September

September

சிறைக்குள் நுழைந்து தமிழ் அரசியல் கைதிகளை மண்டியிடச் செய்து துப்பாக்கி முனையில் அச்சுறுத்திய அமைச்சர் – மௌனம் காக்கும் அரசு !

அநுராதபுரம் சிறைச்சாலைக்குள் மதுபோதையில் கைத்துப்பாக்கியுடன் சென்ற சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த தமிழ் அரசியல் கைதிகளை முழந்தாளிடச் செய்து துப்பாக்கி முனையில் அச்சுறுத்தலை விடுத்துள்ளார்.

இது தொடர்பில் பல்வேறுபட்ட தரப்பினரும் அதிருப்தி வெளியிட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் , தமிழ் அரசியல் கைதிகளுக்கு கொலை மிரட்டல் விடுத்த இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

கடந்த 12 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை அநுராதபுரம் சிறைகளுக்குச் சென்ற இராஜாங்க அமைச்சர் இரண்டு கைதிகளை மண்டியிடச் செய்து கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது.

இந்த விவகாரம் குறித்து டுவிட்டரில் கருத்து பதிவிட்டுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, சிறைச்சாலைக்கு பொறுப்பான இராஜாங்க அமைச்சரை உடன் பதவி நீக்க வேண்டும் என அரசாங்கத்திடம் கேட்டுக்கொண்டுள்ளது.

மேலும் சிறையில் கைதிகளை கொலை செய்வதாக மிரட்டியதாகக் கூறப்படும் சம்பவம் குறித்து உடனடி விசாரணை நடத்தப்பட்டு அவரை கைது செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.

“நாமல் கழிப்பறைக்கு சென்றாலும் அவருடன் கூடவே அங்கஜனும் லெசல்வார்.” – க.வி.விக்னேஸ்வரன்

அரசாங்கத்துடன் ஒட்டி இருந்துகொண்டு பந்தம் பிடிப்பவரே அங்கஜன் என தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

ஜெனீவா என்பது நாடகமென நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்தமை தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வியெழுப்பிய போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இதன்போது மேலும் பதில் வழங்கிய அவர் ,

அரசாங்கத்துடன் ஒட்டி இருந்துகொண்டு பந்தம் பிடிப்பவரே அங்கஜன். நாமல் கழிப்பறைக்கு சென்றாலும் பின்னால் செல்பவர். அவருக்கு ஏதோ ஒரு சில வாக்குகள் கிடைத்துவிட்டது. அதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. ஆனால் அடுத்த முறை அவருக்கு மக்கள் வாக்களிக்க மாட்டார்கள். அவருடைய கூற்றை நாங்கள் முக்கியமாக கருத வேண்டிய அவசியமில்லை.

அண்மையிலே தமிழ் தேசிய கட்சிகள் எல்லோரும் இணைந்து பேசி ஒருமித்து ஒரு அறிக்கை அனுப்ப வேண்டுமென பேசியிருந்தோம். பின்னர் அதிலிருந்து இழுத்து இழுத்து செய்யாதிருந்ததால் இனியும் தாமதித்தால் காலம் தாமதித்து விடும் என்பதால் எஞ்சியிருந்த ஏனைய கட்சிகளை இணைத்து உரிய நடவடிக்கைகளை எடுத்திருந்தோம்.

எங்களுடைய அறிக்கை ஒருமித்து சென்றால் நல்லது தான். ஆனால் தனிப்பட்ட காரணங்களுக்காக அதனை செய்ய முடியாது போனாலும் மிகவும் முக்கியமானது நாங்கள் எங்களுடைய பிரச்சினைகளை சர்வதேசத்துக்கு தெரியப்படுத்த வேண்டும். எங்களுக்குள்ளே இருக்கிற பிரச்சினைகளுக்காக நாங்கள் அடிபட்டு கொண்டிருந்தாலும் அவர்களுக்கு முழுமையான விடயங்களை வழங்க வேண்டும். இதிலே நாங்கள் இணைந்து செயல்பட்டால் நல்லது. அடுத்த தடவை இணைந்து செயற்படுவோம் என்கிற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது என்றார்.

அனைத்து வகை கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வை அறிவித்தார் லசித் மாலிங்க !

ரி20 போட்டிகளில் இருந்து தான் ஓய்வுபெறுவதாக இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மாலிங்க தெரிவித்துள்ளார்.

