June

June

facebook ஊடாக கேவலப்படுத்திய நண்பர்களை சிலுவையில் வைத்து ஆணி அடித்து சித்திரவதை செய்த நபர் !

முகப்புத்தகம் ஊடாக நபர் ஒருவரை கேவலத்திற்கு உட்படுத்திய இருவரை கடத்திச் சென்று கொடூரமாக சித்திரவதை செய்த சம்பவம் தொடர்பில் பலகொல்ல பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

குறித்த இருவரையும் தனது வீட்டுக்கு அழைத்த சந்தேகநபர், அவர்களை அம்பிட்டிய பகுதிக்கு அழைத்துச் சென்று சிலுவைப்போன்ற பலகைகளில் இருவரையும் வைத்து ஆணி அடித்து சித்திரவதை செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.

கடந்த 25 ஆம் திகதி இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர், அம்பிட்டிய பிரதேசத்தில் ஆலயம் ஒன்றை நடத்திச் செல்லும் 30 வயதுடைய துஷ்மந்த என தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய மூவரும் நண்பர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவத்தில் காயமடைந்த 44 மற்றும் 38 வயதான இருவரும் கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சந்தேக நபர்கள் தலைமறைவாகியுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார். சந்தேக நபர்களை தேடி பலகொல்ல பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

கேரளாவில் நாளுக்குநாள் அதிகரிக்கும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் – தடுப்பதற்காக முதல் மந்திரி பினராயி விஜயன் நடவடிக்கை !

இந்தியாவின் கேரளாவில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் சமீபத்தில் அதிகரித்து வருகின்றன.

வரதட்சணை கொடுமை, பெண்களிடம் அத்துமீறல், சிறுமிகளிடம் தகாத முறையில் நடத்தல் போன்ற குற்றங்கள் அதிக அளவு நடந்தது. கேரள காவல்துறையினருக்கு  இது தொடர்பான புகார்கள் அதிக அளவில் வரத்தொடங்கியதை அடுத்து இதுபோன்ற குற்றச்சாட்டுகளை பதிவு செய்ய சிறப்பு மையம் ஒன்றை கேரள அரசு தொடங்கியுள்ளது.

மேலும் இந்த மையத்தில் வாட்ஸ்-அப் மூலமும், தொலைபேசி மூலமும் புகார் செய்யலாம் என அறிவிக்கப்பட்டது. இந்த மையம் தொடங்கிய ஒரு சில நாட்களிலேயே கேரளா முழுவதிலும் இருந்து 100-க்கும் மேற்பட்ட புகார்கள் குவிந்தது.

இதையடுத்து பெண்களுக்கு எதிரான குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல் மந்திரி பினராயி விஜயன் தெரிவித்தார்.

மேலும் இது தொடர்பாக அவர் நேற்று திருவனந்தபுரத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

பெண்களுக்கு எதிரான குற்றங்களை யார் செய்தாலும் அவர்கள் மீது அரசு பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கும். பெண்கள் அளிக்கும் புகார்கள் மீது விரைந்து விசாரணை நடத்த போலீசாருக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.

மேலும் இக்குற்றங்கள் தொடர்பான வழக்குகளை விரைந்து விசாரித்து குற்றவாளிகளுக்கு தகுந்த தண்டனை வழங்க சிறப்பு கோர்ட்டுகள் அமைக்கப்பட உள்ளது.

இதன்மூலம் குடும்ப வன்முறை மற்றும் பாலியல் வன்முறைகளால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு விரைவில் நீதி கிடைக்கும். பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க மாநிலம் முழுவதும் பஞ்சாயத்து அளவில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படும். இதில் உள்ளாட்சி அமைப்புகள் முக்கிய பங்கு வகிக்கும்.

விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மூலம் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறையும் என்று நம்புகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

தடுப்பூசி போட்டுக்கொள்ள விருப்பமில்லா விட்டால் இந்தியாவுக்கு செல்லுங்கள் – பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி ரொட்ரிகோ காட்டம் !

பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி ரொட்ரிகோ டுடெர்டே, கொவிட் தடுப்பூசி போட மறுப்பவர்களை கைது செய்யப்போவதாக எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இந்நிலையில் அந்நாட்டு  ‘தடுப்பூசி வேண்டாம் என்பவர்கள், இந்தியாவுக்கோ அல்லது வேறு நாட்டுக்கோ செல்லுங்கள்’ எனக் கூறி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.

இது தொடர்பில் பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி ரொட்ரிகோ டுடெர்டே தெரிவித்துள்ளதாவது:

நாடு முழுவதும் கொவிட் தொற்று மோசமாகப் பரவி வருகிறது. கொவிட் பரவலைத் தடுக்க தடுப்பூசி போட்டுக்கொள்வது அவசியம். ஆனால் பலரும் தடுப்பூசி போட மறுக்கின்றனர். தடுப்பூசி போடாதவர்களைக் கைது செய்ய நேரிடும். கைது செய்து, தடுப்பூசி போடுவோம். ஏற்கெனவே பெருந்தொற்று பேரிடரால் அவதியுற்றிருக்கும் எங்களுக்கு, தடுப்பூசி போட மாட்டேன் எனக் கூறுபவர்கள் மேலும் மேலும் சுமை கொடுக்கின்றீர்கள் என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.

நான் இவ்வளவு எடுத்துரைத்த பிறகும், உங்களுக்கு தடுப்பூசி வேண்டாமென்றால், இந்த நாட்டை விட்டு வெளியேறிவிடுங்கள். இந்தியாவுக்குச் செல்லுங்கள், அல்லது உங்களுக்கு வேறு ஏதேனும் நாட்டுக்குச் செல்ல வேண்டுமென்றாலும் செல்லுங்கள், அமெரிக்காவுக்குக் கூட செல்லுங்கள். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

பூநகரி கௌதாரிமுனை கடற்பகுதியில் சீனர்களின் அதிகரிக்கும் செயற்பாடுகள் – மீட்டுத்தாருங்கள் என மக்கள் கோரிக்கை !

கிளிநொச்சி பூநகரி பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட கௌதாரிமுனை கடலை, சீனர்களிடம் இருந்து மீட்டுத் தருமாறு, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

யாழ்ப்பாணத்தவர்களின் பெயரில் அனுமதி வழங்கப்பட்டுபுதிதாக ஆரம்பிக்கப்பட்ட கடலட்டை பண்ணை ஒன்றில் சீனர்கள் பலர் நிரந்தரமாக தங்கி நின்று பணியாற்றுவதாக தெரிவிக்கப்படுகிறது.

கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி பிரதேச செயலாளர் பிரிவில் இந்த கடலட்டை பண்ணை அமைக்கப்பட்டுள்ள போதிலும் பூநகரி பிரதேச செலாளரினதோ அல்லது கிளிநொச்சி மாவட்ட கடற்றொழில் திணைக்களத்தினதோ அனுமதி எதுவும் பெற்ப்படவில்லை.

இந்தக் கடலட்டை பண்ணை தொடர்பாக, பூநகரி பிரதேச செயலாளர் கிருஸ்னேந்திரனிடம் வினவிய போது, கடலட்டை பண்ணைக்கு, தம்மிடம் எந்த அனுமதியும் பெறப்படவில்லை என சுட்டிக்காட்டினார்.

எனினும் யாழ்.மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத் திணைக்களத்திடம் அனுமதி பெறப்பட்டுள்ளது. இந்த அனுமதி யாழ்ப்பாணத்தவர்கள் மூவரின் பெயரில் வழங்கப்பட்டுள்ள போதிலும் உள்ளூர்வாசிகளுடன் இணைந்து சீன நாட்டவரே அதிகம் பணியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

“பஸில் ராஜபக்சவுக்காக பதவியை துறக்க ஆளுந்தரப்பில் பலர் தயாராகவுள்ளனர்.” – பஷில் வருகையை உறுதி செய்கிறாரா கெஹலிய ரம்புக்வெல ?

