின் ஆரோக்கியத்தின் அளவுகோலாக இருப்பதை காணலாம்.

மட்டக்களப்பில் மகிந்தா ஆதரவு சுவரொட்டிகள் பெருமளவில் தமிழில் காணப்படும் அதேநேரம் கருணா பலத்த பாதுகாப்புடன் துண்டுப்பிரசுரங்களை விநியோகித்து சென்றதையும் நேரில் அவதானிக்கக் கூடியதாக இருந்தது.

அநுராதபுரத்தில் லக்மிக செய்தியாளரிடம் கருத்து கேட்டபோது இவர் மகிந்தா மீது மிகவும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். இந்த குடும்ப அரசு மாற்றப்பட வேண்டும், இதன் மூலமே இலங்கையில் மீண்டும் ஜனநாயக நிலைமைகளை வளர்க்கமுடியும் என்று கூறினார். அநுராதபுரத்தில் ஆட்டோ டிரைவர் ஒருவர் தான் ஜேவிபி ஆதரவாளன் என்றும் தமது கட்சியின்படி தான் சரத்தையே முழுமையாக ஆதரிப்பதாகவும் மகிந்தா சகோதரர்களால் இலங்கையில் ஜனநாயகத்திற்கு ஆபத்து ஏற்பட்டுள்தாகவும் தெரிவித்தார்.

தான் சரத்தையே ஆதரிப்பதாக கூறிய மட்டக்களப்பில் பணிபுரியும் டாக்டர், மட்டக்களப்பில் புத்திஜீவிகளும் சமூகத்தின் உயர் மட்டத்தினரும் சரத்தையே ஆதரிக்கின்றனர். ஆனால் கீழ்மட்டத்தில் உள்ள மக்களின் நிலைப்பாடுகள் என்ன என்பது பற்றி யாராலும் சரியாக கணிப்பீடு செய்ய முடியாதுள்ளது. ஆனால் இந்த வாக்குகளே யார் ஜனாதிபதி என்பதை தீர்மானிக்கும் என்றும் கூறினார்.

இந்த நிலையே இலங்கை எங்கும் உள்ளன. ஊடகங்கள் மேல்தட்டு வர்க்கத்தையே பிரதிபலிக்கின்றன. கீழ்மட்டத்து மக்களின் ஆதரவு நிலையில் உள்ள மாற்றங்களை சரியாக கண்டுகொள்ள முடியாது உள்ளதென ஜெயபாலன் குறிப்பிட்டார். மேலும் தேர்தல் பிரச்சாரங்களுக்கு முன்பே வட-கிழக்கு மக்களில் பெரும்பாலானோர் சரத்திற்கும் யாழ்ப்பாணத்தில் கணிசமாணேர் சிவாஜிலிங்கத்திற்கும் ஆதரவளிக்க முடிவு எடுத்துள்ளதாகவும் இதன் பின்னரே ரிஎன்ஏ தாமும் சரத்திற்கே ஆதரவளிக்க முடிவு கொள்ள வேண்டியிருந்தது என்ற அபிப்பிராயங்களும் பரவலாக உள்ளது. இதை சிலவேளை ரிஎன்ஏ யினர் தாம் கேட்டுக்கொண்டதன்படி மக்கள் சரத்திற்கு வாக்களித்துள்ளனர் என்று பின்னாளில் பிரச்சாரங்களை அவிழ்த்துவிடக்கூடும் எனவும் கருத்து தெரிவித்தனர்.

ஆனால் இலங்கையில் ஒரு ஜனாதிபதி வேட்பாளர் தெரிவில் அந்த ஜனாதிபதி தான் தமிழ் மக்களின் ஆதரவாளன் என்ற கருத்தை முன்வைத்து சிங்கள மக்களிடம் வாக்கு கேட்க முடியாத நிலையே உள்ளது. தமிழ் மக்கள் பெரும்பான்மையாக யாருக்கு வாக்களிக்கிறார்களோ அந்த வேட்பாளருக்கு சிங்கள மக்கள் பெருபான்மையினர் வாக்களிப்பதில்லை அவர் ஜனாதிபதியாக வந்ததுமில்லை எனவும் ஜெயபாலன் தன் கருத்தைத் தெரிவித்தார். இதன் காரணமாகவே தேர்தல் வேட்பாளர்கள் தமது தமிழ் ஆதரவினை மிகவும் கடுமையாகவே கையாளுகின்றனர்.

நீர்கொழும்பில் உள்ள மீனவ குடும்பங்களை சந்திக்கையில் அவர்களின் அபிப்பிராயப்படி இலங்கையில் நடைபெற்ற யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்தவர் மகிந்தாதான் என்றும் இலங்கையில் நடைபெறும் பல அபிவிருத்தி நடவடிக்கைகள் மகிந்த அரசினாலேயே செய்யப்பட்டதாகவும் தொடர்ந்து மகிந்தா ஆட்சிக்கு வருவதாலேயே இந்த அபிவிருத்தி தொடரும் எனவும் அபிவிருத்திப்பணங்களில் மோசடி என்ற குற்றச்சாட்டு வருவது தவிர்க்க முடியாதது ஆனால் சரத் ஆட்சிக்கு வந்தால் முழுமையாகவே நிதி மோசடிகளையே செய்வார் என்றும் கருத்து கொண்டுள்ளனர்.

மன்னார் இளைஞர் கருத்துக் கூறுகையில் இந்த இரண்டு வேட்பாளர்களுக்கும் தமிழர்கள் வாக்களிக்கக் கூடாது இவர்களே எமது மக்கள் மீது யுத்தத்தை நடாத்தியவர்கள் எமது மக்களை கொன்று குவித்தவர்கள் இவர்களுக்கு நாம் எப்படி வாக்களிக்க முடியும் என்று கருத்துக் கொண்டுள்ளார். அதே வேளை புலிகள் இறுதி யுத்தத்தின்போது தமிழ் மக்கள் மீது செய்த வன்முறையிலும் இவ்விளைஞன் மிகவும் ஆத்திரமடைந்துள்ளார். புலிகள் மக்களை பழிவாங்கியுள்ளனர் என்று கூறினார்.

