June

June

அசாத் சாலிக்கு எதிராக பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் குற்றப்பத்திரிக்கை தாக்கல் !

குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட மேல் மாகாணத்தின் முன்னாள் ஆளுநர் அசாத் சாலிக்கு எதிராக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பாக சட்டமா அதிபரால் உயர் நீதிமன்றத்திற்கு இன்று (திங்கட்கிழமை) அறிவிக்கப்பட்டுள்ளது.

பயங்கரவாத தடைச்சட்டம் மற்றும் ஐ.சி.சி.பி.ஆர் சட்டத்தின் கீழ் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இந்த குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் அறிவித்துள்ளார்.

மார்ச் 09 ஆம் திகதி ஊடக சந்திப்பில் அவர் தெரிவித்த கருத்து தொடர்பாக, மார்ச் மாதம் 16 ஆம் திகதி அசாத் சாலி கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இங்கிலாந்தின் நடு வீதியில் புகைபிடித்துக் கொண்டிருக்கும் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் – வெடித்தது புதிய சர்ச்சை !

இங்கிலாந்துக்கு கிரிக்கெட் தொடருக்கு சென்ற  இலங்கை அணி வீரர்கள் வீதி ஒன்றில் புகைப்பிடிக்கும் வீடியோ வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சமூக வலைத்தளங்களில் வெளியாகி கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள இலங்கை கிரிக்கெட் அணி வீரர்கள் சம்பந்தப்பட்ட வீடியோ குறித்து விசாரணை நடத்தப்படும் என ஸ்ரீலங்கா கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

இங்கிலாந்துக்கு கிரிக்கெட் சுற்றுலா சென்றுள்ள இலங்கை அணி உப தலைவர் குசல் மென்டிஸ் மற்றும் நிரோஷன் டிக்வெல்ல ஆகியோர் நடு வீதியில் புகைபிடித்துக் கொண்டிருக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வௌியாகியுள்ளது.

அத்துடன் தனுஸ்க குணதிலகவும் இவர்களுடன் இருப்பது தெரிகிறது. கொரோனா பாதுகாப்புக்கு உட்பட்டு சுற்றுலா சென்றுள்ள வீரர்கள் அதனை மீறி செயற்பட்டுள்ளார்களா எனவும் வீடியோவில் உள்ள விடயம் குறித்தும் விசாரணை நடத்தப்படும் என ஸ்ரீலங்கா கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

“இனத்தின் விடுதலைக்காக போராடி சிறையில் இருக்கும் எம்மவர்களை  மீட்க தொடர் அழுத்தங்களை பிரயோகிப்போம்.” – இரா.சாணக்கியன்

“இனத்தின் விடுதலைக்காக போராடி சிறையில் இருக்கும் எம்மவர்களை  மீட்க தொடர் அழுத்தங்களை பிரயோகிப்போம்.” என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.

அண்மையில் இடம்பெற்ற அரசியற் கைதிகளின் விடுதலை தொடர்பில் இன்றைய தினம் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

தற்போது நாட்டில் பரபரப்பாகப் பேசப்பட்டுக் கொண்டிருக்கும் விடயம் தான் அண்மையில் இடம்பெற்ற அரசியற் கைதிகளின் விடுதலை. இது தொடர்பில் அரசுடன் இணைந்திருக்கும் பிரதிநிதிகள் உரிமை கோரும் விதமாக சில முகநூல் பதிவுகள், அறிக்கைகளை விடுவதை அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது. ஆனால் நாடாளுமன்றம் தொடங்கி ஒருவருடமாகியும் அரசியற் கைதிகளின் விடுதலை தொடர்பில் அவர்கள் அரசாங்கத்திற்கு எவ்வித அழுத்தமும் கொடுத்ததாக நாங்கள் அறியவில்லை. நாங்கள் அரசியற் கைதிகளின் விடுதலை தொடர்பில் கேள்வி எழுப்பும் போதுகூட எங்கள் கருத்துகளைக் குழப்பும் செயற்பாடுகளையே அவர்கள் செய்திருந்தார்கள்.

தற்போது இடம்பெற்ற அரசியற் கைதிகள் சிலரின் விடுதலை வரவேற்ககத்தக்க ஒரு நல்ல விடயம். பதினாறு அரசியற் கைதிகளை விடுவித்தமை வரவேற்கத்தக்க விடயமாக இருந்தாலும் ஏனையவர்ககளையும் விடுவிக்கும் வரையில் எங்கள் அழுத்தங்களைக் குறைக்க மாட்டோம். நாங்கள் தொடர்ச்சியாக எங்கள் அழுத்தத்தைக் கொடுத்துக் கொண்டே இருப்போம்.

மேற்படி விடுவிக்கப்படவர்களின் வழக்குகள் 2015 தொடக்கம் 2020ம் ஆண்டு காலப்பகுதியில் தான் முடிவுக்கு வந்திருக்கின்றது. கடந்த நல்லாட்சி காலத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மேற்கொண்ட நடவடிக்கைகளின் காரணமாகத் தான் அரசியற் கைதிகளின் விடுதலை தற்போது சாத்தியமாக்கப்பட்டிருக்கின்றது.  அந்த வழக்குகள் முடிந்த காரணத்தினால் தான் அவர்களுக்குப் பொது மன்னிப்பு வழங்கக் கூடிய நிலைமை ஏற்பட்டது. ஆனால், இன்னும் பலர் சிறையிலே வாடிக் கொண்டிருக்கின்றார்கள் என்பதும் வேதனையான விடயமே.

அரசியற் கைதிகள் விடுதலை செய்யப்படப் போகிறார்கள் என்று சொன்னவுடன் எத்தனையோ தாய்மார், மனைவி, குழந்தைகள், சகோதரங்கள் எதிர்பார்ப்புடன் இருந்தார்கள். ஆனால் துரதிஷ்டவசமாக பதினாறு பேர் மாத்திரம் தான் வெளியில் வந்திருக்கின்றார்கள். அது எமது உறவுகள் பலருக்கு ஏமாற்றமாக இருந்தாலும், சிறையில் இருக்கும் ஏனையவர்களையும் விடுதலை செய்வதற்காக நாங்கள் சில சில போராட்டங்களையும், அழுத்தங்களையும் கொடுக்கத் தயாராக இருக்கின்றோம்.