தனது முகப்புத்தகத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டு அவர் இதனை தெரிவித்துள்ளார்.

17 வருடங்களாக தேசிய மற்றும் சர்வதேச போட்டிகள் ஊடாக தான் பெற்றுக் கொண்ட அனுபவம் மற்றும் அறிவு தொடர்ந்தும் தேவைப்படப்போவதில்லை அவர் குறித்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

ஏனெனில் தனது கிரிக்கெட் வாழ்வில் இறுதியாக இருந்த ரி20 போட்டிகளில் இருந்தும் தான் ஓய்வு பெற தீர்மானித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

கிரிக்கெட்டுக்கு ஆதரவு வழங்கும் வகையில் எப்பொழுதும் புதுமுக வீரர்கள் மற்றும் கிரிக்கெட்டை நேசிப்பவர்களுடன் தொடர்ந்து இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இறுதிப்போட்டியிலும் இலங்கை அணி படுதோல்வி !

இலங்கை மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான ரி20 போட்டியில் தென்னாபிரிக்கா அணி 10 விக்கெட்டுக்களால் இமாலய வெற்றியை பதிவு செய்துள்ளது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுக்களை இழந்து 120 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது. இலங்கை அணி சார்பில் குசல் ஜனித் பெரேரா அதிகபட்சமாக 39 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார். சாமிக கருணாரத்ன 24 ஓட்டங்களை ஆட்டமிழக்காது பெற்றுக் கொண்டார்.

பந்து வீச்சில் போர்டின் மற்றும் ரபாடா ஆகியோர் தலா இரு விக்கெட்டுக்களை கைப்பற்றினர்.

இதற்கமைய, 121 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்கா அணி 14.4 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி வெற்றி இலக்கை அடைந்தது.

அவ்வணி சார்பில் அதிரடியாக துடுப்பெடித்தாடிய ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான ஹென்ரிக்ஸ் 56 ஓட்டங்களையும், டீ கொக் ஆட்டமிழக்காது 59 ஓட்டங்களையும் பெற்று கொண்டனர்.

அதன்படி, மூன்று போட்டிகள் கொண்ட ரி20 தொடரை தென்னாபிரிக்கா அணி வௌ்ளையடிப்பு செய்து தொடரை கைப்பற்றியுள்ளது.

“ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் உயர் ஸ்தானிகர் தமிழ் மக்கள் முகம் கொடுக்கும் பிரச்சினைகள் பற்றி குறிப்பிடவில்லை.” – க.வி.விக்னேஸ்வரன்

“ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உயர் ஸ்தானிகர் தமது அறிக்கையில் தமிழ் மக்கள் முகம் கொடுக்கும் பிரச்சினைகள் தொடர்பான பல விடயங்கள் பற்றி அவர் குறிப்பிடவில்லை என்பது மனவருத்தத்தைத் தருகின்றது. ” என நாடாளுமன்ற உறுப்பினர் க.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டார்.

இது தொடர்பில் மேலுமு் குறிப்பிட்டுள்ள அவர்,

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உயர் ஸ்தானிகர் தமது அறிக்கையில் தமிழ் மக்கள் முகம் கொடுக்கும் பல விடயங்கள் பற்றி அவர் குறிப்பிடவில்லை என்பது மனவருத்தத்தைத் தருகின்றது. உதாரணத்திற்கு எமது காணிகளை அரசாங்கம் தந்திரமாகவும் பலாத்காரமாகவும் கையேற்றல் பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை. ஒரு வேளை பல உண்மையான தரவுகளை விபரமாக அவர் எதிர்பார்த்திருக்கின்றாரோ நான் அறியேன். அடுத்த மார்ச் மாதக் கூட்டத்திற்கு முன்னர் இவை பற்றி முழு விபரங்களை நாம் சேகரித்து அனுப்ப வேண்டும். எனினும் பல முக்கிய விடயங்களை அவர் தமது உரையில் குறிப்பிட்டுள்ளார்.

முதலாவதாக மக்களை வேவு பார்ப்பது அவர்களை அச்சுறுத்துவது மற்றும் மனித உரிமை மீறல் செயற்பாட்டாளர்களை பத்திரிகையாளர்களை காணாமல் போனோரின் குடும்ப உறுப்பினரைக் குறிவைத்து அவர்களை நீதிமன்றில் நிறுத்துவது போன்ற செயற்பாடுகள் தற்போது விரிவடைந்து மாணவர்களை கல்வியாளர்களை மருத்துவர்களை ஏன் மதத் தலைவர்களையும் அரசாங்கம் கண்காணிக்கத் தொடங்கியுள்ளது என்பதைக் கூறியுள்ளார்.

