இதுவரையும் இலங்கையில் நடந்த அரசியல் சதுராட்டத்தில் பல துன்பங்களை அனுபவித்தவர்கள் இலங்கைத் தமிழர்கள். பஞ்சபாண்டவர்கள் தங்கள் மனைவியைச் சூதாட்டத்தில் இழந்ததுபோல் தமிழ்த் தலைவர்கள். ஏழைத் தமிழர்களின் வாழ்க்கையைச் சிங்கள இனவெறிக்குப் பலியிட்டார்கள். பாஞ்சாலி, கணவர்களின் சபதத்தை நிறைவேற்ற, அவள் பயணத்தைக் காடுமேடுகளிற் தொடர்ந்தது போல்த் தமிழ்மக்களும் தலைவர்களின் பகற்கனவை நிறைவேற்ற இடத்துக்கு இடம் அநாதைகளாக மேய்க்கப் பட்டார்கள் கடைசியில் புதுக்குடியிருப்பின் மிகச்சிறிய முள்ளியவளைப் பகுதியில் அடைக்கப்பட்டு, வைரவ கடவுளுக்குப் பலி கொடுக்கப்பட்ட ஆடுகளாகத் தமிழ் மக்கள் எதிரிக்குப் பலி கொடுக்கப்பட்டார்கள்.
கொலைகளுக்குத் தப்பி வேலி தாண்டி ஓடிய உயிர்கள் இருபக்கக் குண்டுகளாற் துளைக்கப்பட்ட வெற்று மரங்களாகத் தமிழ்மண்ணிற் சாய்ந்து விழுந்தார்கள். ஊனமடைந்த உயிர்கள் இன்று ஏனேதானே என்று வாழ்ந்து முடிக்கவும் புலம்பெயர் தமிழர்கள் விடுவதாயில்லை. இதுவரையும் தமிழர்களின் ‘விடுதலை’ என்ற பெயரில் பணம் படைத்த புலம்பெயர் தமிழ் முதலைகள் இன்றும் இலங்கைத் தமிழர் பெயரில் எப்படி உழைக்கலாம் என்ற வியூகங்களை வகுத்துக் கொண்டிருக்கிறார்கள்.
பிரபாகரன் கொலைசெய்யப்பட்ட செய்தி உலக ஊடகங்களில் வெளிவந்து கொண்டிருந்தபோதும், ஐரோப்பிய நாடுகளிலுள்ள தமிழ்க் கடைகளில் கூலிவேலை செய்யும் ஏழைத் தமிழ் இளைஞர்களிடம் ‘தலைவர் கடைசி யுத்தத்திற்குப் பலம் வாய்ந்த ஆயுதம் வாங்கப்போகிறார், பிரபாகரன் தலைவராகவிருந்து சண்டை தொடர்வதால் வெளிநாடு வந்த நீங்கள் ஒவ்வொருத்தரும் கட்டாயம் பணம் தரவேண்டும்’ என்று சொல்லிப் பணத்தை அள்ளிக்கொண்டு போனதை எத்தனையோ ஏழைத்தமிழ் இளைஞர்கள் மறக்க மாட்டார்கள்.
தமிழர்களின் பெயரில் சேர்த்த கோடிக்கணக்கான பணம் அவர்களின் கையில் இருக்கிறது. அதை மறைத்து, அந்தப் பணத்தைச் சூறையாட தமிழர்களின் பெயர் சொல்லிக்கொண்டு பல கூட்டங்கள் போடுகிறார்கள். வெளிநாட்டுப் பிரமுகர்கள், அரசியல்வாதிகள் தமிழருக்கு ஈழம் எடுத்துத் தருவதாகக் கற்பனைக் கதைகள் விடுகிறார்கள். மனச் சாட்சியுள்ள தமிழர்கள் இவர்களைக் கேள்வி கேட்காமல் விட்டால் புலம்பெயர்ந்த ஈழம் என்ற பெயரில் பல கோமாளிக் கூத்துக்கள் இன்னும் அரங்கேற்றப்படப் போகின்றன. அதற்கு இந்திய தமிழக அரசியல்க் கோமாளிகள் தாளம் போடுவார்கள். இலங்கைத் தமிழரின் கண்ணீரும் கதறலும் ஒரு சில முதலைகளின் மூலதனமாக மாறிவிட்டது. இதைக்கேட்க யாருமில்லையா?
