June

June

“ரணில் – மைத்திரி ஆட்சியில் கிடைத்த வாய்ப்பை அலரிமாளிகைக்குள் அடகு வைத்த சுமந்திரன் பொய்யை உண்மையாக புரட்டி புரட்டி போடக்கூடிய திறனுள்ளவர்.” – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

இலங்கையின் கடற்பரப்பில் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்த எக்ஸ்-பேர்ள் கப்பல் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியிருந்தது. மேலும் அந்த கப்பலில் இருந்து கரையொதுங்கிய பொருட்களை சேகரித்த மக்களுக்கும் ஒவ்வாமை நிலை ஏற்பட்டிருந்தது. இந்நிலையில்  “கடலுணவுகளை உட்கொள்தற்கு மக்கள் தயங்கத் தேவையில்லை” என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஊடகங்கிடம் தெரிவித்திருந்தார்.

அண்மையில் இது தொடர்பில் கருத்து வெளியிட்ட எம்.ஏ.சுமந்திரன்  “கடலுணவுகளை உட்கொள்தற்கு மக்கள் தயங்கத் தேவையில்லை” என கூறிய  கடற்றொழில் அமைச்சரின் கருத்து பொறுப்பற்றது என சாடினார்.

இந்நிலையில் “ கடலுணவு உண்பது தொடர்பாக விஞ்ஞான ரீதியான ஆய்வுகள் ஏதும் இன்றி, உண்மையைப் பொய்யாகவும் – பொய்யை உண்மையாகவும் புரட்டி புரட்டி போடுகின்ற தொழில் திறனின் அடிப்படையில் பொறுப்பற்ற கருத்தினை  எம்.ஏ.சுமந்திரன் வெளிப்படுத்தியுள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குற்றஞ்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இவ்வாறு  தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

கப்பல் விபத்துக்குக் காரணமாக பாதிப்புக்கள் ஏற்பட்டிருக்கும் என்று கருதப்படுகின்ற கடற் பரப்பில் மீன் பிடித் தொழிலில் ஈடுபடுவதற்கு இறுக்கமான தடை விதிக்கப்பட்டிருக்கிறது. வடக்கு கிழக்கு உட்பட்ட நாட்டை சூழவுள்ள பாதிப்புக்கள் அற்ற கடல் பிரதேசங்களிலும் ஆழ்கடல் பிரதேசத்திலும் பிடிக்கப்படுகின்ற மீன்களே கொழும்பு உட்பட நாட்டின் அனைத்து பிரதேச சந்தைகளிலும் தற்போது விற்பனை செய்யப்படுகின்றன.

அவ்வாறு சந்தைகளுக்கு கொண்டு வரப்படுகின்ற மீன்களிலும் சந்தேகத்திற்கிடமான பதார்த்தங்கள் கலந்து இருக்கின்றதா என்பது தொடர்பான பரிசோதனைகளை மேற்கொள்வதற்கும் ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இவ்வாறான பின்னணியிலேயே கடலுணவுகளை உண்பதற்கு மக்கள் தயங்கத் தேவையில்லை என்ற கருத்து முன்வைக்கப்பட்டிருந்தது. ஆனால், இவை தொடர்பில் எந்தவிதமான பிரச்சனையும் இன்றி, அரசாங்கத்திற்கும் எனக்கும் எதிரான கருத்தை தெரிவிக்க வேண்டும் என்கின்ற அரசியல் நோக்கத்துடன் கருத்து தெரிவித்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன், அவல் என்று நினைத்து உரலை இடித்திருப்பதாகவும் கடற்றொழில் அமைச்சர் தெரிவித்துளளார்.

அதாவது கொழும்பு, கம்பஹா, களுத்துறை ஆகிய மாவட்ட கடல் பிரதேசங்களிலேயே பாதிப்பு ஏற்பட்டிருக்கும் என்று சந்தேகிக்கப்படுகின்றது.

அவ்வாறான சூழலில் நாடளாவிய ரீதியில் கடலுணவு உட்கொள்வதை மக்கள் தவிர்ப்பார்களாயின், வடக்கு கிழக்கு பிரதேசத்தில் கடற்றொழில் சார் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்ற பல்லாயிரக்கணக்கான மக்களும் பாதிக்கப்படுவார்கள் என்பது தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன்  கரிசனைபட்டதாக தெரியவில்லை என்று தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா,குறுகிய அரசியல் நோக்கங்களுக்காகவும், சுயநலன்களுக்காகவும் வடக்கு மாகாண சபை ஆட்சியை வீணாக்கியவர்கள், கிழக்கு மாகாண சபையை தாரை வார்த்துக் கொடுத்தவர்கள், ரணில் – மைத்திரி ஆட்சியில் கிடைத்த வாய்ப்பை அலரிமாளிகைக்குள் அடகு வைத்தவர்கள், கடற்றொழிலாளர்கள் தொடர்பாக அக்கறையோடு செயற்படுவார்கள் என்று எதிர்பார்க்க முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும், இவ்வாறனவர்களின் கடந்த கால போலித் தேசிய செயற்பாடுகளும், தீர்க்கதரிசனமற்ற குறுகிய சிந்தனைகளும், அரசியல் அனுபவமற்ற சிறுபிள்ளைதனங்களையும் அதிகாரங்களை  பாதுகாத்து முன்னோக்கி நகர வேண்டும் என்ற கொள்கைகள் அற்ற வியாபார சிறுமைகளுக்கும் வாய்ப்பினை  ஏற்படுத்திக் கொடுத்திருக்கின்றது என்பதை எதிர்காலத்திலாவது சுமந்திரன் போன்றவர்கள் புரிந்துகொள்ள வேண்டும் எனவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

யாழில் மிக வேகமாக போடப்பட்ட 50,000 தடுப்பூசிகள் – தடுப்பூசி போட மக்கள் ஆர்வம் – எவருக்கும் பாதிப்பு இல்லை !

யாழ்.மாவட்டத்திற்கு முதற்கட்டமாக வழங்கப்பட்ட தடுப்பூசிகள் இன்றுடன்(புதன்கிழமை) நிறைவடைந்ததாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க. மகேசன் தெரிவித்துள்ளார்.

அடுத்த கட்ட தடுப்பூசிகள் வார இறுதியில் கிடைக்குமென எதிர்பார்க்கப்படுகின்றது.

