July

July

அடுத்த பத்தாண்டுகள் என்பது கோட்டாபய ராஜபக்ஷ தசாப்தம் – தலவாக்கலையில் விமல் வீரவன்ச

அடுத்த பத்தாண்டுகள் என்பது கோட்டாபய ராஜபக்ஷ தசாப்தமாகும். எனவே, அவருடன் இணைந்து பணியாற்றக்கூடிய காலாவதியாகாத – பொருத்தமான உறுப்பினர்களை மக்கள் பாராளுமன்றம் அனுப்பவேண்டும். நுவரெலியா மாவட்டத்தில் நிமல் பியதிஸ்ஸ முதலிடம் பிடிப்பார். மாவட்டத்தையும் கைப்பற்றுவோம் என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், அமைச்சருமான விமல் வீரவன்ச தெரிவித்தார்.

தலவாக்கலையில் நேற்று (29) மாலை நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது, ஆகஸ்ட் 5 ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான மொட்டு கூட்டணியே வெற்றிபெறும். இதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை. நுவரெலியாவில் காலநிலை மாறலாம். ஆனால், மொட்டை வெற்றி பெற வைக்கவேண்டும் என்ற மக்களின் மனநிலை மாறாது.

கடந்த ஜனாதிபதி தேர்தலின்போது நாடுமீது பற்றுள்ள தலைவரை மக்கள் தெரிவுசெய்தனர். அவர் சிறந்த தேசிய தலைவராக செயற்பட்டுவருகின்றார். அவர் ஜனாதிபதியானதால்தான் கொரோனாவைகூட எமது நாட்டில் கட்டுக்குள்கொண்டுவரமுடிந்தது. பழைய ஜோடி இருந்திருந்தால் (ரணில் – மைத்திரிபால) இந்நேரம் நிலைமை மோசமாகியிருக்கும். எனவே, எமக்கு கிடைத்துள்ள சிறந்த தலைவரின் கரங்களை பலப்படுத்தவேண்டும். அவருக்கு தேவையான விதத்தில் அரசாங்கமொன்றை உருவாக்கவேண்டும்.

அடுத்த 10 ஆண்டுகள் கோட்டாபய தசாப்தமாகும். இந்த நாட்டை கட்டியெழுப்பும் தசப்பதமாகும். அனைத்து இன மக்களையும் அரவணைத்து புதியதொரு யுகத்தை உருவாக்கும் தசாப்தமாக அமையும். எனவே, காலாவதியான அரசியல்வாதிகளை பாராளுமன்றம் அனுப்பாமல், சிறப்பாக செயற்படக்கூடியவர்களை அனுப்புமாறு கேட்டுக்கொள்கின்றேன் என்றார்.

வாக்களிப்பதற்காக தமது சொந்த இடங்களுக்கு செல்லும் மக்களுக்காக விசேட போக்குவரத்து சேவை – – அமைச்சர் மஹிந்த அமரவீர

பொதுத் தேர்தலுக்கு வாக்களிப்பதற்காக தமது சொந்த இடங்களுக்கு செல்லும் மக்களுக்காக நாளை முதல் விசேட போக்குவரத்து திட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது. இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான சகல பஸ் வண்டிகளையும் சேவையில் ஈடுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் கீழ் இயங்கும் மாகாணங்களுக்கிடையிலான பஸ் வண்டிகள் மாத்திரமன்றி மாகாண போக்குவரத்து அதிகார சபையின் கீழ் இயங்கும் பஸ் வண்டிகளும் சேவையில் ஈடுப்படவுள்ளன.

இவ்வாறு 600 பஸ்கள் சேவைக்கென தயார் நிலையில் உள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார். இதற்கு மேலதிகமாக சகல புகையிரதங்களும் விசேட நாட்களில் சேவையில் ஈடுப்படுத்தப்படவுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அநுராதபுரம், மட்டக்களப்பு, கண்டி, பதுளை, பெலியத்த வரையில் மேலதிக ரயில் சேவைகள் இடம்பெறவுள்ளன. தேவையேற்படும்; பட்சத்தில் மேலதிக ரயில்களை சேவையில் ஈடுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

கட்டுநாயக்க விமான நிலைய திறப்பு பிற்போடப்பட்டது – ஜயனாத் கொலம்பகே

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மூடப்பட்ட கட்டுநாயக்க விமான நிலையத்தை மீண்டும் திறக்கும் நடவடிக்கை காலவறையின்றி பிற்போடப்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது .

முன்னதாக எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி முதல் கட்டுநாயக்க விமான நிலையம் சுற்றுலா பயணிகளுக்காக திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது . எனினும் தற்போது நம்முடைய நாட்டிலும் , சர்வதேச ரீதியாகவும் கொரோனா ரைவஸ் பரவும் அபாயம் தீவிரம் அடைந்துள்ளதால் விமான நிலையத்திதை திறக்கும் நடவடிக்கை காலவரையின்றி பிற்போடப்பட்டுள்ளதாக , ஜனாதிபதி மேலதிக செயலார் ஜயனாத் கொலம்பகே தெரிவித்துள்ளார் . எனினும் விமான நிலையத்தை திறப்பதற்கு ஆரம்பக்கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார் .

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின்(ஐசிசி) ஒருநாள் கிரிக்கெட் தரவரிசைப்பட்டியல் வெளியிடப்பட்டது.

கொரோனா வைரஸ் பரவலால் கடந்த 3 மாதங்களுக்கும் மேலாக எந்த அணியும் கிரிக்கெட் போட்டிகள் எதுவும் விளையாடவில்லை. இந்த காலக்கட்டத்தை அடிப்படையாக வைத்து ஐசிசி ஒருநாள் போட்டிக்கான வீரர்கள் தரவரிசைப்பட்டியலை வெளியிட்டுள்ளது.

இதில் துடுப்பாட்ட வீரர்களுக்கான தரவரிசைப் பட்டியலி்ல் இந்திய அணியின் தலைவர் விராட் கோலி 871 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறார். 2-வது இடத்தில் துணைத்தலைவர் ரோஹித்சர்மா  855 புள்ளிகளுடன் உள்ளார். இவர்கள் இருவரும் அசைக்க முடியாத இடத்தில் கடந்த மார்ச் மாதத்திலிருந்து இருந்து வருகின்றனர்.

மூன்றாவது இடத்தில் பாகிஸ்தான் வீரர் பாபர் ஆஸம்829 புள்ளிகளுடனும், 4-வது இடத்தில் 818 புள்ளிகளுடன் நியூஸி வீரர் ராஸ் டெய்லர், 5-வது இடத்தில் தென் ஆப்பிரிக்க வீரர் டூப்பிளசிஸ் 790 புள்ளிகளுடன் உள்ளனர்.

6 முதல் 10-ம் இடங்களில் முறையே, ஆஸி.யின் டேவிட் வார்னர்(789புள்ளிகள்), 7-வதுஇடத்தில் ஜோ ரூட்(770), 8-வது இடத்தில் ஆரோன் பிஞ்ச்(767), கேன் வில்லியம்ஸன்(765), டீ காக்(755) ஆகியோர் உள்ளனர்.

பந்துவீச்சாளர்களைப் பொறுத்தவரை முதலிடத்தில் நியூஸிலாந்து வீரர் டிரனட் போல்ட் 722 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார். 2-வது இடத்தில் இந்திய வீரர் பும்ரா 719 புள்ளிகளுடன் உள்ளார். 3-வது இடத்தில் ஆப்கானிஸ்தான் வீரர் முஜிபுர் ரஹ்மான்(701), 4-வது இடத்தில் பாட் கம்மின்ஸ்(689), 5-வது இடத்தில் ரபாடா(665) உள்ளனர்.6 முதல் 10 இடங்களில் முறையே, கிறிஸ் வோக்ஸ், முகமது அமிர், மாட் ஹென்றி, ரஷித் கான், பெர்குசன் உள்ளனர்.

சகல துறை வீரர்களுக்கான  தரவரிசையில் ஆப்கானிஸ்தான் வீரர் முகமது நபி 301 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார். பென் ஸ்டோக்ஸ்(293) 2-வது இடத்தில் உள்ளார். இந்த வரிசையில் இந்திய வீரர் ரவீந்ரஜடேஜா 246 புள்ளிகளுடன் 8-வது இடத்தில் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

சீனாவில் கொரோனா வைரஸ் இரண்டாம் கட்ட பரவல் அலை

சீனாவில் கொரோனா வைரஸ் இரண்டாம் கட்டப் பரவலை அடைந்துள்ளது. இதன் காரணமாக அங்கு கொரோனா பரவல் மெல்லத் தீவிரமடைந்துள்ளது.

