தேசத் துரோகத்திற்காக உடனடியான இராணுவ நீதிமன்ற விசாரணையை முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா எதிர்கொள்வாரெனவும் அவரை ஐந்து வருடங்களுக்கு சிறை வைத்திருக்க முடியுமெனவும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதாபய ராஜபக்ஷ கூறியுள்ளார். நேற்று வியாழக்கிழமை வெளியிடப்பட்டிருக்கும் பேட்டியொன்றிலேயே கோதாபய ராஜபக்ஷ இதனைத் தெரிவித்திருக்கிறார்.
இராணுவ ஆட்சியை அமுல்படுத்த பொன்சேகா திட்டமிட்டிருந்ததாகவும் ஜனாதிபதித் தேர்தலில் அவர் வேட்பாளராகப் போட்டியிட்டமைக்கு அமெரிக்கா,நோர்வே ஆதரவளித்திருந்ததாகவும் சிங்கப்பூரின் ஸ்ரெய்ட்ஸ் ரைம்ஸ் பத்திரிகைக்கு கோதாபய ராஜபக்ஷ தெரிவித்ததாக ஐஏஎன்எஸ் செய்திச் சேவை குறிப்பிட்டுள்ளது.
கடந்த வருடம் மே மாதம் விடுதலைப்புலிகளுக்கெதிரான யுத்தத்தின் போது பெற்ற இராணுவ வெற்றியில் பொன்சேகா முக்கிய பங்களிப்பை வழங்கியதாக அவர் உரிமை கோரியிருப்பதை கோதாபய ராஜபக்ஷ நிராகரித்துள்ளார். “அவர் வெற்றியடைந்ததை நாங்கள் வேறு யாராவது தளபதி மூலம் செய்து முடித்திருப்போம். வேறு சிறப்பான அதிகாரிகளும் இருந்துள்ளனர என்று கோதாபய ராஜபக்ஷ தெரிவித்திருக்கிறார்.
இராணுவச் சட்டத்தின் கீழ் பொன்சேகா மீது நடவடிக்கையெடுக்கப்படும் எனவும் இராணுவத்திலிருந்து விலகிச் சென்ற ஆறு மாதங்களுக்குள் இராணுவச் சட்டத்தின் பிரகாரம் எந்தவொரு அதிகாரி மீதும் நடவடிக்கையெடுக்க முடியுமெனவும் அவர் கூறியுள்ளார். ஏனைய விடயங்களும் உள்ளன. சிவில் நடைமுறையின் கீழ் அவற்றை நாம் செய்வோம். சாட்சியங்களை ஒன்றுதிரட்டிய பின் உடனடியாக இராணுவ நீதிமன்ற விசாரணை ஆரம்பமாகும். இதற்கு எவ்வளவு காலம் எடுக்கும் என்பது குறித்து எனக்குத் தெரியாது. ஏனெனில், இது வழக்கறிஞர்களிலேயே தங்கியுள்ளது. ஆனால், இதனை விரைவாக முடிவுக்குக் கொண்டுவர நாம் விரும்புகிறோம். சில சமயம் ஆறு மாதங்களுக்குக் குறைவானதாகக் காலமெடுக்கக்கூடும். குற்றச்சாட்டுகளின் தன்மை மிகவும் கடுமையாக உள்ளது. அவரை ஐந்து வருடங்களுக்கு சிறைவைக்கக் கூடியதாகவும் இருக்கலாம் என்று கோதாபய ராஜபக்ஷ கூறியுள்ளார்.
