September

September

பாடசாலை மாணவர்களுக்கு பைசர் தடுப்பூசியை வழங்க திட்டம் – ஜனாதிபதி கோட்டாபய

மருத்துவ அனுமதி கிடைத்தவுடன் பாடசாலை மாணவர்களுக்கு பைசர் தடுப்பூசியை வழங்குவதற்கான இயலுமையுள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

இன்று நடைபெற்ற கொரோன ஒழிப்பு விசேட குழுவின் கூட்டத்தில் கலந்துகொண்டு ஜனாதிபதி இதனை தெரிவித்ததாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

தடுப்பூசியேற்றும் திட்டத்தின் முன்னேற்றம் மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பாக இதன்போது விரிவாக ஆராயப்பட்டுள்ளது.

20 முதல் 29 வயதிற்கு இடைப்பட்ட பிரிவினருக்கு தடுப்பூசியேற்றும் நடவடிக்கையை அடுத்த 02 வாரங்களுக்குள் முடிவுக்கு கொண்டுவர வேண்டியதன் அவசியம் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.

நியூசிலாந்தில் மக்களை கத்தியால் குத்திய இலங்கையர் – தீவிரவாத அமைப்புக்களுடன் தொடர்புடையவர் என பிரதமர் அறிவிப்பு!

நியூசிலாந்தில் ஐஎஸ் அமைப்பால் உந்தப்பட்டு மக்கள் மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்திய தீவிரவாதி சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார் என அந்நாட்டு தகவல்கள் தெரிவித்துள்ளன. மேலும் குறித்த நபர் இலங்கையர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நியூசிலாந்தில் ஆக்லாந்து அருகே இந்த சம்பவம் நடந்து உள்ளது. அங்கு உள்ள பல்பொருள் அங்காடியினுள் உள்ளே புகுந்த இளைஞர் ஒருவர் கத்திகள் விற்கும் பகுதிக்கு சென்று, அங்கு இருந்து ஒரு புதிய கத்தியை எடுத்து மக்கள் மீது சரமாரி தாக்குதல் நடத்தி உள்ளார்.

இதில் 6 பேர் பலத்த காயம் அடைந்தனர். ஆனால் இந்த கத்தி குத்தில் யாருடைய உயிருக்கும் ஆபத்து ஏற்படவில்லை. இவர் மக்கள் மீது தாக்குதல் நடத்தி சரியாக ஒரு நிமிடத்தில் அங்கிருந்த பாதுகாவலர்கள் துப்பாக்கி சூடு நடத்தி இவரை சுட்டுக்கொன்றனர். போலீசார் துரிதமாக செயல்பட்டு அந்த தீவிரவாதியை கொன்றனர்.

 

இதனால் அங்கு மிகப்பெரிய அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து பேட்டி அளித்த நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்ட்ரென், இந்த சம்பவம் எனக்கு அதிர்ச்சி அளித்தது. தீவிரவாதியை துரிதமாக செயல்பட்டு பாதுகாவலர்கள் சுட்டுக்கொன்றுள்ளனர். அவர்களுக்கு என்னுடைய பாராட்டுக்கள். சுட்டுக்கொல்லப்பட்ட நபர் குறித்து அதிகம் என்னால் பேச முடியாது. அவர் இலங்கையை சேர்ந்தவர். கடந்த 2011ல் நியூசிலாந்தில் குடியேறி இருக்கிறார். அவர் ஐஎஸ் அமைப்பால் உந்தப்பட்டு இந்த தாக்குதலை நடத்தி உள்ளார். காவலர்கள் துரிதமாக செயல்பட்டதால் இதில் மிகப்பெரிய அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதல் எப்படி நடத்தப்பட்டது என்று விசாரிக்கப்படும். கொல்லப்பட்ட நபர் தேடப்பட்டு வந்த தீவிரவாதி என்பது குறிப்பிடத்தக்கது என்று, நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்ட்ரென் தெரிவித்துள்ளார்.

தேர்தல் கண்காணிப்புக்கு உதவுங்கள் – இலங்கையிடம் லிபிய அரசு வேண்டுகோள் !

இலங்கையிலுள்ள லிபிய அரசின் தூதரகத்தின் பொறுப்பாளர் அமர் ஏ.எம். முப்தாவை 2021 செப்டம்பர் 01ஆந் திகதி, வெளிநாட்டு அமைச்சில் வைத்து சந்தித்த வெளிநாட்டு அமைச்சர் ஜீ.எல். பீரிஸ், இரு நாடுகளுக்கிடையிலான இருதரப்பு உறவுகளிலான பரஸ்பர நலன்கள் குறித்து கலந்துரையாடினார்.

அமைச்சர் பீரிஸ் அண்மையில் புதிதாக வெளிநாட்டு அமைச்சராக நியமிக்கப்பட்டமைக்காக, லிபிய வெளிநாட்டு அமைச்சரின் பாராட்டுக்களை லிபியாவின் தூதரகப் பொறுப்பாளர் அமைச்சரிடம் தெரிவித்தார்.

லிபியாவின் தற்போதைய நிலைமை, குறிப்பாக மார்ச் 2021 முதல் பதவியில் இருக்கும் இடைக்கால அரசாங்கத்தின் வகிபாகம் குறித்து லிபியாவின் தூதரகப் பொறுப்பாளர் அமைச்சருக்கு விளக்கினார். 2021 டிசம்பர் 24ஆந் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி மற்றும் பாராளுமன்றத் தேர்தலுக்கான ஆயத்தங்கள் குறித்து அவர் விளக்கமளித்ததுடன், தேர்தல் கண்காணிப்புக் குழுவொன்றை இலங்கை அனுப்பி வைப்பது குறித்து பரிசீலிக்குமாறு கோரிக்கை விடுத்தார். சுதந்திரத்திற்கு 17 ஆண்டுகளுக்கு முன்னர் 1931ஆம் ஆண்டு முதல் இலங்கையர்கள் உலகளாவிய வாக்குரிமையை அனுபவித்து வருவதனை வெளிநாட்டு அமைச்சர் பீரிஸ் நினைவு கூர்ந்தார். ஜனநாயகத்தை மேலும் வலுப்படுத்தும் லிபியாவின் முயற்சிகளுக்கு ஜனநாயக நாடாக இலங்கை ஆதரவளிப்பதாகவும், இந்தக் கோரிக்கையை பரிசீலிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

வர்த்தக உறவுகளை மேம்படுத்துவதனூடாகவும், ஆபிரிக்கப் பிராந்தியத்தில் ஏற்றுமதி சந்தையை விரிவுபடுத்துவதனூடாகவும் அரசாங்கம் பொருளாதார இராஜதந்திரத்தில் கவனம் செலுத்தி வருவதாக வெளிநாட்டு அமைச்சர் எடுத்துரைத்தார். தேயிலை, இரத்தினம் மற்றும் ஆபரணங்கள் மற்றும் சுற்றுலாத் துறைகளில் லிபியாவுடனான இலங்கையின் வர்த்தக உறவுகளை மேம்படுத்துவது தொடர்பான கலந்துரையாடல்களைத் தொடர்வதற்கு இதன்போது ஒப்புக்கொள்ளப்பட்டது.

இலங்கையின் பிராந்திய மற்றும் பல்தரப்பு ஈடுபாடுகள் குறித்து வெளிநாட்டு அமைச்சர் லிபியத் தூதுவருக்கு அறிவித்ததுடன், சர்வதேச அளவில் நெருக்கமான ஒத்துழைப்பைத் தொடர்வதற்கும் ஒப்புக்கொள்ளப்பட்டது.

“ஜனநாயகத்தை புதைத்து சர்வாதிகார ஆட்சியை உருவாக்குவதே அரசாங்கத்தின் நோக்கம்.” – சஜித் பிரேமதாச குற்றச்சாட்டு !

“ஜனநாயகத்தை புதைத்து சர்வாதிகார ஆட்சியை உருவாக்குவதே அரசாங்கத்தின் நோக்கம்.” என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சாட்டியுள்ளார்.

