March

March

கொழும்பில் பயணப்பை ஒன்றில் மீட்கப்பட்ட யுவதியின் சடலம் – அச்சத்தில் மக்கள்!

கொழும்பு – டாம் வீதி பொலிஸ் நிலைய அதிகாரப் பிரிவுக்கு உட்பட்ட ஐந்து லாம்பு சந்திக்கு அருகே டாம் வீதியில் பயணப் பையொன்றினுள் இருந்து யுவதி ஒருவரின் சடலம் மீட்கப்பட்டது.

டாம் வீதி பொலிஸ் நிலையத்துக்கு கிடைக்கப் பெற்ற தகவல் ஒன்றுக்கு அமைய, குறித்த சடலம் பொலிஸாரால் மீட்கப்பட்டது.

சுமார் 20 வயதுக்கும் 25 வயதுக்கும் இடைப்பட்ட வயதை கொண்டிருக்கலாம் என அனுமானிக்கப்படும் குறித்த யுவதியின் ஆள் அடையாளங்கள் எவையும் உறுதி செய்யப்படாத நிலையில், சடலமானது கொழும்பு மேலதிக நீதிவான் ரஜீந்ரா ஜயசூரியவின் ஸ்தல மேற்பார்வையின் பின்னர் அவரது உத்தரவுக்கு அமைய சட்ட வைத்திய அதிகாரியூடாக பிரேத பரிசோதனைகளை முன்னெடுக்க கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டது.

ஐந்து லாம்பு சந்தியை ஒட்டியுள்ள ஒரு வழிப் பாதையான டாம் வீதியில், வர்த்தக நிலையம் ஒன்றினை அண்மித்ததாக, பெரிய பயணப் பை ஒன்று கைவிடப்பட்டிருந்தமையை அப்பகுதியில் உள்ளோர் அவதானித்துள்ளனர்.

புதிய பயணப் பை கைவிடப்பட்டிருந்த நிலையில் சுமார் 3 மணி நேரமாக அவ்விடத்தில் இருப்பதை அவதானித்துள்ள அப்பகுதியில் வர்த்தக நடவடிக்கையில் ஈடுபடுவோர், குறித்த பை தொடர்பில் சந்தேகம் கொண்டு பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.

டாம் வீதி பொலிஸாருக்கு கிடைத்த தகவலில், ‘ கறுப்பு நிற பெரிய பயணப் பை ஒன்று சந்தேகத்துக்கு இடமான முறையில் கைவிடப்பட்ட நிலையில் உள்ளது.’ என தெரிவிக்கப்பட்டிருந்ததாக பொலிஸ் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன கூறினார்.

இந் நிலையில் பொலிஸார் ஸ்தலத்துக்கு சென்று குறித்த பயணப் பொதியை சோதனை செய்த போது அதில் சடலம் ஒன்று உள்ளமை தெரியவந்திருந்தது. சடலமானது குறித்த பையில் மடிக்கப்பட்டு, போர்வை ஒன்றினால் போர்த்தப்பட்டு வைக்கப்பட்டிருந்தது.

இந் நிலையிலேயே விடயம் தொடர்பில் டாம் வீதி பொலிஸார் கொழும்பு மேலதிக நீதிவான் ரஜீந்ரா ஜயசூரியவுக்கு அறிக்கை சமர்ப்பித்தனர்.

இதனையடுத்து ஸ்தலத்துக்கு சென்ற நீதிவான், சடலத்தை மேற்பார்வை செய்த நிலையில், சடலமாக இருந்த யுவதியின் ஆள் அடையாளத்தை உறுதிப் படுத்த விசாரணைகளை முன்னெடுக்க உத்தரவிட்டார்.

அத்துடன் அவரது மரணத்துக்கான காரணம், குற்றம் ஒன்று இடம்பெற்றிருப்பதாக சந்தேகிக்கப்படும் நிலையில் அது தொடர்பிலான முழுமையான விடயங்களை வெளிப்படுத்த பிரேத பரிசோதனை மற்றும் குற்றவியல் விசாரணைக்கும் நீதிவான் உத்தரவிட்டார். இதனையடுத்தே சடலம் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டது.

