2021

2021

சர்வதேச ஒலிம்பிக் குழுவின் தலைவராக தாமஸ் பேச் மீண்டும் தேர்வு !

சர்வதேச ஒலிம்பிக் குழுவின் தலைவராக 67 வயதான தாமஸ் பேச் மீண்டும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். ஜெர்மனியைச் சேர்ந்த வழக்கறிஞரான தாமஸ் பேச் நம்பிக்கை வாக்கெடுப்பில் 93-1 என்ற கணக்கில் அமோக வெற்றி பெற்றார்.

இணையம் மூலம் உறுப்பினர்கள் சந்திப்பும், வாக்கெடுப்பும் நடந்தது. அவர் 2025-ம் ஆண்டு வரை இந்த பதவியில் நீடிப்பார்.

தனக்கு ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்த தாமஸ் பேச், கொரோனா கட்டுபாடுகள் இருந்தாலும் டோக்கியோ ஒலிம்பிக் போட்டி திட்டமிட்டபடி ஜூலை 23-ந்தேதி தொடங்கும் என்று மீண்டும் உறுதிப்பட கூறினார்.

கொரோனா நிவாரண நிதியாக ஒவ்வொரு அமெரிக்கருக்கும் தலா 1,400 டொலர் !

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்தபடியே இருக்கிறது. உலக அளவில் கொரோனா பலி மற்றும் பாதிப்பு எண்ணிக்கையில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் இருக்கிறது.

கொரோனா பரவல் காரணமாக அமெரிக்காவில் கோடிக்கணக்கானோர் வேலைகளை இழந்தனர். இதனால் அவர்கள் மிகவும் கஷ்டப்படுகிறார்கள்.

இதற்கிடையே அமெரிக்காவில் புதிய ஜனாதிபதியாக கடந்த ஜனவரி 20-ந் தேதி பதவி ஏற்ற ஜோ பைடன், கொரோனாவால் சரிந்த பொருளாதாரத்தை மீட்க சிறப்பான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்தார்.

அதன்படி பொருளாதாரத்தை மீட்டெடுக்க 1.9 லட்சம் கோடி அமெரிக்க டொலர் செலவில் கொரோனா நிவாரண நிதி திட்டத்தை ஜோ பைடன் கொண்டு வந்தார்.

இந்த கொரோனா நிவாரண நிதி மசோதா அமெரிக்க செனட் சபையில் நிறைவேற்றப்பட்ட நிலையில், நேற்று பிரதிநிதிகள் சபையில் நிறைவேறியது. இதையடுத்து இந்த சட்ட மசோதாவில் ஜனாதிபதியாக ஜோ பைடன் இன்று கையெழுத்திடுவார் என்று வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் ஜென் சாகி தெரிவித்தார்.

இது குறித்து ஜனாதிபதியாக ஜோ பைடன் கூறியதாவது:-

இந்த மசோதாவால் 85 சதவீத அமெரிக்க குடும்பங்கள் பயன்பெறுவார்கள். இந்த மாதத்துக்குள் அமெரிக்கர்களுக்கு தலா 1,400 டொலர் (இலங்கை மதிப்பில் 2 இலட்சத்து 75000) வழங்கும் பணி தொடங்கப்படும்.

மேலும் இத்திட்டத்தின் மூலம் விரைவில் கொரோனா தடுப்பூசி உற்பத்திக்கான ஆயத்த பணிகள் முழு வீச்சில் செயல்படுத்தப்படும், என்றார்.

மேலும் அவர் கூறும்போது, ‘அமெரிக்கர்களுக்கு முதலில் தடுப்பு மருந்துகள் செலுத்தப்படும். பின்னர் உபரி இருந்தால் மற்ற நாடுகளுக்கு அனுப்பப்படும்’ என்றார்.

கோட்டாபாயவுக்கு பின்னர் பொதுஜன பெரமுன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் இவர் தான் – பகிரங்கப்படுத்தியது ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி !

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் அடுத்த ஜனாதிபதி தேர்தல் வேட்பாளராக கட்சியின் ஸ்தாபகரும் அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவின் சகோதரருமான பஸில் ராஜபக்சவே களமிறங்குவார் என பொதுஜன முன்னணி பகிரங்கமாக அறிவித்துள்ளது.

