January

January

“ஐக்கியநாடுகளுக்கும் சர்வதேச சமூகத்திற்கும் தான் வழங்கிய வாக்குறுதிகளில் இருந்து நாடொன்று பின்வாங்கினால் பலத்த விளைவுகளை சந்திக்க நேரிடும்” – சுமந்திரன் எச்சரிக்கை !

“ஐக்கியநாடுகளுக்கும் சர்வதேச சமூகத்திற்கும் தான் வழங்கிய வாக்குறுதிகளில் இருந்து நாடொன்று பின்வாங்கினால் பலத்த விளைவுகளை சந்திக்க நேரிடும்” என தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் எச்சரித்துள்ளார்.

சண்டே டைம்சிற்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அதில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது ,

நாங்கள் மனித உரிமை ஆணையாளரின் அறிக்கையை வரவேற்கின்றோம், மனித உரிமை ஆணையாளரின் அலுவலகத்திற்கு நாங்கள் அனுப்பிவைத்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் ஆணையாளரின் அறிக்கையில் காணப்படுவதை பலர் அவதானித்திருப்பார்கள். இது ஒரு தற்செயல்நிகழ்வு.

கடந்தகாலங்களில் மூன்று தடவை ஐ.நாபொறிமுறைக்கு அரசாங்கம் இணங்கியபோதிலும் அதற்கு அரசாங்கம் ஒத்துழைப்பு வழங்க மறுத்தமையே அரசாங்கத்தின் தற்போதைய நிலைக்கு காரணம்.

ஐக்கியநாடுகளுக்கும் சர்வதேச சமூகத்திற்கும் தான் வழங்கிய வாக்குறுதிகளில் இருந்து நாடொன்று பின்வாங்கினால் அதன் பின்னர் அதற்கான இயல்பான விளைவுகள் உருவாகும். யுத்தகால பொறுப்புக்கூறும் பொறிமுறையை பொறுத்தவரைஐக்கியநாடுகள் தீர்மானத்தின் மூலம் இலங்கை கலப்புபொறிமுறைக்கு சம்மதம் வெளியிட்டது . எனினும் பின்னர் முன்னர் ஏற்றுக்கொண்டபடி அவ்வாறான பொறிமுறைகளில் சர்வதேச நீதிபதிகளை அனுமதிக்கப்போவதில்லை என தெரிவித்தது.

கடந்த பெப்ரவரியில் அரசாங்கம் ஐ.நா தீர்மானங்களை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை எனவும் அறிவித்தது.
இந்த தீர்மானங்களை நடைமுறைப்படுத்துவதற்கு குறிப்பிட்ட நாட்டின் சம்மதம் அவசியம். நாடு தீர்மானங்களை பின்பற்ற மறுக்கின்றபோது ஐ.நா சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு பாரப்படுத்துதல், ஏனைய உறுப்புநாடுகள் சர்வதேச நியாயாதிக்கத்தை பயன்படுத்தவேண்டும் என வேண்டுகோள் விடுத்ததல், பயண போக்குவரத்து தடைகளை விதித்தல் போன்ற நடவடிக்கைகளை எடுக்கின்றது.

வெளிவிவகார அமைச்சின் செயலாளரின் சமீபத்திய பேட்டிகளை பார்க்கும்போது பத்து வருடத்தின் பின்னரும் அரசாங்கம் மறுக்கும் மனோநிலையிலேயே உள்ளதை புலப்படுத்துகின்றது.

யுத்தகால பொறுப்புக்கூறலிற்கு இலங்கைக்கு பத்து வருடங்கள் வழங்கப்பட்ட பின்னரும் அது நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்பதால் நாங்கள் கடுமையான நிலைப்பாட்டை எடுக்கவேண்டியுள்ளது” என சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

“ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளர் இலங்கையின் இறைமைக்குள் விரல்களை நீட்டுகின்றார்” – அமைச்சர் சரத்வீரசேகர

ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளர் இலங்கையின் இறைமைக்குள் விரல்களை நீட்டுகின்றார் என தெரிவித்துள்ள பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளரின் அறிக்கை முற்றிலும் பிழையான குற்றச்சாட்டுகளை கொண்டது என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இது தொடரடபில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளர் இலங்கையின் இறைமைக்குள் விரல்களை நீட்டுகின்றார். நான் அமைச்சராக தெரிவு செய்யப்பட்டமை தொடர்பில் எங்கள் ஜனாதிபதிக்கு எதிராக அவர் குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றார் இது தவறு. அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியும் ஓய்வுபெற்ற இராணுவஅதிகாரிகளை முக்கிய பதவிகளிற்கு நியமித்துள்ளார்.

