August

August

தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி – தேர்தல்கள் ஆணைக்குழு

நாளைய தினம் (05.08.2020) நடைபெறவுள்ள பாராளுமன்ற பொது தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டிருப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலக பொறுப்பில் உள்ள வாக்கு பெட்டிகளை இன்று (4.05.2020) காலை 8.00 மணிக்கு வாக்களிப்பு மத்திய நிலையங்களுக்கு எடுத்துச்செல்கின்ற பணி ஆரம்பமானது. 12,985 வாக்களிப்பு நிலையங்களுக்காக 71 மத்திய நிலையங்களில் இருந்து வாக்குப்பெட்டிகள் அனுப்பி வைக்கப்படுகின்றன. மத்திய நிலையங்களுக்கு வாக்கும் பெட்டிகளை அனுப்பும் பணி இன்று மாலைக்குள் பூர்த்தி அடையவுள்ளது.

நாளை நடைபெறவுள்ள வாக்களிப்பு தொடர்பான ஒத்திகை இன்று தேர்தல் மத்திய நிலையங்களில் இடம்பெறுவதாகவும் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

வாக்குப் பெட்டிகளுக்களுக்கான பாதுகாப்பில் பொலிஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். வாக்களிப்பு நிலையங்களில் கிருமி நீக்க பணிகளை மேற்கொள்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிப்பதாகவும் ஆணையாளர் குறிப்பிட்டார்.

இம்முறை பொது தேர்தலில் 25 அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சை குழுக்களை பிரதிநித்துவப்படுத்தி 7,456 பேர் போட்டியிடுகின்றனர். இதேவேளை பொது தேர்தலில் பாதுகாப்பு நடவடிக்கைகளில் சிவில் பாதுகாப்பு படைப்பிரிவைச் சேர்ந்த 10,500 பேர் ஈடுபடுத்தப்பட்டிருப்பதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பொலிஸாருக்கு மேலதிகமாக சிவில் பாதுகாப்பு படையினரும் தேர்தல் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்படுவதாக சிரேஸ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய மேலும் தெரிவிததார்.

3000க்கு மேற்பட்ட தேர்தல் முறைப்பாடுகள் பதிவு – வடக்கிற்கு முதலிடம்!

இலங்கையின் ஏனைய பகுதிகளுடன் ஒப்பிடும்போது அதிகளவான தேர்தல் சட்டமீறல் சம்பவங்கள் வட மாகாணத்தில் பதிவாகியுள்ளதாக தேர்தல் கண்காணிப்புக்கான தன்னார்வ முயற்சியின் ஒன்றிணைந்த செயற்குழு உறுப்பினர் அதில் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பாக ஊடகவியலாளர்களுக்கு  கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அதில் மேலும் குறிப்பிடும்போது அவர்,

நாடளாவிய ரீதியில் 3000இற்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் பதிவாகியுள்ளது. அவற்றில் அரைவாசிக்கு அதிகமானவை வட மாகாணத்தில் பதிவாகியுள்ளது என குறிப்பிட்டுள்ளார். சுமார் 1800 முறைகேடுகள் வடமாகாணத்தில் மட்டும் பதிவாகியுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.

சட்ட விரோத பரப்புரை நடவடிக்கைகள், வாக்காளர்களுக்கு பணம் வழங்குதல், வாக்காளர்களை மத ரீதியான சுற்றுலாக்களுக்கு அழைத்துச் செல்லல், கட்சியின் பெயர் இலக்கம் பொறிக்கப்பட்ட பத்திரங்களை விநியோகித்தல், தனிமைப்படுத்தல் சட்ட ஒழுங்குகளை மீறல், சட்ட விரோத வாகன பேரணிகள் போன்ற தேர்தல் சட்ட மீறல்கள் சம்பவங்களே வட மாகாணத்தில் அதிகளவாகப் பதிவாகியுள்ளது.

இதேவேளை அமைதிக் காலம் மற்றும் தேர்தல் தினத்திலும் பரப்புரை நடவடிக்கைகளை மேற்கொள்ள சில கட்சிகளும் வேட்பாளர்களும் திட்டமிட்டுள்ளமை குறித்த தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளது. இதனை கட்டுப்படுத்த பொலிஸார் பக்கச்சார்பின்றி செயற்பட வேண்டுமென மேலும் அவர் இதன்போது  தெரிவித்துள்ளார்.

