கடந்த சனி மாலை (October 25, 2010) தென்னிலங்கையிலிருந்து வந்திருந்த சுற்றுலா பயணிகள் பலர் யாழ் பொது நூலகத்திற்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டதை அடுத்து நிகழ்ந்த ஒரு நூலக ஒழுங்கு விதி மீறல் பிரச்சினை, யாழ் பிரதேச பத்திரிகைகளாலும், இவைகளது ஊடக அனுசரணையுடன் – தமிழ் இனவாத அரசியல்வாதிகளாலும், இணையங்களாலும், ஒரு சிங்கள – தமிழ் இன உறவுச் சிக்கலாக சித்தரிக்கப்பட்டு இன விரிசல் ஏற்படுத்தப்பட்டு வரும் செயற்பாடுகளை நாம் வன்மையாகக் கண்டிக்க விரும்புகின்றோம்.
சிங்கள சகோதர மக்களின் யாழ் வருகைகளுக்கு எதிராக கடந்த ஒரு வருட காலமாக செய்யப்பட்டுவரும் இன விரிசலை ஏற்படுத்தும் பிரச்சாரங்களின் இன்னொரு அங்கமாகவே இச் சம்பவமும் சித்தரிக்கப்பட்டு வருவதை சுய சிந்தனையுள்ள எவரும் இலகுவில் இனங்கண்டு கொள்வர்.
யாழ் பொது நூலகத்தினரின் நிர்வாகத் தவறுகள் நிமித்தமும், சுற்றுலாப் பயணிகளின் வருகையால் நூலக ஊழியர்கள்மேல் அதிகரித்த வேலைப்பழுவின் விளைவாகவும், நூலக ஊழியர்களுக்கும் உல்லாசப் பயணிகளுக்கும் இடையில் இருந்த மொழிப் பிரச்சினை மற்றும் பரஸ்பர புரிந்துணர்வின்மை பாற்பட்டும் எழுந்த இந்தப் பிணக்கு நூலக ஒழுங்கு விதிகள் சம்பந்தமானதொன்று என்பதே சரியான பார்வையாகும். இந் நிலையில், இச் சம்பவமன்றி, இதனை ஒரு சிங்கள-தமிழ் இன உறவுச் சிக்கலாக சித்தரித்து, 1981 யாழ் நூலக எரிப்புச் சம்பவத்துடன் இணைத்து –எழுதி – அறிக்கைகள்விட்டு, தமிழ் இனவெறியை ஏற்படுத்தி அரசியல் ஆதாயம்பெற முயல்வதே மிக இழிவான இன வெறிச் செயல் என இங்கு நாம் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.
இச் சம்பவம்பற்றி விரிவாக விசாரித்து உறுதியாகத் தெரியவரும் விடயங்களின்படி, மேற்படி சம்பவம் நடைபெற்ற தினத்திற்கு முந்தைய தினம் தென்னிலங்கை உல்லாச பயணிகள் பலர் பொது நூலகத்தை பார்வையிட வந்திருந்ததாகவும், துரதிருஸ்டவசமாக அன்று போயா விடுமுறை தினமாகையால் அவர்களால் நூலகத்தை பார்வையிட முடியாதிருந்ததாகவும், இந்நிலையில், நூலக வாசலில் கடமையிலிருந்த காவலாளி அவர்களை மறுநாள் மாலை வருமாறு அறிவுறுத்தியிருந்ததாகவும், இதன்படி அவர்கள் சம்பவம் நடந்த தினமான மறுநாள் மாலை நூலகத்தை பார்வையிட வந்தபோது நூலகத்தின் உள்ளே இலங்கை மருத்துவர் சங்க மாநாடு நடப்பதை காரணம்காட்டி அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்ததாகவும், அதன் பின்னர் நூலக காவலாளியின் வேண்டுகோளின்பேரிலேயே தாம் வந்திருந்தபடியினால் தம்மை உள்ளேவிட அனுமதிக்க வேண்டுமெனக்கோரி சுற்றுலாப் பயணிகள் சிலர் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டதாகவும், அதில் ஒருவர் தான் ஜனாதிபதி அலுவலகத்தில் தொழில் புரிபவராகையால் தம்மை உள்ளே நுழைய அனுமதிக்க வேண்டுமென வற்புறுத்தியதாகவும், இவருடன் இன்னும் பலரும் இணைந்து தம்மையும் உள்ளே நுழையவிடுமாறு தொடர்ந்து வற்புறுத்தியதாகவும், இதனால் மேலதிக படையினர் வரவழைக்கப்பட்டதாகவும், இதன் பின்னர் யாழ் மாநகர முதல்வரின் உத்தரவின் பேரிலேயே உல்லாசப் பயணிகள் அனைவரும் நூலகத்தினுள் நுழைய அனுமதிக்கப்பட்டதாகவும், இதனைத் தொடர்ந்து நூலகத்தினுள் நுழைந்த இவ் உல்லாசப் பயணிகளில் ஒரு சிலர் மட்டும் அசாதாரணமாக நடந்துகொண்டதாகவும் அறியப்படுகிறது.
