May

May

எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு கொரோனா தொற்று உறுதி !

எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில்,  நாடாளுமன்றத்தில் அவருடன் நெருங்கி பழகியவர்கள் குறித்து சிசிரிவி கெமராக்களில் கண்காணிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதனூடாக அவருடன் நெருங்கி பழகியவர்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படவுள்ளனர்.

தனக்கும் தன்னுடைய மனைவிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச, தனது முகப்புத்தகத்தில் பதிவிட்டிருந்தார்.

அதனடிப்படையில் அவர்கள் இருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில், ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டார தம்மை சுயதனிமைப்படுத்திக்கொண்டுள்ளதுடன் பீ.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளவுள்ளதாகவும் அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

“ராஜீவ் காந்தியை கொலை செய்தவர்களை ஒருபோதும் மன்னிக்க முடியாது.” – புதுவை முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி

“இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை கொலை செய்தவர்களை ஒருபோதும் மன்னிக்க முடியாது.” என  புதுவை முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள விசேட காணொளியொன்றிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அதில் அவர் மேலும் கூறியுள்ளதாவது,

”ராஜீவ் காந்தியை கொலை செய்தவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு பின்னர் ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டுள்ளது.  இந்த சந்தேகநபர்கள் சிறையில் உள்ளனர். இந்நிலையில் அவர்களை மனிதாபிமான முறையில் விடுதலை செய்வதற்கு, சோனியா காந்தி, ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி  உள்ளிட்டோர் இணங்கியுள்ளனர்.

ஆனாலும் ராஜீவ் காந்தியின் இழப்பு, நாட்டிற்கும் மட்டுமன்றி காங்கிரஸ் கட்சிக்கும் பேரிழப்பாகும்.  இருப்பினும் அவரை கொன்றவர்களை விடுதலை செய்யுமாறு தொடர்ந்து கோரிக்கைகள் முன்வைக்கப்படுகின்றன. இவை சில அரசியல் கட்சி மற்றும் பொது நலவாதிகளின்  கோரிக்கையாக இருக்கலாம்.

எனினும் காங்கிரஸின் தொண்டன் என்றதன் அடிப்படையில் தவறு செய்தவர்கள்  நிச்சயம் தண்டனை அனுபவிக்க வேண்டும்.  ஆகவே அவர்களை நாங்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டோம்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இங்கிலாந்தில் ஊரடங்கு தளர்வுகள் அறிவிப்பு – மக்கள் கொண்டாட்டம் !

இங்கிலாந்தில் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்‍கப்பட்டதையடுத்து, அந்நாட்டு மக்‍கள் தங்களது நண்பர்களுடன் மதுபான விடுதிகள் மற்றும் ஹோட்டல்களுக்‍கு சென்று குதூகலமடைந்து வருகின்றனர்.

இங்கிலாந்தில் கொரோனாவைக்‍ கட்டுப்படுத்த அந்நாட்டு அரசு பல்வேறு நடவடிக்‍கைகளை மேற்கொண்டது. பொதுமக்‍கள் கூடுவதை தவிர்க்‍கும் வகையில், முழு ஊரடங்கை அந்நாட்டு பிரதமர் Boris Johnson அமல்படுத்தினார். ஊரடங்கை மீறியவர்களுக்‍கு அபராதம் விதிக்‍கப்பட்டது. எப்போதும் சுதந்திரமாக இருக்‍கும் இங்கிலாந்து மக்‍கள், இந்த ஊரடங்கால் கடுமையான மன உளைச்சலுக்‍கு தள்ளப்பட்டனர். இதனால் ஊரடங்கை தளர்த்துமாறு ஆங்காங்கே போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

