October

October

யாழ். வசாவிளான் கல்லூரி ரூ. 50 இலட்சத்தில் புனரமைப்பு – ஜனவரியில் கல்வி நடவடிக்கை ஆரம்பம்

யாழ். பலாலி அதிஉயர் பாதுகாப்பு வலயத்திலுள்ள வசாவிளான் மத்திய மகா வித்தியாலயம் ஐம்பது இலட்சம் ரூபா செலவில் உடனடியாக புனரமைக்கப் படவுள்ளதாக வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி. ஏ. சந்திரசிறி தெரிவித்தார்.

யாழ். பாதுகாப்புப் படைகளினதும் மேற்படி பாடசாலையின் அபிவிருத்திச் சங்கத்தினர் மற்றும் நலன்விரும்பிகளின் பூரண ஒத்துழைப்புடன் இந்த புனரமைப்பு நடவடிக்கைகளை துரிதமாக முன்னெடுக்க இணக்கம் காணப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார். அதிஉயர் பாதுகாப்பு வலயத்தினுள் அமைந்துள்ள இந்தப் பாடசாலை கடந்த மாதம் 29ம் திகதி பாதுகாப்புப் படையினரால் கல்வி நடவடிக்கைக்காக கையளிக்கப்பட்டது. சுமார் 20 வருடங்களுக்குப் பின்னர் மீளக் கையளிக்கப்பட்ட இந்த பாடசாலையை அபிவிருத்தி செய்தல், புனரமைப்பு தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டது.

வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ. ஏ. சந்திரசிறி, பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறு கைத்தொழில் துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, யாழ். பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹதுருசிங்க ஆகியோர் அடங்கிய உயர் மட்டக் குழுவினர் நேற்று நேரில் சென்று பார்வையிட்டனர்.

மேல் மாகாண தமிழ் சாகித்திய விழா இன்று

மேல் மாகாணத் தமிழ் சாகித்திய விழா பிரதான நிகழ்வுகள் இன்று மாலை மூன்று மணிக்கு கொழும்பு- 10 மருதானை- எல்பின்ஸ்ரன் மண்டபத்தில் நடைபெறுகிறது. நிகழ்வுக்கு மேல் மாகாண சபை உறுப்பினரும் சாகித்திய விழா ஏற்பாட்டுக் குழுவின் தலைவருமான எஸ். இராஜேந்திரன் தலைமைதாங்குவார்.

மேல் மாகாண ஆளுநர் எஸ். அலவி மெளலானா பிரதம அதிதியாகவும் கெளரவ அதிதிகளாக மேல் மாகாண முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்க மேல் மாகாண கலாசார அமைச்சர் உபாலி கொடிகார, பாராளுமன்ற உறுப்பினர் ஏ. எச். எம். அஸ்வர், முன்னாள் எம். பீ. மனோ கணேசன், மேல் மாகாண சபை உறுப்பினர் கலாநிதி ந. குமரகுருபரன், முன்னாள் பிரதியமைச்சர் பெ. இராதாகிருஷ்ணன், முன்னாள் இராஜாங்க அமைச்சர் பீ. பீ. தேவராஜ், மேல் மாகாண பிரதம செயலாளர் விக்டர் சமரவீர, மேல் மாகாண கலாசார அமைச்சின் செயலாளர் ஏ. ராமநாயக்க ஆகியோர் கலந்துகொள்வார்கள்.

சிறப்பு அதிதிகளாக பேராசிரியர் சோ. சந்திரசேகரன், லேக் ஹவுஸ் ஆசிரியர் பீடப் பணிப்பாளர் சீலரட்ன செனரத், தொழில் அதிபர்கள் சுந்தரம் பழனியாண்டி, ஜே.பி. ஜெயராம் ஜே.பி. ஆகியோர் கலந்து சிறப்பிப்பார்கள்.

மேல் மாகாணத்தின் தமிழ் மொழி மூலப் பாடசாலை மாணவர்கள் மத்தியில் நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றியீட்டிய மாணவர்களுக்குப் பரிசில்கள் வழங்கப்படுவதுடன், 25 பேர் சாகித்திய விருது வழங்கி கெளரவிக்கப்படவுள்ளனர். நம் நாட்டு கலைப் படைப்புகளைப் பிரதிபலிக்கும் இசை நிகழ்வுகளும் கலை நிகழ்வுகளும் விழாவைச் சிறப்பிக்கும். இந்த விழாவில் கலந்துகொள்ளுமாறு விழா ஏற்பாட்டுக் குழுவின் தலைவர் இராஜேந்திரன் கேட்டுக்கொண்டுள்ளார். கடந்த வருடம் விருது பெற்றவர்கள் அனைவரும் தவறாது கலந்துகொள்ள வேண்டுமெனவும் அழைப்பு விடுக்கப் படுகிறது.