இது குறித்து நேற்று (வியாழக்கிழமை) அறிக்கை வெளியிட்டுள்ள அவர்,

குறித்த அறிக்கையில் , ஜனாதிபதியினால் அவசரகால சட்டம் அமுல்படுத்தப்பட்டமை மூலம் மக்களின் உரிமைகள் ஒடுக்கப்படுவதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்பை கட்டுப்படுத்துவதாக குறிப்பிட்டு அரசாங்கம் அவசரகால சட்டத்தை அமுல்படுத்தியுள்ளமையானது அவர்களின் தவறான செயற்பாடுகள் மற்றும் திறமையின்மையை மூடி மறைக்கும் தன்னிச்சையான செயற்பாடாக கருத வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

குறிப்பாக அவசரகால சட்டத்தை அவசரமான நிலையில் பிரகடனப்படுத்தியுள்ளமை ஒரு ஆபத்தான நிலையை எடுத்து காட்டுவதாக குறிப்பிட்டுள்ள சஜித் பிரேமதாச, இதன் உண்மை நோக்கம் ஒரு சர்வாதிகார ஆட்சியை உருவாக்குவதாகும் என்றும் குற்றம் சாட்டினார்.

எனவே குறித்த அவசரகால சட்ட வர்த்தமானியை ஜனாதிபதி மீளப் பெற வேண்டும் என்றும் நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தை அமுல்படுத்தி சட்டவிரோதமாக பொருட்களை பதுக்கி வைத்திருப்பவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க  வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

தென்னாபிரிக்காவுடனான தொடரை வெற்றியுடன் ஆரம்பித்தது இலங்கை அணி !

சுற்றுலா தென்னாபிரிக்கா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலாக நேற்று நடைபெற்ற  முதலாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 14 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றுள்ளது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

அதன்படி , முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுக்களை இழந்து 300 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

இலங்கை அணி சார்பில் அவிஸ்க பெர்ணான்டோ அதிகபட்சமாக 118 ஓட்டங்களையும், சரித் அசலங்க 72 ஓட்டங்களையும், தனஞ்சய டி சில்வா 44 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.

பந்து வீச்சில் ககிசோ ரபாடா மற்றும் கேசவ் மஹாராஜ் ஆகிய இருவரும் தலா இரு விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.

சதமடித்த அவிஷ்கா பெர்னாண்டோ, 96 ரன் அடித்த மார்கிராம்பதிலுக்கு 301 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்கா அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஒவர்களில் 6 விக்கெட்டுக்களை இழந்து 286 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது. அவ்வணி சார்பில் எய்டன் மார்க்ரம் அதிகபட்சமாக 96 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.

பந்து வீச்சில் அகில தனஞ்சய இரண்டு விக்கெட்டுக்களைப் பெற்றுக் கொண்டார். அதன்படி, மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் இலங்கை அணி முன்னிலை பெற்றுள்ளது.

காந்தியத்தின் தோற்றமும் அதன் செயற்பாடுகளும் புளொட்டின் உருவாக்கமும்!

காந்தியத்தின் தோற்றமும் அதன் செயற்பாடுகளும் புளொட்டின் உருவாக்கமும்

களுதாவளையிலிருந்து பாரிஸ் வரை
ஒர் அரசியல் போராளியின் வாழ்வின் பயணம்!

அசோக் யோகன் கண்ணமுத்துவுடன் ஒர் உரையாடல்!
தோழர் அசோக் யோகன் கண்ணமுத்துவின் சாட்சியம் பகுதி 04 (ஒலிப் பதிவு செய்யப்பட்ட திகதி 06.08.2021). இந்த உரையாடல் அசோக் யோகன் கணணமுத்துவின் பேச்சுமொழியில் எந்த மாற்றமும் இன்றி பிரசுரமாகின்றது.

பாகம் 4

தேசம்: 77 ஆம் ஆண்டு கலவரத்துக்குப் பிறகு ஜே.வி.பியுடனான உறவு முறிந்து ஒரு இடைவெளிக்குப் பிறகு, காந்தியத்திட்ட போறீங்க. காந்தியத்தின் செயற்பாடுகள் அந்த காலத்தில் எப்படி இருந்தது?

அசோக்: 77 ஜே.வி.பியினுடைய தொடர்பு துண்டிக்கப்பட்ட பின்பு, நாங்க சுயமாக வாசகர் வட்டம், தேசிய இளைஞர் சேவை மன்றம், அவர்கள் நடாத்தும் விளையாட்டு முகாம், தலைமைத்துவ பயிற்சி நெறி, சிரமதானம் என்று இதிலையும் ஈடுபடுகின்றோம். இலக்கியங்களுக்கு ஊடாக வெளிக்கிடுறம். அந்த நேரத்துல காந்திய வேலைத்திட்டங்கள் கிழக்கு மாகாணத்தில் தொடங்கிவிட்டது. மாலையர்கட்டு என்ற இடத்தில் காந்திய பண்ணை போடுவதற்கான ஆயத்தங்கள் நடந்து கொண்டு இருக்கு. அந்த நேரத்தில் தொண்டர் இல்லை , காந்திய வேலைத்திட்டங்கள் செய்ய. நிறைய சிறுவர் பாடசாலைககளும் ஆரம்பிக்க ப்பட்டன.

தேசம்: அப்ப நீங்கள் ஈடுபட தொடங்கும்போதே காந்தியம் இயங்கத் தொடங்கிவிட்டது…

அசோக்: ஆம் காந்தியம் இயங்கத் தொடங்கிற்று… வடக்கிலே கிளிநொச்சி, வவுனியா, முல்லைத்தீவு, இவையெல்லாம் தொடங்கிவிட்டது. யாழ்ப்பாணத்தில இயங்கவில்லை. திருகோணமலையில் எல்லாம் ஃபுல்லா இயங்க தொடங்கிற்று.

தேசம்: அதன் பின்னணி என்ன மாதிரி ? யார் யார் காந்தியத்தை உருவாக்கினது?

அசோக்: நான் நினைக்கிறேன் என்னவென்றால், 77 இல் கே சி நித்தியானந்தா தமிழர் புனர்வாழ்வு கழகம் ரி.ஆர்.ஆர்.ஓ என்ற அமைப்பை தொடங்குகிறார்…

தேசம்: கே.சி நித்தியானந்தா தான் தோழர் டக்ளஸ் தேவானந்தாவினுடைய வளர்ப்பு தந்தை என்று சொல்வது. அவர் ஒரு தொழிற்சங்கவாதியாக இருந்தவர்.

அசோக்: ஆம். அன்றைய தொழிற்சங்கவாதிகளாக இலங்கையில் விளங்கிய திசாநாயக்க, கந்தசாமி, வைகுந்தவாசன், ஆசிர்வாதம், எஸ்.டி.பண்டாரநாயக்க, திருமதி தமரா இலங்கரத்ன, பிலிப் குணவர்தன, போன்றவர்களுடன் மிகவும் நெருக்கமாக தொழிற்சங்க வேலைகள் செய்தவர் கே. சி. நித்தியானந்தா. அதே காலகட்டத்தில் தான் டேவிட் ஐயா ஆட்கள் காந்திய அமைப்பை தொடங்குகிறார்கள்.

தேசம் : ரீ.ஆர்.ஆர்.ஓ தொடங்கப்பட்ட அதே காலகட்டத்தில் தான் காந்தியமும் தொடங்கப்படுகிறது…

அசோக் : ஆமா ஏனென்றால், அந்த இனக்கலவரத்துக்குப் பிறகு பாதிக்கப்பட்ட மலையக மக்களை குடியேற்ற வேண்டும், அவர்களுக்கு புனர்வாழ்வு, எதிர்கால நம்பிக்கைகளை கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தோடுதான் தொடங்கப்படுகிறது. காந்தியத்தை தொடங்குவதில் முக்கியமாக இருந்தவர்கள் டேவிட் ஐயா, டாக்டர் ராஜசுந்தரம், சாந்தினி, அடுத்தது கூடுதலா சண்முகலிங்கம் , அதுல கூட ஈடுபாட்டுடன் இருந்தவர்.

