‘உலகமயமாகி உள்ள உலகில் தமிழர் பிரச்சினையும் ஊடகங்களும்’ என்ற தலைப்பிலான மாநாடு லண்டனில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. ஒக்ரோபர் 23ல் வெஸ்ற்மினிஸ்ரர் பல்கலைக்கழகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இம்மாநாட்டை International Association of Tamil Journalists – சர்வதேச தமிழ் செய்தியாளர் ஒன்றியம் என்ற அமைப்பு ஏற்பாடு செய்துள்ளது. இவ்வமைப்பின் முதலாவது மாநாடு 2008 ஏப்ரல் 26ல் இடம்பெற்றது.
இந்த ஊடக அமைப்பில் உள்ள பிரதான ஊடகங்கள் ஐபிசி, ஒரு பேப்பர், ஜிரிவி (2008ல் ரிரிஎன்), தமிழ் கார்டியன் போன்ற லண்டனைத் தளமாகக் கொண்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவு ஊடகங்களே. ஏனைய நாடுகளில் உள்ள புலிஆதரவு அமைப்புகளும் நிறுவனங்களும் தங்கள் ஆதரவை நல்கி வருகின்றன. தமிழீழ விடுதலைப் புலிகள் மீதும் அதன் தலைவர் வி பிரபாகரன் மீதும் மிகுந்த நம்பிக்கையும் மதிப்பும் கொண்ட ஆனந்தி சூரியப்பிரகாசத்தைத் தலைவியாகக் கொண்டு இவ்வமைப்பு செயற்பட்டு வருகின்றது. பிபிசி தமிழோசையில் நீண்டகாலம் பணியாற்றிய இவருடைய சர்வதேச ஊடகவியல் முகத்தின் பின்னால் இருந்து இவ்வமைப்பை இயக்குபவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவு ஊடகங்களே.
2008ல் நடந்த மாநாட்டை குத்து விளக்கேற்றி ஆரம்பித்து வைத்தவர் ‘ஆணிவேர்’ படத்தின் தயாரிப்பாளரும் வர்த்தகப் பிரமுகருமான திலகராஜா தம்பதிகள். திலகராஜா தற்போது வடக்கின் வசந்தம் அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் ஹொட்டல்களை உருவாக்கி வருகின்றார். அந்நிகழ்வின் வரவேற்புரையை வழங்கியவர் ஒரு பேப்பர் ஆசிரியர் கோபி ரட்ணம். தமிழ் கார்டியன் சுதா நடராஜா, விநோதினி கணபதிப்பிள்ளை ஆகிய இருவரும் 2008 மாநாட்டில், முக்கியமாக உரையாற்றியவர்கள், 2010 மாநாட்டிலும் முக்கிய பேச்சாளர்களாக உள்ளனர். அதே போன்று நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் கருத்தியல் சிற்பிகளில் ஒருவராகக் கருதப்படும் பேராசிரியர் சேரன் 2008 மாநாட்டிலும் முக்கிய பேச்சாளராகக் கலந்துகொண்டவர், 2010 இலும் முக்கிய பேச்சாளராக கலந்துகொள்கிறார். ரிரிஎன் தொலைக்காட்சிக்கு பிரதியீடாக தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களால் அவுஸ்திரேலியாவில் இருந்து இயக்கப்படும் ஜீரிவி யும் இம்மாநாட்டில் முக்கிய பங்கெடுக்கின்றது. ஜிரிவி இன் நிகழ்ச்சி வழங்குநர் தினேஸ் மாநாட்டின் ஒரு அமர்வுக்கு தலைமை தாங்குகின்றார்.
ஊடகங்களின் புலிமயமாக்கல்:
தமிழீழ விடுதலைப் புலிகள் தாயகத்திலும் புலத்திலும் தமிழ் மக்கள் மத்தியில் இருந்த பெரும்பாலான பொது அமைப்புகளை புலிமயமாக்கலுக்கு உட்படுத்தி வந்தன. தொழிற்சங்கங்கள், மாணவர் அமைப்புகள், ஊடகங்களும் இந்தப் புலிமயமாக்கலில் இருந்து தப்பவில்லை. இந்தப் புலிமயமாக்களில் புலி ஆதரவு ஊடகங்களின் பங்கு குறிப்பிடத்தக்கது.