படைகளின் பிரதானியாக பதவி வகித்த காலத்தில் அரசியல்வாதிகளுடன் பொன்சேகா செயற்பட்டதாகவும் அது முற்றுமுழுதாகத் தவறானது என்றும் கோதாபய ராஜபக்ஷ கூறியுள்ளார். ஏனென்றால் பாதுகாப்புச் சபை கூட்டங்களில் அமர்ந்திருந்த அவர் அரசியல்வாதிகளுடன் தொடர்புபட்டிருப்பது தவறானதென்றும் இது துரோகத்தனத்தின் அளவைக் கொண்டதென்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவர் இராணுவ ஆட்சிக்குத் திட்டமிட்டிருந்தார். அரசியலை தனிமைப்படுத்திவிட்டு நாட்டை வேறுபட்ட பாதையில் கொண்டு செல்வதற்கு முயற்சித்தார். இராணுவத் தளபதியாக அவரிருந்த இறுதிக் கட்டங்களின் போது அவருடைய ஆட்களை கொழும்புக்குக் கொண்டுவர ஆரம்பித்திருந்தார். அவருடைய படை அணியை மற்றும் அவருடைய சிரேஷ்ட படையணி ஆட்களை சகல இடங்களிலும் அமர்த்தியிருந்தார். இந்த விடயங்கள் யாவும் இராணுவ சதிப்புரட்சியைப் போன்றதாகக் காணப்பட்டதென்றும் கோதாபய ராஜபக்ஷ கூறியுள்ளார்.
அதேசமயம், மேற்குலகின் ஒரு பிரிவினர் பொன்சேகாவுடன் இணைந்து சதி செய்ததாக கோதாபய ராஜபக்ஷ குற்றஞ்சாட்டியுள்ளார். புலிகளுக்கெதிரான இராணுவ நடவடிக்கையின்போது போர்க்குற்றங்களை இழைத்ததாக ராஜபக்ஷ சகோதரர்களை மேற்குலகின் ஒரு பிரிவினர் குற்றஞ்சாட்டியிருந்தனர். “குறிப்பிட்ட நலன்களைக் கொண்டிருந்த மேற்குநாடுகள் அவருக்கு (பொன்சேகா) ஆதரவளித்தன என்பதில் நூறு சதவீதம் நாம் நம்புகின்றோம். அமெரிக்கா,நோர்வே போன்ற நாடுகள் அவரின் பிரசாரத்திற்காகப் பெருந்தொகை பணத்தைச் செலவழித்திருந்தன.
அரசாங்கத்திற்கு எதிராக எழுதுவதற்காக ஊடகவியலாளர்களுக்கு நோர்வே அரசாங்கம் கொடுப்பனவுகளை வழங்கியதற்கான ஆதாரத்தை நான் வைத்திருக்கின்றேன். அவர்கள் குறிப்பிட்ட நலன்களை வைத்திருந்தனர். தமிழ்ப் புலிகளுக்கு பல்வேறு வழிகளில் ஆதரவு வழங்கியிருந்தனர். அத்துடன், அரசாங்கத்தைப் பதவியிலிருந்து அகற்றுவதற்கான முயற்சிக்கு பொன்சேகாவுக்கும் அவர்கள் ஆதரவளித்திருந்தனர் என்று கோதாபய ராஜபக்ஷ கூறியுள்ளார்.
பத்திரிகை ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவின் கொலை தொடர்பாக பொன்சேகாவை கோதாபய ராஜபக்ஷ தொடர்புபடுத்தியுள்ளார். “வேறு எவருமில்லை என்பதை நாமறிவோம்.சூழ்நிலைகளை நீங்கள் கண்டுகொள்ளலாம்.அவரையோ அல்லது நெருக்கமானவர்களையோ தவிர,வேறு எவரை விமர்சித்த எந்தவொரு ஊடகத்துறையினரும் இம்சிக்கப்படவில்லை. என்னையோ, ஜனாதிபதியையோ விமர்சித்தவர்களுக்கு எதுவும் நடந்திருக்கவில்லை. அவர் எவரைப் பயன்படுத்தினார் என்பதற்கான துப்பை நாம் வைத்திருக்கின்றோம். அதில் நாம் மிகவும் நம்பிக்கையுடன் இருக்கின்றோம். உண்மையில் எனக்கு நிச்சயமாகத் தெரியும். ஐந்து அல்லது ஆறு விடயங்களுக்கு திட்டவட்டமாக நிச்சயமாக அவர் பொறுப்பாகவிருந்தார். ஊடகத்துறையினர் சம்பந்தப்படுகின்ற ஐந்து அல்லது ஆறு விடயங்களில் அவர் நிச்சயமாக சம்பந்தப்பட்டிருந்தார். உண்மை மிக விரைவில் வெளிவரும் என்று கோதாபய ராஜபக்ஷ கூறியிருக்கிறார்.