புனர்வாழ்வு நிலையங்களின் பராமரிப்புக்கு ரூ. 100 மில். செலவு

புனர்வாழ்வு நிலையங்களில் பராமரிக்கப்படும் முன்னாள் புலி உறுப்பினர்களுக்கு உணவுக்காக மட்டும் நாளொன்றுக்கு நூறு மில்லியன் ரூபாய் செலவிடப்படுகிறதென புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் டியூ குணசேகர தெரிவித்தார்.

நேற்று முன்தினம் மாலை 306 முன்னாள் போராளிகளை விடுதலை செய்யும் நிகழ்வில் கலந்து கொண்ட அவர் மேற்கண்டவாறு கூறினார்.

மார்ச் மாதம் உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைக்குரிய தேர்தல் நடைபெற்று மக்கள் பிரதிநிதிகள் தெரிவு செய்யப்படவுள்ளனர். இந்தத் தேர்தலில் நீங்களும் போட்டியிட்டு மக்கள் பிரதிநிதிகளாக வரமுடியும். அதன் வழியாக அரசியல் பலமும் அரச பலமும் கிடைக்கும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார். இதுவரையில், புனர்வாழ்வு அளிக்கப்பட்ட ஐயாயிரம் முன்னாள் புலி உறுப்பினர்கள் விடுவிக்கப்பட்டு சமூகத்துடன் இணைந்து கொண்டுள் ளனர்.

வளர்முகநாடுகளின் நிலைக்கு சமனான முறையில் புனர்வாழ்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. போரின்போது வெற்றிகொண்ட இராணுவத்தினர் சரண் அடைந்த போராளிகளையும் மனித நேய அடிப்படையில் முக்கியத்துவம் கொடுத்து பராமரித்து வருகின்றது. புனர்வாழ்வு நிலையங்களில் சுதந்திரமாக நடமாட அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றார்.

வவுனியா புனர்வாழ்வு நிலையங்களில் தங்கியிருந்தவர்களில் புனர்வாழ்வு அளிக்கப்பட்ட 306 பேர் விடுதலை செய்யப்பட்டார்கள். 200 பெண்களும், 106 ஆண்களும் அடங்கியிருந்தனர். வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலய புனர்வாழ்வு நிலையத்தில் வைத்து பெற்றோர்கள் மற்றும் பாதுகாவலர்கள் இவர்களை பொறுப்பேற்றனர்.

புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சின் ஆலோசகர் எஸ். சதீஸ்குமார், செயலாளர் எம். திசாநாயக்க, புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் பிரிகேடியர் சுகந்த ரணசிங்க மற்றும் இராணுவ உயர் அதிகாரிகள் இந்த வைபவத்தில் கலந்து கொண்டிருந்தனர்.

பாரிஸ் மாநாடு ஓர் திருப்புமுனையாக அமையட்டும்! : தி ஸ்ரீதரன் (EPRLF)

EPRLF_Conference_23Oct10தோழர்களே, எமது சர்வதேச கிளைகளின் மாநாட்டிற்காக நீங்கள் பிரான்சின் தலைநகர் பாரிசில் கூடியிருப்பதையிட்டு மட்டற்ற மகிழ்ச்சி அடைகின்றேன். சமூக தார்மீக நெறிமுறைகளுக்காக போராடுபவர்களை உலகின் எந்த தீய சக்திகளாலும் அழித்துவிட முடியாது என்பதை வரலாறு நிரூபித்துள்ளது. கடந்து வந்த கால் நூற்றாண்டுக்கு மேலான எமது பாதையில் வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத இழப்புக்களையும் துன்பங்களையும் சந்தித்து வந்திருக்கின்றோம்.

இப்படியும் நடக்குமா என கற்பனை செய்ய முடியாதவற்றை எல்லாம் நாம் அனுபவித்திருக்கிறோம் பார்த்திருக்கிறோம். நாமும் எமது தாயகத்தின் மக்களும் இழப்புக்கள் போக எஞ்சி நிற்கிறோம்.
இக்கட்டத்தில் முக்கியமான தவிர்க்க முடியாத கேள்வி ஒன்று எழுகின்றது. நாம் எமது சமூக இலக்குகளை அடைந்திருக்கின்றோமா? எமது சமூக வாழ்வு சமூகத்தில் ஜனநாயக மயப்பட்டிருக்கின்றதா? சமூக ஏணிப்படிகளில் அடித்தட்டில் வாழும் மக்களின் சமூக வாழ்வில் மேம்பாடு ஏற்பட்டிருக்கிறதா? சமூக தளைகள் அறுந்திருக்கிறதா? அல்லது சிறிதளவேனும் மாற்றம் நிகழ்ந்திருக்கிறதா?