சரோஜினிதேவி என்டு கனடாவில இருக்கிறா, அவங்களின்ர தம்பிதான் சண்முகலிங்கம். ஏனென்டா, அவர் மலையகத்தில வேலை செய்தவர். ஜே.வி.பியோட உறவா இருந்தவர். அவருக்கு நிறைய மலையகத் தொடர்பெல்லாம் இருந்தது. அடுத்தது, அவர் காந்தியத்தை உருவாக்கினதில ஒராள் இல்ல. காந்தியத்தோட ஈடுபட்டவர். காந்திய உருவாக்கத்தில வந்து நாலு, ஐந்து பேர் இருக்கிறாங்க. டேவிட் ஐயா, ராஜசுந்தரம், சாந்தினி, ஒரு சிங்களத் தோழரும் அதில இருந்தவர் என்று நினைக்கிறேன்.

தேசம்: இந்த காந்தியம் தொடங்கினாக்களுக்கும், தமிழரசுக் கட்சிக்கும் அல்லது தமிழ்த்தேசிய அரசியலுக்கும் ஏதேனும் தொடர்பு இருக்கா?

அசோக்: டேவிட் ஐயாவுக்கும் தமிழரசுக் கட்சிக்கும் இடையில எந்த உடன்பாடும் இருக்கேல. காந்திய குடியேற்றத் திட்டங்கள் தொடர்பாக தமிழரசுக் கட்சிக்கு உடன்பாடு இல்லை. ஏனென்றால், அவர்கள் நினைத்தார்கள் காந்தியம் காலப்போக்கில், ஒரு அரசியல் கட்சியாக வரும் என்ற ஒரு பயம் அவங்களுக்கு இருந்தது. காந்தியப் பணிகள் தொடங்கி, பாராளுமன்ற கட்சியாக வருமோ என்ற பயம் இருந்தது. அதால காந்திய அமைப்புக்கு மிக எதிராகத்தான் தமிழரசு கட்சி இருந்தது. அடுத்தது, டேவிட் ஐயாவுக்கும் கோட்பாட்டு ரீதியாக, அரசியல்ல தமிழரசுக் கட்சியை பிடிக்கல. தமிழ் தேசியவாதியாக அவர் இருந்தாலும்…

தேசம்: டேவிட் ஐயாவின் பின்னணி பற்றி சொல்லுறீங்களா?

அசோக்: அவுஸ்ரேலியாவின் மெல்பேர்ண் யுனிவசிற்றியில் ஆக்கிடெக்கில் பட்டம் பெற்றவர். லண்டனிலும், நைஜீரியாவிலும் Urban planning study முடித்தவர். பிறகு கென்யாவின் மொம்பாசா urban planning யில முதன்மைக் கட்டடக் கலைஞராகப் பணியாற்றினாங்க. உலகம் முழுதும் பிரபல ஆர்க்கிடெக் ஆக இருந்து வந்தவர். வந்து காந்தியத்தைத் தொடங்குகிறார்.

தேசம் : எந்தப் பகுதியைச் சேர்ந்தவர் அவர்?

அசோக்: நான் நினைக்கிறேன், யாழ்ப்பாணம் தீவுப் பகுதியை சேர்ந்தவர். கரம்பன் என்று நினைக்கிறேன். இளவாலை சென் கென்றிஸில் தான் படித்திருப்பார் என்று நினைக்கிறேன். பல்வேறு பிரபலமான ஆக்கிடெக் கட்டடங்களை எல்லாம் அவர் உருவாக்கியிருக்கிறார் ஐரோப்பிய நாடுகளில். அவருடைய வரலாற்றை படித்தால் தெரியும், அவர் எங்கெங்கு வேலை செய்திருக்கிறார் என்று. பிரபலமான ஆர்க்கிட்டெக்காக இருந்திருக்கிறார். ஆர்க்கிட்டெக் பற்றி அறிய உலகமெல்லாம் சுத்தி இருக்கின்றார். காந்தியம் பண்ணைய தொடங்குவதற்கு முதல் அவர், மாதிரி கிராமம், மாதிரிகூட்டுப் பண்ணை பற்றி நிறைய ஐடியாக்கள், டேவிட் ஐயாவிடம் இருந்திருக்கு. கூட்டு பண்ணையை பற்றி படிப்பதற்காக இஸ்ரேவேலுக்கெல்லாம் போய் இருக்கிறார்.

தேசம்: அப்ப காந்தியத்தின்ட அந்த concptயை, ஐடியாவை அவர்தான் கொண்டு வாரார்?

அசோக்: அவர்தான் கொண்டு வாரார். காந்தியக் சித்தாந்தத்தின் மீது தீவிரமான ஈடுபாடு இருந்திருக்கு. பல நாடுகளுக்கு போய் கூட்டுப்பண்ணை, சுய பொருளாதார கட்டமைப்புக்கள் எப்படி உருவாக்கப்படுது என்றெல்லாம் பார்க்திருக்கிறார். அந்த மாதிரித் திட்டத்தைதான் இங்க கொண்டு வாறார், காந்திய பண்ணைகளை உருவாக்குவதற்கு. பாடசாலைகள், சுகாதார வசதிகள், சத்துணவு திட்டம், சிறுவர்களுக்கான பால், மா விநியோகம், பெண்களுக்கான வேலை வாய்ப்புகள், நடமாடும் மருத்துவமனைகள், பெண்களுக்கான பயிற்சி நிலையங்கள், ஆசிரியர்கள் பயிற்சி திட்டங்கள் என்று பல்வேறு திட்டங்களை கொண்டு வாறார்.

தேசம்: டேவிட் ஐயா பற்றி சொன்னீர்கள். கே.சி நித்தியானந்தா காரைநகர் …
அசோக்: ஆனா, கொழும்பில்தான் கே.சி நித்தியானந்தா இருந்தவர். அவருடைய இருப்பிடம் அங்கதான். தொழிற்சங்கவாதியாக அங்க இருந்தவர். அங்கதான் டக்ளஸ் தோழர் இருந்து வளர்ந்தவர் என்று நினைக்கிறேன். லங்கா சமசமாஜக் கட்சியிர அரசாங்க எழுதுவினைஞர் சேவை நலச் சங்கத்தை ஆரம்பித்து வைத்தவர்களில் முக்கியமானவர் இவர்.

தேசம்: டாக்டர் ராஜசுந்தரம் அவரைப் பற்றி…

அசோக்: அவர் டாக்டர். வவுனியாவில் கிளினிக் வைத்திருந்தவர். அவர் வைஃப் சாந்தினி அவங்களும் டாக்டர். “சாந்தினி கிளினிக்” என்று வவுனியாவில் பிரபலமாக இருந்தது. ராஜசுந்தரம் மலையகத்தில் வைத்தியராக இருந்தவர். அந்த இணைப்பு தான் அவரை காந்தியத்துடன் இணைக்குது. அவருக்கும் நிறைய ஈடுபாடு இருந்தது. மலையக மக்கள் மீதான ஒரு கரிசனையும் இருந்தபடியால்… பொருளாதார பெரும்பங்கு டேவிட் ஐயாவின் சொந்தக் காசுதான் . மற்றப்படி பல்வேறு அமைப்புகள் தனிநபர்களுக்கு ஊடாகவும் பணம் பெறப்பட்டது என நினைக்கிறன்.

தேசம்: வேறு யார் குறிப்பாக ஈடுபட்டிருக்கிறார்கள் ?

அசோக்: காந்தியத்தில் நிறைய பெயர் ஈடுபட்டிருக்கின்றார்கள் சரோஜினி அடுத்தது…

தேசம்: அவருக்கு ஏதாவது அரசியல் பின்னணி இருக்கா… ?

அசோக்: சரோஜினி பிறகு புளொட்டில சென்றக் கமிட்டில இருந்தவ. காந்தியத்த்துக் ஊடாகத்தான் நிறையபேர் புளொட்டுக்கு வாறாங்கள். அந்த காலகட்டத்தில் காந்தியத்தில் வேலை செய்தாக்கள் வந்து… தோழர் சந்ததியார் வேலை செய்தவர்.

தேசம்: நீங்கள் போகும்போது சந்ததியார் காந்தியத்தில் இருந்தவரா?