சுகாதாரமான தேர்தல் ஒன்றை நடாத்துவதற்கான பணிகள் முன்னெடுப்பு.

நாளை மறுதினம் நடைபெறவுள்ள தேர்தலை முன்னிட்டு  கொரோனா வைரஸ் பாதுகாப்பு கருதி இலங்கையின் சகலபகுதிகளிலும் சுகாதாரமான தேர்தல் ஒன்றை நடாத்த தேர்தல் திணைக்களமானது முடியுமானவரை இயங்கிக்கொண்டிருக்கின்றது. இந்த நிலையில்  மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள வாக்களிப்பு நிலையங்களுக்கு இரசாயண திரவம் தெளிக்கும் நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றது.

அந்தவகையில் மட்டக்களப்பின் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக பிரிவில் 6 வாக்களிப்பு நிலையங்களும், ஓட்டமாவடி பிரதேச செயலக பிரிவில் 7 வாக்களிப்பு நிலையங்களும், வாழைச்சேனை பிரதேச செயலக பிரிவில் 16 வாக்களிப்பு நிலையங்களுக்கும் இரசாயண திரவம் தெளிக்கும் நடவடிக்கைகள் இடம்பெற்றது.

இதன்போது கோறளைப்பற்று மத்தி, ஓட்டமாவடி, வாழைச்சேனை ஆகிய சுகாதார வைத்திய அதிகாரி பிரிவினரால் வாக்களிப்பு நிலையங்களுக்கு மக்களின் பாதுகாப்பு கருதி இரசாயண திரவம் தெளிக்கப்பட்டது.

நாட்டில் ஏற்பட்ட கொரோனா வைரஸ் நோய் காரணமாக வாக்காளர்களின் நன்மை கருதி சுகாதார விதிமுறைகளைப் பேணி இத்தேர்தல் நடாத்த சகல ஏற்பாடுகளும் மட்டக்களப்பு மாவட்டத்தில் பூர்த்தியாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

நான் துரோகி எனில் எனக்கு வாக்களிக்க வேண்டாம் – யாழில் சிறீதரன்

இரணைமடு குடிநீர்தான் பிரச்சனை என்றால் என்னை நிராகரியுங்கள் தோல்வியை எதிர்கொள்ள நான் தயாரென  தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளரான சிறீதரன் தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் (02.08.2020) யாழ்ப்பாணம் கிட்டுப் பூங்காவில் இடம்பெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இரணைமடு குளத்தின் தண்ணீரை யாழ்ப்பாணத்திற்கு வழங்க முடியாதென நான் கூறியதாக ஊடங்களில் வெளிவந்துள்ள செய்திகள் தொடர்பில் விளக்கமளிக்க வேண்டிய பொறுப்பு எனக்கு உள்ளது.   இரணைமடு தொடர்பில் இப்போது யாழ்ப்பாணத்தை தளமாக கொண்டியங்கும் தொலைக்காட்சி என் பெயரைக் குறிப்பிடாமல் எனக்கு எதிராக இரணைமடு நீரை தர மறுத்தவர் யார்? மறக்க மாட்டார்கள் யாழ்ப்பாண மக்கள் என்று கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் ஒன்றை பிரசுரித்து வருகிறார்கள். இதன் விளக்கம் இல்லாமல் குறுகிய வட்டத்துக்குள் அவர்கள் நிற்கிறார்கள்.

கிளிநொச்சியில் தண்ணீர் இல்லை குடிக்க, விவசாயம் செய்ய தண்ணீர் இல்லாத நிலையில் யாழ்ப்பாணத்திற்கு தண்ணீர் கொண்டு செல்லப்பட்டால் இங்கே ஒரு விரோதத்தை கட்டி வளர்க்கலாம் இதனை அரசாங்கம் திட்டமிட்டு செய்தது .இதனையே சிலர்  அரசியலாக காவிச் செல்கின்றார்கள்.நான் யாருக்கும் தண்ணீர் தரமாட்டேன் என்று சொல்லவில்லை. நியாயத்தை சொன்னேன்.