அண்மையில், 04.09.10ல் ‘பிரிட்டிஷ் தொழிற்கட்சிசார்ந்த தமிழர்கள்’ என்ற பெயரில் வெஸ்ட்மினிஸ்டர் சென்றல் ஹாலில் ஒரு கூட்டம் நடந்தது. தொழிற் கட்சியின் பழைய தலைவர் கோர்டன் பிறவுன் இராஜினாமா செய்ததால் தொழில் கட்சியின் புதிய தலைமைத்துவத்துக்குப் போட்டியிடும், முன்னாள் வெளிவிவகார அமைச்சர் மிலிபாண்ட் அவர்களுக்கு ஆதரவளிப்பதற்காக இக் கூட்டம் ஒழுங்கு செய்யப்பட்டதாம். ஆனால் கூட்டத்தில் பேசிய புலி ஆதரவாளர்கள், ‘பிரித்தானியா, உலக ஐனநாயகக் காவலன்’ என்றும், மிலிபாண்ட் ஒருகாலத்தில் பிரதமராக வந்தால் கட்டாயம் ஈழம் கிடைக்க வாய்ப்புண்டு என்ற தோரணையில் பேச்சுரைகளை அள்ளி வழங்கினார்கள்.
( டேவிட் மிலிபான்ட் பற்றிய முன்னைய பதிவு: ”புலிகள் ஆயுதங்களைக் கைவிடுவது நிரந்தரத் தீர்வுக்கு அவசியம்” பிரான்ஸ் – பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர்கள் அறிக்கை – புலிகளின் கையில் ஆயுதம்? : த ஜெயபாலன் )
பிரித்தானியரின் பேச்சைக் கேட்டு யுத்தத்தை நிறுத்தாத (பிரபாகரனைக் காப்பாற்றாத) இலங்கை அரசைக் கிண்டலடித்தார்கள். இலங்கையில் ஆளுமை செய்யும் ராஜபக்ஸா சகோதரர்களை யுத்தக் குற்றங்களை விசாரிக்கும் அகில உலக கோர்ட்டுக்கு கொண்டுபோவதற்கு உதவி செய்யும்படியும் கோரிக்கைகளை எழுப்பினார்கள். பொருளாதாரத் தடைபோட்டு இலங்கையைப் பணிய வைக்கும் யோசனைகளும் முன்வைக்கப்பட்டன.
பிரித்தானியா ஒருநாளும் தனக்கு இலாபம் கிடைக்காத விடயங்களில் தலையிடாது என்பதும், இலங்கையில் பிரித்தானியரால் ஒன்றும் செய்ய முடியாது என்பதும் தெரியாத தமிழ்ப் பிரமுகர்களின் குழந்தைத்தனமான பேச்சுக்களால் வந்திருந்த பலர் தர்மசங்கடப்பட்டார்கள். புலி ஆதரவாளர்களால் ஒழுங்கு செய்யப்பட்ட இந்தக் கூட்டத்தில் தமிழ்ப் பிரமுகர்கள் தங்களை முன்னிலைப்படுத்த முயன்றதும் டேவிட் மிலிபாண்ட்டுடன் ஒன்றாய் நின்று படம் எடுக்க முண்டியடித்ததும் வேடிக்கையாகவிருந்தது.