அசோக்: சந்ததியார் காந்தியத்தில் இருந்தவர். நான் நினைக்கிறேன் ஜென்னி காந்தியத்தில் இருந்தவ. ஜெயச்சந்திரன் பார்த்தன் காந்தியத்தில் இருந்தவர். வாசுதேவா… அடுத்தது, ஜென்னிட அம்மா பிலோமினா லோரன்ஸ் அவா தான் திருகோணமலைக்கு மாவட்ட காந்திய பொறுப்பாளராக இருந்தவா.

தேசம்: ஆனா அவாவும் தமிழ்தேசிய தமிழரசுக் கட்சிதானே…

அசோக் : தமிழரசுக் கட்சியின் பிரதம பேச்சாளர். மங்கையர்கரசி மாதிரி ஒரு பேச்சாளர். நன்றாக பேசக்கூடியவர்.

தேசம்: தமிழரசுக் கட்சிக்கு பெரிய உடன்பாடு இல்லாவிட்டாலும் அதுல உறுப்பினர்கள் சிலர் இருந்திருக்கினம்.

அசோக்: தமிழரசுக் கட்சி நிறைய பேர் காந்தியத்தில் இருந்திருக்கிறாங்கள். தலைமைக்கு அதோட உடன்பாடு இருக்கேலயேயொழிய, அதைக்கூட வெளிப்படையாக காட்டவில்லை. அது உள்ளுக்குள்ள ஒரு பனிப்போர் இருந்ததேயொழிய, வெளிப்படையாக காட்டேல. வெளிப்படையாத் தெரிஞ்சாதான் இவங்களுக்கு தெரிஞ்சிருக்கும். அது உள்ளுக்குள்ளேயே இருந்ததுதான்.

அப்ப வாசுதேவா எங்களை சந்திக்கிறார். சந்தித்து காந்தியத்துக்கூடாக இப்படி அபிவிருத்தி வேலைகள், மக்கள் நலப்பணிகள் செய்யலாம் என்று சொல்ல, எங்களுக்கு உடன்பாடு வருது. ஏனென்றால், எங்களுக்கு சமூக போராட்டம், சமூக அக்கறை இருக்கிறபடியால், நாங்கள் இதுல வேலை செய்யலாம் என்று சொல்லி…

தம்பலவத்தை என்ற ஒரு கிராமம் இருக்கு, மண்டூருக்கு அங்கால. அது வந்து எல்லைப்புற கிராமம். அந்த கிராமத்திற்கு பக்கத்தில் மாலையர்கட்டில்ல வந்து ஒரு காந்திய குடியேற்றத் திட்டம் செய்ய வேண்டும் என்று சொல்லி வாசுதேவா கூப்பிடுகின்றார். அப்ப நாங்கள், அங்க போய் காடுகளை அழித்து வீடுகள் அமைத்து இந்த குடியேற்றத் திட்டத்தில நாங்கள் உதவி செய்கிறோம்.

தேசம்: அது எல்லைப்புற கிராமமா?

அசோக்: எல்லைப்புற கிராமம். அதுல முக்கியமா பேரின்பம் என்ற ஒரு தோழர் வேலை செய்தவர். அவர் எங்கே என்றே தெரியல. அவர் முக்கியமா அதுல ஈடுபட்டவர். காந்தியப் பண்ணைக்கு பொறுப்பாக இருந்தது சண்முகம் என்று ஒரு தோழர், அவர் இப்பவும் இருக்கிறார். மிக முக்கியமாக இருந்தவர்.

தேசம்: போராட்டங்களோடு சம்பந்தப்பட்ட பலர் இந்தக் காந்தியதுத்துடன் தொடர்பில இருக்க வாய்ப்பு இருந்ததா?

அசோக்: ஓம். மண்டுர் மகேந்திரன் என்று கேள்விப்பட்டிருக்கிறீர்களா? அவரெல்லாம் தொடர்பு இருந்தது.

தேசம் : யாழ் மாவட்டத்தில் இருந்து வந்த இளைஞர்கள் பலர் அதுல இருந்திருக்கினமா?

அசோக்: மட்டக்களப்பு காந்தியத்திலாவா…

தேசம் : இல்ல பொதுவா காந்தியத்தில…

அசோக்: யாழ்ப்பணத்தில காந்தியம் இருக்கேலத்தானே.

தேசம்: இல்ல அங்கே இருந்து வந்தவர்கள் காந்தியத்தில் ஈடுபட்டார்களா… ?

அசோக்: தோழர் சந்ததியார் இருந்தவர். காலப்போக்கில் வவுனியா வேலைத்திட்டங்களில் யாழ்ப்பாணத் தோழர்கள் என்று சொல்லி… தோழர் பொன்னுத்துரையை, குமரனை, தோழர் ஜூலியை தெரியும். குமரன் புளொட்டுக்கூடாக வந்ததேயொழிய, காந்திய வேலைத்திட்டங்களில் யாழ்ப்பாணத் தோழர்கள் குறைவு.
சில வேளைகளில் ஏனைய குடியேற்றத்திட்டங்களில் வேலை செய்திருப்பாங்க. 81ம் ஆண்டு என நினைக்கிறன், யாழ்ப்பாணத்தில ஒரு கிராமத்தில சில சிரமதான வேலைகள், குடிசைகள் அமைச்சி கொடுத்தம். கிராமத்தின் பெயர் ஞாபகம் இல்லை. அப்ப நாங்கதான் வவுனியாவில இருந்தும் மட்டக்களப்பில இருந்தும் போய் இருந்தம். யாழ்ப்பாணத்தில இருந்து குமரன் தோழரும் இன்னொரு தோழரும் வந்திருந்தாங்க.

தேசம்: நீங்கள் சொல்வதைப் பார்த்தால், காந்தியத்தில் இருந்தவைக்கு கூடுதலா பிற்காலத்தில் புளொட்டுடன் தான் தொடர்பு கூட வந்திருக்கா அல்லது வேறு அமைப்புகளுடனும் தொடர்பு வந்திருக்கா?

அசோக்: காந்திய பண்ணைகளை உருவாக்குவதற்கு தொண்டர்கள் தேவைப்பட்டது. அந்த நேரத்தில் புளொட் உருவாகிவிட்டது. அப்ப சந்ததியார் காந்தியத்தில் இருந்தபடியால், சந்ததியார் என்ன செய்தார் என்றால் புளொட் இளைஞர்களை காந்தியத்துக்குள் இணைத்தார். அப்ப யார் யாரெல்லாம் புளொட்டில் இருந்தார்களோ அவர்கள் எல்லாம் காந்தியத்தில் வேலை செய்தார்கள். அதனாலதான் புளொட்டுக்கும் காந்தியத்துக்கும் உறவு வந்திச்சுது. காந்தியத்தில் இருந்த தோழர்கள் வேறு அமைப்புக்களுக்கு போனமாதிரி நான் அறியல்ல.

தேசம்: தொண்டர்கள் புளொட் அமைப்பை சேர்ந்தவர்கள் என்று டேவிட் ஐயாவுக்கு தெரியுமா?

அசோக்: இந்த தொண்டர்கள் புளொட் அமைப்பை சேர்ந்தவர்கள் என்று டேவிட் ஐயாக்கு ஓரளவு தெரியும் . புளொட் ஆயுத அமைப்பு என்று டேவிட் ஐயாவுக்கு தெரிந்திருந்தால் நான் நினைக்கவில்லை, அவர் விரும்பி இருப்பார் என்று. ஒரு ஆயுத இயக்கத்தோடு காந்தியத்தை இணைப்பதற்கு அவர் விரும்பி இருக்க மாட்டார். அவர் நினைத்திருப்பார் புளோட் ஒரு வெகுஜன அரசியல் இயக்கம் தான் என்று.

