August

August

இங்லாந்து வீரர்களின் வேகத்துக்கு முன்னால் முதல் இன்னிங்சில் பணிந்தது இந்தியா !

இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் 3-வது டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியது.நாணயச்சுழற்சியில்  வென்ற இந்திய அணியின் தலைவர் விராட் கோலி துடுப்பாட்டத்தை தேர்வு செய்தார். இதனையடுத்து இந்திய அணி களமிறங்கியது.
இந்திய அணி முதல் இன்னிங்சில் 40.4 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 78 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது. இதில் கேஎல் ராகுல், பும்ரா, சமி ஆகியோர் ஓட்டமெதுவுமின்றி  வெளியேறினர். அதிகபட்சமாக ரோகித் சர்மா 105 பந்துகளை சந்தித்து 19 ஓட்டங்களை எடுத்தார்.
இங்கிலாந்து தரப்பில் ஆண்டர்சன், ஓவர்டேன் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும் ராபின்சன், சாம் கரன், தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
தொடர்ந்து முதலாவது இனிங்சில் களமிறங்கியுள்ள இங்கிலாந்து அணி 06 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 21 ஓட்டங்களுடன் துடுப்பெடுத்தாடி வருகின்றது.

பல்கலைகழக பகிடிவதை தொடர்பில் மாணவர்கள் பொலிஸாரிடம் நேரடியாக முறைப்பாடு செய்ய சட்ட திருத்தம் !

பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் இடம்பெறுகின்ற பகிடிவதை மற்றும் வன்முறைச் சம்பவங்கள் குறித்து பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யக்கூடிய வகையில் சட்ட திருத்தங்களை மேற்கொள்வதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

இதுவரை காலமும் பல்கலைக்கழக அதிகாரிகளால், பொலிஸாரிடம் முறைப்பாடு செய்து சட்டத்தை அமல்படுத்த முடியாத நிலை இருந்ததாக கல்வி அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

இதன்படி, கல்வி நிறுவனங்களில் பகிடிவதை மற்றும் பிற வன்முறை சம்பவங்களை தடை செய்வதற்கான சட்ட திருத்தங்கள் மேற்கொள்ளப்பட உள்ளன.

பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் தலைமை நிர்வாக அதிகாரி அல்லது அவரது பிரதிநிதி பாதிக்கப்பட்ட மாணவர்கள் சார்பாக பொலிசாரிடம் முறைப்பாடு செய்ய முடியுமான வகையில் சட்டங்கள் திருத்தப்படும், என்று கல்வி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

“மங்களசமரவீர ஜனாதிபதியாகியிருந்தால் தமிழர் இனப்பிரச்சினைக்கான தீர்வுகள் பிரகாசமடைந்திருக்கும்.” – எம்.கே.சிவாஜிலிங்கம் இரங்கல் !

“இன மத பேதங்களை கடந்து செயல்பட்டவர் மங்களசமரவீர ஜனாதிபதியாகியிருந்தால் தமிழர் இனப்பிரச்சினைக்கான தீர்வுகள் பிரகாசமடைந்திருக்கும்.” என  என தமிழ்த் தேசியக் கட்சியின் செயலாளர் நாயகமும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

Valvettithurai.org :: Tamil News, News about Valvai. (Valvettiturai,  Valvai, VVT, வல்வெட்டித்துறை, வல்வை)

அரசியல்வாதியான மங்கள சமரவீர அவர்கள் இலங்கை ஒரு சிங்கள பௌத்த நாடு அல்ல என்று உறுதியாகக் கூறியவர். பல்லின ,பல்மத நாடு என்று உரத்துக் சொன்ன குரல் மங்களவின் குரல்.

தெற்கில் தெய்வேந்திரமுனையில் பிறந்த மங்கள வடக்கில் யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை முனையிலுள்ள உலக சாதனை வீரன் ஆழிக்குமரன் நினைவு நீச்சல் தடாகத்தை ஆறு கோடி ரூபா செலவில் நிர்மாணித்து திறந்து வைத்தவர்.

அமரர் மங்கள சமரவீர அவர்களினால் ஆட்சி பீடம் ஏறியவர்கள் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண தவறிவிட்டனர். மங்கள சமரவீர நாட்டின் ஐனாதிபதி பிரதமர் பதவிகளில் இருந்திருந்தால் இனப்பிரச்சனைகள் தீர்க்கக் கூடிய வாய்ப்புகள் பிரகாசமாக இருந்திருக்கும்.

