February

February

“காணாமலாக்கப்பட்ட பிள்ளைகளை காட்டினாலேயே ஜனாதிபதியுடன் பேச்சு” – உறவுகள் திட்டவட்டம்! 

துண்டுப்பிரசுரம் ஒன்றில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால ஸ்ரீசேனாவிற்கு அருகில் இருந்த நான்கு தமிழ் சிறுமிகளை எங்களுக்குக் காட்டினால் ஜனாதிபதி கோட்டபாயவுடன் பேசுவது தொடர்பாக சிந்திப்போம் என்று வவுனியாவில் தொடர் போராட்டம் மேற்கொள்ளும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிவித்தனர்.

ஜனாதிபதி கோட்டபாய காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களுடன் கலந்துரையாடல் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாக வெளிவந்துள்ள தகவல் தொடர்பாக பதிலளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்தனர்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்கள்,

குறைந்த பட்சம் கடந்த ஏழு தசாப்தங்களாக இலங்கை அரசாங்கத்துடன் பேசி ஏமாற்றமடைந்த வரலாறு எங்களுக்கு இருக்கிறது. கடைசியாக 2017 ஆம் ஆண்டில் இலங்கை அரசாங்கத்துடன் அலரி மாளிகையில் சந்தித்தோம். அப்போதும் நாங்கள் ஏமாற்றப்பட்டோம்.

குறித்த நான்கு சிறுமிகளில் ஒருவர் ஜெயவனிதாவின் மகள்.ஜனாதிபதி அந்தபிள்ளைகளை காட்டினால், எங்களுடன் பேசுவதற்கான அவரது அழைப்பை நாங்கள் ஏற்றுக்கொள்ளுவோம் . அவரது மகளைக் காண்பிப்பதன் மூலம் ஜனாதிபதி எங்களுக்கு உண்மையான முன்னேற்றத்தைக் காட்ட வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்.

கிளிநொச்சி மாவட்ட காணாமல் ஆக்கப்பட்ட சங்கத்தின் செயலாளர் லீலாவதி அம்மாவின் அறிக்கைகள் ஆட்சி மாற்றத்தின் தேவையை உருவாக்கிறது. ஆட்சி மாற்றம் என்பது தமிழர்களுக்கு ஒரு தீர்வு அல்ல. அத்துடன் காணாமல் ஆக்கப்பட்ட எங்கள் குழந்தைகளிற்கு இராணுவம் பொறுப்பல்ல என்று அவர் ஒரு ஊடகத்திற்கு கருத்து தெரிவித்துள்ளார். இந்த நேரத்தில் அவரது இப்படியான கருத்துக்கள் வருத்தமளிக்கின்றது. எமது குழந்தைகளை இராணுவம் அழைத்து சென்றதுதான் உண்மை. எனவே எமது பிள்ளைகளை அழைத்துச்சென்ற இராணுவம் விசாரிக்கப்பட வேண்டும்.

இலங்கையுடன் புதிய அரசியலமைப்பு பற்றி பேச வேண்டாம் என்று தமிழ் அரசியல்வாதியிடம் கேட்க விரும்புகிறோம். கனடா மற்றும் அமெரிக்காவை சேர்ந்த வல்லுநர்கள் இங்கு வந்து தமிழர்களை ஒடுக்கு முறையிலிருந்து பாதுகாக்ககூடிய அரசியலமைப்பு எது என்பதைக் கண்டுபிடிக்க வேண்டும். என்றனர்.

“ஜெனீவாவில் முஸ்லீம் நாடுகளுடைய ஆதரவை பெறவே அரசு ஜனசாக்கள் எரிப்பதை நிறுத்தியுள்ளது”- காலம் கடந்த ஞானம் என்கிறார் எம்.ஏ.சுமந்திரன்! 

“ஜெனீவாவில் முஸ்லீம் நாடுகளுடைய ஆதரவை பெறவே அரசு ஜனசாக்கள் எரிப்பதை நிறுத்ததியுள்ளது” என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமாகிய எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

இன்று[26.02.2021] வவுனியாவில் இடம்பெற்ற சர்வமதத் தலைவர்கள் மற்றும் தமிழ்த் தேசியம் சார்ந்த கட்சிகளின் பிரதிநிதிகளுடனான சர்வதேச நகர்வும் தமிழ் தேசிய ஒற்றுமைைகுறித்து இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

இன்றைய காலகட்டத்திலே தமிழ் மக்களின் அரசியல் ஒற்றுமை இன்றியமையாதது என்கின்ற கருத்தை நாங்கள் அனைவரும் ஏற்றுக் கொள்கின்றோம்.