சுதந்திர நடமாட்டம் பற்றி கருத்து கேட்டபோது அரசியல் நிலைமைகள் கட்சிகளின் நிலைப்பாடுகளையும் தாண்டி மக்களிடம் வேறான ஒரு போக்கு உள்ளது என்றும் இராணுவம் பொலீஸ் மக்களை சோதனையிடும் முறையில் பாரிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. இது மக்களிடம் பாரிய மாற்றங்களை உருவாக்கியுள்ளது என்றும் இரவு 12 மணிக்கும் சுதந்திரமாக போய்வரும் நிலைமைகள் உள்ளதாக கூறிய ஜெயபாலன் அதேவேளை இன்றுள்ள சமாதான சூழ்நிலையை வைத்துக்கொண்டு இலங்கையில் சமாதானம் வந்துவிட்டது என்று முடிவு எடுக்க முடியாதுள்ளது நாட்டில் முக்கியமாக தலைநகரில் இராணுவம் பொலீசார் மிகவும் உசார்நிலையிலேயே வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

தனது பிறப்பிடமான அநுராதபுரத்தில் தான் ஒருவிலாசத்தை அறிய முற்பட்டபோது 5 நிமிடத்தில் இரகசியப் பொலீசார் தம்மிடம் வந்து விசாரித்ததாகவும் பின்னர் சீருடைப்பொலிசார் வந்து விசாரித்ததாகவும் ஆனால் எந்த காரணத்திற்காகவும் முறைகேடாக நடாத்தப்படவில்லை என்றும் கூறினார்.

யாழ்ப்பாணத்தில் அரசியல் மாற்றங்களுக்கு புறம்பாக வட-கிழக்கு பிரதேசம் பின்தங்கிய நிலையிலும் தெற்பகுதி பாதிப்படையாத ஆனால் பாரிய முன்னேற்றமடையாத நிலையிலும் மன்னார் வன்னிப் பிரதேசங்கள் மிகவும் பின்தங்கிய நிலையிலும் இருக்கின்றது. கிளிநொச்சி மன்னார் பிரதேசங்களில் புலிகளின் கல்லறைகள், நினைவாலயங்கள் இருந்த இடம்தெரியாமல் அழிக்கப்பட்டுள்ளது. வன்னிமுகாம்களில் உள்ள பெரும்பான்மையான மக்கள் வெளியேறிவிட்டதை தான் அவதானித்ததையும் மீள்குடியேற்றப்பட்ட மக்கள் மிகவும் வசதிகள் அற்று அல்லலுறுவதாகவும் இந்த மீள்குடியேற்றம் பொறுப்பற்ற முறையில் நடாத்தப்பட்டுள்ளதாகவும் அடிப்டைவசதிகள் அற்றிருப்பதை அவதானித்ததாகவும் ஜெயபாலன் தெரிவித்தார்.

தான் சந்தித்த புலி ஆதரவாளர்கள் இன்றும் தமிழ் அரசியல் தலைமைகளையே குறை கூறுகின்றனர். தமிழ் தலைமைகள் தமிழர்களின் அரசியல் உரிமைகளில் அக்கறையற்று இருப்பதாகவும் அவர்கள் தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுக்கும் நடவடிக்கைகளில் இறங்கவேண்டும் என்றும் அவர்கள் எதிர்பார்ப்பதாகவும் ஜெயபாலன் தெரிவித்தார்.

ஜனாதிபதித் தேர்தலில் தீர்மான சக்தி சிறுபான்மையினத்தினரே. ஆனால், ஆறாவது ஜனாதிபதியைத் தீர்மானிக்கப்போவது…? – பீ.எம். புன்னியாமீன் –

pon-mahi.jpgஎதிர்வரும் 26ஆந் திகதி இலங்கையில் ஆறாவது ஜனாதிபதித் தேர்தல் நடைபெறுவதற்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தியடைந்துள்ளன. இலங்கையில் ஜனாதிபதித் தேர்தல் வரலாற்றினை நோக்குமிடத்து 1982ஆம் ஆண்டில் நடைபெற்ற முதலாவது ஜனாதிபதித் தேர்தலையடுத்து நாட்டில் சுமுகமான நிலையில் நடைபெறும் ஒரு தேர்தலாகவே இந்த ஜனாதிபதித் தேர்தலை குறிப்பிட முடியும்.

1988ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்ற வேளையில் வடக்கு கிழக்கு மாகாணங்களில் விடுதலைப் புலிகளின் பலத்த நெருக்கடிகள் காணப்பட்டிருந்தன. அதேநேரம், தென்னிலங்கையிலும் மக்கள் விடுதலை முன்னணியினரின் எதிர்ப்பு நடவடிக்கைகள் உச்ச நிலையையடைந்திருந்தன. மிகவும் பயங்கரமான ஒரு நிலையிலேயே இரண்டாவது ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் வாக்களித்தனர். 1994ஆம் ஆண்டு மூன்றாவது ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்ற காலகட்டத்திலும் விடுதலைப் புலிகளின் தாக்கங்கள் நாடளாவிய ரீதியில் வியாபித்தே காணப்பட்டிருந்தன. இத்தேர்தலில் போட்டியிட்ட பிரதம வேட்பாளர்களில் ஒருவரான காமினி திசாயநாயக்கா கொலை செய்யப்பட்டார். அச்சமிகு சூழ்நிலையில் இத்தேர்தல் நடைபெற்றது. இதேபோல 1999ஆம் ஆண்டு நான்காவது ஜனாதிபதித் தேர்தலின்போதும் 2004ஆம் ஆண்டு நடைபெற்ற ஐந்தாவது ஜனாதிபதித் தேர்தலின்போதும் விடுதலைப்புலிகளின் தாக்கங்கள் அதிகரித்துக் காணப்பட்டிருந்தன. இத்தேர்தல்களில் ஒப்பீட்டு ரீதியாக வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வாக்களிப்பு வீதம் வெகுவாகக் குறைந்திருந்தன.