“எந்தவொரு சதித் திட்டத்தாலும் இந்த அரசைக் கவிழ்க்கவே முடியாது. இந்தத் தகவலை அரசுக்கு எதிராகச் சதித்திட்டம் தீட்டுவோருக்குச் சொல்லிவைக்க விரும்புகின்றேன்.” என அமைச்சரவைப் பேச்சாளரும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல ஊடகங்களிடம்  தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

அரசைக் கவிழ்க்க உள்ளேயும் வெளியேயும் சதி முயற்சிகள் நடக்கின்றன என்று ஊடகங்களின் செய்திகள் மூலம்தான் அறிந்துகொண்டேன். இது உண்மையா, பொய்யா என்று சதித் திட்டங்களைத் தீட்டுவோருக்குத்தான் தெரியும்.

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தலைமையிலான அரசு, நாட்டு மக்களின் ஏகோபித்த ஆதரவுடன் நிறுவப்பட்ட அரசு மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் ஆட்சி செய்கின்ற அரசு. எனவே, எந்தவொரு சதித் திட்டத்தாலும் இந்த அரசைக் கவிழ்க்கவே முடியாது. இந்தத் தகவலை அரசுக்கு எதிராகச் சதித்திட்டம் தீட்டுவோருக்குச் சொல்லிவைக்க விரும்புகின்றேன்.

எனினும், ஜனாதிபதி – பிரதமர் – அமைச்சர்கள் – இராஜாங்க அமைச்சர்கள் – ஆளுந்தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஓரணியில்தான் செயற்படுகின்றார்கள். இதை மீறி கட்சிக்குள்ளே சதித்திட்டங்கள் நடக்கின்றன என்பதை நான் ஏற்றுகொள்ளமாட்டேன்.

அதேவேளை, அரசைக் கவிழ்க்க வெளியே நீண்ட நாட்களாகப் பல சதி முயற்சிகள் நடக்கின்றன. அதை நான் ஏற்றுக்கொள்கின்றேன். இதில் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியினர்தான் பிரதான வகிபாகம் வகிக்கின்றனர். அரசையும், மக்களையும், ஒட்டுமொத்த நாட்டையும் குழப்பும் வகையில் ஊடகங்களுக்கு அவர்கள் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.

பஸில் ராஜபக்ச, தேசியப்பட்டியல் மூலம் நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவியேற்கவுள்ளார் என்ற தகவலைக்கூட எதிரணியினர்தான் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளனர். உண்மையில் இதுவரைக்கும் நாடாளுமன்ற உறுப்பினராகும் தீர்மானத்தை பஸில் ராஜபக்ச எடுக்கவில்லை. அவர் விரும்பினால் நாடாளுமன்றம் வர முடியும். அவருக்காக ஆளுந்தரப்பில் பலர் எம்.பி. பதவியை இராஜிநாமா செய்யத் தயாராகவுள்ளனர். பஸில் ராஜபக்ச, ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நிறுவுநர். எனவே, அரசில் அவரின் வகிபாகம் முக்கியம்” – என்றார்.

 

பஷில்ராஜபக்ஷ நாடாளுமன்றம் வருகிறார் என்ற தகவலே அண்மைய நாட்களில் அதிகம் பேசுபொருளாகியிருக்கும் நிலையில் அமைச்சர் ஹெஹலியரம்புக்வெல தெரிவித்திருக்கும் இந்தக்கருத்தானது அவருடைய நாடாளுமன்ற வருகைக்கான ஆயத்தங்கள் திரைமறைவில் நடந்துகொண்டிருக்கின்றன என்பதை உறுதிப்படுத்துவது போல உள்ளது.

சுகாதார விதிமுறைகளை மீறி முத்தமிட்டதால் வந்த அபத்தம் – பதவி துறந்தார் பிரித்தானிய சுகாதார செயலாளர் மாட் ஹான்காக் !

தனது சக ஊழியரை முத்தமிட்டதன் ஊடாக சமூக இடைவெளியை மீறிய காரணத்தால் பிரித்தானிய சுகாதார செயலாளர் மாட் ஹான்காக் தான் பதவி விலகுவதாக அறிவித்துள்ளார்.

Who Is Matt Hancock's Aide Gina Coladangelo? - Todayuknews

கொவிட் தொற்றுநோயைக் கட்டுப்படுத்த பிரித்தானியாவில் கடுமையான சட்டங்கள் அமுல்படுத்தப்பட்டுள்ள நேரத்தில், அந்நாட்டு சுகாதார செயலாளர் மாட் ஹான்காக் தனது சக ஊழியர்களில் ஒருவருடன் மிக நெருக்கமாக இருக்கும் காணொளி வெளியாகி இருந்தது.

இந்த காணொளி வெளியானதன் பின்னர் சுகாதார செயலாளருக்கு எதிராக மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்ததையடுத்து அவர் இவ்வாறு பதவி விலகி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சம்பவத்தின் மூலம் நாட்டின் உயர்மட்ட சுகாதார அதிகாரி பொதுமக்களுக்கு தவறான முன்னுதாரணத்தை காட்டிநிற்பதாக பலர் குற்றம் சாட்டி இருந்தனர்.

சுகாதார செயலாளர் மாட் ஹான்காக் தனது முக்கிய சகாக்களில் ஒருவரான ஜினா கோலாடங்கேலோ(Gina Coladangelo )உடன் நெருக்கமாக இருக்கும் காணொளிகள் மற்றும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

இந்த சம்பவத்திற்கு பிரித்தானிய எதிர்க்கட்சியான தொழிற்கட்சியும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது, உடனடியாக சுகாதார செயலாளரை பதவி நீக்குமாறு பிரதமருக்கு கோரிக்கை விடுத்திருந்தது.

பிரித்தானியா மக்கள் சமூக ரீதியாக இடைவெளியை பேணி, முககவசம் அணிந்து, கடுமையான சுகாதார விதிமுறைகளைப் பின்பற்றும் நேரத்தில் சுகாதார செயலாளரின் செயலுக்கு பலரும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர். எவ்வாறாயினும், இந்த சம்பவம் தொடர்பாக சுகாதார செயலாளர் பகிரங்கமாக மன்னிப்பு கோரியதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த சம்பவத்தின் மூலம் தான் பிரித்தானிய மக்களை அவமானப்படுத்தியதாகவும், அந்த சம்பவத்தின் மூலம் சமூக இடைவெளியை மீறியதாகவும் சுகாதார செயலாளர் ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது

சீனாவின் சினோவேக் தடுப்பூசியை செலுத்திக்கொண்ட 358- மருத்துவர்களுக்கு கொரோனாத்தொற்று !

இந்தனோசியாவில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்துள்ளது. கடந்த வியாழக்கிழமை அந்நாட்டில் 20 ஆயிரம் பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. தொற்று பாதிப்பு அந்நாட்டில் பரவிய பிறகு ஏற்படும் அதிகபட்ச பாதிப்பு எண்ணிக்கை இதுவாகும்.
தொற்று பாதிப்பு விகிதம் 14.6 சதவீதத்தை அந்நாட்டில் எட்டியுள்ளது. இதனால், மருத்துவமனைகளில் படுக்கைகள் நிரம்பி வழிகின்றன. ஆக்சிஜன் தடுப்பாடு ஏற்படும் சூழலும் ஏற்பட்டுள்ளது. இந்த நெருக்கடிக்கு மத்தியில், இந்தோனேசியாவில் மருத்துவர்களும் அடுத்தடுத்து கொரோனா தொற்றால்  அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.
தொற்று பரவத்தொடங்கியதில் இருந்து 401 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளனர். இவர்களில் 20 க்கும் மேற்பட்டோர் தடுப்பூசியை முழுமையாக செலுத்திக்கொண்டவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவின் சினோவேக் தடுப்பூசிதான் அந்நாட்டில் அதிகம் போடப்பட்டுள்ளது.
குறிப்பாக கடந்த 2 வார காலத்தில் மட்டும் 358- மருத்துவர்கள் தொற்று பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். இவர்கள் அனைவரும் சினோவேக் தடுப்பூசியின் இரு டோஸ்களையும் போட்டுக்கொண்டவர்கள்.  இந்தோனேசியாவின் மொத்த மக்கள் தொகையில் வெறும் 5 சதவீதம் பேருக்கு மட்டுமே கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அதிலும் பெரும்பாலும் சினோவேக் தடுப்பூசியே போடப்பட்டுள்ளது. மாறுபாடு கொரோனா வைரஸ் தொற்றுகளுக்கு எதிராக சினோவேக் தடுப்பூசியின் செயல் திறன், பிற தடுப்பூசிகளை காட்டிலும் மிகவும் குறைவு என நம்பப்படுகிறது.

“ஐ.நாவுக்கு வாக்குறுதியளித்ததை போல பயங்கரவாதச்சட்டம் முழுமையாக நீக்கப்பட வேண்டும்.” – எம்.ஏ.சுமந்திரன்

பயங்கவாத தடைச்சட்டத்தினை முழுமையாக நீக்குவதாகவே ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையிலும் சர்வதேச நாடுகளுக்கும் இலங்கை அரசாங்கம் வாக்குறுதி அளித்துள்ள நிலையில் அச்செயற்பாட்டினையே முன்னெடுக்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

பயங்கரவாத தடைச்சட்டம் மீளாய்வு உட்படுத்துவதற்கான அமைச்சரவை உபகுழு நியமிக்கப்பட்டுள்ள நிலையில் அச்சட்டம் பற்றி கருத்து வெளியிடுகையிலேயே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின்போது இலங்கை அரசாங்கம் பயங்கரவாத தடைச்சட்டத்தினை முற்றாக நீக்குவதாக இணக்கப்பாட்டை வெளியிட்டுள்ளது.

குறிப்பாக 30.1தீர்மானத்திற்கு அமைவாக பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு பதிலாக பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமானது உருவாக்கப்பட்டது. ஆனாலும் அதிலும் குறைப்பாடுகள் காணப்பட்டதன் காரணமாக அந்த முயற்சி முழுமை அடையவில்லை.

இவ்வாறான நிலையில் தற்போது பயங்கரவாத தடைச்சட்டத்தினை மீளாய்வு செய்யவுள்ளதாக அரசாங்கம் கூறுகின்றது. எம்மைப்பொறுத்தவரையில் அரசாங்கம் ஐ.நாவிலும், ஏனைய சர்வதேச அரங்குகளிலும், நாடுகளுக்கும் வழங்கிய வாக்குறுதிகளுக்கு அமைவாக பயங்கரவாத தடைச்சட்டத்தினை முழுமையாக நீக்க வேண்டும். அதனை மீளாய்வு செய்வதாக கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

துற்போது அமுலில் உள்ள பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்பட்டு, அதன் கீழ் கைது செய்யப்பட்டு நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டவர்கள் விடுக்கப்பட வேண்டும். அதேநேரம், சர்வதேச சம்பிரதாயங்களுக்கு அமைவாக புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் உருக்கப்பட வேண்டும். உருவாக்கப்படும் சட்டங்கள் நிச்சயமாக ஜனநாயக விழுமியங்களை உள்ளீர்த்ததாக இருக்க வேண்டும் என்றார்.

“கோட்டாபாயராஜபக்ஷவுக்கு எதிராக பிரச்சாரம் செய்தமைக்காக பலர் சித்திரவதை செய்யப்பட்டு வெளிநாடு தப்பிவந்துள்ளனர்.” – சர்வதேச உண்மைக்கும் நீதிக்குமான செயற்றிட்டம் அறிக்கை !

இலங்கையில் போர் முடிவிற்குவந்து 12 ஆண்டுகள் கடந்திருக்கும் நிலையிலும், தமிழர்கள் வெள்ளைவான்களில் கடத்தப்பட்டு இரத்தக்கறை படிந்த சித்திரவதைக்கூடங்களில் விசாரணைகளுக்கு உட்படுத்தப்படுவது இன்னும் தொடர்கின்றது என்று சர்வதேச உண்மைக்கும் நீதிக்குமான செயற்திட்டம் தெரிவித்துள்ளது.

சித்திரவதையால் பாதிக்கப்பட்டவர்களுக்கான சர்வதேச ஆதரவு தினத்தை முன்னிட்டு இன்று (சனிக்கிழமை) சர்வதேச உண்மைக்கும் நீதிக்குமான செயற்றிட்டத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

அவ்வறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

இலங்கையில் மிளகாய்த்தூள், பிளாஸ்டிக்பைகள், பெற்றோல், கட்டுமானக்குழாய்கள், தண்ணீர் பீப்பாய்கள், மின்சார வயர்கள், சிகரட்கள், முட்கம்பிகள், சூடான இரும்புக்கம்பிகள், கப்பிகள் மற்றும் கிரிக்கெட் விக்கெட் மட்டைகள் என்பன சித்திரவதை ஆயுதங்களாகப் பயன்படுத்தப்படுகின்றன.

சித்திரவதை இடம்பெறும் நாடுகளில் இலங்கை முன்னணியில் இருக்கும் அதேவேளை, போர் முடிவடைந்ததன் பின்னர் சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டவர்களில் ஆயிரத்திற்கும் அதிகமானோர் நாட்டைவிட்டு வெளியேறியுள்ளனர். இவர்களில் சிலர் கடந்த 2020 நவம்பரில் சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்கள்.

இலங்கையிலிருந்து பிரித்தானியாவிற்கு வருகின்ற பாதிக்கப்பட்டோரில் அநேகமானோர் சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். ஆனால் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக அவர்களது வாக்குமூலங்களை ஆவணப்படுத்துவதில் தாமதமேற்பட்டுள்ளது. ஜனாதிபதித்தேர்தலின்போது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு எதிராகப் பிரசாரம் செய்தமையும் காணாமல்போனோரின் குடும்பத்தினரால் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டங்களில் கலந்துக்கொண்டமையுமே தாம் கடத்தப்பட்டமைக்கு காரணமென விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டவர்களில் அரைவாசிக்கும் அதிகமானோர் கூறுகின்றனர்.

கிரிக்கெட் விளையாட்டைப் பொறுத்தவரையில் இலங்கை எந்தளவிற்குப் பிரபல்யம் பெற்றுள்ளதோ, அந்தளவிற்கு சித்திரவதைகளுக்கும் பிரபல்யம் பெற்றுள்ளது. பல தசாப்தங்களாகத் திட்டமிட்டுத் தொடரும் சித்திரவதை, துஷ்பிரயோகங்களை முழுநாடும் ஏற்றுக்கொள்வதுடன் பாதுகாப்புப்படைகளுக்கு ஆதரவளிப்பதை நிறுத்தவேண்டிய நேரம் இதுவாகும். இது பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கவேண்டிய நேரமாகும் என்று அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

“என்னுடைய முயற்சிகளின் விளைவாகவே தமிழ் அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர் என்பதை தமிழ்தேசியவாதிகள் ஏறு்கமறுக்கின்றனர்.”  – சுரேன் ராகவன்

“என்னுடைய முயற்சிகளின் விளைவாகவே தமிழ் அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர் என்பதை தமிழ்தேசியவாதிகள் ஏறு்கமறுக்கின்றனர்.”   என ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேன் ராகவன் தெரிவித்தார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“இலங்கைத் தமிழ் அரசியலில் ஒரு திருப்புமுனை ஏற்பட்டுள்ளது. இப்போதாவது இது நடந்திருப்பதைக் குறித்து ஒட்டுமொத்த தமிழ் மக்களும் அதேபோல் தமிழ் அரசியலைப் பற்றி கரிசனையடையவர்கள் சந்தோஷமடைய வேண்டியதுமாயிருக்கின்றது.

ஜனாதிபதியின் உத்தரவின் பேரில் முழுமையாக 93 கைதிகள் விடுவிக்கப்பட்டார்கள். சாதாரணமாக ஒவ்வொரு பொசன் மற்றும் வெசாக் நாட்களில் இது நடைபெறும் விடயமாக இருந்தாலும் வியாழக்கிழமை நடந்த விடயத்திலிலுள்ள விசேட விடயம் என்னவென்றால், பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றவாளிகளாக நிறுத்தப்பட்டிருந்த 16 பேர் விடுவிக்கப்பட்டனர்.

அரசியல் வரலாற்றில் அரசியல் நியமங்களின்படி கைதிகளை விடுவிப்பதானது இருதரப்பினருக்கு இடையே இடம்பெறுகின்றதாகும். அது போர்க் கைதிகள் அல்லது வேறு கைதிகளாகவும் இருக்கலாம். கைதிகளை விடுவிக்கின்ற முக்கிய கலாசாரத்தின் நோக்கம் என்பது, விழுந்திருக்கின்ற அல்லது இல்லாமல் போயுள்ள உறவை வளர்த்தெடுப்பதற்கு எடுக்கின்ற முயற்சியாகும்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச எடுத்த இம்முயற்சி நாடாளுமன்றத்தில் கடந்த புதன்கிழமை விவாதிக்கப்பட்டது. அமைச்சர் நாமல் ராஜபக்ச, தன்னுடைய வாழ்கையில் சிறையில் அனுபவித்த கண்ட கதைத்த தமிழ் பேசும் அரசியல் கைதிகளின் வேதனையை உணர்ந்தவராக பிரேரணையை முன்வைத்தார். முதன்படி ஜனாதிபதிக்கும், அமைச்சர் நாமல் ராஜபக்சவுக்கும், நிதி அமைச்சர் அலி சப்ரிக்கும் எனது நன்றிகளையும் தெரிவிக்கின்றேன்.

நீண்டகாலமாக சிறைகளில் பெற்றோர், பிள்ளைகளை இழந்து இருந்த அந்த குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் மீண்டும் ஒரே கூரைக்குள் இரவு உணவை அருந்தியிருப்பார்கள். அதன் பின்னணியில் இன்னுமொரு விடயம் இடம்பெற்றது.

நாடாளுமன்றத்தில் தமிழ்த் தேசிய அரசியல்வாதிகள் இந்த விடயத்தில் நடந்துகொண்ட விதம் துக்ககரமாகவே இருந்தது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அங்கத்தவராக இருந்தாலும் கூட நான் ஆளுநராக இருந்த காலத்திலும் அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து மேற்கொண்ட முயற்சிகளின் பேரில் இந்த விடயம் இடம்பெற்றிருப்பதை தமிழ் தேசியவாத அரசியல்வாதிகள் ஏற்க மறுக்கின்றனர். சில நேரங்களில், இப்படியான முக்கிய கேந்திர அரசியல் தீர்வுகளைக் காணும்போது, அவர்களுடைய எதிர்கால அரசியல் வெறுமனே நின்றுவிடுமோ என்ற அச்சம் அவர்கள் மத்தியில் இருக்கின்றதோ என்ற கேள்வி எழும்பியுள்ளது.

அரசியல் கைதிகள் இன்னும் பலர் உள்ளனர். 106 பேர் இன்னும் சிறைகளில் உள்ளனர். அவர்களையும் நாங்கள் விடுதலை செய்ய வேண்டும். அதற்கான பேச்சை நடத்த வேண்டும்” . என்றார்.