மதத் தலைவர்களும் அதனை வலியுறுத்தியிருக்கின்றார்கள். இந்த ஒற்றுமையயை நாங்கள் எவ்வாறு தீவிரமாக முன்நகர்த்துவது என்பது பற்றி ஒன்று சேர்ந்திருக்கின்ற கட்சிகளின் அவற்றின் தீர்மானம் எடுக்கின்ற கூட்டங்களிலே பேசி தீர்மானங்களை எடுத்து வெகு விரைவிலே ஒரு கட்டமைப்பாக நாங்கள் முன்னேறுவது குறித்து நடவடிக்கை எடுப்போம்.

நேற்யை தினம் இலங்கை சம்மந்தமான விவாதத்தின் போது பல்வேறு நாடுகள் தங்கள் கருத்துகளைத் தெரிவித்திருக்கின்றார்கள். தென்பகுதிகளில் வருகின்ற பத்திரிகைகளைப் பார்த்தால் 21 நாடுகள் இலங்கைக்கு ஆதரவாகப் பேசியதாகச் சொல்லியிருக்கின்றார்கள்.

20 நாடுகளை என்னால் கணக்கிட முடிந்தது. ஆனால், அதிலே 10 நாடுகள் தான் வாக்குரிமை பெற்ற நாடுகள். எனவே 47 நாடுகளில் 10 நாடுகள்தான் இலங்கைக்குச் சார்பாகப் பேசியிருக்கின்றன. ஆனால் பல நாடுகள் நடுநிலைமை பேணக் கூடும் என்கின்ற ஒரு நிலைப்பாடு இன்று காணப்படுகின்றது.

எனவே இந்தத் தீர்மானத்தை நிறைவேற்றுவது சம்மந்தமாக இந்த இணை அனுசரணை நாடுகள் முயற்சிகளை எடுத்திருக்கின்றார்கள். அதை நீர்த்துப் போகப் பண்ணுவதற்காகத் தான் இந்த நாடுகளின் கருத்துக்களைச் செவிமடுத்த பின்னர் தான் கட்டாய ஜனாசா எரிப்பினை நீக்கியிருக்கின்றது இந்த அரசு.

அவர்களுடைய எண்ணம் அப்படிச் செய்தால் முஸ்லீம் நாடுகளை அந்தப் பிரேரணைக்கு வக்களிக்காமல் செய்யப் பண்ணலாம் என்ற நப்பாசையில் தான் இதனைச் செய்திருக்கின்றார்கள்.

ஆனால் இரண்டு நாட்களுக்கு முன்னர் முஸ்லீம் நாடுகளினுடைய அமைப்பின் பொதுச் செயலாளர் மிகத் தெளிவான அறிக்கையினை வெளியிட்டுள்ளார். எனவே இஸ்லாமிய நாடுகள் தங்கள் நிலைப்பாட்டைமாற்ற மாட்டார்கள் என்று நம்புகின்றோம். ஜெனீவாவிலே அவர்களின் வாக்குகளை மழுங்கடிப்பதற்காக இலங்கை அரசாங்கம் இறுதி நேரத்திலே செய்திருக்கின்ற முடிவு அவர்களது முடிவை மாற்றாது என்று நாங்கள் நம்புகின்றோம்.

அடுத்த விடயமாக காணாமல் போன உறவுகளுடன் ஜனாதிபதி பேச இருக்கின்றார் என்று சொல்லி சில நாடுகளினுடைய ஆதங்கத்தைக் குறைப்பதற்காக கடைசி நேரத்திலே காலம் கடந்த ஞானமாக இலங்கை அரசாங்கம் ஓடித்திரிகின்றது என்றுதான் சொல்ல வேண்டும்.

எனவே தமிழ்த் தேசியம் சார்ந்த கட்சிகள் அடுத்த கட்டமாக நாங்கள் எவ்வாறு முன்நகர்த்த வேண்டும் என்ற விடயத்தை ஒவ்வொரு கட்சிகளும் தங்கள் தங்கள் கூட்டங்களில் தீர்மானித்ததன் பிறகு அந்த யோசனைகளை ஒன்று சேர்ந்து இறுதித் தீர்மானங்களை மேற்கொள்வோம்.