எனவே ஏற்கெனவே தடுப்பூசி வழங்க தயாராக இருந்த கிராம சேவகர் பிரிவுகளில் நாளைய தினம் தடுப்பூசி வழங்கப்பட மாட்டாது எனவும் அந்த குறித்த பகுதி மக்களுக்கான தடுப்பூசிகள் இரண்டாம் கட்ட தடுப்பூசி வந்தவுடன் குறித்த நிகழ்ச்சி நிரலின் படி தடுப்பூசி வழங்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

எனவே இந்த விடயம் தொடர்பில் பொது மக்கள் குழப்பமடைய தேவையில்லை எனவும் எதிர்வரும் வாரமளவில் யாழ் மாவட்டத்திற்கு அரசினால் அடுத்த கட்ட தடுப்பூசி வழங்கப்படும் போது ஏற்கனவே சுகாதாரப் பிரிவினர் தடுப்பூசி வழங்கல் தொடர்பில் தயாரிக்கப்பட்ட நிகழ்ச்சி நிரலின் படி தொடர்ச்சியாக பொதுமக்களுக்கு தடுப்பூசி வழங்கப்படவுள்ளது.

மேலும், ஏற்கனவே யாழ் மாவட்டத்திற்கு 50ஆயிரம் தடுப்பூசிகள் அரசினால் வழங்கப்பட்ட நிலையில் கடந்த ஞாயிற்றுக் கிழமையிலிருந்து இன்று வரை அந்த தடுப்பூசிகள் மக்களுக்கு  விநியோகிக்கப்பட்டு  இன்றுடன் தடுப்பூசி நிறைவடைந்துள்ள நிலையில் அடுத்தகட்ட தடுப்பூசி கிடைத்தவுடன் ஏனைய மக்களுக்கு  வழங்கப்படவுள்ளது.

குறிப்பாக  நேற்று மாலையுடன் 32 ஆயிரம் தடுப்பூசிகள் நிறைவடைந்த நிலையில் இன்றைய தினம் மிகுதி தடுப்பூசியும் நிறைவடைந்துள்ளது.

எனினும் இன்றைய தினம் யாழ்ப்பாண பல்கலைக்கழக பணியாளர்கள் மற்றும்  15 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி வழங்கப்படும் என எதிர்பார்த்து இருந்த போதிலும் கூடுதலான மக்கள் ஆர்வம் காட்டி தடுப்பூசியை பெற்றதன் காரணமாக இன்று மதியத் துடன் குறித்த தடுப்பூசிகள் அனைத்தும் மாவட்டத்தில் நிறைவடைந்து உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

யாழ்.மாவட்டத்தில் தடுப்பூசி பெற்றோர் எவருக்கும் பாதிப்பு இல்லை. எனவே பொதுமக்கள் அச்சப்படாது தடுப்பூசியை பெற்று கொள்ளுங்கள் என வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன்  தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இஸ்ரேலின் 11 ஆவது ஜனாதிபதியாக ஐசக் ஹெர்சாக் !

இஸ்ரேலின் 120 சட்டமன்ற உறுப்பினர்களிடையே இடம்பெற்ற இரகசிய வாக்கெடுப்பில் வெற்றிபெற்று 11 ஆவது ஜனாதிபதியாக ஐசக் ஹெர்சாக் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

யார் இந்த ஐசக் ஹெர்சாக்

எண்பத்தேழு சட்டமன்ற உறுப்பினர்கள் கொண்ட சட்டமன்ற உறுப்பினர்களில் ஐசக் ஹெர்சாக் 87 வாக்குகளைப் பெற்றார்.

2003 முதல் 2018 வரையான காலப் பகுதியில் கெனெசெட்டின் உறுப்பினராக பணியாற்ற அவர் அந்தக் காலப்பகுதியில் நலன்புரி மற்றும் சமூக சேவைகள் அமைச்சர் பதவி உட்பட பல அமைச்சுப் பதவிகளை வகித்துள்ளார்.

இந்நிலையில் இஸ்ரேலின் அடுத்த ஜனாதிபதியாக ஐசக் ஹெர்சாக் தெரிவு செய்யப்பட்டதற்கு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அமுலில் உள்ள பயணக்கட்டுப்பாடு நீட்டிப்பு !

நாடு முழுவதிலும் தற்போது அமுலில் உள்ள பயணக்கட்டுப்பாடு வருகின்ற ஜுன் 14ஆம் திகதிவரை நீடிக்கப்படுவதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா இன்று புதன்கிழமை அறிவித்துள்ளார்.

இதன்படி அமுலில் இருக்கின்ற பயணக்கட்டுப்பாடுகள் வருகின்ற 14ஆம் திகதி திங்கட்கிழமை அதிகாலை 04 மணிவரை அமுலில் இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

“தற்போதைய அரசாங்கத்தின் மீது மக்கள் கொண்டிருந்த நம்பிக்கைகள் அனைத்தும் சிதைந்துவிட்டது.” – கர்தினால் ரஞ்சித் ஆண்டகை குற்றச்சாட்டு !

“தற்போதைய அரசாங்கத்தின் மீது மக்கள் கொண்டிருந்த நம்பிக்கைகள் அனைத்தும் சிதைந்துவிட்டது.”  என கொழும்பு பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை கூறியுள்ளார்.

பொரள்ளையில் உள்ள பேராயரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் இது தொடர்பில் தெரிவிக்கும் போது ,

‘நல்லாட்சி’ மற்றும் ‘செழிப்பு பார்வை’ என்ற கருப்பொருளுடன் எந்த அரசாங்கங்கள் ஆட்சிக்கு வந்தாலும் அது துரோகங்களை மட்டுமே செய்துள்ளது என்றும் இந்த பயணம் இப்போது நிறுத்தப்பட வேண்டும் என்றும் கூறினார்.

நாட்டின் தற்போதைய நிலைமை குறித்து கவலைப்படுவதாகக் கூறிய அவர், நாடு எங்கு செல்கிறது என்பது குறித்து ஒரு பிரச்சினை எழுந்துள்ளது, யார் முடிவுகளை எடுக்கின்றார்கள், யார் நாட்டை ஆள்கின்றார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளதாக குறிப்பிட்டார்.

நாட்டைப் பாதுகாப்பதாகக் கூறி ஆட்சிக்கு வந்த குழு, நாட்டை அழிவின் பாதையில் இழுத்துச் செல்வதாக வேதனையுடன் அறிவிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. தற்போதைய அரசாங்கத்தின் மீது மக்கள் கொண்டிருந்த நம்பிக்கைகள் அனைத்தும் சிதைந்துவிட்டது.  நாட்டில் மிகவும் ஆபத்தான சூழல் உருவாக்கப்பட்டு வருகிறது எனவும் அவர் கூறியுள்ளார்.