குடிநீர் பிரச்சனையை தீர்க்க நாங்கள் முக்கியமான முயற்சிகளை செய்தோம். பாலியாறு எப்போதும் கடலுக்கு தண்ணீர் போகின்ற ஆறு, மண்டைக்கல்லாறு,குடமுறுட்டி போன்ற ஆறுகளாலும் கடலுக்கு தண்ணீர் போகிறது எத்தனையோ வளங்கள் உள்ளது.

நிலத்தடி நீரையும் நன்னீராக்கி 24 மணிநேரமும் குடிதண்ணீர் வழங்கக் கூடிய திட்டங்கள் கொண்டுவரப்பட்டது. எனினும் இவை குண்டுவெடிப்பு, ஜனாதிபதி தேர்தல், கொரோனா போன்றவற்றால் இத்திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இது தான் இதன் உண்மை.

இதன் பிறகும் இரணைமடு தண்ணீரை தரவில்லை என்று நீங்கள் எண்ணினால் நான் துரோகி என நினைத்தால், என் மீது நம்பிக்கை இல்லை என்றால் தயவு செய்து எனக்கு வாக்களிக்க வேண்டாம். தோல்வியை நான் ஏற்கத்தயாராக உள்ளேன் என அவர் தெரிவித்துள்ளார்.

தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பாக சுமார் ஆறாயிரத்துக்கும் மேற்பட்ட முறைப்பாடுகள்!

இலங்கை பாராளுமன்றத்தேர்தலுக்கான அனைத்து விதமான பிரச்சார நடவடிக்கைகளும் இன்று நள்ளிரவுடன் முடிவுக்கு வருகின்ற நிலையில் தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் இதுவரையில் ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதன் அடிப்படையில் இதுவரையில் 6483 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறாயினும் ஒரு வன்முறை செயல் கூட இதுவரை பதிவாகவில்லை என தேர்தல் ஆணைக்குழு வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, நேற்று (01.08.2020) பிற்பகல் 04 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் 249 தேர்தல் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1.79 கோடியாக உயர்வு

சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ், உலகம் முழுவதிலும் வியாபித்துள்ளது. கொரோனா  வைரஸ் பரவலால் வல்லரசு நாடான அமெரிக்காவே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரசுக்கு தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.  இன்னும் சில மருத்துவ பரிசோதனைகள் எஞ்சியுள்ளதால், கொரோனா தடுப்பூசி இந்த ஆண்டு இறுதி அல்லது அடுத்த ஆண்டு துவக்கத்தில்தான் பயன்பாட்டுக்கு வரும் என்று நிபுணர்கள் தரப்பில் சொல்லப்படுகிறது.

இதனால், மனித குலத்திற்கு இன்னும் பெரும் சவாலாகவே கொரோனா வைரஸ் விளங்கி வருகிறது. உலக அளவில் தற்போதைய நிலவரப்படி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை  1,79,99,273  -ஆக உயர்ந்துள்ளது.  கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை  6,87,807- ஆக உள்ளது.  கொரோனாவில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை  1,13,18,851- ஆக உள்ளது.

தேர்தல் பாதுகாப்பிற்கென முப்படையினரும் கடமையில் – மஹிந்த தேசப்பிரிய

எதிர் வரும் 05.08.2020 நடைபெறவுள்ள பாராளுமன்றத்தேர்தலுக்கான பிரச்சாரங்கள் யாவும் இன்று நள்ளிரவு முதல் முடிவுக்கு வருகின்ற அதே நேரம் இன்று நள்ளிரவு முதல் அமைதிக்காலமாக ஏற்கனவே தேர்தல் ஆணையம் அறிவித்திருந்த நிலையில் தேர்தல் தொடர்பான பாதுகாப்பிற்கென நாளை முதல் முப்படையினர் கடமையில் ஈடுப்படுத்தப்படவுள்ளர் . பிரச்சினைகள் ஏற்படக்கூடுமென ஊகிக்கப்படும் பிரதேசங்களுக்கு பொலிஸாரும், இராணுவத்தினரும் சேவையில் ஈடுப்படுத்தப்படவுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

வெளிநாடுகளில் சிக்கியிருந்த ஒரு தொகை இலங்கையர்கள் நாடு திரும்பினர்

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இரண்டு நாடுகளில் சிக்கியிருந்த 373 பேர் இன்றையதினம் நாடு திரும்பியுள்ளனர்.

