February

February

பொன்சேகாவை 5 வருடங்களுக்கு சிறையில் வைத்திருக்க முடியும் பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்ஷ

gotabhaya.jpgதேசத் துரோகத்திற்காக உடனடியான இராணுவ நீதிமன்ற விசாரணையை முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா எதிர்கொள்வாரெனவும் அவரை ஐந்து வருடங்களுக்கு சிறை வைத்திருக்க முடியுமெனவும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதாபய ராஜபக்ஷ கூறியுள்ளார். நேற்று வியாழக்கிழமை வெளியிடப்பட்டிருக்கும் பேட்டியொன்றிலேயே கோதாபய ராஜபக்ஷ இதனைத் தெரிவித்திருக்கிறார்.

இராணுவ ஆட்சியை அமுல்படுத்த பொன்சேகா திட்டமிட்டிருந்ததாகவும் ஜனாதிபதித் தேர்தலில் அவர் வேட்பாளராகப் போட்டியிட்டமைக்கு அமெரிக்கா,நோர்வே ஆதரவளித்திருந்ததாகவும் சிங்கப்பூரின் ஸ்ரெய்ட்ஸ் ரைம்ஸ் பத்திரிகைக்கு கோதாபய ராஜபக்ஷ தெரிவித்ததாக ஐஏஎன்எஸ் செய்திச் சேவை குறிப்பிட்டுள்ளது.

கடந்த வருடம் மே மாதம் விடுதலைப்புலிகளுக்கெதிரான யுத்தத்தின் போது பெற்ற இராணுவ வெற்றியில் பொன்சேகா முக்கிய பங்களிப்பை வழங்கியதாக அவர் உரிமை கோரியிருப்பதை கோதாபய ராஜபக்ஷ நிராகரித்துள்ளார். “அவர் வெற்றியடைந்ததை நாங்கள் வேறு யாராவது தளபதி மூலம் செய்து முடித்திருப்போம். வேறு சிறப்பான அதிகாரிகளும் இருந்துள்ளனர  என்று கோதாபய ராஜபக்ஷ தெரிவித்திருக்கிறார்.

இராணுவச் சட்டத்தின் கீழ் பொன்சேகா மீது நடவடிக்கையெடுக்கப்படும் எனவும் இராணுவத்திலிருந்து விலகிச் சென்ற ஆறு மாதங்களுக்குள் இராணுவச் சட்டத்தின் பிரகாரம் எந்தவொரு அதிகாரி மீதும் நடவடிக்கையெடுக்க முடியுமெனவும் அவர் கூறியுள்ளார். ஏனைய விடயங்களும் உள்ளன. சிவில் நடைமுறையின் கீழ் அவற்றை நாம் செய்வோம். சாட்சியங்களை ஒன்றுதிரட்டிய பின் உடனடியாக இராணுவ நீதிமன்ற விசாரணை ஆரம்பமாகும். இதற்கு எவ்வளவு காலம் எடுக்கும் என்பது குறித்து எனக்குத் தெரியாது. ஏனெனில், இது வழக்கறிஞர்களிலேயே தங்கியுள்ளது. ஆனால், இதனை விரைவாக முடிவுக்குக் கொண்டுவர நாம் விரும்புகிறோம். சில சமயம் ஆறு மாதங்களுக்குக் குறைவானதாகக் காலமெடுக்கக்கூடும். குற்றச்சாட்டுகளின் தன்மை மிகவும் கடுமையாக உள்ளது. அவரை ஐந்து வருடங்களுக்கு சிறைவைக்கக் கூடியதாகவும் இருக்கலாம் என்று கோதாபய ராஜபக்ஷ கூறியுள்ளார்.