இனமத பேதமற்ற அரசியல் தீர்வுக்காக போராடிய அமரர் மங்கள சமரவீர அவர்களின் இறப்பிற்கு தமிழ் மக்கள் சார்பில் எமது இதய அஞ்சலிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம் என தெரிவித்துள்ளார்.

பைசர் தடுப்பூசியின் இரண்டு டோஸையும் பெற்றுக்கொண்ட மங்கள சமரவீர எப்படி இறந்தார்..?

இலங்கையில் கொரோனாவின் வேகம் நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டிருக்கிறது. முக்கியமாக உயிரிழப்புக்கள் இன்னும் அதிகமாகிக்கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் கொரோனாத்தொற்றுக்கு உள்ளாகியிருந்த முன்னாள் அமைச்சர் மங்களசமரவீர சிகிச்சை பலனின்றி நேற்றையதினம் மரணமடைந்திருந்தார்.

இந்நிலையில் , பைசர் தடுப்பூசி இரண்டையும் பெற்றும் முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர ஏன் மரணமடைந்தார் என்ற தகவல் தற்போது வெளிவந்துள்ளது.

மங்கள சமரவீர, நிமோனியா காரணமாக கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் குணமடைந்து வந்தார். வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட சந்தர்ப்பத்தில் அவரது உடல்நிலை மோசமான கட்டத்தில்தான் இருந்தது.

சாதாரண நிலைமைக்குத் திரும்பிக் கொண்டிருந்த நிலையிலேயே நேற்று திடீரென அவர் மரணமடைந்தார். கொவிட், நிமோனியா காரணமாக மாரடைப்பு ஏற்பட்டதால் அவர் மரணத்தைத் தழுவிக் கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

முன்னாள் அமைச்சர் சமரவீர ண்டகாலமாக நீரிழிவு மற்றும் சிறுநீரக நோயினால் அவதியுற்று வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்விகற்க வந்த சிறுவனை பாலியல் துஷ்பிரயோகம் செய்த பிரதம பிக்கு – மட்டக்களப்பில் சம்பவம் !

மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள புன்னைக்குடா விகாரையில் பிக்குவாக படிப்பதற்காக தங்கி இருந்து வந்த 11 வயது சிறுவனை பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்ட விகாரையின் பிரதம பிக்கு ஒருவரை இன்று புதன்கிழமை (25) கைது செய்துள்ளதாக ஏறாவூர் பொலிசார் தெரிவித்தனர்.

பிறமாவட்டத்தைச் சேர்ந்த 11 வயதுடைய குறித்த சிறுவன் பிக்குவாக படிப்பதற்பாக விகாரையில் வந்து தங்கியிருந்து படித்து வந்துள்ள நிலையில்; நீண்டகாலமாக பிரதம பிக்கு பாலியல் துஷ்பிரயோகம் செய்துவந்துள்ள நிலையில் சம்பவதினமான இன்று புதன்கிழமை (25) சிறுவன் பொலிசாரிடம் சென்று முறைப்பாடு செய்துள்ளதாக பொலிசாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது

இதனையடுத்து குறித்த பிக்குவை கைது செய்ததுடன் சிறுவனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் இதில் கைது செய்த பிக்குவை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டோர் விவகாரம் – ஆலோசனை குழு நியமனம் !

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அல்லது தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு பிணை அல்லது விடுதலை அளிப்பது தொடர்பாக ஜனாதிபதிக்கு பரிந்துரைகளை முன்வைக்க ஆலோசனை குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் இந்த சபை நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

முன்னாள் பிரதம நீதியரசர் அசோக்க டி சில்வா தலைமையில் மூவரடங்கிய இந்த ஆலோசனை குழு நியமிக்கப்பட்டுள்ளது.

என்னதான் நடக்கின்றது ஆப்கானிஸ்தானில் … : சிவா முருகுப்பிள்ளை (பகுதி 1)

உலகின் ஒரு மூலையில் மனித குலம் எதிர்பாராத நிகழ்வுகள் சந்தித்துக் கொண்டுதான் இருக்கின்றது. அப்படியான ஒரு வரலாற்று திருப்பு முனையாக 20 வருடம் ஆப்கானிதானில் நிலை கொண்டிருந்த அமெரிக்க ஆக்கிரமிப்பு படைகளின் திடீர் வெளியேற்றமும தொடரந்தாற் போல் ஒரு கிழமையிற்குள்…? அமெரிக்காவினால் உருவாக்கப்பட்ட அரசு பதவியை இழந்ததும் தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றிய நிகழ்வும் நடைபெற்று இருக்கின்றது தற்போது.