ஆறாவது ஜனாதிபதித் தேர்தலின் நடைபெறும் இக்காலகட்டமானது நாட்டில் மிகவும் ஒரு சுமுகமான நிலைமை நிலவும் ஒரு காலகட்டமாகும். 2009ஆம் ஆண்டு மே 18ஆம் திகதி விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டதன் பின்பு விடுதலைப்புலிகளின் தாக்குதல்கள் பூச்சிய நிலையை அடைந்தன. அதேநேரம், தென்பகுதியில் விடுதலைப்புலிகளினால் நடத்தப்பட்டு வந்ததாகக் கூறப்படும் குண்டுத்தாக்குதல்கள் முற்றுமுழுதாக இல்லாமல் போய்விட்டது. எனவே, வடக்கு கிழக்கு மாகாணங்களிலும் சரி, இலங்கையின் தென்பகுதியிலும் சரி தேர்தல் வாக்களிப்பு தொடர்பான எவ்வித நெருக்கடிகளுமின்றி இயல்பு நிலையில் நடைபெறும் ஒரு தேர்தலாக இத்தேர்தலை இனங்காட்ட முடியும். அரசியல் அவதானிகளின் கருத்துப்படி இத்தேர்தலில் 72க்கும் 78க்குமிடைப்பட்ட வீதத்தினர் வாக்களிப்பர் என எதிர்பார்க்கப்படுகின்றது.

நாடு இயல்பு நிலையயடைந்தாலும்கூட, தேர்தலில் போட்டியிடும் பிரதான அபேட்சகர்களின் ஆதரவாளர்களின் தேர்தல் அடாவடித்தனங்கள் அதிகரித்து வருவதை இத்தேர்தலில் அவதானிக்க முடிகின்றது. ஐக்கிய நாடுகள் சபைகூட இலங்கைத் தேர்தல் வன்முறைகள் குறித்து கவலை வெளியிட்டிருந்தது. ஜனாதிபதித் தேர்தல் வரலாற்றில் 1988ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலே தேர்தல் வன்முறைகள் மிகைத்த ஒரு தேர்தலாக இனங்காட்டப்பட்டது. அத்தேர்தலில் நியமனப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்ட தினத்தையடுத்து தேர்தல் தினம் வரை 500க்கும் மேற்பட்டோர் கொலை செய்யப்பட்டதாக பொலிஸ் அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இத்தேர்தலின் போது இதுவரை 4 கொலைகள் இடம்பெற்று விட்டன.

ஆறாவது ஜனாதிபதித் தேர்தலில் 22 வேட்பாளர்கள் களமிறங்கியிருந்தாலும்கூட, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுக்கும், முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் பொன்சேகாவுக்குமிடையிலான போட்டியே முதன்மைப்படுத்தப்பட்டு உள்ளது.

2009ஆம் ஆண்டு விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்ட பின்பு ஜனாதிபதி ஆதரவு நிலை மிகவும் அதிகரித்தே காணப்பட்டது. யுத்த முடிவின் பின்பு நடைபெற்ற மாகாண சபைத் தேர்தல் முடிவுகள் இதனை நன்கு வெளிப்படுத்தின. இத்தகைய சாதகமான சூழ்நிலையைப் பயன்படுத்தியே தனது பதவிக்காலம் முடிவதற்கு இரண்டாண்டுகளுக்கு முன்பாகவே அடுத்த ஜனாதிபதித் தேர்தலுக்கான அறிவித்தலை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ விடுத்தார். இவரின் பிரதான எதிர்பார்க்கையாக ஜனாதிபதித் தேர்தலில் தான் அமோக வெற்றியீட்டுவதுடன்,  அதைத் தொடர்ந்து வரக்கூடிய பாராளுமன்றத் தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மைப் பலத்தைப் பெறுவது இருந்திருக்கலாம். இவ்வாண்டு ஏப்ரல் மாதத்தில் பாராளுமன்ற அங்கத்தவர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான பொதுத் தேர்தல் நடைபெற இருந்த போதிலும்கூட, பாராளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்டதன் நோக்கம் மேற்குறிப்பிட்டவாறே அமைந்திருக்கலாம். ஆனாலும் யுத்த முடிவடைந்த நிலையில் காணப்பட்ட யுத்த வெற்றி மனோநிலை மக்கள் மத்தியில் படிப்படியாக குறைவடையலாயிற்று. குறிப்பாக இலங்கையில் மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகள் யுத்தத்தால் மூடிமறைக்கப் பட்டிருந்தாலும்கூட,  யுத்த முடிவினையடுத்து அப்பிரச்சினைகளும் மெல்ல மெல்ல தலை தூக்க ஆரம்பித்தன.

2009 நவம்பர் மாதமளவில் வடக்கு யுத்த வெற்றிற்கு இராணுவ தலைமை வழங்கிய ஜெனரல் பொன்சேகா ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளராக போட்டியிடுவார் என்ற நிலை தெரிய வந்ததும் யுத்த வெற்றிகள் பகிரப்படுவதைப் போல மக்கள் மத்தியில் ஒரு சலன நிலை ஏற்பட்டது. யுத்த வெற்றிற்கு தனித்துவமான உரிமையாளராகக் காணப்பட்ட மஹிந்த ராஜபக்ஸ: சரத் பொன்சேகா களம் இறக்கப்பட்டதும் அவரின் தனித்துவ நிலை மக்கள் மத்தியில் பிளவடைந்து பரவலடையலாயிற்று. எனவே,  ஜனாதிபதித் தேர்தலுக்கான நியமனப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டதன் பின்னரே அடுத்த ஜனாதிபதி மஹிந்தவா? பொன்சேகாவா? என்ற நிலை ஐம்பதுக்கு ஐம்பது என்ற நிலையில் தளம்பலடையக்கூடிய ஒரு சூழ்நிலை உருவாயிற்று.