இந்நிலையில், இங்கிலாந்தில் கொரோனா பரவல் தற்போது குறைந்துள்ளதை அடுத்து, ஊரடங்கில் சில தளர்வுகள் அறிவிக்‍கப்பட்டுள்ளது. வெளியே செல்லும் பொதுமக்‍கள் எச்சரிக்‍கையுடனும், சமூக இடைவெளியை பின்பற்றுமாறும் அறிவுறுத்தப்பட்டனர். ஊரடங்கு தளர்த்தப்பட்டதால் உற்சாகமடைந்த அந்நாட்டு மக்‍கள், தலைநகர் லண்டனில் உள்ள மதுபானக்‍ கடைகளில், தங்களது நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் சென்று ஆனந்தமாய் மது அருந்தி மகிழ்கின்றனர். மேலும், ஹோட்டல்களுக்‍கு சென்றும் குதூகலமடைந்து வருகின்றனர்.

“துறைமுக நகர சட்டமூலத்துக்கு ஆதரவு வழங்கியதன் மூலம் மீண்டுமொரு மிகப்பெரிய காட்டிக்கொடுப்பை மைத்திரிபால சிறிசேன செய்துள்ளார்.” – சந்திரிகா பண்டாரநாயக்க

“துறைமுக நகர சட்டமூலத்துக்கு ஆதரவு வழங்கியதன் மூலம் மீண்டுமொரு மிகப்பெரிய காட்டிக்கொடுப்பை மைத்திரிபால சிறிசேன செய்துள்ளார். எனவும் கொழும்புத் துறைமுக நகர சட்டமூலம் ஊடாக இலங்கையைச் சீனாவின் கொலனியாக்கிவிட்டனர்.” எனவும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க குற்றங்சாட்டியுள்ளார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவித்ததாவது,

“அந்நியர்களின் ஆக்கிரமிப்பிலிருந்து பெரும் போராட்டங்களுக்கு மத்தியிலேயே எமது நாட்டுக்கு 1948 இல் சுதந்திரம் கிடைத்தது. அதன்பின்னர் 1972 இல் நாடு முழுமையாக சுதந்திரம் அடைந்தது. இந்நிலையில், கொழும்புத் துறைமுக நகர சட்டமூலம் ஊடாக இலங்கையைச் சீனாவின் கொலனியாக்கிவிட்டனர்.

இந்தச் சட்டமூலத்துக்கு ஆதரவு வழங்கியதன் மூலம் மீண்டுமொரு மிகப்பெரிய காட்டிக்கொடுப்பை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன செய்துள்ளார். ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை அவர் மொட்டு கட்சியிடம் அடகு வைத்துள்ளார். கட்சி கொள்கை மற்றும் ஆதரவாளர்களையும் காட்டிக்கொடுத்துவிட்டார்” – என்றார்.

இந்தியாவில் பரவும் கருப்பு பூஞ்சை நோய் இலங்கையிலும் – அச்சம் வழங்கப்பட்டுள்ள அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் !

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியில் பரவிவரும் கருப்பு பூஞ்சை நோயினால் பாதிக்கப்பட்ட ஒருவர் இலங்கையில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

அதன்படி, குறித்த நபர் அம்பாறை பகுதியில் இருந்து அடையாளம் காணப்பட்டுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் நிறைவேற்று அதிகாரி டொக்டர் பிரசாத் கொலம்பகே குறிப்பிட்டுள்ளார்.

இந்த நோய் அதிகரிக்குமாக இருந்தால், நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பது மாத்திரமன்றி, மரணங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கக்கூடும் என அவர் அச்சம் வெளியிட்டுள்ளார்.

இந்த நோய், கொவிட் வைரஸ் தொற்றுடன் எவ்வாறு இணைந்தது என்பது தொடர்பில் ஆராயப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த நோய் அம்பாறை பகுதிக்கு எவ்வாறு வந்தது என்பது தொடர்பில் பாரிய பிரச்சினை காணப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

திடீரென பலத்த காற்றுடன் பெய்த ஆலங்கட்டி மழை – மாரத்தான் ஓட்ட பந்தய போட்டியில் பங்கேற்ற 21 வீரர்கள் பலி !