தற்போதுள்ள வளங்களை விற்பது எளிதானது ஆனால் வளர்ச்சி என்பது நாட்டின் அனைத்து வளங்களையும் விற்றுவிடுவது அல்ல. மேலும், இந்த நேரத்தில் எமது பிராந்தியத்தை மற்ற நாடுகளுக்கு தியாகம் செய்ய வேண்டாம் என்று அரசாங்கத்தை வலியுறுத்தினார்.

ஒரு அரசாங்கம் மக்களை மனதில் கொண்டே முடிவுகளை எடுக்க வேண்டும், பணக்கார, சக்திவாய்ந்த அல்லது வெளிநாட்டு சக்திகளின் பக்கத்திலிருந்து அல்ல.”  என்றும் குறிப்பிட்டார்.

“முன்னாள் போராளிகள் மீது மேற்கொள்ளப்படும் தேவையற்ற கைது நடவடிக்கைகள் அரசாங்கத்திற்கு மிகப் பாரிய விளைவுகளை கொடுக்கும்.” – ஜனநாயகப் போராளிகள் கட்சி

“முன்னாள் போராளிகளின் அமைப்பு மீது தேவையற்ற கைது நடவடிக்கைகளை மேற்கொள்வது எதிர்காலத்தில் அரசாங்கத்திற்கு மிகப் பாரிய விளைவுகளை கொடுக்கும்.” –  என ஜனநாயகப் போராளிகள் கட்சியின் செயலாளர் இ.இளங்கதிர் தெரிவித்துள்ளார்.

ஜனநாயகப் போராளிகள் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நிர்வாகப் பொறுப்பாளாரான நாகராசா பிரதீபராசா அவர்கள் பயங்கரவாதத்தை மீளுருவாக்கும் விதமான பதிவுகளை சமூக வலைதளத்தில் பதிவேற்றினார் என்ற அடிப்படையில் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டமை தொடர்பில் தமது கட்சி சார்பில் கண்டனம் வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஜனநாயகப் போராளிகள் கட்சியானது ஜனநாயக ரீதியில் அரசியல் நீரோட்டத்தில் பயணிக்கும் ஒரு கட்சியாகும். அந்தவகையில் நாங்கள் எமது மக்களை ஒரு ஜனநாயக வழிக்குக் கொண்டு வந்து அதற்கூடாக தமிழ் மக்களுக்கான அரசியற் தீர்வுத் திட்டத்தினைக் கொண்டு வருவதற்காகவே முயற்சித்துக் கொண்டு வருகின்றோம். இதுவே எங்கள் நோக்கமுமாகும்.

இவ்வாறு எமது நோக்கமும், செயற்பாடுகளும் இருக்கையில் தமிழீழ விதலைப் புலிகள் அமைப்பின் மௌனத்தின் பின்னர் புனர்வாழ்வளிக்கப்பட்டு ஜனநாயக வழியில் இயங்கும் போராளிகளைக் கொண்டு உருவாக்கப்பட்ட எமது ஜனநாயகப் போராளிகள் கட்சியின் மட்டக்களப்பு மாவட்டத்தின் நிர்வாகப் பொறுப்பாளர் தீபன் அவர்களை நேற்றைய தினம் இலங்கையின் புலனாய்வுத் துறையினர் கைது செய்துள்ளனர்.

இந்த கைது விடயத்தினை நாங்கள் வன்மையாககக் கண்டிக்கின்றோம். ஏனெனில் ஜனநாயக வழியில் செயற்பட்டுக் கொண்டிருக்கும் முன்னாள் போராளிகள் மீது தேவையற்ற வகையில் கைதுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த நாட்டில் இனப்படுகொலை நடைபெற்றுள்ளது. அவற்றை எமது தமிழ் மக்களும், போராளிகளும் நினைவு கூருவது வழமையானதொரு விடயம். அது பயங்கரவாதத்தை வளர்க்கும் செயற்பாடு அல்ல. படுகொலை செய்யப்பட்ட மக்களை நினைவு கூருவது எவ்வாறு பயங்கரவாதத்தை வளர்க்கும் செயற்பாடாக அமையும்? அந்தவகையில் அந்த விடயம் தொடர்பில் எமது மட்டக்களப்பு மாவட்ட நிர்வாகப் பொறுப்பாளர் முகநூலில் பதிவேற்றிய தரவு தொடர்பாகவும், தலைவர் பிரபாகரனுடைய பிறந்தநாளை முன்னிட்டு பதிவேற்றிய தரவு தொடர்பிலும் அவர் கைது செய்யப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

இவ்வாறு படுகொலை செய்யப்பட்ட மக்களை நினைவுகூருவதும், தலைவர் பிரபாகரன் அவர்களின் புகைப்படத்தினை பதிவேற்றம் செய்வதும் ஒரு பயங்கரவாதச் செயற்பாட்டை மீள உருவாக்கும் என்பது சாத்தியமில்லாததும், முட்டாள் தனமானதுமான ஒரு கருதுகோள். எனவே இவ்வாறு சாத்தியமில்லாத விடயங்களை முன்நிறுத்தி எமது முன்னாள் போராளிகள் கைது செய்யப்படுவது மிகவும் கண்டிக்கத்தக்கது.

இந்த நாட்டின் அரசாங்கத்திற்கு நாங்கள் தெளிவாக ஒன்றைச் சொல்லிக் கொள்ள விரும்புகின்றோம். தமிழ் மக்கள் மீதும், தமிழ் மக்களுக்குப் பாதுகாவலர்களாக இருக்கின்ற முன்னாள் போராளிகளின் அமைப்பான ஜனநாயகப் போராளிகள் கட்சி மீதும் தேவையற்ற கைது நடவடிக்கைகளை மேற்கொள்வது எதிர்காலத்தில் அரசாங்கத்திற்கு மிகப் பாரிய விளைவுகளை ஏற்படுத்தக் கூடிய சந்தர்ப்பங்களைத் தான் உருவாக்கும்.

இந்த விடயங்களை நாங்கள் பன்நாட்டு சமூகத்திற்கு எடுத்துக் கூறியுள்ளோம். அனைத்து நாடுகளின் தூதுவர்களுடனும் பேசியிருக்கின்றோம். சர்வதேச ரீதியாகவும் நாங்கள் இந்த விடயத்தைக் கொண்டு செல்வோம். அதனூடாக இலங்கைக்கு மிகப் பெரிய அழுத்தத்தையும் கொடுப்போம். இன்றைய நிலையில் அரசியல் ரீதியில் ஜனநாயக வழியில் செயற்படுகின்ற போராளிகள் மத்தியில் ஒரு பதட்டமான சூழ்நிலை காணப்படுகின்றது. அவர்களுக்கான பாதுகாப்பு கேள்விக்குறியாகி இருக்கின்றது. இதற்குப் பொறுப்புக் கூற வேண்டிய கடப்பாடு அரசாங்கத்திற்கு இருக்கின்றது.