தமிழ்த் தேசியப் பேரவை என்பது எவ்வித தேர்தல் நோக்கத்திற்காகவும் உருவாக்கப்படவில்லை. இது தேர்தல் கட்டமைப்பே கிடையாது. இது இன்றைக்கு எற்பட்டிருக்கின்ற தமிழ் மக்களுக்கான ஒரு அத்தியாவசியத் தேவை. அதைப் பொறுப்போடு நாங்கள் அணுக வேண்டுமாக இருந்தால் தமிழ்த் தேசியப் பரப்பில் உள்ள அனைவரும் ஒன்றாகச் செயற்பட வேண்டும். அவ்வாறு செயற்படுவதற்குத் தேவையான ஒரு கட்டமைப்பே இது என்று தெரிவித்தார்.

முஸ்லிம் மக்களின் ஜனாசா நல்லடக்கத்திற்கு அனுமதித்து வர்த்தமானி வெளியீடு! 

கொரோனா வைரஸின் தாக்கத்திற்குட்பட்டு இறந்த முஸ்லிம் மக்களின் ஜனாசா நல்லடக்கத்திற்கு அனுமதித்து வர்த்தமானி அறிவித்தலை அரசாங்கம் வெளியிட்டுள்ளது.

இலங்கையில் கொரோனா மரணங்கள் அதிகரித்த காலத்தில் இருந்து கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களுடைய சடலங்களை புதைக்க அனுமதி வழங்குமாறு முஸ்லீம்கள் கோரிக்கை விடுத்து வந்த நிலையில் அரசு அதனை மறுத்தே வந்தது.

இந்நிலையில் இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் – இந்தியா அசத்தலான வெற்றி! 

இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
நாணயச்சுழற்சியில் வென்று துடுப்பெடுத்தாட தேர்வு செய்த இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 112 ஓட்டங்களில் சுருண்டது. அக்சார் பட்டேல் 6 இலக்குகளை சாய்த்தார். இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர் கிராலி 53 ஓட்டங்கள் சேர்த்தார்.
பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா 145 ஓட்டங்களில் சுருண்டது. ரோகித் சர்மா 66 ஓட்டங்கள் அடித்தார். இங்கிலாந்து அணி தரப்பில் ஜோ ரூட் 5 இலக்குகளையும், ஜேக் லீச் 4 இலக்குகளையும் வீழ்த்தினர்.
பின்னர் 33 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் இங்கிலாந்து 2-வது இன்னிங்சை தொடங்கியது. முதல் ஓவரிலேயே அக்சார் பட்டேல் க்ராலி, பேர்ஸ்டோவ் ஆகிய இருவரையும் டக்அவுட்டில் வெளியேற்றினார்.
அதன்பின் அக்சார் பட்டேல், அஷ்வின் சுழலில் இங்கிலாந்து 81 ஓட்டங்களில் சுருண்டது. அக்சார் பட்டேல் 5 இலக்குகளையும், அஷ்வின் 4 இலக்குகளையும், வாஷிங்டன் சுந்தர் 1 இலக்கையும் வீழ்த்தினர்.
81 ஓட்டங்களுக்குள் இங்கிலாந்து சுருண்டதால் 48 ஓட்டங்கள் மட்டுமே முன்னிலைப் பெற்றது. இதனால் 49 ஓட்டங்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா 2-வது இன்னிங்சை தொடங்கியது.
தொடக்க வீரர்களாக களம் இறங்கிய ரோகித் சர்மா, ஷுப்மான் கில் ஆகியோர் அதிரடியாக விளையாடி ஓட்டங்கள் விளாசினர். இதனால் 7.4 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 49 ஓட்டங்கள் எடுத்து இந்தியா 10 இலக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றி மூலம் இந்தியா 4 போட்டிகள் கொண்ட தொடரில் 2-1 என முன்னிலைப் பெற்றுள்ளது.
அக்சார் பட்டேல் முதல் இன்னிங்சில் 6, 2-வது இன்னிங்சில் 5 என 11 இலக்குகள் சாய்த்தார். அஷ்வின் முதல் இன்னிங்சில் 3 2-வது இன்னிங்சில் 4 இலக்குகள் என 7 இலக்குகள் சாய்த்தார்.

