March

March

“அரசியல் அனுபவம் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ இராணுவ அதிகாரிகளை கொண்டு சிவில் நிர்வாகத்தை முன்னெடுக்க முயற்சிக்கிறார்.” – குமார வெல்கம

“அரசியல் அனுபவம் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ இராணுவ அதிகாரிகளை கொண்டு சிவில் நிர்வாகத்தை முன்னெடுக்க முயற்சிக்கிறார்.” என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்தார்.

அகலவத்தை பகுதியில் இடம்பெற்ற  ஐக்கிய மக்கள் சக்தியின் தொகுதி அமைப்பாளர் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் கூறினார்.

அரச நிர்வாகம் தொடர்பில் அனுபவமற்றவர் அரச தலைவரானார் முறையற்ற அரச நிர்வாகமே செயற்படுத்தப்படும் என ஆரம்பத்தில் குறிப்பிட்டோம். ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷவிற்கு அரசியல் அனுபவம் கிடையாது. எனவே அவர் தற்போது இராணுவ அதிகாரிகளை கொண்டு சிவில் நிர்வாகத்தை முன்னெடுக்க முயற்சிக்கிறார். அவரது செயற்பாடுகள் அனைத்தும் தோல்வியடைந்துள்ளன.

ஜனாதிபதி ஆட்சிக்கு வந்து ஒன்றரை வருடம் நிறைவு பெற்றுள்ளன. இதுவரையிலான ஆட்சி நிர்வாகத்தை நாட்டு மக்கள் குறிப்பாக அவருக்கு ஆதரவு வழங்கிய 69 இலட்சம் மக்களே அவரை புறக்கணித்துள்ளனர்.

இயற்கைக்கு எதிரான செயற்பாடுகளை அரசாங்கம் முன்னெடுக்கிறது. இயற்கைக்கு எதிரான செயற்பாடுகள் அரசாங்கத்திற்கு பாரிய விளைவை ஏற்படுத்தும்.

2024 ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடும் விவகாரத்தில் ராஜபக்ஷகளுக்கு மத்தியில் பாரிய போட்டித்தன்மை காணப்படுகிறது.

அமைச்சர் நாமல் ராஜபக்ஷவை ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்கும் நிலைப்பாட்டில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளார். பொதுஜன பெரமுனவின் ஒரு சில உறுப்பினர்கள் பஷில் ராஜபக்ஷவை ஜனாதிபதி வேட்பாளராக களமிக்கும் நிலைப்பாட்டில் உள்ளார்கள். ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடும் தகைமை பஷில் ராஜபக்ஷவிற்கு கிடையாது.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை இலங்கைக்கு பொருத்தமற்றது. அரச அதிகாரங்கள் அனைத்தும் ஜனாதிபதி வசம் காணப்படும் போதுசர்வாதிகார ஆட்சி முறைமை முன்னெடுக்கப்படும்.

இலங்கையில் தற்போது சர்வாதிகார ஆட்சிக்கான  தன்மை காணப்படுகிறது. அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தம் ஜனாதிபதிக்கு வரையறையற்ற அதிகாரத்தை வழங்கியுள்ளது. ஆகவே நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை  இலங்கைக்கு பொருத்தமற்றது.

மாகாண சபை முறைமையும் இலங்கைக்கு பொருத்தமற்றது. இந்தியாவினால் அறிமுகப்படுத்தப்பட்ட மாகாண சபை முறைமையினை தொடர்ந்து முன்னெடுத்து செல்வதால் எவ்வித பயனும் நாட்டு மக்களுக்கு கிடைக்கப் பெறாது என்றும் அவர் கூறினார்.

“இலங்கையில் விரைவாக அரசமைப்பின் 13 ஆவது திருத்தம் அமுல்படுத்தப்பட வேண்டும்” – ஐ.நாவில் இந்தியா !

இலங்கையில் விரைவாக மாகாண சபைத் தேர்தல்களை நடத்தி, அரசமைப்பின் 13 ஆவது திருத்தம் அமுல்படுத்தப்பட வேண்டும் என்று இந்தியா கோரிக்கை விடுத்துள்ளது.

ஐ.நா. மனித உரிமைகள் சபையில் இலங்கை மீதான பிரேரணையின் விவாதத்தின்போது, இந்தியா இதனைத் தெரிவித்துள்ளது.  மேலும், இலங்கையில் அதிகாரப் பகிர்வை உறுதிப்படுத்துவதற்கான சர்வதேச சமூகத்தின் அழைப்பை தாம் ஆதரிப்பதாகவும் இந்தியா தெரிவித்துள்ளது.