இதற்கு எதிராகவே விமல் வீரவன்ச உள்ளிட்டவர்கள் சூழ்ச்சி செய்து வருவதாக கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் சஹான் பிரதீப் வித்தாரண குற்றஞ்சாட்டியுள்ளார்.

இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட சஹான் பிரதீப் வித்தாரண,

கோவிட் நெருக்கடியை எமது நாடு வேறு நாடுகளை விட சிறப்பாக கையாண்டதன் பின்னணியில் மீண்டும் அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஷ போட்டியிடப்போவதில்லை என நினைத்தாலும் மக்கள் இறுதியாக அவரை கைவிடமாட்டார்கள். மீண்டும் போட்டியிடச் செய்யும் வகையிலான கோரிக்கைகளையே முன்வைப்பார்கள் என நினைக்கின்றேன்.

ஒரு வருடத்திற்குள் கொரோனா தொற்றுடன் மோதி, ஊழல் மோசடி, போதைப்பொருளை அழித்து இளைஞர்களை வழிநடத்தியவர் ஜனாதிபதியே. சிலர் இதனை மாற்றியமைக்க பொதுஜன முன்னணியை களங்கப்படுத்தி அழிக்க கனவு காண்கிறார்கள். அந்த கனவு நனவாகாது. அப்படியொரு சந்தர்ப்பத்தை அவர்களுக்கு மக்கள் வழங்கமாட்டார்கள். சில கட்சிகள் அரசாங்கத்தை அமைக்க உதவினார்கள்.

சில வருடங்கள் சென்று அரசாங்கத்தின் உறுதியைப் பேணாமல் பிரிந்து சென்று தங்களது தேவைகளைப் பூர்த்தி செய்ய முயற்சிக்கின்றார்கள். எமது அரசாங்கத்திற்குள்ளேயே இருந்துகொண்டு பொதுஜன முன்னணிக்குள் தலைவர் ஒருவர் வருவார் என்கிற அச்சம் சிலருக்கு உள்ளது. அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, அடுத்த தேர்தலில் போட்டியிடாவிட்டால் அடுத்தகட்டமாக பஸில் ராஜபக்ஷவே தெரிவுக்கு இருக்கின்றார்.

அவர் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளருக்கு தகுதியானவர். அவர் போட்டியிடுவதை எதிர்ப்பவர்களும் கட்சிக்குள் இருக்கின்றார்கள். அதனால்தான் சேறுபூசுகின்றார்கள். பொதுஜன முன்னணியையும், பஸில் ராஜபக்ஷவையும் வீழ்த்த எவருக்கும் முடியாது” எனத் தெரிவித்துள்ளார்.

“சரத் பொன்சேகா கூறுவதுபோல் சஜித் பிரேமதாஸ தலைமையில் ஐக்கிய மக்கள் சக்தியின் ஆட்சி ஒருபோதும் அமையாது.” – அருந்திக்க பெர்னாண்டோ

“சரத் பொன்சேகா கூறுவதுபோல் சஜித் பிரேமதாஸ தலைமையில் ஐக்கிய மக்கள் சக்தியின் ஆட்சி ஒருபோதும் அமையாது.” என இராஜாங்க அமைச்சர் அருந்திக்க பெர்னாண்டோ தெரிவித்தார்.

எமது ஆட்சியில் ஈஸ்டர் தாக்குதல் குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்திய ஜனாதிபதி ஆணைக்குழுவின் இறுதி விசாரணை அறிக்கை தொடர்பில் நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“நாடாளுமன்ற தெரிவுக்குழுதான் கண் துடைப்பு நாடகம். ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கை என்பது இறுதியானது அல்ல. அதில் நல்ல விடயங்களும் உள்ளன. ஏற்றுக்கொள்ள முடியாத சில விடயங்களும் உள்ளன. எது எப்படி இருந்தாலும் குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள்” – என்றார்.