அதேநேரத்தில் கைது செய்யப்பட்ட எமது உறுப்பினர் தொடர்பில் எமது செயற்பாட்டாளர்கள் களுவாஞ்சிக்குடி காவல்நிலையத்திற்குச் சென்று பேசிய போது அவர்களை அச்சுறுத்தும் செயற்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன. கைது செய்யப்பட்ட தீபன் அவர்களது குடும்பமும் மிகவும் பயமுற்று இருக்கின்றது.

எனவே இது தொடர்பில் இலங்கை அரசாங்கத்தினுடைய அனைத்து துறை சார்ந்த செயற்பாட்டாளர்களிடமும் நாங்கள் ஒரு வேண்டுகோள் விடுக்கின்றோம். தமிழீழ விடுதலைப் புலிகளுடைய முன்னாள் போராளிகள் தற்போது முற்று முழுதாக ஜனநாயக வழியிலும், அரசியல் ரீதியாகவும் எமது மக்களுடைய தீர்வை முன்நோக்கி செயற்பட்டு வருகின்றார்களே தவிர எவ்வித மாறுபட்ட செயற்பாடுகளிலும் ஈடுபடவில்லை. மாறாக உங்கள் மூலமான இந்த நாட்டில் பயங்கரவாதத்தைத் துண்டும் செயற்பாடுகளை முற்றாக நிறுத்திக் கொள்ளுங்கள் என்று தெரிவித்துள்ளார்.

குழந்தைப் போராளியின் மீதான கூட்டுப் பாலியல்வல்லுறவு: புளொட் – தீப்பொறி கொட்டியவர்களை காட்டிக்கொடுங்கள்!!! : த ஜெயபாலன்

பாலியல் வல்லுறவு என்பது மன்னிக்க முடியாதவொரு கொடும் குற்றம். ஆனாலும் இந்தக் கொடும் குற்றத்திற்கு ஆளான பெண்கள் சமூகத்தின் பழிச்சொல்லுக்கும் ஏளனத்திற்கும் பயந்து மௌனமாக்கப்படுகின்றனர். இது பாலியல் வன்கொடுமை செய்த ஆணைத் தப்பிக்க வைக்கின்றது. இதனால் இந்தக் கொடுமையயைப் புரிந்த ஆண்கள் எதிர்காலத்திலும் இவ்வாறான பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கின்றது. தமிழீழ விடுதலைப் போராட்டம், தமிழ் மக்களுக்கு எதிரான ஒடுக்குமுறைக்கு எதிரானதாக முன்னெடுக்கப்பட்ட போதும் அப்போராட்டத்தில் தங்களை இணைத்துக்கொண்ட பலர்: பெண்களை, ஏனைய சமூகத்தவர்களை, ஏனைய பிரதேசத்தவர்களை, ஏனைய மதத்தவர்களை ஒடுக்குபவர்களாகவும் மற்றையவர்கள் பற்றிய கழிவிரக்கம் அற்றவர்களாகவும் இருந்துள்ளனர்.

இவர்களை அரசியல் ரீதியில் வளம்படுத்தி மனித நேயர்களாக்குவதற்கான தேவையயை இயக்கங்கள் கொண்டிருக்கவலில்லை. அதற்கான கால அவகாசமும் அந்த இயக்கங்களுக்கு இருக்கவில்லை. சில அரசியல் வகுப்புகளினூடாக சில முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதும் அடிப்படையில் பாரிய மாற்றங்கள் நிகழவில்லை. இது அனைத்து தமிழ் விடுதலை அமைப்புகளிலும் காணப்பட்ட ஒரு குணாம்சம். அதனால் தான் பெண்களுக்கு எதிரான அல்லது பெண்களை இரண்டாம் தரமாக எண்ணும் போக்கு, பாலியல் துன்புறுத்தல்கள், ஏனையவர்களுக்கு எதிரான வன்மம், சித்திரவதைகள், கொலைகள் சர்வ சாதாரணமாக தமிழீழ விடுதலை இயக்கங்களால் (குறிப்பாக புளொட் – தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம், புலிகள் – தமிழீழ விடுதலைப் புலிகள், ரெலோ – தமிழீழ விடுதலை இயக்கம்) மேற்கொள்ளப்பட்டது. இதற்கு எந்த விடுதலை இயக்கமும் விதிவிலக்காக இருக்கவில்லை.

2020 இல் கூட பிரித்தானியாவில் 118 பெண்கள், ஆண்களால் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். ஒரு குட்டித்தீவான இலங்கையில் 100,000 பேருக்கு 8 பாலியல் வல்லுறவு நடைபெறுகின்றது. ஒப்பீட்டளவில் இந்தியாவின் பாலியல் வல்லுறவு விகிதாசாரத்துடன் ஒப்பிடுகையில் இலங்கையின் விகிதாசாரம் நான்கு மடங்கு அதிகம். இந்தியாவில் 100,000 பேருக்கு இருவரே பாலியல் வல்லுறவுக்கு உள்ளாகின்றனர். பாலியல் வல்லுறவு தொடர்பான மயையான விம்பங்களுக்குள் இருந்து நாம் வெளிவர வேண்டும்.

1980க்களின் நடுப்பகுதி, தமிழீழ விடுதலைப் போராட்டம் எழுச்சி கொண்டிருந்த காலம். அக்காலகட்டத்தில் யாழ்ப்பாணம் ‘பொடியளின்’ கைகளில் இருந்தது. புளொட், ரெலோ, புலி ஆகிய மூன்று பிரதான இயக்கங்களே ஆள் மற்றும் ஆயுத பலத்தில் முன்நின்றனர். புளொட் – தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் பல்லாயிரக்கணக்கான இளைஞர் யுவதிகளை அணிசேர்த்து மிகப்பலமான ஆளணி உடைய அமைப்பாக இருந்தது.

அவ்வமைப்பின் தலைமையின் எதேச்சதிகாரப் போக்கு, இராணுவக் கட்டமைப்பிற்கும் அரசியல் கட்டமைப்பிற்கும் இடையே ஏற்பட்ட பிளவு குழுவாதப் போக்கு என்பன விடுதலைக் கனவோடு அல்லது சாகசங்கள் நிகழ்த்த வந்த பலரையும் இயக்கத்தை விட்டு வெளியேற நிர்ப்பந்தித்தது. இயக்கத்தை விட்டு வெளியேறுபவர்களை துரோகிகளாக கருதும் மனநிலை; தலைமைக்கு விசுவாசமான சிறுபிரிவினரிடம் இருந்தாலும்; பெரும்பாலானவர்கள் யதார்த்தத்தைப் புரிந்துகொண்டு அவ்வாறான வெளியேற்றங்களை தடுக்கவோ கட்டுப்படுத்தவோ முயற்சிக்கவில்லை.