மனித உரிமைகளை மேம்படுத்திப் பாதுகாப்பது நாடுகளின் பொறுப்பாகும் எனத் தெரிவித்துள்ள இந்தியா, அத்தகைய விடயங்களுக்கு ஆக்கபூர்வமான சர்வதேச உரையாடல்களும் ஒத்துழைப்பும் அவசியம் என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளது.

இலங்கைத் தமிழ் மக்களின் சமத்துவம், நீதி, கண்ணியம் மற்றும் அமைதிக்கு ஆதரவு தெரிவித்துள்ள இந்தியா, இலங்கையின் ஒற்றுமை, ஸ்திரத்தன்மை மற்றும் ஆட்புல ஒருமைப்பாட்டை உறுதிசெய்வதிலும் தாம் கவனம் செலுத்துவதாகவும் குறிப்பிட்டுள்ளது.

இலங்கையின் முன்னேற்றத்தில் மேற்படி இரண்டு குறிக்கோள்களுக்கும் பரஸ்பரம் ஆதரவளிக்கவுள்ளதாக இந்தியா மேலும் தெரிவித்துள்ளது.

இலங்கை மீதான பிரேரணையின் வாக்கெடுப்பில் இந்தியா உட்பட 14 நாடுகள் பங்கேற்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

தமிழ் மக்களுக்கு ஆதரவாக இருக்கின்றோம் என்று ஜெனிவாவில் தெரிவித்தமைக்காக இந்தியாவுக்கு நன்றி தெரிவித்த எம்.ஏ.சுமந்திரன் !

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை தீர்மானத்தைக் கொண்டுவந்த பிரிட்டன் உள்ளிட்ட இணை அனுசரணை நாடுகளுக்கும், தீர்மானத்தை ஆதரித்த நாடுகளுக்கும் தமிழ் மக்களின் சார்பிலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பிலும் நன்றிகளைத் தெரிவித்துகொள்கின்றோம் என்று கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

அதேவேளை, வாக்களிப்பில் கலந்துகொள்ளாமல் நடுநிலை வகித்த இந்தியாவுக்கு மூன்று வகைகளில் நன்றியை அவர் தெரிவித்தார்.

தமிழ் மக்களுக்கு ஆதரவாக இருக்கின்றோம் என்று ஜெனிவாவில் தெரிவித்தமைக்காகவும், தமிழ் மக்களின் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வுடன் தீர்வு வழங்கப்பட வேண்டும் என்று இலங்கை அரசிடம் கோரிக்கை விடுத்தமைக்காகவும், மாகாண சபைத் தேர்தலை விரைந்து நடத்த வேண்டும் என்று இலங்கை அரசை வலியுறுத்தியமைக்காகவும் இந்தியாவுக்கு மூன்று வகைகளில் நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றோம் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் கூறினார்.

இதேவேளை, ஐ.நா. தீர்மானத்திலுள்ள பரிந்துரைகளே சர்வதேசத்தின் நிலைப்பாடு எனவும், இதை உணர்ந்து இலங்கை அரசு செயற்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

“இலங்கை அரசுக்கு எதிராக நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானம் தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு நீதி பெறும் நடவடிக்கையின் ஒரு படிக்கல்” – ஈ.சரவணபவன்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் இலங்கை அரசுக்கு எதிராக நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானம், தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு நீதி பெறும் நடவடிக்கையின் ஒரு படிக்கல் என  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் தெரிவித்துள்ளார்.

நேற்று ஐ.நா. மனித உரிமைகள் சபை அமர்வில் இலங்கை அரசுக்கு எதிராக நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானம் தொடர்பாக ஊடகங்களிடம் கருத்துத் தெரிவித்தபோதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:-

தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்குப் பொறுப்புக்கூறுவதில் இருந்து தப்பிக்கொள்ள முனையும் இலங்கை அரசுக்கு, ஐ.நாவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் ஒரு அடியாகவே இருக்கும்.

இந்தத் தீர்மானத்தில் தமிழ் மக்கள் எதிர்பார்த்த பல விடயங்கள் உள்ளடக்கப்படவில்லை. இது தமிழ் மக்களுக்கு ஏமாற்றமாக இருந்தாலும், இந்தத் தீர்மானம் சரியான முறையில் செயற்படுத்தப்பட்டால் எதிர்காலத்தில் இலங்கை அரசை சர்வதேச விசாரணைப் பொறிமுறையை நோக்கி உந்தித் தள்ள முடியும்.

தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு நீதி பெறும் நடவடிக்கையின் ஒரு படிக்கல் இந்தத் தீர்மானம் என்று கூறமுடியும். இலங்கை தொடர்ந்தும் ஐ.நா. மனித உரிமைகள் சபையின் கண்காணிப்பில் இருப்பதற்கும் இந்தத் தீர்மானம் உதவும்.

ஐ.நாவில் பிரேரணையைக் கொண்டுவந்த நாடுகளும், அதற்கு ஆதரவளித்த நாடுகளும் அத்தோடு நின்றுவிடாது இலங்கை அரசுக்கு அழுத்தங்களைக் கொடுக்க வேண்டும்.

தீர்மானத்தில் உள்ள விடயங்களை நடைமுறைப்படுத்த ஆவன செய்ய வேண்டும் என்பதே தமிழ் மக்களின் எதிர்ப்பார்ப்பு – என்றார்.

இந்தியா – இங்கிலாந்து இடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி – வெற்றியுடன் ஆரம்பித்தது இந்தியா !

இந்தியா – இங்கிலாந்து இடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி புனேயில் இன்று நடைபெற்றது. நாணயச்சுழற்சியில் வென்ற இங்கிலாந்து அணி தலைவர் மோர்கன் பந்து வீச்சை தேர்வு செய்தார்.
இதன்படி துடுப்பெடுத்தாட களமிறங்கிய இந்திய அணியின் தவான் 98 ஓட்டங்களையும் , விராட் கோலி 56 ஓட்டங்களையும் , கே.எல் ராகுல் 62 ஓட்டங்களையும் , குருணால் பாண்ட்யா 58 ஓட்டங்களையும் பெற இந்தியா 50 பந்துப்பரிமாற்றங்களில் 5 இலக்கு இழப்பிற்கு 317 ஓட்டங்களை குவித்தது.
பின்னர் 318 ஓட்டங்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து களம் இறங்கியது. தொடக்க வீரர்களாக ஜேசன் ராய், பேர்ஸ்டோவ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இருவரும் இந்திய அணியின் பந்து வீச்சை துவம்சம் செய்தனர். இதனால் ஸ்கோர் ஜெட் வேகத்தில் உயர்ந்தது. பேர்ஸ்டோவ் 40 பந்தில் அரைசதம் அடித்தார். மறுமுனையில் ஜேசன் ராய் 46 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.
ஜேசன் ராய்- பேர்ஸ்டோவ் ஜோடி முதல் இலக்குக்கு 135 ஓட்டங்கள் குவித்தது. அடுத்து வந்த பென் ஸ்டோக்ஸ் 1 ஓட்டத்துடன் ஏமாற்றம் அளித்தார்.
இரண்டு இலக்கு வீழ்ந்தாலும் மறுமுனையில் பேர்ஸ்டோவ் வாணவேடிக்கை நிகழ்த்தினார். அவர் 94 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.
அதன்பின் இங்கிலாந்து இலக்குகள் மளமளவென சரிந்தது. மோர்கன் 22 ஓட்டங்களிலும், பட்லர் 2 ஓட்டங்களிலும், சாம் பில்லிங்ஸ் 18 ஓட்டங்களிலும், மொயீன் அலி 30 ஓட்டங்களிலும், சாம் கர்ரன் 12 ஓட்டங்களிலும் வெளியேற இங்கிலாந்து 42.1 பந்துப்பரிமாற்றங்களில் 251 ஓட்டங்களுக்குள் சுருண்டது. இதனால் இந்தியா 66 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்திய அணி தரப்பில் பிரசித் கிருஷ்ணா 8.1 பந்துப்பரிமாற்றங்களில் 54 ஓட்டங்கள் விட்டுக்கொடுத்து 4 விக்கெட் வீழ்த்தினார்.

“தமிழ் இன அழிப்பைக் கட்டுப்படுத்த ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரின் அலுவலகங்கள் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நிறுவப்பட வேண்டும்” – ஐ.நாவில் சுரேஷ் பிரேமச்சந்திரன்!