அமெரிக்காவில் குடியேறுவதற்கான இறுக்கமான ட்ரம்பின் கொள்கைகளை நீக்கி தளர்வான கொள்கைகளை கொண்டு வந்த பைடன்! 

அமெரிக்காவில் பணி நிமித்தமாக குடியேறும் வெளிநாட்டவர்கள் அந்த நாட்டு குடியுரிமையை பெறுவதற்காக விண்ணப்பித்து தேர்வு எழுத வேண்டும். விண்ணப்பதாரர்கள் அமெரிக்காவின் வரலாறு, கொள்கைகள் மற்றும் அரசாங்கத்தின் அடிப்படைகள் பற்றிய தங்களின் அறிவையும் புரிதலையும் நிரூபிக்க இந்த தேர்தல் நடத்தப்படுகிறது.

இந்த நிலையில், முன்னாள் ஜனாதிபதி டிரம்ப் தலைமையிலான நிர்வாகம், வெளிநாட்டவர்கள் அமெரிக்காவில் குடியேறுவதை குறைக்க குடியுரிமை தேர்வு முறைகளை கடுமையாக்கியது. 2008-ம் ஆண்டில் நடைமுறைப்படுத்தப்பட்ட தேர்வு முறைகளை மாற்றியது.‌ அதாவது தேர்வில் 100 கேள்விகள் என்று இருந்ததை 128 கேள்விகளாக உயர்த்தியது. இந்த கேள்விகள் பெரும்பாலும் அரசியல் ரீதியிலானதாகவும் கடுமையாகவும் இருந்தன.இந்த விதிமுறைகள் 2020 டிசம்பர் 1-க்கு பிறகு குடியுரிமை கோரி விண்ணப்பிப்பவர்களுக்கு பொருந்தும் என டிரம்ப் நிர்வாகம் உத்தரவிட்டது.

இந்த நிலையில் அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள ஜோ பைடன் முன்னாள் ஜனாதிபதி டிரம்ப் நிர்வாகத்தால் கொண்டுவரப்பட்ட சர்ச்சைக்குரிய திட்டங்கள் மற்றும் கொள்கைகளை அதிரடியாக மாற்றியமைத்து வருகிறார். அந்தவகையில் குடியுரிமை தேர்வில் முந்தைய நிர்வாகத்தால் கொண்டுவரப்பட்ட கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவதாக ஜோ பைடன் அறிவித்துள்ளார்.

அதன்படி இனி 2008-ம் ஆண்டில் நடைமுறைப்படுத்தப்பட்ட தேர்வு முறைகள் மீண்டும் தொடரும் எனவும் இது மார்ச் 1-ந்தேதி முதல் அமலுக்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் அதிக அளவில் குடியுரிமை பெறும் வெளிநாட்டவர்களில் இந்தியர்கள் 2-வது இடத்தில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

தனிமையால் ஏற்படும் தற்கொலைகளை தடுக்க தனியான அமைச்சு ஒன்றினை உருவாக்கிய ஜப்பான்! 

ஜப்பானில் அண்மை காலமாக தற்கொலைகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. அதிலும் குறிப்பாக கொரோனா வைரஸ் பரவ தொடங்கியது பிறகு கடந்த ஆண்டு மட்டும் 11 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அங்கு தற்கொலைகள் அதிகரித்துள்ளன.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம், அங்கு 2,153 பேர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். இது அந்த மாதத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரழந்தவர்களை விட அதிகம் ஆகும். ஜப்பானைப் பொறுத்தவரையில் தனிமையாக உணருபவர்களே அதிகமாக தற்கொலை செய்துகொள்வதாக கூறப்படுகிறது. அதிலும் குறிப்பாக பெண்களே அதிகமாக தனிமையால் பாதிக்கப்பட்டு தற்கொலை செய்து கொள்வதாக புள்ளிவிவரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த விவகாரம் தொடர்பாக ஜப்பான் அரசு மீது விமர்சனங்கள் எழுந்த நிலையில் மக்களின் தனிமையைப் போக்குவதற்காக தனிமை எனும் அமைச்சகத்தை அமைத்து அதன் மந்திரியாக டெட்சுஷி சாகாமோட்டோ என்பவரை பிரதமர் யோஷிஹைட் சுகா நியமித்துள்ளார். தனிமை மந்திரியாக நியமிக்கப்பட்டுள்ள இவர், குடிமக்களின் தனிமையையும், சமூகத்தில் தனித்திருக்கும் நிலையையும் குறைக்க நடவடிக்கை எடுப்பார். டெட்சுஷி சாகாமோட்டோ, ஏற்கனவே ஜப்பானில் குறைந்து வரும் குழந்தை பிறப்பு விகிதத்தை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து டெட்சுஷி சாகாமோட்டோ கூறுகையில், “சமூக தனிமை மற்றும் தனிமைப்படுத்தப்படுவதைத் தடுப்பதற்கும் மக்களுக்கிடையிலான உறவுகளைப் பாதுகாப்பதற்கும் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்” என்றார்.

