May

May

அரச ஆஸ்பத்திரிகளில் 319 வகை மருந்துகளுக்கு தட்டுப்பாடு – விமானப்படை விமானங்கள் மூலம் மருந்து இறக்குமதி

drage.jpgஅரச வைத்தியசாலைகளில் தற்போது நிலவி வரும் மருந்து தட்டுப்பாட்டினை நிவர்த்தி செய்யும் வகையில் வெளிநாட்டிலிருந்து மருந்துகளை இறக்குமதி செய்ய இலங்கை விமானப் படையினரின் விமானங்கள் பயன்படுத்தப்பட விருப்பதாக சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

உடனடியாக மருந்துகளை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யும் பொருட்டு இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான சரக்கு விமானங்கள் பயன்படுத்தப்படவுள்ளனவெனவும் சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

கடந்த காலங்களில் அரச வைத்திய சாலைகளில் மருந்துகளுக்கு ஏற்பட்ட தட்டுப்பாடு தொடர்பாக சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினதும் பாதுகாப்புச் செயலாளரினதும் கவனத்திற்குக் கொண்டு வந்ததையடுத்து, இலங்கை விமானப் படையினரின் விமானங்களை பயன்படுத்தி தேவை யான மருந்துகளை உடனடியாக இறக்குமதி செய்யும் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய எதிர்வரும் இரண்டு வாரங்களினுள் அரச வைத்திய சாலைகளில் நிலவும் மருந்துகளுக்கான தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்ய முடியுமெனவும் சுகாதார அமைச்சு நம்பிடிக்கை தெரிவித்து ள்ளது.

அரச வைத்தியசாலைகளில் 319 வகையான மருந்துகளுக்கு தற்போது தட்டுப்பாடு நிலவி வருகிறது. அதில் 44 வகையான மருந்துகள் கப்பல் மூலம் இலங்கை துறைமுகத்தை வந்தடைந்துள்ளன.  ஏனைய 27 வகை மருந்துகள் இலங்கை மருந்தக கவுன்சிலிலிருந்து விலைக்கு வாங்குவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இவற்றைத் தவிர்த்த ஏனைய மருந்துகள் இந்தியாவிலிருந்து உடனடியாக கொண்டுவரப்படவுள்ளதாக அமைச்சின் ஊடகப் பேச்சாளர் சுட்டிக்காட்டினார். இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான விமானங்கள் மூலம் மருந்துகள் கொண்டு வரப்படவுள்ளமை இதுவே முதற்தடவை யென்பது குறிப்பிடத்தக்கது.

மின்னல் தாக்கி நால்வர் பலி

rain.jpgமின்னல் தாக்குதல் காரணமாக சனிக்கிழமை மட்டும் பெண் ஒருவர் உட்பட நால்வர் உயிரிழந்துள்ளதாக வானிலை அவதான நிலையம் தெரிவிக்கிறது.

பொலநறுவை மெதிரிகிரிய பகுதியில் வயலில் வேலைசெய்து கொண்டிருந்த மூவரும் அநுராதபுரம் பகுதியில் வீதியில் சென்ற பெண் ஒருவருமே இந்த மின்னல் தாக்குதலில் உயிரிழந்துள்ளனர். இரண்டு நாட்களுக்கு முன்னரும் புசல்லாவை நயபனை பகுதியில் மின்னல் தாக்கி ஏழு பேர் காயமடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

நாட்டில் இடிமின்னல் தாக்குதல் தொடருமென்றும் பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறும் வானிலை அவதான நிலையம் மீண்டும் எச்சரித்துள்ளது.

இவ்வாண்டு இதுவரை 17 பேர் மின்னல் தாக்குதலுக்குள்ளாகி மரணமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது

படையினர் நிலைகொண்டிருந்த இடங்களில் மக்களை மீளக் குடியமர்த்த படையினர் ஒத்துழைப்பு

srilanka-war.jpgவவுனியா வடக்கில் இன்று திங்கட்கிழமை 500 குடும்பங்கள் மீளக்குடியமர்த்தப்படவிருப்பதாக மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பீ. எம். எஸ். சார்ள்ஸ் தெரிவித்தார்.

இதேவேளை வவுனியா மாவட்டத்தில் படையினர் நிலைகொண்டிருந்த அரச கட்டடங்கள், தனியார் காணிகள் என்பவற்றில் பொது மக்களை மீளக்குடியமர்த்த படையினர் ஒத்துழைப்பு வழங்கி வருவதாகவும் அரச அதிபர் மேலும் கூறினார்.