இலங்கையில் கட்டமைக்கப்பட்ட தமிழ் இன அழிப்பைக் கட்டுப்படுத்த ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரின் அலுவலகங்கள் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நிறுவப்பட வேண்டும்.என்று ஈ.பி.ஆர்.எல்.எப். அமைப்பின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

பிரான்ஸில் உள்ள புலம்பெயர் தமிழ் அமைப்பைப் பிரதிநிதித்துவப்படுத்தி ஐ.நா. மனித உரிமைகள் சபையில் இணையவழி ஊடாகக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

ஐ.நா. மனித உரிமைகள் சபையின் விசேட அறிக்கையாளர் ஒருவர் இலங்கைக்கு நியமிக்கப்பட வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.

இலங்கையில் சிங்கள அரசு 72 வருடங்களுக்கு மேலாக தமிழ் மக்களின் உரிமைகளை மீறி வருகின்றது எனவும் அவர் குற்றஞ்சாட்டினார்.

இதேநேரம், இலங்கை மீது பல்வேறு ஐ.நா. பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டு இருந்தாலும், தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்கும் எதையும் இலங்கை நிறைவேற்றத் தவறியுள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

தமிழ்பேசும் மக்களின் தாயகமான வடக்கு, கிழக்கு மாகாணங்களில் மக்களின் காணிகள் முழுமையாக விடுவிக்கப்படாத நிலையில், இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ளன எனவும் சுரேஷ் பிரேமச்சந்திரன் மேலும் குறிப்பிட்டார்.

பயங்கரவாத தடை சட்டம் , தண்டனை சட்டக் கோவைகளின் கீழ் பாராளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரனிடம் சி.ஐ.டி.யினர் சிறப்பு விசாரணை !

வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக சி.ஐ.டி.யினர் சிறப்பு விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இன்று இந்த விடயம் தொடர்பாக கொழும்பு பிரதான நீதவான் முன்னிலையில் சி.ஐ.டி.யினர் பீ அறிக்கையை சமர்ப்பித்து இதனை அறிவித்துள்ளனர்.

கடந்த 2020 ஓகஸ்ட் மாதம், தனியார் தொலைக்காட்சி ஒன்றின் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற விக்னேஸ்வரன் வெளியிட்டிருந்தார்.

குறித்த கருத்துக்கள் இனங்களிடையே, நாட்டில் குழப்பத்தை தோற்றுவிக்கும் வகையில் அமைந்திருந்ததாக கூறி, முறைப்பாடு வழங்கப்பட்டது.

அதன் அடிப்படையில் பயங்கரவாத தடை சட்டம், சிவில் அரசியல் உரிமைகளுக்கான சர்வதேச இணைக்கப்பாட்டு சட்டம் மற்றும் தண்டனை சட்டக் கோவைகளின் கீழ் இவ் விசாரணைகள் இடம்பெறுவதாக சி.ஐ.டி.யினர் நீதவானுக்கு அறிவித்துள்ளனர்.

“இலங்கைக்கு எதிரான பிரேரணை மீதான வாக்கெடுப்பை இந்தியா புறக்கணித்த ,இந்தியா ஈழத்தமிழர்களுக்கு மன்னிக்க முடியாத துரோகம் செய்துவிட்டது” – வைகோ காட்டம் !

“ஜெனிவாவில் இடம்பெற்ற இலங்கைக்கு எதிரான பிரேரணை மீதான வாக்கெடுப்பை இந்தியா புறக்கணித்தமையானது ஈழத் தமிழர்களுக்கு செய்த மன்னிக்க முடியாத துரோகம் என வைகோ குற்றம் சாட்டியுள்ளார்.

ஐ.நா.மனித உரிமகள் பேரவையில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்பட்ட போதும் இந்த வாக்கெடுப்பில் இந்தியா கலந்து கொள்ளவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஆகவே இந்திய அரசாங்கத்தின் இந்த செயற்பாடு ஈழத் தமிழர்களுக்கு செய்த மன்னிக்க முடியாத துரோகம் என வைகோ தெரிவித்தார்.

மேலும் தமிழ்நாட்டில் தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில் மக்களை ஏமாற்றுவதற்காக வெளிநடப்பு செய்துள்ளார்கள் என குற்றம் சாட்டிய வைகோ, இல்லையேல் இலங்கைக்கு ஆதரவாக வாக்களித்திருப்பார்கள் என்றும் சாடியுள்ளார்.

“இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கே தமிழ் மக்களுக்கு நீதியை பெற்றுக் கொடுக்க முடியாத தமிழ் தலைமைகள் முஸ்லீம்களின் ஜனாசாவை அடக்கம் செய்யகோரி  ஆர்ப்பாட்டம் செய்தமை வேடிக்கையானது” – சிங்களே அப்பி சங்கிவிதான அமைப்பு

“இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கே தமிழ் மக்களுக்கு நீதியை பெற்றுக் கொடுக்க முடியாத தமிழ் தலைமைகள் முஸ்லீம்களின் ஜனாசாவை அடக்கம் செய்யகோரி  ஆர்ப்பாட்டம் செய்தமை வேடிக்கையானது”  என சிங்களே அப்பி சங்கிவிதான அமைப்பின் தலைவர் யம்புர ரேவல சந்திரரத்ன தேரர் தெரிவித்தார்.

அப்பி சங்கிவிதான அமைப்பின் தலைவர் யம்புர ரேவல சந்திரரத்ன தேரர் தலைமையிலான தேரர்கள் மற்றும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கிழக்கு மாகாண இணைப்பாளர், கோல்டன் பொனாண்டே குழுவினர் தமிழ் மக்களின் பிரச்சனைகள் மற்றும் இனநல்லுறவு தொடர்பான 3 நாள் விஜயம் ஒன்றை மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களில் மேற்கொண்டனர்.

இதன்போது அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பிரதேச செயலகப்பிரிவிலுள்ள அட்டப்பள்ளம் தமிழ் மக்களின் இந்து மயானம் அபகரிப்பு தொடர்பாக நேரில் சென்று பார்வையிட்ட தோரர் கருத்து தெரிவிக்கையில் இவ்வாறு தெரித்தார்.

குறித்த பிரதேசத்திலுள்ள சுமார் 1200 குடும்பங்களைச் சேர்ந்த தமிழ் மக்கள் பூர்வீகமாக வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில் இவர்களின் உறவினர்களை உயிரிழந்தவர்களை அந்த பகுதியிலுள்ள கடற்கரையை அண்டிய பகுதியில் சுமார் 12 ஏக்கர் நிலப்பரப்பில் உள்ள இந்து மயானத்தில் சடலங்களை புதைத்து வருகின்றனர்.

இந்த நிலையில் கடந்த 2018 ம் ஆண்டு அந்த இந்து மயானத்தை முஸ்லீம் நபர் ஒருவர் தனது காணி என போலி காணிப் பத்திரத்துடன், உரிமைகோரி இந்து மயானத்தில் சுமார் 10 ஏக்கர் நிலப்பரப்பை கொண்ட பகுதியை மயானத்தின் நடுவே கம்பிவேலி அமைத்து அபகரிக்க முற்பட்டவேளை பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் செய்தவேளை மயானத்தை உரிமைகோரிய முஸ்லீம் நபரை தாக்கியதாகவும் அதற்கு உறுதுணையாக இருந்த அரச அதிகாரிகளை கடமைசெய்ய விடாது தடுத்ததாகவும் அந்த அப்பாவி பொதுமக்கள் 21 பேரை காவல்துறையினர் கைது செய்து அவர்களுக்கு எதிராக நீதிமன்றில் இரண்டு வழக்கு தாக்குதல் செய்துள்ளனர்.

இவ்வாறான நிலையில் பூர்விகமாக வாழ்ந்துவரும் இந்த தமிழ் மக்கள் தமது இறந்த உறவுகளை அடக்கம் செய்து வந்த இந்த மயானத்தை முஸ்லீம் நபர் அபகரித்துள்ளமை கண்டிக்கத்தக்கது அதேவேளை இந்த தமிழ் மக்கள் தமது இறந்த உறவுகளின் உடல்களை புதைக்கமுடியாமல் கடந்த 3 வருடங்களாக இருந்துவருகின்ற நிலையில் தமது தமிழ் மக்களுக்கு நீதியை பெற்றுக் கொடுக்க வேண்டிய தமிழ் தலைமைகள் அதனை செய்யாது சர்வதேசத்திற்கு எமது நாட்டினை இக்கட்டுக்குள்ளகவே முன்வருகின்றனர்.

கிழக்கு மாகாணம் தான் கள்ள உறுதி வியாபாரம் செய்யும் பிரதானமான மர்ம இடமாகவுள்ளதுடன் கிழக்கு மாகாணத்திலுள்ள பிரதேச செயலகங்களில் இருக்கும் பெரும்பான்மையானவர்கள் கள்ளமாக உறுதிமுடிப்பவர்கள் என நாங்கள் சில தினங்களில் மேற்கொண்ட கண்காணிப்பில் தெரியவந்துள்ளது.