எதிர்பாராத நிகழ்வு என்று ஆரம்பத்தில் குறிப்பிட்டிருந்தாலும் உண்மையில் இவை எல்லாம் ஒரு வரலாற்றுப் போக்கில் நடைபெற்ற ஒரு வேக நிகழ்வுதான்.

இன்றைய ஆப்கானிஸ்தான் பிரச்சனையை புரிந்து கொள்வதற்கு நாம் ஆப்கானிஸ்தானின் வரலாற்றை குறைந்தது ஐம்பது வருடங்களாவது பின் சென்று பார்த்தாக வேண்டும். அந்த வகையில் உலகின் வல்லரசுகளா ஒரு காலத்தில் இருந்த சோவியத் யூனியன் அமெரிக்கா என்று இரு முகாங்கள் வலுவாக உலகில் கோலோச்சிய காலத்தில் இருந்து நாம் வரலாற்றைப் பார்த்தாக வேண்டும்
அதிகம் மலைப் பிரதேசங்களையும் தட்டையற்ற நிலப்பரப்பையும் மலைகளில் அதிக கனிம வளங்களையும் கொண்டிருப்பதுதான் ஆப்கானிஸ்தான். பல்வேறு சிற்றரசுகளாக அவற்றிற்கிடையே அதிக தொடர்புகள் குறைவாக வெவ்வேறு ஆளுமையிற்குள் காலத்திற்கு காலம் இருந்து வந்திருக்கின்றது ஆப்கான். இன்று கூட நிலமை அவ்வாறுதான் உள்ளது.

ஆப்கானிஸ்தான் ஒரு பல்லின மற்றும் பெரும்பாலும் பழங்குடி சமூகங்களைக் கொண்ட நாடு. பஷ்தூன்;, தாஜிக், ஹசாரா, உஸ்பெக், ஐமக், துர்க்மேன், பலோச், பாஷாய், நூரிஸ்தானி, குஜ்ஜார், அரபு, பிராகுய், கிசில்பாஷ், பமிரி, கிர்கிஸ், சாதத் என்ற இனங்களையும் மேலும் சில மிகச் சிறிய அளவிலான இனங்களையும் தன்னகத்தே கொண்டது. ஆப்கான் அரசியலமைப்பு, தேசிய கீதம் போன்றவற்றில் பதினான்கு இனங்கள் பற்றி குறிப்புக்கள் உள்ளடக்கப்பட்டிருக்கின்றன.

தற்போது தலிபான் முழு ஆப்கானிஸ்தானையும் தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கின்றதா என்றால் இல்லை என்பதே பதிலாக அமையும். வடக்கு கூட்டமைப்பு என்று அழைக்கப்படும் பஷ்தூன்; இனம் தவிர்ந்த ஏனைய சிறுபான்மை இனங்களை அதிகம் பிரதிநிதித்துவப்படுத்தும் விடுதலை அமைப்பும் இங்கு பலமான ஒரு நிலையில் உள்ளது சில பிரதேசங்களில். குறிப்பாக பஞ்ஷிர் பள்ளத்தாக்கு பகுதியைக் குறிப்பிடலாம்.

வரலாற்றில் சற்று பின் நோக்கிச் செல்வோம்….

இஸ்லாமிய மக்களை அதிகம் கொண்டுள்ள உலக நாடுகளில் பல நாடுகள் முன்னேற்றகரமான சமூக அமைப்பை, ஆண் பெண் சமத்துவத்தை தமது மத நம்பிக்கை மார்க்கத்தையும் தொடர்ந்த வண்ணம் உள்ளதை உதாரணத்திற்கு காட்ட முடியும். உலகின் பொதுப் பார்வையில் இஸ்லாமிய மார்க்கம் மத அடிப்படைவாத செயற்பாட்டை தமக்குள் வகுத்துக் கொண்டு செயற்படுபவர்கள் என்ற பார்வை அதிகம் மேலோங்கி உள்ளது. ஆனால் உண்மை நிலை அவ்வாறு இல்லை.

மத அடிப்படை வாதத்திற்கு அப்பால் மனித குல மேம்பாடு என்ற தளத்தில் இவற்றின் அடிப்படைக் கூறுகளையும் தன்னகத்தே கொண்டு பயணிக்க முற்பட்ட ஆப்கானிஸ்தான் மக்களும் அங்கு உருவான அரசுகளும் கடந்த காலங்களிலும் இருந்து வந்தன என்பதை வரலாறு கூறி நிற்கின்றது.
மன்னர் ஆட்சிக் கோலோட்சிய 1960 களில்….

