January

January

“என் மீது நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் கூறிய குற்றச்சாட்டுக்கள் குறித்து எதிர்வரும் இரண்டாம் திகதிக்குப் பின்னர் பதிலளிப்பேன்” – மாவை சேனாதிராஜா

“என் மீது நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் கூறிய குற்றச்சாட்டுக்கள் குறித்து எதிர்வரும் இரண்டாம் திகதிக்குப் பின்னர் பதிலளிப்பேன்” என  தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

யாழ். மாநகர சபையின் ஆட்சியை தமிழ் தேசியக் கூட்டமைப்பு இழந்தமைக்கு தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசாவின் செயற்பாடுகளே காரணமென எம்.ஏ.சுமந்திரன் குற்றஞ்சாட்டியிருந்தார்.

இந்நிலையில், கட்சியின் யாழ். மாநகர சபை உறுப்பினர்களுடனான நேற்றைய சந்திப்புக்குப் பின்னர் ஊடகங்களின் கேள்விக்குப் பதிலளித்தபோதே மாவை சேனாதிராசா இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

“நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் குற்றஞ்சுமத்துவது ஒன்றும் புதிய விடயமல்ல. இதற்கு முன்னர் நாடாளுமன்றத் தேர்தல் முடிந்ததும் ஊடக சந்திப்பை நடத்தி தலைவர், செயலாளர் பற்றிப் பேசியிருக்கின்றார். இந்த விடயங்கள் தொடர்பாக செயற்குழுவைக் கூட்டி பேசவேண்டும்.

அதேநேரம், அதற்கு நான் பதிலளிப்பதா, இல்லையா என்பதைத் தீர்மானிக்க வேண்டும். ஆனால், இன்றைய ஒரு பத்திரிகையில் ஆசிரியர் என்னை இழிவுபடுத்தி எழுதியதால் அதற்கு நான் பதிலளித்திருக்கிறேன்.

இன்று புத்தாண்டு. அதை எல்லோரும் கொண்டாட வேண்டும். அதேநேரம் கொரோனாவால் துன்பத்தில் இருக்கின்றனர். ஆகவே, கட்சி மற்றும் அரசியல் விடயங்கள் தொடர்பாக நாளைக்கு கடிதத்தை எழுதி துன்பப்படுத்த நான் விரும்பவில்லை. ஆனாலும், இந்தக் குற்றச்சாட்டுக் கடிதம் தொடர்பாக எதிர்வரும் இரண்டாம் திகதிக்குப் பின்னர் அறிக்கை கொடுப்பேன்.

இதேவேளை, மாநகர சபை முதல்வர் விடயத்தில் நான் தன்னிச்சையாக எடுத்த முடிவு என்ற குற்றச்சாட்டை முழுமையாக நிராகரிக்கிறேன். கட்சித் தலைவர்கள், உறுப்பினர்கள் ஆராய்ந்துதான் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.

“சட்டத்தரணி க.சுகாஸ் வௌிப்படுத்தியுள்ள கருத்து கோமாளித்தனமானது” – சட்டத்தரணி வி.மணிவண்ணன்

“அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் பெண் உறுப்பினர்கள் தொடர்பாக  சட்டத்தரணி க.சுகாஸ் வௌிப்படுத்தியுள்ள கருத்து கோமாளித்தனமானது”  என யாழ்.மாநகர சபை முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.

யாழ்.ஊடக அமையத்தில் இன்று (01.12.2021)  நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த ஊடக சந்திப்பில் சட்டத்தரணி வி.மணிவண்ணன் மேலும் கூறியுள்ளதாவது,

“அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இருவர் மீது பாரதூரமான குற்றச்சாட்டுக்கள் உள்ளன. அதனால் அவர்கள் இருவரையும் எமது அணிக்குள் உள்வாங்கவில்லை. ஒருவர் மணல் கொள்ளையில் ஈடுபட்டதாக காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட நபர் மற்றையவர் மாநகர சபையில் வேலை பெற்று தரலாம் என கூறி பலரிடம் பணம் பெற்று மோசடியில் ஈடுபட்டவர் என எனக்கு வாய் மொழி மூல முறைப்பாடுகள் கிடைக்க பெற்றுள்ளன.

குறித்த நபர் மாநகர சபை பணத்தினை கையாடல் செய்யாமையால் என்னால் முதல்வர் எனும் ரீதியில் நடவடிக்கை எடுக்க முடியாது.