அந்த வகையில் முதற் கட்டமாக பேயாடிகூழான்குளம் முகாம் அமைந்த பகுதியில் 65 குடும்பங்கள் மீளக் குடியமர்த்தப்படவுள்ளனர். இவர்களுள் ஒவ்வொரு குடும்பத்தில் இருந்தும் தலா ஒருவர் இன்று திங்கட்கிழமை தமது சொந்த இடத்தை பார்வையிடுவதற்காக முகாம் அமைந்துள்ள பகுதிக்கு அழைத்துச் செல்லப்படவிருப்பதாகவும் அரச அதிபர் குறிப்பிட்டார்.

வவுனியா மாவட்டத்தின் சகல பிரிவுகளுக்கும் பொறுப்பான படையதிகாரிகள், பிரதேச செயலாளர்கள், திணைக்கள தலைவர்கள், அரச சார்பற்ற நிறுவனப் பிரதிநிதிகள் ஆகியோரும் கலந்து கொண்ட விசேட கூட்டமொன்று கடந்த சனிக்கிழமை வவுனியா அரச அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது.

இக் கூட்டத்தின் போதே பாலமோட்டை, சேமமடு ஆகிய பகுதிகளில் இன்று திங்கட்கிழமை 500 குடும்பங்களை மீளக்குடியமர்த்துவதென தீர்மானிக்கப் பட்டதாகவும் அதனடிப்படையிலேயே, அவர்கள் தமது சொந்த இருப்பிடத்துக்கு அழைத்துச் செல்லப்படுவதாகவும் அரச அதிபர் சார்ள்ஸ் கூறினார்.

அத்துடன் பெரியதம்பாணை, பரையநாளன்குளம், பிரம்மநாளன்குளம், கண்ணாட்டி, கணேசபுரம் ஆகிய இடங்களிலும் 500 குடும்பங்கள் விரைவில் குடியமர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. இக் குடும்பங்களைச் சேர்ந்த பிரதிநிதிகளும் இன்று திங்கட்கிழமை அவர்களது சொந்த இடங்களைப் பார்வையிடுவதற்காக அழைத்துச் செல்லப்படவிருப்பதாக அரச அதிபர் சார்ள்ஸ் மேலும் தெரிவித்தார்.

வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் பீ. எம். எஸ். சார்ள்ஸ் பாதுகாப்பு பிரிவினருடன் நடத்திய பேச்சுக்களின் பயனாக வவுனியா பூவரசன்குளம் விமானப் படை முகாம் அகற்றப்படுவதற்கான நடவடிக்கைகளை படையினர் மேற்கொண்டு வருகின்றனர் எனவும் அவர் சுட்டிக் காட்டினார். மேலும் பிரப்பன்மடு பகுதியில் 25 குடும்பங்களுக்கு நிரந்தர வீடுகள் கட்டப்பட்டு ஒப்படைக்கப்பட்டுள்ளன. ரத்கத்தேகம பகுதிக்கும் பிறப்பன்மடு பகுதிக்கும் மின்சாரம் முழுமையாக வழங்கப்பட்டுள்ளதாகவும் அரச அதிபர் திருமதி பீ. எம். எஸ். சார்ள்ஸ் மேலும் தெரிவித்தார்.

வவுனியா நிவாரணக் கிராமங்களில் தற்போது முல்லைத்தீவை சொந்த இடமாக கொண்ட 34 ஆயிரம் பேரும் கிளிநொச்சியை சொந்த இடமாக கொண்ட 34 ஆயிரம் பேரும் உள்ளனர். இவர்களுள் 17 ஆயிரம் பேர் எதிர்வரும் 31 ஆம் திகதிக்குள் தமது சொந்த இடங்களில் மீளக்குடியமர்த்தப்படுவரெனவும் அரச அதிபர் குறிப்பிட்டார்.

SMS அச்சமூட்டிய குறுந்தகவல்: சூத்திரதாரிகளை கண்டுபிடிக்குமாறு தொ.தொடர்பு நிறுவனங்களுக்கு உத்தரவு

hand-phone.jpgஅநாம தேய குறுந்தகவல்கள் மூலம் பொதுமக்களை வீண் பீதிக்கு உட்படுத்தியவர்களைக் கண்டுபிடித்துத் தருமாறு தொலைத் தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு தொலைத் தொடர்பு நிறுவனங்களைக் கோரியுள்ளது.