“எதிர்காலத்தில் அமையவுள்ள ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சியின் கீழ் கத்தோலிக்க மக்களுக்கு நீதி பெற்றுக்கொடுக்கப்படும்.” – பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா

“எதிர்காலத்தில் அமையவுள்ள ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சியின் கீழ் உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் தொடர்பில் அனைத்து விடயங்களும் கண்டறியப்பட்டு, கத்தோலிக்க மக்களுக்கு நீதி பெற்றுக்கொடுக்கப்படும்.” என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராணுவத் தளபதியுமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்திய ஜனாதிபதி ஆணைக்குழுவின் இறுதி விசாரணை அறிக்கை தொடர்பில் நாடாளுமன்றத்தில் நேற்று(10.03.2021) நடைபெற்ற சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:-

“உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் சம்பவத்தின் பிரதான சூத்திரதாரி சஹ்ரான் அல்ல என்பது அனைவருக்கும் தெரியும். ஆனாலும், அவர்தான் பிரதானி எனக் காண்பிப்பதற்கு சிலர் முயற்சிக்கின்றனர். தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்புக்குக் கூட தற்கொலை தாக்குதல் போராளி ஒருவரை உருவாக்குவதற்குப் பல வருடங்கள் எடுத்தன. எனவே, சஹ்ரான் திடீரென உருவான நபர் கிடையாது. 2005 காலப்பகுதியில் இருந்து அவர் கருத்தியலை விதைத்து வந்துள்ளார். 2014 வரை அவருக்கு சம்பளம் வழங்கப்பட்டுள்ளது எனக் கூறப்படுகின்றது. இது தொடர்பில் உரிய தகவல் வெளியிடப்படவேண்டும்.

ஜனாதிபதி ஆணைக்குழு என்பது நாடகம். எனவே, நாடகம் முடியும்போது நிச்சயம் உண்மை தெரியவரும்.

எமது ஆட்சியின்கீழ் உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் அனைத்து விடயங்களும் கண்டறியப்படும். கத்தோலிக்க மக்களுக்கு நீதி நிவாரணம் பெற்றுக்கொடுக்கப்படும். அப்போது இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் அனைவருக்கும் அறிந்து கொள்ளக்கூடியதாக இருக்கும்” என்றார்.

“அரசு தன் கூலிப்படைகளைக் கொண்டு எங்களைத் துரத்திக் கொண்டே இருக்கின்றது.” – அ.அமலநாயகி

“அரசு தன் கூலிப்படைகளைக் கொண்டு எங்களைத் துரத்திக் கொண்டே இருக்கின்றது.”என வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்க மட்டக்களப்பு மாவட்ட தலைவி அ.அமலநாயகி தெரிவித்துள்ளார்.

தங்கள் உறவுகளுக்கான நீதி கோரிய ஜனநாயக ரீதியான உரிமைப் போராட்டங்களை நீதிமன்றத் தடையுத்தரவின் மூலம் தடுப்பது தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

யுத்தம் முடிவுற்ற காலம் தொடக்கம் இன்று வரை நாங்கள் எங்கள் உறவுகளுக்கு என்ன நடந்தது என்ற அவர்களுக்கான நீதி கோரி கையில் புகைப்படங்களுடனும், கண்ணீருடனும் வீதிகளில் போராடிக் கொண்டிருக்கின்றோம். ஒரு பிரதேசத்தில் ஆரம்பித்த எமது அமைப்பு பின்னர் மாவட்டங்கள் தோறும் ஆரம்பிக்கப்பட்ட எமது உறவுகளுக்காகப் பல அச்சுறுததல்களுக்கும் மத்தியில் போராடிக் கொண்டிருக்கின்றோம்.

வடக்கு கிழக்கு இணைந்த தாயகத்தில் எட்டு மாவட்டங்களும் இணைந்து எமது போராட்டங்கள் வலுப்பெற்று இன்று சர்வதேச நீதியைக் கோரி நிற்கின்றோம். இன்று எம்மோடு இணைந்து போராடிய பல தாய்மார்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் தங்கள் உறவுகளைத் தேடி, அவர்கள் வருவார்கள் என்ற நம்பிக்கையோடும், ஏக்கங்களோடும் மரணித்துள்ளார்கள். அவர்கள் அழிக்கப்பட்ட சாட்சியங்களாக உள்ளது மாத்திரமே பெறுபேறாகக் கிடைத்திருக்கின்றது.