இலங்கை சுதந்திரமடைந்தது முதல் நடைபெற்ற அனைத்துத் தேர்தல்களிலும், ஐக்கிய தேசியக்கட்சி தனித்துவ சக்தியாக யானை சின்னத்தின் கீழ் அனைத்துத் தேர்தல்களையும் எதிர்கொண்டே வந்துள்ளது. ஆனால்,  தனது கட்சியின் தற்போதைய தலைமைத்துவத்தில் நம்பிக்கையிழந்த நிலையிலேயே பொதுவேட்பாளர் என்ற அடிப்படையில் சரத் பொன்சேக்காவை ஜனாதிபதித் தேர்தலில் முன்னிறுத்தியதுடன்,  இலங்கையில் நடைபெற்ற பிரதான தேர்தலொன்றில் முதல் தடவையாக தனது கட்சி சின்னத்தையும் விட்டுக் கொடுத்ததும் குறிப்பிடத்தக்கதாகும். இந்நிலையில் ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் எதிர்பார்க்கப்படும் பிரதான எதிர்பார்க்கையாக இருப்பது ஜனாதிபதித் தேர்தலில் சரத் பொன்சேக்கா வெற்றியீட்டினால் நிறைவேற்றதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை 6 மாதங்களுக்குள் நீக்கப்பட்டு பாராளுமன்ற ஆட்சிமுறை ஏற்படுத்தப்படுமெனவும் பாராளுமன்ற ஆட்சிமுறையின் கீழ் ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில்விக்கிரமசிங்க நிறைவேற்றதிகாரம் கொண்ட பிரதமராக செயலாற்றக்கூடிய நிலை உருவாகும் என்பதுமாகும்.

ஆனால்,  ஜனாதிபதித் தேர்தல் காலங்களில் தான் பதவிக்கு வந்தவுடன் ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழிப்பேன் என்று வாக்குறுதி வழங்குவது இது முதற் தடவையல்ல. 1994ஆம் ஆண்டு தேர்தலில் அப்போதைய பொதுசன ஐக்கிய முன்னணி வேட்பாளர் சந்திரிக்கா குமாரதுங்க மிகவும் அழுத்தமான முறையில் தான் பதவிக்கு வந்தவுடன் நிறைவேற்றதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக பல இடங்களில் பல வாக்குறுதிகளை வழங்கினார். இந்த வாக்குறுதிகளின் அடிப்படையில் மக்கள் விடுதலை முன்னணி சார்பில் போட்டியிட்ட நிஹால் கலபதி போட்டியிலிருந்து விலகி சந்திரிக்காவுக்கு ஆதரவளித்தமையும் குறிப்பிடத்தக்கது. அதேபோல மஹிந்த ராஜபக்ஸவும் ஜனாதிபதி ஆட்சிமுறை நீக்கப்படுமென்று வாக்குறுதிகளை 2005ஆம் ஆண்டு அளித்திருந்தார். அச்சந்தர்ப்பத்திலும் மக்கள் விடுதலை முன்னணி ஜனாதிபதிக்கு பூரண ஆதரவை வழங்கியது.

ஆனால், அதிகாரத்துக்கு வந்த பிறகு எந்த ஜனாதிபதியும் ஜனாதிபதி ஆட்சி முறையை இல்லாதொழிப்பதற்கான எந்த நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை. இப்படிப்பட்ட நிலையில் பொன்சேக்கா இவ்வாக்குறுதியை எவ்வளவு தூரம் நிறைவேற்றுவார் என்பது இலங்கையில் படித்த மக்கள் மத்தியில் ஒரு கேள்வியை தோற்றுவித்துள்ளது. மறுபுறமாக இவர் இலங்கையில் இராணுவத் தளபதியாக இருந்தவர். ஆகவே அதிகாரம் கைக்குக் வந்தவுடன் அதிகாரத்தை எடுத்த எடுப்பிலே கொடுத்துவிடுவாரா? ஏன்பதும் சிந்திக்கக்கூடிய ஒரு விடயமே. மறுபுறமாக இவர் ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்படுமிடத்து பிரதம மந்திரியாக ரணில்விக்கிரமசிங்க அல்ல முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என். சில்வா ஏதாவொரு வகையில் கொண்டு வரப்படுவார் என்ற ஒரு ஊகமும் பரவலாக இடம்பெற்று வருகின்றது. ஜனாதிபதி ஆட்சிமுறையை இல்லாதொழிப்பதாயின் அரசியலமைப்பிலே பாராளுமன்றத்தின் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்துடன் மாற்றியமைக்க வேண்டும். ஒரு பிரதான கட்சியே இல்லாத நிலையில் பொன்சேகாவால் இது சாத்தியப்படுமா?…. எவ்வாறாயினும்,  இத்தேர்தலில் சரத் பொன்சேக்கா வெற்றிபெற்றாலும், மஹிந்த ராஜபக்ஸ வெற்றிபெற்றாலும் உண்மையிலேயே தோல்வியடைப் போவது ஐக்கிய தேசியக் கட்சியும், ரணிலுமே என்பது மக்கள் மத்தியில் பரவலான கருத்தாக நிலவுகின்றது.

மறுபுறமாக பொன்சேக்காவை ஜனாதிபதி பொது வேட்பாளராகக் கொண்டு வருவதில் மக்கள் விடுதலை முன்னணியும்,  ஐக்கிய தேசியக்கட்சியுடன் இணைந்த மங்கள சமரவீரவும் பிரதான பாகம் ஏற்றனர். இந்நிலையில் பொது வேட்பாளர் பொன்சேகா ஐக்கிய தேசியக்கட்சியினதும், மக்கள் விடுதலை முன்னணியினதும் வேட்பாளராகவே மக்கள் முன் காட்சியளித்தார். சரத் பொன்சேகா பொது வேட்பாளராக இருந்த போதிலும்கூட, நியமனப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டதன் பின்னர் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் வேட்பாளராக மஹிந்தவும், ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் மக்கள் விடுதலை முன்னணியின் இணைவேட்பாளராக பொன்சேகாவும் என்ற நிலையே வலுவடைந்தது.