இங்கு யதார்த்தமாகவும் உண்மையாகவும் அப்படி எதுவும் நிகழ்ந்து விடவில்லை என்றே பதிலளிக்க வேண்டியிருக்கிறது. ஆனால் எமது போராட்டத்தின் ஆரம்ப நிலையிலேயே பாசிசத்தின் நிழல் கவிந்து அது எமது சமூகத்தினுள் ஊடறுத்து போராட்டத்தின் சகல தார்மீக நெறி முறைகளையும் அழித்தொழித்து ஆயிரக்கணக்கான சுதந்திரப் போராட்டக் காரர்களையும் தலைவர்களையும் கல்வியாளர்களையும் துவம்சம் செய்ததோடு எமது இரண்டு தலைமுறையினரில் கணிசமானோரை இராணுவ மயப்படுத்தியும், இராணுவ மனோபாவத்திற்கு உள்ளாக்கியும் சமூகக் கருவூலங்களான கலாச்சார பொருளாதார விழுமியங்கள் எல்லாவற்றையும் நிர்மூலம் செய்தது. சிந்திப்பதை நிறுத்திவிடுமாறு சமூகத்தை நிர்ப்பந்தித்தது. தனக்கு அடி பணந்து நிற்குமாறு தொழுதேற்றுமாறு அது அச்சுறுத்தியது தமக்கு எதிரானவர்கள் அல்லது அவ்வாறென தாம் சந்தேகப்படுபவர்கள் எல்லோரையும் மரணப்பொறிக்குள் வீழ்த்தியது.

திட்டவட்டமாக 1980 களின் நடுப்பகுதியில் குரூர முகம் காட்டிய பாசிசம் 2009 நடுப்பகுதியில் பலத்த ஆரவாரத்துடன் வீழ்ச்சியுற்றது.

அதற்குப்பிந்திய சூழலில் நாம் பேசுவதற்கும் கலந்துரையாடுவதற்குமான சூழல் உருவாகியிருக்கின்றது என்பது உண்மையே அது தாயகத்திலும் புலம்பெயர் தளத்திலும் உண்மையே.

ஆனால் தமிழ் மக்களுக்கும் எண்ணிக்கையில் சிறுபான்மையினரான தேசிய இனங்களுக்கும் உரிமைகளை அங்கீகரிப்பதில் கடுமையான நிலை உருவாகியுள்ளது. 1980 களில் இருந்ததை விட நிலைமை கடுமையாகியுள்ளது. இத்தகைய சிக்கலான இக்கட்டான நிலைக்கு தமிழ் மக்களை இட்டு வந்தது எம்மத்தியில் இருந்த பாசிசமே என்பதை நீங்கள் அறிவீர்கள்.

தமிழர்களுக்கு எதையும் வழங்கத் தேவையில்லை பயங்கரவாதம் முடிவுக்கு வந்துவிட்டது என்றவாறு இலங்கையின் இரண்டு பிரதான சிங்களக் கட்சிகளை சேர்ந்தவர்களும் சொல்ல முற்படுகின்றார்கள்.
தமிழர்களின் பிரச்சினை பயங்கரவாததத்திற்கு முற்பட்டது 60 ஆண்டுகளுக்கு மேலாக நிலவுவது என்பதை உணர்ந்தும் உணராதவர்கள் போல் இவர்கள் நடக்க முற்படுகின்றார்கள். சிங்கள மக்கள் மத்தியில் 2009 வெற்றியின் பெருமித உணர்வுகள் பரவலாக இருந்தாலும் அவர்கள் இன்று தாம் அனுபவிக்கும் ஜனநாயக உரிமைகளும் காவுகொள்ளப்பட்டு விடுமோ என அச்சமுறுகின்றார்கள் இலங்கையில் இன சமூகங்களின் பிரச்சினைக்கு ஜனநாயக ரீதியாக தீர்வு காணாத வரை இலங்கையின் பெரும்பான்மை இன மக்களும் ஜனநாயக உரிமைகளை அனுபவிக்க முடியாதென்பதே நிஜம்.

தென்னிலங்கையில் முற்போக்கு அரசியலும் பலவீனமடைந்த நிலையிலேயே காணப்படுகின்றது. கெடுபிடி யுத்தத்திற்கு பின்னரான உலகம் 1990இருந்து தீவிர மாற்றமடைந்து வந்திருக்கிறது. அது தென்னாசியாவையும் பாதித்தது.

இந்தியா, இந்திய – இலங்கை ஒப்பந்தத்தின் சாரம்சத்தை அதன் அதிகாரப் பரவலாக்கத்திட்டத்தை நடைமுறையில் முழுமையாக சாத்தியமாக்குமாறு இலங்கையிடம் பல தடைவை நயந்து கேட்டிருக்கிறது. இலங்கையின் பல்லினத்தன்மையை உறுதிப்படுத்துமாறு கேட்டிருக்கிறது. நட்பான அயல்நாடு என்ற வகையில் பல்வேறு தடைவைகள் இலங்கையின் தலைவர்களிடம் பல தடைவைகள் இதனை வலியுறுத்தி வந்திருக்கிறது.