ஆனால் டாக்டர் ராஜசுந்தரத்துக்கு தெரிந்திருக்கும். ஏனென்றால், சந்ததியாரும் டாக்டர் ராஜசுந்தரமும் நல்ல நெருக்கம். சந்ததியார் அண்டர்கிரவுண்ட் இயக்கத்தில் இருக்கிறார் என்று கட்டாயம் டாக்டர் ராஜசுந்தரத்துக்கு தெரிந்திருக்கும். டேவிட் ஐயாவுக்கு அதெல்லாம் தெரிந்திருக்க சான்ஸ் இருந்திருக்காது. டேவிட் ஐயா நினைத்திருப்பார், சந்ததியார் சமூக அக்கறையோடு, காந்திய அமைப்பில ஆர்வத்தோட சமூக சேவைக்கு வாரார் என்று.

இப்படித்தான் வாசுதேவாவும் காந்தியத்தில் இணைந்தவர். சந்ததியார் கூட பெருசா வெளியில தெரியல. வாசுதேவா வெளிப்படையாகவே புளொட்டினுடைய அமைப்புச் செயலாளராக இருந்தவர். அதோட காந்தியத்தினுடைய கிழக்குமாகாண இணைப்பாளர். அப்ப புளோட் அண்டர்கிரவுண்ட் இயக்கம் இல்லை. அண்டர்கிரவுண்ட் ஆனது எப்ப என்று கேட்டால், சுந்தரத்தின் படுகொலைக்குப் பிறகு. அப்போ புளொட் ஒரு வெகுஜன அரசியல் இயக்கம்தான்.

தேசம்: காந்தீயம் ஒரு சமூக பொருளாதார மேம்பாட்டு அமைப்பு. புளொட் ஆயுத விடுதலை அமைப்பு. காந்தியத்தோடு தொடர்வு வைத்தால் அது காந்திய அமைப்பின் வளர்ச்சிக்கு ஆபத்து என்று சந்ததியாருக்கு தெரியவில்லையா ? இதை எப்படி பார்க்கின்றீங்க…

அசோக்: உண்மையில இப்ப யோசிக்கும் போது, நிறைய தவறுகள் விட்டிருக்கிறம். மக்கள் நல அபிவிருத்தி சமூக மேம்பாட்டு அமைப்பு ஒன்று, சுதந்திரமாக இயங்குவதுதான் சரி என்ற அரசியல் புரிதல் அன்று எங்களுக்கு இல்லாம போயிற்று. சமூக மேம்பாட்டு வெகுஜன அமைப்புக்களுக்கும், இராணுவ கட்டமைப்பு கொண்ட விடுதலை இயக்கத்திற்குமான உறவு நிலை, தொடர்வு பற்றிய அரசியல் தெளிவு எங்கட்ட இருந்திருந்தால் காந்திய அமைப்பை காப்பாற்றி இருக்க முடியும். இப்ப யோசிக்கும்போது எங்க தவறு தெரிகிறது.

தேசம்: புளொட் வெகுஜன அமைப்பாக அது பதிவு செய்யப்பட் டதா?

அசோக்: இல்லை. புளொட் ரெஜிஸ்ட்டர் பண்ணுப்படல. புளொட் வந்து ஒரு அரசியல் வெகுஜன இயக்கமாக வெளியில இயங்குகிறது. உண்ணாவிரதம், பகிஷ்கரிப்பு, துண்டு பிரசுரம் அடித்தல், புதிய பாதை பத்திரிகை, கருத்தரங்குகள் போன்ற சட்டத்திற்கு உட்பட்ட வெகுஜன அரசியல் வேலைத் திட்டங்களில ஈடுபடுகிறது.

ஆயுத இயக்கம் என்றால் தானே தடை செய்யப்படும். அது ஏதாவது குற்றங்களில் ஈடுபட்டு… புளொட் வெளிப்படையாக குற்றங்களிலில ஈடுபடவில்லை. ஆனைக்கோட்டை பொலிஸ் நிலைய தாக்குதலில் கூட, புளொட் என்று வெளிப்படையாகத் தெரியாது. எப்ப அடையாளப்படுத்தப்படுகிறது என்றால், சுந்தரம் படுகொலைக்குப் பிறகுதான் அடையாளப்படுத்தப்படுகிறது. சுந்தரம் புளொட் என்று தெரிய வருகிறது.

தேசம்: காந்தியத்தில் உங்களுடைய செயற்பாடுகள் எப்படி அமைந்தன?

அசோக்: காந்தியத்தில் எங்கள் செயற்பாடுகள் என்னென்று கேட்டால்… படித்துக் கொண்டிருந்த காலகட்டத்தில்…

தேசம்: அப்ப நீங்கள் ஏ எல் படிக்கிறீர்கள் என்று நினைக்கிறேன்…

அசோக்: ஓ.எல் எடுத்துட்டன். ஏ.எல் எடுக்கல நான் குழப்பிட்டன். அந்தக் காலகட்டத்தில் சனி – ஞாயிறுகளில், ஒரு விடுமுறை காலத்தில்தான் காந்திய வேலைத்திட்டங்களில் ஈடுபடுவது. முக்கியமாக ஈஸ்வரன் தோழர்… காந்தியத்தில் மிக முக்கியமானவர். அவர் புளொட்டில மத்தியகுழுவில் இருந்தவர். எனக்கு முதன் முதல் புளொட் தோழர் என்று அறிமுகமானவர் ஈஸ்வரன் தோழர்தான். ஈஸ்வரன் முதலில் வந்து காந்தியத்தின் ஆளாகத்தான் எனக்கு அறிமுகமானவர். அப்ப அவருக்கு வேறு பெயர்.

மாலையர்கட்டு பண்ணை வேலை முடிந்த பிறகு, செட்டிகுளம் கல்லாறு பண்ணையை ஈஸ்வரனே பொறுப்பு எடுக்கிறார். அவர்தான் முன்நின்று அதனை தொடங்குகின்றார். அவரும் நானும் தான் முதல் முதல் அந்தக் செட்டிக்குளம் கல்லாறு பண்ணைக்கு போறோம். பயங்கர முசுரு காடு. ஈஸ்வரன் மிகப்பெரிய உழைப்பாளி, மிக எளிமையானவர். நான் சொகுசாய் இருந்த ஆள்தானே… அப்ப நம்மட வேலைகள் தெரியும்தானே. அவர் மிக நேர்மையான உழைப்பாளி. அவருக்கு ஊடாகத்தான் நான், உடல் உழைப்பு என்றால் என்ன என்பதை தெரிந்து கொண்டேன்.

ஒடுக்கட்ட வறிய மக்களோடு அவர்களாக மாறி அவர்களுக்காக சேவை செய்வதென்பதை ஈஸ்வரன் தோழரிடம் நாம் கற்கவேண்டும். அவ்வளவு எளிமையானவர். மிகப்பெரிய காந்திய வேலைத்திட்டம் அது என்று நினைக்கிறன். நிறைய செட்டிக்குள தோழர்கள் உதவி செய்தார்கள். தர்மலிங்கம் என்றொரு தோழர். இதில முக்கியமானவர். இப்ப அழிந்து போய் இருக்கும் என நினைக்கிறேன். மலையக மக்கள் இருக்கிறார்களோ தெரியவில்லை.

தேசம்: செட்டிகுளத்திலயா…

அசோக்: செட்டிக்குளத்திற்கு பக்கத்தில் கல்லாறு பண்ணையில்…

தேசம்: காந்திய இயக்கத்தில் அதில் உங்களுக்கு அரசியல் ரீதியான அறிவூட்டல்களும் நடந்ததா?

அசோக்: இல்லை இல்லை. காந்திய பண்ணையில் சேவை மனப்பான்மைதான். காந்தியத்தில் இருக்கும்போதுதான் வாசுதேவா ஊடாக அரசியல் உறவுகள் வருது எனக்கு. உண்மையிலேயே வாசுதேவா காந்தியத்துக்குள் எங்களை ஈடுபடுத்தியது புளொட்டுக்குள்ள கொண்டு போகத்தான். நேரடியாக நாங்கள் புளொட்டுக்குள்ள போக விரும்பமாட்டோம் என்பதற்காக…

தேசம்: அதுக்குள்ள ஒரு ஹிடின் அஜெண்டா இருந்திருக்கு…

அசோக் : அஜெண்டா இருந்திருக்கு. அதுக்கு பிறகு அவர் புளொட் பற்றிக் கதைக்க வெளிக்கிடுறார். அப்ப சில அறிமுகங்கள் வருது. நான் முன்ன சொன்ன மாதிரி ஈஸ்வரன் தோழரை முதலில் புளொட் என்று எங்களுக்கு அறிமுகப்படுத்துகிறார். பிறகு தோழர் டொமினிக், கேசவன், ஜெயச்சந்திரன் – பார்த்தன், ரகுமான் ஜான், குமரன் பொன்னுத்துரை, முரளி எனப்பலரும் அறிமுகம் ஆகிறார்கள்.

