July

July

யாழில் இடம்பெற்ற வாள் வெட்டுடன் தொடர்புடையோர் கைது – ஆவா குழுவிலிருந்து பிரிந்து ஜி குழுவை உருவாக்கியமையே காரணமாம் !

கோண்டாவில் செல்வபுரம் பகுதியில் இடம்பெற்ற வன்முறைக்கு ஆவா குழுவிலிருந்து பிரிந்து ஜி குழுவை உருவாக்கியமையே காரணம் என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.

செல்வபுரம் பகுதிக்குள் புகுந்து 9 பேரை வாளினால் வெட்டி படுகாயப்படுத்தியமை மற்றும் படப்பிடிப்பு நிலையம் ஒன்றுக்கு தீவைத்தமை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் 3 பிரதான சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் 13 சந்தேக நபர்கள் தேடப்பட்டு வருவதுடன், அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்து பாதுகாத்து வருபவர்களையும் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படுவதாகப் காவல்துறையினர் கூறினர்.

கோண்டாவில் செல்வபுரம் பகுதியில் கடந்த ஜூன் 30ஆம் திகதி இரவு 8.30 மணியளவில் இடம்பெற்ற வன்முறையில் ஒருவரின் கை துண்டாடப்பட்டதுடன் மேலும் 8 பேர் படுகாயமடைந்தனர்.

சம்பவம் தொடர்பில் கோப்பாய் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.

யாழ்ப்பாணம் மாவட்ட பிரதிக்காவல்துறைமா அதிபர் பிரியந்த லியனகேயின் தலைமையில் யாழ்ப்பாணம் பிராந்திய மூத்த காவல்துறை அத்தியட்சகரின் வழிகாட்டலில் பிரதான காவல்துறை பரிசோதகர் நிகால் பிரான்ஸிஸ் தலைமையிலான மாவட்ட குற்றத் தடுப்பு காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்தனர்.

சம்பவத்துடன் தொடர்புடைய 3 பிரதான சந்தேக நபர்கள் நேற்றுக் கைது செய்யப்பட்டனர்.

கோண்டாவில் வன்முறைக்கு காரணம் ஆவா; ஜி குழுவை இலக்கு வைத்துத் தாக்குதல் |  Muthalvan News

யாழ்ப்பாணம் பொம்மைவெளியைச் சேர்ந்த 23 வயதுடைய ஒருவரும் கோண்டாவிலைச் சேர்ந்த 25 வயதுடைய ஒருவரும் கொக்குவில் வராகி அம்மன் ஆலயத்தைச் சேர்ந்த 19 வயதுடைய ஒருவரும் கைது செய்யப்பட்டனர்.

மூவரிடமும் முன்னெடுத்த விசாரணையில் சம்பவ தினத்தன்று 6 மோட்டார் சைக்கிள்களில் 16 பேர் இணைந்து இந்த வன்முறையில் ஈடுபட்டதாக வாக்குமூலம் வழங்கியுள்ளனர்.

காவல்துறையினர் மேலும் தெரிவித்ததாவது…

ஆவா குழுவிலிருந்து பிரிந்த செல்வபுரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் ஜி குழு என்று ஆரம்பித்தனர். அவர்கள் ஜி குழுவுக்கு பாடல் ஒன்றையும் தயாரித்து வெளியிட்டனர்.

அதனாலேயே அந்தப் பாடலை ஒலிப்பதிவு செய்த ஒளிப்பதிவு நிலையத்துக்கு தீவைத்ததாகும் ஜி குழுவைச் சேர்ந்தோருக்கு வாளினால் வெட்டியதாகவும் பிரதான சந்தேக நபர்கள் வாக்குமூலத்தில் தெரிவித்தனர்.

சந்தேக நபர்கள் மூவரிடமிருந்து 3 கஜேந்திர வாள்களும் 2 சாதாரண வாள்களும் முச்சக்கர வண்டி, மோட்டார் சைக்கிள் என்பன கைப்பற்றப்பட்டன.

மேலும் தெல்லிப்பழை, காங்கேசன்துறை, பொம்மைவெளி, கோண்டாவிலைச் சேர்ந்த 13 சந்தேக நபர்கள் தேடப்பட்டு வருகின்றனர். அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்து மறைத்து வைத்துள்ளவர்களும் கைது செய்யப்படுவார்கள்.

பிரதான சந்தேக நபர்கள் மூவரும் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளனர் – என்றனர்.

மூன்று வயதில் ஞானப்பால் குடித்து விடுதலை கீதம் பாடிய மேதகு நாயனார்! – த.ஜெயபாலன்

ஞானப்பால் குடித்து தேவரம் பாடிய திருஞானசம்பந்தமூர்த்தி நாயனாருக்குப் பிறகு விடுதலை கீதம்  பாடியவர் மேதகு நாயனார். மேதகு என்ற இந்தப் பெயரை நக்கல் நளினத்துக்காக வைத்தார்களா இல்லை உண்மையிலேயே நேர்மையுடன் தான் இந்தப் பெயர் வைக்கப்பட்டதா என்பது  தெரியவில்லை. ஆனால் மேதகு படம் ஒரு ஆளுமையுடைய வரலாற்றை எப்படி எடுக்கக் கூடாது என்பதற்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டாக அமையும்.