இலங்கை அரசினூடாக எவ்வித தீர்வும் கிடைக்கப் பெறாமையினாலேயே எமது போராட்டங்களை நாங்கள் சர்வதேசத்தை நோக்கி நகர்த்தியிருக்கின்றோம். இருப்பினும் அரசு தன் கூலிப்படைகளைக் கொண்டு எங்களைத் துரத்திக் கொண்டே இருக்கின்றது. இலங்கையின் நீதித்துறை முன் எங்களைப் பயங்கரவாதிகளாகச் சித்தரிக்கின்றது அரசு.

சிறு குற்றங்கள் புரிந்தவர்களுக்கு வருடக் கணக்கில் தண்டனைகளைக் கொடுக்கும் இந்த நீதித்துறை எங்கள் உறவுகளைத் தேடும் எங்களையும் பயங்கரவாதிகளாகக் காட்டி எமது உரிமைக்கான போராட்டங்களைக் கூடச் செய்யவிடாது, தடையத்தரவுகளையும் வழங்குகின்றது. இதனால் நாங்கள் தற்போது நீதி கேட்கக் கூட இயலாத நிலைமைக்குத் தள்ளப்பட்டுள்ளோம். இதுதான் தற்போது இலங்கையின் ஜனநாயகமாக இருக்கின்றது.

ஆனால், எங்கள் உறவுகளைக் காணாமல் ஆக்கச் செய்த குற்றவாளிகளும், படுகொலை செய்த குற்றவாளிகளும் அவர்கள் குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்டும் நீதிமன்றத்தின் மூலம் அவர்கள் விடுதலை செய்யப்பட்ட அவர்களுக்கான பதவியுயர்வுகளைக் கொடுக்கும் வண்ணமான ஜனநாயகத்தினையே இந்த அரசாங்கம் செய்து கொண்டிருக்கின்றது.

ஒரு இனத்தை அழித்தவர்களுக்கும், கொலை செய்தவர்களுக்கும் கிடைக்கும் மதிப்பு வேதனையோடு வீதிகளில் போராடும் எமக்கு இல்லை. இந்த நாட்டில் சிறு பிள்ளை தொடக்கம் கற்பினித் தாய்மார், வயதானவர்கள் என்று கொலை செய்தவர்களுக்கு உயிரின் மதிப்பு தெரியாது. ஆனால் சர்வதேச நாடுகளும் அவ்வாறு இருப்பதை நினைத்தால் எமக்கு மேலும் வேதனையாகவே இருக்கின்றது.

இங்கு நீதி கிடைக்காமையினாலேயே ஐநா சபையை நாங்கள் நாடி வந்திருக்கின்றோம். எங்களை கைவிட்டு விடாதீர்கள். எமது உறவுகள் எமக்கு வேண்டும். அவர்களுக்கு என்ன நேர்ந்தது என்பது எங்களுக்குத் தெரிய வேண்டும். அதற்காகவே எமது போராட்டங்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. எமது தாய்மாரையும் இழந்து கொண்டிருக்கின்றோம். எமது சாட்சியங்களும் அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. எனவே இனியும் தாமதிக்காமல் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு எமது பிரச்சினைகைளப் பாராப்படுத்தி எமது உறவுகளுக்கான நீதியைப் பெற்றுத் தர வேண்டும் என்று தெரிவித்தார்.

“ஏப்ரல் குண்டுத்தாக்குதல் யாருடைய நிகழ்ச்சி நிரலுக்கு அமைய இடம்பெற்றது என்பதே கண்டறியப்படவேண்டும்.” – நாடாளுமன்றில் எம்.ஏ.சுமந்திரன் !

“ஏப்ரல் குண்டுத்தாக்குதல் யாருடைய நிகழ்ச்சி நிரலுக்கு அமைய இடம்பெற்றது என்பதே கண்டறியப்படவேண்டும்.” என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் சபையில் நேற்று (11.03.2021) தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட
ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பில் ஆளும் கட்சி
கொண்டுவந்த சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை விவாதத்தில் உரையாற்றிய போதே அவர் இதனைக் கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் மிக மோசமான தற்கொலைத் தாக்குதல் இடம்பெற்றது. இதில் பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு நீதியைப் பெற்றுக்கொடுக்கவும், குற்றவாளிகளுக்கு தண்டனையை பெற்றுக்கொடுக்கும் கடப்பாடு அரசாங்கத்துக்கு உள்ளது. ஆனால் அரசாங்கம் இந்த விடயத்தில் நீதியை வழங்குவதில் தோல்வியடைந்துள்ளது என்றே கூற வேண்டும்.