ஆனாலும் பாதிக்கப்பட்டவர்கள் சட்ட நடவடிக்கை எடுக்க தயாராக இருந்தால், சட்டத்தரணி எனும் ரீதியில் நிச்சயமாக அவர்களுக்கு நீதியை பெற்றுக் கொடுக்க தயாராக உள்ளேன். என தெரிவித்தார்.

அதேவேளை,  நல்லூர் பிரதேச சபையின் கடந்த அமர்வின்போது, தங்களுடன் (மணிவண்ணனுடன்) மது போதையில் வந்த காடையர் கூட்டம் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் பெண் உறுப்பினர்களுடன் அநாகரிகமாக நடந்து கொண்டதாக சட்டத்தரணி க.சுகாஸ் தெரிவித்த குற்றச்சட்டு தொடர்பில் கேள்வி எழுப்பிய போது, “கோமாளித்தனமான கருத்துக்களுக்கு தான் பதிலளிக்க விரும்பவில்லை. ஆக்கபூர்வமாக விடயங்கள் தொடர்பில் விவாதிப்போம்” என  அவர் குறிப்பிட்டுள்ளார்.

“ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் நிகழ்ச்சி நிரலின் அடிப்படையிலேயே மணிவண்ணன் யாழ்.மாநகர முதல்வராக தெரிவு செய்யப்பட்டார்” – சுகாஷ் குற்றச்சாட்டு !

அணட்மையில் யாழ்ப்பாண மாநகர சபைக்கான முதல்வராக சட்டத்தரணி வி.மணிவண்ணன் தெரிவு செய்யப்பட்டதை தொடர்ந்து யாழ்ப்பாண தமிழ்தேசிய கட்சிகளிடையே ஒரு விதமான பிணக்கு நிலை நிலவுகின்றது. மேலும் மணிவண்ணன் ஈ.பி.டி.பி.யுடன் சேர்ந்து தமிழ்தேசியத்துக்கு துரோகம் செய்து விட்டதாகவும் பலரும் குற்றஞ்சுமத்தி வருகின்றனர்.

இந்நிலையில் “ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் நிகழ்ச்சி நிரலின் அடிப்படையிலேயே ஈ.பி.டி.பி.யின் துணையுடன் தோழர் மணிவண்ணன் யாழ்.மாநகர முதல்வராக தெரிவு செய்யப்பட்டார்” என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் சட்ட ஆலோசகர் சுகாஷ் தெரிவித்துள்ளார்.

யாழில் அமைந்துள்ள கட்சி அலுவலகத்தில் இன்று (01.12.2020) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

குறித்த ஊடக சந்திப்பில் சுகாஷ் மேலும் கூறியுள்ளதாவது,

“தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மத்திய குழுவும் தலைமையும் எடுத்த முடிவு சரியென்பதை வெகு சீக்கிரத்தில் காலம் காட்டியுள்ளது.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியில் இருந்து கொள்கை ரீதியாக நீக்கப்பட்ட முன்னாள் தேசிய அமைப்பாளர் வி.மணிவண்ணன், தமிழ் தேச விரோத சக்திகளான ஈ.பி.டி.பி.கட்சியோடு சேர்ந்து யாழ்ப்பாண மாநகர சபையினுடைய மேயர் பதவியை கைப்பற்றி இருக்கிறார்.

அதற்கு கட்சியினுடைய கட்டுப்பாட்டை மீறி ஆதரவு வழங்கி, யாழ்.மாநகர சபையில் ஆதரவு வழங்கிய 6 உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை மிகவும் விரைவில் எடுக்கப்படும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பைசர் கொரோனா தடுப்பு மருந்து – முதன்முறையாக அவசரகால பயன்பாட்டுக்கு உலக சுகாதார அமைப்பு அனுமதி !

கொரோனா வைரசுக்கு எதிரான பைசர் தடுப்பு மருந்துகளை அவசரகால பயன்பாட்டுக்கு உபயோகப்படுத்தி கொள்ள உலக சுகாதார அமைப்பு அனுமதி அளித்துள்ளது.

சீனாவின் வுகான் நகரில் கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் இறுதியில் முதன்முறையாக கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இதன்பின் உலக நாடுகளுக்கு பாதிப்புகள் பரவின. இவற்றில் அமெரிக்கா அதிக அளவில் பாதிப்புகளை சந்தித்து வருகிறது.

