ஐரோப்பிய நாடான ஜெர்மனியில் கொரோனாவைரஸ் பாதிப்பு அதிகரித்தபடி இருக்கிறது. ஜேர்மனியில் இதுவரை 30 ஆயிரத்து 147 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதற்கிடையில் கொரோனாவுக்கு எதிராக அமெரிக்காவின் பைசர் நிறுவனம், ஜெர்மனியின் பயோன்டெக் நிறுவனம் இணைந்து உருவாக்கிய தடுப்பூசியை பயன்படுத்த ஐரோப்பிய ஒன்றியம் கடந்த 21-ந்தேதி அனுமதி அளித்தது. இதையடுத்து ஜெர்மனியில் பைசர் நிறுவனத்தின் தடுப்பூசியை பொதுமக்களுக்கு செலுத்தும் பணி நேற்று (26.12.2020) தொடங்கியது. அங்கு முதல் தடுப்பூசி செலுத்தப்பட்டது.
முதல் தடுப்பூசியை சாக்சானி அன்ஹால்ட் பகுதியில் பராமரிப்பு இல்லத்தில் இருக்கும் 101 வயது எடித் குய்சல்லாவுக்கு டாக்டர்கள் செலுத்தினர். முதியோர் இல்லத்தில் இருப்பவர்கள், 80 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள், பராமரிப்பு ஊழியர்கள் ஆகியோருக்கு முதலில் தடுப்பூசி செலுத்தப்படுகிறது.
இதுகுறித்து ஜெர்மனி சுகாதார அமைச்சர் ஜென்ஸ் ஸ்பான் கூறியதாவது:-
தொற்றுநோயை வெல்வதற்கு தடுப்பூசி முக்கியமாகும். இது எங்கள் வாழ்க்கையை திரும்பப்பெற அனுமதிக்கும். இது நம்பிக்கையின் நாள். அனைவருக்கும் தடுப்பு மருந்துகள் கிடைப்பது ஒரு நீண்ட தூர முயற்சியாக இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.