சீனாவின் கன்சூ மாகாணம், பேயின் நகர் அருகே உள்ள சுற்றுலா தலத்தில் 100 கி.மீ. தொலைவுக்கான மாரத்தான் ஓட்ட பந்தய போட்டி நடைபெற்றது.  இதில், 172 பேர் கலந்து கொண்டனர். மலைப்பகுதியை கடக்கும் சவால் நிறைந்த இந்த மாரத்தான் போட்டியில் பங்கேற்ற வீரர்கள் ஆர்வத்துடன் தங்கள் இலக்கை நோக்கி ஓடிக்கொண்டிருந்தனர். அப்போது திடீரென பலத்த காற்றுடன் ஆலங்கட்டி மழை மற்றும் பனி மழை பெய்தது. வெப்பநிலையும் கடுமையாக குறைந்தது.
திடீரென தாக்கிய இந்த தீவிர தட்பவெப்பநிலையால் வீரர்கள் தொடர்ந்து முன்னேற முடியாமல் சிக்கிக்கொண்டனர். சில வீரர்கள் போட்டி அமைப்பாளர்களுக்கு தகவல் அனுப்பினர்.
சீனாவில் மோசமான வானிலை: மாரத்தானில் பங்கேற்ற 21 பேர் பலி | Dinamalar Tamil  News
இதையடுத்து மீட்புக்குழுவினர் விரைந்து சென்று வீரர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். மாரத்தான் போட்டி நிறுத்தப்பட்டது. இந்த இயற்கை சீற்றத்தின் தாக்கம் காரணமாக, 21 போட்டியாளர்கள் உயிரிழந்து உள்ளனர். மற்றவர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். அவர்களில் சிலரது உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது. அவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
பந்தய தூரத்தின் 20 கிலோ மீட்டரில் இருந்த 30 கிலோ மீட்டர் வரை திடீரென பேரழிவு தரும் வானிலை நிலவியதாகவும், குறுகிய நேரத்தில் ஆலங்கட்டி மழை மற்றும் பனி மழை பெய்ததால் வெப்பநிலை கடுமையாக குறைந்ததாகவும் பேயின் நகர மேயர் தெரிவித்துள்ளார்.

“தமிழ் மக்களுக்கு தனிநாட்டை வழங்குவதுதான் தேசப்பற்றாளர்களுடைய பிரச்சினை. வெளிநாட்டவர்களுக்கு ஈழத்தை வழங்க ஆதரவளிப்பார்கள்.” – ராஜித சேனாரத்ன

“தமிழ் மக்களுக்கு ஈழத்தை வழங்குவதை மாத்திரமே இந்த தேசப்பற்றாளர்கள் எதிர்க்கின்றனர். வெளிநாட்டவர்களுக்கு ஈழத்தை வழங்குவதில் இவர்களுக்கு சிக்கல் இல்லை. ” என  ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார் .

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நேற்று (22.05.2021) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் அவர் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில் ,

தமிழ் ஈழத்திற்கும் நாடு பிளவடைவதற்கும் எதிரானவர்கள் என்று பாரியளவில் கூச்சலிட்டவர்கள் தான் இன்று கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்ட மூலத்திற்கு ஆதரவளித்துள்ளனர். ஒரே நாடு ஒரே சட்டம் என்றல்லவா கூறினார்கள்? இன்று ஒரே நாடு ஒரே சட்டம் எங்கிருக்கிறது ? இந்த வலயத்திற்கு ஒரு நீதியும் எமது வலயத்திற்கு ஒரு நீதியுமே காணப்படுகிறது.

இதற்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரம் சமஷ்டி அதிகாரத்தை விட அதிகமானதாகும். இந்த வலயம் தனி இராச்சியமொன்றாகும். இது தனி ஈழமாகும். இதனை தனி ஈழமாகக் குறிப்பிடுவதற்கு தற்போது குறைவாகவுள்ள ஒரே காரணி அந்நாட்டு பொலிஸார் இந்த வலயத்தில் இல்லாதது மாத்திரமேயாகும்.

