November

November

தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவபீட மாணவன் !

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் மருத்துவபீட மூன்றாம் வருட மாணவன் நேற்றையதினம் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

வடமராட்சி கிழக்கு, நாகர்கோயில் தெற்கை சொந்த இடமாகவும், துன்னாலை வடக்கை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட சிதம்பரநாதன் இளங்குன்றன் எனும் மாணவனே சடலமாக மீ ட்கப்பட்டவராவார்.

குறித்த மாணவன் கோப்பாய், வன்னியசிங்கம் வீதியில் வாடகை வீடொன்றில் தங்கி இருந்து தமது பல்கலைக்கழக கற்றல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்துள்ளார்.

இந்த நிலையில் அந்த மாணவன் இன்று வகுப்புகளுக்குச் சமுகமளிக்காததால் அவருடைய நண்பர்கள் தொலைபேசியில் அழைப்பை மேற்கொண்டுள்ளனர். தொடர்சியாக அழைப்புகளை மேற்கொண்டபோதும் அவர் பதிலளிக்காததால் சந்தேகமடைந்த நண்பர்கள் அவர் தங்கியிருந்த இடத்துக்குச் சென்றுள்ளனர்.

அங்கு அவர் தங்கியிருந்த அறை பூட்டியவாறு காணப்படவே, அவருடைய நண்பர்கள் கதவை உடைத்து உட்சென்று பார்த்தபோது குறித்த மாணவன்

தூக்கில் தொங்கி ய நிலையில் சடலமாகக் காணப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் பொலிஸாருக்குத் தகவல் அறிவிக்கப்பட்டது. கோப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

2021 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் முழுமையான விபரம் இதோ !

2021 ஆம் நிதி ஆண்டிற்கான 75 ஆவது வரவு – செலவு திட்ட உரையை நிதியமைச்சர் என்ற வகையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் 1.40 மணிக்கு சமர்பிப்பித்து உரையாற்றினார்.

வரவு செலவு திட்டம் 2021; முன்மொழியப்பட்ட விடயங்கள்... - Newsfirst

பன்னாட்டு இராஜதந்திரிகள் மற்றும் நிதி அமைச்சின் முக்கிய அதிகாரிகளுக்கு உத்தியோகப்பூர்வ அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

2021 ஆம் ஆண்டிற்கான அரச செலவீனங்களுக்கு 2678 பில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்தல் மற்றும் 2900 பில்லியன் ரூபா கடன் பெறல் ஆகிய இரு விடயதானங்களுக்கான நிதி ஒதுக்கீட்டு சட்ட மூலம் சமர்பிக்கப்பட்டது.

ஜனாதிபதி, பிரதமர் ஆகியோரின் விசேட செலவீனங்களுக்கான ஒதுக்கீடாக 1960 கோடியே 33 இலட்சம் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

புத்தசாசன, சமய மற்றும் கலாசார அமைச்சிற்கு 694 கோடியே 60 இலட்சம் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

பெளத்த சமய கலாசார அலுவல்கள் தொடர்பான அமைச்சிற்கு 360 கோடியே 60 இலட்சம் ரூபா, முஸ்லிம் சமய பண்பாடு அலுவல்கள் திணைக்களத்திற்கு 19 கோடியே 60 இலட்சம் ரூபா, கிறிஸ்தவ சமய அலுவல்கள் திணைக்களத்திற்கு 27 கோடியே 90 இலட்சம் ரூபா, இந்து சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்திற்கு 31 கோடியே  80 இலட்சம் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

பிரதமரின் நிதி அமைச்சிற்கு 15760 கோடியே 37 இலட்சத்து 15 ஆயிரம் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

நிதி மூலதன சந்தை, மற்றும் அரச தொழில் முயற்சிகள், மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சிற்கு 3299 கோடியே 31 இலட்சத்து 75 ஆயிரம் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் கீழ் இயங்கும் பாதுகாப்பு அமைச்சிற்கு 35515 கோடியே 92 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சிற்கு 2520 கோடியே 45 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