படைகளின் பிரதானியாக பதவி வகித்த காலத்தில் அரசியல்வாதிகளுடன் பொன்சேகா செயற்பட்டதாகவும் அது முற்றுமுழுதாகத் தவறானது என்றும் கோதாபய ராஜபக்ஷ கூறியுள்ளார். ஏனென்றால் பாதுகாப்புச் சபை கூட்டங்களில் அமர்ந்திருந்த அவர் அரசியல்வாதிகளுடன் தொடர்புபட்டிருப்பது தவறானதென்றும் இது துரோகத்தனத்தின் அளவைக் கொண்டதென்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவர் இராணுவ ஆட்சிக்குத் திட்டமிட்டிருந்தார். அரசியலை தனிமைப்படுத்திவிட்டு நாட்டை வேறுபட்ட பாதையில் கொண்டு செல்வதற்கு முயற்சித்தார். இராணுவத் தளபதியாக அவரிருந்த இறுதிக் கட்டங்களின் போது அவருடைய ஆட்களை கொழும்புக்குக் கொண்டுவர ஆரம்பித்திருந்தார். அவருடைய படை அணியை மற்றும் அவருடைய சிரேஷ்ட படையணி ஆட்களை சகல இடங்களிலும் அமர்த்தியிருந்தார். இந்த விடயங்கள் யாவும் இராணுவ சதிப்புரட்சியைப் போன்றதாகக் காணப்பட்டதென்றும் கோதாபய ராஜபக்ஷ கூறியுள்ளார்.

அதேசமயம், மேற்குலகின் ஒரு பிரிவினர் பொன்சேகாவுடன் இணைந்து சதி செய்ததாக கோதாபய ராஜபக்ஷ குற்றஞ்சாட்டியுள்ளார். புலிகளுக்கெதிரான இராணுவ நடவடிக்கையின்போது போர்க்குற்றங்களை இழைத்ததாக ராஜபக்ஷ சகோதரர்களை மேற்குலகின் ஒரு பிரிவினர் குற்றஞ்சாட்டியிருந்தனர். “குறிப்பிட்ட நலன்களைக் கொண்டிருந்த மேற்குநாடுகள் அவருக்கு (பொன்சேகா) ஆதரவளித்தன என்பதில் நூறு சதவீதம் நாம் நம்புகின்றோம். அமெரிக்கா,நோர்வே போன்ற நாடுகள் அவரின் பிரசாரத்திற்காகப் பெருந்தொகை பணத்தைச் செலவழித்திருந்தன.

அரசாங்கத்திற்கு எதிராக எழுதுவதற்காக ஊடகவியலாளர்களுக்கு நோர்வே அரசாங்கம் கொடுப்பனவுகளை வழங்கியதற்கான ஆதாரத்தை நான் வைத்திருக்கின்றேன். அவர்கள் குறிப்பிட்ட நலன்களை வைத்திருந்தனர். தமிழ்ப் புலிகளுக்கு பல்வேறு வழிகளில் ஆதரவு வழங்கியிருந்தனர். அத்துடன், அரசாங்கத்தைப் பதவியிலிருந்து அகற்றுவதற்கான முயற்சிக்கு பொன்சேகாவுக்கும் அவர்கள் ஆதரவளித்திருந்தனர் என்று கோதாபய ராஜபக்ஷ கூறியுள்ளார்.

பத்திரிகை ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவின் கொலை தொடர்பாக பொன்சேகாவை கோதாபய ராஜபக்ஷ தொடர்புபடுத்தியுள்ளார். “வேறு எவருமில்லை என்பதை நாமறிவோம்.சூழ்நிலைகளை நீங்கள் கண்டுகொள்ளலாம்.அவரையோ அல்லது நெருக்கமானவர்களையோ தவிர,வேறு எவரை விமர்சித்த எந்தவொரு ஊடகத்துறையினரும் இம்சிக்கப்படவில்லை. என்னையோ, ஜனாதிபதியையோ விமர்சித்தவர்களுக்கு எதுவும் நடந்திருக்கவில்லை. அவர் எவரைப் பயன்படுத்தினார் என்பதற்கான துப்பை நாம் வைத்திருக்கின்றோம். அதில் நாம் மிகவும் நம்பிக்கையுடன் இருக்கின்றோம். உண்மையில் எனக்கு நிச்சயமாகத் தெரியும். ஐந்து அல்லது ஆறு விடயங்களுக்கு திட்டவட்டமாக நிச்சயமாக அவர் பொறுப்பாகவிருந்தார். ஊடகத்துறையினர் சம்பந்தப்படுகின்ற ஐந்து அல்லது ஆறு விடயங்களில் அவர் நிச்சயமாக சம்பந்தப்பட்டிருந்தார். உண்மை மிக விரைவில் வெளிவரும் என்று கோதாபய ராஜபக்ஷ கூறியிருக்கிறார்.