கொரோனா பாதிப்பு பெருந்தொற்று என கடந்த 2020ம் ஆண்டு மார்ச் மாதத்தில் உலக சுகாதார அமைப்பு அறிவிப்பு வெளியிட்டது. பல்வேறு நாடுகளிலும் கொரோனா வைரசால் பெரும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ள சூழலில் அதற்கான தடுப்பு மருந்துகளை கண்டறியும் பணியும் நடந்தன.

இவற்றின் ஒரு பகுதியாக, பைசர், பாரத் பயோன்டெக் உள்ளிட்ட நிறுவனங்கள் கொரோனா தடுப்பு மருந்துகளை கண்டறியும் பணியில் பலகட்ட பரிசோதனைகளில் வெற்றி பெற்றுள்ளோம் என கூறியுள்ளன. இதையடுத்து அவற்றை தன்னார்வலர்களுக்கு பரிசோதனை செய்யும் முயற்சிகளும் நடந்து வருகின்றன. இதில் வெற்றி பெறும் நிலையில் டாக்டர்கள், சுகாதார பணியாளர்கள், மூத்த குடிமக்கள் உள்ளிட்டோருக்கு முதற்கட்ட தடுப்பு மருந்துகளை வழங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.

இந்நிலையில், உலக சுகாதார அமைப்பு வெளியிட்டு உள்ள செய்தியொன்றில், பைசர் மற்றும் பயோன்டெக் தடுப்பு மருந்துகளை அவசரகால பயன்பாட்டுக்கு உபயோகப்படுத்தி கொள்ள அனுமதி வழங்கப்படுகிறது என தெரிவித்துள்ளது.
உலக சுகாதார அமைப்பின் இந்த முடிவால், பைசர் மற்றும் பயோன்டெக் தடுப்பு மருந்துகள் முதன்முறையாக அவசரகால பயன்பாட்டுக்கான அனுமதியை பெற்றுள்ளன.

இதனால் உலகம் முழுவதும் உள்ள பல்வேறு நாடுகளும் உடனடியாக இவற்றுக்கு ஒப்புதல் வழங்கி தடுப்பு மருந்துகளை தேவையான அளவுக்கு இறக்குமதி செய்து கொள்ள முடியும். நாட்டில் தேவையான பகுதிகளுக்கு அவற்றை வினியோகித்து கொள்ளவும் முடியும்.

“எமது எதிர்கால தலைமுறையினரின் எதிர்காலத்திற்காகவே இன்று நாம் இத்தாய்நாட்டிற்காக கடினமாக உழைத்து எம்மை அர்ப்பணித்து வருகின்றோம்” – புத்தாண்டு வாழ்த்துச்செய்தியில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ !

“எமது எதிர்கால தலைமுறையினரின் எதிர்காலத்திற்காகவே இன்று நாம் இத்தாய்நாட்டிற்காக கடினமாக உழைத்து எம்மை அர்ப்பணித்து வருகின்றோம்” என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

2021 புத்தாண்டு தினத்தை முன்னிட்டு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த வாழ்த்துச் செய்தியில் மஹிந்த ராஜபக்ஷ மேலும் கூறியுள்ளதாவது,

“பாதுகாப்பான தேசத்திற்காக எமது தாய்நாட்டின் எதிர்காலம் குறித்து மக்கள் எம் மீது கொண்ட நம்பிக்கையை அன்புடன் நினைவுகூருகின்றோம். புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்து மிகக் குறுகிய காலமே ஆன போதிலும், அக்காலப்பகுதியை மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றுவதற்காக செலவிடக்கூடியதாக அமைந்தமை குறித்து பெருமை கொள்கின்றோம்.

ஐந்து வருட காலமாக தடைப்பட்டிருந்த நாட்டின் மனிதவள மற்றும் பௌதீக அபிவிருத்தி செயற்பாடுகளை மீண்டும் உயிர்ப்பிப்பதற்கு எமக்கு முடியுமானதாயிற்று. மக்களுக்கு அதனை கண்டு மகிழ்ச்சியடைய முடியும். கொவிட்-19 வைரஸின் சவாலுக்கு உலக நாடுகள் போன்றே நாமும் முகங்கொடுத்து வருகின்றோம்.