இதுகுறித்து சீனாவின் சுகாதார அமைப்பு கூறும்போது, “சீனாவில் கடந்த மூன்று மாதங்களுக்குப்  பிறகு  இன்று (புதன்கிழமை) 100க்கும் அதிகமானவர்களுக்குக் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதில் 89 பேருக்கு உள்ளூரிலேயே தொற்று ஏற்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் சின்ஜியாங் மாகாணத்தைச் சேந்தவர்கள் என்பது கண்டறியப்பட்டுள்ளது.

உரும்கி நகரில் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட 15 பேருக்கு எந்த அறிகுறியும் இல்லை. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பால் யாரும் இறக்கவில்லை” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலியன்,உரும்கி நகரங்களில் ஜூலை மாதத்திலிருந்து கொரோனா பரவல் தீவிரமாக இருப்பதாக சீன மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

கடுமையான ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டதன் விளைவாக, சீனாவில் இந்த நோய்த்தொற்று கடந்த ஏப்ரல் மாதத் தொடக்கத்தில் முழுவதுமாகக் கட்டுக்குள் வந்தது.

இந்நிலையில், சீனத் தலைநகர் பெய்ஜிங் அருகே உள்ள அக்சின் என்ற பகுதியில் கடந்த மாதம் கொரோனா வைரஸ் மீண்டும் பரவத் தொடங்கியது கண்டுபிடிக்கப்பட்டது. அங்குள்ள ஓர் இறைச்சி சந்தையில் பணிபுரிவோரிடம் இருந்து இந்த வைரஸ் பரவியிருக்கக் கூடும் எனச் சந்தேகிக்கப்பட்டது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பெய்ஜிங் முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன் விளைவாக பெய்ஜிங்கில் கொரோனா பரவல் தற்போது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் சின்ஜியாங் மாகாணத்தில் கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ளது.

முல்லைத்தீவில் விரைவில் உருவாகவுள்ள பல்கலைகழகம். – வடக்கு ஆளுநர் பீ.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவிப்பு

முல்லைத்தீவு மாவட்டத்தில் பல்கலைக்கழகம் விரைவில் அமைக்கப்படவுள்ளதோடு அதற்கு மாணவர்களை உள்வாங்குவதற்கு பிரத்தியேக முறை பின்பற்றப்படவுள்ளதாகவும் வடக்கு ஆளுநர் பீ.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்துள்ளார்.

அண்மையில் சிறந்த பாடசாலை திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட மன்னார் பரிகாரக்கண்டல் அரச தமிழ் கலவன் பாடசாலையின் தொழில்நுட்பக் கட்டடத் தொகுதியை வட மாகாண ஆளுநர் திருமதி.பீ.எஸ்.எம்.சாள்ஸ் நேற்று வைபவரீதியாகத் திறந்து வைத்துள்ளார்.அவர் அங்கு கருத்து தெரிவிக்கும் போதே இது தொடர்பான கருத்துக்களை குறிப்பிட்டுள்ளார். மேலும் அங்கு கருத்து தெரிவிக்கும் போது

“வட மாகாணம் ஒரு காலகட்டத்திலே இலங்கையிலேயே கல்வியில்  தலை நிமிர்ந்து நின்றதொரு மாகாணமாகும். இந்த நாட்டிலுள்ள அனைவருமே கல்வியென்று சொன்னால் யாழ்ப்பாணமும் வட மாகாணமும் என்று சொல்லுமளவிற்கு சிறந்து விளங்கியது.

மாணவர்கள் பாடசாலைகளுக்கு வருகை தந்து கல்வி கற்பதை பாக்கியமாக கருதினார்கள். அந்நிலை மாறி இன்று க.பொ.த. சாதாரணப் பரீட்சைப் பெறுபேற்றில் 9ஆவது இடத்தில் வட மாகாணம் உள்ளது.

வளப்பகிர்வைச் சரியாகப் பகிர்ந்து கொள்ளவேண்டுமென்பதில் வட மாகாண சபை மிக ஆழமாகச் சிந்தித்து செயலாற்றிக்கொண்டிருக்கின்றது.

இதன் ஒரு பகுதியாகத்தான் புதிய கட்டடங்களை வளங்கள் குறைந்த பாடசாலைகளுக்குப் பகிர்ந்தளித்துள்ளார்கள்.