ஐ.நா மனித உரிமைகள் ஆணையருடன் அமைச்சர் சமரசிங்க சந்தித்துப் பேச்சு

ma-sa.jpgஇலங்கையில் மனித உரிமைகள் விடயத்தின் முன்னேற்றம் மற்றும் அதனை பேணுவதற்கு எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து இடர் முகாமைத்துவ மற்றும் மனித உரிமைகள், அமைச்சர் மஹிந்த சமரசிங்க நேற்று (10) ஜெனிவாவில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் நவனிதம் பிள்ளையை சந்தித்து விளக்கம் அளித்தார்.

இலங்கையில் மனித உரிமைகளை பேணுவதை ஊக்குவிக்கவும் பாதுகாக்கவும் தேசிய செயற்பாட்டு திட்டமொன்றை வகுப்பதில் முன்னேற்றம் காட்டப் பட்டுள்ளது. 2008 ம் ஆண்டு நடை பெற்ற மனித உரிமைகள் சபை கூட்டத்தில் இடம்பெற்ற உலகளாவிய ரீதியிலான மனித உரிமைகள் மீளாய்வு நடவடிக்கைகளின் போது வழங்கப்பட்ட வாக்குறுதியின் வெளிப்பாடே இந்த தேசிய செயற்பாட்டு திட்டமாகும்.

இந்த செயற்பாட்டு திட்டத்தின் முதலாவது நகலை பூரணப்படுத்துவது தொடர்பாக இதுவரை எடுக்கப் பட்டுள்ள நடவடிக்கை மற்றும் அடுத்த கட்டமாக எடுக்கப்படவுள்ள நடவடிக்கை ஆகியவை பற்றி அமைச்சர் விளக்கமாக கூறினார்.

குறிப்பிட்ட செயற்பாட்டு திட்டம் மேலும் கண்காணிப்புக்கு உட்படுத்தப்படு வதுடன் அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் சமூகத்தில் ஆலோசிக்கப்பட்டு மீளாய்வுக்கு உட்படுத்தப்படுமென்று அமைச்சர் கூறினார். இலங்கையில் மனித உரிமைகள் விடயத்தின் முன்னேற்றம் மற்றும் அதனை பேணுவதற்கு எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து இடர் முகாமைத்துவ மற்றும் மனித உரிமைகள், அமைச்சர் மஹிந்த சமரசிங்க நேற்று (10) ஜெனிவாவில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் நவனிதம் பிள்ளையை சந்தித்து விளக்கம் அளித்தார்.

இலங்கையில் மனித உரிமைகளை பேணுவதை ஊக்குவிக்கவும் பாதுகாக்கவும் தேசிய செயற்பாட்டு திட்டமொன்றை வகுப்பதில் முன்னேற்றம் காட்டப் பட்டுள்ளது. 2008 ம் ஆண்டு நடை பெற்ற மனித உரிமைகள் சபை கூட்டத்தில் இடம்பெற்ற உலகளாவிய ரீதியிலான மனித உரிமைகள் மீளாய்வு நடவடிக்கைகளின் போது வழங்கப்பட்ட வாக்குறுதியின் வெளிப்பாடே இந்த தேசிய செயற்பாட்டு திட்டமாகும்.

இந்த செயற்பாட்டு திட்டத்தின் முதலாவது நகலை பூரணப்படுத்துவது தொடர்பாக இதுவரை எடுக்கப் பட்டுள்ள நடவடிக்கை மற்றும் அடுத்த கட்டமாக எடுக்கப்படவுள்ள நடவடிக்கை ஆகியவை பற்றி அமைச்சர் விளக்கமாக கூறினார்.