இரண்டாவதாக நல்லிணக்கம் பொறுப்புக் கூறல் மனித உரிமைகள் பற்றிப் பேசினால் போதாது நடைமுறையில் முன்னேற்றத்தைக் காட்ட வேண்டும் என்றுள்ளார். மூன்றாவதாக பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் ஏற்பாடுகளை உடனே தற்காலிகமாகவேனும் செயலிழக்க வைக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

நான்காவதாக 2019ம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறில் நடந்த குற்றங்கள் சம்பந்தமான சூத்திரதாரிகளை உடனே கண்டுபிடித்து உண்மையையும் நீதியையும் நிலைநாட்ட வேண்டும் என்றுள்ளார். இப்படி பல விடயங்களை அரசாங்கம் செய்ய வேண்டும் என்று பொருள்படக் கூறியுள்ளார். மேலும் அரசாங்கத்திற்கு சார்பாகவும் பேசி தொடர்ந்து பொறுப்புக்கூறல் விடயத்தில் அவசியமான செயற்பாடுகளை அரசாங்கம் எடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

மேலும் பொறுப்புக்கூறல் சம்பந்தமான விசாரணைகளை உடனே நடத்த உரிய குழுவை அமைப்பதாகவும் அதற்கான நிதிகளை அங்கத்துவ நாடுகள் பெற்றுத்தரவேண்டும் என்றும் கூறியுள்ளார். மொத்தத்தில் நாம் எதிர்பார்த்த பல விடயங்கள் கூறப்படாமல் விட்டாலும் தற்போதைக்கு இலங்கை அரசாங்கத்தை சர்வதேச கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர நடவடிக்கை எடுத்துள்ளார். அரசாங்கமும் வேறு வழியின்றி அதற்கு இசைந்துள்ளது. பணம் தான் பிரச்சனை. அத்துடன் நாம் நடப்பவை பற்றிய உண்மை விபரங்களை பட்டியலிட்டு அவருக்கு அனுப்பக் கடமைப்பட்டுள்ளோம் எனவும் குறிப்பிட்டார்.

“தமிழ் தேசிய கூட்டமைப்பு கூறியதையே ஐக்கிய நாடுகள் மனித உரிமை உயர்ஸ்தானிகரும் கூறியுள்ளார்.” – எம்.ஏ.சுமந்திரன்

தமிழ் தேசிய கூட்டமைப்பு கூறியதையே ஐக்கிய நாடுகள் மனித உரிமை உயர்ஸ்தானிகரும் கூறியிருப்பது வரவேற்கத்தக்கது என தமிழ்தேசிய  கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

இன்று வவுனியாவிற்கு பிரத்தியேக விஜயம் ஒன்றினை மேற்கொண்ட அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

இன்றையதினம் ஜெனிவாவிலே ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை கூட்டத்தொடர் ஆரம்பமாகிற வேளையிலே ஐக்கிய நாடுகள் மனித உரிமை உயர்ஸ்தானிகர் அம்மையார் அவர்கள் இலங்கை சம்பந்தமான பொறுப்பு கூறல், நல்லிணக்கம், மனித உரிமைகள் என்ற அடிப்படையிலே 46/1 என்கின்ற தீர்மானம் மார்ச் மாதம் நிறைவேற்றப்பட்ட பின்னர் வாய் மூலமான முன்னேற்ற அறிக்கையை சமர்ப்பித்திருக்கிறார்.

அதிலே மிகவும் விசேடமாக யூன் மாதத்திலே ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச அவர்கள் ஐக்கிய நாடுகள் நிறுவனத்தோடு பொறுப்பு கூறல் விடயத்திலேயும், நல்லிணக்கத்திலேயும் தாங்கள் இணைந்து செயல்பட தயார் என்று டுவிற்றர் மூலமாக அவர் விடுத்த செய்தியை மேற்கோள்காட்டி அதை தாங்கள் கவனித்திருப்பதாகவும் அதனை நடைமுறையிலே நாங்கள் காண விரும்புகிறோம் என்று ஆரம்பித்திருக்கிறார். அது மிகவும் வரவேற்கப்பட வேண்டிய ஒரு விடயம்.