மனித உரிமை ஆணையாளர் என்னை குற்றம்சாட்டியுள்ளார். நான் மக்களால் தெரிவு செய்யப்பட்டவன். நான் கொழும்பு மாவட்டத்தில் அதிக விருப்புவாக்குகளையும் இலங்கையில் இரண்டாவது அதிக விருப்புவாக்குகளையும் பெற்றவன் மனித உரிமை ஆணையாளரை பொறுத்தவரை அது பிழையான விடயமாக காணப்படுகின்றது.

தற்போதைய நிலைமக்கு முன்னாள் அமைச்சர் மங்களசமரவீரவையே குற்றம்சாட்டவேண்டும். முன்னைய அரசாங்கத்தின் சார்பில் அவரே அமெரிக்காவின் தீர்மானத்திற்கு இனண அணுசரணை வழங்கினார்.
இது துரோகமாகும்.

இலங்கைமக்கள் அச்சப்படத்தேவையில்லை ஜனாதிபதி அவர்களை நன்கு பார்த்துக்கொள்வார் எனவும் சரத்வீரசேகர தெரிவித்துள்ளார்.

கிழக்கு முனையத்தை இந்திய நிறுவனத்துக்கு வழங்கும் திட்டம் – நாடு பூராகவும் போராட்டங்களை முன்னெடுக்க ஜே.வி.பி தீர்மானம் !

கொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை இந்திய நிறுவனத்துக்கு வழங்கும் திட்டத்துக்கு எதிராக நாடு பூராகவும் போராட்டங்களை முன்னெடுப்பதற்கு மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) தீர்மானித்துள்ளது.

தமது போராட்டத்தின் ஆரம்பகட்டமாக எதிர்வரும் முதலாம் திகதி தமது தொழிற்சங்கங்கள் அனைத்தையும் ஒன்றிணைத்து நாடு பூராகவும் ஆர்ப்பாட்டங்களை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

நாட்டின் வளங்களையும், சொத்துக்களையும் வெளிநாடுகளுக்கு விற்பதற்கு அரசுக்கு எந்த அதிகாரமும் கிடையாது எனவும்,  கொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை விற்கும் அரசின் முயற்சிகளைத் தோற்கடிப்பதற்கு அனைத்து வழிகளிலும் நடவடிக்கை எடுப்போம் எனவும் அநுரகுமார திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

கொழும்புத் துறைமுகம் என்பது இலங்கை பொருளாதாரத்தின் இதயத்தை போன்றது. ஏற்கனவே இந்தத் துறைமுகத்தின் சில பகுதிகள் சீனாவுக்கு வழங்கப்பட்டுள்ளன. இந்நிலையில், எஞ்சியுள்ள கிழக்கு முனையத்தை இந்தியாவுக்குக் கொடுக்கும் முயற்சிகளுக்கு இடமளிக்கக் கூடாது என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

“இலங்கை விவகாரத்தில் மனித உரிமைகள் சபை நடுநிலைத்தன்மையைப் பேணவில்லை” – அமைச்சர் வாசுதேவ நாணயக்கார குற்றச்சாட்டு !

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் இலங்கை தொடர்பில் இரு தரப்பினராலும் முன்வைக்கப்படும் கருத்துக்களை ஆராய்வது அவசியமாகும். இலங்கை விவகாரத்தில் மனித உரிமைகள் சபை நடுநிலைத்தன்மையைப் பேணவில்லை” என நீர்வழங்கல் துறை அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையுடன் இலங்கை நட்புறவுடன் செயற்படுகின்றது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் இலங்கைக்கு எதிராகப் போர் முடிவடைந்த காலத்தில் இருந்து பல குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில் உள்ள பொறிமுறையின் அடிப்படையில் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையைக் கையாள வகுக்கப்பட்ட திட்டங்களை 2015 ஆம் ஆண்டு ஆட்சியமைத்த நல்லாட்சி அரசு செயற்படுத்தவில்லை.