குறிப்பிட்ட செயற்பாட்டு திட்டம் மேலும் கண்காணிப்புக்கு உட்படுத்தப்படு வதுடன் அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் சமூகத்தில் ஆலோசிக்கப்பட்டு மீளாய்வுக்கு உட்படுத்தப்படுமென்று அமைச்சர் கூறினார். அரசியல் எல்லைகளுக்கு அப்பால் பரந்துபட்ட ஆதரவை பெறும் வகையில் அனைத்துத் தரப்பினரும் இணங்கக் கூடிய ஆவணமொன்றை தயாரிப்பதே இதன் நோக்கமென்று அமைச்சர் குறிப்பிட்டதுடன் பூரணப்படுத்தப்பட்ட இறுதி நகல் அமைச்சரவைக்கு அதன் கருத்துரை மற்றும் அங்கீகாரத்துக்காக சமர்ப்பிக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார். இலங்கை அரசாங்கத்தின் இந்த நடவடிக்கையை வரவேற்ற ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நவனிதம் பிள்ளை நாட்டில் மனித உரிமைகளின் நிலை மோதல்களின் பின்னரும் தேர்தலின் பின்னரும் மேம்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.

தகவல், ஊடகத்துறை அமைச்சு ஜனாதிபதியால் பொறுப்பேற்பு

தகவல், ஊடகத்துறை அமைச்சை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பொறுப்பேற்றுள்ளார். தகவல் ஊடகத்துறை அமைச்சர் அநுர பிரியதர்சன யாப்பா விடுத்த வேண்டுகோளையடுத்தே ஜனாதிபதி மேற்படி அமைச்சைப் பொறுப்பேற்றுள்ளார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு நேற்று தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது. இங்கு கருத்துத் தெரிவித்த அமைச்சர் அநுர பிரியதர்சன யாப்பா, எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் நான் குருநாகல் மாவட்டத்தில் போட்டியிட உள்ளேன். அதற்கு கால அவகாசம் தேவைப்படுகிறது. அதனால் அமைச்சுப் பதவியில் இருந்து விடுவிக்குமாறு ஜனாதிபதியை கோரியுள்ளேன்.

அதற்கு ஜனாதிபதி இணக்கம் தெரிவித்துள்ளார். அதன் பிரகாரம் ஊடக அமைச்சை ஜனாதிபதி பொறுப்பேற்கிறார். எனவே அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் இந்த ஊடகவியலாளர் மாநாடு நான் பங்குபற்றும் இறுதி ஊடகவியலாளர் மாநாடாகக் கூட இருக்கலாம். எனக்கு ஒத்துழைப்பு வழங்கிய ஊடகவியலாளர்கள் அடங்களான சகல தரப்பினருக்கும் நன்றிகளைத் தெரிவிக்கிறேன் என்றார்.

வன்முறை அரசியல் கலாசாரம் தலைதூக்க இடமளியேன் தங்காலையில் ஜனாதிபதி ராஜபக்ஷ

mahindaநாட்டில் இன்னொரு தடவை பயங்கரவாதம் தலைதூக்க இடமளிக்கப் போவதில்லையெனவும் வன்முறைக் கலாசாரத்தை அனுமதிக்கப் போவதில்லையெனவும் தெரிவித்திருக்கும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, அரசியல் சுயநலனுக்காக இளைஞர்களை பலிக்கடாவாக்க வேண்டாமென எதிர்க்கட்சிகளிடம் கேட்டுக்கொண்டார்.

ஜனநாயகத்தை பாதுகாப்பது தனது கடப்பாடு எனவும் அதற்கு ஊறு விளைவிக்க இடமளிக்கப்போவதில்லை எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.தங்காலை நகர மண்டபத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற வைபவமொன்றில் கலந்து கொண்டு பேசுகையிலேயே ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ மேற்கண்டவாறு தெரிவித்திருக்கிறார். அங்கு தொடர்ந்து பேசிய ஜனாதிபதி ராஜபக்ஷ கூறியதாவது;

ஜனாதிபதித் தேர்தல் வெற்றிக்குப் பின்னர் இன்றுதான் உங்களைச் சந்திக்கின்றேன். என்னை மீண்டுமொரு தடவை உங்கள் ஜனாதிபதியாக தேர்ந்தெடுத்தமைக்காக முதலில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.அரசியல் என்பது வன்முறையாகவோ, பழிவாங்குவதாகவோ இருந்துவிடக்கூடாது. வன்முறைக்கலாசாரம் தலைதூக்கினால் நாட்டின் எதிர்காலம் மிக மோசமானதாக அமைந்துவிடும். மக்களை அச்சுறுத்தி அரசியல் நடத்தும் கலாசாரத்துக்கு நான் முற்றுப்புள்ளிவைத்துள்ளேன்.