இவை தவிர மேலும் ,

  • ஆண்கள் மற்றும் பெண்கள் இருவரின் ஓய்வூதிய வயதை 60 ஆக நிர்ணயிக்க ஊழியர் சேமலாப நிதி சட்டம் திருத்தப்பட வேண்டும்
  • ஒற்றை பயன்பாட்டு பொலிதீன் மற்றும் பிளாஸ்டிக் பயன்பாடுக்கு 2021 ஜனவரி முதலாம் திகதி முதல் தடை
  • நிதி திருத்தச் சட்டம் அடுத்த ஆண்டு திருத்தப்பட உள்ளது
  • உத்தியோகபூர்வ கடமை நேரத்தின் பின்னர் நிர்வாகமற்ற அரச அதிகாரிகளுக்கு மேலதிக தொழில்களில் ஈடுபட அனுமதி வழங்கப்படும்
  • அரசு ஊழியர்களுக்கான வீட்டுவசதிக்கான வங்கி வீட்டுக் கடன்களுக்கான வட்டி விகிதங்களையும் 7% வரை குறைக்கப்படும்
  • 2007 ஆம் ஆண்டின் 7 ஆம் இலக்க நிறுவனச் சட்டம் மேலும் திருத்தப்பட வேண்டும்
  • வங்கி சாரா நிதி நிறுவனங்களை கண்காணிக்க வலுவான புதிய சட்டங்கள் அமுலில் இருக்க வேண்டும்
  • வாகனங்களுக்கான உதிரி பாகங்கள் மீதான இறக்குமதி வரியைக் குறைக்க நடவடிக்கை
  • இரத்தினக்கல் மற்றும் நகைகளுக்கு மூன்று வருடங்கள் ஏற்றுமதி வரி விலக்கு அளிக்க தீர்மானம்
  • சுற்றுலாத் துறையினரால் பெறப்பட்ட கடன்களுக்கான தற்காலிக தடை 2021 ஆம் ஆண்டு செப்டம்பர் வரை மத்திய வங்கியால் நீடிக்கப்படும்
  • கொழும்பின் புறநகர்ப் பகுதிகள் மற்றும் இலங்கையின் முக்கிய நகரங்களில் வீட்டு வசதிகள் மேம்படுத்தப்படும்
  • நாட்டில் தொழில்முனைவோருக்கு உதவும் வகையில் 750 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு
  • மக்கள் தொகையில் 54% பேருக்கு மட்டுமே சுத்தமான குடிநீர் கிடைக்கிறது. அனைவருக்கும் சுத்தமான குடிநீரை பெற்றுக் கொடுக்கவும் அதற்காக 1000 பில்லியன் ரூபாயை ஒதுக்கீடு செய்யவும் தீர்மானம்
  • கெரவலபிட்டி மின் உற்பத்தி நிலையம் இயற்கை எரிவாயு மின் நிலையமாக மாற்ற தீர்மானம்
  • 600 மெகாவாட் திறன் கொண்ட மேலும் இரண்டு மின் உற்பத்தி நிலையங்கள் நாட்டில் கட்ட அரசாங்கம் நடவடிக்கை
  • இலங்கையின் எரிசக்தி விநியோகத்தில் 70 சதவீதம் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலங்களிலிருந்து 2023 க்குள் பெறப்படும்
  • லக்விஜய மின் உற்பத்தி நிலையத்தின் மின் உற்பத்தி திறனை அதிகரிக்க நடவடிக்கை
  • தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த ஊதியத்தை 2021 ஜனவரி முதலாம் திகதி முதல் 1000 ரூபாயாக அதிகரிக்க தீர்மானம்
  • உலர் மீன் மற்றும் டின்னில் அடைக்கப்பட்ட மீன்களுக்கான வரியை அதிகரிக்க தீர்மானம்
  • மீன்வளத் தொழிலுக்கு 500 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு
  • கிராமப்புறங்களில் உள்ள வழிபாட்டு தலங்களின் உட்கட்டமைப்பு வசதிகளுக்காக 250 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு
  • பால் பண்ணை அபிவிருத்திக்கு 500,000 ரூபாய் கடன் வழங்க முன்மொழிவு
  • பால்மா இறக்குமதிக்கு பதிலாக உள்ளூர் பால் உற்பத்திக்காக அரசாங்கம் நடத்தும் பண்ணைகளுக்கு கறவைப் பசுக்களை இறக்குமதி செய்ய நடவடிக்கை
  • விவசாய நோக்கங்களுக்காக விளைநிலங்களைப் பயன்படுத்துவதற்கு பிரதேச செயலாளர்களுக்கு அதிகாரம் வழங்க விவசாய அபிவிருத்தி சட்டத்தில் திருத்தம்
  • விவசாயிகளுக்கு விதை மற்றும் உரங்களை வழங்க ஏற்பாடு செய்யப்படும் அதேவேளை மஞ்சள், இஞ்சியை இறக்குமதி செய்த் தடை