1956ஆம் ஆண்டின் பின்பு இலங்கை அரசியலில் தேர்தல்களை விரிவாக ஆராயுமிடத்து எந்த சந்தரப்பத்திலும் 30 தொடக்கம் 32 சதவீதத்தினர் ஐக்கிய தேசியக்கட்சியின் ஆதரவாளர்களாகவும், 20 தொடக்கம் 22 சதவீதத்தினர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆதரவாளர்ளாகவுமே இருந்துள்ளனர். இவ்விரு கட்சிகளுக்கும் நிலையாக வாக்குகளாகக் கூட இவற்றைக் கொள்ளலாம். 1980களின் இறுதியில் மக்கள் விடுதலை முன்னணித் தலைவர் ரொஹன விஜயவீர கொல்லப்பட்டதுடன்,  படிப்படியாக ஜே.வி.பி. ஜனநாயக நீரோட்டத்தில் மீண்டும் கலந்தது. பொதுவாக 4 வீதமான வாக்குகள் ஜே.வி.பி.க்கு உள்ளதென கருதப்பட்ட போதிலும்கூட,  தற்போதைய நிலையில் ஜே.வி.பி.க்கு சுமார் 2.5வீதமான வாக்குகள் நிலையான வாக்குகளாக இருக்கலாம் என கணிக்கப்படுகின்றது. இத்தகைய நிலையில் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதியும், பாராளுமன்றத் தேர்தல்களில் பாராளுமன்ற உறுப்பினர்களையும் நிர்ணயிக்கும் சக்தியாக 40க்கும் 45 வீதத்துக்குமிடைப்பட்ட மிதக்கும் வாக்காளர்களாகவே உள்ளனர். எனவே,  6வது ஜனாதிபதித் தேர்தலையும் இந்த மிதக்கும் வாக்காளர்களே தீர்மானிக்கப் போகின்றார்கள்.

தேர்தலுக்கு முன்பு ஜனாதிபதித் தேர்தல் களத்தில் நிகழ்ந்து வரும் அதிரடி நிகழ்வுகள் நிலையில் மிதக்கும் வாக்காளர்களையும் தளம்பல் நிலையை  ஏற்படுத்தியது. மஹிந்தவினதும், பொன்சோக்காவினதும் வெற்றி நிலையின் உறுதிப்பாடு நாளுக்குநாள் தளம்பலடைந்து வந்ததையே அவதானிக்க முடிந்தது.

ஆறாவது ஜனாதிபதித் தேர்தலில் யுத்தவெற்றியே பலவகைகளிலும் முன்னெடுக்கப்பட்டு வருவதை அவதானிக்கலாம். மஹிந்த ராஜபக்ஸவின் பிரசாரத்தில் பிரதான இடத்தைப் பிடித்த கருப்பொருளாக விளங்கியதே தான் 2005ஆம் ஆண்டு பதவிக்கு வரும்போது யுத்தத்தை முடித்துத் தர வேண்டுமென்றே மக்கள் தனக்கு ஆணை தந்தனர் எனவும், அதற்கமைய தனது பதவிக்காலத்தில் உலகிலே பயங்கரவாத இயக்கங்களில் முதலாமிடத்தை வகித்த விடுதலைப் புலிகளை ஒழித்து யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்து நாட்டுக்கு அமைதியை ஏற்படுத்தியதை தனது பதவிக்கால சாதனையாகவே கூறிவந்தார். மறுபுறமாக சரத் பொன்சேக்கா இராணுவத் தளபதி என்ற வகையில் மாவிலாறு பிரதேசத்தில் விடுதலைப் புலிகளை அடக்க மேற்கொண்ட நடவடிக்கையை இறுதிவரை தொடர்ந்து வெற்றிக்கு தானே காரணம் என்பதை கூறிவந்தார்.

ஆறாவது ஜனாதிபதித் தேர்தலில் யார் வெற்றி பெறுவார்கள் என்பதை எதிர்வு கூறுவது மிகவும் கடினமான ஒரு விடயம். தேர்தல் நிலவரங்கள் நாளுக்குநாள் மாறிக் கொண்டு வருவதே இதற்குப் பிரதான காரணம். இருப்பினும்,  ஆய்வு ரீதியாக நோக்குமிடத்து இலங்கையில் சிறுபான்மை சமூகத்தினர் செறிவாக வாழக்கூடிய பிரதேசங்களிலும்,  நகர்சார் பிரதேசங்களினதும் ஆதரவு பொதுவேட்பாளர் சரத் பொன்சேக்காவுக்கு இருப்பதையும், சிங்கள மக்கள் செறிவாக வாழக்கூடிய பிரதேசங்களில் குறிப்பாக கிராமப்புற மக்களின் ஆதரவு மஹிந்த ராஜபக்ஸவுக்கு சார்பாக இருப்பதையும் இந்நிலையில் அவதானிக்க முடிகின்றது.

இலங்கையில் ஜனாதிபதித் தேர்தல் ஒரு பிரதான தேர்தலாகும். உள்ளுராட்சித் தேர்தல்கள், மாகாணசபைத் தேர்தல்கள், பாராளுமன்றத் தேர்தல்கள்  என்பன குறிப்பிட்ட பிரதேசத்தில் போட்டியிடக்கூடிய வேட்பாளர்களின் செல்வாக்கு நிலைமைகளைக் கருத்திற் கொண்டு தீர்மானிக்கக் கூடியதாக இருக்கும். ஆனால்,  ஜனாதிபதித் தேர்தலை எடுத்துநோக்குமிடத்து போட்டியிடக் கூடிய வேட்பாளர்கள் முழு நாட்டுக்குமுரிய வேட்பாளர். நாடளவில் குறித்த வேட்பாளருக்கு சில பிரதேசங்களில் செல்வாக்கு அதிகரித்திருக்கும். சில பிரதேசங்களில் செல்வாக்குக் குறைவாகக் காணப்பட்டிருக்கும். இலங்கையிலுள்ள 22 மாவட்டங்களிலும் வைத்து உத்தேச ரீதியிலான தீர்மானங்களை எடுப்பதும் கணிப்பீட்டுக் கருத்துக்களைப் பெறுவதும் கடினமான காரியம். அதேநேரம்,  சகல ஆட்சி அதிகாரங்களைத் தீர்மானிக்கக் கூடிய சக்தி இந்த ஜனாதிபதித் தேர்தலினாலேயே நிர்ணயிக்கப்படுகின்றது. இத்தேர்தலில் வெற்றிபெறக்கூடிய அபேட்சகர் சார்பான கட்சி நிச்சயமாக எதிர்வரும் மாதங்களில் நடைபெறக்கூடிய பாராளுமன்ற தேர்தல்களில்  நிச்சயமாக வெற்றியீட்டும். இதில் சந்தேமில்லை.