முஸ்லீம் இன உத்தியோகத்தர்களுக்கு மிக தெளிவாக கூறுகின்றோம் பல பிரதேச செயலாளர்கள் அதற்கு கீழ்உள்ள உத்தியோகத்தர்களும் வேறு அரச திணைக்களங்களில் பணிபுரியும் உத்தியோகத்தர்களும் இணைந்து குழுவாகத்தான் இந்த காணி வியாபாரத்தினை மேற்கொள்கின்றார்கள். இவ்வாறு தமிழ் மக்களுடைய இடங்களை பறித்தெடுக்கின்றார்கள். தமிழ் மக்களிடம் இருந்து வாக்குகளைப் பெற்ற எந்த அரசியல்வாதிகளும் இவர்களுக்காக முன்வருவதில்லை.

இவ்வாறு தமிழ் மக்களுடைய பிரச்சனைகளை தமிழ் அரசியல் வாதிகள் தீர்த்து வைக்காது கொரோனாவில் உயிரிழந்த முஸ்லீம் மக்கள் உடல்களை புதைக்க கோரி ஆர்ப்பாட்டம் செய்கின்றனர். தனது இனம் தன்னுடைய மதம் தன்னுடைய மக்களுக்கான இறந்த உடல்களை புதைக்கும் இடத்தினை பாதுகாத்து அவர்களுக்கு வழங்க முடியாத மக்கள் பிரதிநிதிகளால் ஏதேனும் பயன்கள் இருக்கின்றதா என்ற கேள்வியை கேட்கின்றேன்.

எனவே அரசாங்கம் சட்டரீதியாக பரம்பரைபரம்பரையாக தங்களது உறவினரது சடலங்களை புதைத்துவந்த இந்த மயானத்தை பலவந்தமாக பறித்து கள்ள உறுதி முடிக்கும் இந்த வியாபாரத்தை மேற்கொள்ளும் இவர்களை கைது செய்யவேண்டும் என்பதுடன் ஜனாதிபதி, கிழக்குமாகாண ஆளுநர், அவர்களுக்கு ஞாபகப்படுத்துகின்றோம் இந்த தமிழ் மக்கள் முகம் கொடுத்துள்ள பாரதூரமான காணிப் பிரச்சனைக்கு தீர்வுக்கு கொண்டுவருவதற்கான நடவடிக்கை எடுக்கவேண்டும்.

எனவே நாம் மீண்டும் இந்த பிரதேசத்திற்கு பயணிக்கும்வேளை தமிழ் மக்களிடம் இருந்து பறித்தெடுத்த காணிகளை எவ்வித பிரச்சனைகளுமின்றி இவர்களுக்கு வழங்குவதற்காக சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும். இல்லையேல் இந்த இரவு வேளைகளில் கட்டப்பட்ட கம்பிவேலி மற்றும் கட்டடம் அனைத்தையும் அகற்றுவதற்கு மகா சங்கத்தினர் இருமுறை யோசிப்பதில்லை நாங்கள் முன்னின்று வேலிகளை அகற்றி கட்டிடங்களை அகற்றி இதனை மயானமாக மாற்றுவித்ததன் பின்னர். இதற்கு எதிராக செயற்பட்டுள்ளீர்கள் என சட்டப் புத்தகங்களையும் சட்டங்களையும் எடுத்துக் கொண்டு வரவேண்டாம். என்றார்.

இலங்கை மக்களுக்குக் கிடைத்த பெரும் வெற்றி – சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம்

ஐ.நாவில் இலங்கைக்கு எதிரான மனித உரிமை தீர்மானம் நிறைவேற்றப்பட்டமை இலங்கை மக்களுக்குக் கிடைத்த பெரும் வெற்றி என சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகத்தின் நிறைவேற்று இயக்குநர் கெனெத் ரொத் தெரிவித்துள்ளார்.
டுவிட்டரில் அவர் தெரிவித்துள்ளதாவது;
ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டமை இலங்கை மக்களுக்கு பெரும் வெற்றி. ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை 22க்கு 11 என்ற அடிப்படையில் தீர்மானத்தை ஏற்றுக்கொண்டுள்ளது.
இலங்கையில் இடம்பெற்ற யுத்த குற்றங்களுக்கான எந்த பொறுப்புக்கூறலும் இல்லை என்பதை மனித உரிமை பேரவை அங்கீகரித்துள்ளதுடன் ராஜபக்ச அரசாங்கத்தை தொடர்ந்தும் கண்காணிக்குமாறு உத்தரவிட்டுள்ளது.