  • விவசாயிகள் பயிரிடும் பயிர்களுக்கு கொள்முதல் விலை உத்தரவாதம் வழங்கவும் அரசாங்கம் தீர்மானம்
  • வெளிநாடுகளில் பணிபுரிந்த 45,000 இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்து வர அரசாங்கம் நடவடிக்கை
  • வெளிநாட்டிலுள்ள இலங்கை தொழிலாளர்களுக்கு பங்களிப்பு செய்யும் வகையில் ஓய்வூதிய திட்டம் அறிமுகப்படுத்தப்படும்
  • சமுர்தி பயனாளிகளுக்கு 7% வட்டி விகிதத்தில் புதிய கடன் திட்டம் அறிமுகப்படுத்த அரசாங்கம் தீர்மானம்
  • 50 க்கும் மேற்பட்ட ஊழியர்களைக் கொண்ட நிறுவனங்கள் அதன் தொழிலாளர்களுக்கு (முதலாளியின் பங்களிப்பு 0.25) காப்பீட்டுத் திட்டம்
  • தொழிற் பயிற்சி மாணவர்களுக்கு மாதாந்தம் 4000 ரூபாயினை உதவித்தொகையாக வழங்க தீர்மானம்
  • 100,000 ஆக உள்ள தொழில்நுட்ப கல்லூரிகளில் மாணவர்களுக்கான சேர்க்கை வருடத்துக்கு 200,000 மாணவர்களாக அதிகரிக்கப்படும்
  • தொழில் கல்விக்கு முக்கியத்துவம் அளிக்க நடவடிக்கை, கல்வி தொலைக்காட்சி சேவைக்கு மேலதிகமாக 3,000 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு
  • கர்ப்பிணி மற்றும் குழந்தைகளின் ஆரோக்கியத்துக்கும் அவர்களது போஷாக்கினை மேம்படுத்தவும் நடவடிக்கை. திரிபோஷ உற்படுத்தியை அதிகரிக்க 1500 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு
  • ஆசிய அபிவிருத்தி வங்கி , ஜைய்கா மற்றும் உலக வங்கியிடமிருந்து 1400 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் பெற அரசாங்கம் தீர்மானம்
  • சுகாதாரம் தொடர்பான நிறுவனங்களுக்கு கூடுதலாக 18,000 மில்லியன் ரூபாயினை ஒதுக்க தீர்மானம்
  • தொழில்முயற்சி பொருளாதார முறையை எதிர்வரும் 2 வருடங்களில் மேற்கொள்ள திட்டம்
  • தொழில்நுட்ப துறையின் விரிவாக்கத்திற்காக 800,000 மில்லியன் ரூபாய் ஒதுக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
  • கிராமங்களுக்கும் தொழிநுட்பத்தை கொண்டு செல்ல நடவடிக்கை. முழு நாடும் உள்ளடங்கும் வகையில் “கிராமத்துக்கு தொழிநுட்பம்” வேலைத்திட்டம்.
  • பொது பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கில் சிறப்பு திட்டங்களை நிவர்த்தி செய்ய 2500 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்படும்
  • தேசிய வரி வருவாயில் 50% க்கும் அதிக பங்களிப்பு செய்யும் பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு தனியான பொது வரியை அறிமுகப்படுத்த நடவடிக்கை
  • இலவச சுகாதாரம் மற்றும் இலவச கல்வி மேலும் விரிவுபடுத்த நடவடிக்கை
  • அரசு வங்கி, நிதி மற்றும் காப்பீட்டு நிறுவனங்களைத் தவிர மாதத்திற்கு 25 மில்லியனுக்கும் அதிகமான வருவாயைப் பெரும் வணிகங்களுக்கு வட் வரியை 8% க்கு மிகாமல் பராமரிக்க அரசாங்கம் தீர்மானம்
  • விவசாயம், மீன்வளம் மற்றும் கால்நடை வளர்ப்புத் தொழில்களில் ஈடுபடும் நிறுவனங்களுக்கு அடுத்த ஐந்து ஆண்டுகளில் வரி விலக்கு
  • தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்த முப்படையினருக்கு புதிய நவீன தொழில்நுட்ப வசதிகளை வழங்க தீர்மானம்
  • மாதத்துக்கு 2 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வருமானம் ஈட்டுவோரின், வருடாந்த மொத்த தொகைக்கு வரி அறவிடுதல் தொடர்பில் ஆராயப்படும் . போன்ற விடயங்களை பாராளுமன்றில் பிரதமர் முன்வைத்திருந்தார்.