அவர்கள் இயக்கத்தை விட்டு வெளியேறாமல் இருந்ததற்கு முக்கிய காரணங்களில் தங்களை நம்பி இயக்கங்களுக்குள் வந்தவர்கள்; அல்லது தங்களால் இயக்கத்தில் சேர்க்கப்பட்டவர்களைக் கைவிட்டுவிட்டு தாங்கள் மட்டும் தப்பிச் சென்றுவிட முடியாது; என்ற எண்ணப்பாடும் முக்கியமானது. அதனை இங்கு எவ்விதத்திலும் குறைத்து மதிப்பிட முடியாது. மேலும், நாம் நம்பி வந்த இயக்கத்தை அதற்குள் போராடியே திருத்தலாம் என்ற நம்பிக்கையிலும் சிலர் இருந்தனர்.

அதனால் புளொட்டை விட்டு வெளியேறிய குறிப்பாக தீப்பொறிக் குழுவினர் அனைவரும் முற்போக்கானவர்கள் புரட்சியாளர்களும் அல்லர் புளொட்டை விட்டு வெளியேறாத அனைவரும் புளொட் தலைமையின் விசுவாசிகளும், துரோகத்தை சுமந்தவர்களும் அல்லர். ஆகவே புளொட்டில் இருந்து வெளியேறிய தீப்பொறிக் குழுவினரோ அல்லது வெளியேறாமலே இருந்த புளொட் அமைப்பினரோ சுத்தமான சுவாமிப்பிள்ளைகள் என்ற முடிவுக்கு யாரும் ஒரு தலைப்பட்சமாக வந்துவிடமுடியாது. இருதரப்பிலுமே அடிப்படை நேர்மையும் மனிதத்துவமும் உடையவர்களும் அற்றவர்களும் இருந்துள்ளனர். இந்தப் பின்னணியிலேயே புளொட்டின் 17 வயதேயான பெண் குழந்தைப் போராளியயை ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் சிலர் கூடியிருக்க வன்புணர்ந்த சம்பவத்தை நோக்க வேண்டும். இன்று அந்தப் பெண் போராளி எம்மத்தியில் இல்லை. அவருக்கு இழைக்கப்பட்ட மிகக் கொடிய குற்றத்தின் தாக்கத்தால் அவர் புலம்பெயர்ந்தும் தனது கொடிய நினைவுகளைவிட்டுப் புலன்பெயர முடியாமல் கொடூரத்திற்கு பிந்திய மனச்சிதைவுக்கு உள்ளாகி, இறுதியில் மரணம் அடைந்தார். 2011 மார்ச் 8 பெண்கள் தினத்தையொட்டி இச்சம்பத்தின் முக்கிய சாட்சியும் புளொட் அமைப்பின் மகளீர் அணியின் பொறுப்பாளராக இருந்தவருமான ஜெ ஜென்னி எழுதிய மூலக் கட்டுரையயையும் அதன் மீதான விவாதங்களையும் பார்க்க இவ்விணைப்பை அழுத்தவும்: https://www.padippakam.com/padippakam/document/EelamHistory/Janni/jnei04.pdf

இதில் உள்ள மிகப்பெரிய கொடுமை என்னவென்றால் இக்குற்றச்செயலை இழைத்த அக்குழுவினர் இன்றும் எம்மத்தியில் கௌரவத்தோடு வாழ்கின்றனர். அரசியல் செய்கின்றனர். முதலாளித்துவ சமூகமே சட்டதிட்டத்திற்கு கட்டுப்பட்டு ஏதோ யாருக்கோ நியாயம் பெற்றுக்கொடுக்க பல்லாண்டு பழமையான சம்பவங்களை தூசிதட்டி எடுத்து சம்பந்தப்பட்டவர்களை அம்பலப்படுத்த முயலும் போது; எமக்கு விடுதலை பெற்றுத் தரப்போவதாகவும், சமூகத்தின் முற்போக்கானவர்களாக தங்களைக் கட்டமைத்தவர்களும் முதலில் இவ்வாறான ஒரு சம்பவம் நடக்கவேயில்லை என்று வாதிட்டனர். ஆனால் அவர்களைச் சேர்ந்த ஒருவர் தனக்கும் அந்த வன்புணர்வுச் சம்பவத்திற்கும் தொடர்பே இல்லை என்று பாதிக்கப்பட்ட பெண்ணிடமே எழுதி வாங்கி வைத்துள்ளார்.

இப்போது மீண்டும் இச்சம்பவம் எமது போராட்ட கனவான்களின் மீது பல கேள்விகளை எழுப்புகின்றது. அக்குழந்தைப் போராளியின் மீது வன்கொடுமை புரிந்தவர்கள் யாரும் வேற்றுக் கிரகத்தில் இருந்து வந்த ஏலியன்கள் அல்ல. இக்கொடுமையயைப் புரிந்தவர்கள் புளொட் அமைப்பினர் அல்லது அதிலிருந்து வெளியேறிய குறிப்பாக தீப்பொறி சார்ந்தவர்கள் என்பது அப்போதைய சந்தர்ப்ப சூழ்நிலைகளின்படி உறுதியாகின்றது. யாழ் கொக்குவில் பொற்பதியில், புளொட் செறிந்திருக்கின்ற இப்பகுதியில் இவ்வாறான ஒரு சம்பவம் நடந்துள்ளது. மாற்று அமைப்புகள் எதுவுமே இச்சம்பவத்துடன் தொடர்புபடுத்தப்படவில்லை. அதனால் ஒரு குழந்தைப் போராளியின் மீது வன்கொடுமை புரிந்தவர்களை புளொட் அமைப்பும் தீப்பொறியினரும் இனம்கண்டு அம்பலப்படுத்த வேண்டும். இக்கொடுமை தனி ஒருவரினால் மட்டும் இழைக்கப்பட்டிருக்கவில்லை. இந்த உண்மைகளை தனியொருவர் மறைக்கவில்லை. ஒரு குழுவாகவே இந்த உண்மைகளை மறைக்கின்றனர்.

