அண்மையில் கொரோனாத்தாக்கத்துக்கு உள்ளாகியிருந்த எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச அதிலிருந்து மீண்டதனை தொடர்ந்து கங்காராம விகாரைக்கு வழிபடச்சென்று பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோது ,
கொவிட் -19 வைரஸ் தடுப்பூசியை ஏற்றிக்கொள்ளாது நிராகரித்தமையே எனக்கும் எனது மனைவிக்கும் கொவிட் தொற்று ஏற்படக் காரணமாகும். ஆனால் நாம் ஏன் தடுப்பூசியை நிராகரித்தோம் என்றால், நாம் தடுப்பூசியை ஏற்றிக்கொள்ள முன்னர் நாட்டு மக்கள் சகலருக்கும் தடுப்பூசி கிடைக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காகவாகும்.
இந்த தெளிவான கொள்கையில் இருந்து நான் மீண்டும் கூறிக்கொள்வது ஒன்றுதான். இந்த நாட்டில் வாழும் சகல மக்களுக்கும் முழுமையாக தடுப்பூசிகளை பெற்றுக்கொடுக்கும் வரையில் மக்கள் பிரதிநிதி என்ற வகையில் நான் தடுப்பூசியை பெற்றுக்கொள்ள மாட்டேன் என கூறியிருந்தார்.
இந்நிலையில், நேற்றையதினம் (04.08.2021)எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கொவிட் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தனது முகப்புத்தகத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டு அவர் இதனை தெரிவித்துள்ளார்.
கொவிட் தொற்றுக்குள்ளான சந்தர்ப்பத்தில் சிகிச்சை அளித்த வைத்தியர்களின் அறிவுறுத்தலின் அடிப்படையில் தடுப்பூசி செலுத்திக் கொண்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
கொவிட் தடுப்பூசி செலுத்தவில்லை எனில் மீண்டும் குறித்த தொற்றுக் உள்ளாக வாய்ப்பிருப்பதாகவும் அதனால் உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் தனக்கு வைத்தியர்கள் கடுமையாக எச்சரித்ததாக அவர் தெரிவித்துள்ளார்.