இவை தவிர, தென்னிலங்கை சுற்றுலாப்பயணிகள் அனைவரும் அடாவடியில் ஈடுபட்டதாகவும், முறைகேடாக நடந்ததாகவும், அனுமதியின்றி நுழைந்ததாகவும், நூலகத்தை முற்றுகையிட்டதாகவும் வெளிவந்த செய்திகளும், கண்டனக் குரல்களும், கடிதங்களும், அறிக்கைகளும், இனவெறியூட்டி அரசியல் ஆதாயம்பெற எழுதப்பட்ட வெறும் அவதூறுகளாகவே நாம் அறிந்து கொள்கிறோம்.
உண்மை நிலைமைகள் இப்படியிருக்க, தென்னிலங்கை சுற்றுலாப் பயணிகள் பலர் கடந்த ஒரு வருடத்திற்கும் அதிகமாக எவ்வித பாரிய பிரச்சினையுமின்றி பொது நூலகத்தை பார்வையிட்டுத் திரும்பிவருகின்றதொரு பின்னணியில், சம்பவத்திற்கு முந்தையதினம் நூலகத்தை பார்வையிட வந்த உல்லாசப் பயணிகள் நூலக காவலாளியின் கட்டளையை ஏற்று அமைதியாகத் திரும்பிச் சென்றதை கவனத்தில் கொள்ளத் தவறி, வெகு தொலைவிலிருந்து வந்து தரம் குறைந்த தங்குமிட சூழ்நிலையில், தெருவிலும் – திண்ணையிலும் – யாழ் திறந்தவெளியிலும், தங்கி திரும்பும் உல்லாசப் பயணிகளை சம்பவம் நடைபெற்ற அன்று நூலகத்தை பார்வையிட வருமாறு அழைத்து பின்னர் அவர்கள் நுழைய அனுமதி மறுத்தது நூலக நிர்வாகத்தின் பெரும் தவறு என்பதையும் எண்ணிப்பார்க்க மறந்து, தற்செயலான இந்தச் சம்பவத்தை புனைந்து பூதாகரமாக்கி முழுச் சிங்கள மக்களுக்கு எதிராகவும் சேறு பூசி, தமிழ் உணர்வாளர்களை உருவேற்றி அரசியல் ஆதாயம்பெறும் அற்பத்தனமான ஆசையில் ’81 நூலக எரிப்புச் சம்பவத்துடன் இதனை இணைத்து செய்திகளும், அறிக்கைகளும், கடிதங்களுமாக ‘நேர்முக வர்ணணைகள்’ செய்துவரும் யாழ் ஊடகங்களையும், இணையங்களின் ஒன்றியங்களையும், அரசியல் பிரகிருதிகளையும் நாம் வன்மையாகக் கண்டிக்க விரும்புகின்றோம்.