இலங்கையில் நடைபெற்ற 5வது ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஸவுக்கும், ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் கடுமையான போட்டி நிலவியது. 2005ஆம் ஆண்டு இத்தேர்தல் நடைபெற்ற காலகட்டங்களில் ரணில் விக்கிரமசிங்க வெற்றிபெறுவார் என்ற பரவலான நிலையே காணப்பட்டது. தேசிய சர்வதேச ஊடகங்கள்கூட அன்று ரணில் விக்கிரமசிங்கவின் வெற்றியை முன்கூட்டியே உறுதிப்படுத்தி  கருத்துக்களை வெளியிட்டன. 2005ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் நடைபெறும் சூழ்நிலையில் இலங்கையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை முதன்மைப்படுத்திய பொதுசன ஐக்கிய முன்னணி ஆட்சிக்கு வந்து சுமார் 11 ஆண்டுகளாகிய நிலையில் அக்கட்சியின் போக்கு மீது மக்களுக்கு ஒரு வெறுப்பு நிலை ஏற்பட்டிருந்ததும் மாறாக அச்சூழ்நிலையில் மக்கள் ஒரு ஆட்சி மாற்றத்தை விரும்பியதும் இந்நிலைக்குக் காரணமாகும்.  2005 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் இலங்கையில் சிறுபான்மையின சார்புக் கட்சிகள் ரணில் விக்கிரமசிங்கவுக்கு பகிரங்க ஆதரவினை வெளிப்படுத்தின. ஆனால், அத்தேர்தலின்போது மக்கள் விடுதலை முன்னணியும், இடதுசாரி கட்சிகளும் மஹிந்த ராஜபக்ஸவுக்கு ஆதரவளித்தன.

தமிழீழ விடுதலைப் புலிகளின் செல்வாக்கு நிலை மிகைத்திருந்த காலகட்டமாகவே இக்காலகட்டம் விளங்கிற்று. 2002ஆம் ஆண்டு பிரதம மந்திரியாக ரணில்விக்கிரமசிங்க பதவியேற்றபோது விடுதலைப் புலிகளுக்கும்,  ரணில் அரசாங்கத்துக்குமிடையில் ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தத்தின் விளைவாக இலங்கையில் வன்னிப் பிரதேசம் உட்பட வடக்கு கிழக்கு பிரதேசங்களில் விடுதலைப் புலிகளின் கை ஓங்கிய நிலையே காணப்பட்டது. விடுதலைப் புலிகளுக்கும் ரணிலுக்குமிடையில் ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தத்தின் காரணமாக விடுதலைப் புலிகளின் ஆதரவு ரணிலுக்குக் கிடைக்குமென்ற நிலைப்பாடு தென்பகுதியில் உறுதியாக நிலவியது.

2005ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளை ஒப்புநோக்குமிடத்து சிறுபான்மை இனத்தினர் செறிவாக வாழக்கூடிய மாகாணங்களின் ஒன்றான கிழக்கு மாகாணத்தில் சகல மாவட்டங்களிலும் ரணில்விக்கிரமசிங்கவே அமோக வெற்றியீட்டினார். மட்டக்களப்பு மாவட்டத்தில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு 79.51 வீத வாக்குகள் கிடைத்தன.  மஹிந்த ராஜபக்ஸவினால் 18.87 வீத வாக்குகளையே பெறமுடிந்தது. அதேபோல திகாமடுல்லை மாவட்டத்தில் 55.81 வீத வாக்குகளையும், திருக்கோணமலை மாவட்டத்தில் 61.33 வீத வாக்குகளையும் பெற்று ரணில் விக்கிரமசிங்க வெற்றியீட்டினார். வட மாகாணத்தில் வாக்களிப்பில் கலந்து கொள்வதற்கு விடுதலைப் புலிகள் கடைசிநேரத்தில் வாக்காளர்களுக்கு தடைவிதித்தனர். இத்தடையே ரணிலின் தோல்வியை உறுதிப்படுத்திய கருவியாக அமைந்தது. வடமாகாணத்தில் வன்னி மாவட்டத்தில் 77.89வீத வாக்குகளையும், யாழ்ப்பாண மாவட்டத்தில் 70.20வீத வாக்குகளையும் ரணில்விக்கிரமசிங்க பெற்றபோதிலும்கூட, இம்மாவட்டங்களில் வாக்களிப்போர் வீதம் இலங்கைத் தேர்தல் வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத அளவு குறைவாக இருந்தது. வன்னி மாவட்டத்தில் மொத்த வாக்காளர்களுள் 34.30வீத வாக்குகளும், யாழ் மாவட்டத்தில் 1.21வீத வாக்குகளும் மாத்திரமே பதிவாகின. யாழ், வன்னி மாவட்டங்களில் வாக்காளர்களுக்கு திறந்த அடிப்படையில் வாக்களிக்க வாய்ப்பளிக்கப்பட்டிருப்பின் அந்த வாக்குகளில் பெரும்பாலான வாக்குகள் ரணிலுக்கே சென்றிருக்க முடியும் என எதிர்பார்க்க முடியும்.