இது தொடர்பில் நேற்றுத் தகவல் தெரிவித்த ஆணைக்குழுவின் தலைவர் அனுஷ்பெல்பிட்ட குறுந்தகவல்கள் மூலம் புரளியைக் கிளப்பியவர்களைக் கண்டுபிடிப்பதில் தீவிர கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

இது தொடர்பில் தொலைத் தொடர்பு நிறுவனச் செயற்பாட்டாளர்களுக்கு விசேட பணிப்புரைகளை வழங்கியுள்ளதாகத் தெரிவித்த அவர், சம்பந்தப்பட்டவர்களைக் கண்டுபிடிக்க உதவுமாறு அவர்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார். இவ்வாறு உறுதிப்படுத்தப்படுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் குறிப்பிட்டார். இதேவேளை மேற்படி புரளிகளைக் கிளப்பியவர்கள் சம்பந்தமாகத் தகவல்களைத் தெரிவிக்க முன்வருவோர் பொலிஸ் நிலையங்களில் தமது தகவல்களைத் தெரிவிக்க முடியுமெனவும் தெரிவித்தார்.

7.4 ரிச்டர் பூமியதிர்ச்சி இந்தோனேஷியாவை தாக்கியது – இலங்கைக்குப் பாதிப்பில்லை

இந்தோனேசியாவில் நேற்று (9) காலை 7.4 ரிச்டர் அளவில் பூமியதிர்ச்சி ஏற்பட்டது.

அஷே மாகாணத்தின் தலைநகரான பண்டா அஷேக்கு 21 கிலோ மீட்டர் தூரத்தில் 61.4 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த பூமியதிர்ச்சி ஏற்பட்டது. பூமியதிர்ச்சி ஏற்பட்டதும் உடனடியாக சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

எனினும் பூமியதிர்ச்சியின் மையத்துக்கு கிட்டிய நகரமான மீலாபோவில் 7.9 அங்குல (20 சென்றி மீட்டர்) உயரத்துக்கான சுனாமி அலை மட்டுமே ஏற்பட்டதால் சுனாமி எச்சரிக்கை வாபஸ் பெறப் பட்டது. இதனால் இலங்கைக்கு எத்தகைய பாதிப்புக்களும் ஏற்படாதென அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்தது.

கல்விக்கென தனியான தொலைக்காட்சி

tv.jpgகல்விக் கெனத் தனியான தொலை க்காட்சி அலைவரிசையொன்றை அரசாங்கம் ஆரம்பிக்கவுள்ளது.

இது தொடர்பில் தகவல், ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதாக கல்வி அமைச் சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

கல்விக்கான தனித் தொலைக் காட்சி அலைவரிசைக்கான தொழில்நுட்ப உதவிகளை வழங்க ‘யுனெஸ்கோ’ நிறுவனம் முன்வந்துள்ளதாகவும் கல்வி அமைச்சர் கூறினார்.

புசல்லாவை நயபனை தோட்டத்தில் மின்னல் தாக்கி 7 பேர் ஆஸ்பத்திரியில்

lightning-01.jpgபுசல்லாவை நயபனை மேமலை தோட்டம் மற்றும் நயபனை தோட்டத்தில் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை மாலை மின்னல் தாக்குதலினால் பாதிக்கப்பட்ட 7 பேர் புசல்லாவை வகுகபிடிய மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நயபனை மேமலை தோட்டத்தில் தேயிலை பறித்துக்கொண்டிருந்த தொழிலாளர்களில் 6 பேர் மின்னல் தாக்குதலுக்குள்ளாகி மயக்கமடைந்தனர். இவர்கள் 6 பேரும் பின்னர் வகுகபிடிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதேநேரம் நயபனை தோட்டத்தில் வீட்டு முற்றத்தில் பாத்திரங்களை கழுவிக் கொண்டிருந்த என்.பிரபாளினி (21 வயது) என்னும் குடும்பப் பெண் மின்னலினால் தாக்குண்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