இந்தப் புலிமயமாக்கலின் உச்சமாக 2007 பிற்பகுதியில் தமிழ் ஊடகங்களுக்கான ஒரு அமைப்பை உருவாக்க முயற்சிக்கப்பட்டது. வன்னியில் இருந்து வந்து தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவு வானொலியான ஐபிசி வானொலியின் நிர்வாகத்தைப் பொறுப்பேற்ற ரமணன் என்பவரே இதன் உருவாக்கத்தில் ஈடுபட்டவர்களில் முக்கியமானவர். தமிழ் சர்வதேச செய்தியாளர் ஒன்றியத்தை அமைப்பதற்கான முதலாவது சந்திப்பு ஐபிசி கலையகத்தில் இடம்பெற்றது. இச்சந்திப்பை குகன் என்பவர் ஏற்பாடு செய்திருந்தார். இச்சந்திப்பிற்கான அழைப்பு தெரிவு செய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான ஊடகவியலாளர்கள் சிலருக்கே கொடுக்கப்பட்டது.
அவ்வழைப்பை ஏற்று இந்நிகழ்வில் கலந்துகொள்ளச் சென்ற அப்போது தீபம் தொலைக்காட்சியின் ஊடகவியலாளராக இருந்த கண்ணன் இச்சந்திப்பில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படவில்லை. இது புலிமயமாக்கலின் உச்சமான நிகழ்வு. இந்த ஊடக அமைப்பில் புலிகள் மீது மென்போக்குக் கொண்ட அல்லது புலிகளை விமர்சிக்கவோ அல்லது புலிகளுக்கு எதிரான செய்திகளை வெளியிடுவதை தவிர்த்து வந்த தீபம் தொலைக்காட்சி, சன்றைஸ் வானொலி போன்ற ஊடகங்களும் அதன் ஊடகவியலாளர்களுமே சேர்த்துக் கொள்ளப்படவில்லை. ஆகவே இது முற்று முழுதான புலி ஊடக அமைப்பு என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
இவ்வமைப்பின் தலைவி ஆனந்தி சூரியப்பிரகாசம் மட்டுமே இந்த அமைப்பிற்கு ஒரு ஊடகவியல் சாயத்தை வழங்கிக் கொண்டு உள்ளார்.
ஊடகவியலின் அடிப்படை:
ஊடகங்களும் ஊடகவியலாளர்களும் மக்களின் காவலர்களாக செயற்பட வேண்டும். ஊடகத்தின் முதலும் முக்கியமானதுமான கடமை உண்மையை வெளிக்கொணர்தல். நல்லாட்சியை உறுதிப்படுத்துவதற்கு ஊடகவியலின் பங்கு மகத்தானது. இவ்வாறான ஊடகவியலின் அடிப்படை அம்சங்கள் எதனையுமே இந்த மாநாட்டை ஏற்பாடு செய்யும் சர்வதேச தமிழ் செய்தியாளர் ஒன்றியம் கொண்டிருக்கவில்லை.
இந்த ஊடகங்கள் தமிழீழ விடுதலைப் புலிகளையும் அதன் தலைமையையும் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர்களாக்கியது. தமிழீழ விடுதலைப் புலிகள் மீதும் அதன் தலைமை மீதும் விம்பங்களைக் கட்டி அவர்களை யதார்த்தத்தில் இருந்து அந்நியப்படுத்தியது. தமிழீழ விடுதலைப் புலிகள் மீது விமர்சனங்கள் வைக்கப்படும் போதெல்லாம் அவ்வாறான விமர்சனங்களை வைப்போர் மீது தனிமனித தாக்குதலை நடாத்தியது. ஆகவே International Association of Tamil Journalists என்பதிலும் பார்க்க International Association of Tiger Journalists என்பதே இவ்வமைப்பிற்கு பொருத்தமான பெயராக இருக்க முடியும்.
”இடிப்பாரை இல்லாத எமரா மன்னன்
கெடுப்பா ரிலானுங்கெடும்” (குறள் 448)
‘தவறுகளை இடித்து உரைக்கின்றவர்கள் இல்லாது இருந்தால், எப்படிப்பட்ட சிறப்பான மன்னனாக இருந்தாலும் அம்மன்னனுக்கு கேடு செய்பவர்களே இல்லாவிட்டாலும் அம்மன்னன் கெட்டு அழிந்து போவான்’ என்கிறது இக்குறள்.
இதற்கு மிகச்சிறந்த உதாரணமாகி உள்ளது தமிழ்த் தேசிய மன்னன் வே பிரபாகரனும் International Association of Tiger Journalists ம். மே 18 வரை இந்த ஊடகங்கள் எழுதிய எவ்வித ஆதாரமோ அடிப்படையோ அற்ற செய்திகளும் ஆய்வுகளும் புகழ் மாலைகளும் வே பிரபாகரனினது தலைமையினதோ தமிழீழ விடுதலைப் புலிகளினதோ எவ்வித தவறான அணுகுமுறையையும் சுட்டிக்காட்டவில்லை. மாறாக தமிழீழ விடுதலைப் புலிகளையும் அதன் தலைவர் வே பிரபாகரனையும் சுற்றி விம்பங்களைக் கட்டமைத்தன. விளைவு…..