பாலியல் வல்லுறவு என்பது வெறுமனே பாலியல் இச்சையால் தூண்டப்பட்டு நடைபெறுகின்ற கொடுமை என்பது மிகவும் குறுகிய பார்வை. இக்குழந்தைப் போராளியின் மீது மேற்கொள்ளப்பட்ட கொடுமையானது, பிற்காலத்தில் யாழ் புங்குடுதீவில் மாணவி வித்தியாவுக்கு இழைக்கப்பட்ட கொடுமையுடன் ஒப்பிடக் கூடியதே. குற்றத்தை இழைத்தவர்கள் வித்தியாவை நன்கு தெரிந்தவர்கள். வித்தியாவின் குடும்பத்தினால் பாதிக்கப்பட்டவர்கள். அந்தப் பழிவாங்கல் மற்றும் பெண் மீதான தங்களது அதிகாரத்தை நிலைநிறுத்தும் வகையிலேயே இக்கொடுமையயைப் புரிந்தனர். இவ்விரு குழந்தைகளின் மீதும் இழைக்கப்பட்ட பாலியல் வன்கொடுமைக்கு இடையே நிறைய ஒற்றுமைகளை அவதானிக்க முடியும்.

இவ்விரு பாலியல் வன்கொடுமைகளும் பாலியல் வன்கொடுமையாளர்களின் ஒத்த மனநிலையயை வெளிப்படுத்துவதாக உள்ளது. ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் கூட்டாக இணைந்து இவ்வண்கொடுமையயைப் புரிந்துள்ளனர். வன்புணர்ந்தவர்கள் பாதிக்கப்பட்ட பெண் சார்ந்தவர்களினால் பாதிக்கப்பட்டதற்கு பழிதீர்க்கும் வகையிலேயே அக்கொடுமையயைப் புரிந்துள்ளனர். மாணவி வித்தியாவின் தாயார் வன்புணர்ந்தவர்களுக்கு எதிராக ஒரு வழக்கில் சாட்சி சொன்னதும், வித்தியா ஒருவனின் காதலை நிராகரித்ததும் வித்தியாவின் இக்கொடூர நிகழ்வுக்கு அடிப்படைக்காரணங்களாக இருந்தது. அதேபோல் குழந்தைப் போராளியின் வன்புணர்விலும் அக்கொடுமையயைப் புரிந்தவர்கள் தங்களது உரையாடலை பதிவு செய்ததை கேட்டுள்ளனர் தங்களை வேவுபார்ப்பதை கேட்டு கொடுமைப்படுத்தி உள்ளனர். தங்களுடைய அதிகாரத்தை நிலைநிறுத்துவதிலும் தங்களுடைய கொடிய செயலை நியாயப்படுத்தவும் அவர்கள் முயன்றுள்ளனர். ஒரு பெண்ணுடல் மீது ஆண் செலுத்தக் கூடிய அதிஉட்சபட்ச அதிகாரமே பாலியல் வன்புணர்வு. அவளைக் கொல்லாமல், விட்டுவைப்பது காலத்திற்கும் அவளைப் பழிதீர்க்கின்ற கட்டற்ற அதிகார வன்முறை. மாணவி வித்தியாவைக் கூட கொடியவர்கள் கொலைசெய்ய முற்பட்டதாகத் தெரியவில்லை. இழைக்கப்பட்ட கொடுமையினால் அவர் உயிரிழந்தார். குழந்தைப் போராளியின் விடயத்தில் கொடியவர்கள், அவள் தனக்கு நிகழ்ந்ததை மற்றவர்களுக்கும் சொல்லி அவர்கள் மீதும் தங்கள் அதிகாரத்தை நிலைநிறுத்த வேண்டும் என்று எண்ணியுள்ளனர்.

இவ்விரு சம்பவங்களிலும் பாலியல் வன்புணர்வாளர்களின் மனநிலை சர்வதேச பாலியல் வன்புணர்வாளர்களின் மனநிலையோடு ஒத்ததாகவே இருந்துள்ளது. 1970க்களில் அமெரிக்காவில் 50 பாலியல் வன்புணர்வில் ஈடுபட்டவர்கள் மத்தியில் ஒரு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில் பாலியல் வன்புணர்வு செய்தவர்கள் அதனை ஒத்துக்கொண்டும் இருந்தனர். இவர்கள் பல்வேறுபட்ட சமூக, பொருளாதார, கலாச்சாரப் பினினணிகளுடன் இருந்தனர். ஆகவே இவ்வாறானவர்கள் தான் பாலியல் வன்புணர்வில் ஈடுபடுவார்கள் என்றும் மற்றையவர்கள் ஈடுபடமாட்டார்கள் என்ற முடிவுக்கும் வந்துவிட முடியாது. புரட்சியாளன் போர்வையில் இருப்பவனும் மற்றையவர்களும் யாரும் இக்கொடுமையயை நிகழ்த்த தயங்காதவர்கள்.

பொதுவாக பாலியல் வன்புணர்வாளர்கள் மற்றவர்கள் பற்றிய கழிவிரக்கம் அற்றவர்களாகவும், தங்களைப் பற்றிய அதீத உணர்வுடையவர்களாகவும், தங்களுக்கு அதீத முக்கியத்துவம் அளிப்பவர்களாகவும், பெண்களை மதிக்காதவர்களாக, அவர்கள் மீது வெறுப்பை வெளிப்படுத்துவபவர்களாக இருப்பர். பாலியல் வன்புணர்வு என்பது பாலியல் இச்சையைக் காட்டிலும் அதிகாரத்தை நிலைநிறுத்தவே அது பெரும்பாலும் ஒரு ஆயுதமாகப் பயன்படுத்தப்படுகின்றது. பெரும்பாலும் இளம் ஆண்களினால் மேற்கொள்ளப்படுகின்ற பாலியல் வன்புணர்வுகள் பெருமளவில் அவர்களால் அறியப்பட்ட பெண்களுக்கு எதிராகவே மேற்கொள்ளப்பட்டு உள்ளது. பாலியல் வன்புணர்வாளர்கள் தெரியாத பெண்களை வன்புணர்வது அரிதாகவே நடைபெறுகின்றது. குற்றவாளிகள் பாதிக்கப்பட்டவரினால் பெரும்பாலும் அறியப்பட்டவர்களாகவே உள்ளனர்.

குழந்தைப் போராளியின் மீதான பாலியல் வன்புணர்வைச் செய்த கொடியவர்கள் அவருக்கு நன்கு தெரிந்தவர்களாகவும் அவரினால் அல்லது அவரைச் சார்ந்தவர்களினால் பாதிக்கப்பட்டவர்களாகவும் மற்றவர்கள் மீது கழிவிரக்கம் காட்டாதவர்களாகவும் இருந்திருக்க வேண்டும். இவர்கள் பெண்களை வெறுப்பவர்களாக, ஐயப்பாடு உடையவர்களாகவும் இருந்திருக்க வாய்ப்புண்டு.