இவர்களுள் ஐக்கிய அரபு இராச்சியத்தில் தொழிலுக்காக சென்று நாடு திரும்ப முடியாமல் இருந்த 332 பேர் இன்று (02) அதிகாலை இவ்வாறு நாடு திரும்பியுள்ளனர்.

அதேபோல் உயர் கல்விக்காக இங்கிலாந்துக்கு சென்று நாடு திரும்ப முடியாமல் இருந்த 41 இலங்கை மாணவர்களும் நாடு திரும்பியுள்ளனர்.

இதேவேளை, கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட்டுள்ள வணிகக் கப்பலில் பணிப்புரிவதற்காக 13 வெளிநாட்டு மாலுமிகளும் இன்று நாட்டுக்கு வருகைத்தந்துள்ளனர். அவர்கள் கட்டாரில் இருந்து இலங்கையை  வந்தடைந்துள்ளனர்.

இவர்கள் அனைவரும் பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

சமூக வலைத்தளங்களில் தேர்தல் பிரச்சாரத்துக்கு தடை – சுரங்க ரணசிங்க

இலங்கையின் பொதுத்தேர்தலுக்கான பிரசாரங்கள் இன்று நள்ளிரவுடன் முடிவுக்கு வருகின்றன நிலையில் இன்று நள்ளிரவுடன் சமூக ஊடகங்களில் மேற்கொள்ளப்படும் பிரசாரங்கள் யாவும் நிறுத்தப்படவேண்டும். அத்துடன் சமூக ஊடகங்களில் பதிவுசெய்யப்பட்டுள்ள பிரசாரங்கள் அனைத்தும் அகற்றப்படும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் முரண்பாடுகள் தீர்வுப்பிரிவின் உதவி ஆணையாளர் சுரங்க ரணசிங்கவின் தகவல்படி சமூக ஊடகங்களின் பிரசாரங்கள் ஆணைக்குழுவினால் இன்று நள்ளிரவுக்கு பின்னர் உடனடியாகவே அகற்றப்படும்.

இதேவேளை கடந்த ஒரு வாரக்காலப்பகுதிக்குள் சமூக ஊடக பிரசாரத்துக்காக வேட்பாளர்கள் 1லட்சம் 50ஆயிரம் டொலர்களை செலவிட்டுள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

கூட்டமைப்பின் சிவஞானம் சிறீதரன் பங்கேற்ற பிரச்சார கூட்டத்தில் பங்குபற்றிய மக்கள் மீது தாக்குதல்.

கிளிநொச்சி மாவட்டம் அக்கராயன் பொதுச் சந்தையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பங்கு கொண்ட மக்கள் மீது முன்னாள் ஈ.பி.டி.பி.யின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமாரின் குழு ஒன்று தாக்குதல் நடத்தியுள்ளதாக முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளது.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர் சிவஞானம் சிறீதரன் பங்கேற்ற பிரச்சார கூட்டம் நேற்று (01.08.2020) மாலை அக்கராயன் பொதுச் சந்தைப் பகுதியில் நடைபெற்றுள்ளது.

அவர் உரையாற்றிக் கொண்டிருந்த போது, சில நபர்கள் அந்தப் பகுதியில் நின்று கூச்சல் இட்டுக் கொண்டிருந்தனர். பளையில் நடைபெறுகின்ற பிரச்சார கூட்டத்திற்காக சிறீதரன் புறப்பட்டுச் சென்ற பின்னர் குறித்த குழு உள்ளே புகுந்து பிரச்சாரத்தில் பங்குபற்றிய மக்கள் மீதும் இளைஞர்கள் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

சம்பவம் தேர்தல் கடமைக்காக நின்ற பொலிஸார் முன்நிலையிலேயே இடம்பெற்றுள்ளது. இதன்போது தாக்குதல் நடத்தியவர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மேலும் தாக்குதல் நடத்தியவர்கள் மதுபோதையில் இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.