மேமலை தோட்டத்தச் சேர்ந்த ஆர்.முத்தாய் (47 வயது), கே.ராஜமணி (48 வயது), எம்.ஞானேஸ்வரி (43 வயது), எம்.சரஸ்வதி (33 வயது), கே.வரதலட்சுமி (36 வயது), ஏ.உதயகுமார் (22 வயது) ஆகியோரே மின்னல் தாக்குதலினால் அதிர்ச்சிக்குள்ளாகி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மிகவும் கஷ்டப்பட்ட பிரதேசமான நயபனை மேமலை தோட்டத்திலுள்ள தொழிலாளர்கள் அடிக்கடி இவ்வாறான சம்பவங்களுக்கு முகம் கொடுத்து வருவதால் காலநிலை சீரற்றிருக்கும் நாட்களில் வேலை நேரம் குறைக்கப்பட்டு நிவாரணங்களை தோட்ட நிர்வாகம் வழங்க வேண்டுமென்றும் தொலைவில் இருக்கும் நயபனை தமிழ் வித்தியாலயத்திற்கு சென்று வருவதற்கு தமது பிள்ளைகள் அஞ்சுவதாகவும் இதனால், மேமலை தோட்ட மாணவர்களுக்கு நேர காலத்தோடு பாடசாலையிலிருந்து வீடு செல்வதற்கு அனுமதி வழங்கப்பட வேண்டுமென்றும் பாதிக்கப்பட்டவர்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.நேற்று முன்தினம் சில மணித்தியாலங்களுக்கு புசல்லாவை பகுதியில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் பெய்த கடும் மழையால் பல இடங்களில் மண் சரிவு ஏற்பட்டுள்ளதோடு இயல்பு வாழ்க்கையும் பெரிதும் பாதிக்கப்பட்டது.

குடாநாட்டில் ஏமாற்றிப் பணம் பறிக்கும் மோசடிப் பேர்வழிகள் குறித்து எச்சரிக்கை

யாழ்ப்பாணக் குடாநாட்டில் தற்போது நிலவும் அமைதிச்சூழலைப் பயன்படுத்தி வெளியிடங்களைச் சேர்ந்த சிலர் பல்வேறு தந்திரோபாயங்கள் மூலம் பொதுமக்களை ஏமாற்றி பணம் பறித்து வருவதுடன், அவர்களில் சிலர் கொள்ளைகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

சில தினங்களுக்கு முன்னர் மன்னாரிலிருந்து பஸ்ஸில் யாழ்ப்பாணம் வந்த யாழ்ப்பாண வாசி ஒருவருடன் கூடப்பயணம் செய்த மன்னாரைச் சேர்ந்த ஒருவர் நட்பாக பழகியுள்ளதுடன் தனக்கு யாழ்ப்பாணத்தைச் சுற்றிப்பார்க்க உதவுமாறும் கேட்டுள்ளார்.

அந்த மன்னார் வாசி நட்பு முறையில் பழகியதால் அதனை நம்பிய யாழ்.வாசி அவரை யாழ்ப்பாணத்தில் 2 ஆம் குறுக்குத் தெருவிலுள்ள தனது வீட்டில் தங்க வைத்துள்ளார். அவரும் வீட்டில் உள்ளவர்களுடன் அன்பாகப் பழகி அவர்களையும் நம்பவைத்துள்ளார்.

யாழ்ப்பாணத்தைச் சுற்றிப்பார்க்க வந்தவர் வியாழக்கிழமை இரவு தானே இரவு சாப்பாடு வாங்கித் தருவதாகக்கூறி வாங்கி வந்துள்ளார். இரவு சாப்பாட்டில் அவர் மயக்க மருந்தை கலந்திருப்பதை அறியாத யாழ்ப்பாண வாசியின் குடும்பத்தினர் அதனை உண்ட பின்னர் மயங்கிவிட்டனர். இதையடுத்து, மன்னாரிலிருந்து வந்தவர் அந்த வீட்டிலிருந்த பணம் , நகை மற்றும் பல இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்களையும் சுருட்டிக்கொண்டு தலைமறைவாகிவிட்டார்.