வைரஸின் தாக்கத்தை குறைப்பதற்கு வைத்தியர்கள் உள்ளிட்ட சுகாதார ஊழியர்கள், முப்படையினர், பொலிஸார், பாதுகாப்புப் படையினர், அரச அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் 24 மணி நேர அர்ப்பணிப்பு மிகுந்த சேவை அளப்பரியது. கொவிட்-19 தொற்று காரணமாக மக்கள் மீது சுமைகள் சுமத்தப்படாதிருக்கும் வகையில் உச்ச தலையீட்டுடன் அரசாங்கம் பங்களிப்பு செலுத்தி வருகிறது.சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றும் ஒழுக்கம் மிகுந்த பொதுமக்களின், அரசாங்கத்திற்கான ஆதரவும் அளப்பரியதாகும்.

நாடு எதிர்கொண்டுள்ள இந்த சவால்களை மலர்ந்துள்ள புத்தாண்டில் நாம் ஒன்றிணைந்து வெற்றிக்கொள்ள முடியும். உள்ளூர் உற்பத்திகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் அரச பொருளாதார கொள்கை திட்டத்தினூடாக நாட்டிற்குள் புதிய பொருளாதார மற்றும் அபிவிருத்தி புரட்சி ஏற்படும் என்பது உறுதி. அதன் மூலம் உங்களதும், நாட்டினதும் எதிர்காலம் சாதகமான முறையில் வளர்ச்சியடையும் ஒரு சுபீட்சமான தேசம் உருவாகும். மிகக் குறுகிய விடயங்கள் காரணமாக நாம் இனிமேலும் வேறுபாடுகளுடன் காணப்படக் கூடாது.

எமது எதிர்கால தலைமுறையினரின் எதிர்காலத்திற்காகவே இன்று நாம் இத்தாய்நாட்டிற்காக கடினமாக உழைத்து எம்மை அர்ப்பணித்து வருகின்றோம். எனவே சமூக கலாசார மற்றும் மத சகவாழ்வுடன் செயற்படுவதன் மூலம் இலங்கையர்கள் என்ற ரீதியில் ஒன்றிணைந்து நாட்டை கட்டியெழுப்புவதற்கு மலர்ந்துள்ள இப்புத்தாண்டை ஒரு வாய்ப்பாக்கிக் கொள்ளுமாறு அனைவரிடமும் கேட்டுக்கொள்கின்றோம்.

மலர்ந்துள்ள இவ்வருடம் அனைவருக்கும் சபீட்சம் மிகுந்த புத்தாண்டாக அமைய பிரார்த்திக்கின்றேன்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மாநகர முதல்வருக்கான சொகுசு ரக வாகனத்தினை ஏற்க மறுத்த யாழ்.மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் !

யாழ்.மாநகர முதல்வராக தெரிவாகியுள்ள சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணிடம் மாநகர முதல்வருக்கான சொகுசு ரக வாகனத்தினை மாநகர ஆணையாளர் கையளித்த நிலையில் அதனை ஏற்க மறுத்த மணிவண்ணன் தனது சொந்த வாகனத்தையே பயன்படுத்தப்போவதாகத் தெரிவித்துள்ளார்.

முன்னதாக தனது சம்பளத்தினைப் பெற்றுக்கொள்ளப்போவதில்லை என்றும் தனக்கான சம்பளத்தினை மக்களின் பொது நலத் திட்டங்களுக்கே பயன்படுத்தப்போவதாகவும் அறிவித்திருந்த யாழ் மாநகர முதல்வர் மணிவண்ணன் தற்போது முதல்வருக்கான சொகுசு ரக வாகனத்தினையும் தான் பயன்படுத்தப்போவதில்லை என அறிவித்துள்ளார்.