அத்துடன் குறிப்பாக வடக்கு கிழக்கிலே அரசியற் கைதிகளின் விடுதலையுடன் சேர்த்து முகநூல்களில் பதிவுகளை மேற்கொண்ட குற்றச்சாட்டின் அடிப்படையில் கைது செய்யப்பட்டிருக்கும் இளைஞர்களின் விடுதலைக்காவும் அரசியற் கைதிகளின் விடுதலைக்குச் சமாந்தரமாகக் குரல் கொடுக்க வேண்டும். ஏனெனில் பல தாய்மார்கள் என்னை வந்து சந்திக்கின்ற போதும் கூட விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட மகன்மார் இன்னும் விடுவிக்கப்படவில்லை என அவர்களின் மனக்குமுறல்களை வெளிப்படுத்துகின்றார்கள்.

இந்த விடயங்களையும் நாங்கள் கவனத்தில் எடுக்க வேண்டும். பல இளைஞர்களைக் கைது செய்து தற்போது ஒரு வருடமாகவும் போகின்றது. இவ்வாறே விட்டுக் கொண்டிருந்தால் இருபது வருடங்கள் வரைக்கும் இதுபோன்றே சிறையில் வைத்திருப்பார்கள். முகநூலில் பதிவிட்ட குற்றச்சாட்டுக்காக சிறையில் ஒரு வருடம் இருப்பதென்பது ஏற்றுக் கொள்ளப்பட முடியாத விடயம். அந்த வகையில் இவர்களின் விடுதலைக்காவும் தொடர்ச்சியாக நாங்கள் அழுத்தம் கொடுப்போம்.

துமிந்த சில்வா அவர்களின் விடுதலையை நியாயப்படுத்தும் முகமாக அவர்களின் கீழ் இயங்கும் சில ஊடகங்கள் செயற்படுகின்றன. அவ்வாறான ஊடகம் தற்போதையை ஜனாதிபதியை ஜனாதிபதியாக்குவதற்கும் தற்போதைய அரசாங்கத்தினை ஆட்சிக்குக் கொண்டு வருவதற்கும் கடுமையாகப் பாடுபட்ட ஒரு ஊடகம். ஆனால் கடந்த சில மாதங்களாக அரசினை தாக்கி அரசிற்கு எதிரான செய்திகளை வெளியிட்டதை அவதானிக்க முடிந்தது. நாட்டிலே மக்களின் பிரச்சினைகள் எத்தனையோ இருக்க ஒரு நடிகையைக் கைது செய்தது தான் பெரிய பிரச்சினை போன்று வெளிப்படுத்தி அரசிற்கு பாரிய அழுத்தங்களைக் கொடுக்கும் முகமாகச் செயற்பட்டது. அந்த நேரத்திலே எனக்கு சந்தேகம் ஏற்பட்டது துமிந்த சில்வா அவர்களை விடுதலை செய்வதற்காக ஒரு நாடகமமாக இது இருக்கலாம் என்று. அது போலவே நடந்து விட்டது.

தற்போது அவரை விடுதலை செய்ததற்கு அவர் போதியளவு சிறைத் தண்டனை அனுபவித்து விட்டதாக அமைச்சர் நாமல் ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்தார். ஆனால் ஒரு நாடாளுமன்ற உறுப்பினரைக் கொலை செய்ததாகச் சொல்லி உயர்நீதிமன்ற நீதியரசர்களினால் தண்டனை வழங்கிய ஒருவர் ஐந்து வருடங்கள் சிறைத்தண்டனை அனுபவித்தது போதுமானதாக இருந்தால். போராட்ட காலத்தில் ஏதோவொரு அடிப்படையில் கைது செய்து பல வருடங்களாகச் சிறையில் வாடும் அரசியற் கைதிகள் அனைவரையும் ஏன் இதுவரை விடுதலை செய்யவில்லை என்ற கேள்வி அனைவர் மனதிலும் இருக்கின்றது.

ஏனெனில் இன்று அரசியற் கைதிகள் என்று நாங்கள் கூறும் எவருமே தங்களின் சொந்தத் தேவைக்காகவோ, தனிப்பட்ட நலனுக்காகவோ தாக்கியவர்களோ அல்லது கொலை, கொள்ளை, கற்பழிப்புச் செய்தவர்களோ அல்ல. அவர்கள் எதோவொரு விதத்தில் தங்களின் இனத்தின் விடிவுக்காகப் போராடிய குற்றச்சாட்டில் சில சில தவறுகளுக்காகக் கைது செய்யப்பட்டிருக்கின்றார்கள். தன்னுடைய இனத்தின் விடுதலைக்காகப் போராடியவர்கள் இன்னும் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும். ஆனால் ஒரு நாடாளுமன்ற உறுப்பினரைக் கொலைசெய்து குற்றவாளியாகத் தீர்ப்பு வழங்கப்பட்டவர் ஐந்து வருட சிறைத்தண்டனை அனுபவிதித்தது போதுமானது என்றால் இதில் என்ன நியாயம் இருக்கின்றது.

ஜனாதிபதி அவர்கள் தனது முதலாவது உரையிலே தெரிவித்திருந்தார் ஒரு நாடு ஒரு சட்டம் என்று. ஆனால் இங்கு ஒரு நாடு எத்தனையோ சட்டங்களாகப் போய்க்கொண்டிருப்பதையே அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது என்று தெரிவித்தார்.