கொடிய அச்சம்பவம் நடந்து நான்காவது தசாப்தத்தை எட்டுகின்ற நிலையிலும் கொடியவர்களை பாதுகாத்து வருகின்றோம். நட்புக்காக, உறவுக்காக ஒரு மிகப்பெரிய கொடுமையை மூடி மறைக்கின்றோம். இதில் தற்போது வெளிப்படையாக தங்களுடைய சாட்சியங்களை பதிவு செய்ய ஜெ ஜென்னியும் இச்சம்பவம் பற்றிய கேள்வியயை எழுப்பியுள்ள அசோக் என அறியப்பட்ட யோகன் கண்ணமுத்துவும் அன்றைய காலகட்டத்தில் புளொட் அமைப்பின் முக்கிய பொறுப்புகளில் இருந்த போதும் அவ்வமைப்புப் பற்றி என்றுமே ஒரே அபிப்பிராயத்தைக் கொண்டிருந்தவர்கள் அல்ல. இவ்விடயத்தில் சம்பந்தமுடையதாக தொடர்புபடுத்தப்படும் தீப்பொறி மற்றும் அவர்களைச் சார்ந்தவர்கள் இது தொடர்பில் வெளிப்படைத் தன்மையுடன் உண்மைகளை வெளிக்கொணர்வதற்கு முன்வரவேண்டும். அதைவிடுத்து ஜென்னி மீதும் அசோக் மீதும் காழ்ப்புணர்வுகளைக் கொட்டுவது உண்மைகளை வெளிக்கொணர்வதற்கு எவ்விதத்திலும் உதவாது. முதலாளித்துவ நீதித்துறையே பெண்களுக்கு எதிரான பாலியல் வன்புணர்வு வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்ட ஆண்கள், தாங்கள் குற்றத்தை புரியவில்லை என்பதை நிரூபிக்க கோருகின்றது. அப்படியிருக்கும் போது விடுதலை வேண்டிப் போனவர்கள் அதே நோக்கத்திற்காகச் சென்ற ஒரு பெண்ணுக்கு நடந்த கொடுமையின் உண்மையை வெளிகொணர கடந்த மூப்பதற்கும் மேற்பட்ட ஆண்டுகளாக என்ன செய்கின்றார்கள்?

டென்மார்க் ‘இன்டர்நெட் கேபிள்’ வாயிலாக ஐரோப்பிய தலைவர்களை உளவு பார்த்த அமெரிக்கா – ஜோபைடனுக்கும் பங்கு என டென்மார்க் அதிர்ச்சிகர தகவல் !

ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்கல் உள்பட ஐரோப்பிய நாடுகளின் தலைவர்களை அமெரிக்கா உளவுபார்த்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இதில் அமெரிக்காவின் தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடன் பங்கு இருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

அமெரிக்காவின் நெருங்கிய நட்பு நாடுகளில் ஒன்றான டென்மார்க், தகவல் தொடர்பு வசதிக்காக பல்வேறு நாடுகளில் கடலுக்கு அடியில் ‘இன்டர்நெட் கேபிள்’களை பதித்து பயன்படுத்தி வருகிறது. இதன் வழியே சுவீடன், நோர்வே, ஜெர்மனி, நெதர்லாந்து மற்றும் இங்கிலாந்து போன்ற பல நாடுகள் தகவல் பரிமாற்றத்தில் ஈடுபட்டு வருகின்றன.

இந்த நிலையில், அமெரிக்காவின் உளவு அமைப்பான தேசிய பாதுகாப்பு முகமை, டென்மார்க் இராணுவ புலனாய்வு சேவையின் ஒத்துழைப்புடன் டென்மார்க்கின் இன்டர்நெட் கேபிள்களை பயன்படுத்தி ஐரோப்பிய நாடுகளின் தலைவர்களை உளவுபார்த்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. டென்மார்க்கின் அரசு ஊடகமான டி.ஆர். இந்த அதிர்ச்சிகர தகவலை வெளியிட்டுள்ளது.

2012 முதல் 2014 வரையிலான காலகட்டத்தில் டென்மார்க் ‘இன்டர்நெட் கேபிள்’ வாயிலாக ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்கல் உள்பட ஐரோப்பிய நாட்டு தலைவர்களை அமெரிக்கா உளவு பார்த்ததாக டி.ஆர். தெரிவித்துள்ளது.

டென்மார்க் இராணுவ புலனாய்வு சேவையின் மீது நடந்த உள்நாட்டு விசாரணையின் போது, அமெரிக்க உளவு அமைப்பின் இந்த சதி அம்பலமானதாக கூறப்படுகிறது. டென்மார்க் ‘இன்டர்நெட் கேபிள்’களில் இருந்து குறுஞ்செய்திகள், தொலைபேசி அழைப்புகள் மற்றும் இணையதளத்தில் அதிகம் தேடப்பட்டவை மற்றும் பிற செய்தி பகிர்வு சேவைகள் என எல்லாவற்றையும் இடைமறித்து விரிவான தரவுகளை அமெரிக்கா பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜெர்மனியின் பிரதமர் ஏஞ்சலா மெர்கல் தவிர, அந்த நாட்டின் அப்போதைய வெளியுறவு மந்திரி பிராங்க்-வால்டர் ஸ்டீன்மெயர் மற்றும் முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் பீர் ஸ்டீன்பிரக் ஆகியோரையும் அமெரிக்கா உளவு பார்த்ததாக தெரிகிறது. ஜெர்மனி மட்டுமின்றி சுவீடன், நோர்வே மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளின் அரசியல் தலைவர்கள் மற்றும் மூத்த அரசு அதிகாரிகளும் அமெரிக்காவின் இந்த உளவு நடவடிக்கையில் இலக்காக இருந்ததாக டி.ஆர். கூறுகிறது.

இந்த விவகாரம் ஐரோப்பிய நாடுகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது குறித்து அமெரிக்கா மற்றும் டென்மார்க் உடனடியாக பதில் அளிக்க வேண்டும் என ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

எனினும் தங்கள் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு முகமை மற்றும் டென்மார்க் இராணுவ புலனாய்வு சேவை ஆகியவை உடனடியாக எந்த விளக்கமும் அளிக்கவில்லை.

இந்த விவகாரம் தொடர்பாக ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்கலை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய பிரான்ஸ் அதிபர் மெக்ரான், “நட்பு நாடுகளுக்கு இடையில் இது ஏற்கத்தக்கது அல்ல.‌ இது தீவிரமாக கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயம்” என கூறினார்.

அதனை தொடர்ந்து மெக்ரானின் வார்த்தைகளுக்கு தான் உடன்படுவதாக ஏஞ்சலா மெர்கல் குறிப்பிட்டார்.