அந்தப் படத்தை தமிழீழ விடுதலைப் போராட்டத்தைப் பற்றியும் பிரபாகரனைப் பற்றியும் எதுவுமே தெரியாத சிலரே உருவாக்கியுள்ளனர். அந்தப் படத்தில் அமைக்கப்பட்ட காட்சிகள், நடந்த சம்பவங்கள் பற்றிய எவ்வித ஆய்வும் இல்லாமல், சகட்டுமேனிக்கு காட்சிப்படுத்தப்பட்டு, ஒரு வரலாற்றுக் குப்பையாக்கி உள்ளனர். மழைக்கு முளைக்கும் காளான்களைப் போன்று பலர் வரலாற்றைப் பதிவு செய்கிறோம் என்ற பெயரில் தங்கள் தேவைகளுக்கும், விருப்பு வெறுப்புகளுக்குமேற்ப வரலாற்றைச் சோடிக்கலாம் எனக் கருதுகின்றனர். அதற்கு மேதகு நல்லதொரு உதாரணம்.

படத்தின் தலைப்பில் இருந்து இறுதிவரை படம் உயிரோட்டமாக இல்லை. சிலரைத் திருப்திப்படுத்துவதற்காக அவர்களுடைய கட்டாயத்தின்படி எடுக்கப்பட்ட படமாகவே தெரிகின்றது. உலகத்தில் எத்தனையோ தலைவர்களுடைய ஆளுமைகளுடைய படங்கள் தத்துரூபமாக எடுக்கபட்டு; காலத்தால் அழியாத வரலாற்று ஆவணங்களாக அமைந்து; பல விருதுகளையும் வென்றுள்ளன. ஆனால் மேதகு படத்தின் ஆரம்பத்தில் இருந்து இறுதிவரை பிரச்சாரவாடை தாங்க முடியவில்லை. உலகில் எந்தத் தலைவரதும், ஆளுமையினதும் வரலாறும் இவ்வளவு பிரச்சாரவாடையுடன் உண்மைக்குப் பிறம்பாகப் பதிவு செய்யப்படவில்லை. உண்மையான தலைவர்களுக்கு செயற்கையாக விம்பம் கட்டவேண்டிய அவசியமும்  இல்லை. பிரச்சாரமும் தேவையில்லை.

காந்தியின் வரலாற்றை மகாத்மா என்ற பெயரில் படமாக்கவில்லை. காரணம் அத்தலைவர்களுக்கு பிரச்சாரம் தேவைப்பட்டிருக்கவில்லை. தலைவர்கள் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவர்களும் அல்ல. இதுவரை இவ்வுலகில் தலைவர்களாக கொள்ளப்பட்டவர்களில் தீபெத் மக்களுக்காக குரல்கொடுக்கும் தலய்லாமா மட்டுமே கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்டவராகவும் சிறுபிராயம் முதல் சமயகட்டுப்பாடுகளோடு வாழ்பவராகவும்  உள்ளார். ஏனைய தலைவர்கள் சாமானியர்களாகப் பிறந்து தலைவர்களாக ஆகினர். அவர்கள் சாதாரண மனிதருக்குள்ள பண்புகளைக் கொண்டிருந்தனர். அவர்கள் யாரும் தாங்கள் எப்போதும் சரியாக இருந்ததாகவோ சுத்தமான சுவாமிப் பிள்ளைகளாக வாழ்ந்ததாகவோ குறிப்பிடவில்லை. தங்கள் ஆளுமைகளினால் தங்களை ஆளுமைகளாக நிறுவினர். அவர்கள் தங்களைப் பற்றிய விம்பங்களைக் கட்டமைக்கவில்லை. அதனால் அவர்கள் சர்வதேச அளவிலும் பல்வேறு தரப்பினராலும் ஆளுமைகளாக தலைவர்களாக ஏற்றுக்கொள்ளப்படுகின்றனர்.

ஆனால் தமிழீழ விடுதலைப் புலிகளையும் அதன் தலைவர் வே பிரபாகரனையும் பொறுத்தவரை அவர்கள் தங்கள் brand name யை – unique selling pointயை செயற்கையாகக் கட்டமைக்க முயல்கின்றனர். அந்த முயற்சியின் ஒரு அம்சமே மேதகு.

படத்தில் சம்பவம் நடந்த திகதியையும் சம்பந்தப்பட்டவர்களின் பெயர்களையும் வைத்துக்கொண்டு கதைகள் புனையப்பட்டு உள்ளது. இப்படத்தில் உண்மையின் வறுமை, தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவராக இருந்த பிரபாகரனுடைய வரலாறு – நேர்மையாக் பதிவு செய்யப்பட முடியுமா என்ற கேள்வியை எழுப்பி உள்ளது. புலிக்குட்டிகளின் விசிலடிச்சான் குஞ்சுகளின் தலையீடு இல்லாமல் காத்திரமாக எடுக்கக் கூடிய ஒரு படைப்பாளியினாலேயே அவ்வாறானதொரு சிறந்த படைப்பைத் தர முடியும்.

பூலான் தேவியின் வரலாறு திரைப்படமாக்கப்பட்டது. அத்திரைப்படத்தில் பூலான் தேவியின் வரலாற்றின் ஒவ்வொரு பகுதியும் மிக நேர்மையுடன் நேர்த்தியாகப் பதிவு செய்யப்பட்டது. பிரித்தானியாவின் சனல் போர் பில்ம்ஸ் இனால் தயாரிக்கப்பட்ட இப்படத்தை சேகர் கபூர் இயக்கி இருந்தார். அதேபோல் சந்தோஸ் சிவனின் ‘தி ரெறறிஸ்ற்’ திரைப்படம் ராஜீவ் காந்தியின் படுகொலையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம். ஒரு தற்கொலைக் கொலையாளியின் உணர்வை மையமாக வைத்து உயிரோட்டமாக அப்படம் தயாரிக்கப்பட்டது. அப்படத்தில் அத்தற்கொலைப் போராளி இன்னொரு போராளியுடன் உறவுகொள்வதை மட்டும் தமிழீழ விடுதலைப் புலிகளின் அனுதாபிகள் வைத்துக்கொண்டு, இயக்கத்தில் அப்படி நடப்பதில்லை என்று மனித உணர்வுகளைக் கூட புரிந்துகொள்ள முடியாதவர்களாக விமர்சனங்களை முன் வைத்தனர்.