இந்தத் தாக்குதலுக்கு பிரதான சூத்திரதாரி யார் என பேராயர் மல்கம் ரஞ்சித்
ஆண்டகை கேள்வி எழுப்புகின்றார். ஆனால் அமைச்சர் மஹிந்தானந்த அளுத் கமகே சஹ்ரானே பிரதான சூத்திரதாரி என சபையில் கூறுகின்றார். அவ்வாறு கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஜனாதிபதி ஆணைக்குழுவின்
அறிக்கையில் பிரதான சூத்திரதாரி யார் என்பது தெரிவிக்கப்படவில்லை. முதலில் பாராளுமன்ற தெரிவுக்குழு அறிக்கையை வாசிக்க வேண்டும். குற்றவாளிகளைக் கண்டறியும் வழிமுறையை பாராளுமன்ற தெரிவுக்குழு தெரிவித்துள்ளது.

இந்தத் தாக்குதல் குறித்து ஆராய நியமிக்கப்பட்ட பாராளுமன்ற தெரிவுக்
குழு அறிக்கையின் பல விடயங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ள ஜனாதிபதி
ஆணைக்குழுவின் அறிக்கையில் உள்வாங்கப்பட்டுள்ளன. இந்தத் தாக்குதலை யார் திட்டமிட்டது, யார் பின்னால் இருந்து இயங்கியது, யாருடைய நிகழ்ச்சி நிரலுக்கு அமைய இந்தத் தாக்குதல் இடம்பெற்றது என்பதே கண்டறியப்படவேண்டும்.

பாராளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையிலும், ஜனாதிபதி ஆணைக்குழுவிடம்
விசாரிக்கப்பட்டும் இப்போது வரையில் பிரதான சூத்திரதாரி யார் என்பது தெரியாது என அரசாங்கம் கூறுகின்றது என்றால், இதன் பின்னணியில் எதோ தவறு இடம்பெறுகின்றது.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாயத்தைப் பெற்றுக்கொடுக்க வேண்டும்.
அதுவே பொறுப்பான அரசாங்கத்தின் கடமையாகும். எந்த அரசாங்கம் ஆட்சியில் இருந்தாலும் குற்றவாளிகளைக் கண்டறிய வேண்டிய கடமை அரசாங்கத்திற்கு உள்ளது.

இந்த நாட்டில் எமக்கு எதிராக இடம்பெற்ற இன அழிப்பில் நியாயத்தைக் கேட்டு நிற்கின்ற வேளையில், சர்வதேச விசாரணையை நடத்தக்கோரி நிற்கின்ற நிலையில், சர்வதேச விசாரணை அவசியமில்லை, உள்ளக விசாரணைகளில் தீர்வு காண்போம் எனக் கூறியவர்கள் இப்போது இந்த விடயத்தில் சர்வதேச விசாரணை வேண்டும் எனக் கேட்கின்றனர்.

ஏன் சர்வதேச விசாரணை வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது? ஏனென்றால் பொறுப்புக்கூறலை நிறைவேற்றவும், தமது மக்களுக்கான நியாயத்தை, நீதியை நிலைநாட்டவும் இலங்கை அரசு தோற்றுள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடர் இப்போது
இடம்பெறுகிறது. எமது மக்களுக்கு பொறுப்புக்கூறல் நிறைவேற்றப்பட
வேண்டும் என நாம் தொடர்ச்சியாக 11 ஆண்டுகள் கேட்டுக்கொண்டுள்ளோம்.

2009 ஆம் ஆண்டு மே மாதத்தில் ஆரம்பித்த எமது கோரிக்கை இன்று
வரை தொடர்கின்றது. இறுதி யுத்தத்தில் இடம்பெற்ற போர்க் குற்றங்களை ஆராயவும் பொறுப்புக் கூறவும் வலியுறுத்துகின்றோம்” என்றார்.