இதேபோல மலையகத்தில் நுவரெலியா தேர்தல் மாவட்டத்தில் ரணில் விக்கிரமசிங்க அதிகூடிய பெரும்பான்மை வாக்குகளைப் பெற்றார். நுவரெலியா மாவட்டத்தில் ரணில்விக்கிரமசிங்க பெற்ற வாக்குகள் 250,428 ஆகும். (70.37வீதமாகும்) இங்கு மஹிந்த ராஜபக்ஸவால் 99, 550 வாக்குகளையே பெற முடிந்தது. இது 27.97 வீதமாகும்.) இதேபோல மலையகப் பகுதியில் பதுளை மாவட்டத்திலும் ரணில் விக்கிரமசிங்கவே வெற்றியீட்டியிருந்தார். மேலும், கண்டி மாவட்டம், மாத்தளை மாவட்டம் ஆகியவற்றிலும் நகர்சார் பிரதேசமான கொழும்பு மாவட்டத்திலும் ரணிலால் வெற்றிபெற முடிந்தது.

கிட்டத்தட்ட மக்களின் மனோநிலைகளையும், மக்களின் எழுச்சிகளையும் பார்க்கும்போது மேற்குறிப்பிட்ட மாவட்டங்களில் இந்தத் தேர்தலில் சரத் பொன்சேக்காவுக்கு உறுதியான ஆதரவு நிலை காணப்படுகின்றது. ஆனாலும்,  2005ஆம் ஆண்டில் ரணில் விக்கிரமசிங்க வெற்றியீட்டிய நுவரெலியா,  பதுளை ஆகிய மாவட்டங்களில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் நேரடியாகத் தேர்தல் பிரசாரங்களில் ஈடுபட்டு வருவதினாலும் கிழக்கு மாகாணத்தில் கடந்த தேர்தலைவிட இத்தேர்தலில் மஹிந்தவுக்கு ஆதரவான பிரசாரங்கள் திட்டமிட்ட அடிப்படையில் முன்னெடுக்கப் படுவதினாலும் கடந்த தேர்தலைவிட இத்தேர்தலில் ஐக்கிய தேசிய முன்னணிக்கு வாக்குவீதம் குறைவடையலாம் என எதிர்பார்க்கலாம். 23 ஆம் திகதி செப்டம்பர் மாதம் 2008 இல் கனடாவின் “நெசனல் போஸ்ட்” இதழுக்கு சரத் பொன்சேகா வழங்கிய பேட்டியில் “சிறுபான்மையினராக இருக்கின்றோம் என்ற காரணத்துக்காக மித மிஞ்சிய விடயங்களுக்கு அவர்கள் கோரிக்கை விடுக்கக் கூடாது” என்று தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். “இந்த நாடு சிங்களவர்களுக்கு மட்டுமே உரியது என்று நான் உறுதியாக நம்புகின்றேன். சிறுபான்மையினர் இங்கு விருந்தாளிகள் மட்டுமே” என்று அவர் ஏற்கனவே தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்துக்கள் கடைசி நேரத்தில் சிறுபான்மை மக்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்தடுத்தியுள்ளது என்பது பல அவதானிகளின் கருத்தாக உள்ளது. 

அரசாங்க ஊடகங்கள் தவிர, பெரும்பாலான தமிழ் ஊடகங்கள் பொன்சேகா சார்பு நிலையை எடுத்திருப்பதையும் சர்வதேச ஊடகங்கள் மஹிந்தவுக்கு எதிரான முறையில் பொன்சேகாவுக்கு ஆதரவை வழங்குவதையும் வைத்து நோக்குமிடத்து பொன்சேகாவின் வெற்றி உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் இருப்பதாகவே தோன்றியது. 2005ஆம் ஆண்டிலும் ரணிலின் வெற்றியும் இதேபோல காணப்பட்டது. ஆனால் தற்போதைய நிலையை நோக்குமிடத்து,  சிறுபான்மை சமுகத்தினரின் வாக்குகள் அரைவாசிக்கு அரைவாசி இரு பிரதான வேட்பாளர்களுக்கும் பிரிந்து போகலாம் என கருதப்படுகின்றது. அவ்வாறு ஏற்படுமிடத்து ஜனாதிபதித் தேர்தலில் தீர்மான சக்தி சிறுபாண்மை இனத்தவர் வாக்கு என்ற நிலையில் மாற்றங்கள் ஏற்படலாம்.