மனித உரிமைகள் சபை விவகாரம் கூட அரசியல் பழிவாங்கலுக்காகப் பயன்படுத்திக்கொள்ளப்பட்டது. 30/1 தீர்மானத்துக்கு இணை அனுசரணை வழங்குவதாக முன்னாள் வெளிவிவகார அமைச்சர்  மங்கள சமரவீர அரச தலைவருக்கும் நாடாளுமன்றத்துக்கும் அறிவிக்காமல் இணக்கம் தெரிவித்தமை தேசத்துரோக செயற்பாடாகவே கருத வேண்டும்.

30/1 தீர்மானத்தில் உள்ளடக்கபட்ட விடயங்கள் அரசமைப்பிற்கு முரணானது. 2020ஆம் ஆண்டு இடம்பெற்ற ஐ.நா. மனித உரிமைகள் சபைக் கூட்டத்தொடரின் போது 30/1 தீர்மானத்திலிருந்து எமது அரசு உத்தியோகப்பூர்வமாக விலகியது.

இந்தத் தீர்மானத்தை அரசு சுயாதீனமான முறையில் எடுத்தது. பெப்ரவரியில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் கூட்டத் தொடர் ஆரம்பமாகவுள்ளது. இலங்கை தொடர்பில் மனித உரிமைகள் ஆணையாளர்  வெளியிட்டுள்ள அறிக்கை இலங்கையின் சுயாதீனத்தன்மைக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் உள்ளது.

அரசியல் நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு சாட்டப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் இம்முறை திருத்தியமைக்கப்படும். உள்ளகப் பிரச்சினையை சர்வதேச அரங்குக்குக் கொண்டு சென்று ஒரு தரப்பினர் இலாபமடைகின்றார்கள். இதனால் சாதாரண தமிழ் மக்களுக்கு எவ்வித பயனும் கிடைக்கப் பெறவில்லை” – என்றார்.

“யாழ். மாவட்டத்திலுள்ள மக்கள் சுதந்திரமாக வாழ்வதற்கு என்னாலான பூரண ஒத்துழைப்பை வழங்குவேன்” – மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேரா

“தேசிய பாதுகாப்புக்கு குந்தகம் ஏற்படாத வகையில் யாழ். மாவட்டத்திலுள்ள மக்கள் சுதந்திரமாக வாழ்வதற்கு என்னாலான பூரண ஒத்துழைப்பை வழங்குவேன்” என யாழ். மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேரா தெரிவித்தார்.

யாழ்.சாவகச்சேரியில் அண்மையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“1985 ஆம் ஆண்டில் இருந்து யாழ்ப்பாணத்தில் பல்வேறு இடங்களில் கடமையாற்றியிருக்கிறேன். நான் கடைசியாக 2014, 2015 ஆம் ஆண்டு காலப்பகுதியில் கீரிமலை உடுவில் பகுதிகளில் கடமையாற்றியிருந்தேன்.

அக் காலப்பகுதியில் வறிய குடும்பங்களைச் சேர்ந்த பொதுமக்களுக்கான வீடுகளை பெற்றுக் கொடுப்பதில் பெரும் பங்காற்றியிருந்தேன். அத்தோடு விவசாய மக்களுக்கு பெரிதும் பாதிப்பை ஏற்படுத்திய பார்த்தீனிய ஒழிப்பில் நான் முக்கிய பங்காற்றியிருந்தேன்.

அதன் பின்னர் வன்னி மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியாக நியமிக்கப்பட்டு தற்போது யாழ். மாவட்ட கட்டளைத் தளபதியாக நியமிக்கப்பட்டு கடந்த ஒரு வாரமாகிறது. எனினும் யாழ் மாவட்டம் தொடர்பாக ஏற்கனவே நான் அறிந்தவன். இங்குள்ள மக்களை நன்கு அறிந்தவன்.