ஆனால் இந்த விடயம் எதிர்நிலையிலேயே பயணப்பட்டிருக்கிறது. அவசரகாலச் சட்டத்தின் கீழ் இணைக்கப்பட்ட வடக்கு கிழக்கு மாகாணங்கள் நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் பிரிக்கப்பட்டிருக்கிறது. முறையாக இணைப்பதற்கு மனசாரச்செயற்படுவதற்கு இரண்டு பிரதான சிங்களக் கட்சிகளுக்கும் மனமொருப்படவில்லை.

இந்தியாவின் அனுசரணையுடனான அதிகாரப்பரவலாக்கத்திட்டம் சந்திரிக்காவின் சமஸ்டி ஒஸ்லோவின் கூட்டாச்சி மகிந்தவின் அனைத்துக்கட்சிக்கூட்டம் எல்லாமே கடந்து போய் விட்டன தற்போதும் வடக்கு கிழக்கின் இரண்டு மாகாணங்களுக்கும் பொருள் பொதிந்த அதிகாரப்பகிர்விற்காக உணர்ச்சிவேசப்படாமல் நிதானமாக செயற்படவேண்டியிருக்கிறது.

யுத்தத்தின் இறுதியில் பணயம் வைக்கப்பட்டு பின்னர் பிரலயமாக இடம்பெயர்ந்த மக்களின் மீள் குடியேற்றம் முட்கம்பி வேலிகளைத் தாண்டி வன்னியில் நிகழ்கிறது. ஆனால் அவர்களின் வாழ்க்கையினை உறுதியான அடித்தளத்தில் நிர்மாணிப்பதற்கு உள்ளகக்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட வேண்டும்.

உயிரிழப்பு, ஊனமற்ற நிலை பொருளாதார இழப்பு பேதலித்த மனமென வன்னியில் மக்களின் இழப்புக்கள் பிரமாண்டமானவை. இவர்களின் தேவைகளை நிவர்த்திக்க ஊழலற்ற மனிதப்பண்புடனான அர்ப்பணிப்புத்தேவை இந்தியா மற்றும் ஐநா ஸ்தாபனங்கள் உலக நாடுகள் கணிசமான அளவில் உதவிகளை வழங்கிவருகின்றன.

அகதிகளான மக்களின் வாழ்வை மேம்படுத்தவும் வடக்கு கிழக்கை மீள் கட்டியெழுப்பவும் சர்வதேச சமூகம் உதவி வழங்க முன்வந்திருக்கிறது. இவற்றை வினைத்திறனுடன் கையாழ்வதற்கான தமிழர் பங்குபற்றலுடனான அரசமுறைமையொன்று இன்னும் இங்கு ஸ்தாபிக்கப்படவில்லை.

கடந்த 60 ஆண்டுகளுக்கு மேலாக நிலவும் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு கிடைத்த சந்தர்ப்பங்கள் எல்லாவற்றையுமே நாங்கள் நழுவவிட்டுள்ளோம். தமிழர்கள் மத்தியில் ஆதிக்கம் செலுத்தும் தீர்க்க தரிசனமற்ற அரசியலே இதற்கு காரணம் என்றால் மிகையல்ல. ஆனால் இந்த திரும்பத்திரும்ப நிகழ்த்தப்பட்டு வருகின்ற வரலாற்றுப்பிழைக்கு முடிவு கட்டவேண்டும் அப்போதுதான் பன்முகத்தன்மை வாய்ந்ததும் சமத்துவமானதும், ஐக்கியமானதுமான வாழ்வொன்றை இங்கு கட்டியெழுப்ப முடியும்.
 
எமது மக்கள் இழந்த இழப்புக்களுக்கும் சந்தித்தத்த பேரழிவுகளுக்கும் ஈடாக தீர்வொன்று எட்டப்படவேண்டும். எத்தனை அவமானங்கள் இழிவுகள் உதாசீனம், மரணங்கள் மத்தியில் நாம் வாழ்ந்திருக்கிறோம். இது இலங்கையில் வாழும் தோழர்களுக்கு மாத்திரமல்ல புலம்பெயர்ந்து வாழும் தோழர்களுக்கும் பொருந்தும்.

எமது மக்களின் சார்பில் எம்மை ஸ்தாபிப்பதற்கு பாரதப்போரில் அவிமன்யு சிக்கியது போல் ஒரு சக்கர வியூகத்தினுள் அல்லவா நாம் சிக்கியிருந்தோம் இறுதியாக அது எமது மக்களுக்கும் நேர்ந்தது.

இவற்றையெல்லாம் தாண்டி பேரழிவுகளுக்குப் பின்னால் எஞ்சியிருப்பவை எமது கொள்கைளும், கனவுகளும், இலட்சியங்களும்தான். சமகாலச சூழ்நிலைக்கு ஏற்ப இவற்றை வென்றெடுப்பதற்காக நாம் இயங்க வேண்டியிருக்கிறது, செயற்பட வேண்டியிருக்கிறது,

EPRLF_Conference_23Oct10இன்று எமது ஸ்தாபனம் என்பது உலகளாவியதாக அமைந்திருக்கிறது. எமது பிரச்சினைகள் எம்மை அவ்வாறு ஆக்கியிருக்கிறது தாயகத்திலுள்ள தோழர்கள் மக்களை ஊக்கப்படுத்துவத்தில், தென்பூட்டுவதில் புலம்பெயர் தளத்திலுள்ள தோழர்கள் நண்பர்கள் ஆதரவாழர்கள் வழங்கிய பங்களிப்பை உரிமையுடனும் நன்றியுடனும் நினைவுகூர கடமைப்பட்டவர்கள்.