தேர்தலுக்கு முந்திய ஒரு வாரத்தை அவதானிக்கும்போது இலங்கையில் சிங்களக் கிராமப்புறங்களில் மஹிந்த ராஜபக்ஸ ஆதரவு நிலையில் முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளதை அவதானிக்க முடிகின்றது. தமிழ் தேசியக் கூட்டணியினர் பொது வேட்பாளர் சரத் பொன்சேகாவுக்கு ஆதரவு வழங்க முன்வந்துள்ள நிலை கிராமப்புற சிங்கள மக்கள் மத்தியில் ஒரு ஐயப்பாட்டையே உருவாக்கியுள்ளது. தமிழ் தேசியக் கூட்டணியினர் யுத்த காலத்தில் கடைசி நிமிடம் வரை விடுதலைப் புலிகளின் நிகழ்ச்சித் திட்டத்திற்கமையவே செயற்பட்டார்கள். இந்நிலையில் விடுதலைப் புலிகளின் தோல்வியையடுத்து சில சர்வதேச புலம்பெயர்ந்த தமிழர்களால் முன்னெடுத்துச் செல்லப்படும் நாடுகடந்த தமிழீழத்துக்கான வாக்கெடுப்புகளும் வட்டுக்கோட்டைப் பிரகடனத்துக்கான வாக்கெடுப்புகளும் சிங்கள மக்கள் மத்தியில் விடுதலைப் புலிகள் மீண்டும் தலைதூக்கி விடுமோ என்ற ஒரு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஜனாதிபதித் தேர்தல் சூடுபிடித்த நிலையில் கடைசிநேரத்தில் இரா. சம்பந்தன் பிரதம வேட்பாளரான சரத் பொன்சேகாவுடனும் மஹிந்த ராஜபக்ஸவுடனும் பேச்சுவார்த்தைகளை நடாத்தினார்கள். அப் பேச்சுவார்த்தைகளின்போது பொன்சேகாவின் பக்கத்திலிருந்து தமக்கு சாதகமான நிலை கிடைத்ததினால் பொன்சேகாவை ஆதரிப்பதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு அறிவித்தல் விடுத்தது. இச்சந்தர்ப்பத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் துரைசிங்கம் இலங்கையில் தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய பேட்டியில் சரத் பொன்சேக்கா பதவிக்கு வருமிடத்து உயர் பாதுகாப்பு வலயம் நீக்கப்படுமெனவும், கைதிகளாக்கப்பட்ட விடுதலைப் புலிகள் விடுவிக்கப்படுவார்கள் எனவும், வடக்கு கிழக்கு மீண்டும் இணைக்கப்படும் எனவும் இதன் மூலம் சுயாட்சி,  சுயநிர்ணய உரிமைக்கான வழி திறக்கப்படுமெனவும் தெரிவித்தார். மேற் குறிப்பிட்ட விடயங்கள் தொடர்பில் சரத் பொன்சேக்கா கையொப்பமிட்டு,  ஒப்பந்தத்துக்கு இணங்கியதாகவும் தெரிவிக்கப்பட்டது. இக்கருத்து தமிழ் வாக்காளர்களைக் கவர்வதற்காகக் கூறப்பட்டாலும்கூட,  கிராமம்சார் சிங்கள வாக்காளர்களை வெகுவாகப் பாதித்த ஒரு கூற்றாகவே இருக்கின்றது. அதேநேரத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தனது தேர்தல் பிரசாரங்களின் போது சம்பந்தன் தன்னுடன் பேச்சுவார்த்தைகளை நடத்திய நேரத்தில் உயர் பாதுகாப்பு வலயம் நீக்கப்பட வேண்டும்,  விடுதலைப் புலிக் கைதிகள் விடுவிக்கப்படவேண்டும், வடக்கு கிழக்கு இணைக்கப்பட வேண்டும்,  வடக்கிலுள்ள இராணுவ முகாம்கள் நீக்கப்பட வேண்டுமென்ற கோரிக்கையை முன்வைத்ததாகவும் அக்கோரிக்கைகளை தான் தேசத்தின் நலன்கருதி தான் நிராகரித்ததாகவும் தேர்தல் என்பதைவிட தனக்கு நாடு தான் முக்கியம் என பகிரங்கமாக அறிவித்தார். இக்கருத்து ஊடகங்களில் முக்கியத்துவப் படுத்தப்பட்டன.

இந்நிலையில் சிங்கள மக்களை பாதித்த இக்கருத்தானது மஹிந்தவின் ஆதரவு நிலையை சிங்கள மக்கள் மத்தியில் மேலும் உறுதிப்படுத்துவதாகவே காணப்படுகின்றது. தேர்தலுக்கு முந்திய வாரங்களில் தேர்தல் தொகுதி அமைப்பாளர்கள் மூலமாக அவர்களின் ஏற்பாட்டின் கீழ் ஒவ்வொரு சிங்களக் கிராமங்களிலும் “வீட்டுக் கென்வசிங்” மூலம் இக்கருத்துக்கள் வாக்காளர்கள் மத்தியில் தனித்தனியாக விதைக்கப்பட்டன. இதனை மஹிந்த சார்பு தேர்தல் பிரசார வியூகங்களில் ஒன்றாகவும் கொள்ளலாம். மிகவும் திட்டமிடப்பட்ட முறையில் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட இப்பிரசார வியூகம் மிதக்கும் வாக்குகளிலும் தாக்கங்களை உருவாக்கியிருப்பதை அவதானிக்க முடிகின்றது. மறுபுறமாக சரத் பொன்சேக்கா ஜனாதிபதி வேட்பாளராக நியமனப் பத்திரம் தாக்கல் செய்த பின்பு யுத்த நிலையை காட்டிக் கொடுத்தமைக்கான குற்றச்சாட்டும், அதைத் தொடர்ந்து அவரின் ஆயுதக் கொள்வனவு ஊழல் சம்பந்தமான குற்றச்சாட்டும் இத்தகைய தேர்தல் பிரசாரங்களில் மக்களுக்கு தெளிவுபடுத்தப் பட்டதாகவும் தெரியவருகின்றது.

இத்தகைய தேர்தல் உத்திகள் சிங்களப் பிரதேசங்களில் பொன்சேக்காவின் ஆதரவு நிலையை கடைசிநேரத்தில் சரியச் செய்துள்ளன. ஆட்சி மாற்றம் ஒன்றை வாக்காளர்கள் எதிர்பார்க்கின்றார்கள் என்பது உண்மை. அதேநேரம்,  தற்போது இலங்கையில் நிலவும் அமைதியான நிலைமை தொடர வேண்டும் என்பதையும் விரும்புகின்றார்கள் என்பதும் உண்மை. இப்படிப்பட்ட சூழ்நிலையில் பொன்சேகா மீண்டும் பதவிக்கு வரும்போது விடுதலைப் புலிகள் வளர்க்கப்படலாம் என்ற ஒரு ஐயப்பாடு சிங்கள வாக்காளர்கள் மத்தியில் ஆழமாக விதைக்கப்பட்டுள்ளமையினால் இறுதி நேரத்தில் மஹிந்த ராஜபக்ஸ சிறிய வாக்கு வீதத்தில் வெற்றியீட்டலாம் என்ற நிலை தற்போது வலுவடைந்து வருகின்றது. அது மாத்திமன்றி,  இந்த நிலைமை தொடர்பான பிரசாரங்கள் மிக வேகமாக வாக்காளர்கள் முன் எடுத்துச் செல்லவும் படுகின்றன.

எவ்வாறாயினும் தேர்தலுக்கு இன்னும் இரு தினங்களே உள்ளன. சரத் பொன்சேக்கா வெற்றியீட்டினாலும்,  மஹிந்த ராஜபக்ஸ வெற்றியீட்டினாலும் அவர்கள் இருவரும் தனித்தனியாக எதிர்பார்ப்பதைப் போன்று கூடிய பெரும்பான்மை வாக்குகளைப் பெற்று வெற்றியீட்ட முடியாது என்பது மாத்திரமே உண்மை.