எனவே இங்குள்ள மதத் தலைவர்கள் அனைவரையும் சந்தித்து அவர்களின் கருத்தின் ஊடாக ஒற்றுமையை, நல்லிணக்கத்தை ஏற்படுத்தி மாவட்டத்தில் பாதுகாப்பையும் உறுதிப்படுத்துவேன். மேலும் தேசிய பாதுகாப்புக்கு குந்தகம் ஏற்படாத வகையில் யாழ். மாவட்டத்திலுள்ள மக்கள் சுதந்திரமாக வாழ்வதற்கு என்னாலான பூரண ஒத்துழைப்பை வழங்குவேன்.

அத்தோடு எனக்குக் கீழ் பணியாற்றும் சகல இராணுவ வீரர்களும் பொதுமக்களின் சகல சமூக செயற்பாட்டிற்கும் ஒத்துழைப்பு வழங்குவார்கள்” என்றும் தெரிவித்தார்.

“இராஜாங்க அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க, அவரோடு சேர்ந்தவர்களுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரவுள்ளோம்” – எம்.ஏ.சுமந்திரன்

முல்லைத்தீவு – தண்ணிமுறிப்பு குருந்தூர் மலையிலிருந்த தமிழர்களின் வழிபாட்டு அடையாளங்கள் காணாமலாக்கப்பட்டமைக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றில் வழக்குத் தொடரப்படும் என தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

அதேவேளை இராஜாங்க அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க, அவரோடு சேர்ந்தவர்களுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கொன்றினையும் தொடரவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

குருந்தூர் மலையில் தமிழர்களின் வழிபாட்டு அடையாளங்கள் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பில் வழக்கொன்றினைத் தொடர்வது தொடர்பில், முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர்  துரைராசா ரவிகரன் அவர்கள், மற்றும் கரைதுறைப்பற்று பிரதேசசபை உறுப்பினர் சின்னராசா லோகேஸ்வரன் ஆகியோர்  இன்று(30.01.2021) வவுனியாவிலுள்ள தமிழரசுக்கட்சி காரியாலயத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் அவர்களைச் சந்தித்து கலந்துரையாடியதுடன், வழக்குத் தொடர்வதற்காக சில ஆவணங்களையும் கையளித்திருந்தனர் குறித்த சந்திப்பின் பின் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே சுமந்திரன் அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் எம்.ஏ.சுமந்திரன் அவர்கள் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

“குருந்தூர் மலையில் இருந்த சூலம் உடைக்கப்பட்ட விடயம் சம்பந்தமாக முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன், நாடாளுமன்ற உறுப்பினர்களான சிறீதரன், சாள்ஸ் ஆகியோர் நேரிலே சென்று பார்வையிட்ட பின்பு ரவிகரன் முல்லைத்தீவு போலீஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருக்கின்றார். அதனைத் தொடர்ந்து 29.01.2021 நேற்றைய தினம் காவற்துறையினரோடு குருந்தூர்மலைக்குப்போய் உடைக்கப்பட்ட தடையங்கள் எல்லாவற்றையும் ரவிகரன் காண்பித்திருந்தார்.

ஆகையினாலே அங்கே இருந்தது உடைக்கப்பட்டதென்பது ஊர்ஜிதமாக்கப்பட்டிருக்கின்றது.இதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்திலே, அல்லது மேன்முறையிட்டு நீதிமன்றத்திலே வழக்கொன்றை நாங்கள் தாக்கல் செய்யவுள்ளோம். ஏற்கனவே முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்தினாலே கொடுக்கப்பட்ட உத்தரவினை மீறி, அந்த உத்தரவிற்கு எதிராக செயற்பட்டதன் காரணமாக, அந்த நீதிமன்ற உத்தரவினை மீறியதற்காக, நீதிமன்றினை அவமதித்த வழக்கொன்றும் மேன்முறையிட்டு நீதிமன்றிலே நாங்கள் உடனடியாகத் தாக்கல் செய்வோம்.அது இராஜாங்க அமைச்சர் விதுர விக்கிரமநாயக்கவிற்கும் அவரோடு சேர்ந்தவர்களுக்கும் எதிராக அந்த வழக்குத் தாக்கல் செய்யப்படும் – என்றார்

வடக்கில் 2997 பேருக்கு கொரோனா தடுப்பூசி மருந்து விநியோகம் !