குறித்த பயணப் பொதியை குறித்த இடத்துக்கு இழுத்து வந்து, அனைவரது கவனமும் வேறு திசைகளில் இருந்த வேளை அதனை கைவிட்டு செல்லும் காட்சி அருகில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றின் சி.சி.ரி.வி. கமராவில் பதிவாகியுள்ளது.

இந் நிலையில், அந்த சி.சி.ரி.வி. காட்சிகளை மையப்படுத்தி, குறித்த பையை அங்கு கொண்டு வந்தவர் தொடர்பில் விஷேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக டாம் வீதி பொலிஸார்  கூறினர்.

குறிப்பாக எங்கிருந்து குறித்த சடலம் எடுத்து வரப்பட்டது, குறித்த யுவதி கொலை செய்யப்பட்டாரா, அப்படியானால் எங்கு எப்படி அது நடந்தது, குறித்த பயணப் பையை இழுத்து வந்த நபர் யார், அவருக்கும் சடலமாக மீட்கப்பட்ட யுவதிக்கும் இடையிலான உறவு என்ன உள்ளிட்ட பல கேள்விகளுக்கு விடைகாண இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக பொலிஸார் சுட்டிக்காட்டினர்.

இந் நிலையில் மேல் மாகாணத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன், கொழும்புக்கு பொறுப்பான பதில் பிரதிப் பொலிஸ் மா அதிபர் விஜயஸ்ரீ ஆகியோரின் மேற்பார்வையில், கொழும்பு மத்தி சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் சந்ரசேகரவின் ஆலோசனைக்கு அமைய, டாம் வீதி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் வழி நடத்தலில் குற்ற விசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் அசேல உள்ளிட்ட குழுவினரால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

சன நடமாட்டம் மிக்க டாம் வீதியில், இவ்வாறு பயணப் பையில் இருந்து சடலம் மீட்கப்பட்டமை அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

கொவிட் தொற்றால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் சடலங்கள் அடக்கம் செய்யப்படவுள்ள வடக்கின் தீவு! 

கொவிட் தொற்றால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் சடலங்களை அடக்கம் செய்வதற்கு இரணைதீவு அடையாளம் காணப்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார்.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பிலேயே அமைச்சரவையின் இணைப் பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல இதனைத் தெரிவித்துள்ளார்.

அடக்கம் செய்வதற்கான வழிகாட்டுதல்களுடன் அனுமதிகள் வழங்கப்பட்டவுடன் சுகாதார அதிகாரிகள் அந்த இடத்தை முறையாக அறிவிப்பார்கள் என்று அமைச்சர் தெரிவித்தார்.

ஒரு இடம் அடையாளம் காணப்பட்டு, அடக்கம் செய்வதற்கான புதிய வழிகாட்டுதல்களை அதிகாரிகள் இறுதி செய்யும் வரை முடிவை நடைமுறைப்படுத்துவது தாமதமாகும்.

கொவிட் காரணமாக உயிரிழப்போரின் சடலங்கள் இதுவரையில் தகனம் செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை அரசின் கோரிக்கையை நிராகரித்த ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம் !

கடந்த வாரம் மனித உரிமைகள் சபையில் இலங்கை தொடர்பில் சமர்ப்பிக்கப்பட்ட மோசமான அறிக்கை குறித்த அரசாங்கத்தின் பதிலை வெளியிட வேண்டும் என்ற கோரிக்கையை ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம் புறக்கணித்துவிட்டதாக இலங்கை தனது கடும் ஆட்சேபனையை தெரிவித்துள்ளது.