அத்துடன் தென்னிலங்கையிலிருந்து வந்திருந்த சுற்றுலாப் பயணிகளுக்கு உள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டு அவர்கள் வாசலில் தரித்து நின்ற வேளையில், நூலகத்தைப் பயன்படுத்த வந்திருந்த சில தமிழ் மக்களும், மருத்துவர்சங்க மாநாட்டிற்கு வந்திருந்த தமிழ் மருத்துவ மாணவர்களும் நூலகத்திற்குள் நுழைய அனுமதிக்கப்பட்ட விடயம்; இந்தச் சுற்றுலாப் பயணிகளுக்கு தவறான சமிக்ஞைகளை தந்திருக்கும் சாத்தியமுண்டு என்பதையும் இந்தப் பத்திரிகைகளும், கண்டன அறிக்கைகள்விடும் கனவான்களும் கவனத்தில் கொள்ள தவறியுள்ளனர் என்பதை இங்கு நாம் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.
மேலும், முதல் நாள் நூலக காவலாளியின் முடிவை ஏற்று நூலகத்தை பார்வையிடும் ஒரே காரணத்திற்காக மட்டும் மறுநாள்வரை தமது பயண ஏற்பாடுகளை சுற்றுலாப் பயணிகள் எவரும் பின்போட்டிருப்பின், மறுநாளும் அவர்கள் நூலகத்தை பார்வையிட அனுமதி மறுக்கப்பட்டது எவ்வாறு அவர்களுக்கு ஏமாற்றத்தை அளித்து ஆத்திரத்தை ஊட்டியிருக்கும் என்பதையும் இவைகளும் இவர்களும் எண்ணிப் பார்த்திருக்காதது கவலைக்குரியது. இது தவிர, நூலகத்திற்குள் நுழைய அனுமதிக்கப்பட்ட ஒரு சிலர் மட்டும் அசாதாரண நடத்தையில் ஈடுபட்டிருந்த நிலையிலும், அதுவும் நூலகத்திற்கு எதுவித சேதத்தையும் இவர்கள் எவரும் ஏற்படுத்தியிருக்காதபோதும், உல்லாசப் பயணிகள் அனைவரும் அடாவடித்தனங்களில் ஈடுபட்டதாக செய்திகளை பத்திரிகைகள் திட்டமிட்டு திரித்து வெளியிட்டுவரும் தர்மத்தையும் நாம் இங்கு கேள்விக்குட்படுத்த விரும்புகின்றோம்.
இலங்கையிலுள்ள இனங்களுக்கு இடையிலான அரசியல் உரிமைப் பிரச்சினைகள் ஆக்கபூர்வமாகத் தீர்க்கப்பட சகல இனங்களுக்கு இடையிலான உறவும் மிக ஆரோக்கியமாக பேணப்பட வேண்டியது அத்தியாவசியமானதொரு தேவையாகவுள்ள நிலையில், அரசியல் ஆதாயங்களுக்காக இன வெறியை எண்ணை ஊற்றி எரிய வைக்கும் வேலை முறைகளை தவிர்க்க வேண்டுமென நாம் சகல தரப்பினரையும் வற்புறுத்துகின்றோம்.
அத்துடன், சுற்றுலாப் பயணிகள் அனைவரும் பொது நூலகத்தை வந்து பார்வையிட இயலுமான சகல ஏற்பாடுகளையும் நூலக நிர்வாகம் உடன் செய்யவேண்டுமென நாம் வேண்டுகிறோம்.
மேலும், நூலகத்தை பார்வையிடவரும் சுற்றுலாப் பயணிகளின் அதிகரிப்பினால் நூலக ஊழியர்களின் மேல் வரும் வேலைப்பளுவை ஈடுசெய்யும் நடவடிக்கைகளையும் நூலக நிர்வாகம் உடன் எடுக்க வேண்டியது மிகவும் அவசியம் என்பதையும் நாம் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.
30 ஒக்டோபர் 2010
YARL ANALYTICAL RESEARCHERS’ LEAGUE
P O Box 165, Jaffna
._._._._._.