தமிழீழ விடுதலைப் புலிகள் ஏதோ பிரபாகரன் பிறக்கின்ற போதே அவர் விடுதலை உணர்வோடு பிறந்து மூன்று வயதிலேயே ‘தமிரின் தாகம் தமிழீழத் தாயகம்’ சொன்னார் என்பது போலவே தான் இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. குறிப்பாக அத்திரைப்படம்  பதிவு செய்கின்ற துரையப்பா கொலை வரையான காலகட்டத்தில் வே பிரபாகரன் ஒரு ஆர்வக்கோளாறுடைய இளைஞர். பிரபாகரனுக்கு தம்பி என்ற பெயர் வரக்காரணமே அவர் இருந்தவர்கள் எல்லோரிலும் இளையவராக இருந்ததும்  அவரை யாரும் பெரிதாக கண்டு கொள்ளாமல் இருந்ததும் வரலாறு. குட்டி மணி தங்கத்துரை போன்றவர்கள் அதனாலேயே ‘மல்லி’ என அழைத்தனர். பிரபாகரனுடன் தம்பி நிலைத்துக்கொண்டது. படத்துக்கு தம்பி என்ற பெயரே மிகப்பொருத்தமாக அமைந்திருக்கும்.

அன்றைய சூழலில் இருந்த அரசியல் பின்னணியைக் கூட படம் தவறவிட்டுவிட்டது. துரையப்பாவை துரோகியாக்கியது தமிழர் விடுதலைக் கூட்டணி. பிரபாகரன் உட்பட்ட இளைஞர்கள் தமிழர் விடுதலைக் கூட்டணியின் ஆவா குறூப். தமிழர் விடுதலைக் கூட்டணியினர் துரையப்பாவிற்கு இயற்கை மரணம் இல்லை என்று சொல்ல பிரபாகரன் போன்றவர்கள் துரையப்பாவை படுகொலை செய்தனர். தமிழீழ கோசத்தை கண்டு பிடித்து பிரபாகரன் போன்ற இளைஞர்களின் கையில் கொடுத்ததே தமிழர் விடுதலைக் கூட்டணி. பிரபாகரன் ஒன்றும் விடுதலை உணர்வோடு பிறந்து வளர்ந்து போராட வரவில்லை. தமிழர் விடுதலைக் கூட்டணியினரால் தூண்டப்பட்ட பல்லாயிரக்கணக்கான இளைஞர்களில் ஒருவர். அவர் விடுதலைப் போராட்ட புத்தகம் எல்லாம் படித்தார் என்பது சற்று ஓவர். ஆனந்தவிகடன் குமுதம் கல்கி படித்ததாகவே வே பிரபாகரன்  நேர்காணல் ஒன்றிலேயே சொல்லி உள்ளார்.

பிரபாகரன் தீயிட்டு கொழுத்திய பஸ் வண்டி கூட இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பஸ் வண்டியாகத் தெரியவில்லை. தமிழகத்தில் ஓடும் பல்லவன் போக்குவரத்துக் கழகத்தின் பஸ் வண்டியே கொழுத்தப்பட்டது.

இதெல்லாவற்றுக்கும் மேலாக தமிழாராச்சி மாநாட்டைச் சித்தரித்த காட்சி அமைப்புகள் மிக மோசமானவை. யாழ்ப்பாண தமிழராய்ச்சி மாநாடு மண்டபத்தினுள்  நடத்த முடியாமல் முத்தவெளி மைதானத்தில் மக்கள் திரண்டனர். ஆனால் படத்திலோ நூற்றுக்கும் குறைவான மக்கள் மத்தியில் புத்தகவெளியீடு நடப்பதுபோல் காட்சிப்படுத்தப்பட்டு இருந்தது. மேலும் இலங்கைக்குள் சட்டவிரோதமாக கடல்வழியாக வந்திருந்த இரா ஜனர்த்தனன் உரையாற்ற திட்டமிட்டு இருந்தமையாலேயே பொலிஸார் அங்கு செல்லப்பணிக்கப்பட்டனர். அப்பொலிஸ் அதிகாரி மேலே நோக்கித் துப்பாக்கிச்சூட்டை நடாத்த மின்சாரக் கம்பி அறுந்து இரும்புக் கம்பியில் வீழ்ந்தது. அப்போது அந்த இருப்புக் கம்பியில் கையைப் பிடித்துக்கொண்டு நின்றவர்களே மின்சாரம் தாக்கி கொல்லப்பட்டடனர். அன்று மரணித்த ஒன்பது பேர் மின்சாரம் தாக்கியும் இன்னுமொருவர் மாரடைப்பாலும் மரணமானதாக பிரேத பரிசோதணையிலும் உறுதிப்படுத்தப்பட்டது. மேதகு வில் காட்டப்பட்டது போல் யாரும் பொலிஸாரால் தாக்கப்பட்டு மரணிக்கவில்லை.