பிரித்தானிய தொழிற்கட்சி பற்றியோ அந்தக் கட்சியின் பாரம் பரியம் பற்றியோ, இரண்டாம் உலக யுத்தத்தின்பின் தொழிற்கட்சி ஆட்சியிலிருந்த படியாற்தான் பிரித்தானிய சாம்ராச்சியத்தை உடைத்து அடிமைகளாகவிருந்த நாடுகளுக்குச் சுதந்திரம் கொடுத்தார்கள் என்பதும் புலி ஆதரவாளர்களுக்குத் தெரியாது போலும். ஆனாலும் இன்று பிரித்தானிய தொழிற்கட்சியின் தலைவராகவிருந்த ரோனி பிளெயர் ஈராக் நாட்டுக்குப் படையெடுத்து சதாம் ஹசேயினைக் கொலைசெய்து, ஈராக் மக்களைத் துன்பத்தில் ஆள்த்துவது போல், இலங்கைக்கும் பிரித்தானியப் படையிறங்க வேண்டும் என்ற ஆதங்கத்தை கூட்டத்திற்கு வந்திருந்த புலி ஆதரவாளர்களில் ஒன்றிருவர் பகிர்ந்து கொண்டார்கள்.
கூட்டத்துக்கு வந்திருந்த சில இளைஞர்கள் ‘இவர்கள் (புலி ஆதரவாளர்கள்) எப்படியெல்லாம் சொல்லித் தமிழ் மக்களை ஏமாற்றிப் பணம் பறிக்கிறார்கள்’ என்று விரக்தியுடன் பேசியதையும் கேட்கக் கூடியதாகவிருந்தது.
கூட்டத்துக்கு வந்திருந்த தொழிற்கட்சி உறுப்பினர்களான, பழைய வெளிவிவகார அமைச்சர் டேவிட் மிலிபாண்ட், பழைய அமைச்சர்களில் ஒருத்தரான கீத்வாஸ், ஐரோப்பியப் பாராளுமன்றப் பிரதிநிதியான குளொட் மொறிஸ், பிரித்தானியப பாராளுமன்றப் பிரதிநிதிகளான சிவோன் மக்டோனால், மைக்கல்கேற், ஸ்ரெலா கிறிஸி, என்போர் தமிழர்களின் ‘ஈழப்’ பிரச்சினையில் கைவைக்கவில்லை. இராஐதந்திரத்துடனான வசனங்களால், தமிழர்கள் ஏன் தொழிற் கட்சியில் சேர வேண்டும் என்று பேசினார்கள். பட்டும்படாத மாதிரி தமிழரின் பிரச்சினைகளைப் பற்றிப் பேசினார்கள். நான் இங்க தமிழ்ப் பிரச்சினை பற்றிப் பேசவரவில்லை, லேபர் பார்ட்டி பற்றிப் பேசவந்திருக்கிறேன்’ என்று சிவோன் மக்டோனால்ட் குறிப்பிட்டார்.
தமிழ்ப் பேச்சாளர்கள் ‘இலங்கையில் சிங்களவர்கள் செய்த அதிபயங்கரமான இனப் படுகொலையைப்’ பற்றிப் பேசினார்கள். புலிகள் மற்ற இயக்கங்களுக்குச் செய்த கொடுமைகளையோ, டெலோ உறுப்பினரை ஆரிய குளம் சந்தியில் டயர்களைப் போட்டு உயிரோடு எரித்ததையோ யாரும் அங்கு பேசவில்லை.
டேவிட் மிலிபாண்ட் பேசும்போது இலங்கைத் தமிழர்கள் உலக அரசியலில் தனது பார்வையை விரிவுபடுத்தியிருப்பதாகச் சொன்னார்.
பிரித்தானியாவில் வாழும் ஆசிய மக்களில் மிகவும் சிறந்த முறையில் ஒன்றுசேர்ந்து வேலை செய்பவர்கள் இலங்கைத் தமிழர்கள் என்று அங்கு வந்திருந்த தமிழர்களுக்கு ஐஸ் வைக்கப்பட்டது. தமிழர்கள் ஒற்றுமையாயில்லாத படியாற்தான் தமிழர்கள் இந்த நிலையிலிருக்கிறார்கள் என்பதைத் தமிழர்களால் அரசியல் பார்வை பெற்ற டேவிட் மிலிபாண்டக்குச் சொல்வாரில்லை.