13 ஆவது திருத்தத்தை முழுமையாக செயற்படுத்தினால் நாடு பிளவடையும் என்று கூறினார்கள். 13 இற்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள் வெட்கமின்றி துறைமுக நகர சட்ட மூலத்திற்கு ஆதரவளித்துள்ளனர். 13 ஆவது திருத்தம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தால் கூட , ஒற்றையாட்சிக்குள்ளேயே அதிகாரம் பகிரப்பட்டிருக்கும்.

தமிழ் மக்களுக்கு ஈழத்தை வழங்குவதை மாத்திரமே இந்த தேசப்பற்றாளர்கள் எதிர்க்கின்றனர். வெளிநாட்டவர்களுக்கு ஈழத்தை வழங்குவதில் இவர்களுக்கு சிக்கல் இல்லை. குறித்த சட்ட மூலத்திற்கு ஆதரவளித்த அனைவரும் போலியான தேசப்பற்றாளர்கள். தற்போதைய அரசாங்கத்திற்கு நாடாளுமன்றத்தில் மாத்திரமே மூன்றில் இரண்டு பெரும்பான்மை காணப்படுகிறது. நாம் தொடர்ந்தும் நாடாளுமன்றத்திற்கு வெளியிலும் இதற்கு எதிரான செயற்பாடுகளை முன்னெடுப்போம்.

1977 இல் ஜே.ஆர்.ஜயவர்தன திரட்டியதைப் போன்று மக்கள் படையை இதற்கு எதிராக நாமும் திரட்டுவோம். அத்துடன் கொரோனா வைரசினை கட்டுப்படுத்துவதன் மூலம் உயிர்களை காப்பாற்றுவது அரசாங்கத்தின் முன்னுரிமைக்குரிய விடயமில்லை மாறாக கொழும்பு துறைமுகநகர சட்டமூலமே அரசாங்கத்திற்கு முக்கியமான விடயம்.

பல நிறுவனங்கள் மற்றும் மருத்துவ அமைப்புகள் 14 நாள் முடக்கலை கோரியுள்ளன.எனினும் அரசாங்கம் தனது அரசியல் நிகழ்ச்சி நிரலை முன்னெடுப்பதிலேயே கவனம் உள்ளது. மக்கள் தடுப்பூசியின் நன்மைகளை அனுபவிக்கவேண்டிய தருணம் இதுவென தெரிவித்துள்ள அவர் மக்களின் உயிர்களுக்கு முன்னுரிமை அளித்து நீண்ட நாள் முடக்கலை நடைமுறைப்படுத்தவேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

“சட்டமா அதிபர் திணைக்களத்தில் தமிழ் மொழியுடன் கூடிய புதிய பெயர்ப்பலகை மாற்றப்பட்டுள்ளது.” – அரச சட்டத்தரணி நிஷார ஜயரத்ன

சட்டமா அதிபர் திணைக்களத்தில் புதிதாகத் திறந்து வைக்கப்பட்டுள்ள இலத்திரனியல் நூலகத்தில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்ட பெயர்ப்பலகைக்குப் பதிலாக, தமிழ் மொழியுடன் கூடிய புதிய பெயர்ப்பலகை மாற்றப்பட்டுள்ளது எனச் சட்டமா அதிபர் திணைக்களத்தின் இணைப்பு அதிகாரி அரச சட்டத்தரணி நிஷார ஜயரத்ன ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.

சட்டமா அதிபர் திணைக்களத்தில் சீன அரசின் நிதி உதவியுடன் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட இலத்திரனியல் நூலகத்தை கடந்த 19ஆம் திகதி  இலங்கைக்கான சீனத் தூதுவர் குய் ஜெங் கோங் திறந்து வைத்தார்.