வரலாற்றை எப்படியும் புனையலாம் எப்படியும் திரிக்கலாம் என்று எம்மத்திலயில் இன்றும் சிலர் நம்புகின்றனர். அவர்களுக்கு பாடம் வரலாறே பாடம் கற்றுக்கொடுக்கும் என்பதில்  சந்தேகம் இல்லை. வே பிரபாகரன் தனக்குப் போட்டியாக யாரும் வந்துவிடக்கூடாது என்பதற்காக எத்தனையோ படுகொலைகளைச் செய்தும் இன்றுவரை அவர்களுடைய வரலாற்றை துடைத்தெறிய முடியவில்லை. ஆண்டுதோறும் நினைவுக் கூட்டங்கள் நடைபெறுகின்றது. ஆனால் வே பிரபாகரனுக்கு எவ்வித ஞாபகார்த்த நிகழ்வுகளும் இல்லை. எதிர்காலத்திலும் அவ்வாறு அமைய வாய்ப்பு இருப்பதாக தெரியவில்லை. வே பிரபாகரன் மே 18 இல் கொல்லப்பட்டாரா மே 19 இல் கொல்லப்பட்டாரா எப்போது கொல்லப்பட்டார் அல்லது இன்னும் இருக்கின்றாரா என்பதற்கே அவ்வமைப்பு விடைகாணவில்லை.

பயணத் தடை மேலும் நீடிப்பு

இலங்கையில் தற்போது அமுலிலுள்ள மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து தடையானது, எதிர்வரும் 19 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்தார்.

 

பிலிப்பைன்ஸ் இராணுவ விமானம் விபத்து – 17 பேர் உயிரிழப்பு

85 பேருடன் பயணித்த பிலிப்பைன்ஸ் இராணுவத்துக்குச் சொந்தமான C-130 விமானம், அந்நாட்டின் தென் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு (அந் நாட்டு நேரப்படி) விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்தில் இதுவரை 17 பேர் உயிரிழந்துள்ளதுடன் 40 பேர் மீட்கப்பட்டுள்ளனர் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பிலிப்பைன்ஸின் தென் பகுதியில் உள்ள, சுலு மாகாணத்தின், ஜொலோ தீவில் தரையிறங்க முற்பட்ட வேளையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது எனத் தெரியவந்துள்ளது.
குறித்த விமானத்தில் புதிதாக இராணுவ பயிற்சி பெற்ற வீரர்கள் இருந்துள்ளனர் என்றும் அப்பகுதியை ஆக்கிரமித்துள்ள அபூ செய்யப் இஸ்லாமிய தீவிரவாத அமைப்புக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகளின் பொருட்டு அவர்கள் அங்கு அழைத்து செல்லப்பட்டடனர் என்றும் மேலும் தெரியவந்துள்ளது.

பசிலின் வருகையால் தீர்வு கிட்டாது – தயாசிறீ காட்டம்

பசில் ராஜபக்ஷ நாடாளுமன்றம் வருவதால் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும் என்பது போல உருவாக்கப்படும் விம்பங்களில் உண்மையில்லை என சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் பொது செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளதாவது,
பசில் ராஜபக்ஷ நாடாளுமன்றத்துக்கு வந்து அமைச்சரானால் மறுநாள் காலை நினைப்பதெல்லாம் நடந்து விடாது. இன்று நம் நாட்டில் டொலர்கள் இல்லை. 2025ஆம் ஆண்டில் கடனை செலுத்த 29 பில்லியன் டொலர் தேவை.
கோட்டாபயவின், மஹிந்தவின் அரசாங்கமோ அல்லது பசில் நாடாளுமன்றத்துக்கு வந்ததால் இந்த பிரச்சனை தீர்ந்துவிடும் என்றிருக்காமல், நாட்டு மக்களுக்கு முதலில் பிரச்சனைகளை தெரிவிக்க வேண்டும். அப்படி கூறினால், இந்த பொருளாதாரத்தை மீண்டும் உருவாக்க நீங்கள் எவ்வாறு பங்களிக்க முடியும் என்பதை மக்களிடம் கேட்க முடியும். ஏனென்றால் நாம் அனைவரும் இதை எதிர்கொள்ள வேண்டும். எவரேனும் பொருளாதாரம் சிறப்பாக இருப்பதாக கூறினால், அப்படியில்லை. உண்மை நிலைமை இதுதான் – என்றார்.

அதிகரிக்கும் தற்கொலைகள் – இதற்கான தீர்வு என்ன ..?

செய்தி – நேற்றைய தினம் வவுனியா, செட்டிகுளம், கணேசபுரம் பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் இளம் குடும்ப தலைவர் ஒருவர்  சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 

…………………………………………………………………………………………………………………………………..

தூக்கில் தொங்கிய நிலையில் ஒருவருடைய சடலம் மீட்பு என்பது .., வெளியே நின்று பார்த்தால் சாதாரணமான ஒரு தற்கொலையாகவோ அல்லது ஒரு சாதாரண செய்தியாகவோ  தெரியலாம். ஆனால் அந்த முடிவுக்கு அவர் வருவற்கு அவரை தள்ளிய சூழல் பற்றி நாம் அனைவரு் சிந்திக்க மறந்து விடுகின்றோம். அண்மைய நாட்களில் கிடைக்கின்ற அதிக தற்கொலை தொடர்பான செய்திகள் குடும்பங்களுடன் தொடர்புடையனவாகவே இருக்கின்றன.