‘இடிப்பாரை இல்லாத ‘வே’யன்னா மன்னன்
கெடுப்பாருங் செய் கெட்டான்’
உண்மைகளை இருட்டடிப்புச் செய்தனர்:
International Association of Tiger Journalists அமைப்பில் உள்ள ஊடகங்களும் ஊடகவியலாளர்களும் பேராசிரியர் சேரன் போன்ற மதியுரைஞர்களும் வன்னி மக்களைப் பணயம் வைத்து தமிழீழ விடுதலைப் புலிகள் தங்களைக் காப்பாற்ற முற்பட்டபோது எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. வன்னி மக்கள் ஆயிரம் ஆயிரமாகச் செத்து மடிந்த போதும் இந்த ஊடகங்கள் மக்களை விடுவிக்குமாறு தமிழீழ விடுதலைப் புலிகளைக் கோரவில்லை. மாறாக அந்த மண் வன்னி மக்களின் பூர்வீக மண் என்று கதையளந்து அம்மக்களை தமிழீழ விடுதலைப் புலிகளின் பணயக் கைதிகளாக இருக்க நிர்ப்பந்தித்தன. இந்த ஊடகங்களின் சில ஊடகவியலாளர்கள் ஒருபடி மேலே சென்று தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்து உயிருக்குப் பயந்து தப்பியோடிய மக்களை எவ்வித கூச்சமும் இன்றி துரோகம் இழைப்பதாக விபரித்தனர்.
மாநாட்டில் பங்குபற்றுவோர்:
இச்சந்திப்பிற்கு முன்னர் குறிப்பிட்டவர்களுடன் ஐவன் பீதுருப்பிள்ளை போன்றவர்களும் இணைக்கப்படுவார்கள். மேலும் நோர்வேயில் இருந்து சேந்தன் என்ற இளைய தலைமுறை இளைஞரும், டென்மார்க்கில் இருந்து மற்றுமொரு இளைஞரும் கலந்து கொள்ள உள்ளனர்.
இலங்கையில் இருந்து வீரகேசரி ஆசிரியர் தேவராஜா கலந்துகொள்கிறார்.
இச்சந்திப்பில் சர்வதேச மன்னிப்புச்சபையின் சார்பில் ரமேஸ் கலந்துகொள்கின்றார். தமிழகத்தில் பத்திரிகையாளராகக் கடமையாற்றிய இவர் தமிழீழ விடுதலைப் போராட்டத்துடன் நீண்டகாலத் தொடர்புடையவர். தனது கருத்துக்களை அனேகமாக வெளிப்படையாகவே தெரிவிக்கக்கூடியவர். பக்கம்சாராது கருத்துக்களை வெளிப்படுத்தக் கூடியவர். இவருடைய உரை அங்குள்ள பலருக்கு அசௌகரியத்தையும் ஏற்படுத்தலாம். இவருடன் சர்வதேச ஊடக அமைப்பைச் சேர்ந்த சிலரும் கலந்துகொள்ள உள்ளனர்.
இந்தியாவில் இருந்து 2008ல் டெக்கன் ஹரல்ட் சார்பில் பகவான் சிங் கும் சுந்தரராஜன் முராய் உம் கலந்துகொண்டனர். 2010 மாநாட்டுக்கு ரைம்ஸ் ஒப் இந்தியா பத்திரிகையின் இலங்கைப் பிரிவில் இருந்து அம்ரித் லால் என்ற வட இந்தியர் கலந்துகொள்கிறார். இச்சந்திப்பில் கலந்து கொள்ளும் மற்றவர்…..