அரசாங்கத்தின் பதில்களையும் இணைத்து ஆணையாளரின் அறிக்கையுடன் வெளியிடுமாறு ஜெனிவாவில் உள்ள இலங்கையின் வதிவிடப்பிரதிநிதி ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் தலைவர் நஷாத் ஷமீமுக்கு எழுதிய கடிதத்தில் கோரியிருந்தார்.

இருப்பினும் குறித்த கோரிக்கை புறக்கணிக்கப்பட்டு திருத்தப்படாத அறிக்கை பேரவையின் 46ஆவது அமர்வு பட்டியலில் சேர்க்கப்பட்டதாக ஆட்சேபனை வெளியிடப்பட்டுள்ளது.

2021 ஜனவரி 27 அன்று இலங்கை அரசாங்கம், மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கையின் முன்கூட்டியே திருத்தப்படாத பதிப்பு குறித்த தனது கருத்துகளைப் பகிர்ந்து கொண்டது என ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் அலுவலகத்திற்கான இலங்கைக்கான தூதுவரும் நிரந்தர பிரதிநிதியுமான சி.ஏ. சந்திரபிரேம சுட்டிக்காட்டியுள்ளார்.

அதில் மனித உரிமைகள் பேரவை உட்பட எந்தவொரு நிறுவனமும் உறுப்பு நாடு பற்றி ஒரு அறிக்கையை வெளியிட்டால், அத்தகைய அறிக்கை சம்பந்தப்பட்ட அரசாங்கத்தின் பதில்களையும் இணைத்தே வெளியிடப்பட வேண்டும் என சுட்டிக்காட்டபட்டிருந்தது.

09 மாதக்கைக்குழந்தையை மிருகத்தனமாக தாக்கிய தாய் – விரைந்து செயற்பட்ட யாழ்.பொலிஸார்! 

தாயொருவர் தனது 9 மாதக் குழந்தையை தடியொன்றினால் கொடூர மாகத் தாக்கும் காணொளியொன்று தற்போது சமூக வலைத் தளங்களில் வைரலாகி வருகிறது.

இந்நிலையில் 9 மாத ஆண் குழந்தையின் தாய் கைது செய்யப் பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் அரியாலை நாவலடி பிரதேசத்தில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவத்தில் 24 வயதான பெண் சுமார் ஒரு மாதத்திற்கு முன்பு குவைத்திலிருந்து குழந்தையுடன் நாடு திரும்பியுள்ளதாகத் தெரிய வந்துள்ளது.

தற்போது பொலிஸார் குழந்தையைப் பொறுப்பேற்றுள்ளனர்.

குறித்த பெண் யாழ்ப்பாண பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அத்துடன் குறித்த பெண்ணுக்கு எதிராக சித்திரவதை குற்றச்சாட்டில் அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையத்தில் இந்தியா – அமைச்சரவை அனுமதி !

கொழும்பு துறைமுகத்தின் மேற்கு கொள்கலன் முனையத்தை இந்தியாவின் அதானி நிறுவனம் ஜோன் கீல்ஸ் குழுமம் மற்றும் துறைமுக அதிகார சபை ஆகியவற்றுடன் இணைந்து அரச மற்றும் தனியார் வர்த்தகமாக முன்னெடுக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

35 வருடங்களில் அபிருத்தி செய்து நடைமுறைப்படுத்தல் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கான ஒப்பந்தங்களுக்கு இந்தியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளிடமிருந்து முதலீட்டாளர்களை பரிந்துரைக்குமாறு கூறியிருந்த நிலையில், இந்தியாவிடமிருந்து மாத்திரம் முதலீட்டாளருக்கான உடன்பாடு கிடைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“இலங்கையில் 30 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி” – சுகாதார அமைச்சு 

30 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த சுகாதார அமைச்சு முடிவு செய்துள்ளதாக சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற கொரோனா கட்டுப்பாட்டுக் குழு கூட்டத்தைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டு என ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் இதுவரை 5 இலட்சத்து 9 ஆயிரத்து 275 பேருக்கு ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ராஜெனகா கொவிஷீல்ட் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

கடந்த ஜனவரி மாதம் 29 ஆம் திகதி முதல் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

தமிழர்களுக்கு நீதி வேண்டிய உணவு தவிர்ப்பு போராட்டத்தில் கிளிநொச்சி மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களும் இணைவு !