“இந்த நாட்டில் தமிழர்கள் நாங்கள் அடிமைகளாக வாழ்வதையிட்டு மனவேதனை கொள்கின்றோம். அந்த நிலைமை மாற வேண்டும்” – பா.உறுப்பினர் தவராசா கலையரசன்

“இந்த நாட்டில் தமிழர்கள் நாங்கள் அடிமைகளாக வாழ்வதையிட்டு மனவேதனை கொள்கின்றோம். அந்த நிலைமை மாற வேண்டும். அதற்கான மாற்றங்களை நாமே முன்னெடுக்க வேண்டும்” என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் தெரிவித்தார்.

ஆலையடிவேம்பு பிரதேசத்தில் நேற்று (16.11.2020) இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போது உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

எதிர்காலத்தில் எமது பாதிக்கப்பட்ட போராளிகள், பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களின் தலைவிகள் ஆகியோரைக் கருத்திற் கொண்டு எமது பணிகளை முன்னெடுக்க இருக்கின்றோம். எதிர்காலத்தில் எத்தகைய செயற்திட்டங்களை மேற்கொண்டால் எமது வாழ்வாதாரம் நீடித்து நிலைத்திருக்கும் என்பது தொடர்பில் அவர்களுடனேயே கலந்துரையாடி இச்செயற்பாடுகளை மேற்கொள்ளவுள்ளோம்.

நாங்கள் கடந்த காலங்களில் இவ்வாறான பல செயற்பாடுகளை மேற்கொண்டோம். ஆனால் பலரின் ஒத்துழைப்பின்மையால் அச்செயற்பாடுகளை தொடந்தேர்ச்சியாக முன்னெடுக்க முடியமால் போயுள்ளது. அவ்வாறில்லாமல் எதிர்வரும் காலங்களில எமது செயற்பாடுகள் தொடர்ச்சியாக முன்கொண்டு செல்லக் கூடியதாக அமைய வேண்டும்.

பாராளுமன்றம் சென்றதில் இருந்து இதுவரையில் எவ்விதமான வேலைத்திட்டங்களையும் மேற்கொள்வதற்கான நிதிநிலைமைகள் எமக்குக் கிடைக்கப்பெறவில்லை. ஆனால் நாங்கள் அதனை மாத்திரம் பார்த்திராமல் எமது மக்களுக்காக செயற்பட்டுக் கொண்டிருக்கின்றோம். எமது முயற்சியின் மூலம் கிடைக்கும் வளங்களைக் கொண்டு எமது மக்களுக்கான பணிகளை மேற்கொள்கின்றோம்.

இந்த நாட்டில் நாங்கள் அடிமைகளாக வாழ்வதையிட்டு மனவேதனை கொள்கின்றோம். அந்த நிலைமை மாற வேண்டும். அதற்கான மாற்றங்களை நாமே முன்னெடுக்க வேண்டும். அதற்கான ஆரம்பமே இந்த செயற்பாடுகள். எதிர்வருகின்ற காலங்களில் இந்த மாவட்டத்தில் எமது மக்களுக்கு எற்படுகின்ற பிரச்சினைகள் ஒவ்வொன்றையும் நானும் எமது தலைமைகள் ஊடாகவும் அரசியற் தலைவர்கள் மற்றும் சர்வதேசம் வரை கொண்டு செல்வதற்கும் தயாராக இருக்கின்றோம். எதற்கும் நாம் தயங்க மாட்டோம்.

நாங்கள் தமிழர்கள் என்ற அடிப்படையில் எங்களை எந்த அரசாங்கமும் நல்ல நோக்கத்துடன் அணுகவில்லை. தற்போது  எமக்காகப் பலர் குரல் கொடுக்க வருகின்றார்கள். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதுவுமே செய்யவில்லை நாங்கள் செய்யப் போகின்றோம் என்று சொல்லி ஒரு போலியான முகவரியுடன் பலர் பேசிக் கொண்டுதான் இருக்கின்றார்கள். அவர்களால் எமது பிரச்சினை தொடர்பில் எதுவுமே சாதிக்க முடியாது. இதனை எமது மக்கள் விளங்கிக் கொள்ள வேண்டும். ஏனெனில் எமது மக்கள் நிறையவே அனுபவங்களைப் பெற்றவர்கள்.

எமது முன்னாள் போராளிகள், பெண்கள் தலைமை தாங்கும் குடும்பப் பெண்கள் போன்றோர் எமது சமூகம் சார்ந்த விடயங்களில் மக்களுக்கு உபதேசம் பண்ண வேண்டியவர்களாவர். எம்மை ஏமாற்றுகின்ற ஏமாளிகள் எமது பிரதேசங்களிலே வலம் வந்து கொண்டிருக்கின்றார்கள். இந்தத் தேர்தலிலே அவர்களுடைய ஏமாற்று வித்தைகள் எம் மக்கள் மத்தியிலே ஓரளவு பலித்திருந்தது. அது எங்களுக்குப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி நாங்கள் ஒரு பின்னடைவைச் சந்தித்திருக்கின்றோம். எனவே அவ்வாறான விடயங்களுக்குப் பின்னால் எமது மக்கள் எக்காலத்திலும் எக்காரணம் கொண்டும் செல்வதை விடுத்து எமது தேசியப் பயணத்தோடு பயணிக்க வேண்டும்.