உலக சுகாதார அமைப்பு வெளியிட்டிருந்த தகவல்களின் படி 2016ஆம் ஆண்டில் தற்கொலைகள் அதிகமாக இடம்பெறும் நாடுகளின் பட்டியலில் இலங்கை முன்னிலையில் இருந்தது. இப்போதும் கூட இந்த தரவுகளின் பட்டியலில் இலங்கை முதல் 20 இடங்களுக்குள் தான் இருக்கின்றதாம். இங்கு நடக்கின்ற அதிகமான தற்கொலைகளுக்கு பிரதானமான காரணம் 03 தான் என அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.

01. மன அழுத்தம். (Depression) :- இது கடன் தொல்லை, காதல் தோல்வி, குடும்பத்தகராறு என்று பட்டியல் நீண்டு செல்லும்.

02. மதுப்பழக்கத்துக்கு அடிமையாதல். இதனுடன் சேர்த்து ஏனைய போதைப்பொருள் பாவனையும் காரணங்களாகும்.

03. பெற்றோர் கண்காணிப்பு இன்மை மற்றும் தனிமை.

முக்கியமாக இந்தத்தற்கொலைகள் கூட இலங்கையில் இந்துக்களிடமும் பௌத்தர்களிடமுமே அதிகமாக காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இஸ்லாமியரிடையே இது மிக்ககுறைவாகவே காணப்படுகின்றமையும் நோக்கத்தக்கது. ஏனெனில் இஸ்லாமியருடைய மதம் அது தடுக்கப்பட்டது என கூறுவதும் மதம் மது உள்ளிட்ட போதைப்பொருட்களை அது புறக்கணிப்பதாலுமு் அதற்கான கடுமையான கட்டுப்பாடுகள் காணப்படுவதாலும் ஒப்பீட்டளவில் ஏனைய மதத்தவர்களை காட்டிலும் இலங்கை வாழ் இஸ்லாமியரிடம் தற்கொலைகள் மிகச்சொற்பமானளவே அந்த  இடம்பெறுகின்து. இது ஏனைய மதங்களின் பீடங்களால் கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய ஒன்று.

தற்கொலை என்பது உடனடியாக எடுக்கப்படுகின்ற முடிவு போல தோன்றினாலும் அது தூண்டப்படுகின்றது. ஒரு ஒரு விலைமதிப்பற்றது. மனித உறவுகளுடைய பெறுமதியை இங்கு யாரும் உணர்ந்து கொள்வதில்லை. யாரும் நமக்கில்லை என்ற விரக்தியின் உச்சமே இந்த தற்கொலைகளின் முக்கிய புள்ளி என நினைக்கின்றேன். இங்கு எல்லோரும் குடும்பமாக ஒரு வீட்டில்தான் இருக்கிறோம். ஆனால் தனியாக பிரிந்து இருக்கின்றோம். யாரும் யாருடனும் உரையாடத்தயாராக இல்லை. கேவலம் தொலைபேசியுடன் செலவிடும் நேரத்தை கூட சக வீட்டு மனிதர்களுடன் நாம் செலவிடத்தயாராகவில்லை என்பதே இன்றைய தேதியின் ஆகக்கேவலமான உண்மை.

தற்கொலைகள் எவையுமே தற்கொலைகள் அல்ல. அவை தற்கொலை செய்பவரின் சூழலால் உருவாக்கப்படுகின்றது. ஒருவனுடைய பிரச்சினையை கேட்கக்கூட அவரைச்சுற்றி யாரும் இல்லை என்ற நிலையே இவற்றிற்கான அடித்தளம்.

2020ல்  கிளிநொச்சிக்கருகில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஒரு காதல் ஜோடி தூக்கிட்டு தற்கொலை செய்திருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.  உண்மையிலேயே அது தற்கொலை அல்ல அது ஒரு கொலை. அவர்கள் நன்றாக படித்தவர்கள். ஆகவே நல்ல நட்பு வட்டமும் இருந்திருக்கும். ஆனால் அவர்களுடைய பிரச்சியை யாரிடமும் பகிர்ந்து கொள்ளக்கூட முடியாத அளவிற்கு அவர்களை சுற்றியிருந்த நண்பர்கள் வட்டம் தூரமாகியிருந்துள்ளது என்பதே வேதனைக்குறிய விடயம். என்னைக்கேட்டால் அந்த தற்கொலைக்கு அவர்களுடைய நண்பர்களே காரணம்.

அடுத்தவன் எக்கேடு கெட்டால் என்ன என்ற சுயநலமான சிந்தனையும் நம்முள் அதிகம் ஊறிப்போய்விட்டதும் தற்கொலைகளுக்கான காரணம் தான். சுயநலசிந்தனையை விடுத்து மனித உயிரினுடைய பெறுமதியை அறிந்து கொள்ளுங்கள். அடுத்தவன் ஏதாவது பிரச்சினை என உங்களிடம் சொல்ல முற்பட்டால் அதனை முதலில் பொறுமையாக காதுகொடுத்து கேளுங்கள். உங்களால் பிரச்சினையை தீர்க்க முடியாவிட்டாலும் பரவாயில்லை ஆறுதலான வார்த்தைகளை சரி கூற முற்படுங்கள். அதுவாவது ஆறுதலளிக்கும்.