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுவரும் நீதி வேண்டிய சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்பு போராட்டத்தில் இன்றையதினம் கிளிநொச்சி மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களும் இணைந்து கொண்டுள்ளனர்.

இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்த வேண்டுமென வலியுறுத்தி நல்லூர் – நல்லை ஆதீனம் முன்பாக யாழ்ப்பாணம் மற்றும் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களால் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த போராட்டம் மூன்றாவது நாளாகவும் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது.

குறித்த போராட்டத்திற்கு பலரும் தமது ஆதரவினை தெரிவித்து இனைந்து கொண்டுள்ள நிலையில் இன்றையதினம் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் பலரும் இனைந்து கொண்டுள்ளனர்.

இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்துவதினூடாக சிறிலங்கா அரசாங்கத்தினால் புரியப்பட்டுள்ள போர்க் குற்றங்கள் மனித நேயத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் தமிழ் இனத்திற்கு எதிராக இனவழிப்பு என்பவற்றிக்கு சர்வதேச நீதி வேண்டும், தமிழ் இனத்தின் மீதான இனவழிப்பு தொடராது இருப்பதற்கு தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைகளான மரபுவழித் தாயகம், சுயநிர்ணய உரிமை, தமிழ்த் தேசியம் என்பன அங்கிகரிக்கப்பட வேண்டும்,  ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து குறித்த சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

பிரித்தானியாவில் Covid – 19 தடுப்பூசியை பெற்றோர் தொகை  20 மில்லியனை தாாண்டியது !

அரசாங்கத்தின் சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி, பிரித்தானியாவில் கிட்டத்தட்ட 20 மில்லியன் மக்கள் தற்போது கொரோனா தடுப்பூசியை பெற்றுள்ளனர்.

வெள்ளிக்கிழமை நிலவரப்படி, 19.6 மில்லியனுக்கும் அதிகமான மக்கள், கொரோனா தடுப்பூசியின் முதல் அளவைப் பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் இங்கிலாந்தில் 16.6 மில்லியனுக்கும் அதிகமானவர்களும் ஸ்கொட்லாந்தில் 1.5 மில்லியனுக்கும் அதிகமானவர்களும் வேல்ஸில் 916,336 பேரும் வடக்கு அயர்லாந்தில் 515,678 பேரும் தடுப்பூசியை பெற்றுக்கொண்டுள்ளனர்.

இதற்கிடையில், கொரோனா தடுப்பூசியின் இரண்டாவது அளவை பெற்றவர்களின் எண்ணிக்கை 768,810 ஆக உயர்ந்துள்ளது.

இதேவேளை ஜூலை மாத இறுதிக்குள் அனைத்து முதியவர்களுக்கும் கொரோனா தடுப்பூசியை செலுத்த அரசாங்கம் இலக்கு வைத்துள்ளது.

அதன்படி ஏப்ரல் 15 க்குள் 50 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் முதல் அளவை வழங்கவுள்ளதாகவும் 16-64 வயதுடையவர்களுக்கும் சில அடிப்படை சுகாதார பிரச்சினைகள் கொண்டவர்களுக்கும் தடுப்பூசியை செலுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

2024 ல் மீள களம் காண்கிறார் டொனால்ட் ட்ரம்ப்! 

எதிர்வரும் 2024ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் மீண்டும் போட்டியிட அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், திட்டமிட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி தேர்தல் தோல்விக்குப் பிறகு முதல் முறையாக புளோரிடா மாகாணத்தின் ஓர்லண்டோ நகரில் நடந்த நிகழ்ச்சியில், பொது மேடையில் பேசிய போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இதன்போது அவர் மேலம் கூறுகையில்,

“புதிய அரசியல் கட்சியைத் தொடங்க எந்த திட்டமும் இல்லை. புதிய கட்சி தொடங்கப் போவதாக வெளியான தகவல் உண்மைக்கு புறம்பானது. எங்களுக்கு குடியரசுக் கட்சி உள்ளது. அக்கட்சியை ஒருங்கிணைத்து வலிமைப்படுத்த உள்ளோம்.