“ஐ.நாவின் தற்போதைய வரைவு சிறிலங்கா இனவாத அரசுக்கும் அதன் குற்றவாளிகளுக்கும் மேலதிக நேரமும் வெகுமதியும் அளிப்பதாக அமைகிறது” – நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்

“உலகெங்கும் போரினாலும் இனப் படுகொலைகளினாலும் பாதிக்கப்பட்டவர்கள் தமக்கான நீதியினைப் பெற்றுக்கொள்வதில் ஐ.நா.வின் தேவை தற்போது கேள்விக் குறியாகியுள்ள நிலையில், இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றின் முன்பு நிறுத்துவதன் மூலம் கடந்த காலத் தவறுகளை சரிசெய்வதற்கு ஐ.நா.வுக்கு தற்போது வாய்ப்புக் கிட்டியுள்ளது” என நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இதன்மூலம், ஐ.நா. மனித உரிமைச்சபை தனது தலைமைத்துவத்துக்கும் முன்னேற்றத்துக்கும் வாய்ப்பாக இது அமையும் என நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

இலங்கை தொடர்பாக ஐ.நா. மனித உரிமைச் சபையில் முன்வைக்கப்பட்டுள்ள தீர்மான வரைவு குறித்து, நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் நிலைப்பாட்டினை ஐ.நா. அங்கத்துவ நாடுகளுக்கு அனைத்துலகத் தொடர்பாடலுக்கான அமைச்சர் மாணிக்கவாசகர், காணொளி தொடர்பாடல் ஊடாக முன்வைத்திருந்தார்.

இந்நிலையில் அவர் தனது உரையில்,

“கடந்த 12 ஆண்டுகளாக நாங்கள் இன்னமும் நீதி மற்றும் பொறுப்புக்கூறலுக்காகக் காத்திருக்கிறோம்.

ஐ.நா. தீர்மானங்கள் குறித்து சிறிலங்கா அரசாங்கம் தொடர்ந்து இணங்காதது மற்றும் போர்க் குற்றங்களை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் உட்பட இடைக்கால நீதி வழிமுறைகளை நிறுவுவதில் தாமதம் என்பன போரில் பாதிக்கப்பட்ட ஆயிரக் கணக்கானோருக்கு உண்மை மற்றும் நீதியை வழங்குவதைத் தவிர்ப்பதற்கான ஒரு முயற்சியாகும்.

எந்தவொரு தீர்மானத்தையும் நடைமுறைப்படுத்தி நீதி மற்றும் பொறுப்புக் கூறலுக்கான சூழலை உருவாக்கும் நம்பிக்கை மற்றும் நல்லிணக்கத்தை உள்நாட்டுப் பொறிமுறை மூலம் செய்யமுடியாது என்பதை சிறீலங்கா மீண்டும் மீண்டும் வலியுறுத்தி வந்ததன் மூலம் தெளிவாகிவிட்டது. உங்களது தற்போதைய தீர்மான வரைவு, பாதிக்கப்பட்டவர்களை மேலும் துன்பத்திற்கும் அடக்குமுறைக்கும் உள்ளாக்குவதோடு சிறிலங்கா இனவாத அரசுக்கும் அதன் குற்றவாளிகளுக்கும் மேலதிக நேரமும் வெகுமதியும் அளிப்பதாக அமைகிறது.

உலகெங்கும் போரினால் பாதிக்கப்பட்டவர்கள், கட்டமைக்கப்பட்ட இனப் படுகொலை, போர்க் குற்றங்கள், மனித குலத்திற்கு எதிரான குற்றங்களுக்கு உட்படுத்தப்படுவதால் போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதியைப் பெற்றுக் கொள்வது தொடர்பாக ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் தேவை இப்போது கேள்விக் குறியாகியுள்ளது.

சிறிலங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றின் முன்பு நிறுத்துவதன் மூலம், தனது தலைமைத்துவத்தைக் காண்பிப்பதற்கும் கடந்த காலத் தவறுகளைச் சரிசெய்வதற்கும் முன்னேறுவதற்கும் ஐ.நா. மனித உரிமைப் பேரவைக்கு இதுவொரு வாய்ப்பாக அமையும் என உறுதிபடத் தெரிவிக்கின்றோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

“இலங்கை இராணுவத்தினர் போர்க்குற்றங்களை இழைக்கவில்லையெனில் அது தொடர்பான விசாரணைக்கு ஏன் அஞ்சுகின்றீர்கள் ?” – சம்பந்தன் கேள்வி !