நாங்கள் யாரையும் அடக்கி ஒடுக்கி அதிகாரத்தைப் பறிப்பவர்கள் அல்ல. நாங்கள் அதிகாரமுள்ள ஒரு சமத்துவமான இனம். எங்களுக்குள்ள அதிகாரத்தையே நாங்கள் கேட்கின்றோம் என்று தெரிவித்தார்.

““கொரோனா வைரஸ் தாக்கத்தினால் உயிரிழந்த முஸ்லிம் இனத்தவர்களின் உடலை புதைப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கமுடியாது” கெஹலிய ரம்புக்வெல

“கொரோனா வைரஸ் தாக்கத்தினால் உயிரிழந்த முஸ்லிம் இனத்தவர்களின் உடலை புதைப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கமுடியாது” என அமைச்சரவை பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (17.11.2020) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில்,

“கொரோனா வைரஸ் தாக்கத்தினால் உயிரிழந்த முஸ்லிம் இனத்தவர்களின் உடலை புதைப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது என கடந்த வாரம் தவறான செய்தி சமூக வலைத்தளங்களில் வெளியாகின. கொரோனா வைரஸ் தாக்கத்தில் உயிரிழப்பவர்களின் உடலை தகனம் செய்வது தொடர்பிலும் இறப்பவர்களின் மத உரிமைகள் தொடர்பிலும் அமைச்சரவையில் தொடர்ந்து பேச்சுவார்த்தை இடம்பெற்றன. இவ்விடயம் முஸ்லிம் சமூகத்தினரை அடிப்படையாகக் கொண்டு அமையவில்லை.

கொரோனா வைரஸ் தாக்கத்தினால் உயிரிழப்பவர்களின் உடலை தகனம் செய்வது குறித்து எழுந்துள்ள வாதங்கள் தொடர்பில் நீதியமைச்சர் அமைச்சரவைக்கு முன்வைத்த யோசனையை சுகாதார குழுவினருக்கு வழங்கவே கடந்த வாரம் இடம் பெற்ற அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டது. நாடுகளின் பௌதீக காரணகளுக்கு அமைய நாடுகள் தீர்மானம் எடுக்க முடியும் என உலக சுகாதார நிறுவனம் குறிப்பட்டதற்கு அமைய இறந்தவர்களின் உடலை தகனம் செய்ய தீர்மானிக்கப்பட்டது.

கொரோனா வைரஸ் தாக்கத்தினால் இறக்கும் முஸ்லிம் இனத்தவர்களின் உடலை தகனம் செய்வது தொடர்பில் பல்வேறு தரப்பினர் மாறுப்பட்ட கருத்தினை தெரிவித்தார்கள்.

நடைமுறையில் உள்ள சட்டம், சுகாதார அறிவுறுத்தல்கள் ஆகியவற்றை கருத்திற்கொண்டு கொரோனா வைரஸ் தாக்கத்தினால் உயிரிழந்தவர்களின் உடலை உலர்வலய பிரதேசத்தில் புதைக்க முடியுமா என்ற யோசனை மாத்திரம் முன்வைக்கப்பட்டது. நீதியமைச்சரால் சமர்ப்பிக்கப்பட்ட யோசனையை தீர்மானம் எடுக்கும் சுகாதார குழுவினரின் பரிசீலனைக்கு வழங்க மாத்திரமே அமைச்சரவை அனுமதி வழங்கியது.கொரோனா வைரஸ் தாக்கத்தினால் உயிரிழப்பவர்களின் உடலை புதைப்பதா? அல்லது தகனம் செய்வதா? என்ற தீர்மானத்தை எடுக்கும் அதிகாரம் அமைச்சரவைக்கு கிடையாது. மேலும் இவ்விடயம் தொடர்பாக சுகாதார தரப்பினர் எடுக்கும் தீர்மானத்தை செயற்படுத்த தயாராக உள்ளோம் ” என அவர் மேலும் தெரிவித்தார்.

எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் பெருந்தோட்டத் தொழிலாளர்களது நாளாந்த வேதனத்தை 1000 ரூபாவாக உயர்த்த திட்டம் !

2021 ஆம் ஆண்டிற்கான சம கால அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்ட உரை நிதி அமைச்சர், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் பாராளுமன்றத்தில் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

தனது வரவு செலவுத் திட்ட உரையில் பிரதமர், 2021-2022 ஆண்டுகளில் தடை இல்லாத மின்சாரத்துக்கு உத்தரவாதம் அளிக்க லக்விஜய மற்றும் கேரவலபிட்டிய மின் உற்பத்தி நிலையங்கள் வலுப்படுத்தப்படும் என தெரிவித்துள்ளார்.