புலம்பெயர்த்தளத்தில் இயங்கிய மாற்று ஊடகங்கள் வழங்கிய பங்களிப்பு வானொலி, இணையங்கள் இங்கு வழங்கிய பங்களிப்பு சரித்திர முக்கியத்துவம் வாய்ந்தவை. புலம்பெயர்த் தளத்தில் செயற்பட்ட தோழர்களின் அர்ப்பணம், நேர்மை தாயகத்திலுள்ளவர்கள் பற்றிய அவர்களின் உள்உணர்வு என்பன இங்கு எமக்கு பல நண்பர்களை உருவாக்கி தந்திருக்கிறது.

நாம் எமது மக்களின் அரசியல் உரிமைகளை வென்றெடுப்பதற்கும் இலங்கையினை அரசியல் அரங்கை ஜனநாயகப்படுத்துவதற்கும் சமூக அபிவிருத்திப் பணிகளை ஆக்கபூர்வமாக முன்னெடுப்பதற்கும் எமது நியாயமான அரசியல் பிரதிநிதித்துவத்தை வென்றெடுப்பதற்கும் பரந்த அளவிலான ஐக்கியம் ஒன்றினை ஏற்படுத்த வேண்டிய அவசியம் இருக்கிறது.

பாரிய அளவில் வெகுஜனங்கள் மத்தியில் வேலை செய்ய வேண்டியிருக்கிறது. 1980களின் முற்பகுதியில் அல்லது 70களில் வேலை செய்தமை போன்ற முறைகளை பின்பற்ற வேண்டியிருக்கிறது. ஆனால் அப்போதிருந்த அரசியல் சமூக சவால்கள் தற்போது உள்ளதுடன் ஒப்பிடுகையில் தலைகீழ் வித்தியாசமானவை. ஓரளவு எளிமையானவை எனவே புதிய நிலவரங்களுக்கு ஏற்ப புதிய வெளிச்சத்தில் நாங்கள் பணியாற்ற வேண்டியிருக்கிறது.

சர்வதேச அளவில் எங்களைப் போன்று மனித குலத்தில் நல்வாழ்விற்காக போராடும் சக்திகளுடன் கரங்கோர்த்து செயற்படும் அந்த இயல்பை என்றைக்கும் நாம் கைவிட்டுவிடக்கூடாது.
சமூகத்தில் ஒடுக்கப்பட்ட பிரிவினரின் அடையாளமே எமது அடையாளம் நாம் அவர்களைப் பிரதிபலிப்பவர்கள் மாத்திரமல்ல அந்த மக்களின் விடிவிற்காக செயற்படுவர்கள் என்பதை எப்போதும் மறந்துவிடக்கூடாது.

பாரிஸ் மாநாடு நடைபெறும் காலம் முக்கியத்துவம் வாய்ந்தது.
பாரிஸ் மாநாட்டின் வெற்றிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

தி. ஸ்ரீதரன்

இலங்கைக் கிடைத்த ஒரே ஒரு தங்கமும் பறிபோகுமோ?

manju.gifஇந்தியாவில் நடைபெற்ற 19ஆவது பொதுநலவாய விளையாட்டுப் போட்டியில் 56 கிரோ கிராம் எடைப் பிரிவு குத்துச் சண்டைப் பிரிவில் வெற்றிபெற்று இலங்கைக்கு தங்கப் பதக்கத்தை பெற்றுக் கொடுத்த மஞ்சு வன்னியாராச்சி தடை செய்யப்பட்ட ஊக்க மருந்தை பயன்படுத்தியுள்ளதாக வெளியான தகவல்கள் குறித்து தற்போது கருத்துக் கூற முடியாதென இலங்கை விளையாட்டுப் பிரிவின் வைத்திய பொது முகாமையாளர் வைத்தியர் கீதாஞ்சன மெண்டிஸ் தெரிவித்துள்ளார்.

மஞ்சு வன்னியாராச்சி தொடர்பில் பல தகவல்கள் கசிந்துள்ள போதும் உத்தியோகப் பூர்வமாக எதுவும் உறுதிப்படுத்தப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். எனினும் முறையான விசாரணைகளின் பின்னர் நாளைய தினம் உறுதியான தகவல்களை தெரிவிக்க முடியுமென வைத்தியர் கீதாஞ்சன மெண்டிஸ் கூறியுள்ளார். எனினும் மஞ்சு வன்னியாராச்சி போட்டியில் பங்குபற்றுவதற்கு முன்னர் அவரிடம் சிறுநீர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாகவும், அதில் அவர் தடை செய்யப்பட்ட ஊக்கமருந்தை பிரயோகித்துள்ளமை உறுதியாவதாகவும், பொதுநலவாய விளையாட்டுக் குழு இந்திய டில்லியில் இருந்து இலங்கைக்கு அறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளதென சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இதன் பின்னர் இலங்கை அதிகாரிகள் மஞ்சு வன்னியாராச்சியிடம் வினவியபோது, தான் அப்படியொரு ஊக்கமருந்தை பயன்படுத்தவில்லை என அவர் கூறியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. எனினும் தான் நோய் ஒன்றுக்காய் சிகிச்சைகளைப் பெற்றுக் கொண்டதாக மஞ்சு வன்னியாராச்சி கூறியுள்ளார். இந்நிலையில் மஞ்சு வன்னியாராச்சியிடம் இலங்கை ஒலிம்பிக் குழு எதிர்வரும் 14 நாட்களுக்குள் உரிய விளக்கமளிக்குமாறி கோரியள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடற்கரையில் கண்டெடுத்த டப்பா வெடித்து 8 வயது சிறுவன் பலி. மேலும் 4 சிறார்கள் காயம்: மூதூரில் சம்பவம்

மூதூர் கடற்கரையில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள் கண்டெடுத்த டப்பா ஒன்று வெடித்ததில் எட்டு வயதுச் சிறுவன் கொல்லப்பட்டதோடு மேலும் நான்கு சிறார்கள் காயமடைந்தனரென பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் நேற்று சனிக்கிழமை காலை 9.45 அளவில் மூதூர் தக்வா நகர் வட்டம் கடற்கரை பகுதியில் நடந் துள்ளதாக பொலிஸார் கூறினர்.

ஐந்து சிறுவர்களும் கடற்கரையில் விளையாடிக்கொண்டிருந்தபோது அங்கு கண்டெடுத்த டப்பா ஒன்றை திறக்க முற்பட்டுள்ளனர். அப்போது அது பாரிய சத்தத்துடன் வெடித்துச் சிதறியதாக நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர்.

இந்த வெடிப்புச் சம்பவத்தில் காயமடைந்த ஐந்து சிறார்களும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் முகாஜிதீன் சர்பான் என்ற எட்டு வயதுச் சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாரென ஆஸ்பத்திரி வட்டாரங்கள் கூறின.

காயமடைந்தவர்களில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரும் அடங்குகின்றனர். காயமடைந்தோரின் விபரம் வருமாறு, ஸல்மான், (வயது – 10), சாஜித் (வயது 05), சையிப் (வயது- 03) என்பவர்களுடன் யாரியா கரீம்- இம்ராக் (வயது 08) ஆகியோரே காயமடைந்தவர்களாவர்.

முன்னாள் அமைச்சர் தர்மதாச பண்டா காலமானார்

முன்னாள் அமைச்சர் தர்மதாச பண்டா தனது 72 வது வயதில் காலமானார். சில காலமாக நோய்வாய்ப்பட்டிருந்த இவர் தனியார் வைத்தியசாலையொன்றில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்றுக் காலமானார்.

1965 ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சியின் மொனராகலைப் பாராளுமன்ற உறுப் பினராகத் தனது அரசியல் பயணத்தை இவர் ஆரம்பித்திருந்தார்.

பின்னர் ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து விலகிய இவர், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு தெரிவித்ததுடன் முன்னைய அமைச்சரவையில் துணை வேளாண்மை மற்றும் பயிர்ச்செய்கை அமைச்சராகப் பதவி வகித்திருந்தார்.

புனர்வாழ்வு பெறுவோர் விபரங்கள் – www.bcgrsrilanka.com இணையத்தில்

தடுப்பு முகாம்களில் இருப்பவர்கள், கைது செய்யப்பட்டு சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டிருப்போர் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு வருவோர் பற்றிய விபரங் களை மக்கள் அறிந்து கொள்வதற்கான இணையத்தளம் யாழ்ப்பாண செயலகத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

இணையத்தளத்தின் முகவரி www.bcgrsrilanka.com என்பதாகும். இந்த இணையத்தளம் அதிகளவு ஊடகவிய லாளர்களுக்கு பயனுடையதாக விருக்குமென கருதப்படுகிறது.

தெல்லிப்பழை புனர்வாழ்வு முகாமிலுள்ள 23 பெண்கள் விடுதலை செய்யப்பட்டனர்.

யாழ். தெல்லிப்பழை புனர்வாழ்வு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 23 பெண்கள் நேற்று விடுதலை செய்யப்பட்டனர். இப்பெண்களை அவர்களின் பெற்றோர் உறவினர்களிடம் கையளிக்கும் நிகழ்வு நேற்று வெள்ளிக்கிழமை தெல்லிப்பழையில் இடம்பெற்றது.

சிறைச்சாலைகள் மற்றும் புனர்வாழ்வு மறுசீரமைப்பு அமைச்சர் டியூ குணசேகரவினால் இவர்கள் ஒப்படைக்கப்பட்டதுடன் இவர்களின் விடுதலைக்கான சான்றிதழ்களை அமைச்சர் டியூ குணசேகர வழங்கினார். தடுத்து வைக்கப்பட்ட பெண்கள் விடுதலைப்புலிகள் என்ற சந்தேகத்தின் பேரில் புனர்வாழ்வு முகாமில் வைக்கப்பட்டவர்களாவர்.

இந்த நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர் டியூ குணசேகரா வவுனியா ஓமந்தை புனர்வாழ்வு நிலையத்தின் புனர்வாழ்வு முகாம் மூடப்படுவதாக தெரிவித்தார். அந்த முகாமில் இருப்பவர்களில் சுமார் 150 பேர் வியாழக்கிழமை விடுதலை செய்யப்படுவதாகவும், ஏனையவர்கள் வேறு முகாம்களுக்கு மாற்றப்படுவர் எனவும் அமைச்சர் தெரிவித்தார். இந்த நிகழ்வில் சிறைச்சாலைகள் மற்றும், புனர்வாழ்வு பிரதி அமைச்சர் விஜிதமுனி சொய்சா, அமைச்சின் செயலாளர் திசநாயக்க, அமைச்சின் சிரேஸ்ட ஆலோசகர் எஸ்.சதீஸ்குமார், புனர்வாழ்வு ஆணையாளர் மேஜர் ஜெனரல் சுகந்த ரணசிங்க, புனர்வாழ்வு அதிகார சபைத் தலைவர் சமரசிங்க, தமிழ்தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஈ. சரவணபவன், அரசதரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சில்வெஸ்ரின் அலென்ரின் மற்றும் புனர்வாழ்வு நிலைய அதிகாரிகள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

இதேவேளை, யாழ் மாவட்டத்தில் வன்செயல்களினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு வழங்குவதற்காக யாழ். அரச செயலகத்திற்கு நேற்று அமைச்சர் டியூ குணசேகர வருகை தந்த போது அங்கு காத்திருந்த தடுப்பு முகாம்களில் உள்ளவர்களின் பெற்றோர், உறவினர், காணாமல் போனோரின் பெற்றோர் உறவினர் என்போர் அமைச்சரை சந்தித்து கண்ணீர் விட்டு அழுதனர். தங்கள் உறவினர்களை விடுதலைசெய்யுமாறும், காணாமல் போனோர் குறித்து நடவடிக்கை எடுக்குமாறும் கோரியே இவர்கள் அமைச்சரிடம் அழுது மன்றாடினர். பொதுமக்கள் கொண்டு வந்திருந்த மனுக்களை அமைச்சர் பெற்றுக்கொண்டு அவர்களுக்கு ஆறுதல் கூறினார்.

இதேவேளை, தடுப்பு முகாமில் உள்ளவர்கள் மற்றும் அரசியல் கைதிகள் குறித்த விபரங்களைக் கொண்ட இணையத்தளம் ஒன்றை அமைச்சர் டியூ குணசேகர நேற்று யாழ். கேட்போர் கூடத்தில் வைத்து சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைத்தார். இன்று சனிக்கிழமை முதல் இந்த இணையத்தளத்தில் இவ்விபரங்களைப் பார்வையிட முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. www.bcgrsrilanka.com என்ற இணையத்தளத்தில் பார்வையிட முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் மொழியின் சுடுகாட்டில் தமிழ்க் கலாச்சார வீரநடைபோடும் ஆங்கிலத்தின் அடிமைகள். : யூட் ரட்ணசிங்கம்

Convocation_UoJ1956ம் ஆண்டு பண்டாரநாயக்கா தனிச் சிங்களச் சட்டத்தை கொண்டு வந்தபோது அது தமிழ் மொழியை இரண்டாம் தர மொழியாக தள்ளிவிடுகிறது என்று கோஷமிட்டு ஆக்ரோஷமான அரசியலை முன்னெடுத்தார்கள் அன்றைய தமிழ் அரசியல் வாதிகள்.

அவர்களின் அன்றைய அகிம்சைப் போராட்டமே இறுதியில் ஆயுதப் போராட்டத்துக்கு வழி அமைத்தது.

தமிழீழ ஆயுதப் போராட்டத்தின் பல தொடக்கப் புள்ளிகளில் மிக முக்கியமான புள்ளிகளில் ஒன்றுதான் யாழ்ப்பாணப்  பல்கலைக் கழகம்.

விடுதலைப்போர் நடைபெற்ற நாடுகளிலெல்லாம் அந்த போராட்டங்களின் பின்புலத்தில் அந்தந்த நாட்டு பல்கலைக் கழகங்கள் பங்கு பற்றிய வரலாற்றுத் தொடர்ச்சியில் யாழ்ப்பாண பல்கலைக் கழகமும் ஒன்று.

இது கல்விசார் வரலாற்றுத் தொடர்ச்சியை மட்டுமல்ல தமிழ் ஆயுதப் போராட்ட வரலாற்றையும் வடுக்களையும் கடந்த மே 18 வரை காவி நின்றது.

குறிப்பாக தமிழுக்காக உயிர் கொடுக்க வேண்டும் என்ற இளைஞர்களை உசுப்பேத்தும்  அரசியல் உருவாக்கத்தின் ஒரு புள்ளியும் கூட இந்த யாழ் பல்கலைக்கழகம்.

Convocation_UoJஇந்த யாழ் பல்கலைக்கழகத்தின் 26வது பட்டமளிப்பு விழா அண்மையில் நடந்ததான செய்தியும் புகைப்படங்களும்  அனைத்து ஊடகங்களிலும் வெளிவந்தன.

அந்த புகைப்படங்களைப் பார்த்த போது வீணடிக்கப்பட்ட அந்த உயிர்களான முத்துக்குமாரும் முருகதாசும் என் கண்முன்னேவந்து போனார்கள்.

இரண்டு இலட்சம் அப்பாவி உயிர்களை காவுகொண்ட அந்த கொடூரமான போரின் துவக்கப் புள்ளிகளில் ஒன்றான இந்த யாழ் பல்கலைக் கழகம் தனது 26வது பட்டமளிப்பு விழாவில் தமிழிலும் எழுதுவதற்கு தயங்குகிறது.

ஆங்கிலத்தை கற்றுக்கொள்வதோ அதில் புலமை பெறுவதோ தவறில்லை. ஆங்கிலம் சர்வதேச அங்கீகாரம் பெற்ற மொழி என்பதும் அனைவரும் அறிவர். பல்கலைக் கழகங்களில் அம்மொழியின் அவசியம் தவிர்க்க முடியாதது மட்டுமல்ல மிக அவசியமானதும் கூட.

ஆனால் தன் தாய் மொழியை பேசுவதும் பயன்படுத்துவதும் தரம் கெட்ட செயல் என்று கருதும் ஒரேயொரு இனம் அது ஈழத் தமிழினமாகத்தான் இருக்க முடியும்.

குறிப்பாக தமிழர்களின் துறைசார் அறிவுஜீவிகள் என்று கருதக்கூடியவர்களே தாய்மொழியைப் பயன்படுத்துவதைத் தவிர்த்துக்கொள்கிறார்கள். இவர்கள்தான்  தமிழினத்தின் மூளைகளாம்.

அண்மையில் இலண்டனில் தமிழர் தகவல் நடுவத்தால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த தமிழர்களின் எதிர்காலம் பற்றிய ஓர் கருத்தரங்கிற்கு ஈழத்திலிருந்து ஓய்வுபெற்ற 4 துறைசார் அறிவுஜீவிகள் அழைக்கப்பட்டிருந்தார்கள்.

ஆங்கிலமே அங்கு ஆட்சி மொழியாக இருந்தது. வந்தவர்களோ ஈழத்தமிழர்கள். ஆங்கிலத்தில் விளாசித்தள்ளினார்கள்.

அம்பாறை மாவட்ட MP பியசேன அளித்த செவ்வியில் தமிழ்த்  தேசியக்  கூட்டமைப்பு கூடுகின்ற போது ஆங்கிலத்தில் பேசி ஓர் முடிவுக்கு வந்துவிடுவார்கள் என்று குற்றம் சாட்டியிருந்தார்.

சுயமாக நமக்கென்று எதுவுமே இல்லாத காரணத்தால் அயல்நாட்டிலிருந்து அபகரித்துக்கொண்ட அடையாளங்களும் கலாச்சாரமும் வரலாறுகளும்தான் இன்றுவரை நம்மை வாழவைத்துக் கொண்டிருக்கின்ற தெய்வங்கள்.

அரச ஆட்சி தொட்டு பின் வந்த அந்நிய ஆட்சி வரை அடிமை வாழ்வு. இந்த அடிமைத் தனத்திலே சுகம் கண்ட இனங்களில் ஈழத் தமிழ் இனமும் ஒன்று. அந்த அடிமை வாழ்விலிருந்து மீளமுடியாது மிச்ச சொச்சங்களையும் காவி வருகிறது யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்.

18வது திருத்தச் சட்டம் பாராளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டபோது அம்பாறை மாவட்ட TNA MP  பியசேன அரசிற்கு ஆதரவாக வாக்களித்தார்.

இலண்டனில் இருந்து இயங்கும் GTV தொலைக்காட்சியின் நிகழ்ச்சித் தொகுப்பாளர் பிறேம்  சிவகுரு பியசேன அரசிற்கு ஆதரவாக வாக்களித்த சம்பவத்தை ஒரு மரபணுப் பிரச்சனை என்று கண்டு பிடித்திருந்தார்.

தமிழ் மொழியை பயன்படுத்த தயங்குகின்ற ஈழத் தமிழர்களுக்கும் ஏதும் மரபணுப் பிரச்சனை இருக்குமோ?