யூன் மாதத்திலே அப்படியாக கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதி அவர்கள் அந்த டுவிற்றர் செய்தியை கொடுத்தபோது, தமிழ் தேசிய கூட்டமைப்பாக நாங்கள் அதை திரும்ப டுவிற் பண்ணி அதனை நாங்கள் அப்பொழுதே வரவேற்று, அதனை நடைமுறையிலே காண்பதற்கு, காத்திருக்கிறோம் என்று நாங்களும் கூறியிருந்தோம். அதே தான் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அம்மையாரும் கூறியிருக்கிறார். அதற்கு மேலதிகமாக, இலங்கையிலே மனித உரிமை நிலைமை, மோசமாகிக் கொண்டு போவதனை பல உதாரணங்களை மேற்கோள்காட்டி, அவர் கூறியிருக்கிறார். அடக்குமுறை, முன்னர் நினைவேந்தல், அப்படியான மனித உரிமை ஆர்வலர்கள், அப்படியானவர்களோடு இருந்தது. இன்றைக்கு, தொழிற்சங்க பிரதிநிதிகள், மாணவர்கள், ஆசிரியர்களுக்கும் கலந்திருக்கிறது என்ற ஒரு குறிப்பை கூறியிருக்கின்றார்.

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் விடயத்திலே, அவர்களுடைய உறவுகள் எதிர்பார்க்கிற மாதிரியான நீதி கொடுக்கப்பட வேண்டும் என்று திரும்பவும் அவர் வலியுறுத்தி இருக்கிறார். இலங்கையிலே இருக்கின்ற, தற்போது கொண்டுவரப்பட்டிருக்கிற அவசரகால பிரகடனம் குறித்து, அதனால் ஏற்படக்கூடிய அபாயங்கள் குறித்து, அதன் மூலமாக இராணுவ மயமாக்கப்படுதல், இன்னும் தீவிரமாகலாம் என்பதனையும் கூறி, உறுப்பு நாடுகள், இலங்கையை இந்த நிலைமைகளை தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என்பதனையும் கூறி ஒரு அழைப்பு விடுத்திருக்கிறார்.

இந்த வாய் மூலமான அறிக்கையை நாங்கள் ஏற்கனவே வரவேற்று இருக்கிறோம். மனித உரிமை உயர்ஸ்தானிகருக்கு எங்களுடைய நன்றிகளை தெரிவிக்கிற அதே வேளையிலே, உறுப்பு நாடுகள் இந்த விடயத்தை குறித்து, இன்றைக்கு பொதுவான அபிப்பிராயங்களை பகிர்ந்து கொள்கின்ற போது, இலங்கை சம்பந்தமாக தங்களுடைய கரிசனையை, இந்த வாய் மூல அறிக்கையிலே எழுப்பப்பட்ட கரிசனைகளோடு ஒட்டி வெளிப்படுத்த வேண்டும் என்று நாங்கள் உறுப்பு நாடுகளிடத்திலே கோரிக்கை விடுக்கிறோம்.

இந்த 46/1 என்கின்ற தீர்மானத்திலே மிகவும் விசேஷமாக எடுக்கப்பட்ட ஒரு முடிவு சாட்சியங்களை சேகரிப்பதும், அவற்றை பாதுகாப்பதற்குமான பொறிமுறை இந்த வாய்மூல அறிக்கையில் இறுதியிலே, அது சம்பந்தமாக தான் எடுத்திருக்கிற நடவடிக்கைகளையும், ஏற்கனவே ஒரு இலட்சத்தி இருபதாயிரத்துக்கும் மேற்பட்ட ஆவணங்கள் ஐக்கிய நாடுகள் கையிலே இருப்பதாகவும், அதனை ஆரம்பமாக கொண்டு மிகுதி வேலைகள், விரைவில் ஆரம்பமாகும் என்றும், சொல்லியிருக்கிறார்.

அந்த ஒரு இலட்சத்தி இருபதாயிரம் ஆவணங்கள் என்று சொல்லப்படுபவை. முன்னர் செயலாளர் நாயகம் நியமித்த நிபுணர் குழு, 2011 ஆண்டு, அறிக்கை வெளியிட்ட நிபுணர் குழு சேகரித்த ஆவணங்கள் அது அப்பொழுதே சொல்லப்பட்டது. இரகசியமாக பேணப்படலாம். ஒரு விசாரணை வருகிறபோது மட்டும், அது வெளியிடப்படலாம் என்று. அதற்கு பின்னர் 2014 ஆம் ஆண்டு ஒரு சர்வதேச விசாரணை ஒன்று நடத்தப்பட்டு அதிலே சேகரிக்கப்பட்ட ஆவணங்களும் உள்ளன.