இந்த நாட்டில் வாழும் ஒவ்வொரு பிரஜைக்கும் அரசியல் செய்யும் உரிமை உண்டு. அதனை எவராலும் நிராகரிக்க முடியாது. ஆனால், நாட்டை மீண்டும் பயங்கரவாதத்துக்கு இட்டுச் செல்லும் முயற்சிகளுக்கு யாருக்கும் இடமளிக்க முடியாது.நாட்டில் இன்று ஏற்பட்டுள்ள சமாதானம், ஐக்கியம் என்பவற்றை சீர்குலைப்பதற்கு எவருக்கும் உரிமை கிடையாது. இன்று தோல்வியை ஜீரணிக்க முடியாத சில அரசியல் சக்திகள் நாட்டை மீண்டும் பயங்கரவாதத்தின் பக்கம் இட்டுச் செல்ல முயற்சிக்கின்றன. அதற்கு நான் ஒருபோதும் இடமளிக்க மாட்டேன்.

இரத்த ஆறு ஓடிக்கொண்டிருந்த நாட்டை பல சவால்களுக்கு முகம் கொடுத்து நாம் மீட்டெடுத்துள்ளோம். நாட்டைக் காட்டிக் கொடுக்கும் சக்திகள் இன்று மூக்குடைபட்டுப் போயுள்ளன. ஜனாதிபதித் தேர்தலின் போது அரச ஊழியர் உட்பட நாட்டுமக்கள் அனைவரும் அச்சுறுத்தப்பட்டனர். வரலாற்றில் ஒருபோதுமில்லாத வகையில் என்மீதும் எனது குடும்பத்தின் மீதும் சேறு அள்ளி வீசப்பட்டது. அவற்றுக்கு நாட்டு மக்கள் நல்ல தீர்ப்பை வழங்கியுள்ளனர்.

வடக்கிலும் கிழக்கிலும் வாழும் மக்களில் கணிசமான மக்கள் எனக்கு வாக்களிக்கவில்லை என்பதற்காக நான் அப்பகுதிகளை ஓரங்கட்டப் போவதில்லை. எனக்கு வாக்களித்தவர்களுக்கும் வாக்களிக்காதவர்களுக்கும் இன்று நானே ஜனாதிபதி. எல்லோரையும் எனது நாட்டு மக்களாகவே கருதுகின்றேன். நாம் ஜனநாயகத்தைப் பாதுகாக்க வேண்டும். எனது கடப்பாடு கூட நாட்டின் ஜனநாயகத்தைப் பாதுகாப்பது தான். இன்னொரு தடவை இளைஞர்களை பலிகடாவாக்க முனைய வேண்டாமென எதிர்க்கட்சிகளிடம் கேட்டுக் கொள்கின்றேன். அரசியல் செய்யுங்கள் அந்த உரிமையை யாரும் பறிக்க முடியாது. ஆனால் அரசியல் செய்வதற்காக வன்முறைக் கலசாரத்தைத் தேர்ந்தெடுக்காதீர்கள். அதற்கு நாட்டு மக்கள் இடமளிக்கமாட்டார்கள். அரசாங்கமும் இடமளிக்காது என்பதை உறுதிபடத் தெரிவித்துக் கொள்கின்றேன். இக் கூட்டத்தின் போது நாமல் ராஜபக்ஷ தனது முதல் அரசியல் பிரசாரத்தை ஆரம்பித்தார்.