மணிவண்ணனுக்கு முன்னர் யாழ்.மாநகர முதல்வராகப் பதவி வகித்த இம்மானுவேல் ஆர்னோல்ட் தனக்கு அதி சொகுசு ரக வாகனமே வேண்டும் என  வடக்கு மாகாண முன்னாள் முதல்வர் பயன்பத்திய சொகுசுரக வாகனத்தை கோரிப் பெற்றுப் பயன்படுத்தியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

“சிறுபான்மை சமூகங்களின் உணர்வுகள் புண்படும்போது   நாட்டை அபிவிருத்தி செய்ய முடியாது. முஸ்லீம்களுக்கான உரிமைகள் வழங்கப்பட வேண்டும்” -முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன

“சிறுபான்மை சமூகங்களின் உணர்வுகள் புண்படும்போது   நாட்டை அபிவிருத்தி செய்ய முடியாது. முஸ்லீம்களுக்கான உரிமைகள் வழங்கப்பட வேண்டும்” என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

கொவிட் சடலங்கள் எரிக்கப்படுவது  தொடர்பில் தனது நிலைப்பாட்டை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன  The Hindu” பத்திரிக்கைக்கு வழங்கிய செவ்வியின் போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இதன் போது அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

“கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழக்கும் தமது உறவினர்களை அடக்கம் செய்யும் உரிமையை முஸ்லிம்களுக்கு வழங்க வேண்டும். உலக சுகாதார ஸ்தாபனம் அடக்கம் செய்ய முடியும் என கூறுகிறது. முன்னாள் சுகாதார அமைச்சர் என்ற வகையில் நான் உலக சுகாதார அமைப்புடன் உடன்படுகிறேன்.

சிறுபான்மை சமூகங்களின் உணர்வுகள் புண்படும்போது   நாட்டை அபிவிருத்தி செய்ய முடியாது. ஜனநாயகம் மற்றும் பொருளாதார வளர்ச்சி ஆகியவை இந்த நாட்டில் உள்ள அனைத்து இனத்தவர்களும் சமமாகப் பகிரப்படுவதை நாம் உறுதி செய்ய வேண்டும்” எனவும் குறிப்பிட்டுள்ளார்.

“ஐக்கிய கூட்டணி 2021 பலப்படுத்தப்படும்.இந்தக் கூட்டணியில் எமது கொள்கையுடன் ஒத்துப்போகக்கூடியவர்கள் இணையலாம். அதற்கான அழைப்பை விடுக்கின்றோம்” – ரஞ்சித் மத்தும பண்டார

“ஐக்கிய கூட்டணி 2021 பலப்படுத்தப்படும்.இந்தக் கூட்டணியில் எமது கொள்கையுடன் ஒத்துப்போகக்கூடியவர்கள் இணையலாம். அதற்கான அழைப்பை விடுக்கின்றோம்” என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.

43ஆம் படையணி எனும் பெயரில் புதியதொரு அரசியல் இயக்கத்தைக் கட்டியெழுப்புவதற்குச் சம்பிக்க ரணவக்கவால் முன்னெடுக்கப்படும் நடவடிக்கை தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

ஜனநாயக அம்சங்களை அடிப்படையாகக்கொண்டு ஐக்கிய மக்கள் சக்தியின் யாப்பு தயாரிக்கப்பட்டுள்ளது. 2021ஆம் ஆண்டில் கட்சி பலப்படுத்தப்படும். அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. ஐக்கிய கூட்டணி அமைக்கப்படும். இந்தக் கூட்டணியில் எமது கொள்கையுடன் ஒத்துப்போகக்கூடியவர்கள் இணையலாம். அதற்கான அழைப்பை விடுக்கின்றோம்.

சம்பிக்க ரணவக்க ஐக்கிய மக்கள் சக்தியில் இணையவுள்ளார். 43ஆம் அரசியல் இயக்கம் பற்றி எமக்குத் தெரியப்படுத்தப்பட்டுள்ளது. அரசுக்கு எதிராகப் பல வழிகளிலும் தாக்குதல்களைத் தொடுக்க வேண்டும். அதற்காக அணிகள் இருப்பது சிறப்பு.

எது எப்படியிருந்தாலும் ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் கூட்டணியின் தலைவராக சஜித் பிரேமதாஸவே செயற்படுவார். அவ்வாறு தலைவர் பதவியை வகிப்பவரே ஜனாதிபதி வேட்பாளராகப் போட்டியிடுவார். பொது வேட்பாளராக மாற்று கட்சி வேட்பாளர்களை நிறுத்துவதற்கு வாய்ப்பு வழங்கப்படாது. அவ்வாறு வழங்கி கட்சிக்கும், ஆதரவாளர்களுக்கும் ஏற்பட்ட அநீதிகள் தொடர்பான படிப்பினை எமக்கு இருக்கின்றது” என்று குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் அரசியல் கைதிகளை கருணை அருப்படையிலாவது விடுவிக்குமாறு கோரும் கருணை மனுவிற்கு ஆதரவுகோரி காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் சர்வமத தலைவர்களை சந்திப்பு !

தமிழ் அரசியல் கைதிகளை கருணை அருப்படையிலாவது விடுவிக்குமாறு கோரும் கருணை மனுவிற்கு ஆதரவுகோரி யாழ் மாவட்டத்திலுள்ள சர்வமதத் தலைவர்களுடன் அரசியல் கைதிகளின் உறவுகள் இன்று சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

ஒன்றுபட்டு தமிழ் அரசியல் கைதிகளை சிறைமீட்க வலியுறுத்தி அரசியல் கட்சி தலைவர்களையும் ஆன்மீகத் தரப்பினரையும் தமிழ் அரசியல் கைதிகளின் உறவுகள் கடந்த நாட்களில் தொடர்ச்சியாக நேரில் சந்தித்து வலியுறுத்தி வருகின்றனர்.

தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டு வரும் குரலற்றவர்களின் குரல் அமைப்பின் ஏற்பாட்டில் நேற்று (31.12.2020) வியாழக்கிழமை சர்வமத் தலைவர்களுடன் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

சிறைச்சலைகளுக்குள் தொற்றா நோய்களினால் பீடிக்கப்பட்டு பாதிக்கப்பட்டுள்ளதுடன், உடல் அளவிலும் மனதளவிலும் பலவீனப்பட்ட நிலையில் காணப்படும் தமது உறவுகளை தற்போதைய கொரோனா தொற்றும் தாக்கியுள்ளதை அறிந்து மீளாத்துயருற்றிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளின் உறவுகள் அவர்களது விடுதலைக்காக பல்வேறு தரப்புகளை சந்தித்து அதரவு கோரிவருகின்றனர்.

அந்தவகையில் தமிழ் அரசியல் கைதிகளை கருணை அடிப்படையில் விடுவிக்க கோரி தமிழ் அரசியல் கைதிகளின் உறவுகள் சார்பில், இலங்கை அரச தரப்பிற்கு கருணை மனுவொன்றை கையளிக்க குரலற்றவர்களின் குரல் அமைப்பு ஏற்பாடுகளைச் செய்து வருகிறது.

குறித்த கருணைமனுவில் கையொப்பமிட்டு ஆதவினை வழங்கி தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்கு வலுச்சேர்க்குமாறு கோரி யாழ் மாவட்டத்திலுள்ள சர்வமதத் தலைவர்களுடன் அரசியல் கைதிகளின் உறவுகள் இன்று சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

யாழ். நாக விகாரை விகாராதிபதி விமல தேரர், அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபையின் யாழ்ப்பாணம்-கிளிநொச்சி மாவட்ட தலைவர் மௌலவி என்.எம். இர்பான், செயலாளர் மௌலவி ஏ.எம். றலீம் உள்ளிட்டவர்களுடன் நேரில் சந்தித்துள்ளனர்.

அதேபோன்று, மானிப்பாய் யாத்திர ஸ்தல பங்குத்தந்தை அருட்பணி ரெக்ஸ்சவுந்திரா அவர்களையும் நேரில் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க தமிழ் அரசியல் தரப்பினர் ஒருபக்கம் முயற்சிகளை மேற்கொண்டு வரும் நிலையில், அதனை வலுப்படுத்தும் வகையிலான முயற்சிகளில் குரலற்றவர்களின் குரல் அமைப்பின் ஏற்பாட்டில் தமிழ் அரசியல் கைதிகளின் உறவுகள் தொடர்ந்தும் ஈடுபட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

தேசத்தின் வாசகர்கள் அனைவருக்கும் இனிய ஆங்கிலப்புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் !

நீண்ட காலமாக இயங்கி வந்த எம்முடைய தளம் சில காலங்கள் இயங்கு நிலையை இழந்து விட்டது. எனினும் மீண்டும் தன்னுடைய ஊடக பணியை ஆரம்பித்துள்ளது தேசம் நெற்.

மீள ஆரம்பித்த காலம் முதல் எங்களுக்கான ஆதரவுகளை தந்து கொண்டிருக்கும் எம்முடைய வாசகர்கள் அனைவருக்கும் தேசத்தின் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்..!

இந்த வருடம் உங்களுக்கான நல் ஆண்டாக அமைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றோம்..!