இந்த தற்கொலைகளில் சினிமாவுக்கு இருக்கின்ற பங்களிப்பும் காத்திரமானது. முக்கியமாக நாம் பார்க்கக்கூடிய சினிமாக்களில் பாதி பிரச்சினைகளுக்கு தீர்வாக தற்கொலைகளையே தீர்வாக முன்வைப்பபதை காணமுடியும். அது கண் வழி சென்று மூளையில் பதிந்து அவர்களும் அது போன்றதான ஒரு பிரச்சினையை எதிர் கொள்ளும் போது அதுதான் தீர்வு என எண்ணும் நிலைக்கு அவர்களை தள்ளி விடுகின்றது. நடிகர் சிவகார்த்திகேயனுடைய நடிப்பில் வெளிவந்திருந்த ஹீரோ என்ற படத்தில் ஒரு மாணவி கல்வி வாழ்க்கையில் தோல்வியடைந்ததும் மனமுடைந்து புகையிரதத்தில் இருந்து கீழே குதித்து இறப்பது போன்றதான ஒரு காட்சி உருவாக்கப்பட்டிருக்கும்.  இவர்களுடைய உழைப்பு என்ற விடயத்துக்காக ஏதோ ஒரு உளவியல் தாக்கத்தை திணிக்கிறார்கள் போலவே தோன்றுகிறது. சமூகம் சார்ந்த நோக்கத்தில் அந்தப்படம் எடுக்கப்பட்டிருந்தால் குறித்த மாணவி முயற்சி செய்து தன்னை மீள ஏதோ வகையில் உருவாக்கி வாழ்வில் முன்னேறுவது போலவும் தற்கொலை தீர்வல்ல என்பது போலவும் காட்டியிருக்கலாம். ஆனால் இன்று வரை பல சினிமாக்கள் அதை செய்யத்தவறிவிடுகின்றன.

கடந்த இரு வருடங்களில் கூட அதிகளவிலான பாடசாலை மாணவிகள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவங்களும் அதிகம் பதிவாகியுள்ளது. பரீட்சை பெறுபேறுகளும் – பெற்றோருடய முறையான கவனிப்புக்கள் இல்லாமையும் அந்தச்சிறுவர்கள் தற்கொலை செய்ய கரணமாகிவிடுகிறது. பெற்றோர்கள் பணம் – பணம் என ஓடிக்கொண்டிருக்கிறார்களே தவிர அந்தப்பணத்தை ஏன் சேர்க்கிறோம்..? யாருக்காக சேர்க்கிறோம் என எண்ணுவதில்லை.

கல்வி மட்டுமே வாழ்க்கைக்கான திறவுகோள் என திணிக்காதீர்கள். மற்றவருடன் பிள்ளைகளை ஒப்பிட்டு நோக்காதீர்கள். உங்கள் பிள்ளைகளுடன் மனது விட்டு பேசுங்கள். ஏதோ கட்டுக்கொப்பாக வளர்ப்பது போல காட்டி வன்முறையை கக்காதீர்கள். அவர்களுக்கு என நுரம் ஒதுக்கி நீங்கள் இருக்கிறீர்கள் என்ற நம்பிக்யை கொடுங்கள். பிரச்சினைகள் பற்றி ளெிப்படையாக உரையாடுங்கற் உண்மையிலேயே மாற்றம் இருக்கும்.

மனிதர்களிடையே அன்பை பரிமாறுங்கள் –  உங்கள் அருகிலுள்ள ஒருவனுடைய கடினமான நேரத்தில் பங்கெடுங்கள். அவனுக்கு நம்பிக்கையை கொடுங்கள். நாங்கள் இருக்கிறோம் எழுந்து வா என்ற தன்னம்பிக்கையை கொடுங்கள். சுய நல சிந்தனையை விடுத்து பொதுநலமாக சிந்திக்க ஆரம்பியுங்கள். இந்த பொது நல சிந்தனை தான் தற்கொலைகளை தடுக்கின்றன. உளவியல் வழிகாட்டல்களோ – முறையான உளவியல் வகுப்புக்களோ  தற்கொலைகளை குறைக்கப்போவதில்லை. இந்த பொது நல சிந்தனையும் அடுத்தவர் மீது நாம் காட்டுகின்ற மனித நேயமுமே தற்கொலைகளை தடுக்கும் சக்தி மிக்கன என்பதை புரிந்து கொணள்ளுங்கள். சமூகத்துக்கு போக வேண்டாம்.  வீடுகளில் இதனை தொடங்குங்கள்.  அன்பினாலான சிறு மாற்றம் பெருவெள்ளமாகட்டும்..!

 

அச்சுறுத்தலாகிக்கொண்டிருக்கும் சீனாவின் ஆணுவாயுதக்கிடங்குகள் – அமெரிக்கா கவலை !

வர்த்தகம், உளவு மற்றும் தொற்றுநோய் தொடர்பாக அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையிலான உறவுகள் சமீபத்திய காலங்களில் மோசமடைந்துள்ளன. அது மட்டுமன்றி சீனாவின் வேகமான வளர்ச்சி ஏனைய உலக வல்லரசுகளை கதிகலங்க வைத்துள்ளது என்பதே உண்மை. அண்மையில் நடந்து முடிந்த ஜி7 மாநாட்டில் கூட இது தொடர்பான கலந்துரையாடல்கள் அதி முக்கியம் பெற்றிருந்தது.

இந்நிலையில் சீனா மிக விரைவாக அணு ஆயுதங்களைக் குவித்து வருகின்றமையானது  கவலையளிப்பதாக, அமெரிக்கா தெரிவித்துள்ளது.

சீனா 100க்கும் மேற்பட்ட அணு ஆயுத ஏவுகணைக் கிடங்குகளை வைத்திருப்பதாக வொஷிங்டன் போஸ்ட் இதழில் அண்மையில் வெளியான செய்தியைத் தொடர்ந்து இந்த தகவல் வெளிவந்துள்ளது.