தேர்தலில் போட்டியிட்டதற்காக பொன்சேகாவுக்கு விசேட சலுகைகள் வழங்க சட்டத்தில் இடமில்லை – அமைச்சர் ஜீ. எல். பீரிஸ்

gl.jpgநாட்டில் கலவரம் வெடிக்கும் என்பதாலோ அரசியல் காரணங்களுக்காகவோ சரத் பொன்சேகாவுக்கு எதிராக சட்டத்தினை அமுல்படுத்தாமல் இருக்க முடியாது. சட்டத்தின் முன் அனைவரும் சமனாகும். ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டதற்காக அவருக்கு விசேட சலுகை எதனையும் வழங்க சட்டத்தில் இடமில்லையென ஏற்றுமதி அபிவிருத்தி மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சர் ஜீ. எல். பீரிஸ் தெரிவித்தார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு நேற்று (11) தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது. இங்கு கருத்துத் தெரிவித்த அமைச்சர் மேலும் கூறியதாவது, நாட்டில் அமுலில் உள்ள சட்டத்தின் பிரகாரமே சரத் பொன்சேகா மீது இராணுவ நீதிமன்றத்தினூடாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இராணுவ சட்டம் 1949 ஆம் ஆண்டு முதல் இலங்கையில் செயற்படுத்தப்படுகிறது. இராணுவ ஒழுக்கவிழுமியங்களை பாதுகாப்பதற்காக இந்தச் சட்டம் அமுல்படுத்தப்படுகிறது. சட்டமா அதிபரின் ஆலோசனைப்படி பொன்சேகாவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதில் அரசியல் நோக்கமோ தலையீடோ கிடையாது. இந்த வழக்கில் தமது தரப்பு சாட்சியங்களையும் ஆவணங்களையும் முன்வைக்கவும் அரச தரப்பு சாட்சியங்களை குறுக்கு விசாரணை செய்யவும் பொன்சேகா தரப்புக்கு அவகாசம் உள்ளது.

இங்கு மனித உரிமை மீறல் தொடர்பாக எதுவித பிரச்சினையும் எழாது. பொன்சேகா தரப்பிற்கு தமது தரப்பு வாதங்களை முன்வைக்க முழுமையான அனுமதியும் வழங்கப்படும். தீர்ப்புக்கு எதிராக மேன்முறையீடு செய்யவும் சட்டத்தில் இடமுள்ளது. பொன்சேகாவை பழிவாங்கும் நோக்கத்துடன் அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இராணுவத்தில் இருந்த போது செய்த தவறுகள் தொடர்பிலேயே இராணுவ சட்டத்தின் படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பொன்சேகாவை கைது செய்ததால் நாட்டில் கலவரம் வெடிக்கும் என்பதாலோ குழப்பம் ஏற்படும் என்பதாலோ சட்டத்தை அமுல்படுத்தாதிருக்க முடியாது.

ஜனாதிபதிக்கும் வெளிநாட்டுத் தூதுவர்களுக்கும் எதிராக மாத்திரமே வழக்குத் தொடர்வதற்கு சட்டத்தில் இடமில்லை. பொன்சேகாவுக்கு எதிரான வழக்கு விசாரணையில் அரசியல் தலையீடு எதுவும் இடம்பெறாது. இராணுவம் சுயாதீனமாகவே இந்த விசாரணைகளை முன்னெடுக்கிறது.

பொன்சேகா விவகாரத்தை பூதாகரமாக்கி அரசியல் லாபம் பெற எதிர்க்கட்சிகள் முயற்சிக்கின்றன. இலங்கை தொடர்பாக சர்வதேச மட்டத்தில் தவறான கருத்தை உருவாக்கவும் இலங்கையை மோசமான நாடாக காட்டவும் முயற்சி செய்யப்படுகிறது. இலங்கையுடனான கொடுக்கல் வாங்கலை யும் ஜி.எஸ்.பி. சலுகையையும் நிறுத்தவும் முதலீடுகளை தடுக்கவும் பொருளாதார ரீதியில் இலங்கையை மட்டந்தட்டவும் சதி செய்யப்படுகிறது. இந்த நோக்கங்களை அடைய ஒருபோதும் இடமளியோம் என்றார்.