புலிஆதரவு ஊடகங்களின் மாநாட்டில் அருள் சகோதரர் அருள்எழிலன்
தமிழகத்தைச் சேர்ந்த ஊடகவியலாளரும் இனியொரு இணையத்தின் முக்கிய ஊடகவியலாளருமான அருள்எழிலன் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவு ஊடக மாநாட்டில் கலந்துகொள்கிறார். இவர் இலங்கையில் இயங்கும் டான் தொலைக்காட்சி நிறுவனர் குகநாதன் செப்ரம்பர் 3ல் தமிழகத்தில் வைத்து கடத்தல் – கைது விவகாரத்தில் தொடர்புபட்டவர். (டான் ரிவி உரிமையாளர் குகநாதன் – அருள்சகோதரர்கள்: கடத்தல் – கைது விவகாரம்: ‘இது ஒரு சட்டபூர்வமான கடத்தல்’ எஸ் எஸ் குகநாதன்)
இந்த மாநாட்டுக்கு இந்திய ஊடகவியலாளர் அம்ரித் லால் உடன் தமிழகத்தைச் சேர்ந்த, ‘தேசியத் தலைவர் இன்னமும் உயிருடன் உள்ளார்’ என்பதை ஏற்றுக்கொள்ளும் ஊடகவியலாளரைத் தேடினர். ஜுனியர் விகடன் ஊடகவியலாளர் ஒருவரையே அழைக்க ஆரம்பத்தில் முயற்சிக்கப்பட்டது. தொடர்ந்து காற்றுக்கென்ன வேலி படத்தின் இயக்குநரையும் அழைக்க முயற்சிக்கப்பட்டது. இருவருக்கும் வருவதற்கான சாத்தியம் இருக்கவில்லை என்பதால், இறுதியாக ரிரிஎன் தொலைக்காட்சியில் பணியாற்றிய, மதியுரைஞர் காலம்சென்ற அன்ரன் பாலசிங்கத்திடம் பேட்டி காண லண்டன் வந்த அருள் சகோதரர்களின் குடும்பத்தில் ஒருவரை அழைக்க முடிவாகியது. அருள் எழிலன் இந்த மாநாட்டுக்கு அழைக்கப்பட்டார்.
புலிகளின் சம்பளப் பட்டியலில் சில தமிழக ஊடகவியலாளர்கள்:
இன்று தமிழகத்தில் உள்ள சில ஊடகங்களும் ஊடகவியலாளரும் புலம்பெயர் புலி முகவர்களின் சம்பளப் பட்டியலில் உள்ளனர். அல்லது அதனூடாக லாபம் அடைகின்றனர். ஈழத் தமிழரின் அவலம் பற்றி எழுதுவதும் தமிழீழ விடுதலைப் புலிகள் பற்றி எழுதுவதும் தமிழக வியாபார ஊடகங்களின் எழுத்தாளர்களின் ஒரு வியாபாரத் தந்திரமாக மாறியுள்ளது.
நக்கீரன், நக்கீரன் கோபால் போன்ற இந்த வியாபார ஊடகங்களினதும் ஊடகவியலாளர்களதும் வாடகை உணர்வுகள் ஈழத் தமிழ் மக்களின் அழிவுக்கே வித்திட்டு உள்ளது.
மே 18ல் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே பிரபாகரன் கொல்லப்பட்ட செய்தி உலக ஊடகங்களில் எல்லாம் வெளிவந்த போது நக்கீரன் சஞ்சிகை தலைவர் உயிருடன் இருப்பதாக படம் காட்டியது. (உண்மையான படமும் நக்கீரன் கிராபிக்ஸ் செய்த படமும் அருகில் இணைக்கப்பட்டு உள்ளது.) இன்னுமொரு சஞ்சிகை அவர் எப்படித் தப்பிச் சென்றார் என்று தொடர் எழுதியது.
இவ்வாறான ஊடகங்களுக்கும் ஊடகவியலாளர்களுக்கும் பணம் லண்டனில் இருந்தே அனுப்பி வைக்கப்பட்டதாக அனுப்பியவருடன் கூட இருந்த முன்னாள் புலி ஆதரவாளர் ஒருவர் தேசம்நெற் க்குத் தெரிவித்தார். இந்தக் குற்றச்சாட்டை கெ பி என்றழைக்கப்படும் குமரன் பத்மநாதன் கைது செய்யப்படுவதற்கு முன்னதாகவே (யூன் 14 2009ல்) தேசம்நெற்க்கு தெரிவித்து இருந்தார்.
பணத்திற்காக செய்திகளை உருவாக்கும் சில தமிழக ஊடகங்கள்:
டான் தொலைக்காட்சி நிறுவனர் குகநாதனைத் தவிரவும் அண்மைக் காலத்தில் தமிழகத்தில் இலங்கைத் தமிழர்களை குறிவைத்து கடத்தல்கள், கப்பம் வாங்கல் போன்ற சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக தமிழகப் பத்திரிகைகள் தெரிவிக்கின்றன. இது தொடர்பாக ஈஎன்டிஎல்டிப் அமைப்பு நக்கீரன் பத்திரிகை எவ்வாறு ஒரு கடத்தல் நாடகத்தை பின்னுகிறது என எழுதியுள்ளது.