இந்த நூலகத்தில் விபரங்கள் பொறிக்கப்பட்ட பெயர்ப்பலகையில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டமைக்கு எதிராகப் பலத்த கண்டனங்கள் எழுந்துள்ளன.

இந்நிலையிலேயே, குறித்த பெயர்ப்பலகையை மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனச் சட்டமா அதிபர் திணைக்களத்தின் இணைப்பு அதிகாரி கூறியுள்ளார்.

“பொருளாதார ரீதியில் நாட்டினை வீழ்த்தி, கடன்களில் நெருக்கி அதன் மூலமாக நாட்டினை முழுமையாக ஆக்கிரமிக்கும் நகர்வுகள் இடம்பெற்று வருகின்றன.” – சரத் பொன்சேகா

“பொருளாதார ரீதியில் நாட்டினை வீழ்த்தி, கடன்களில் நெருக்கி அதன் மூலமாக நாட்டினை முழுமையாக ஆக்கிரமிக்கும் நகர்வுகள் இடம்பெற்று வருகின்றன.”  என நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்டுள்ள கொழும்பு துறைமுக நகர் பொருளாதார ஆணைக்குழு சட்டம் குறித்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறினார்.

இதன்போது மேலும் கருத்துரைத்த அவர்,

யுத்தத்தால் மாத்திரம் ஒரு நாட்டின் பூமியை ஆக்கிரமிக்க முடியாது, இன்றைய சூழ்நிலையில் நிலம் மாத்திரம் அல்ல, இறையாண்மை, சுயாதீனத் தன்மைக்கும் பாதிப்புகள் ஏற்படும் பல்வேறு நகர்வுகள் முன்னெடுக்கப்படுகின்றன. இதில் பொருளாதார ரீதியில் நாட்டினை வீழ்த்தி, கடன்களில் நெருக்கி அதன் மூலமாக நாட்டினை முழுமையாக ஆக்கிரமிக்கும் நகர்வுகள் இடம்பெற்று வருகின்றன. கடந்த காலங்களிலும் இந்த சூழ்ச்சி திட்டங்கள் பல்வேறு நாடுகளில் இடம்பெற்றுள்ளன. இன்று எமக்கும் அவ்வாறான நிலையொன்று ஏற்படும் சூழல் காணப்படுகின்றது.

கொழும்பு துறைமுக நகர் பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்தில் ஆரம்பத்தில் அரசாங்கம் முன்வைத்த சட்டமூலத்தில் பல விடயங்களில் எம்மால் இணக்கம் தெரிவிக்க முடியாத நிலை இருந்தது. நீதிமன்றத்தை நாடி காரணிகளை கூறினோம். இவற்றில் 25 திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. எனினும் திருத்தங்கள் செய்தாலும் எம்மால் அங்கீகரிக்க முடியாத நிலையே காணப்படுகின்றது.

அதற்கு காரணம் என்னவெனில் பிரதானமாக மாற்றங்களை செய்ய வேண்டும் என நாம் வலியுறுத்திய காரணிகளை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளவில்லை. குறிப்பாக பொருளாதார ஆணைக்குழுவின் நியமன விடயங்களில் ஜனாதிபதியின் தனித் தீர்மானங்களுக்கு அமைய நாட்டுக்கு பொருந்தாத தீர்மானங்கள் எடுக்கப்படலாம். எனவே இதனை பாராளுமன்ற அதிகாரத்தின் கீழ் கொண்டுவர வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாக இருந்தது.

ஆனால் நாம் துறைமுக நகர் திட்டத்தை நிராகரிக்கின்றோம் என அர்த்தம் கொள்ளத் தேவையில்லை. இவ்வாறான திட்டங்களை நாம் சரியாக கையாண்டால் நாட்டின் பொருளாதாரத்திற்கு நன்மையளிக்கும். ஆனால் துறைமுக நகரை இலங்கை எவ்வாறு கையாள்கின்றது என்பதில் முரண்பாடுகள் உள்ளன.