ஓராண்டுக்கு முன் நடந்த சம்பவத்தை இந்த வருடத்தில் நடந்த சம்வமாக தலைப்பில் வெளியிட்டுள்ள வலம்புரி – மோசமாகிப்போன தமிழ்பத்திரிகைகளின் தரம் – த.ஜெயபாலன்

‘கொரோனாவால் நான் இறந்தால் எனது பிள்ளையயை யார் பார்ப்பது? பெற்ற பிள்ளையயை 15 முறை குத்திக்கொன்ற யாழ்ப்பாணப் பெண்!’ என்ற தலைப்புச் செய்தியுடன் நேற்று வலம்புரி பத்திரிகை வெளியானது. இப்பத்திரிகையின் தலைப்புச் செய்தியின் படி மேற்படி சம்பவம் சிலதினங்களுக்கு முன் லண்டனில் நடைபெற்றிருக்க வேண்டும்.
May be an image of 2 people and text that says "கடழகன lampuri ஞாயிற்றுக்கிழமை (27.06.2021) தொலைபேசி 222 3378, 222 7829 ஒவி 190 கொரோனாவால் நான் இறந்தால் எனது பிள்ளையை யார் பார்ப்பது? பெற்ற பிள்ளையை 15 முறை குத்திக் கொன்ற யாழ்ப்பாணப் பெண் 4ு ழந் 15 (லண்டன்) இறந்தால் குழந்தை கொரோனா வைரஸால் தான் எப்படி வாழும் என்ற டைச் சட்டத்தின் 15 அமைச்சர் நாமல்"
ஆனால் இச்சம்பவம் ஓராண்டுக்கு முன்னதாக யூன் 30 2020 லண்டன் மிச்சத்தில் நடைபெற்றது. இச்சம்பவம் நடைபெற்ற திகதியும் பத்திரிகையின் உட்பக்கத்தில் வந்துள்ளது. ஒரு பத்திரிகையின் தலைப்புச் செய்தியயைக் கூட சரி பார்க்காமல் ஓராண்டு பழைய செய்தியை எழுதிய செய்தியாளர் அதனை சரிபார்க்காத ஒரு பத்திரிகை ஆசிரியர். இந்த நிலையில் தான் யாழ்ப்பாணப் பத்திரிகைகளின் செய்தித் தரம் உள்ளது.
May be an image of 2 people and text that says "உலகம் செய்தி விண்வெளிக்கு செல்லும் முதல் தமிழ்ப் பெண் Updated ஜன 31, 2019 © 13:26 Added ஜன 31, 2019 o 13:24 கருத்துகள் (31) You May Like Arthritis: A Simple Trick to Relieve Pain Easily (Joint Helper) Sponsored Links by Tabool 142 Shares Omaze Million Pound House Draw (Omaze) 31 Advertisement லண்டன்: முதன் முறையாக லண்டன் இலங்கை தமிழ் பள்ளி மாணவி ஒருவர் சர்வதேச விண்வெளி ஓடத்திற்கு செல்லவுள்ளார்."
ஒரு பதிப்பில் வருகின்ற செய்தியின் நிலை இதுவென்றால் இணையத் தளங்களைப் பற்றிச் சொல்லவே வேண்டாம்.
‘விண்வெளிக்குச் செல்லும்முதல் தமிழ் பெண்’ என்ற தலைப்பில் தமிழக இணையத்தளம் தினமலர் யூன் 31 2019இல் ஒரு செய்தியயை வெளியிட்டு இருந்தது. இந்தச் செய்தி இலங்கையில் உள்ள பல இணையத்தளங்களிலும் வெளியாகி இருந்து. இச்செய்தி தினமலர் இணையத்தளத்தில் இன்னமும் உள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்தச் செய்தியின் அடிப்படையில் தென்மராட்சி பிரதேச சபையில் மாணவி சிபோன் ஞானகுலேந்திரன் என்ற மாணவிக்கு பாராட்டு தெரிவித்து தீர்மானமும் நிறைவேற்றப்பட்டு இருந்தது. இச்செய்தி முற்றிலும் தவறானது. தமிழ் மாணவி மட்டுமல்ல எந்த மாணவியும் விண்வெளிப் பரிசோதணைகளில் ஈடுபட விண்வெளிக்கு அனுப்பப்படவில்லை.
விண்வெளி ஆராய்ச்சியில் எதிர்காலத்தில் மாணவர்களை ஊக்குவிக்க பிரித்தானிய விண்வெளி ஆராய்ச்சி மையம் மேற்கொண்ட கல்வித் திட்டத்தின் ஒரு அங்கமாக நூற்றுக்கணக்கான ஆயிரக்கணக்கான மாணவர்கள் இத்திட்டத்தில் பாடசாலைகளுடாக இணைக்கப்பட்டனர். அவர்களில் சிலர் வழங்கிய நூண்ணுயிர்கள், தாவரங்கள் பரீட்சார்த்தமாக விண்வெளிக்கு கொண்டு செல்லப்பட்டு அதன் பின் மீளவும் பூமிக்கு கொண்டுவரப்பட்டு அவற்றைப் பரிசோதிப்பதே இத்திட்டத்தின் ஒரு பகுதியாக இருந்தது. அதுதொடர்பில் இரு மாணவிகளுடன் பிபிசி சில நிமிடங்கள் உரையாடி அதனை ஒளிபரப்புச் செய்திருந்தது. அந்த உரையாடலில் சிபோன் ஞானகுலேந்திரன் தனக்கு நுண்ணுயிர் கற்கைகளில் ஆர்வம் என்று தெரிவித்து இருந்தாரே அல்லாமல் விண்வெளிப் பயணத்தில் ஆர்மில்லை என்பதையும் தெரிவித்து இருந்தார்.
ஆனால் தினமலர் இணையமோ தனது செய்தியில் இவ்வாறு தெரிவித்து இருந்தது: “அதீத திறமை மிக்க 2 மாணவர்களை விண்வெளிக்கு அனுப்ப பிரிட்டன் விண்வெளி ஆராய்ச்சி மையம் முடிவெடுத்தது. அதில் மிகத் திறமையாக செயல்பட்டு வெற்றி பெற்றுள்ளார் ஒரு இலங்கை தமிழ் மாணவி. அவர் பெயர் “சியோபன் ஞானகுலேந்திரன்” . இந்த மாணவி நுண்ணியல் உயிர்களைப் பற்றி கற்றுள்ளார்”. இது தான் தமிழ் ஊடகச் சூழலின் நிலை.
வலம்புரி பத்திரிகையின் ஊடகவியலாளரும் அதன் ஆசிரியரும் செய்தியின் தற்போதைய நிலையயைப் பற்றி சிறிதுகூட சிரத்தை எடுக்கவில்லை. இச்செய்தி இவ்வாரம் முக்கியத்துவம் பெறுவதற்குக் காரணம், கொலையாளியான தாய்க்கு எதிரான வழக்கின் தீர்ப்பு யூன் 24ம் திகதி நீதிமன்றத்தில் வெளியிடப்பட்டது. அது பற்றிய எந்தக் குறிப்பும் வலம்புரி பத்திரிகைச் செய்தியில் வரவில்லை. ஏதோ கொரோனா மனநிலை பாதிப்பையும் ஏற்படுத்தி பிள்ளைகளையும் கொலை செய்யத் தூண்டும் என்ற விதத்தில் ஒரு பரபரப்பை ஏற்படுத்தும் வகையில் வலம்புரி க்குழு செய்தியயைச் சோடித்து இருந்தது.