‘‘பிடிபட்ட ரஜனி’ என்று ஓர் படத்தினை போட்டுள்ளீர்கள். யார் பிடித்தது? போலீஸ்சார் பிடித்தனரா? வலுக்கட்டாயமாக அவரது கடையிலிருந்தவரை வடபழனியிலிருக்கும் மயூரியா ஹோட்டலுக்கு இழுத்துச் சென்று புகைப் படம் எடுத்து அனுப்பிவிட்டு, ‘பிடிபட்ட ரஜனிகாந்த்’ என்று மக்களை ஏமாற்றியுள்ளீர்கள். பிடிபட்டவர் என்றால் போலீசில் பிடிபட்டவர் என்ற அர்த்தம் தோன்றும் வகையில் கதை பின்னியுள்ளீர்கள். அகதிகளாகவும் அடிமைகளாகவும் வாழும் வாழ்க்கையின் வலி என்னவென்பதே தெரியாத நீங்கள் வியாபாரத்துக்காகவும் லாபத்திற்காகவும் ஈழப்பிரச்சினையில் மூக்கை நுழைத்து, கெடுதல் செய்து பணம் பண்ணுகிறீர்கள்” என ஈஎன்டிஎல்எப் அறிக்கை குற்றம்சாட்டி உள்ளது.
இவ்வாறான சம்பவங்கள் தொடர்பாக தமிழக எழுத்தாளரும் இடதுசாரிச் சிந்தனையாளருமான ஆதவன் தீட்சண்யா செப்ரம்பர் 20ல் வருமாறு தேசம்நெற் இல் பதிவிட்டுள்ளார். ”மாற்றுக்கருத்து கொண்டிருப்பவர்களை விலைபோனவர்கள் என்று அவதூறு பேசித்திரிந்த இவர்கள் (அருள் சகோதரர்கள்) எப்படி கூலிக்கு மாறடித்துக் கொண்டிருந்தனர், என்னென்ன ஆதாயங்களை அடைந்தார்கள் என்பது இப்போது அம்பலமாகியுள்ளது. ஆனால் கருணாநிதி குடும்பத்துடனான தமது தொடர்புகளின் செல்வாக்கில் இப்படி எத்தனை பேரை பிடித்து வைத்து கறந்திருக்கிறார்கள் என்பது இனிதான் வெளியாக வேண்டும்” என்கிறார்.
குகநாதன் கைது கடத்தல் வீடியோ பதிவு எங்கே:
குகநாதனை தாங்கள் கடத்தவில்லை என்றும் பொலிசாரே கைது செய்தனர் என்றும் கூறும் அருள் சகோதரர்கள் குகநாதன் தங்களுக்கு தர இருந்த சம்பளப் பாக்கியையே நீதிமன்றத்திற்கு வெளியே ஆனால் சட்டப்படி வாங்கிக் கொண்டு குகநாதனை விடுவித்ததாகக் கூறுகிறார்கள். இது தொடர்பாக தமிழ் அரங்கம் இணையத்தில் செப்ரம்பர் 03ல் டி அருள் செழியன், ”குகநாதன் கைது செய்யப்பட்ட விதம் காவல் நிலையத்தில் அவரது கெஞ்சல், இராயகரன் குறிப்பிடும் ஆட்களுடன் அவரது பேச்சுகள் ஆகியவை என்னால் வீடியோவாக பதிவு செய்யப்பட்டுள்ளது. அதை பார்த்தால் நடந்தது கட்டபஞ்சாயாதா அல்லது குகநாதனுக்கு காட்டப்பட்டது கருணையா என்பது தெரியவரும். இரயாகரன் விரும்பினால் அந்த ரகசிய வீடியோவின் 8 மணி நேரப்பதிவின் ஒரு பிரதியை அனுப்பித் தரத்தயாரா இருக்கிறேன்” எனக் குறிப்பிட்டு இருந்தார்.
தன்னைச் சட்டப்படி கடத்தியதாக தேசம்நெற்க்கு தெரிவித்த குகநாதன் அருள்செழியன் மேலே குறிப்பிட்ட வீடியோவை எவ்வித எடிற்றிங்கும் செய்யாமல் வெளியே விடும்படி சவால் விட்டார். (குகநாதன் கைது – கடத்தலில் அருள் சகோதரர்களுடன் கைகோர்த்த தமிழ்தேசியம் – டான் ரிவி உரிமையாளர் குகநாதன் கடத்தல் – கைது விவகாரம் : த ஜெயபாலன்) ஆனால் ”அந்த ரகசிய வீடியோவின் 8 மணி நேரப்பதிவின் ஒரு பிரதியை அனுப்பித் தரத்தயாரா இருக்கிறேன்” என்ற அருள் சகோதர் இதுவரை அதனை வெளியிடவில்லை.