“இலங்கை இராணுவத்தினர் போர்க்குற்றங்களை இழைக்கவில்லையெனில் அது தொடர்பான விசாரணைக்கு ஏன் அஞ்சுகின்றீர்கள்” என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஊடகம் ஒன்றின் கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார்.

இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர்,

‘இலங்கையில் இறுதிப்போரில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பில் நீதியான விசாரணை நடாத்தப்பட்டு குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு பரிகாரம் கிடைக்க வேண்டும் என்பதும் எமது வேண்டுகோளாகும்.

இதை நாம், 2009இல் போர் நிறைவுக்கு வந்தது தொடக்கம் உள்நாட்டிலும், சர்வதேச மட்டத்திலும் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றோம்.

இலங்கை மீதான ஐ.நா. தீர்மானங்களும் இதையே வலியுறுத்தி நிற்கின்றன. ஆனால், அரசுதான் ஐ.நாவின் பரிந்துரைகளை நிறைவேற்றாமல் தான்தோன்றித்தனமாகச் செயற்படுகின்றது.

இராணுவத்தினர் போர்க்குற்றங்களை இழைக்கவில்லையெனில் அவர்களும், அரச தரப்பினரும் அது தொடர்பான விசாரணைக்கு அஞ்சுவது ஏன்? யார் குற்றம் செய்திருந்தாலும் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.

யார் பாதிக்கப்பட்டிருந்தாலும் அவர்களுக்குப் பரிகாரம் கிடைக்க வேண்டும். இதுதான் சர்வதேச நியதி. இதை மீறி எவரும் செயற்பட முடியாது. சர்வதேசத்தைப் புறந்தள்ளி இந்த அரசு செயற்படுமானால் நாடுதான் பேராபத்தைச் சந்திக்கும்.“ எனக் குறிப்பிட்டுள்ளார்.

“பச்சிலைப்பள்ளி பிரதேச செயலக பிரிவில் சிங்கள குடியேற்றங்களை மேற்கொள்ள திட்டம்” – சுரேஷ் பிரேமச்சந்திரன்

“பச்சிலைப்பள்ளி பிரதேச செயலக பிரிவில் சிங்கள குடியேற்றங்களை மேற்கொள்ள திட்டமிடப்பட்டு  காணி சீர்திருத்த ஆணைக்குழுவிற்கு சொந்தமான ஆவணங்கள் வடமாகாண அலுவலகத்திலிருந்து இரவோடு இரவாக அனுராதபுரத்துக்கு மாற்றப்பட்டிருக்கலாம்” என  என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் சந்தேகம் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அங்கு தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,

அண்மைக் காலங்களில் சர்ச்சைக்குரிய விஷயமாக இடம்பெற்றுக் கொண்டிருக்கும் காணி சீர்திருத்த ஆணைக்குழுவிற்கு சொந்தமான ஆவணங்கள் வடமாகாண அலுவலகத்திலிருந்து இரவோடு இரவாக அனுராதபுரத்துக்கு மாற்றப்பட்டமை கவலைக்குரிய விடயமாகும்.

அண்மையில் இடம்பெற்ற மின்சாரத்தடை சந்தர்ப்பத்தை பயன்படுத்தி இரவோடு இரவாக அனைத்து ஆவணங்களையும் அனுராதபுரத்துக்கு கொண்டு சென்றமையினால் எமக்கு பல சந்தேகங்கள் எழுகின்றது.

மேலும் கிளிநொச்சி மாவட்டத்தில் குறிப்பாக பச்சிலைப்பள்ளி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மூவாயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் காணிகளில் சிங்கள குடியேற்றங்களை மேற்கொள்வதற்காக இவ் இடமாற்றம் இடம்பெற்றிருக்கலாம் எனவும் சந்தேகங்கள் எழுகின்றன எனவும் தெரிவித்துள்ளார்.