2017-ம் ஆண்டு, இங்கிலாந்து நாட்டில், 90 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தாங்கள் எப்போதும் தனிமையை உணர்வதாக கூறியதையடுத்து, 2018-ம் ஆண்டில் தனிமை மந்திரியை இங்கிலாந்து அரசு முதல் முறையாக நியமித்தது குறிப்பிடத்தக்கது. தற்போது, ஜப்பானை தொடர்ந்து ஆஸ்திரேலியாவும் தனிமை மந்திரியை நியமிப்பது குறித்து பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது.‌

ஜெனீவா கூட்டத்தொடரில் பங்கேற்கவுள்ள காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்களிடம் பயங்கரவாததடுப்பு பிரிவு விசாரணை! 

இலங்கையில் யுத்தம் நடந்த காலத்தில் காணாமல் ஆக்கப்பட்டோரை தேடி, அவர்களின் உறவினர்கள் முன்னெடுத்து வரும் போராட்டத்தில் பங்கெடுப்போரிடம் பயங்கரவாத தடுப்பு பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காணப்படும் நிலையிலேயே, ஜெனீவா அமர்வு நடத்தப்பட்டு வருகிறது.

முந்தைய ஆண்டுகளைப் போலவே இம்முறையும் இலங்கை யுத்த விவகாரம், ஜெனீவா அமர்வில் முக்கிய விவாதமாகியிருக்கிறது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, இந்த அமர்வில் பங்கேற்பதற்காக இலங்கை மத்திய அரசாங்க தரப்போ தமிழர் தரப்போ இம்முறை செல்லவில்லை. எனினும், காணொளி காட்சி வழியாக ஜெனீவா அமர்வுகளில் இந்த இரண்டு தரப்பினரும் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த நிலையில், ஜெனீவா மனித உரிமை பேரவை கூட்டத் தொடரில் தமது குரலை மௌனிக்க செய்வதற்கு இலங்கை அரசாங்கம் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக வடக்கு, கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகளின் சங்கத்தின் செயலாளர் லீலாதேசி ஆனந்த நடராஜா தெரிவித்தார்.

இதன் ஒரு கட்டமாக தான் பயங்கரவாதத் தடுப்பு பிரிவினரால் புதன்கிழமை (பிப்ரவரி 24) முதல் முறையாக விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

கிளிநொச்சி பயங்கரவாதத் தடுப்பு பிரிவின் அலுவலகத்தில் வைத்து, கொழும்பு பயங்கரவாதத் தடுப்பு பிரிவு அலுவலக அதிகாரிகளால் தான் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதாகவும் அவர் கூறினார்.

தனது வங்கிக் கணக்கு விவரங்கள், போராட்டங்கள் நடத்தப்படுவதற்கான காரணங்கள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

அத்துடன், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை ஊக்குவிப்பதற்கான செயற்பாடுகளை முன்னெடுக்கின்றீர்களா என்ற கோணத்திலும் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் தன்னிடம் விசாரணை நடத்தியதாக அவர் கூறினார்.

தன்னைப்பற்றிய அனைத்து தகவல்களையும் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் வைத்திருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார். வெளிநாடுகளில் இருந்து தனது வங்கிக் கணக்குக்கு வரும் பணம் தொடர்பிலும் தன்னிடம் விசாரணை நடத்தப்பட்டதாக கூறிய அவர், அந்த பணம், பிரித்தானியாவிலுள்ள தனது மகனால் அனுப்பப்படும் பணம் என தான் பதிலளித்ததாகவும் லீலாதேசி ஆனந்த நடராஜா தெரிவித்தார்.