(மாறாக அருள் சகோதரர்களின் கடத்தல் – கைது விவகாரத்தை சட்டப்படியானது என்று வாதிடும் இனியொரு இணையத்தள ஆசிரியர் சபாநாவலன் குகநாதனின் மனைவியை இரவு நித்திரையால் எழுப்பி பதிவு செய்த ஒலிப்பதிவை இனியொருவில் பதிவிட்டார். இதுதொடர்பான கட்டுரை தேசம்நெற் இல் வெளியானதும், அதற்கு எவ்வித மனவருத்தத்தையும் வெளியிடாத இனியொரு இணையத்தளம் திருமதி குகநாதனின் ஒலிப்பதிவை சத்தமின்றி நீக்கியது. தமது தவறை வெளிப்படையாக ஏற்றுக் கொள்ளாத போதும் அதனை திருத்திக் கொண்டது வரவேற்கத்தக்கதே.)
தமிழகச் சிறப்பு முகாமில் அடைபட்டிருக்கும் மக்கள் பற்றிய பாராமுகம்:
இலங்கையில் வன்னி முகாம்களில் தமிழ் மக்கள் கடந்த ஆண்டு முதல் பட்டுவரும் இன்னல்கள் சொல்லில் அடங்காதவை அவற்றை விபரிக்க இங்கு வார்த்தைகள் இல்லை. இதனிலும் மோசமான வாழ்வை ஈழத்தமிழர்கள் இந்தியச் சிறப்பு முகாம்களில் வாழ்கிறார்கள். இவர்களின் துயர் மிகு வாழ்வு தொடர்பாக அங்கு பல ஆண்டுகளாகத் தடுத்து வைக்கப்பட்டு இருந்த எஸ் பாலச்சந்திரன் தேசம் சஞ்சிகையில் ஆக்கங்களை எழுதியதுடன் அவர்களை விடுவிக்கும் படியும் குரல்கொடுத்து வருகின்றார். இதே கருத்தை தேசம்நெற் வாசகர் ஒருவரும் வெளிப்படுத்தி இருப்பதை அருகில் உள்ள இணைப்பில் காணலாம். (‘அருள்’ சகோதரர்களுக்கு ஒரு சிறப்புமுகாம் அகதியின் கடிதம்.)
ஆனால் ஈழத் தமிழர்கள் பற்றி குரல் எழுப்பும் தமிழக ஊடகங்களும் அருள் சகோதரர்கள் போன்ற ஊடகவியலாளர்களும் தங்கள் ஆளுமை எல்லைக்கு உட்பட்ட விடயங்கள் தொடர்பாக மௌனமாகவே உள்ளனர். ”இவர்களைப் பொறுத்தவரை, ஈழத்திலிருந்து இந்தியாவுக்குள் தஞ்சம் புகுந்தவர்கள் எல்லாம் களத்திலே நின்று போராடாமல் புறமுதுகிட்டு ஓடிவந்தவர்கள் (ஒன்றுமில்லாமல் வந்து இங்கு அல்லாடுகிற இவர்களை ஆதரித்து என்ன பயன்?). ஆனால் ஐரோப்பாவுக்கும் அமெரிக்காவுக்கும் போனவர்கள் புலத்திலே இல்லாவிட்டாலும் களத்திலே இருப்பவர்கள் ( இப்படி சொன்னால் தான் டாலரும் பவுண்ட்சும் வரும்.) இந்தியாவிலுள்ள 85,000 ஏதிலிகளைப் பற்றி பேசினால் இங்குள்ள ஆட்சியாளர்களை எதிர்த்துப் போராட வேண்டியிருக்கும். அட்டைக் கத்தியை ஆகாயத்தில் சுழற்றி வீரனென்று பேரெடுக்க ஆயிரம் வழிகள் இருக்க எதற்கு வம்பு?” என்று இவர்கள் அந்த சிறப்பு முகாம் அகதிகள் பற்றி கணக்கெடுப்பதே இல்லை என்கிறார் ஆதவன் தீட்சண்யா.
அருள் எழிலனுக்கு புரட்சிகரச் சாயம்:
தமிழக வியாபார ஊடகங்களினதும் ஊடகவியலாளர்களினதும் நிலை இவ்வாறிருக்க, ”அருள் எழிலனைப் பொருத்தவரை எம்மைப் போன்ற புரட்சிகர அமைப்புகள் மற்றும் ஜனநாயக இயக்கங்களின் மீது மதிப்பு கொண்ட வெகு சில தமிழ்ப் பத்திரிகையாளர்களில் அவரும் ஒருவர். புலிகள் இயக்கத்தின் மீது மதிப்பு கொண்டிருந்தவர். அது விமரிசனமற்ற வழிபாடு அல்ல. சமீப காலமாக தனது கருத்துகளை மீளாய்வு செய்து மாற்றிக் கொண்டு வருபவர். புலிகள் பற்றிய அவரது அபிப்ராயத்துக்கும் அவரது நேர்மைக்கும் முடிச்சு போடும் விமரிசனங்கள் அவதூறானவை.” என மக்கள் கலை இலக்கியக் கழகம் – மகஇக என்ற தமிழகத்தைச் சேர்ந்த இடதுசாரி அமைப்பு அருள் எழிலனுக்கு புரட்சிகர பத்திரிகையாளர் என்று ஒக்ரோபர் 02ல் ‘ஐஎஸ்ஏ சான்றிதழ்’ வழங்கி உள்ளது.