பாராளுமன்றப் பிரதிநிதியான சிபோன் மக்டோனால்ட் ‘இலங்கைப் பொருட்களை பகிஸ்கரிக்க வேண்டும்’ என்று பிரசாரம் செய்வதாகச் சொல்லப்பட்டது. தமிழக்கடைகளில் வல்லாரைக்கீரை கிடைக்காவிட்டால் விரதச்சாப்பாட்டில் ருசிவராது என்ற உண்மையை அந்தப் பெண்ணுக்கு யாரும் சொல்லவிலலை.
இலங்கைக்குப் பொருளாதாரத்தடை விதிக்க வேண்டும் என்ற குரலும் தமிழ்ப் பேச்சுக்களில் ஓங்கி ஒலித்ததது. பொருளாதாரத்தடை மூலம் ஈராக் நாட்டைப் பிரிட்டிசார் பழிவாங்கினார்கள். வெள்ளைக்காரன் மருந்து கொடுக்காமல் ஈராக்கியக் குழந்தைகள் ஆயிரக்கணக்கில் இறந்த கதை தெரிந்தபடியாற்தான் இன்று வெள்ளைக்காரனை நம்பியிருக்காமல் ‘சிங்கள சகோதரங்கள்’ இந்தியாவை நம்புகிறது என்பதையும் புலி ஆதரவாளர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.
மேற்கு நாட்டின் பொருளாதார வீழ்சியினால் அவர்கள் திண்டாடிக் கொண்டிருக்கிறார்கள் அப்படியிருக்கும்போது, இந்தியாவைப் பகைத்துக்கொண்டு இலங்கையைப் பழிவாங்க பிரிட்டிஷார் தயஙகுவார்கள். இன்று இந்திய, சீன மூலதனங்கள் இலங்கையை வளம்படுத்துகிறது. பூனை கண்ணை மூடிக்கொண்டால் உலகம் இருண்டு விடும் என்பதுபோல் புலிகள் கனவு காண்கிறார்கள்.
இலங்கைக்குப் போய்வரும் பல தமிழர்கள் யாழ்ப்பாணம் எப்படி விருத்தியடைகிறது என்பதைப் பெருமையாகச் சொல்கிறார்கள். இதைப் புலிகள் நம்பத் தயாரில்லை போலிருக்கிறது. இலங்கையில் எப்படியும் ஒரு பிரச்சினையைக் கிளப்பி அதில் பணம் படைத்துத் தனது குடும்பத்தை முன்னேற்றுவதையே பல முதலைகள் விரும்புகிறார்கள் என்பது பல தமிழர்களுக்குத் தெரியும்.
பிரபாகரனை வை.கோ எமலோகம் அனுப்பி விட்டதாக கேபி அறிக்கை விட்டதையும் செவி மடுக்காமல் இன்னும் ஒரு போராட்டத்தை முன்னெடுக்குத் துடிக்கும் இவர்களுக்குத் தமிழர்கள் பாடம் படிப்பிக்க வேண்டும்.
இன்று உலகில் நடைபெறும் மாற்றங்ளை அவதானித்தால், நாளைக்குப் பிரித்தானிய அரசு, இலங்கையுடன் பெரிய வர்த்தக உடன்படிக்கையைச் செய்யாது என்று சொல்வதற்கில்லை. இலங்கையின் மன்னார்ப் பகுதிகளில் கண்டுபிடிக்கப் பட்டிருக்கும் எண்ணை பற்றிய முழுத்தகவல்களும் நோர்வே நாட்டில் இருக்கிறது. இலங்கைக்குரிய எண்ணையின் பலன் இலங்கைக்குக் கிடைப்பதற்கு இலங்கையிடம் விஞ்ஞான, தொழில் வளர்ச்சி கிடையாது. அதனால் இந்தியாவும் பிரித்தானியாவும் இலங்கையுடன் ஒரு ஒப்பந்தம் செய்யும் நிலை வந்தால் பிரித்தானியாவில் தமிழர்கள் லண்டனில் அரசியல்வாதிகளை வைத்துக் கூட்டம் வைத்துப் படம் எடுப்பதற்கும் வசதி வராது.