அனைவருக்கும் சுத்தமான குடிநீரை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுப்பதற்காக 1000 பில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 2021-2023 க்கு இடையில் தேசிய மின்கட்டமைப்பில் 1000 மெகாவோட் மின்சாரம் சேர்க்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார் .அத்துடன் புதுப்பிக்கத்தக்க சக்தி உற்பத்தியை 1000 மெகாவோட்டாக அதிகரிக்கவும் அவர் முன்மொழிந்துள்ளார். இலங்கையின் எரிசக்தி விநியோகத்தில் 70 சதவீதம் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலங்களிலிருந்து 2023 க்குள் பெறப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதன் போது பெருந்தோட்ட தொழிலாளர்களின் நாளாந்த வேதனத்தை ஆயிரம் ரூபா வரையில் அதிகரிக்கப்படும் எனவும் பிரதமரால்  அறிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் பெருந்தோட்டத் தொழிலாளர்களது நாளாந்த வேதனத்தை 1000 ரூபா வரையில் உயர்த்துவதற்கான யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. கூட்டு ஒப்பந்தத்தின் அடிப்படையில் பெருந்தோட்டத் தொழிலாளர்களது வேதனம் தீர்மானிக்கப்பட்டு வருகிறது. இதனை பாதீட்டின் ஊடாக அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்டகாலமாக முன்வைக்கப்பட்டு வருகின்ற நிலையில், 2021ம் ஆண்டுக்கான பாதீட்டில் இதற்கான யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

“இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா  விடுத்திருக்கும் மிரட்டலுக்குத் தமிழ் மக்கள் அஞ்சத் தேவையில்லை. அது சட்ட விரோதமான அச்சுறுத்தல்” – எம்.ஏ.சுமந்திரன்

“போரில் மரணித்த சாதாரண மக்களை நினைவுகூர்வதற்கான உரிமை அவர்களின் உறவினர்களுக்கு இருக்கின்றது. அதனை வீட்டில் இருந்து செய்யலாம். ஆனால், பயங்கரவாத அமைப்பில் இருந்து பெரிய அழிவுகளை ஏற்படுத்திவிட்டு உயிரிழந்த தமிழீழ விடுதலைப்புலிகளுக்குப் புத்துயிர் கொடுக்கும் வகையில் மாவீரர் தின நினைவேந்தலைப் பொது வெளியில் நடத்துவதற்கு இடமளிக்க முடியாது. அதை மீறி நடத்தினால் தனிமைப்படுத்தல் சட்டத்தின் பிரகாரம் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா நேற்றையதினம் ஊடகங்களுக்கு செய்தி வழங்கியிருந்தார்.

இந்நிலையில் இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா  விடுத்திருக்கும் மிரட்டலுக்குத் தமிழ் மக்கள் அஞ்சத் தேவையில்லை. அது சட்ட விரோதமான அச்சுறுத்தல் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் குறித்து சுமந்திரன் ஊடகங்களுக்குக் கருத்துரைக்கும்போதே மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

இந்த விடயம் தொடர்பில் நான் நாடாளுமன்றத்திலேயே கேள்வி எழுப்பினேன். தமது உறவுகளுக்கு விளக்கேற்றி அஞ்சலி செலுத்தவதில் கூட தமிழர்களுக்கு எதிராகப் பாகுபாடு,பாரபட்சம் காட்டப்படுகின்றது. ஜே.வி.பியின் தலைவர் ரோஹண விஜேவீரவுக்கு அஞ்சலி செலுத்த சிங்கள மக்கள் அனுமதிக்கப்படுகின்றனர். ஆனால், தமிழ் உறவுகள் அதனைச் செய்ய அனுமதிக்கின்றார்கள் இல்லை என்று நாடாளுமன்றில் சுட்டிக்காட்டினேன்.

கொரோனாத் தடுப்பு நடவடிக்கைகளைக் காட்டி நினைவேந்தலைத் தடுக்க முனையும் கீழ்த்தரமான முயற்சியில் ஈடுபடாதீர்கள் என நாடாளுமன்ற உரையில் அரசுத் தரப்பை நான் கோரினேன்.

எனது உரைக்குப் பதில் கூற அரசுத் தரப்பில் எவரும் தயார் இல்லை. ஆனால், இப்போது இராணுவத் தளபதி தமிழ் மக்களை அச்சுறுத்துகின்றார். அதுவும் சட்ட விரோதமான முறையில் மிரட்டுகின்றார். தமிழ் மக்கள் தங்கள் உறவுகளை நினைவுகூர முடியும். அதற்கு அவர்களுக்கு சட்ட ரீதியான உரிமை உண்டு. அதைத் தடுக்க முடியாது.