அமெரிக்க சட்டங்களை அமுல்படுத்துவதில் பைடன் தோல்வி அடைந்துவிட்டார். நாம் ஆரம்பித்த இந்த சிறப்பான பயணம் முடிவுக்கு வர வெகுதொலைவு உள்ளது. புதிய கட்சியை ஆரம்பிப்பதில் விருப்பம் இல்லை. பைடன் நிர்வாகம் மோசமாக இருக்கப்போகிறது என்பது நமக்கு தெரியும்.

ஆனால், எந்த அளவு மோசமாக இருக்கப்போகிறது என்பதை நம்மால் கற்பனை செய்து கூட பார்க்க முடியவில்லை. 2024ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி படுதோல்வியை சந்திக்கும்” என கூறினார்.

அமெரிக்காவில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் குடியரசுக்கட்சியின் சார்பில் இரண்டாவது முறையாக போட்டியிட்டார். இதில் ட்ரம்ப் தோல்வியை தழுவினார்.

எனினும், தோல்வியை ஒப்புக்கொள்ளாத ட்ரம்ப், கடுமையான எதிர்ப்பு மற்றும் விமர்சனங்களுக்கு மத்தியில் அமெரிக்க வரலாற்றில் மிக மோசமான ஜனாதிபதி என்ற பெயருடன் பதவியிலிருந்து நீங்கிச் சென்றார்.

பிரான்சின் முன்னாள் ஜனாதிபதிக்கு  மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை !

ஊழல் குற்றச்சாட்டுக்களை எதிர்கொண்ட பிரான்சின் முன்னாள் ஜனாதிபதி நிகோலஸ் சார்க்கோசி குற்றவாளியென நீதிமன்றம் இன்று (01.03.2021) அறிவித்துள்ளது.

இந்நிலையில், அவருக்கு மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதுடன், அதில் இரண்டு வருட தண்டனை இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி சார்க்கோசிக்கு வழங்கப்பட்ட தண்டனையின் ஒரு வருடத்தை சிறையில் கழிக்கத் தேவையில்லை என்றும், வீட்டில் இருந்தவாறே ஒரு மின்னணு வளையலை அணிந்து தண்டனையை அனுபவிக்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2007 முதல் 2012 வரை ஜனாதிபதியாக இருந்த சார்க்கோசி, தேர்தல் பிரசார நிதிப் பயன்பாடு தொடர்பாக குற்றச்சாட்டை எதிர்கொண்டிருந்தார். இந்நிலையில், 2014இல் ஒரு மூத்த நீதவான் ஊடாக சட்டவிரோதமாக இதுகுறித்த விசாரணைத் தகவல்களைப் பெற முயன்றார் என்பது விசாரணையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அத்துடன்,  இது தொடர்பாக நீதிபதிக்கு ஒருவருக்கு பதவி உயர்வு வழங்குவதன் மூலம் இலஞ்சம் வழங்க முற்பட்டதாக சார்க்கோசி மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இதேவேளை, கடந்த ஆண்டு நடைபெற்ற 10 நாட்கள் விசாரணையின்போது தனக்கு எதிரான அனைத்துக் குற்றச்சாட்டுகளை அவர் உறுதியாக மறுத்திருந்தார்.

எனினும், குற்றங்கள் நிரூபிக்கப்பட்டுள்ள நிலையில், 66 வயதான சார்க்கோசி, பிரான்சின் தற்கால வரலாற்றில் சிறைத்தண்டனை பெற்றுள்ள  முதல் ஜனாதிபதி என்பது குறிப்பிடத்தக்கது.