இங்கு கருத்துத் தெரிவித்த அமைச்சர் அநுரபிரியதர்சன யாப்பா, ஜனநாயகத்தை பாதுகாப்பது அரசாங்கத்தின் மட்டுமன்றி எதிர்க் கட்சியினதும் பொறுப்பாகும். ஆனால் ஜனநாயகத்தை குழிதோண்டிப் புதைக்கும் வகையில் எதிர்க்கட்சிகள் செயற்பட்டு வருகின்றன.

இலங்கைக்கு எதிராக யுத்தக் குற்றச் சாட்டை சுமத்த சில நாடுகள் முயற்சி செய்கின்றன. இதற்கு சாட்சி வழங்க பொன்சேகா தயாராகிறார். ஆனால் இராணுவ ரகசியங்களை ஓய்வுபெற்ற பின்னரும் வெளியிட முடியாது என்றார்.

1000 இலங்கையர்களுக்கு கனடாவில் தொழில் வாய்ப்பு ஒப்பந்தம் கைச்சாத்து

2010ம் ஆண்டில் ஆயிரம் இலங்கையர்களுக்கு கனடாவில் தொழில் வாய்ப்புகளைப் பெற்றுக்கொடுப்பதற்குக் கனடிய நிறுவனமொன்று முன்வந்துள்ளது. இதற்கான ஒப்பந்த மொன்று நேற்று தொழிலமைச்சில் தொழிலுறவுகள், மனிதவள அமைச்சர் அதாவுத செனவிரத்னவின் முன்னிலையில் இடம்பெற்றது.

இதுபற்றி அமைச்சர் தெளிவுபடுத்துகையில் :- கனடாவிலுள்ள கீ கின் கல்லூரியும் இலங்கையில் வடமேல் மாகாணத்திலுள்ள வயம்ப பயிற்சி நிறுவனமும் இணைந்தே மேற்படி வேலை வாய்ப்புக்களுக்கான செயற்றிட்டத்தை நடைமுறைப்படுத்துகின்றன. கனடாவின் நடைமுறை நிர்வாக மொழி ஆங்கிலமாக உள்ளதால் மொழிப்பயிற்சி மற்றும் தொழிற் பயிற்சிகளை வழங்குவதுடன் தேர்ச்சியானவர்களைத் தேர்ந்தெடுப்பது தொடர்பான சகல நடவடிக்கைகளையும் மேற்படி நிறவனங்களே முன்னெடுக்கும். அதற்கான ஒத்துழைப்புக்களை மட்டுமே தொழிலமைச்சு வழங்கும்.

தகவல் தொழில் நுட்ப பாடபோதனையை தொடர்ந்தும் மேற்கொள்ள நடவடிக்கை

பாடசாலைகளில் தற்போது அமுல்படுத்தப்பட்டுவரும் தகவல் தொழில் நுட்ப பாட போதனை நடவடிக்கைகளை தொடர்ந்தும் மேற்கொள்வதற்கு கிழக்கு மாகாணக் கல்வித் திணைக்களம் தீர்மானித்துள்ளது.

பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் அடங்கிய பாடசாலை சமூகத்தினருக்கு கணனிதொடர்பான அறிவினைப் போதிக்கும் நோக்கத்துடன் தகவல் தொழில்நுட்பக் கல்விச் செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கணனிக் கல்வியைப் போதிப்பதற்கு வசதியாக பாடசாலைகளில் கணனி வள நிலையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.

கிழக்கு மாகாண பாடசாலைகளில் புதிய கல்வியாண்டில் தகவல் தொழில்நுட்ப பாடபோதனைகளை மேலும் திறன்பட முன்னெடுக்கும் நோக்கத்துடன் விசேட செயற் திட்டங்கள் அமுல்படுத்தப்படவுள்ளன. இதேவேளை தகவல் தொழில்நுட்பத்திற்கான தேசிய தகவல் தளமொன்றினை அறிமுகம் செய்வதற்கும் கல்வியமைச்சு தீர்மானித்துள்ளது.