தேசம்: தோழர் கேசவன் பிற்காலத்தில் தீப்பொறி…

அசோக்: ஆம் . புதிய தோர் உலகம் நாவல் எழுதியவர். புலிகளால கொலை செய்யப்பட்டவர்.

தேசம்: இதெல்லாம் காந்தியத்தில் நீங்கள் இருந்த காலகட்டத்தில்…

அசோக்: ஆம். காந்தியத்தில் இருந்த காலகட்டத்தில் புளொட்டுக்குள்ள போவதற்கான முதல் ஆரம்பம். அந்த அறிமுகங்கள் நடக்குது. அப்ப இவங்கள் புளொட்டுக்கு வேலை செய்கிறார்கள்.

தேசம்: காந்தியத்திலும் இருக்கினம், புளொட்டிலும் இருக்கினம்.

அசோக்: ஆம். அப்ப எங்கட அரசியல் தெரியும்தானே… எங்களுக்கு தமிழீழம் தனிநாடு கோரிக்கை இதிலெல்லாம் ஈடுபாடில்லை என்று தெரியும் தானே. அப்ப இவங்கள் எங்களுக்கு முன்னுக்கு வைக்கிற கோஷம் என்னவென்றால் வர்க்கப் போராட்டம். தேசிய முரண்பாடுகள், இனப்பிரச்சனைகள், தமிழ் மக்களுக்கு உரிமை அற்ற தன்மை, பல்வேறு சிக்கல்கள் இருப்பதால் தமிழர்களின் தேசிய இனப்பிரச்சனைக்கான முதல் தீர்வும், அதன் பின் வர்க்கப்போராட்டமும். அதாவது, தேசிய விடுதலைப் போரட்டத்தின் ஊடாக வர்க்கப்போராட்டம். கிடைக்கின்ற சோசலிச தமிழ் ஈழத்தினுடாக, எதிர்காலத்தில் சிங்கள உழைக்கும் தொழிலாள விவசாய வர்க்கத்தின் – பாட்டாளி வர்க்கத்தின் இணைப்போடு, தென்னிலங்கை மக்களின் வர்க்கப்போராட்டத்திற்கு ஆதரவளித்தல்.

தமிழீழம்தான். ஆனா அது ஒரு தேசிய விடுதலைப் போராட்டத்திற்கு ஊடாக வர்க்கப் போராட்டம். தேசிய விடுதலைப் போராட்டத்திற்கு ஊடாக வர்க்கப் போராட்டத்தை நோக்கிய பயணம்தான். அதற்கான முதல் படிதான் இந்த தேசிய விடுதலைப் போராட்டம். அப்ப எங்களுக்கு தேசிய ஒடுக்குமுறை இருக்குத்தானே.
தேசிய விடுதலைக்கூடாக ஒரு வர்க்கப் போராட்டத்தை கொண்டு போறது என்ற சித்தாந்தம் எங்களுக்கு பிடித்துக்கொண்டது. அப்ப கேட்க உண்மையாத்தான் எங்களுக்கு இருந்தது.

இப்ப பரிசீலிக்கும் போது, எனக்குள் பல்வேறு விமர்சனங்கள் உள்ளது. அப்ப மிக திருப்தியாக இருந்தது. அப்ப நாங்க நினைச்சம் அதுல போய் சேர்ந்து வேலை செய்யலாம் என்று.

பிறகு வவுனியாவுக்கு வாறம். தோழர் சந்ததியார் எல்லாரையும் சந்திக்கிறோம். அந்த நேரத்தில் மட்டக்களப்பில் அமைப்பாளராக சின்னாச்சி என்ற ஒரு தோழர் வேலை செய்தவர். அம்பாறை மாவட்டத்தில் கருணாநிதி என்ற தோழர் வேலை செய்தவர். அவர்கள் பெருசாக இல்லை. பிற்காலத்தில் இரண்டு பேரும் புலிகளுக்கு பொயிற்றாங்க.

அப்ப மட்டக்களப்பு மாவட்ட பொறுப்பாளராக என்னையும், அம்பாறைக்கு ஜீவா என்கிற அகஸ்டின் செபமாலையையும் நியமிக்கிறாங்க. இப்ப அவர் ஜேர்மனியில் இருக்கின்றார். எனக்கு உதவியாக வரதன் என்கிற ராகவன் தோழர் நியமிக்கப்படுகின்றார். அவர் இப்ப நாட்டிலதான் இருக்கிறார்.

தேசம்: மாலையர்கட்டு முடிய நீங்கள் செட்டிகுளம் போறீங்க. எவ்வளவு காலம் காந்தியத்துடன் உங்களுடைய செயற்பாடு இருந்தது?

அசோக்: காந்தியத்தில ஒரு வருஷத்துக்குள்ள தான் இருந்தது.

தேசம்: ஒரு வருஷம் என்றால் 79 ஆம் ஆண்டு மட்டில…

அசோக்: அப்படித்தான். 80 க்கு பிறகுதான் நான் புளொட்டின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் ஆகினது. 80 நடுப்பகுதியில் புளொட்டில் சேர்ந்திருப்பேன். ஏனென்றால் புளொட்டின் உருவாக்கம் நடந்தது 79 ஆம் ஆண்டு நவம்பர் மாதமளவில் தான். தமிழீழ மக்கள் விடுதலை இயக்கம் என்ற பெயருடன், அப்போதுதான் உருவாகினது.

தேசம்: இந்தக் காலகட்டத்தில் கூடுதலாக மலையகத் தமிழர்களுடன் வேலை செய்வதற்கான வாய்ப்பு இருந்ததா உங்களுக்கு?

அசோக்: நிறைய இருந்தது. மாலையர்கட்டில, செட்டிகுளத்தில எல்லாம் மலையக மக்கள் தானே…

தேசம்: மலையக தமிழர்களுக்கும், தமிழ் சமூகத்திற்குமான உறவுகள் எப்படி பார்க்கப்பட்டது அந்த காலத்தில்?

அசோக்: எல்லைக் கிராமங்கள் தானே. எல்லைக் கிராமங்கள் என்று சொன்னால் கொஞ்சம் தள்ளித்தான் தமிழ்க் கிராமங்கள் இருக்கும். மலையக தமிழ் மக்களுக்கும் அந்தப்பகுதி தமிழ் மக்களுக்கும் உடனே பெரிய தொடர்புகள் இருக்கேல. காலப்போக்கில் உறவு ஒத்துழைப்பு என்று இருந்தது. ஐந்து ஆறு மைல் தள்ளித்தான் சிங்களக் கிராமங்கள் இருக்கும். பல்வேறு விமர்சனங்கள் அந்த காலத்துல வந்தது. எல்லை கிராமங்கள்ல மலையக மக்களை நாங்கள் பலிகடா ஆக்குறம் என்று.

தேசம்: அந்த நேரமே இந்த விமர்சனங்கள் இருந்ததா?

அசோக்: சில இடங்களில் இருந்து வந்தது. விமர்சனங்கள் எப்பவும் இருக்கும் தானே. அதை நாங்கள் உதாசீனப்படுத்திட்டம். ஏனென்றால் அது தமிழ்அரசுக் கட்சியை சேர்ந்த சில பேரால் வைக்கப்பட்டது. அந்தக் காணிகள் தமிழ்ப் பிரதேசத்துக்குரிய காணிகள்தான். எல்லை பிரதேசமாக இருந்தாலும், சிங்கள கிராமங்கள் பக்கத்தில் இல்லை. தமிழ் எல்லை பிரதேசங்களில் ஏனைய தமிழ் கிராமங்களும் இருந்தது. பல்வேறு கிராமங்களுக்கு இடையில்தான் இந்த குடியேற்றங்கள் உருவானது. நெருக்கமான கிராமங்களாக இருக்கவில்லை. ஒரு மைல் அப்படி இடைவெளிகள் இருக்கும். கல்லாறுப் பண்ணையில் வந்து பக்கத்தில் பல்வேறு கிராமங்கள் இருக்கு. கிளிநொச்சி, முல்லைத்தீவு மட்டக்களப்பில் அப்படித்தான் தமிழ்க் கிராமங்களை அண்மித்துத்தான் குடியேற்றங்கள் செய்யப்பட்டது.