வடக்கு மாகாண வைத்தியசாலைகள் ஊடாக மருத்துவ சேவையாளர்கள் உள்ளிட்ட சுகாதாரத் துறையினருக்கு கொவிட் -19 தடுப்பூசி மருந்து வழங்கும் நடவடிக்கையில் இன்றைய முதல் நாளில் 2 ஆயிரத்து 997 சேவையாளர்கள் டோஸ் பெற்றுள்ளனர். இது 30 சதவீத்ததினர் ஆகும்.என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது;
வடக்கு மாகாணத்தில் உள்ள 5 மாவட்டங்களிலும் உள்ள வைத்தியசாலைகளில் பணியாற்றும் மருத்துவர்கள், தாதியர்கள், மருத்துவ சேவையாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கும் பொதுச் சுகாதார பரிசோதகர்களுக்கும் கொவிட் -19 தடுப்பூசி மருந்து ஏற்றும் பணி இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந்த தடுப்பூசி மருந்து வழங்கலுக்கு வடக்கு மாகாணத்தில்  9 ஆயிரத்து 944 சுகாதாரத் துறை சேவையாளர்கள் தகுதி பெற்றனர். மூன்று நாட்களுக்கு முன்னெடுக்கப்படும் இந்தப் பணியில் முதல் நாளான இன்று 2 ஆயிரத்து 997 பேர் கொவிட் -19 தடுப்பூசி மருந்தைப் பெற்றுள்ளனர்.

யாழ்ப்பாண மாவட்டத்தில் மட்டும்   ஆயிரத்து 586 பேரும் கிளிநொச்சியில் 290 பேரும் மன்னாரில் 448 பேரும் வவுனியாவில் 360 பேரும் முல்லைத்தீவில் 313 பேரும் இன்றுகொவிட் -19 தடுப்பூசி மருந்தைப் பெற்றனர்.
இரண்டாவது நாள் தடுப்பூசி மருந்து வழங்கல் நாளை முன்னெடுக்கப்படும் ” என்றார்.

மறைந்த மூத்த எழுத்தாளர் டொமினிக் ஜீவாவுக்கும் கொரோனா !

இலங்கையின் மூத்த எழுத்தாளர் டொமினிக் ஜீவா தனது 94 ஆவது வயதில் கடந்த 28 ஆம் திகதி உயிரிழந்தார். அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் அவர் கொரோனா தொற்றுக்கு உள்ளானமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதனால் அவரது சடலம் இன்று சனிக்கிழமை மாலை 03.00 மணிக்கு பொரளையில் சுகாதார பாதுகாப்பு விதிமுறைகளுக்கு அமைய தகனம் செய்யப்பட்டதாகவும் , கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பாரியளவிலான இறுதி அஞ்சலிகள் இடம்பெறவில்லை என்றும் அவரது மகன் தெரிவித்தார்.

எண்ணற்ற தமிழ் நூல்களை சமூகத்திற்கு படைத்த டொமினிக் ஜீவா, முதுமை மற்றும் உடல்நலக்குறைவால் கடந்த வியாழனன்று கொழும்பில் காலமானார். 1940 ஆம் ஆண்டளவில் எழுத்துத் துறையில் கால் பதித்த அன்னார், ஈழ இலக்கியத்தின் தவிர்க்க முடியாத ஆளுமையாவார்.

தமிழரசுக்கட்சியின் வடக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளர் மாவை !

வடக்கு மாகாணத்தின் முதலைமச்சர் வேட்பாளராக தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவை களமிறக்க வேண்டும் என தமிழரசுக் கட்சியின் உயர்மட்டக்குழு இன்று  சனிக்கிழமை தீர்மானித்துள்ளது.