கொரோனா தொடர்பான விதிமுறைகளை மீறாமல், சுகாதார அமைச்சு விடுத்துள்ள ஒழுங்கு முறைகளைப் பின்பற்றி, சமூக இடைவெளியைப் பேணி, உரிய சுகாதாரப் பாதுகாப்போடு விடயங்களை முன்னெடுத்தால், தனிமைப்படுத்தல் சட்டம் மக்கள் மீது பாயமுடியாது.

தன்னிஷ்டப்படி யாரும் சுகாதார விதிமுறைகளை வியாக்கியானம் செய்ய முடியாது. அந்த விதிமுறைகளை மீறாத வரையில், யாரையும் தனிமைப்படுத்துவோம் என்று யாரும் எச்சரிக்கவோ, அச்சுறுத்தவோ முடியாது. அந்த அச்சுறுத்தலை இராணுவத் தளபதியும் விடுக்க முடியாது. அப்படி விடுத்தால் அது சட்டவிரோத அச்சுறுத்தல். சட்டத்தைத் தவறாகக் கையாளும் அத்துமீறல் நடவடிக்கை. ஆகவே, சுகாதார விதிமுறைப்படி ஒழுங்கு ஏற்பாடுகளுக்கு அமைய சமூக இடைவெளியைப் பின்பற்றி பிற சுகாதாரப் பாதுகாப்பு நடவடிக்கைகளையும் கைக்கொண்டபடி, நமது உறவுகளுக்கு நாம் அஞ்சலி செலுத்தலாம்.

சுகாதார விதிமுறைகளைத் தத்தமது அரசியல் தேவைகளுக்கேற்ப தவறாகப் பயன்படுத்த முயலும் சக்திகளை நாம் அடையாளம் கண்டு, ஆதாரத்துடன் நீதிமன்றங்களுக்கும் கொண்டு செல்ல முடியும்” என தெரிவித்துள்ளார் .

மக்களின் மீன் தொடர்பான அச்சத்தை போக்க பச்சையாக மீனை உண்ட முன்னாள் மீன்வளத்துறை அமைச்சர்!

கொரோனா தொற்று அச்சத்தால் மீனை வாங்குவதற்கு மக்கள் அச்சம் கொண்டுள்ள நிலையில் முன்னாள் மீன்வளத்துறை அமைச்சர் திலிப் வெதஆரச்சி, மக்கள் மீன் சாப்பிட வேண்டும் என்று வலியுறுத்தினார்.

இன்று செவ்வாய்க்கிழமை(17.11.2020)  இடம் பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டிருந்த அவர், மீனவர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது என குறிப்பிட்டதுடன் ஊடகவியலாளர்கள் முன்னிலையில் உடன் மீனை உட்கொண்டு காண்பித்தார்.

அத்தோடு இது தொடர்பாக பொதுமக்களுக்கு ஆலோசனை வழங்குவது அரசாங்கத்தின் மற்றும் சுகாதார அமைச்சின் கடமை என்றும் அவர் கூறினார்.

மேலும் தற்போது காணப்படும் சூழ்நிலையில் மீனவர் சமூகத்திற்கு பொதுமக்கள் செய்யக்கூடிய மிகப் பெரிய உதவி மீன் பொருட்களை வாங்குவதாகும் என்றும் திலிப் வெதஆரச்சி குறிப்பிட்டார்.

அமெரிக்காவின் 95 சதவீதம் கொரோனாவை கட்டுப்படுத்தக்கூடிய தடுப்பூசி !

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பரவ ஆரம்பித்த  கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது.  இந்த கொடிய வைரசுக்கு தடுப்பூசியை கண்டுபிடிக்கும் முயற்சியில் உலகின் பல்வேறு நாடுகள் களமிறங்கியுள்ளன. ரஷியா, அமெரிக்கா, சீனா, இங்கிலாந்து போன்ற நாடுகள் கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கும் போட்டியில் முன்னிலையில் உள்ளன. தடுப்பூசி தயாரிக்கும் முயற்சியில் உலகம் முழுவதும் 11 நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன.
இந்த நிறுவனங்களில் அமெரிக்காவின் மார்டனா இங்க் மருந்து நிறுவனமும் ஒன்று. அந்நிறுவனம் கொரோனா தடுப்பூசி ஒன்றை உருவாக்கி இருந்தது. இந்த தடுப்பூசியின் இறுதிகட்ட பரிசோதனைகள் நடைபெற்று வந்தது.  இந்நிலையில், மார்டனா நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி 94.5 சதவீதம் திறன் கொண்டது என அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
30 ஆயிரம் பேரிடம் நடத்தப்பட்ட பரிசோதனையில் தடுப்பூசி 94.5 சதவீதம் கொரோனா வைரசை கடுப்படுத்துவது உறுதியாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரசால் தீவிரமாக பாதிக்கப்பட்டவர்களிடமும் இந்த மார்டனா தடுப்பூசி நல்ல செயல்திறனை கொண்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, மற்றொரு அமெரிக்க மருந்து நிறுவனமான ஃபிப்சர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி 90 சதவீதம் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து மனிதர்களை பாதுகாக்கிறது என ஆய்வு முடிவில் தெரியவந்திருந்தது.  அதே நேரத்தில் ரஷ்யா தன்னுடைய நாட்டு தடுப்பூசி 92சதவீதம் வெற்றியளித்துள்ளதாக புடின் அண்மையில் அறிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