தேசம்: மலையக மக்களுக்கும், தமிழ்மக்களுக்கும் இரு சமூகங்களுக்கும் இடையிலான உறவு, குடியேற்றம் செய்யப்பட்ட இடங்களில் எப்படி இருந்திருக்கும் அந்த நேரம். வரவேற்கிற தன்மை இருந்ததா?

அசோக் : முரண்பாடு இருக்கேல. அந்த பிரதேச மக்கள் நிறைய ஹெல்ப் பண்ணி இருக்கிறார்கள். நாங்கள் அந்த வேலைத் திட்டம் செய்யேக்குள்ள பக்கத்து கிராமப்புற மக்கள் எல்லாம் வந்து ஹெல்ப் பண்ணுவாங்க. செட்டிகுளம் கல்லாறு பண்ணைக்குள்ள நிறைய செட்டிகுளம் பையன்கள் எல்லாம் வந்து ஹெல்ப் பண்ணி இருக்கிறார்கள். முரண்பாடு இருக்கேல, ஆரம்பத்தில் நெருக்கம் இருக்கல்ல. சமூக உறவுகள் காலப்போக்கில்தானே உருவாகும். ஆனா நாங்க கிராமக் குழுக்களை அமைத்திருந்தோம். இக்குழுவில மலையக இளைஞர்களும், அந்தப் பிரதேச இளைஞர்களும் அங்கம் வகிச்சாங்க. அது காலப்போக்கில் தானே ஏற்படும்.

தேசம்: வடமாகாணத்தில் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் இந்த மலையக மக்களுக்கு எதிரான, வேற பெயர் சொல்லிக் கூப்பிடுற தன்மைகள் இருந்தது. வடக்கத்தையான், தோட்டக்காட்டான், கள்ளத்தோணி இப்படியான விஷயங்கள் எல்லாம் இருந்தன. இப்படியான எதிர்மறையான கருத்து நிலைகள் மற்ற பகுதிகளில் இருந்ததா?

அசோக்: நிச்சயமாக இல்லை. இருந்திருந்தால் குடியேற்றங்கள் செய்திருக்கேலாது. யாழ்ப்பாண சமூகத்தின் ஒருசாரர்களின் மலையக மக்கள் மீதான வெறுப்புணர்வுக்கு இவ்வாறான கண்ணோட்டத்திற்கு பல்வேறு அரசியல் பொருளாதார பின்புல காரணிகள் இருக்கு. அங்கு கிழக்கு மாகாணத்தில அந்த காரணிகள் இல்லை. ஏன் இங்க வருது என்று கேட்டால், பொருளாதார ரீதியாக ஆசிரியர் வேலைவாய்ப்புக்கள் ஏனைய தொழில் என்று அங்க போய்… எப்ப முரண்பாடு வரும் என்று கேட்டால், அந்த பிரதேசத்துக்கும் எங்களுக்கும் சமூக பொருளாதார அரசியல் உறவெண்டு வரும்போதுதான். அந்த உறவை சமத்துவமாக சமநிலையாக நேச உறவாக நாங்க பேணமுடியாம, அதிகார சாதிய வர்க்க பிரதேச கண்ணோட்டத்தோடு அணுக வெளிக்கிடக்குள்ள முரண்பாடுகள் வரும் . இந்த அதிகாரத்தனம், ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்ட, புறக்கணிப்புக்கு உள்ளாப்பட்ட மக்களிடமிருந்து எங்களை அந்நியப்படுத்திவிடும்.

அங்க கிழக்கு மாகாண மக்களுக்கும், மலையக மக்களுக்கும், யாழ்ப்பாண சமூகத்தைப்போன்று, மலையகத்தில் பெரிய உறவுகளும் தொடர்புகளும் நெருக்கங்களும் இருந்ததில்லை. அப்ப முரண்பாடுகள் சிக்கல்கள் உருவாக சாத்தியம் இல்ல. அப்ப அந்த முரண்பாட்டுக்கான தளம் இல்லாமல் போய்விடுகின்றது. மலையக மக்களை குடியேற்றும் போது அந்த பிரதேச மக்கள் சொந்த மக்களாகதான் பார்த்தாங்க… உடனடியாக ஒரு சமூக உறவு வராதேயொழிய, முரண்பாடுகள் வராதுதானே.

கிளிநொச்சியிலயோ முல்லைத்தீவிலயோ மட்டக்களப்பிலயோ குடியேற்றம் செய்த இடங்களில் முரண்பாடு இல்லை.

தேசம்: வட மாகாணத்துக்கு உள்ள நடந்த குடியேற்றங்களில் பெரிய சிக்கல்கள் இருக்கவில்லை…

அசோக்: யாழ்ப்பாணத்தில் குடியேற்றங்கள் நடக்கேல தானே.

தேசம்: எல்லைக் கிராமங்களில் நடந்த குடியேற்றத்திட்டங்கள் தொடர்பான அந்த விமர்சனத்தில் ஒரு உண்மையான நிலையும் இருக்கும் தானே. ஏற்கனவே சிங்கள சமூகத்தால பாதிக்கப்பட்ட ஒரு சமூகத்தை, நாங்கள் எல்லை கிராமத்தில் கொண்டு வந்து குடியேற்றும் போது திருப்பியும் அவர்கள் பாதிப்புக்குள்ளாவார்கள் என்ற குற்றச்சாட்டு நியாயமானதுதானே…

அசோக்: எங்கட உரையாடல் பிரயோகத்தில் எல்லைக் கிராமம் என்ற வார்த்தையை பயன்படுத்துறதால அந்தக் கேள்வி உங்களுக்கு வந்தது என நினைக்கிறன். கிராமங்களிடையேதான் முன்ன நான் சொன்ன மாதிரி நாங்க குடியேற்றம் செய்தனாங்க. என்டாலும் இதுபற்றி ஆராயவேண்டும்.

எல்லைக் கிராமங்களில் தான் திட்டமிட்டு நடந்தது என்று இல்லை. எதிர் விமர்சனங்கள் எப்படி வைக்கப்பட்டது என்றால், நாங்கள் ஒரு பாதுகாப்பு அரணாக மலையக மக்களை பயன்படுத்துகிறோம் என்று. தவிர்க்க முடியாம சில எல்லைக் கிராமங்களில் குடியேற்ற வேண்டிவந்தது. ஏனென்றால் அங்குதான் காணிகள் இருந்தது. எல்லை கிராமங்களில் அது அமைந்தவுடன் இந்த விமர்சனம் முன்வைத்தவர்களுக்கு அது சாதகமாக அமைந்துவிட்டது. தமிழரசுக் கட்சிக்கும் இது…

தேசம்: தமிழரசுக் கட்சி அந்த விமர்சனம் வைத்ததா?

அசோக்: ஆம் சில பேர்களுக்கு இருந்தது.

 

 

இங்கிலாந்தின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாது திணரும் இந்தியா – ஆறுதலளித்த ஷர்துல் தாகூர் !