அதுமட்டுமல்லாமல் நீண்ட காலமாக புலம்பெயர்ந்த தமிழ் மக்களிடையே மகஇக வின் அரசியலை முன்னெடுத்து வந்த இரயாகரனை ‘அவதூறு பரப்பும் இராயகரனிடமிருந்து விலகிக் கொள்கிறோம்!!’ என்று ஒக்ரோபர் 05ல் மகஇக அறிக்கை விட்டுள்ளது. மார்க்சிய லெனினிய (எம் எல்) கருத்துக்களை முன்னெடுத்து வருகின்ற தமிழரங்கம், இனியொரு, மகஇக என்பனவற்றின் இணைப்பு இரசாயனம் மாறிவிட்டது. தற்போது எம் எல் (ரயா அணி), எம் எல் (நாவலன் அணி), எம் எல் (மகஇக அணி) இடையே அருள் சகோதரர்கள் என்ற ஊக்கியால் எம் எல் நாவலன் அணியும் எம் எல் மகஇக அணியும் புதிய இணைப்பை உருவாக்கி உள்ளன. இப்பிணைப்பில் ‘மே 18’ காரணி முக்கியமானது என்கிறது தமிழரங்கம்.
அருள் எழிலனுக்கு ‘புரட்சிகர பத்திரிகையாளர்’ என்ற சான்றிதழுக்கு எழுதிய கட்டுரை தொடர்பாக ஒக்ரோபர் 4ல் சீலன் என்பவர் ”புதிய ஜனநாயகம், புதிய கலாச்சாரம் போன்ற காத்திரமான சஞ்சிகைகளை வெளியிடும் உங்களின் (மகஇக வின்) ஆய்வுமுறை இந்த விடையத்தில் மாத்திரம் ஏன் மழுங்கடிக்கப்பட்டுள்ளது என்பது தெரியவில்லை” எனக் கேள்வி எழுப்பி உள்ளார். இதற்கு அதே தளத்தில் வெளியான கட்டுரையில் வருமாறு பதில் அளிக்கப்பட்டு உள்ளது. ”மகஇக வுக்கு புலிகளின் சாவின் முன் ராஜஹரனின் அரசியல் போக்கு சரியாக இருந்தது. அத்துடன் சில தேவைகளுக்கு அவர் தேவைப்பட்டார். ஆனால் இன்று மகஇக வின் இலங்கை சார்ந்த அரசியல் பார்வை மாறியுள்ளது. அதன் அடிப்படையில் ராஜாவின் நிலைப்பாட்டுடன் மகஇக வின் அரசியல் நிலைப்பாடு முரண்படுகின்றது. அதேவேளை புலியின் அழிவின் பின் அரசியலில் ஸ்டார் அந்தஸ்துடன் இலங்கை அரசியல்மேடைக்கு வந்துள்ள நாவலனின் அரசியல் நிலைப்பாடும் அவரின் “சேவையும்” மகஇக வின் அரசியல் மற்றும் பிரச்சார தேவையை பூர்த்தி செய்வதாகவுள்ளது. இந் நிலையில் அரசியல் விவாதங்கள் இல்லாமல் ராஜஹரனுடன், அவர் சார்ந்த அமைப்பு, மற்றும் தோழர்களுடன், உறவை முறித்துக் கொள்ள ஒரு நல்ல சந்தர்ப்பமாக இந்தக் கடத்தல் கூத்தை பாவித்துள்ளது மகஇக.”
மே 18 வரை தமிழீழ விடுதலைப் புலிகளின் சார்பு ஊடகங்களின் (ரிரிஎன்) சம்பளப் பட்டியலில் இருக்கும் வரை விமர்சனமற்ற வழிபாட்டை மேற்கொண்டு வந்துவிட்டு இப்போது மார்க்சிய புலிகளின் சம்பளப் பட்டியலுக்கு மாறியதால் சமீப காலமாக தனது கருத்துகளை மீளாய்வு செய்து மாற்றிக் கொண்டு வருகிறார் என மகஇக கதை புனைகிறது. புலி ஆதரவு ஊடகங்களின் மாநாட்டில் அருள் எழிலன் தன்னுடைய என்ன கருத்துக்களை மீளாய்வு செய்து மாற்றிக் கொண்டார் என்பது ஓரளவுக்காவது தெரியவரும்.