மனநிலை பாதிப்புக்கு சிகிச்சை பெற்றுவந்த சுதா சிவானந்தம் (36 வயது) செய்த செயலை ஒரு பாரிய சோக நிகழ்வு என்று விபரித்த நீதிபதி வென்டி ஜோசப் அவருக்கு காலவரையறையற்ற சிகிச்சை வழங்குமாறு தீர்ப்பளித்து உள்ளார். தன்னால் மேற்கொள்ளப்பட்ட கொலை சுயநினைவுடன் மேற்கொள்ளப்பட்டது அல்லவென்ற சுதா சிவானந்தம் தரப்பின் வேண்டுகோளை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டு தீர்ப்பு வழங்கியமை குறிப்பிடத்தக்கது. சுதாவின் கணவர் சிவானந்தம், சுதா ஒரு முன்ணுதாரணமான தாயாக இருந்ததை நீதிமன்றில் தெரிவித்து இருந்தார். தான் சம்பவத்தின் போது மகளைக் காயப்படுத்துவதாக துன்புறுத்துவதாக கருதவில்லை என்றும் அவர் ஆழ்ந்த உறக்கத்தில் கனவில் இருந்தாகவும் தெரிவித்தார்.
சுதா சிவானந்தத்திற்கு ஏற்பட்ட மனநோய் பற்றிய முழுமையான விபரம் அவருடைய மனநிலை மருத்துவர்களாலும் முறையாக அறியப்பட்டிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மோர்பிட் கொன்சேர்ன் என்ற ஒருவகை மனப்பிறழ்வுநிலையின் கட்டத்தில் சுதா சிவானந்தம் இருந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. அதன்படி தனக்கு கடுமையான ஆபத்து அல்லது மரணம் சம்பவிக்கலாம் என்ற நிலைக்கு அவர் தள்ளப்பட்டிருந்தார். சம்பவதினத்திற்கு முதல் நாள் இரவு தனக்கு உயிராபத்து ஏற்பட்டால் பிள்ளைகளைப் பார்ப்பீர்களா என்றும் சுதா கேட்டதாக கணவர் சிவானந்தம் நீதிமன்றில் தெரிவித்து இருந்தார். இரு தாதிகளுடன் சுதாவும் நீதிமன்றுக்கு வந்திருந்தார்.
தீர்ப்பினையடுத்து சுதா சிவானந்தம் மீண்டும் மனநிலை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஒரு குடும்பத்தின் மோசமான சூழலை எவ்வித உணர்வுமின்றி ஒரு தமிழ் பத்திரிகை பரபரப்புச் செய்தியாக முயன்றதன் விளைவே இத்தலைப்பு. இப்பத்திரிகைகளின் தரம் இவ்வளவு மோசமாக இருக்கின்ற போது நாட்டில் ஜனநாயகம் சீரழிவும் தலைதூக்குவது தவிர்க்க முடியாதது. தவறுகளைத் தட்டிக்கேட்டுத் திருத்த வேண்டிய பத்திரிகைகளே தரம்தாழ்ந்து இருக்கின்ற போது இவர்களால் எவ்வாறு அரசியல்வாதிகளை கேள்விக்கு உட்படுத்த முடியும்.
இவ்வாறு தான் பொறுப்பற்ற ஊடகவியலாளர்களால் மே 31 1981இல் எரிக்கப்பட்ட யாழ்நூலகம் யூன் 1ம் திகதி எரிக்கப்பட்டதாக தவறாகப் பதிவு செய்யப்பட்டு இன்று பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி வருகின்றது. இந்தக் குழப்பத்தினூடாக இச்சம்பவங்களுடன் தொடர்புடைய அமைச்சர்கள் காமினி திஸ்ஸநாயக்கவும் சிறில்மத்தியூவும் குற்றச்சாட்டுகளில் இருந்து தப்பிக்க வழியேற்படுத்திக் கொடுக்கப்பட்டது. மே 31 இரவு எரிக்கப்பட்ட நூலகம் யூன் ஒன்று காலை வரையும் எரிந்து கொண்டிருந்தது. அதனைச் செய்தியாக்கிய ஈழநாடு பத்திரிகை நூலகம் யூன் இரவு எரிக்கப்பட்டதாக செய்தி வெளியிட்டது. யூன் அதிகாலை யூன் இரவாகி பின்னர் யூன் 2 இல் அப்பகுதிக்கு முதல் முறையாகச் சென்றவர்கள் முதல்நாள் தான் எரிக்கப்பட்டிருக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்து யாழ் நூலகம் எரிக்கப்பட்ட நாளையே மாற்றி எழுத முற்பட்டுள்ளனர்.
இதேபோல் புளொட்டின் வரலாற்றை எழுதுவதாகக் கூறிக்கொண்டு ஆங்காங்கே தகவல்களைப் பொறுக்கி தனது அனுபவமாகச் சித்தரித்து ஒரு தொடரை எழுதிவருகின்றார் இந்திய உளவுத்துறையான றோவின் முகவர் வெற்றிச்செல்வன். அவர் இந்திய உளவுப் பிரிவுக்கு தனது விசுவாசத்தைகாட்ட றோவின் செயற்பாடுகளுக்கு வெள்ளையடித்து வருகின்றார். இவர் உமா மகேஸ்வரனின் கொலை, மாலை தீவு கைப்பற்றல் நடவடிக்கைகளின் போது இந்திய உளவுபடையான ரோவிற்கு எதுவுமே சம்பந்தம் இல்லாமல் அவர்கள் எல்லாம் விரல்சூப்பிக் கொண்டிருந்தனர் என்ற வகையில் பதிவுகளை எழுதிவருகின்றார். தன்னை முகவர் என்று எழுதுபவர்களை தொலைபேசியில் மிரட்டுவதும் அவர்களைப் பற்றி மோசமாக பதிவுகளை இடவதும் இவருடைய கைங்கரியமாக உள்ளது. இவருடைய பதிவுகளின் நம்பகத்தன்மையும் இவருடைய நேர்மைத்தன்மை பற்றியும் பலரும் கேள்வி எழுப்பி உள்ளனர். தன்னுடைய பதிவுகளிலேயே இவர் ஒன்றுக்குப்பின் ஒன்று முரணாகவும் குறிப்பான கால குறியீடுகள் இல்லாமல் சகட்டுமேனிக்கு தன் விருப்பு வெறுப்புப்படி எழுதி வருகின்றமையயை பலரும் தேசம்நெற்க்கு தெரிவித்து வருகின்றனர்.
ஊடகவியலாளனே வரலாற்றின் முதலாவது ஆசிரியன். ஆகவே பதிவுகளை மேற்கொள்வோர் வரலாற்றுக் கடமையை உணர்ந்து அதனைச் செய்ய வேண்டும்.