இதனிடையே அமெரிக்காவின் தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடன் துணை ஜனாதிபதியாக இருந்தபோது இந்த உளவு நடவடிக்கை நடந்திருப்பதால் அதில் நிச்சயம் அவரது பங்கு இருக்கும் என அமெரிக்காவின் மூத்த பத்திரிகையாளரும், தேசிய பாதுகாப்பு முகமையின் முன்னாள் ஊழியருமான எட்வர்ட் ஸ்னோடென் பகிரங்க குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து விரிவாக விசாரிக்கப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

“சீன மொழியை கற்றுக்கொள்ளுங்கள்.அது மேலதிக தகுதியாகும்” – அமைச்சர் வாசுதேவ நாணயக்கார வலியுறுத்தல் !

இலங்கையில் சீனாவினுடைய ஆதிக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது தொடர்பாக பரரும் தங்களுடைய ஆதங்கத்தை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இந்த எதிர்ப்பு இலங்கையை “சின்லங்கா” என பெயர் கூறி கிண்டல் செய்யும் அளவுக்கு வளர்ச்சியடைந்துள்ளது. மேலும் சீன நிறுவனங்கள் அதிகமாக இலங்கையின் தொழிற்துறையை ஆக்கிரமிக்க ஆரம்பித்துள்ளதாகவும் குற்றஞ்சாட்டப்படுகின்றது. முக்கியமாக சீன நிறுவனங்கள் இலங்கையின் சுதேச மொழியான தமிழை எல்லா இடங்களிலும் புறக்கணிப்பதையும் காண முடிகின்றது.

சீனாவில் வசித்து வரும் இலங்கையின் இளவரசி: வெளியான பின்னணி தகவல்! - ஜே.வி.பி  நியூஸ்

சில இடங்களில் சிங்களமே புறக்கணிக்கப்பட்டுள்ளமை கூடுதல் தகவல். இது ஒரு புறமிருக்க சீனாவிலுள்ள இலங்கை இளவரசி ஒருவரும் இலங்கையில் உலவ ஆரம்பித்துள்ளார். இந்நிலையில் அரசின்  சீனச்சார்பு கொள்கைக்கு எதிர்ப்புக்கள் நாளுக்கு நாள் வலுத்துக்கொண்டே அசெல்கின்றது.

 

இது ஒருபுறமிருக்க நீர்ப்பாசன அமைச்சர் வாசுதேவ நாணயக்கார , “ இலங்கை பிரஜைகள் சீன நிறுவனங்களில் தொழில்வாய்ப்பைப் பெற்றுக் கொள்ள, சீன மொழியைக் கற்றுக்கொள்வது சிறந்தது என்று  தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கொழும்பில்  ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டிருக்கும் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார, சீன மொழியின் அவசியத்தை வலியுறுத்தியிருக்கின்றார்.

இதன்போது மேலும் கருத்துரைத்த அவர்,

சீன நிறுவனங்களிடம் நாங்கள் வேலைவாய்ப்பைப் பெற்றுக்கொள்ள வேண்டுமென்றால் அல்லது சீன வேலைத்திட்டங்களில் நாங்கள் தொழில்வாய்ப்பைப் பெற்றுக்கொள்ள வேண்டுமென்றால் எமக்கு சீன மொழித் தெரிந்திருக்க வேண்டும் என்பது மேலதிக தகுதியாக அமையும்.

அதேவேளை, அண்மையில் நிறைவேற்றிக் கொள்ளப்பட்ட போர்ட் சிட்டி ஆணைக்குழுச் சட்டமூலம் என்பது அவசர அவசரமாக நிறைவேற்றிக் கொள்ளப்பட்டதல்ல. அவ்வாறு எதிர்க்கட்சியினர் தெரிவிப்பது போல அரசாங்கத்திற்கு எந்தவொரு அவசரமும் இதில் இருக்கவில்லை.

அவ்வாறு போர்ட் சிட்டி ஆணைக்குழுச் சட்டத்தை தள்ளிவைத்திருந்தால் கொரோனா தொற்று முற்றிலும் இலங்கையை விட்டு வெளியேறியிருக்குமா?அரசாங்கத்தில் அங்கம் வகிக்கின்ற அனைத்துக் கட்சிகளும் இந்த சட்டத்தில் பல திருத்தங்களைக் கொண்டுவரும்படி ஏகோபித்த விதமாக தெரிவித்திருந்தோம்.

அதற்கமைய உச்சநீதிமன்றத்தின் வியாக்கியானத்திலும் திருத்தங்கள் அவசியம் என்பது வலியுறுத்தப்பட்ட நிலையில் நாங்கள் எதிர்பார்த்த பாதித்திருத்தங்கள் கொண்டுவரப்பட்டன. என்றார்.

இந்தியாவில் முதலில் கண்டறியப்பட்ட கொரோனா வைரசுக்கு பெயர் டெல்டா !

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் நோய்த்தொற்று அமெரிக்கா, இந்தியா, பிரேசில் உள்ளிட்ட சில நாடுகளில் மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளது. பல்வேறு நாடுகளில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா வைரஸ்கள் பாதிப்பைப் பல மடங்கு அதிகரித்துள்ளது.

இந்தியாவில் B.1.617 வகையை இந்தியாவில் கண்டறியப்பட்ட கொரோனா என அழைக்க வேண்டும் என மத்திய அரசு அறிவித்திருந்தது. இதற்கிடையே, வைரஸ்கள் அல்லது மாறுபாடு அடைந்த வைரஸ்கள் அவை கண்டறியப்பட்ட நாடுகளின் பெயர்களால் அடையாளம் காணப்படக் கூடாது என உலக சுகாதார அமைப்பு ஏற்கனவே தெரிவித்திருந்தது.

இந்நிலையில், இந்தியா உள்பட பல்வேறு நாடுகளிலும் கண்டறியப்பட்ட கொரோனா வகைக்கு பெயர்களை அறிவித்துள்ளது உலக சுகாதார அமைப்பு.

கடந்த ஆண்டு அக்டோபரில் இந்தியாவில் முதலில் கண்டறியப்பட்ட B.1.617 வகை கொரோனா வைரசுக்கு டெல்டா என பெயரிட்டுள்ளது.

இதேபோல், பிரிட்டனில் கடந்த ஆண்டு செப்டம்பரில் கண்டறியப்பட்ட கொரோனா ஆல்பா எனவும், தென் ஆப்பிரிக்காவில் 2020 மே மாதம் கண்டறியப்பட்ட கொரோனா பீட்டா  எனவும், பிரேசிலில் கடந்த ஆண்டு நவம்பரில் கண்டறியப்பட்ட வகை காமா எனவும், அமெரிக்காவில் கண்டறியப்பட்ட கொரோனா எப்சிலான் எனவும் உலக சுகாதார அமைப்பு பெயரிட்டுள்ளது.