October 29, 2010
தென்னிலங்கை சுற்றுலாப் பயணிகளின் யாழ் வருகையும் யாழ் நகர் எதிர் கொள்ளும் பிரச்சினைகளும் : விஸ்வா
போரிற்குப் பின் முற்றிலும் எதிர்பாராத வகையில் ஆயிரக்கணக்கான தென்னிலங்கை சுற்றுலாப் பயணிகளின் யாழ் வருகை யாழ் மாவட்டத்தில் நிர்வாக நெருக்கடிகளை ஏற்படுத்தி உள்ளது. யாழ்ப்பாணம் வந்த தென்னிலங்கை சுற்றுலாப் பயணிகள் சிலர் யாழ் நூலகத்தில் நடந்துகொண்ட முறை தமிழ் மக்கள் மத்தியில் மிகுந்த அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே தமிழ் – சிங்கள இனங்களிடையே உள்ள நம்பிக்கையின்மையை மேலும் மோசமாக்குவதுடன் இவ்வாறான சம்பவங்கள் இன உறவுகளை மேலும் கீழ்நிலைக்கே இட்டுச் செல்கின்றது.
யாழ். பொது நூலகத்திற்குள் தங்களை அனுமதிக்க வேண்டும் எனக்கோரி சிக்கல்களை ஏற்படுத்திய தென்னிலங்கையில் இருந்து வந்த சில சுற்றுலாப் பயணிகள் யாழ் பொது நூலகத்திற்குள் அத்துமீறி நுழைந்ததும் இல்லாமல் அநாகரிகமான முறையிலும் நடந்து கொண்டமையும் தெரிந்ததே. ஒக்ரோபர் 23ல் இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பாக இன்று (ஒக்ரோபர் 29 2010) வெள்ளிக்கிழமை யாழ்.நூலக கேட்போர் கூடத்தில் கலந்துரையாடல் ஒன்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெறுகின்றது. கடந்த 23ஆம் திகதி யாழ். நூலகத்தைப் பார்வையிட வந்த தென்பகுதி சுற்றுலாப் பயணிகள் சிலரின் நடவடிக்கைகளால் நூலகப் பணியாளர்கள் மற்றும், யாழ்.மாநகர சபை உறுப்பினர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள நெருடலான மனஉணர்வுகள் குறித்தும் மற்றும், தென்பகுதி சுற்றுலாப் பயணிகள் தொடர்பான விடயங்கள் குறித்தும் இக்கலந்துரையாடலில் ஆராயப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் குறித்து யாழ். மாநகர சபை உறுப்பினர் அ பரஞ்சோதி ஒக்ரோபர் 27, 2010 பிரேரணை ஒன்றை முன்மொழிந்தும் இருந்தார். அன்று குறிப்பிட்ட சுற்றலாப் பயணிகள் நடந்து கொண்ட விதம் குறித்து தமது ஆதங்கத்தையும் அவர் வெளிப்படுத்தியுள்ளார். இச்சம்பவம் பற்றி அ பரஞ்சோதி வருமாறு கூறுகின்றார், ”பொது நூலக கேட்போர் கூடத்தில் மருத்துவச் சங்க மாநாடு ஒக்ரோபர் 22 முதல் ஒக்ரோபர் 24 ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெற்றது. இது நடைபெற்ற மூன்று நாட்களும் மாலை 5.30 மணியின் பின்னரே நூலகத்திற்குள் பார்வையாளருக்கான நேரம் ஒதுக்கப்பட்டது.
இந்நிலையில் கடந்த சனிக்கிழமை தெற்கு சுற்றுலாப் பயணிகள் சுமார் 300 பேர் வரையிலானோர் நூலக வாசலில் குவிந்தனர். உள்ளே விடுமாறு கலவரத்தில் ஈடுபட்டனர். வாயில் காவலாளி தடுத்த வேளையில் கதவின் பூட்டை உடைத்துக் கொண்டு அவர்கள் உள்ளே நுழைய முற்பட்ட போது நிலமை எல்லை மீறவே, மாநகர முதல்வருக்கு அறிவிக்கப்பட்டது. முதல்வர் பொலிஸாருக்கு அறிவித்து பொலிஸார் அவ்வடத்திற்கு வந்து சமரசம் செய்வதில் ஈடுபட்டனர். உடனே குறித்த சுற்றுலாப் பயணிகள் இராணுவத்தினருக்கு அறிவித்தனர். அவர்களால் கதவு திறக்கப்பட்டு சுற்றுலாப் பயணிகள் உள்ளே விடப்பட்டனர். உள்ளே சென்றவர்கள் புத்தக அடுக்கிலிருந்த புத்தகங்களை எடுத்து சிதறியடித்து அருவருக்கத்தக்க நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக அங்கிருந்த வாசகர்கள் தெரிவித்தனர். இக்குழப்பம் நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில், வாசகர்கள் பலர் அச்சத்தினால் நூலகத்தை விட்டு பின் கதவினூடாக வெளியேறிவிட்டனர். நடைபெற்றுள்ள சம்பவம் நாகரீகமற்ற ஆக்கிரமிப்பு நடவடிக்கை எனவு அங்கிருந்த வாசகர்கள் தெரிவித்தனர்.