மன்னராட்சிக் காலத்தில் மன்னரின் மைத்துனரும் பஷ்தூன் தேசியவாதியான முகமது தாவூத் கான் பஷ்துனிஸ்தான் என்ற நாட்டை ஆப்கானிஸ்தானில் உருவாக்க முயன்றார் இதனால் அயல்நாடான பாகிஸ்தானுடன் முறுகல் நிலை ஏற்படட்டது. 1963 வரை பதவியில் இருந்த பத்து ஆண்டுகளில், தாவூத் கான் சமூக நவீனமயமாக்கல் சீர்திருத்தங்களுக்கு அழுத்தம் கொடுத்தார் மற்றும் சோவியத் யூனியனுடன் நெருக்கமான உறவையையும் பேணி வந்தார். இதன் தொடர்ச்சியாக 1964 ஆப்கானிஸ்தானுக்கான புதிய அரசியலமைப்பும் உருவாக்கப்பட்டது.

ஆப்கானிஸ்தானின் சர்தார் தௌவுத் கானின் மன்னராட்சிக்கு எதிராக ஆப்கானிய கம்யூனிஸ்ட்களின் மக்கள் ஜனநாயகக் கட்சி ஏப்ரல் 1978 இல் கிளர்ச்சியில் ஈடுபட்டு ஆட்சியைக் கைப்பற்றியது. இவர்கள் கிளர்ச்சிக்கு ஆதரவாக அன்றைய ஆப்கானிய அரச இராணுவம் செயற்பட்டது.

இந்தப் புரட்சியை தலைமை தாங்கிய நூர் முஹம்மது தராக்கி சோவியத் ரஷ்யாவின் உதவியுடன் ஆட்சியமைத்தார். அவர் பழமைவாதம் நிறைந்த ஆப்கானிய சமூகப் பொருளாதாரக் கட்டமைப்பை நவீனப்படுத்தும் திட்டங்களையும் முக்கியமாக நிலப் பிரபுகளுக்கு எதிரான நில சீர்த்திருத்தத்தையும் செயற்படுத்தினார்.

இது ஆப்கானிய நிலப் பிரபுக்களை ஆப்கானிய கம்யூனிச அரசுக்கு எதிராக ஆயுதப் போராட்டத்தை செய்வதற்கான தொடக்கப் புள்ளியாக அமைந்தது. அன்றைய ஆப்கானிஸ்தான் அரசில் அங்கம் வகித்த ஆப்கானிய கம்யூனிஸ்ட் தலைவர் நூர் மற்றும் நிலப்பிரபுகளுக்கு ஆதரவான ஹபிசுல்லா அமினுக்கு இடையே மோதல் முற்ற, இராணுவத் தளபதி அமின் இன் உத்தரவின் பேரில் நூர் படுகொலை செய்யபடுகிறார்.

அதனைத் தொடர்ந்து அமின் சோவியத் நாட்டை தவிர்த்து அமெரிக்காவின் பக்கம் சாய்கின்றார் என்பதன் அடிப்படையில் சோவியத் ரஷ்யா ஆப்கானிஸ்தானைக் கைப்பற்றி தளபதி அமினை படுகொலை செய்து விட்டு சோவியத் ஆதரவாளரான பாப்ரக் கர்மலை நாட்டின் தலைவராக நியமித்தது.

அதனைத் தொடர்ந்து மத்திய ஆசியாவின் கேத்திர முக்கியத்துவம் வாய்ந்த ஆப்கானிஸ்தானில் கம்யூனிசம் காலூன்றுகின்றது என்ற வெறுப்பு மேற்கத்திய முதலாளித்துவ நாடுகளைப் பற்றிக் கொண்டது. அமெரிக்காவும் அதன் நேச நாடுகளும் இதற்கு எதிராக செயற்படத் தொடங்கினர். சோவியத் இராணுவம் உடனடியாக ஆப்கானை விட்டு வெளியேற வேண்டும் என்று தீர்மானங்களை அவை நிறைவேற்றின. சோவியத் ஆப்கானை விட்டு வெளியேற மறுக்கின்றது.

ஆப்கானிஸ்தானில் இருக்கும் சோவியத் படைகளை வெற்றி கொள்ள அமெரிக்கா, இங்கிலாந்து, பாகிஸ்தான், சவூதிஅரேபியா, சீனா போன்ற நாடுகள் ‘முஜாஹிதீன்” என்ற இஸ்லாமிய சித்தாந்த ரீதியிலான மத அடிப்படைவாதப் போராளிகளை உருவாக்குகிறார்கள்.

அதன் தலைவர் முல்லா உமர் தலமையில் சோவியத் படைகளுக்கு எதிராகவும் அவரின் ஆதரவு ஆப்கானிஸ்தான் கம்யூனிச அரசுக்கு எதிராகவும் போராட்டங்கள் நடைபெற்றன. அன்றைய காலகட்டத்தில் சோவியத் சீனா இடையிலான முரண்பாடுகள் காரணமாக சீனாவின் நெருங்கிய நட்பு வட்டாரத்தில் அமெரிக்கா இருந்தது.

உண்மையில் மேற்கத்திய நாடுகளின் சோவியத்திற்கு எதிரான பனிப்போரை முஜாஹிதீன்கள் நடத்தினார்கள். இவர்களின் தளபதிகள் பெரும்பாலும் நிலப்பிரபுக்களாக இருந்து போராளிகளாக உருமாறியவர்கள். பெரும்பாலும் இவர்கள் பழங்குடியினர் மத்தியில் இருந்து வந்த பஷ்தூன்; இனத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

இதற்கிடையில் பாப்ரக் கர்மலின் ஆட்சியின் மீது மக்களின் அதிருப்தி அதிகரிக்க, சோவியத் யூனியன் புதிய அதிபராக முஹம்மது நஜிபுல்லாவை நியமித்தது.

முஜாஹிதீன் களின் கெரில்லா யுத்தம் சோவியத் நாட்டுக்கு பெரும் இழப்பையும் பொருளாதாரச் சுமையையும் ஏற்படுத்தியதன் விளைவாக பத்து வருடங்கள் ஆப்கானில் நிலை கொண்டிருந்த சோவியத் இராணுவம் பெப்ரவரி 1989 ஆப்கானை விட்டு வெளியேறுகிறது.

ஆனாலும் தொடர்ந்து பொருளாதார இராணுவ உதவிகளை நஜிபுல்லா அரசிற்கு வழங்கி வந்தது. 1991 இல் சோவியத்தின் வலிந்த உடைவும் அதனைத் தொடர்ந்த சோவியத் ஆதரவு அற்ற ஆப்கானிஸ்தானின் நஜிபுல்லா அரசும் அதிக காலம் தாக்கு பிடிக்க முடியவில்லை. முஜாஹிதீன் இற்கு பாகிஸ்தான் ஊடாக அமெரிக்க கூட்டமைப்புகள் ஆயுத பொருளாதார ஆதரவுகளை வழங்கி வந்த நிலையில் ஆப்கான் அரசு 1992 இல் வீழ்சியடைகின்றது.

முஹம்மது நஜிபுல்லா பதவியை இராஜினாமா செய்துவிட்டு இந்தியாவிற்குத் தப்பியோட முயற்சித்தார். அது தோல்வியில் முடிய – ஆப்கானில் இருக்கும் ஐக்கிய நாடுகளின் தலைமை குடியிருப்பில் தங்கியிருந்த முஹம்மது நஜிபுல்லாவை முஜாஹிதீன் துக்கிலிட்டு படுகொலை செய்து அதன் பின்பு வாகனம் ஒன்றில் பின்புறமாக கட்டி தெருத் தெருவாக இழுத்துச் சென்றனர்.

முஜாஹிதீன்களின் ஆட்சி ஆப்கானிஸ்தானில் துவங்கியது இவ்வாறுதான்.

கம்யூனிசத்திற்கு மாற்றாக இஸ்லாமிய நாடுகளில் மத அடிப்படைவாதத்தை பரப்பிய ‘பெருமை’ மேற்கத்திய முதலாளித்துவ நாடுகளையே சேரும். சவூதிரேபியாவின் எண்ணெய் வளம், பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ, அமெரிக்காவின் நேட்டோ கூட்டணி என்பது இந்த மத அடிப்படைவாதத்தின் அச்சாணி.
இதனைத் தொடர்ந்து பல்வேறு முஜாஹிதீன் பிரிவுகளின் கூட்டணியினர் அரசாங்கத்தை சலாவுதீன் ரப்பானி தலமையில் உருவாக்கினர். ஆனால் மற்றொரு உள்நாட்டுப் போர் தொடர்ந்து கொண்டுதான் இருந்தது. 1996 வரை தொடர்ந்த உள்ள நாட்டுப் போரின் இறுதியில்தான் தலிபான்களின் முதல் தவணை ஆட்சி ஆப்கானில் உருவானது…

மிகுதி அடுத்த பதிவில்…

(நன்றி: சிவா முருகுப்பிள்ளை – அவருடைய முகநூலில் இருந்து)

24 மணி நேரத்தில் 21 ஆயிரத்து 600 பேரரை ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேற்றியுள்ள அமெரிக்கா – தலிபான்கள் விடுத்துள்ள கோரிக்கை !