99 ஆண்டுகளுக்கு சீனாவுக்கு நிலத்தை குத்தகைக்கு கொடுப்பதில் இலங்கை பெற்றுக்கொள்ளப்போகும் நன்மைகள் என்ன? நாமும் அதிகளவில் நிதி செலவழித்துள்ளோம். அடிப்படை வசதிகளை பெற்றுக்கொடுக்கும் வேலைத்திட்டம், வீதி புனரமைப்பு போன்றவை இலங்கை அரசாங்கத்தினால் செய்துகொடுக்கப்பட்டுள்ளது.

எனவே எமக்கும் இதில் அதிகளவு பங்கு இருக்க வேண்டும் என நினைக்கிறோம். அதேபோல் துறைமுக நகர் பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் இந்த சூழ்நிலையில் கொண்டுவந்து நிறைவேற்றும் நேரம் அல்ல. நாடாக சகலரும் பாதிக்கப்பட்டுக்கொண்டுள்ள நிலையில் சீனாவை திருப்திப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை.

உலக நாடுகளும் இப்போது எம்மை பார்த்துக்கொண்டுள்ள நிலையில் நாம் எடுக்கும் தீர்மானங்கள் அவசர அவசரமாக இருக்கக்கூடாது என்றே கருதுகிறோம். சீனாவுக்கு ஏற்ற விதத்திலேயே இன்றுவரை துறைமுக நகர் திட்டம் கையாளப்படுகின்றது. இந்த நிலப்பரப்பில் கட்டியெழுப்படும் பொருளாதாரம் எமது நாட்டினை மிஞ்சிய ஒன்றாக அமையும். அது நேரடியாக இலங்கையை பாதிக்கும் என அவர் கூறினார்.

“தமிழை எவ்வாறு புறக்கணிப்பது என்பது தொடர்பில் இலங்கை அரசிடமே சீனர்கள் கற்றுக்கொண்டுள்ளனர்.” – மனோகணேசன் காட்டம் !

“தமிழை எவ்வாறு புறக்கணிப்பது என்பது தொடர்பில் இலங்கை அரசிடமே சீனர்கள் கற்றுக்கொண்டுள்ளனர்.” ன தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் கூறியுள்ளார்.

துறைமுக நகர், சட்ட மாஅதிபர் திணைக்களம் உள்ளிட்ட பல பகுதிகளில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டு சீன மொழி உள்வாங்கப்பட்டுள்ளது. இது பலரிடையேயும் அதிருப்தியான மனோநிலையை உருவாக்கியுள்ளது. இது தொடர்பில் கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

அந்த வகையில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டு வருகின்றமை தொடர்பில் சீனத் தூதுவரை இதற்கு முன்னர் சந்தித்து விளக்கியிருந்த போதிலும் அதனால் எந்தவொரு பயனும் ஏற்படவில்லை. தமிழைத் தவிர்த்து, இலங்கையின் மொழிச் சட்டத்தை சீனர் மீறுகிறார்கள் எனவும் சிங்களம், தமிழ் ஆகிய இரு மொழிகளையும் தவிர்த்த சீன மொழி மாத்திரமுள்ள பெயர் பலகைகளும் உள்ளன எனவும் மனோ கணேசன் கூறியுள்ளார்.

இந்நிலை தொடருமானால் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்த வேண்டிய சூழல் ஏற்படும் எனவும் தமிழை எவ்வாறு புறக்கணிப்பது என்பது தொடர்பில் இலங்கை அரசிடமே சீனர்கள் கற்றுக்கொண்டுள்ளனர் எனவும் அவர் விமர்சித்துள்ளார்.

சீனா முன்னெடுக்கும் திட்டங்களைத் தவிர உள்நாட்டிலேயே தமிழ் மொழியை புறக்கணிக்கும் நடவடிக்கைகளை இலங்கை  அரசாங்கம் மேற்கொள்வதாகவும் அவர் கூறியுள்ளார்.