“பதவியேற்று ஓராண்டு பூர்த்திக்காக நிகழ்வுகள் எதுவும் செய்து வீண் செலவுகளை செய்ய வேண்டாம்” – ஜனாதிபதி வேண்டுகோள் !

ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ஷ அவர்கள் நாட்டின் ஜனாதிபதியாக பதவி ஏற்று ஓராண்டு பூர்த்தி நெருங்கும் நிலையில், அது தொடர்பிலான விழாக்கள் எதனையும் நடத்த வேண்டாம் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கடந்த 2019ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 16ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஷ அமோக வெற்றியீட்டினார். இதனையடுத்து கடந்த 2019ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 18ஆம் திகதி அனுராதபுரத்தில் கோட்டாபய ராஜபக்ஷ பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.

இந்த நிலையில், நாளை மறுதினம் கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக பதவிப்பிரமாணம் செய்துகொண்டு ஒரு வருடம் பூர்த்தியாகின்றது. இந்த நிலையிலேயே அவர் விழாக்கள் எதனையும் நடத்த வேண்டாம் என தெரிவித்துள்ளார்.

அத்துடன், தமக்கு வாழ்த்து தெரிவிக்க விரும்புவோர் எவ்வித நிகழ்வுகளையும் மேற்கொள்ள வேண்டாம் எனவும் வீண் செலவுகளை செய்ய வேண்டாம் எனவும் ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளார்.

“ஜனாதிபதியை பதவியில் அமர்த்திய தரப்புக்குக் கூட, பாற்சோறு சாப்பிட முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது” – எஸ்.எம். மரிக்கார்

“ஜனாதிபதியை பதவியில் அமர்த்திய தரப்புக்குக் கூட, பாற்சோறு சாப்பிட முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது” என எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

தொடர்ந்தும் அங்கு கருத்து வெளியிட்ட அவர்,

“இன்று இலங்கையில் மறக்கமுடியாத ஒரு தினமாகும் .ஜனாதிபதி பதவியேற்று ஒருவருடம் பூர்த்தியாகியுள்ள நிலையில் நாட்டு மக்கள் கடுமையான வாழ்வாதாரப் பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்துள்ளனர். இதேவேளை மைத்திரி- ரணில் அரசாங்கம் தோல்வியடைந்த நிலையில், கடந்த வருடம் இதே போன்றதொரு தினத்தில்தான் தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆட்சிபீடமேறினார்.

இவர் பதவியேற்று ஒருவருடம் கடந்துள்ள நிலையில், நாடே இன்று பாதிக்கப்பட்டுள்ளது. எந்தவொரு செயற்பாடும் இலங்கையில் மேற்கொள்ளப்படவில்லை. மக்களின் வாழ்வாதாரம், நாட்டின் பொருளாதாரம் என அனைத்தும் பாதிக்கப்பட்டுள்ளன. ஜனாதிபதியை பதவியில் அமர்த்திய தரப்புக்குக் கூட, பாற்சோறு சாப்பிட முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. இந்த குறுகிய காலத்தில் 64 வீத மக்களின் வாழ்வாதாரம் முற்றாக ஸ்தம்பிதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கும், தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்களில் இருக்கும் மக்களுக்கும் அரசாங்கம் நிவாரணம் வழங்கவில்லை.

குறைந்தது அவர்கள் பெற்றுள்ள வங்கிக் கடன், வாகனக் கடனை பிற்போடக்கூட அரசாங்கம் முயற்சிக்கவில்லை. இவ்வாறு அனைத்து வழிகளிலும் அரசாங்கம் மக்களை கஸ்டத்துக்கே உட்படுத்தி வருகிறது.

2000 பில்லியனுக்கும் அதிகமான கடனை இந்த ஒரு வருடத்தில் மட்டும், அரசாங்கம் பெற்றுக் கொண்டுள்ளது. இதேநிலைமை தொடர்ந்தால் 2024 ஆம் ஆண்டாகும்போது, நாடுபாரிய பொருளாதார நெருக்கடிக்கு முகம் கொடுக்கும்”  எனவும் அவர் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.