இதுகுறித்து அமெரிக்காவின் வெளியுறவுத் துறைச் செய்தித் தொடர்பாளர் நெட் பிரைஸ் கூறுகையில்,

‘சீனா மிக விரைவாக அணு ஆயுதங்களைக் குவித்து வருவதை சில செய்திகளும் வேறு சில நடவடிக்கைகளும் காட்டுகின்றன. இதுபோன்ற ஆயுதக் குவிப்பை அவ்வளவு எளிதாக மறைத்துவிட முடியாது’ என கூறினார்.

சீனாவின் மேற்கு பாலைவனப் பகுதியில் ஏவுகணைக் கிடங்குகள் அமைக்கப்பட்டிருப்பதாக, செயற்கைக்கோள் புகைப்படங்கள் மூலமாக செய்திகள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கடந்த செப்டம்பரில் அமெரிக்க பாதுகாப்புத் துறை வெளியிட்ட ஒரு அறிக்கையின்படி, சீனாவில் சுமார் 100 ஏவுகணைகள் இருந்தன. ஆனால் வரும் ஆண்டுகளில் அந்த எண்ணிக்கையை இரட்டிப்பாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

 

இது ஒருபுறமிருக்க கொமினியூஸ்ட் கட்சியின் நூற்றாண்டு விழாவில் பேசியிருந்த சீன அதிபர் சீனாவை சீண்டினால் சீனப்பெருஞ்சுவரில் அடித்துக்கொள்வோம் என்பது போன்ற தொனியிலான அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தமை சர்வதேச அளவில் மிகப்பெரும் பேசுபொருளாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

தஞ்சம் கோருவதற்காக பிரித்தானியாவில் காத்திருக்கும் 65,000பேர்!

தஞ்சம் கோருவதற்காக பிரித்தானியாவில் காத்திருக்கும் புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை 2010ஆம் ஆண்டை விட கடந்த ஆண்டு இறுதிக்குள் ஒன்பது மடங்கு உயர்ந்துள்ளது.

தற்போது 65,000பேர் காத்திருப்பு வரிசையில் உள்ளதாக அகதிகள் சபையில் பெற்ற அதிகாரப்பூர்வ புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

அகதிகள் சபையில் தகவல் சுதந்திரச் சட்டத்தின் கீழ் உட்துறை அலுவலகத்திலிருந்து புள்ளிவிபரங்கள் பெறப்பட்டது.

2020ஆம் ஆண்டில் ஒரு காலாண்டில் அதிகரித்த ஒரு பின்னடைவுக்கு தொற்றுநோய் பங்களித்திருப்பதாக நிறுவனத்தின் பகுப்பாய்வு காட்டுகிறது. எனினும், உடைந்த புகலிடம் முறையை சரிசெய்ய ஒரு திட்டம் இருப்பதாக உட்துறை அலுவலகம் கூறியுள்ளது.

“வடக்கில் வன்முறைக் கும்பல்களை கட்டுப்படுத்தி அமைதியை ஏற்படுத்துங்கள்.” – சஜித்பிரேமதாஸ அரசிடம் வேண்டுகோள் !

வடக்கில்  நாளுக்கு நாள் வன்முறைக்கும்பல்களின் அட்டகாசம் மேலோங்கி வருகின்றது. இதனை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எந்தளவு ஆரோக்கியமானவை என்பது தான் தெரியவில்லை. இது வரை ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது.  தாக்கப்பட்டவர் வைத்தியசாலையில் அனுமதி போன்ற செய்திகள் ஊடகங்களுக்கு கிடைக்கின்றனவே தவிர யாராவது கைது செய்யப்பட்டுள்ளார்கள் என்ற செய்திகள் பெரிதாக கிடைக்கவில்லை என்பதே உண்மை.

இந்நிலையில் இது தொடர்பாக நமது வடக்கின் அரசியல் தலைமைகள் விசனப்பட்டுக்கொண்டதாக தெரியவில்லை. ஒரு ஊடக அறிக்கைதானும் விட்டதாய் இது தெரியவில்லை. அல்லது காவல்துறையினரை இது தொடர்பில் சந்திதததாக கூட தகவல் இல்லை.

இந்நிலையில் இது தொடர்பில் சஜித்பிரேமதாஸ அவர்கள் கருத்துவெளியிட்டுள்ளமை கவனத்தில் கொள்ளத்தக்கது.

இது தொடர்பில் அவர் குறிப்பிட்ட போது ,

வடக்கில் கொலைகார கும்பலால் பொதுமக்கள் பாரதூரமான முறையில் தாக்கப்பட்டுள்ள சம்பவம் பதிவாகியுள்ளது. இவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியாமல் போயுள்ளதா..? என தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதாக வாக்களித்த அரசாங்கத்திடம் கேள்வியெழுப்பியுள்ளார்.

இவ்வாறான கொலையாளிகளை கைது செய்யும் விடயத்தில் மந்தகதியில் செயற்படாமல் துரிதமாக செயற்பட்டு நாட்டில் குறிப்பாக வடக்கில் அமைதியை நிலைநாட்ட நடவடிக்கை எடுக்குமாறு அரசாங்கத்தை கேட்டுக் கொள்வதாகவும் அவர் மேலும் தெரிவிததுள்ளார்.

அவசரமாக யாழில் கூடிய கூட்டமைப்பின் பங்காளிக்கட்சி தலைவர்கள் – வழமையான அதே புராணம் தான் – பௌராணிகர் தான் புதியவர் !