மறுநாள் இவர்கள் எழுந்துபார்த்த போது தாம் ஏமாற்றப்பட்டதை அறிந்தனர். இது தொடர்பாக பாதிக்கப்பட்டவர் யாழ்.பொலிஸ் நிலையத்தில் புகார் செய்துள்ளார். இதேபோல, சிலர் நிவாரணம் தருவதாக போலி விண்ணப்பப்படிவங்களை ஒன்று 100 ரூபா வீதம் வழங்கி பலரிடம் பணமோசடி செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

வேறு சிலர் கைத்தொலைபேசி போன்ற பொருட்களை மலிவு விலைக்குத் தருவதாகவும் தாம் ஒரு நிறுவனத்தின பிரதிநிதிகள் என்றும் கூறி முற்பணம் பெற்றுவிட்டு தலைமறைவாகியுள்ளனர். எனவே, இவ்வாறானவர்கள் குறித்து குடாநாட்டு மக்கள் மிகுந்த அவதானமாக இருக்க வேண்டுமென அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

மகாவலி “ஜி-27 வலயம் என்ற பெயரில் வவுனியா வடக்கில் குடியேற்ற முடிவு

மகாவலி “எச்-27 வலயத்தில் மக்கள் குடியிருப்பதற்கு காணிப் பற்றாக்குறை ஏற்பட்டுவருவதாக நீர்ப்பாசன மற்றும் நீர் முகாமைத்துவ அமைச்சு தெரிவித்துள்ளது.மகாவலி வலயங்களில் குடியிருப்பவர்களின் மூன்றாம் பரம்பரை உறுப்பினர்களுக்குக் காணிகளை வழங்க முடியாதுள்ளதாகவும் அமைச்சு குறிப்பிடுகிறது.

இதனால் வவுனியா வடக்கு கால்வாயை அண்மித்த பகுதிகளில் இவர்களுக்குக் காணிகளை வழங்க நீர்ப்பாசன மற்றும் நீர் முகாமைத்துவ அமைச்சர் நிமல் சிறிபால டீ சில்வா நடவடிக்கை எடுத்துள்ளார்.மகாவலி “ஜி-27 வலயம் என இதற்குப் பெயரிட்டு இங்கு மக்கள் குடியமர்த்தப்படவுள்ளனர். இவர்களுக்கு விவசாயம் செய்ய உரிய வசதிகள் மற்றும் உதவிகள் செய்து கொடுக்கப்படவுள்ளது.இதேவேளை, தனியாரிடம் குத்தகைக்கு விடப்பட்டு விவசாயம் செய்யப்படாத காணிகளை அமைச்சு பொறுப்பேற்கவுள்ளது. இவற்றை காணிகள் இல்லாதவர்களுக்கு வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த மாத இறுதிவரை உஷ்ணம் நீடிக்கும்

தற்போதைய கடும் வெப்பமான நிலைமை மே மாதஇறுதியில் மாற்றமடையுமென எதிர்பார்க்கப்படுகின்றது. அதுவரை உஷ்ணமான காலநிலையே நீடிக்குமென வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.இது தொடர்பாக வானிலை அவதான நிலையத்தின் மட்டக்களப்பு நிலையத்தின் பொறுப்பதிகாரி கே.சூரியகுமார் கருத்து தெரிவிக்கையில்;தற்போதைய உஷ்ணமான காலநிலைக்கு இடைப்பட்ட பருவப்பெயர்ச்சி காலநிலையே காரணமாகும். இக்காலநிலை தென்மேல் பருவப்பெயர்ச்சி காலநிலை உருவாகும் வரை நீடிக்கும்.பொதுவாக தென்மேல் பருவப்பெயர்ச்சி மே முதல் செப்டெம்பர் வரை காணப்படும்.

இந்நிலையில் மே மாத இறுதியில் இந்த இடைப்பட்ட காலநிலை மாற்றமடையுமென எதிர்பார்க்கின்றோம்.இக்காலநிலையின் போதே அதிக உஷ்ணம் காணப்படும். அதேநேரம் இலங்கை முழுவதும் பரவலாக மழை கிடைக்கும் காலப்பகுதியாகும்.

 உஷ்ணத்தினால் நீர் நிலைகளிலிருந்து நீர் ஆவியாகி மழையாக பொதுவாக மாலை வேளைகளில் நாடு முழுவதும் மழை திடீரென பெய்வது இக்காலநிலையில் வழமையானதாகும்.தென்மேல் பருவப்பெயர்ச்சி ஆரம்பமாகியதுமே தென்மேற்கு பகுதிகளான கொழும்பு, காலி போன்ற இடங்களில் மழை பெய்யும்.அதேநேரம் கிழக்குப் பகுதியில் உஷ்ணமான காற்று வீசுமென அவர் தெரிவித்தார்.