பிரதமரின் வேண்டுதலின் பேரில் நமது தேவைகளை முன்னிலைப்படுத்திய கோரிக்கையை நான் அவரிடம் கையளித்துள்ளேன்.

மாணவர்களே, நீங்கள் அரச உத்தியோகத்தை தேடிச் சென்றாலும், தனியார் வேலையைத் தேடிச்சென்றாலும், சுய தொழில் செய்தாலும், வேலைக்காக வெளி நாடுகளுக்குச் சென்றாலும் உங்களுடைய கல்வித் தகைமையென்பது மிகவும் முக்கியமானது. நீங்கள் கல்வி அறிவுள்ளவர்களாகவும் கல்வித் தகைமையைக் கொண்டிருப்பவர்களாகவும் இருக்கவேண்டும்.

தற்போது அரசாங்கம் பல்கலைக்கல்விக்காக இன்னுமொரு செயற்பாட்டை முன்னெடுத்துள்ளது. ‘சித்தி பல்கலைக்கழகம்‘ என்ற ஒன்று உருவாக்கப்படப்போகிறது.

இதுவரை வெட்டுப்புள்ளிகள் ஊடாக பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை உள்வாங்கும் முறை இருக்கிறது.

அதாவது  20% மாணவர்களே பல்பலைக்கழகங்களுக்குள் உள்வாங்கப்பட்டார்கள். இந்த ‘சித்தி பல்கலைக்கழகத்தில்‘ நீங்களாகவே விரும்பிய துறைகளில் விண்ணப்பித்து இணைந்து கொள்ள முடியும்.

அந்தப் பல்கலைக்கழகத்தை முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைப்பதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுக்கொணடிருக்கின்றன.

க.பொ.த. சாதாரண மற்றும் உயர்தரப் பரீட்சைகளில் சித்தியடைந்த மாணவர்கள் இல்லாமல் நாங்கள் எந்தப் பல்கலைக்கழகத்தை உருவாக்கினாலும் அதனால் பயனடையப்போவது நமது மாகாணத்தைச் சார்ந்தவர்களாக இருக்கப்போவதில்லை.

ஆகவே மாணவர்கள் கல்வித்தகமையை உயர்த்திக்கொள்ள வேண்டும். உங்கள் ஒழிமயமான எதிர்காலத்திற்காக உங்களை தயார்படுத்திக்கொள்ளுங்கள் ”

என வடக்குமாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார்.

யாழ்.வடமராட்சியில் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவர் ஒருவர் மாயம்.

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு- கட்டைக்காடு கடற்பகுதியில்  மீன்பிடிப்படகு ஒன்று கவிழ்ந்ததில் தொழிலுக்குச் சென்ற இரண்டு மீனவர்களில் ஒருவர் மீட்கப்பட்டுள்ள நிலையில் மற்றையவர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் காணாமல் போனவரை ஏனைய மீனவர்களின் உதவியுடன் தேடும் பணியில் கடற்படையினர் தற்போது ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, வடராட்சி கிழக்கு, கட்டைக்காடு கடற்பரப்பில் இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை படகு ஒன்றில் இரண்டு மீனவர்கள் தொழிலுக்குச் சென்றனர்.

இதன்போது கடலில் ஏற்பட்ட பலத்த காற்றினால், படகு கவிழ்ந்து கடலில் தந்தளித்த அவர்களை மீட்க மீனவர்கள் நடவடிக்கை எடுத்தனர். எனினும் ஒருவர் பாதுகாப்பான முறையில் மீட்கப்பட்டுள்ளார்.

அத்துடன் காணாமல்போன மற்றைய மீனவரை தேடும் பணிகள்  தொடர்ந்தும் கடற்படையினரால் தீவிரப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடரும் வீதி விபத்து உயிரிழப்புக்கள் :- வவுனியாவில் ஒருவர் பலி.

வவுனியா – பறண்நட்டகல் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வவுனியாவிலிருந்து இன்று ஓமந்தை நோக்கிச் சென்றுகொண்டிருந்த மோட்டார் சைக்கிளும் ஓமந்தையில் இருந்து வவுனியா நோக்கிச் சென்ற டிப்பர் வாகனமும் ஒன்றுடன் ஒன்று மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் படுகாயமடைந்த நிலையில், நோயாளர்காவு வண்டி மூலம் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். எனினும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்தில் கட்டுப்பாட்டை இழந்த டிப்பர் வாகனம் குடைசாய்ந்துள்ளதுடன்,  அதன் சாரதி சிறுகாயங்களிற்கு உள்ளாகியுள்ளார்.