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் உயர்மட்டக்குழு வவுனியாவில் இன்று நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் வடக்கு மாகாணத்தின் முதலமைச்சர் வேட்பாளராக தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா அவர்களே போட்டியிடவேண்டும் என முன்மொழிந்த போது  எவரும் அந்த தீர்மானத்தை எதிர்க்காததால் அந்த தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

“நான் எம் இளைஞர்களை இராணுவத்தில் சேருங்கள் என்று கூறியுள்ளேன் என்பது அபத்தம்” – சி.வி. விக்னேஸ்வரன்

“இராணுவத்தில் எமது இளைஞர் யுவதிகள் சேர வேண்டும் என்று நான் எங்குமே கூறவில்லை. நான் எம் இளைஞர்களை இராணுவத்தில் சேருங்கள் என்று கூறியுள்ளேன் என்பது அபத்தம்” என நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி. விக்னேஸ்வரன் குறிப்பிட்டார்.

அண்மையில் ஊடக சந்திப்பொன்றின் போது அமைச்சர் சரத்வீரசேகர குறிப்பிட்டிருந்த கருத்து தொடர்பாக பேசிய சி.வி.விக்னேஸ்வரன் தமிழ் இளைஞர்களுக்கான இராணுவ பயிற்சி தொடர்பாக தன்னுடைய அபிப்பிராயத்தை வெளியிட்டிருந்தார். எனினும் அது சமூக ஊடகங்களில் வேறு விதமாக பொருள் கொ்ளப்பட்டது எனக்குறிப்பிட்டு பேசுகையிலே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இது தொடர்பாக மேலும் குறிப்பிடுகையில் …

இராணுவப் பயிற்சி பற்றிக் கூறிய விடயங்கள் பத்திரிகைகள், இணையத்தளங்கள் போன்றவற்றால் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுள்ளன.

இராணுவத்தில் எமது இளைஞர் யுவதிகள் சேர வேண்டும் என்று நான் எங்குமே கூறவில்லை. எமது மாணவ மாணவியர்க்கு அவர்கள் கல்லூரிகளில் இருக்கும் போதே இராணுவப் பயிற்சி அளிக்க வேண்டும் என்றே கூறினேன்.
என்னைப் போன்றவர்கள் எவ்வாறு எங்கள் கல்லூரிகளில் கல்லூரியை விட்டு விலக முன்னர் போர்ப் பயிற்சி நெறிகளில் பாண்டித்தியம் பெற்றோமோ ? அதே போன்று கல்லூரிகளில் இருக்கும் போதே எமது மாணவ மாணவியர் பயிற்சி பெற வேண்டும் என்றே கூறினேன்.

அவர்களுக்குப் பயிற்சி யார் கொடுப்பார்கள் என்ற கேள்வி அப்போது எழுந்தது. முழுமையாகத் தமிழில் பாண்டித்தியம் பெற்ற தமிழர்கள் இராணுவத்தில் இருந்தால் அவர்கள் தமிழில் பயிற்சி அளிக்கலாம். இல்லை என்றால் முன்னாள் போராளிகள் பயிற்சி அளிக்கலாம். இல்லை என்றால் தமிழ் நாட்டில் இருந்து வருவித்து அவர்களைக் கொண்டு பயிற்சி அளிக்கலாம் என்று கூறியுள்ளேன். சிங்களவர்களோ சிங்கள மொழியிலோ பயிற்சிகள் அளிக்கக் கூடாது என்றும் கூறினேன்.

அமைச்சர் கூறியது 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் பற்றி. அவர்கள் அநேகமாகக் கல்லூரி வாழ்க்கையை முடித்துக் கொண்டவர்கள் ஆவார்கள். ஆனால் அதற்குப் பதிலாக கல்லூரியில் பயிலும் 16 வயதுடையோருக்கு கல்லூரியிலேயே பயிற்சி அளிக்கப்பட வேண்டும் என்று தான் கூறினேன். இதனைப் புரியாமல் நான் எம் இளைஞர்களை இராணுவத்தில் சேருங்கள் என்று கூறியுள்ளேன் என்பது அபத்தம். கல்லூரியில் போர்ப் பயிற்சி பெற்றமையின் நன்மைகளைப் புரிந்தே நான் அவ்வாறு கூறினேன். இன்றைய இளைஞர் யுவதிகளை ஒழுக்க சீலர்களாக மாற்றக் கூடியது இப் பயிற்சி” என குறிப்பிட்டுள்ளார் .