கிழக்கு மாணவர்கள் மத்தியில் கையெழுத்து சஞ்சிகை போட்டி

கிழக்கு மாகாண பாடசாலை மாணவர்களுக்கான கையெழுத்து சஞ்சிகைப் போட்டியினை இந்த வருடத்திலும் நடாத்துவதற்கு மாகாணக் கல்வித் திணைக்களம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

பாடசாலை மாணவர்களின் கலை-இலக்கிய ஆக்கத் திறமைகளை விருத்தி செய்யும் வகையிலும், கூட்டு முயற்சி தலைமைத்துவம் மற்றும் ஆளுமையை ஏற்படுத்தும் நோக்கத்துடனும் கடந்த 2008ஆம் ஆண்டு தொடக்கம் கையெழுத்து சஞ்சிகைப் போட்டி நடாத்தப்பட்டு வருகின்றது.

தரம்-03 தொடக்கம் 13 வரையான வகுப்பு மாணவர்கள் பங்குபற்றும் வகையில் 06 பிரிவுகளாக இந்தப் போட்டி நடாத்தப்படவுள்ளதாக கிழக்கு மாகாணக் கல்வித் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பாடசாலை ரீதியாகவும், வலயம் மற்றும் மாகாண ரீதியாகவும் சிறந்த ஆக்கங்கள் தெரிவு செய்யப்பட்டு பரிசில்களும், சான்றிதழ்களும் வழங்கப்படவுள்ளன.

பாடசாலை மட்டத்திலான போட்டிகள் எதிர்வரும் மே மாதம் 21ஆம் திகதிக்கு முன்பாகவும், வலய ரீதியான தெரிவுகள் எதிர்வரும் ஜூன் மாதம் 21ஆம் திகதிக்கு முன்பாகவும் நடாத்தப்படுவதுடன், கிழக்கு மாகாணத்தின் சிறந்த கையெழுத்து சஞ்சிகைகளைத் தெரிவு செய்யும் போட்டிகள் யூலை மாதம் 15ஆம் திகதிக்கு முன்பாகவும் நடாத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

யாழ். இளைஞர், யுவதிகளுக்கு பண்ணிசை வகுப்புகள்

யாழ் குடாநாட்டில் உள்ள இளைஞர் யுவதிகளினது மத்தியில் இறையுணர்வுகளையும் ஆன்மீக சிந்தனைகளையும் வளர்த்தெடுக்கும் நோக்குடன் அகில இலங்கை திருமுறை மன்றத்தினால் பிரதி சனிக்கிழமையும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் பிற்பகல் 3 மணி முதல் 4 மணி வரையில் யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரியில் பண்ணிசை வகுப்புகளை நடத்தி வருகின்றனர்.

இலவசமாக நடத்தப்பட்டு வருகின்ற இந்த பண்ணிசை வகுப்புகளை கலாபூஷணம் கே. எஸ். ஆர். திருஞானசம்பந்தன் நடத்தி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

கண்டி உதவி இந்திய தூதரகத்தில் ஹிந்தி வகுப்புகள்

கண்டி உதவி இந்தியத் தூதரகத்தால் நடத்தப்படும் ஹிந்தி மொழி வகுப்புகள் இம் மாதம் 22ம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கண்டி இந்திய உதவி தூதரகம் விடுத்துள்ள ஊடக செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2010-2011ம் ஆண்டிற்கான ஹிந்தி மொழி பாடநெறி வகுப்புகளுக்கான விண்ணப்பங்களை இம்மாதம் 8ம் திகதி முதல் கண்டி உதவி இந்திய தூதரகத்தில் நேரடியாகவோ, தபால் மூலமாகவோ பெற்றுக்கொள்ள முடியும். நேரடியாக வருவோர் காலை 9.00 மணி முதல் 4.00 மணிவரை பெற்றுக்கொள்ள முடியும்.

இப்பாடநெறியினை கண்டி மற்றும் அருகில் வசிப்பவர்கள் மட்டும் மேற்கொள்ள முடியும். தொடர்புகளுக்கு 081-2222652 அல்லது 2223786 இலக்கத்துடன் தொடர்புகொள்ள முடியும் என வும் அறிவிக்கப்பட்டுள்ளது