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதல், மூன்று போட்டிகள் முடிந்துள்ள நிலையில், இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்று 1-1 என சமநிலையில் உள்ளன. ஒரு டெஸ்ட் டிராவில் முடிந்தது. 4-வது டெஸ்ட் லண்டன் ஓவல் மைதானத்தில் இன்று தொடங்கி நடைபெறுகிறது.
நாணயச்சுழற்சியில் வென்ற இங்கிலாந்து அணி தலைவர் ஜோ ரூட் பந்து வீச்சை தேர்வு செய்தார். முதலில் துடுப்பெடுத்தாடிய  இந்திய அணியின் முதல்நிலை துடுப்பாட்டவீரர்கள் யாரும் சோபிக்கவில்லை. ரோகித் சர்மா 11 ஓட்டங்கள், கே.எல்.ராகுல் 17 ஓட்டங்கள், புஜாரா 4 ஓட்டங்கள் என ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர். அதன்பின்னர் தலைவர் கோலி-ரவீந்திர ஜடேஜா இருவரும் நிதானமாக விளையாடினர்.
ஜடேஜா 10 ரன்களில் ஆட்டமிழக்க, தலைவர் கோலி அரை சதம் அடித்த நிலையில், ராபின்சன் ஓவரில் அவரும் ஆட்டம் இழந்தார். அதன்பின்னர் வந்த வீரர்களும் அணியின் ஓட்டத்தை  உயர்த்தமுடியாமல் தடுமாறினர். ரகானே 14 ஓட்டங்களிலும், ரிஷப் பண்ட் 9 ஓட்டங்களிலும்  ஆட்டமிழந்தனர்.
இந்த நெருக்கடியான  நேரத்திலும் நேர்த்தியாகவும் அதிரடியாகவும் ஆடிய ஷர்துல் தாகூர், 31 பந்துகளில் அரை சதம் அடித்து நம்பிக்கை அளித்தார். ஆனால், அவர் 57 ஓட்டங்கள் எடுத்த நிலையில், துரதிர்ஷ்டவசமாக வோக்சிடம் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார்.
அதன்பின்னர் பும்ரா (0), உமேஷ் யாதவ் (10) அடுத்தடுத்து ஆட்டமிழக்க, இந்திய அணி முதல் இன்னிங்சில் 191 ஓட்டங்களிலும் சகலவிக்கெட்டுக்களையும்.  இங்கிலாந்து தரப்பில் ராபின்சன் 3 விக்கெட், ஓக்ஸ் 4 விக்கெட் வீழ்த்தினர். இதையடுத்து இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சை ஆடுகிறது.
இந்நிலையில் பதிலுக்கு துடுப்பெடுத்தாடி வரும் இங்கிலாந்து அணி ஒன்பது ஓவர்கள் முடிவடைந்துள்ள நிலையில் 21 ஓட்டங்களுக்கு இரண்டு விக்கெட்டுக்களை இழந்து துடுப்பெடுத்தாடி வருகின்றது.

உலகம் முழுதும் சீனாவின் வீடியோ கேம்ஸ் – ஆனால் சீனாவில் கேம்ஸ் விளையாட புதிய தடை !

உலகம் முழுவதும் பல சீன வீடியோ கேம்கள் மக்களை ஆக்கிரமித்துள்ளது. எல்லா ஆன்ரோய்ட் போன்களிலும் சீனாவின் செயலிகளும் – வீடியோ கேம்ஸ்களுமே ஆக்கிரமித்துள்ளன.

சீனாவில் குழந்தைகளின் எதிர்காலதத்தைக் கருத்தில் கொண்டு, இனி வாரத்தில் 3 மணி நேரம் மட்டுமே வீடியோ கேம் விளையாட முடியும் என்ற புதிய விதிமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது.

சீனாவில் வீடியோ கேம் விளையாட புதிய விதிமுறைகள் இன்றுமுதல் அமல்படுத்தப்பட்டுள்ளன. அந்நாட்டின் வீடியோ கேம் ஒழுங்குமுறை ஆணையமான, நேஷனல் பிரஸ் அண்ட் பப்ளிகேஷன் அட்மினிஸ்ட்ரேஷன் அமைப்பு பிறப்பித்துள்ள உத்தரவின்படி, சீனக் குழந்தைகள் இனி வாரத்தில் 3 மணி நேரம் மட்டுமே வீடியோ கேம் விளையாட முடியும்.

18 வயதுக்கு உட்பட்ட அனைவருக்கும் இந்த சட்டம் பொருந்தும். 18 வயதுக்குக் கீழ் உள்ளோர் தங்களின் உண்மையான பெயர், விவரங்களை அளித்தால் மட்டுமே வீடியோ கேம் விளையாட பதிவு செய்துகொள்ள முடியும். வெள்ளி, சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் மாலை 8 மணி முதல் 9 மணி வரை மட்டுமே 18 வயதுக்குக் குறைவானோர் வீடியோ கேம் விளையாட முடியும். தேசிய விடுமுறை நாட்களிலும் இதே நேரத்தில் விளையாடலாம்.

சீன அரசின் இந்த முடிவு, டென்சென்ட் (TENCENT), நெட்ஈஸ் (NetEase) போன்ற புகழ்பெற்ற ஆன்லைன் வீடியோ கேம்ஸ் தயாரிப்பு நிறுவனங்களுக்கு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்கிற எதிர்பார்ப்பு நிலவுகிறது. குறிப்பாக ஆன்லைன் கேம்ஸ் சார்ந்து விதிக்கப்பட்டுள்ள இந்தப் புதிய கட்டுப்பாடுகள் சீனாவின் தொழில்நுட்பம் சார்ந்த பங்கு வர்த்தகத்தின் தலையெழுத்தையே புரட்டிப் போட்டுவிடக்கூடும் என்றும் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது.

ரிஷாத் பதியுதீனின் சிறையில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட கைப்பேசி !

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் சிறையில் இருந்து கைப்பேசி ஒன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மெகசின் சிறைச்சாலையில் அவர் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் இவ்வாறு கைப்பேசி கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஊடக பேச்சாளர் தெரிவித்தார்.

கைப்பற்றப்பட்ட ஆயுதங்களுடன் தலிபான்கள் அணி வகுப்பு – பரிதாப நிலையில் ஆப்கான் என ஐ.நா கவலை !

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி அதிகாரத்தை பிடித்துள்ளன. அமெரிக்கப் படைகள் முற்றிலுமாக வெளியேறிய நிலையில், எப்போது வேண்டுமென்றாலும் அதிபர், மந்திரி சபைகளை அமைக்க தலிபான்கள் தயாராகி வருகின்றன.
ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிய மகிழ்ச்சியில் தலிபான் வீரர்கள், கைப்பற்றப்பட்ட ஆயுதங்களுடன் வலம் வரும் நிலையில், பெரும்பாலான நாடுகள் தங்களது உதவிகளை நிறுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அரசு சேவைகள் முடங்கப்படும், ஊழியர்கள் சம்பளம் பெற முடியாத நிலை ஏற்படும் என ஐ.நா. எச்சரித்துள்ளது.
மனிதாபிமான கண்டோட்டத்தில் ஆப்கானிஸ்தான் சூழ்நிலை மிகவும் பரிதாபமாக உள்ளது என ஆப்கானிஸ்தானின் ஐ.நா.வுக்கான மனிதாபிமான ஒருங்கிணைப்பாளர் ரமீஸ் அலாக்பரோவ் கவலை தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தான் கடந்த சில நாட்களாக உணவு விலை 50 சதவீதம் அளவிற்கும், பெட்ரோல் விலை 75 சதவீதம் அளவிற்கும் அதிகரித்துள்ளது.
பெரும்பாலான சர்வதேச உதவிகள் நிறுத்தப்பட்ட நிலையில், அரசு சேவைகள் செயல்பட முடியாது. அரசு ஊழியர்கள் சம்பளம் பெற முடியாது. இப்படியே சென்றால் இன்னும் ஒரு மாதத்திற்குள் உணவு பற்றாக்குறை ஏற்படும். மூன்றில் ஒருவர் பசியால் வாடும் நிலை ஏற்படும் என ரமீஸ் அலாக்பரோவ் தெரிவித்துள்ளார்.
நேற்று, காந்தகார் பகுதியில் கைப்பற்றப்பட்ட ஆயுதங்களுடன் தலிபான்கள் அணி வகுப்பு நடத்தியுள்ளனர். விமானங்களை இயக்க அனுபவம் வாய்ந்த விமானிகள் இல்லாத நிலையில், கத்தார் ஏர்வைஸ் விமானம், தங்களுடைய விமானிகளை ஆப்கானிஸ்தானுக்கு அனுப்பியுள்ளதாக தெரிகிறது.