கடந்த பல ஆண்டுகளாக இது போன்ற திடீர் கூட்டங்கள் ஒழுங்கமைக்கப்ட்டுக்கொண்டுதான் இருக்கின்றன கூட்டமைப்பினரால். ஆனால் ஆக்கபூர்வமான மாற்றங்கள் எவையும் இது வரையில்லை என்பதே உண்மை. வடக்கிலும் -கிழக்கிலும் தீர்க்கப்படாமல் உள்ள தமிழர் பிரச்சினைகள் அப்படியே உள்ளன. சிங்கள அரசு – சிங்கள எதிர்ப்பு எனக்கூறிக்கொண்டு இன்னமும் எமது சமூகம் அபிவிருத்தி பாதை நோக்கி நகர முடியாமலேயே உள்ளது. இதற்கான காரணம் இவர்களும் தான்.

இன்னமும் போலித்தேசியம் பேசிக்கொண்டு தங்களுக்குள் கடிபட்டுக்கொண்டிருக்கிறார்களே தவிர எதுவித முன்னேற்றமும் இல்லை. தமிழ்தேசியம் பேசும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 10 பேருக்கும் அதிகமாக இன்றைய நாடாளுமன்றத்தில் பங்கு பற்றுகின்ற போதும் கூட அவர்கள் இணைந்து ஒரு அறிக்கையை கூட இது வரை வெளியிட்டதில்லை. சரி இன்று பிரிந்து நிற்பவர்கள் எல்லாம் யாரொன்று பார்த்தால் எல்லோரும் கூட்டமைப்பில் இருந்து பிரிந்து சென்றவர்கள் தான்.

கொள்கை நிலையில் ஒன்றாய் தமிழ்தேசியம் எனகூவும் இவர்களால் தமிழர் பகுதிகளில் நடக்கும் பிரச்சினைகளுக்கான தீர்வுகளை உள்ளடக்கி அரசிடம் கையளிப்பதற்கான  ஒரு அறிக்கையை கூட ஒற்றுமையாய் விட முடியவில்லை.  இவர்களை தான் நாம் இன்னமும் மீட்பர்களாக நம்பிக்கொண்டிருக்கிறோம்.

இவர்களை இணைப்பதற்கான பல முயற்சிகள் இது வரை பல தரப்பினராலும்  மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையிலும் கூட எந்த முன்னேற்றமும் இல்லை என்பதே கடந்தகால உண்மை.

தமிழ்தேசிய கூட்டமைப்பினரிடையே ஏற்கனவே பாராளுமன்றத்தில் உரை நிகழ்த்துவதற்கான நேர ஒழுங்கு முறையாக பகிரப்படாமை தொடர்பான பிரச்சினைகள் எரிந்துகொண்டிருக்கின்றன. இது ஒருபுறமிருக்க பங்காளிக்கட்சிகள் தம்மிடையே இன்னமும் பிரிவினைகளை வளர்த்துக்கொண்டிருப்பதை வெளிப்படையாகவே காண முடிகின்றது.

புதிதாக இந்த முயற்சியில் களமிறங்கியுள்ளார் ரெலோவின் தலைவரும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன். இவர் புதிதாக எல்லா தமிழ்தேசிய கட்சிகளையும் இணைத்து புதிய அரசியல் சாதனையை செய்யப்போகிறார் போல.., பொறுத்திருந்து பார்ப்போம்இந்த வெள்ளாமையாவது வீடு வந்து சேருமா என…?

………………………………………………………………………………………………………………………………

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களுக்கிடையில் இன்று அவசர சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணம் மார்ட்டின் வீதியில் உள்ள இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைமைச் செயலகத்தில் நடந்த இந்த சந்திப்பு இன்று காலை 11.30 மணி தொடக்கம் மதியம் ஒரு மணிவரை இடம்பெற்றது.

இதில் இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, தமிழரசுக் கட்சியின் சிரேஸ்ட துணைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம், புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் மற்றும் ரெலோ இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

சந்திப்புக்குப் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த ரெலோவின் தலைவரும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவிக்கையில்,

இன்றைய சந்திப்பு முடிவின் பிரகாரம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக நாங்கள் அனைவரையும் அரவணைத்து போகின்ற நிலைமையை கையாளுகின்ற ஒரு செயற்பாட்டை செய்வதற்கு முற்றுமுழுதாக முடிவு எடுக்கப்பட்டிருக்கின்றது.

அந்த வகையிலே நாளை நடைபெறவுள்ள கூட்டத்தில் நாங்கள் எப்படி செயல்பட வேண்டும், தொடர்ந்து அதை எப்படி நாம் கையாள வேண்டும் என்பது தொடர்பில் முடிவை எடுப்போம் என்குறிப்பிட்டுள்ளார்.

என்னென்ன விடயங்கள் கலந்துரையாடப்பட்டது என்பது தொடர்பில் கேள்வியெழுப்பிய போது,

நிலம் சம்பந்தமாகவும் மாகாண சபைகள் சம்பந்தமாகவும் எங்களுடைய இனம் சார்ந்த பூர்வீகத்தை உடைத்தெறிந்து வரலாற்றை சிதைக்கின்ற செயற்பாடுகளை நிறுத்துவதற்கு பலத்தை உருவாக்குவதற்கு பலமான சக்தியாக தமிழ்த் தரப்பு இருக்க வேண்டும்.

அப்படி இருக்கின்றபோது புலம்பெயர்ந்த உறவுகளையும் தமிழ்நாட்டு தமிழர்களையும் இணைத்து செயற்படும்போது பெரிய பலத்தை பெறுகின்ற வாய்ப்பு ஏற்படும். அப்போதுதான் இப்பொழுது இருக்கிற அரசாங்கத்தை நாங்கள் பல விடயங்களில் தடுத்து நிறுத்த முடியும் எனத் தெரிவித்தார்.