ஆகவே இதற்கு மேலதிகமாக, இப்பொழுது இந்த ஆவணங்களை சேகரிக்கின்ற, பாதுகாக்கின்ற இந்த பொறிமுறை சம்பந்தமாகவும், அதற்கு தேவைப்படுகின்ற நிதி சம்பந்தமாகவும் அம்மையார் குறிப்பிட்டிருக்கிறார்.  இப்பொழுது பொதுச்சபை இந்த மாதம் நியூயோர்கிலே கூடவிருக்கிறது. அதிலே இதற்கு தேவையான நிதியையும் நாடுகள் வழங்கி தீர்மானிக்க வேண்டும் என்று நாங்கள் கோரிக்கை விடுக்கிறோம் என்றார்.

எல்லா வெளியகப்பொறிமுறையையும் முற்றாக நிராகரிப்பதாக இலங்கை மனித உரிமைகள் பேரவையில் அறிவிப்பு !

46/1 தீர்மானத்தின் கீழ் நிறுவப்படக்கூடிய எந்தவொரு வெளியகப்பொறிமுறையையும் முற்றாக நிராகரிப்பதாக அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்.

மனித உரிமைகள் ஆணையாளரின் இலங்கை குறித்த வாய்மொழி அறிவிப்பு தொடர்பாக பதிலளித்து உரையாற்றும் போதே வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் இதனை குறிப்பிட்டார்.

மேலும் இலங்கை அரசாங்கத்தின் ஒத்துழைப்பு அற்ற வெளியகப் பொறிமுறைகளால் பயனில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கொரோனா தொற்றுக்கு மத்தியில், உள்நாட்டு செயன்முறைகளில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், குறிப்பாக காணாமல் போனவர்கள் தொடர்பான அலுவலக நடவடிக்கை, இழப்பீட்டு அலுவலக அலுவலக நடவடிக்கை குறித்தும் அவர் சுட்டிக்காட்டினார்.

நாட்டின் அரசியலமைப்பிற்கு அமைவாக அவசியமான ஒத்துழைப்புக்களை வழங்கி, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையுடன் இணைந்து செயற்பட இலங்கை தயார் என்றும் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

பொறுப்புக்கூறல் மற்றும் காணாமல்போனோர் தொடர்பான பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்காகவும், கடந்த ஆணைக்குழுக்களின் பரிந்துரைகளை மறுபரிசீலனை செய்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

அதற்காக உயர் நீதிமன்ற நீதிபதியின் தலைமையில் விசாரணை ஆணைக்குழு அமைக்கப்பட்டு அதன் இடைக்கால அறிக்கையை ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது என்றும் இறுதி அறிக்கை அடுத்த 06 மாதங்களுக்குள் சமர்ப்பிக்கப்படும் என்றும் ஜி.எல்.பீரிஸ் குறிப்பிட்டார்.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை மறுபரிசீலனை செய்வதற்கும், சர்வதேச விதிமுறைகள் மற்றும் சிறந்த நடைமுறைகளுக்கு ஏற்ப கொண்டுவரவும் அரசாங்கத்தினால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

அதன்படி பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள வழக்குகளை விசாரணை செய்யவும், வழக்குகளை விரைந்து தீர்ப்பது குறித்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுவருவதாக ஜி.எல்.பீரிஸ் குறிப்பிட்டார்.

அத்தோடு 8 அம்ச செயற்றிட்டத்தை தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்கான அலுவலகம் தொடர்ந்தும் முன்னெடுப்பதாகவும் தேசிய மனித உரிமைகள் ஆணைக்குழு அதன் ஆணையை நிறைவேற்றுகின்றது என்றும் ஜி.எல்.பீரிஸ் குறிப்பிட்டார்.

மேலும் சமாதானம், நீதி மற்றும் வலுவான நிறுவனங்களை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு நிலையான அபிவிருத்தி இலக்கு 16 இன் கீழான வழிநடத்தல் குழு செயற்பட்டு வருவதாகவும் அமைச்சர் கூறினார்.