“ பெருந்தோட்ட கம்பனிகளின் சர்வாதிகாரத்தை அரசும் அவர்களுடன் உள்ள மலையக நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஏற்றுக் கொள்கின்றார்களா? – இராதாகிருஸ்ணன் கேள்வி !

“ பெருந்தோட்ட கம்பனிகளின் சர்வாதிகாரத்தை அரசும் அவர்களுடன் உள்ள மலையக நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஏற்றுக் கொள்கின்றார்களா? என நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மலையக மக்கள் முன்னணியின் தலைவருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் கேள்வியெழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,

இன்று பெருந்தோட்டங்களில் ஒவ்வொரு நாளும் பெருந்தோட்ட கம்பனிகளினது நிர்வாகம் முகாமைத்துவமும் சர்வாதிகார போக்குடனேயே நடந்து கொள்கின்றார்கள். இது ஒரு நல்ல சூழ்நிலை அல்ல. எந்த நேரத்திலும் தொழிலாளர்கள் தங்களுடைய பொறுமையை இழக்க வேண்டிய நிலைமை ஏற்படும். எனவே இதனை உடனடியாக பெருந்தோட்ட கம்பனிகள் முடிவிற்கு கொண்டு வர வேண்டும்.

பெருந்தோட்ட தொழிலாளர்கள் இன்று தினந்தோறும் பல சிக்கல்களை நிர்வாகத்தின் மூலமாக சந்தித்து வருகின்றார்கள். இதனை அரசாங்கமும் பெருந்தோட்ட கம்பனிகளும் கண்டு கொள்வதில்லை. நாங்கள் எதிர் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் என்ற வகையில் தொழிலாளர்களின் பிரச்சினைகள் தொடர்பாக பாராளுமன்றத்திலும் ஊடகங்களிலும் தெளிவாக விடயங்களை தெரிவித்து வருகின்றோம்.

ஆனால் ஆளும் கட்சியுடன் இணைந்திருக்கின்ற அமைச்சர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் இந்த விடயங்கள் தொடர்பாக எங்கேயும் குரல் கொடுப்பதில்லை. அரசாங்கத்திற்கு ஒரு அலுத்தம் கொடுப்பதில்லை. அப்படியானால் அரசாங்கமும் பெருந்தோட்ட கம்பனிகளும் செய்கின்ற சர்வாதிகாரத்தை அவர்கள் ஏற்றுக் கொள்கின்றார்களா? என்ற கேள்வி எனக்கு எழுகின்றது.

20வது திருத்த சட்டத்திற்கு அரசாங்கத்திற்கு ஆதரவளித்த பொழுது அதற்கு காரணமாக கூறியது நாங்கள் மக்கள் நலன் கருதியே வாக்களித்தோம் என்று. ஆனால் இன்று அந்த மக்கள் நிலை என்ன என்பதை புரிந்து கொள்ள முடியாதவர்களாக அவர்கள் இருக்கின்றார்கள்.

ஜனாதிபதி தனது உரையில் பெருந்தோட்டங்கள் மூலமாக அதிக அந்நிய செலவாணி கிடைத்துள்ளதாக தெரிவிக்கின்றார். ஆனால் அந்த மக்கள் இன்று எதிர் நோக்குகின்ற பிரச்சினைகளுக்கு ஒரு தீர்வை அவரால் பெற்றுத் தர முடியவில்லை. ஆகக் குறைந்ததது இந்த கொரோனா காலத்தில் தொடர்ந்து உழைத்துக் கொண்டிருக்கின்ற எங்களுடைய தொழிலாளர்களுக்கு ஒரு நன்றியை கூட அவரால் கூற முடியவில்லை.

இதனை நினைத்து நாங்கள் வேதனைப்படுகின்றோம். எனவே அரசாங்கத்துடன் இணைந்திருக்கின்றவர்கள் இந்த விடயங்கள் தொடர்பாக அரசாங்கத்திற்கு அலுத்தம் கொடுக்க முன்வர வேண்டும். இல்லாவிட்டால் அரசாங்கத்தில் இருந்து வெளியேறி எங்களுடன் இணைந்து தொழிலாளர்களுக்காக போராட முன் வர வேண்டும். மறந்து விடாதீர்கள். இந்த பதவியையும் அந்தஸ்தையும் நமக்கு கொடுத்தவர்கள் இந்த பெருந்தோட்ட மக்களே தவிர அரசாங்கம் அல்ல. என்பதை நீங்கள் நன்கு புரிந்து கொள்ள வேண்டும்.

“இரட்டை குடியுரிமை தொடர்பாக கொடுத்த வாக்குறுதியை ஜனாதிபதி நிறைவேற்றுவார் என எதிர்பார்க்கிறோம்.” – பேராசிரியர் திஸ்ஸ விதாரண

“இரட்டை குடியுரிமையினை உடையவர்கள் அரச நிர்வாகத்தில் உயர் பதவி வகிப்பதற்கும், நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகிப்பதற்கும் புதிய அரசியலமைப்பின் ஊடாக தடை விதிக்கப்படும் என ஜனாதிபதி வாக்குறுதி வழங்கியுள்ளார். இந்த வாக்குறுதி நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கிறோம்.” என லங்கா சமசமாஜ கட்சியின் தலைவர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்தார்.

பஷில்ராஜபக்ஷவை பாராளுமன்றம் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகளை அரச தரப்பு மேற்கொண்டு வருகின்றது. இந்நிலையில் பஷில்ராஜபக்ஷ அமெரிக்க குடியுரிமை பெற்றிருப்பது மீள இரட்டை பிராஜாவுரிமை தொடர்பான பிரச்சினைகளை இலங்கை அரசியலில் கிளப்பிவிட்டுள்ளது. இந்நிலையில் இது தொடர்பில் பேசும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

இரட்டை குடியுரிமையினை உடையவர்கள் தேர்தலில் போட்டியிடுவதற்கு அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தத்தில் தடை விதிக்கப்பட்டது. இதனை சிறந்த ஒரு செயற்பாடு என வரவேற்றோம். இத்தடை அரசியலமைப்பின் 20 ஆவது திருத்ததில் நீக்கப்பட்டது.

இரட்டை குடியுரிமையினை உடையவர்கள் தேர்தலில் போட்டியிடுவதுடன், அரச உயர் பதவிகளில் தலைமைத்துவம பதவி வகிக்கலாம் என அரசியலமைப்பின் 20 ஆவது திருத்த வரைபில் குறிப்பிடப்பட்டது. இதற்கு ஸ்ரீ லங்கா சுதந்திர பொதுஜன பெரமுன கூட்டணியின் பிரதான பங்காளி கட்சியினர் கடுமையான எதிர்ப்பை ஒன்றிணைந்து வெளிப்படுத்தினோம்.

அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தத்தை தற்காலிக ஏற்பாடாக மாத்திரம் கருத வேண்டும். இரட்டை குடியுரிமை உடையவர்களுக்கு 20 ஆவது திருத்தத்தில் வழங்கப்பட்ட சலுகை புதிய அரசியமைப்பின் ஊடாக நீக்கப்படும். அத்துடன் இரட்டை குடியுரிமை கொண்டவர்கள் தொடர்பில் அனைத்து தரப்பினரும் ஏற்றுக் கொள்ளும் முரண்பாடற்ற யோசனை உள்வாங்கப்படும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வாக்குறுதி வழங்கினார். இந்த வாக்குறுதி நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கிறோம்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவிற்கும், ஸ்ரீ லங்கா சுதந்திர பொதுஜன பெரமுன கூட்டணிக்கும் இடையிலான முரண்பாடுகள் நாளாந்தம் தீவிரமடைந்துள்ளதே தவிர குறைவடையவில்லை. பல விடயங்கள் கூட்டணியை பலவீனப்படுத்தியுள்ளன. இப்பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணுமாறு சிரேஷ்ட தலைவர்களுக்கு கோரிக்கை விடுத்தும் பயனற்றதாக உள்ளது என்றார்.

இந்திய ஜனாதிபதியின் பயணத்துக்காக நிறுத்தப்பட்ட போக்குவரத்து – உரிய நேரத்துக்கு வைத்தியசாலை செல்ல முடியாது உயிரிழந்த பெண் !

இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்,   உத்தர பிரதேச மாவட்டத்தின் கான்பூர் மாவட்டத்தில் உள்ள தான் பிறந்த பகுதியான  கிராமத்துக்கு நேற்று முன்தினம் சென்றார். கான்பூருக்கு குடும்பத்துடன் ரயிலில் பயணம் செய்த ஜனாதிபதி, அங்கிருந்து காரில் கிராமத்துக்கு சென்றார். அவரது கார் செல்லும் வழியில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவனைக்கு அழைத்துச்செல்லப்பட்ட வந்தனா மிஸ்ரா (வயது 50) என்ற பெண் உயிரிழந்தார்.  சரியான நேரத்துக்கு  மருத்துவமனைக்கு அழைத்து வந்திருந்தால் அவர் உயிர் பிழைத்திருக்கலாம்’ என, வைத்தியர்கள் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் பற்றி கேள்விப்பட்ட ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தன்னுடைய அதிர்ச்சியை வெளியிட்டுள்ளதுடன்  வந்தனாவின் குடும்பத்துக்கு, தன் ஆழ்ந்த இரங்கலை நேரில் சென்று தெரிவிக்கும்படி போலீஸ் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதற்கிடையே நடந்த சம்பவத்துக்கு, கான்பூர் போலீசார் மன்னிப்பு கோரியுள்ளனர்.

யாழில் திறந்து வைக்கப்பட்டுள்ள 23 கோடி ரூபா பெறுமதியான சேதனக் குப்பைகளை இயற்கை உரமாக மாற்றும் தொழிற்சாலை – நாமல் ராஜபக்ஷ திறந்து வைப்பு !

யாழ். வடமராட்சி, முள்ளியில் சுமார் 23 கோடி ரூபா பெறுமதியான சேதனக் குப்பைகளை இயற்கை உரமாக மாற்றும் தொழிற்சாலை இன்று அமைச்சர் நாமல் ராஜபக்ஷவால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

 

யாழ்ப்பாணத்தில் 23 கோடி பெறுமதியில் தொழிற்சாலையை திறந்து வைத்த நாமல்! -  ஐபிசி தமிழ்

யாழ்ப்பாணம் – வடமராட்சி, முள்ளியில் சுமார் 23 கோடி ரூபா பெறுமதியான சேதனக் குப்பைகளை இயற்கை உரமாக மாற்றும் தொழிற்சாலை இன்று அமைச்சர் நாமல் ராஜபக்ஷவால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

ஜப்பான் நாட்டின் ஜெய்க்கா நிறுவனத்தின் உதவி மூலம் உருவாக்கப்பட்ட இந்த தொழிற்சாலையால் ஒரு நாளைக்கு ஐம்பதாயிரம் கிலோ உரத்தை உருவாக்க முடியுமென தெரிவிக்கப்படுகிறது.

கரவெட்டி பிரதேச சபையின் ஆளுகைக்குள் உட்பட்ட இந்த தொழிற்சாலை மூலம் அருகிலுள்ள பிரதேச சபைகளின் குப்பை பிரச்சினைகளுக்கும் தீர்வு காண முடியுமென எதிர்பார்க்கப்படுகிறது. இலங்கையின் 9 மாகாணத்துக்கும் ஒரு திட்டம் வழங்கப்பட்ட நிலையில் வட மாகாணத்துக்கான திட்டம் கரவெட்டி பிரதேச சபைக்கு வழங்கப்பட்டுள்ளது.

இன்று மாலை 4 மணிக்கு கரவெட்டி பிரதேச சபை தவிசாளர் ஐங்கரன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் நாமல் ராஜபக்ஷ, இராஜாங்க அமைச்சர்கள் ,நாடாளுமன்ற உறுப்பினர்களான அங்கஜன் இராமநாதன், எம்.ஏ.சுமந்திரன் மற்றும் த.சித்தார்த்தன் உள்ளிட்டவர்களும் கலந்துகொண்டிருந்தனர்.

அரசியல் கைதியான ஆனந்த சுதாகரின் பிள்ளைகள் அமைச்சர் நாமல் ராஜபக்ஷவை இன்று சந்தித்தனர்.

வடமராட்சியின் முள்ளி பகுதியில் இடம்பெற்ற சேதனக் குப்பைகளை இயற்கை உரமாக மாற்றும் தொழிற்சாலை திறப்பு விழாவிற்கு வந்தபோதே நாமல் ராஜபக்ஷவை ஆனந்த சுதாகரின் பிள்ளைகள் சந்தித்தனர்.

இந்த சந்திப்பின் போது தமது தந்தையை விடுதலை செய்யுமாறு, ஆனந்த சுதாகரின் ஆனந்த சுதாகரின் மகன் கவிரதன், மகள் சங்கீதா ஆகியோர் அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தனர்.

அதேவேளை அரசியல் கைதிகளின் உறவுகளும் அண்மையில் விடுதலையான அரசியல் கைதிகளும் அமைச்சர் நாமலை சந்தித்தமை குறிப்பிடத்தக்கது.

வட – கிழக்கு மக்களையும் மண்ணையும் பாதுகாக்க செல்வம் அடைக்கலநாதன் அழைப்பு !

“இராணுவ அடக்குமுறையினூடாக எமது தேசத்தின் வரலாற்றை சிதைக்கும் செயற்பாட்டினை அரசு மேற்கொள்கினறது.” என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

ரெலோவின் ஏற்பாட்டில் இன்று இடம்பெறவுள்ள இணயவழி கலந்துரையாடல் தொடர்பாக விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

வட-கிழக்கில் இலங்கை அரசாங்கம் ஒரு மோசமான செயற்பாட்டை முன்னெடுத்து வருகின்றது. மாகாண சபையின் அதிகாரங்களை பறித்து, நிலங்களை அபகரித்து பூர்வீகத்தை சிதைக்கும் செயற்பாட்டை இலங்கை அரசு முன்னெடுத்து வருகின்றது. அது எமது மக்களிடத்திலும், மண்ணிலும் ஒரு அபாயகரமான நிலைமையை உண்டுபண்ணி கொண்டிருக்கின்றது. இதற்கு நாம் தடைபோடவில்லை என்றால் நிச்சயமாக இராணுவ அடக்குமுறையினூடாக எமது தேசத்தின் வரலாற்றை சிதைக்கும் செயற்பாட்டினை அவர்கள் செய்து முடிப்பார்கள்.

அதனை முறியடிக்க வேண்டும் என்றால் எங்களுக்குள் ஒரு ஒற்றுமை வேண்டும். அந்த ஒற்றுமையினை வலியுறுத்தி சில கட்சிகளிற்கு ஒரு கடிதத்தை அனுப்பியிருந்தோம். குறிப்பாக மாவை சேனாதிராஜா மற்றும் சித்தார்த்தன் ஆகியோர் அதற்கு தமது ஆதரவினை தெரிவித்திருந்தனர். சுரேஸ் பிரேமச்சந்திரன், விக்கினேஸ்வரன் ஐயா ஆகியோர் தமது ஆர்வத்தினை தெரிவித்திருந்தாலும் கூட வேறு சிலரையும் உள்வாங்க வேண்டும் என்ற கோரிக்கையினையும் முன்வைத்திருக்கின்றார்கள். கஜேந்திரகுமார் தனது பதிலை அறிவிக்கவில்லை. ஆயினும் இந்த அணியில் அவர் தொடர்ந்து செயற்படவேண்டும் என்ற கோரிக்கையினை முன்வைக்கின்றேன்.

யாரை அழைப்பது என்றவிடயம் தொடர்பாக நாம் அனுப்பிய கடிதத்தில் சில தவறுகள் இருப்பதை குறிப்பிட வேண்டும். எந்தக்கட்சியினை சார்ந்தவர்கள் என்ற விடயத்தினை நாம் பார்க்கவில்லை. விடுபட்டவர்கள் அழைக்கப்பட வேண்டும் என்பதில் நாம் ஆர்வமாக இருக்கிறோம். எமது இனத்தையும் மண்ணையும் காப்பதற்கான ஒற்றுமை வலுவாகவேண்டும். அதற்கு தமிழீழ விடுதலை இயக்கம் எந்தவிதமான விட்டுக்கொடுப்பினையும் செய்வதற்கு தயாராக இருக்கின்றது.

இந்த விடயம் பிசுபிசுத்துப்போயுள்ளதாக சில ஊடகங்கள் தமது கருத்துக்களை சொல்கின்றது. ஆரம்பப்புள்ளியினையே நாம் வைத்திருக்கின்றோம். அதில் தவறுகள் இருக்கும். அவற்றை திருத்திக்கொள்வோம். அதனை பெரிதுபடுத்தாது இந்த ஒற்றுமைக்கான வாய்ப்பினை தரவேண்டும். கூட்டமைப்புத்தான் செய்யவேண்டும் என்ற நோக்கத்தில் இதனை நாம் செய்யவில்லை. அத்துடன் இந்த ஒற்றுமையானது புலம்பெயர் உறவுகளோடும் தமிழ்நாட்டு மக்களோடும் பேணக்கூடியவகையில் இருக்கவேண்டும்.

அந்தவகையில் யாரை அழைப்பது யாரை விடுவது என்ற ஆலோசனையை பெறுவதற்கான கலந்துரையாடல் ஒன்றையே இன்று ஏற்பாடு செய்துள்ளோம். எனவே யாரும் விடுபடமாட்டார்கள். விடுபட்டவர்களையும் அழைத்துக்கொண்டு மிகவிரைவிலே முழுமையான ஒரு கூட்டத்தினை நடாத்துவதற்கான முயற்சியினை மேற்கொள்வோம்.

இது ஒரு கட்டமைப்பாக வருவதே சாலச்சிறந்ததாக இருக்கும். அதுவே காலத்தின் கட்டாயமாகவும் இருக்கிறது. நாம் சோர்ந்து போகமாட்டோம், அதற்கு என்னவிலை கொடுக்கவேண்டுமோ. அதனை செயற்படுத்த தயாராக இருக்கிறோம், எனக்குறிப்பிட்டுள்ளார்.

அரச தரப்புடன் இணைந்து செயற்படும் வடக்கினை சேர்ந்த கட்சிகளையும் இந்த கட்டமைப்பில் உள்வாங்கி செயற்படுவீர்களா என்று ஊடகவியலாளர் கேட்டதற்கு..
அரசுக்கு எதிரான நடவடிக்கைகளையே நாம் மேற்கொள்ள இருக்கிறோம். ஆகவே ஒருவலுவான ஒற்றுமையை ஏற்படுத்தி அதன்மூலமாக அவர்களும் வரவேண்டும் என அனைவரும் கேட்டுக்கொண்டால் அதனை நாங்கள் பரிசீலிக்கத்தயார் என்றார்.

“சமூக ஊடகங்களில் உடனடியாக நான் கடத்தப்பட்ட தகவல் வெளியாகாவிட்டால் என்னை கொலை செய்திருப்பார்கள்.”- அசேல சம்பத்

குற்றவியல் புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்ட அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தேசிய அமைப்பாளர் அசேல சம்பத் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

அஸ்ட்ரா செனகா தடுப்பூசி தொடர்பில் உண்மைக்கு புறம்பான தகவல்களை சமூக வலைத்தளங்களில் பரப்பியதாக தேசிய ஒளடத கட்டுப்பாட்டு அதிகார சபையின் பொதுமுகாமையாளரால் அளிக்கப்பட்ட முறைப்பாட்டையடுத்து இவர் கைது செய்யப்பட்டிருந்தார்.

குற்றப் புலனாய்வு திணைக்களத்தினர் அவரை நேற்று கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர் , ஐந்து இலட்சம் ரூபா பெறுமதியான இரு சரீர பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையின் விடுதலையின் பின்பு ஊடகங்களிடம் பேசிய அவர்,

வாழ்க்கையில் முதல்தடவையாக நான் மரண பயணத்தை அனுபவித்தேன் ,நான் மரணத்தின் வாசலில் இருந்து தப்பி வந்துள்ளேன். வீட்டிலிருந்தவேளை எனது வாயை பொத்தி இழுத்துச் சென்றார்கள் – எனது மூத்த மகன் அதனை பார்த்தார். இது தொடர்பான சி.சி.டிவி காட்சிகள் எனது அயல்வீட்டில் உள்ளன.

நான் வீட்டியே இருந்தேன்,நான் இந்த நாட்டின் பிரஜை. அதிகாரிகள் சீருடையின் உரிய காரணம் இன்றி என்னை இழுத்துச் சென்றனர். பத்துபேருக்கு மேல் வந்திருந்தனர், எனது கையில் ஏற்பட்ட காயங்களை பாருங்கள்,எனது விரலில் ஏற்பட்ட காயங்களை பாருங்கள்,

இந்த சாரத்துடன் தான் என்னை கொழும்பிற்கு அழைத்துச்சென்றார்கள். ரிசாட் பதியுதீன் எனக்கு இந்த ரீசேர்ட்டை தந்தார், பொடி லசி எனக்கு குளிப்பதற்கான சவர்க்காரத்தை தந்தார்,

சமூக ஊடகங்களில் உடனடியாக நான் கடத்தப்பட்ட தகவல் வெளியாகாவிட்டால் என்னை கொலை செய்திருப்பார்கள்.

இதேவேளை அவர் பிணையில் விடுதலை செய்யப்பட்ட பின்னர் எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவை அவரது அலுவலகத்திற்கு சென்று சந்தித்துள்ளார்.