நேற்றைய தினம் பேராதெனிய – கம்பளை பிரதான வீதியின் கெலிஓய, கரமட பகுதியில் இடம்பெற்ற விபத்தில் மூவர் உயிரிழந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

உலக அளவில் சுமார் ஆறு இலட்சத்து 50 ஆயிரத்தை தாண்டியது கொரனா உயிரிழப்பு.

கொவிட் -19 எனப்படும் கொரோனா வைரஸ் தொற்றினால் உலகளாவிய ரீதியில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை சுமார்  6 இலட்சத்து 50 ஆயிரத்தை கடந்துள்ளது . உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கையில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு ஐரோப்பிய நாடுகளில் உயிரிழந்துள்ளனர்.

 கடந்த ஆண்டின் பிற்பகுதியில் சீனாவின் வுகானில் இந்த வைரஸ்  தோன்றியதில் இருந்து , இந்த வைரஸ் தொற்றினால் மொத்தம் 650,011 பேர் உயிரிழந்துள்ளதோடு , 16,323,558 பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள் . அதில் 9,190,345 பேர் வைரஸ் பாதிப்பிலிருந்து குணமடைந்துள்ளனர் .
ஜூலை 9 முதல் தற்போது வரைக்கும் 100,000 க்கும் மேற்பட்ட புதிய இறப்புகள் பதிவாகியுள்ளன. மேலும் உலகளாவிய எண்ணிக்கை இரண்டு மாதங்களில் இரு மடங்காக அதிகரித்துள்ளது . எ.எப்.பி புள்ளிவிபரங்களின் படி , ஜூலை 9 ஆம் திகதி முதல் 100,000 க்கும் மேற்பட்ட உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளன . மேலும் உலகளாவிய ரீதியில் உயிரிழப்பு எண்ணிக்கை இரண்டு மாதங்களில் இரட்டிப்பாகியுள்ளது .

உலக அளவில் சுமார் 70 லட்சம் குழந்தைகள் பாதிக்கப்பட வாய்ப்பு – ஐக்கியநாடுகள் சபை அனுமானம்

கொரோனா வைரஸ் தொற்றுநோய் உணவு விநியோகத்தை பாதிப்பதன் விளைவாக கிட்டத்தட்ட 70 லட்சம்  குழந்தைகள் தங்களது வயதுக்கு ஏற்ற உயரம் இல்லாமல் பாதிக்கப்படுவார்கள் என்று ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்துள்ளது.
118 ஏழை மற்றும் நடுத்தர வருமான நாடுகளில் கொரோனா ஏற்படுத்தும் தாக்கத்தை நிபுணர்களின் குழு விவரித்துள்ளது. அந்த அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளிடையே மிதமாக அல்லது கடுமையாக உயரத்துக்கு ஏற்ற எடை இல்லாமல் பாதிக்கப்படுவது 14.3 சதவிகிதம் அதிகரிக்கும் என்று அவர்கள் கண்டறிந்தனர், இதன் விளைவாக கூடுதலாக 67 பாதிப்புகள் அதிகரிக்க வழிவகுக்கும் என கூறப்படுகிறது.
ஆரம்பகால வாழ்க்கையில் ஊட்டச்சத்தின் மீது கொரோனா தொற்றுநோயின் ஆழமான தாக்கம் குழந்தைகளின் வளர்ச்சிக்கு ஒன்றிணைந்த விளைவுகளை ஏற்படுத்தக்கூடும், மேலும் கல்வியில் வாழ்நாள் முழுவதும் ஏற்படும் பாதிப்புகள், நாட்பட்ட நோய் அபாயங்ளை ஏற்படுத்தக்கூடும் என்று ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
உடல் மிகவும் ஊட்டச்சத்து குறைபாடு உள்ள போது தசைகள் மற்றும் கொழுப்பு மறைந்து போகும் போது தங்களது உயரத்துக்கு ஏற்ற எடை இல்லாத பாதிப்பு ஏற்படும் என கூறியுள்ளனர்.