நல்லிணக்கம் மற்றும் அபிவிருத்தியை அடைந்து கொள்வதற்கு சிவில் சமூகத்துடன் இணைந்து பணியாற்றி வருவதாகவும் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

இதேவேளை 2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஈஸ்டர் ஞாயிறு அன்று நடந்த பயங்கரவாத தாக்குதல் குறித்து இலங்கை தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

பிள்ளையார் கோவிலின் முன்பு பௌத்தகொடியின் நிறங்கள் தீட்டப்பட்டதாக குற்றச்சாட்டு – அது ஒலிம்பிக் கொடி நிறம் என நிரூபித்த அங்கஜன் இராமநாதன் !

யாழ்ப்பாணம் பொஸ்கோ பாடசாலைக்கு அருகாமையில் உள்ள மாநகர சபைக்கு சொந்தமான குளத்தைச் சுற்றி பௌத்த கொடிகளில் காணப்படும் வர்ணங்கள் ஒத்த வகையில் நிறம் தீட்டும் செயற்பாடு இடம்பெற்று வருவதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

சர்ச்சை கருத்துகள் முன்வைக்கப்பட்டு வருகின்ற நிலையில், உடனடியாக அந்த வேலைத் திட்டத்தை இடைநிறுத்தியுள்ளதாக மாநகர சபை அறிவித்துள்ளது.

இது தொடர்பில் தன்னுடைய முகநூல் பதிவில் குறிப்பிட்டுள்ள நாடாளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளரும், யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவருமான அங்கஜன் இராமநாதன் ,

பௌத்த வர்ணமல்ல, அருகிலுள்ள ஆரம்ப பாடசாலையின் மாணவர்களை கருத்தில் கொண்டு ஒலிம்பிக் வர்ணமே பயன்படுத்தப்பட்டுள்ளது. – நகர அபிவிருத்தி அதிகார சபை.
யாழ்ப்பாணம் பிள்ளையார் கோவில் குளத்தினை புனரமைக்கும் செயற்பாட்டின் ஓர் அங்கமாக வர்ணப்பூச்சுப் பணிகள் இடம்பெற்றுவரும் நிலையில், குறித்த வர்ணங்கள் பௌத்த கொடியினை பிரதிபலிப்பதாக ஏற்படுத்தப்பட்ட சர்ச்சை தொடர்பில், நகர அபிவிருத்தி அதிகார சபை அதிகாரிகளோடு பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளரும், யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத்தலைவருமான கௌரவ அங்கஜன் இராமநாதன் அவர்கள் தொலைபேசியில் தொடர்புகொண்டு வினவினார்.
இதன்போது, குறித்த நிறங்கள் ஒலிம்பிக் கொடியினை பிரதிபலிக்கும் வகையில் பயன்படுத்தப்படுவதாகவும் அவை அருகில் உள்ள முன்னணி ஆரம்ப பாடசாலையின் மாணவர்களை கருத்தில் கொண்டு பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் நகர அபிவிருத்தி அதிகார சபை அதிகாரிகள் தெளிவுபடுத்தியுள்ளனர்.
எனவே இவ்விடயத்தில் வீண் சர்ச்சைகளை தவிர்க்குமாறும், சுயலாப அரசியலை முன்னெடுக்க முயற்சிக்கும்போது பௌத்த கொடியில் பச்சை நிறம் உள்ளடக்கபட்டிருக்கவில்லை என்பதையும் கருத்தில் கொள்ளுமாறும் கேட்டுக்கொள்கிறோம்.
என பதிவிட்டுள்ளார்.

இந்நிலையில் இது சமூக வலைத்தளங்களிலும் பெரிய பேசுபொருளாக ஆரம்பித்துள்ளது.

உலக வங்கியின் நிதி அனுசரணையுடன் மீளப் புனரமைக்கப்பட்டு வருகின்ற குளத்தில் சுற்று கம்பங்களுக்கு இவ்வாறு வர்ண நிறங்களை பொறிக்கும் செயற்பாடுகள் இடம்பெற்று வருகின்றது. யாழ்.மாவட்டத்தில் இடம்பெறும் அபிவிருத்திகள் தொடர்பில் கள ஆய்வுகளை மேற்கொள்வதற்காக கடந்த வாரம் அமைச்சர் நாமல் ராஜபக்ச குறித்த பகுதிக்கு விஜயம் செய்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இந்த ஊரடங்கு காலத்தில் 240 கோடி ரூபாவிற்கு சட்டவிரோத மதுபானமான கசிப்பை அருந்தியுள்ள இலங்கையர்கள் !