போராட்டம் நடத்துவதற்கு வெளிநாடுகளிலிருந்து பணம் கிடைக்கிறதா என பயங்கரவாதத் தடுப்பு பிரிவினர் வினவியதற்கு, தான் “இல்லை” என பதிலளித்ததாகவும் அவர் கூறினார்.

இலங்கை ராணுவத்திற்கு எதிராக முறைப்பாடுகளை செய்தீர்களா என தன்னிடம் ஒரு அதிகாரி விசாரணை செய்ததாக அவர் குறிப்பிட்டார்.

தான் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் ராணுவத்திற்கு எதிராக முறைப்பாடு செய்யவில்லை எனவும், அரசாங்கத்தின் மீதே தாம் கோபம் கொண்டுள்ளதாகவும் லீலாதேசி ஆனந்த நடராஜா தெரிவித்தார்.

இதேவேளை, 2010ஆம் ஆண்டில் ஜெனீவா அமர்வுகளில் கலந்து கொண்டீர்களா என பயங்கரவாத தடுப்புப் பிரிவின் அதிகாரிகள் தன்னிடம் கேட்டதற்கு, 2010ஆம் ஆண்டில் நடந்த ஜெனீவா அமர்வுகளுக்கு செல்லவில்லை எனவும், 2018ம் ஆண்டு ஜெனீவா அமர்வுகளிலேயே தான் முதல் முறையாக கலந்து கொண்டதாகவும் அதிகாரிகளிடம் தெரிவித்ததாக லீலாதேசி ஆனந்த நடராஜா கூறினார்.

ஜெனீவா அமர்வில் முன்வைக்கப்படும் விஷயங்கள் குறித்தும் அவரிடம் அதிகாரிகள் கேட்டுள்ளதாக தெரிகிறது. காணாமல் ஆக்கப்பட்ட தமது பிள்ளைகளை கண்டுபிடித்து தருவதற்கு இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தங்களை கொடுக்கவே இதுபோன்ற போராட்டங்களை தமது சங்கத்தில் உள்ளவர்கள் மேற்கொள்வதாக லீலாதேசி கூறினார்.

தற்போது நடைபெற்று வரும் ஜெனீவா அமர்வுகளில் தான் கலந்து கொள்ளாதிருப்பதற்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தலாகவே அதிகாரிகளின் விசாரணையை நடவடிக்கையை கருதுவதாக லீலாதேசி ஆனந்த நடராஜா மேலும் தெரிவித்தார்.

 

குறிப்பாக 2017ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 20ஆம் தேதி முதல் தொடர்ச்சியாக வடக்கு, கிழக்கு பகுதிகளில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், சூழற்சி முறையிலான இந்த போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

இந்த போராட்டம் தொடங்கப்பட்டு, இன்றுடன் 1,468 நாட்கள் கடந்துள்ளது. இவ்வாறான நிலையில், ஜெனீவாவில் மனித உரிமை பேரவையின் இந்த ஆண்டுக்கான கூட்டத் தொடர் தற்போது நடைபெற்று வருகிறன்றமையும் குறிப்பிடத்தக்கது.

இங்கிலாந்தில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனாவால் 400க்கும் மேற்பட்டோர் பலி! 

பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் ஒன்பதாயிரத்து 938பேர் பாதிக்கப்பட்டதோடு 442பேர் உயிரிழந்துள்ளனர்.

உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட ஐந்தாவது நாடாக விளங்கும் பிரித்தானியாவில், 41இலட்சத்து 44ஆயிரத்து 577பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை ஒரு இலட்சத்து 21ஆயிரத்து 747பேர் உயிரிழந்துள்ளனர்.

தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட 13இலட்சத்து 56ஆயிரத்து 364பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் இரண்டாயிரத்து 273பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

அத்துடன், இதுவரை வைரஸ் தொற்றிலிருந்து 26இலட்சத்து 66ஆயிரத்து 466பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

தரம் 1 வகுப்புக்கான புதிய மாணவர்களை இணைக்கும் தொகை வட-கிழக்கில் பயங்கர வீழ்ச்சி.