இதுவரையும் புலிகள் ஆதரவு கொடுத்த அரசியல்வாதிகள், தோற்றுக்கொண்டே வந்திருக்கிறார்கள். பிரபாகரன் புலிகளின் ஆதரவு அளவுக்கு மிஞ்சிப்போனதால் வைகோ கோஸ்டியால் பரலோகம் அனுப்பப்பட்டார்.
‘கிலாரி கிளிண்டனுக்கான தமிழர்கள் என்று அமெரிக்காவில் புலி ஆதரவாளர்கள் ஒன்று சேர்ந்தார்கள் அந்தப் பெண்மணி தோற்றுப்போக, முன்பின், மக்களுக்குப் பெரிதாகத் தெரியாமலிருந்த ஓபாமா வெற்றி பெற்று இன்று விழிபிதுங்கப் பிதுங்க அமெரிக்கப் பிற்போக்குவாதிகளிடம் பேச்சுவாங்கிக் கொண்டிருக்கறார்.
லண்டனில் மேயராகவிருந்த கென் லிவிங்ஸ்டனைத் தோளிற் சுமக்காத குறையாகக் கொண்டு புலிகள் திரிந்தார்கள் பாவம் அந்த மனிதனுக்கும் படுதோல்வி.
இன்று கனடியக் கவர்ச்சிக் கவிஞரும் அமெரிக்க விரக்தி வழக்கறிஞரும் இதுவரை முப்படையும் வைத்துப் போராடிப் பிரபாகரனால் எடுக்க முடியாத ஈழத்தைத் தமிழருக்கு எடுத்துத்தருவதாகப் பிரசாரம் செய்கிறார்கள். அந்தக் கனவை வைத்துக்கொண்டு சிலர் இன்னும் பணம் பறிக்கிறார்கள் இது கொடுமையிலும் கொடுமை. இலங்கையில் இன்னும் அகதிகளாகத் துயர்படும் ஆயிரக் கணக்கான தமிழர்கள் பற்றி இவர்கள் பேசுவது கிடையாது. இந்தியாவில் கண்ணீர் சிந்தும் இலங்கை அகதித் தமிழர்கள் பற்றி மூச்சும் விடமாட்டார்கள்.
எப்படியும் ஈழம் எடுத்து தமிழருக்குக் கொடுப்பதாகப் பறை சாற்றுகிறார்கள். இதுவரை இருதரம் தமிழர்கள் கையில் ஈழம் மற்றவர்களால் எடுத்துக் கொடுக்கப்பட்டது. இந்தியா வந்து ஈழம் (கிட்டத்தட்ட) எடுத்து கொடுத்தபோது எதிரியுடன் சேர்ந்து இந்தியாவைத் துரத்தினார்கள். ஈழம் எடுத்துக்கொடுத்த ரஜீவ் காந்தியைப் போட்டுத் தள்ளினார்கள். இந்தியாவுக்கு எதிராகச் சண்டைபிடிக்க ஆயுதம் கொடுத்த அவர்களின் சினேகிதனாயிருந்த பிரேமதாசாவைக் கொலை செய்தார்கள். நோர்வே நாடு ஈழம் (கிட்டத்தட்ட) என்ற ஒப்பந்தத்திற்கு கொண்டு போனபோது அந்த ஒப்பந்தத்தை உதறிவிட்டுச் சண்டைக்குப் போய் மண்டைகளைப் போட்டார்கள். இப்போது மிலிபாண்ட் மூலம் ஈழம் கேட்கிறார்கள் அதை வைத்துக்கொண்டு யாரைப் பரலோகம் அனுப்பப் போகிறார்கள்?
‘நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நெறிகெட்ட மனிதரை நினைந்து விட்டால்’
(இக்கட்டுரையாளர் தேசம்நெற் ஆசிரியர் குழுவிற்கு தன்னை வெளிப்படுத்திக் கொண்டுள்ளார். நீண்ட கால அரசியல் செயற்பாட்டாளர். எழுத்தாளர். )