நூலகம் என்பது அமைதி வழியில் பயன்படுத்தப்படும் ஒரு இடமாகும். இது சுற்றுலாப் பயணிகளுக்கான உல்லாசபுரியல்ல என்பதை சம்பந்தப்பட்டோர் புரிந்து கொள்ளவேண்டும்’’ இவ்வாறு அ பரஞ்சோதி தெரிவித்திருந்தார்.
மேலும் தென்னிலங்கையில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு வரும் சுற்றுலாப் பயணிகளினால் யாழ். குடாநாட்டு நிர்வாக ஒழுங்குகளில் பல சிக்கல்கள் தோன்ற ஆரம்பித்துள்ளன. தொடர்ந்தும் ஒவ்வொரு நாளும் யாழ்ப்பாணத்திற்கு சுற்றுலா வருகின்ற நூற்றுக்கணக்கான சிங்கள மக்கள் தங்குவதற்கு கிடைத்த இடங்களைப் பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர். தற்போது நாவற்குழியிலுள்ள அரச களஞ்சியமும் அவர்களிடம் தங்குமிடமாக மாறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. படை அதிகாரிகளின் குடும்பங்கள், அவர்களின் நண்பர்களின் குடும்பங்கள் தங்குவதற்கு நாவற்குழி அரச களஞ்சியம் பயனபடுத்தப்படுவதாக களஞ்சிய ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.
தினமும் நூற்றுக் கணக்கில் இவர்கள் சுற்றுலா வருவதால் இவர்களுக்கான தங்குமிடங்களாக பாடசாலைகளும் அரசாங்க கட்டடங்களும் பயன்படுத்தப்படுகின்றன. இரவில் இவர்கள் பாடசாலைகளில் தங்கிவிட்டுச் செல்லும் போது, காலையில் பாடசாலைக்கு வரும் மாணவர்கள் பல சுகாதார சீர்கேடுகளுக்கு முகம் கொடுக்கும் நிலையும் தோன்றி வருகின்றது.
தென்பகதி சுற்றலாப் பயணிகள் யாழ்ப்பாணத்தில் பல்வேறு பொது இடங்களில் தங்கிவருவதால் எற்பட்டுள்ள இச்சிக்கல்களை தவிர்க்கும் முகமாக இவர்கள் யாழப்பாணத்தில் தங்கும் பொது இடங்கள் குறித்த விபரங்கள் யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தால் திரட்டப்பட்டு வருகின்றன. பிரதேசச் செயலர்கள், கிராம அலுவலர்கள், மூலமாக இத்தகவல்கள் திரட்டப்பட்டு வருகின்றன. இத்தகவல்கள் குறித்த அறிக்கை அரசாங்க அதிபரிடம் சமர்ப்பிக்கப்படும்.
தென்பகுதியிலிருந்து வரும் அதிகளவிலான சுற்றுலாப் பயணிகளுக்குப் போதுமான இடவசதிகளை மேற்கொள்ள முடியதாத நிலை யாழ்ப்பாணத்தில் ஏற்பட்டுள்ள நிலையில் அவர்கள் தங்கக்கூடிய பொது இடங்களை அடையாளம் கண்டு அதற்கான வசதிகள் செய்து கொடுக்கப்படும் என மாவட்டச் செயலகம் தெரிவித்துள்ளது.