இந்த வருடம் பாடசாலைகளுக்கு தரம் 1 மாணவர்களுக்கான அனுமதியில் வடக்கு-கிழக்கில் இணைக்கப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கையில் முன்னைய ஆண்டுகளைக்காட்டிலும் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது அபாயகரமானது என எச்சரிக்கை விடுத்துள்ளார் இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் சரா.புவனேஸ்வரன்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட ஊடக அறிக்கை வருமாறு,

கடந்த காலங்களோடு ஒப்பிடுகையில் 2021ஆம் ஆண்டு வடக்கு, கிழக்கு மாகாணங்களில் முதலாம் தரத்துக்கு இணைந்த மாணவர்களின் எண்ணிக்கை ஆயிரக்கணக்கால் குறைவடைந்துள்ளது. இந்நிலைமை அபாயகரமானது.

உலக மக்கள் தொகை வருடம்தோறும் அதிகரித்துச் செல்கின்றதே தவிர குறைவடைவதில்லை. இலங்கையிலும் அதே நிலைதான்.

ஆனால் தமிழர் செறிந்து வாழும் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இம்முறை மாணவர் தொகை குறைவடைந்துள்ளமை கவலையான விடயம் என்பதற்கு அப்பால் அபாயகரமானது.

நாட்டில் நடைபெற்ற யுத்தம் நான்கு தசாப்தங்களைக் கடந்தது. அந்தக்காலங்களில்கூட பாடசாலைக்கு முதலாம்தரத்தில் இணைந்த மாணவர்களின் எண்ணிக்கை வருடம்தோறும் அதிகரித்தே சென்றது.

ஆனால் இம்முறை வடக்கு, கிழக்கு மாகாணங்களில் ஆயிரக்கணக்கில் மாணவர் எண்ணிக்கை குறைவடைந்தமை பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இதற்கான காரணங்களில் பிறப்பு வீதம் குறைவடைந்தது என தனியாகக் கூறிவிட முடியாது. நாட்டின் பொருளாதார நிலை மிகவும் முக்கியமானது.

இதைவிட கிராமப்புறங்களில் உள்ள மக்கள் பெருமளவானோர் நகர்ப் புறத்தை நோக்கி நகர்ந்துள்ளனர். அதற்கு தொழில் வாய்ப்பு ஒரு காரணம் என்பதற்கு அப்பால் பாரம்பரிய தொழில்கள் பல அழிவடைந்துள்ளன. இதனால் வருமானமின்றி பிள்ளைகளை வளர்க்க முடியாத அளவுக்கு பலர்தள்ளப்பட்டுள்ளனர். அரச சேவையில் உள்ள பலர் வங்கிகளில் பெருமளவு பணம் கடனாகப்பெற்று வாழ்க்கை நடத்துகின்றனர் என்றார்.

“ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளரின் பரிந்துரையை ஏற்றுக்கொண்டு நடைமுறைப்படுத்த வேண்டும்” – சுவிட்ஸர்லாந்து இலங்கையிடம் வேண்டுகோள் !

“ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளரின் பரிந்துரையை ஏற்றுக்கொண்டு நடைமுறைப்படுத்த வேண்டும்” என சுவிட்ஸர்லாந்து இலங்கையிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

மேலும் முன்னைய தீர்மானங்களின் உள்ளடக்கங்களையும் நடைமுறைப்படுத்துமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளது.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 46ஆவது கூட்டத்தொடரில் இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

மனித உரிமை பேரவை இலங்கையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை வழங்குவதற்காக மேலதிக நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் எனவும் சுவிட்ஸர்லாந்து வேண்டுகோள் விடுத்துள்ளது.

ஐக்கிய நாடுகள் தீர்மானத்திலிருந்து விலகுவது குறித்து இலங்கை அறிவித்தவேளை தேசிய அளவில் உருவாக்கப்பட்ட நல்லிணக்க மற்றும் பொறுப்புக்கூறல் நடைமுறையை தொடரவுள்ளதாக இலங்கை தெரிவித்திருந்தது.

எனினும் இந்த அறிக்கையில் உள்ளுர் முயற்சிகள் எவையும் பலன்களை அளிக்கவில்லை, தண்டனையின் பிடியிலிருந்து விலக்களிக்கப்படுவது தொடர்கின்றது.

இதன் காரணமாக பாதிக்கப்பட்டவர்கள் மத்தியில் அமைப்பின மீதான நம்பிக்கை மேலும் குறைவடைந்துள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளது.