முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் வீட்டில் பணிப் பெண்ணாகப் பணிபுரிந்த வேளை தீக்காயங்கள் காரணமாக உயிரிழந்த சிறுமியின் சம்பவம் தொடர்பான விசாரணைகள் திசைதிருப்பப்படுவதாக டயகம சிறுமியின் தாயார் குற்றம் சுமத்தியுள்ளார்.
தனது மகள் இதற்கு முன்னர் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டாரா..? என பொலிஸ் குழுவினர் தன்னிடம் கேட்டதாகவும், மகளுக்கு இதற்கு முன்னர் அவ்வாறு எதுவும் இடம்பெறவில்லை என டயகம சிறுமியின் தாயார் தெரிவித்துள்ளார்.
சம்பவம் குறித்து விசாரணை செய்வதற்காக பொலிஸ் குழுவினர் டயகம பகுதியிலுள்ள சிறுமியின் வீட்டுக்குச் சென்று பெற்றோர் உட்பட ஏனையோரிடம் விசாரித்ததன் பின்னர் ஊடக சந்திப்பில் சிறுமியின் தாயார் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
எமது பிள்ளையை தொழிலுக்காகவே அங்கு அனுப்பி வைத்தோம். ஆனால் அவரது உடல் பிரேதப் பெட்டியிலேயே எமக்குக் கிடைத்தது. பிள்ளைக்கு என்ன ஆனது என்பது தொடர்பாக பொலிஸார் விசாரணை நடத்த வேண்டும். ஆனால் அவ்வாறு இல்லாமல் இங்கு வந்து அவர்கள் எழுப்புகின்ற கேள்விகளை எம்மால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.
எனது மகள் இதற்கு முன்னர் பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்பட்டாரா? இங்கு யாருடனும் தொடர்பில் இருந்தாரா? தனியே எங்காவது அனுப்பினீர்களா..? என பொலிஸ் குழுவினர் தன்னிடம் கேட்டதாகவும் டயகம சிறுமியின் தாயார் தெரிவித்துள்ளார்.
நாட்டின் முக்கிய இடத்தில் இருக்கின்றவர்களே இவ்வாறான செயல்களில் ஈடுபடுகின்றார்கள் என்றால், நாட்டில் இவ்வாறு எத்தனை சம்பவங்கள் வெளியில் தெரியாமல் இடம் பெறுகின்றன? எமது பிள்ளைக்கு நியாயம் கிடைக்கும் வரையில் ஒரு சொட்டுக் கண்ணீர் கூட சிந்த மாட்டேன் என்று எமது மகளின் உடல் மீது சபதம் எடுத்திருக்கிறேன் என டயகம சிறுமியின் தாயார் தெரிவித்தார்.