கொவிட் தீவிரமடைந்ததை தொடர்ந்து தற்போது தனிமைப்படத்தல் ஊரடங்குச்சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. இந்தக்காலப்பகுதியில் நாட்டிலுள்ள அனைத்து மதுபானசாலைகளும் மூடப்பட்டுள்ளன.

இந்த தனிமைப்படுத்தல் ஊரடங்கு காலப் பகுதியில், சட்டவிரோத மதுபான (கசிப்பு) பாவனை அதிகரித்துள்ளதாக பொலிஸார் மற்றும் கலால்வரித் திணைக்கள தகவல்கள் தெரிவிக்கின்றன.

தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள காலப் பகுதியில், மதுபானசாலைகள் மூடப்பட்டுள்ளமையே, இந்த சட்டவிரோத மதுபான பாவனை அதிகரிக்க காரணம் என தெரிய வந்துள்ளது.

இதன்படி, குறித்த ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள இந்த காலப் பகுதியில் மாத்திரம் மதுபான பிரியர்களினால், 240 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியான சட்டவிரோத மதுபானமான கசிப்பை அருந்தியுள்ளதாக பொலிஸார் மற்றும் கலால்வரித் திணைக்கள தகவல்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

இலங்கையில் நாளொன்றுக்கு சுமார் 50 கோடி ரூபாவிற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள மதுபானம் பயன்படுத்தப்படுவதாக கலால்வரித் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள கடந்த 24 நாட்களில் சட்டவிரோத மதுபாவனை பல மடங்காக அதிகரித்துள்ளதாக கலால்வரித் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

“போராட்ட காலத்தில் வெளிநாடு ஓடியவர் அங்கஜன் இராமநாதன் ஜெனிவா விவகாரம் தொடர்பில் கதைக்க எந்த அருகதையுமில்லை.” – சுரேஷ் பிரேமசந்திரன்

போராட்ட காலத்தில் வெளிநாடு ஓடியவர் அங்கஜன் இராமநாதன் ஜெனிவா விவகாரம் தொடர்பில் கதைக்க எந்த அருகதையுமில்லை என ஈ.பி.ஆர்.எல்.எவ். அமைப்பின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்.

தமிழ்த் தேசியக் கட்சிகள் ஐ.நா.வுக்கு கடிதம் அனுப்புவது நாடகம் என்று சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்த கருத்துத் தொடர்பில் பதிலளிக்கையிலேயே சுரேஷ்  பிரேமசந்திரன் இவ்வாறு குறிப்பிட்டார்.

இது தொடர்பில் மேலும் பேசிய அவர் ,

இங்கு பல்வேறு இயக்கங்களும் தமிழ் மக்களின் விடிவுக்காகப் போராடிய காலத்தில் தனது கல்வி நடவடிக்கைக்காக வெளிநாட்டுக்குச் சென்றவர்தான் அங்கஜன். தமிழ் மக்களின் ஜெனிவா விவகாரம் தொடர்பில் கருத்துத் தெரிவிப்பதற்கு அவருக்கு எந்த அருகதையும் இல்லை.

நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜனின் தந்தையார் வியாபாரி. இவர்களுக்கு தொலைக்காட்சி நிறுவனம், எரிபொருள் நிரப்பு நிலையம் என்று பல்வேறு தொழில் நிறுவனங்கள் இன்று காணப்படுகின்றன. இவர்களுக்கு தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டம் தொடர்பாகவும், ஜெனிவா தொடர்பாகவும் பேசுவதற்கு எந்த அருகதையுமில்லை. அதைப்பற்றி இவர்கள் பேச முற்படுவதே நகைப்புக்கிடமானது.

நாட்டில் போர் முடிவுக்கு வந்த பின்னர் அரசியலுக்குள் வந்தவர்தான் அங்கஜன் இராமநாதன். அவர் அன்றிலிருந்து இன்று வரை ஆட்சியாளர்களுடன், அரசுடன் இணைந்தே செயற்பட்டு வருகின்றார்.கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பல இளைஞர்களை ஏமாற்றித்தான் அவர் வெற்றி பெற்றார். இது எல்லோருக்கும் தெரியும், என்றார்.