ஆ மார்க்ஸ் புலிஆதரவு ரிரிஎன் தொலைக்காட்சிக்கு நேர்காணல் வழங்கியதே ஒரு சமயத்தில் சர்ச்சைக்குரியதாக இருந்தது. அ மார்க்ஸ் களங்கப்பட்டு விட்டார் என்று சொல்லப்பட்டது. புலிகளின் ஊடகவியல் மாநாட்டுக்கு அழைக்கப்பட்ட மார்க்சிய சாயம் பூசப்பட்ட தனது கருத்துக்களை மீளாய்வு செய்து மாற்றிக் கொண்டு வரும் அருள் எழிலன் மீண்டும் முருங்கை மரம் ஏறுகிறார் என்ற எண்ணம் தேன்நிலவில் உள்ள இந்த புதிய அணிசேர்க்கைக்கு ஏற்பட வாய்ப்பில்லை.
மார்க்சிய புலிகளினதும் (எம் எல் புலிகள்) புலி மார்க்ஸிட்டுகளினதும் (புலி எம் எல்) களினதும் இரசாயணனச் சேர்கையின் விளைவு வெகுவிரைவில் தெரியவரும். இந்த இணைவை புலி அதரவு சக்திகள் பயன்படுத்திக் கொள்ள எண்ணிணால் அதன் விளைவுகள் தமிழ் மக்களுக்கு ஆபத்தானதாக அமையும். புலி ஆதரவு சக்திகளின் ஈடுபாடு இல்லாதவரை கீபோட் மார்க்ஸிட்டுக்களால் குறிப்பிடத்தக்க ஆபத்துக்கள் இல்லை.
2010 மாநாடு பற்றி இறுதியாக…..
இந்த புலி ஆதரவு ஊடகவியலாளர் மாநாடு மீண்டும் தவறான வழியிலேயே பயணத்தை தொடர முற்படுவதையே காட்டுகின்றது. ரிரிஎன் தொலைக்காட்சி புலி ஆதரவு ஊடகக் குழுமத்தால் ஆரம்பிக்கப்படவில்லை. எஸ் எஸ் குகநாதனால் உருவாக்கப்பட்ட ரிஆர்ரி தொலைக்காட்சி புலிகளின் கைக்கு மாற்றப்பட்டு ரிரிஎன் எனப் பெயர் சூட்டப்பட்டது. அவை வரலாறாகிய பழங்கதை. ஆனால் தற்போது டான் தமிழ் ஒளியை நடாத்திவரும் எஸ் எஸ் குகநாதனைக் கடத்தி – கைது செய்து 15 லட்சம் இந்திய ரூபாய்களைப் பெற்று பின் விடுவித்த அருள் சகோதரர்களில் ஒருவரை இம்மாநாட்டின் பேச்சாளராக அழைத்ததன் மூலம் இம்மாநாடு எதனைச் சொல்ல வருகின்றது?
இம்மாநாடு புலி ஊடகங்கள் தங்கள் இருப்பை அறிவிக்கவும் தாம் இன்றும் பலமாக உள்ளோம் என்பதையும் நிறுவுவதற்காக எடுக்கும் முயற்சியே.
ஏப்ரல் 26 2008 மாநாட்டில் ஊடகவியல் பற்றியும் அதன் அடிப்படைகள் பற்றியும் பலரும் கருத்துக்களை வெளியிட்டனர். ஆனால் புலி ஆதரவு ஊடகங்களின் போக்கில் எவ்வித முன்னேற்றமும் இருக்கவில்லை. அந்த மாநாட்டின் பின்னரேயே மிகப்பெரும் அழிவை நோக்கி வன்னி மக்களை இப்புலி ஊடகங்கள் அழைத்துச் சென்றன.
ஆகவே வன்னிப் போரில் மக்களைப் பணயம் வைத்த ஊடகங்களின் 2010 மாநாடு ‘உலகமயமாகி உள்ள உலகில் தமிழர் பிரச்சினையும் ஊடகங்களும்’ (“Media and the Tamil question in a globalizing world”) என்ற தலைப்பிலும் பார்க்க ‘புலிமயமாகியுள்ள ஊடகங்களும் தமிழர் பிரச்சினையும்’ என்ற தலைப்பில் கடந்த காலத்தில் தங்களது ஊடகவியல் போக்குப் பற்றியும் அது பேரழிவுக்குத் துணை போனது பற்றியும் ஆராய்ந்து, எதிர்காலத்தில் இவ்வாறான ஒரு நிலை ஏற்படாமல் தடுக்க ஊடகங்கள் எவ்வாறு செயற்பட வேண்டும் என்பது பற்றி இம்மாநாடு ஆராய்வதே பொருத்தமானதாக இருக்கும்.