ஆப்கானிஸ்தானை தலீபான்கள் கைப்பற்றிய நிலையில், கடந்த 14-ந்திகதி முதல், அங்குள்ள தனது குடிமக்களை அமெரிக்கா வெளியேற்றி வருகிறது.

திங்கட்கிழமை காலை தொடங்கி நேற்று காலையுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில், மிக அதிக அளவாக 21 ஆயிரத்து 600 பேரை வெளியேற்றி இருக்கிறது. 37 அமெரிக்க ராணுவ விமானங்கள் மூலம் 12 ஆயிரத்து 700 பேரும், நட்பு நாடுகளின் விமானங்கள் மூலம் 8 ஆயிரத்து 900 பேரும் மீட்டு அழைத்துச் செல்லப்பட்டனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை, 16 ஆயிரம்பேர் அழைத்து செல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மக்களை வெளியேற்றும் பணியை 31-ந்திகதிக்குள் முடிக்க வேண்டும், கெடு நீட்டிப்பு கிடையாது என்று தலீபான்கள் கூறிவிட்டதால், மீட்புப்பணியை அமெரிக்கா விரைவுபடுத்தி உள்ளது.

இதே நேரம் , ஆப்கானிஸ்தானில் இருந்து திறமையானவர்களை வெளியேற்றக் கூடாது என அமெரிக்காவை தலிபான்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய தலிபான்களின் செய்தித் தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹித்,

பொது மன்னிப்பை ஏற்கனவே அறிவித்துள்ளதால், எந்த நபரையும் குறிவைக்கவில்லை.  மேலும் ஆப்கானிஸ்தான் மருத்துவர்கள், பொறியாளர்கள் மற்றும் நன்கு படித்தவர்களை தங்கள் நாட்டிலிருந்து வெளியேற்ற வேண்டாம் என ஜபிஹூல்லா அமெரிக்காவைக் கேட்டுக் கொண்டார்.

ஆப்கானிஸ்தானுக்கான அனைத்து உதவிகளையும் நிறுத்திய உலக வங்கி !

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறியதை தொடர்ந்து 20 ஆண்டுகளுக்குப் பின் ஆப்கானிஸ்தானை மீண்டும் தலிபான்கள் கைப்பற்றியுள்ளனர். புதிய அரசை அமைக்க தலிபான்கள் தீவிரம் காட்டி வரும் நிலையில், அந்த நாட்டு மக்கள் உயிர் பிழைத்தால் போதும் என்ற எண்ணத்தில் அங்கிருந்து தப்பி வருகின்றனர்.
இதனால் ஆப்கானிஸ்தானில் தொடர்ந்து பதற்றமும் குழப்பமும் உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகின்றன. ஆப்கானிஸ்தானில் அடுத்து என்ன நடக்கப்போகின்றது என்பதை முழு உலகமுமே வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கின்றது.
இந்நிலையில், ஆப்கானிஸ்தானுக்கு அளிக்கப்பட்டு வந்த உதவிகள் நிறுத்தப்படுகிறது என உலக வங்கி தெரிவித்துள்ளது.
மேலும், தலிபான்களின் கட்டுப்பாட்டில் சிக்கியுள்ள ஆப்கானிஸ்தானில் உள்ள பெண்களின் நிலை கவலை அளிப்பதாகவும் உலக வங்கி  கூறியுள்ளது.

“.நான் ஒரு ரூபா பணம் திருடியதாக நிரூபியுங்கள் நான் அரசியலில் இருந்து ஒதுங்கி விடுவேன்.” – யாழ் மாநகர முதல்வர் காட்டம் !

“எனக்கு காசடிக்கும் தேவையில்லை.நான் ஒரு ரூபா பணம் திருடியதாக நிரூபியுங்கள் நான் அரசியலில் இருந்து ஒதுங்கி விடுவேன்.” என  யாழ் மாநகர முதல்வர் சட்டத்தரணியுமான விஸ்வலிங்கம் மணிவண்ணன் தெரிவித்தார்.

யாழ் மாநகரசபை சபையில் இன்று இடம்பெற்ற விசேட ஊடக சந்திப்பில், மாநகர எல்லைக்குள் இரவோடிரவாக விளம்பர பலகை அமைப்பதில் ஏற்பட்ட சர்ச்சை தொடர்பாக பேசும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்.,

என்னைப் பொறுத்தவரையில் இது ஒரு சிலரால் விஷமத்தனமாக செய்யப்படுகின்ற அரசியல் காழ்ப்புணர்ச்சிமிக்கதான நடவடிக்கை. இவை மாநகரசபையினுடைய பூரண அனுமதியுடனே செய்யப்பட்டு வருகிறது. நான் மாநகர முதல்வராக பொறுப்பேற்ற பின்னர் முதலாம் மாதம் 13ஆம் திகதி நடந்த முதல் கூட்டத்தில் இது தொடர்பில் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இது தொடர்பில் பகிரங்கமாக யாழ்ப்பாணத்திலுள்ள பத்திரிகைகளில் செய்தி பிரசுரிக்க கோரப்பட்டதுடன் இரண்டாம் மாதம் 13ஆம் திகதி பத்திரிகைகளில் பகிரங்கமாக வீதிகளில் விளம்பரங்களை காட்சிப்படுத்த விளம்பரதாரர்களுக்கு  அழைப்பு விடுக்கப்பப்பட்டது.

யாழ் மாநகர எல்லைக்குள் இருக்கின்ற வரலாற்று புகழ்பெற்ற இடங்களை காட்சிப்படுத்துவதற்கும் அதனூடாக சுற்றுலாப்பயணிகளை தூண்டுவதற்கும் மாநகர எல்லைகளை அடையாளப்படுத்துவதற்கும், நாங்கள் வீதியிலே விளம்பரபலகைகளை அமைக்க அனுமதி தாருங்களென வீதி அபிவிருத்தி அதிகாரி சபைக்கு  ஒரு கடிதம் அனுப்பப்பட்டது.

மாநகரசபைக்கு இந்த வருட கணக்காய்வின்படி கொரோனா காரணமாக 239 மில்லியன் வருமான இழப்பு ஏற்பட்டிருக்கின்றது. இதனால் எங்களுடைய வட்டார அபிவிருத்திகள் பாதிக்கப்படுதல் , ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாத நிலை, குப்பைகளை அகற்றும் பணிகளை செய்யமுடியாத நிலை ஏற்படுமென்பதால் நாங்கள் வருமானத்தை அதிகரிக்க புதுப்புது வழிகளை யோசிக்க வேண்டியுள்ளது.

இந்த விளம்பர பலகை ஒன்றின் மூலம் ஒரு வருடத்துக்கு ஏறத்தாழ 190000 வருமானம் கிடைக்கும். மொத்தமாக 20லட்சம் வரை எதிர்பாராத ஒரு வருமானம் கிடைக்கவுள்ளது.அதே போல் ஒவ்வொரு வருடமும் இந்த தொகை மாநகர சபைக்கு கிடைக்கும்.

நாங்கள் எடுத்த தீர்மானம் தொடர்பில் பலதடவை இந்த செயற்பாடுகள் தொடர்பில் மாநகரசபை கூட்டங்களின் போது தெரிவித்திருந்தோம். அப்போது இவர்கள் துங்கிக் கொண்டு இருந்தார்களா?

சிங்கள நிறுவனத்துக்கு ஒப்பந்தம் வழங்கியுள்ளார், ஒழித்து செய்கின்றாரெனக்  கூறுகின்றனர். அதிகளவு தொகையை விளம்பரபலகைக்கு வழங்க  நிறுவனங்கள்  தயாரில்லை. இரண்டு இடத்துக்கு மாத்திரமே தற்போது விளம்பரதாரர்கள் தெரிவு செய்யப்பட்டிருக்கின்றார்கள். தமிழ் நிறுவனங்கள் இதற்காக முன்வந்தால் ஒப்பந்தங்களை வழங்குவதற்கு நான் தயாராக இருக்கின்றேன்.

எதற்காக இனவாதம் பேச வேண்டுமென நாங்கள் யோசிக்க வேண்டும் இங்கு உள்ள தமிழ் நிறுவனங்கள் முன்வந்தால் எட்டு வீதிகள் உள்ளன அவற்றை அவர்களுக்கு வழங்கமுடியும். இது தொடர்பாக அபிவிருத்தி அதிகார சபையிடம் அனுமதி கேட்டபோது வீதியை பயன்படுத்துவதற்கான அபிவிருத்தி கட்டணமாக 8 லட்சம் ரூபாவை செலுத்தவேண்டுமென கோரப்பட்டது.

வீதி அபிவிருத்தி அதிகார சபை கோரிய 8 லட்சம் ரூபா அதிகமெனக்கூறி எந்த விளம்பர நிறுவனங்களும் முன்வராத நிலையில் “மாநகரம் அன்புடன் வரவேற்கின்றது” என்ற விளம்பர பலகையை அமைக்கமுடியாமல் போய்விடும் என்பதற்காக நான் வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு 50 வீதம் குறைக்க சிபாரிசு செய்தேன். அதை குறைப்பதும் குறைக்காமல் விடுவதும் வீதி அபிவிருத்தி அதிகாரசபையினுடைய தீர்மானத்திற்குட்பட்டது.

இதனை ஏன் குழப்புகிறார்கள் எனத் தெரியவில்லை. நான் இவற்றில் காசடித்ததாக நிரூபித்தால் அரசியலை விட்டு விலக தயார். அதேபோல அந்த பணத்தின் இரு மடங்கை நான் வழங்க தயார். என்னுடைய சம்பள பணத்தை நான் இன்னொருவருக்கு வழங்குகிறேன். முன்னாள் முதல்வர் 2 லட்சம் மேலே எடுத்ததாக ஒரு கருத்து ஒன்று இருக்கிறது. என்னுடைய சொந்த பணத்திலேயே மக்கள் பணிகளை செய்து கொண்டுள்ளேன். அப்படிப்பட்ட நான் சவால் விடுகிறேன். நான் ஒரு ரூபா பணம் திருடியதாக நிரூபியுங்கள் நான் அரசியலில் இருந்து ஒதுங்கி விடுவேன்.

நான் காசடித்து விட்டதாக கூறுகின்றவர்களுடைய வருட வருமானம் நான் என்னுடைய கனிஷ்ட சட்டத்தரணிக்கு கொடுக்கும் மாத சம்பளம். யாழ்ப்பாணத்தில் பெயர் கூறும் அளவுக்கு நான் சட்டத்தரணியாக இருக்கின்றேன். எனக்கு காசடிக்கும் தேவையில்லை.

நாடு முடக்கப்பட்ட இந்த நிலையிலும் இவ்வளவு வேக அபிவிருத்திப்பணிகள் இடம்பெறும் என யாரும் நினைத்துப் பார்க்கவில்லை.  கடந்த  இரண்டு வருடமும் 10 மாதங்களும் மாநகர ஆட்சியில் இருந்தவர்கள் ஒன்றுமே செய்யவில்லை.

மாநகர அபிவிருத்தியை குழப்பி சாக்கடைக்கு தொடர்ந்தும் இருப்பதற்கா அவர்கள் விரும்புகிறார்களா? தங்களுடைய அரசியல் எதிர்காலம் அழியப் போகின்றது என்பதே இதற்கு பின்னணியில் உள்ளவர்களின் பிரச்சினை. அடுத்த முதல்வராகலாம் என்ற நப்பாசை கொண்டவர்களுக்கு என்னுடைய செயற்பாடு பயத்தை ஏற்படுத்தும்.

கதிரையை சூடாக்குவதற்கு நான் முதல்வராக வரவில்லை. நான் ஏற்றுக்கொண்ட பதவியை திறம்பட செயல்படுத்த வேண்டும் இவ்வாறு இவர்கள் செய்யத்தான் நான் இன்னும் வேகமாக செயற்படுவேன்.

2016 ஆம் ஆண்டு வடக்கு மாகாண சபையால் வெளியிடப்பட்ட மாகாண சபை உப விதிகளின்படி மாநகர முதல்வர் தான் விளம்பரத்தை அனுமதிப்பதா இல்லையோ என்பதை தீர்மானிப்பதென தெளிவாக உள்ளது.   முதல்வரிடம் அல்லது மாநகர ஆணையாளருக்கு இந்த அதிகாரம் காணப்படுகின்றது. இதில் மாநகரசபைக்கு எந்த  அதிகாரமும் கிடையாது. ஆனாலும் நான் ஒவ்வொரு விடயங்களையும் சபையினுடைய அனுமதியுடனே செய்கிறேன்.

இவ்வாறான நடவடிக்கைகள் தொடர்ந்தால் எதிர்காலத்தில் பாரதூரமான விளைவுகளை சந்திக்க வேண்டிய நிலைமை ஏற்படலாம். நான் ஒரு சட்டத்தரணியாக வழக்கு தொடரவும் நான் தயார்.

மாநகர சபை உறுப்பினர்கள், மக்களுக்கு வருகின்ற காசில் இழப்பை ஏற்படுத்துபவர்களாக இருந்தால் நான் அவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுப்பதற்கும் அவர்களுடைய சம்பளத்திலிருந்து அதனை அவர்கள் வழங்குவதற்கும் சட்ட ஏற்பாடுகள் இருக்கின்றது என்பதை தெரிவிக்க விரும்புகிறேன் என்றார்.