October

October

விவசாயிகள் மற்றும் மீனவர்கள் பிரச்சினைக்காக நீதி வேண்டி போராட கூட்டமைப்பு அழைப்பு !

எதிர்வரும் 17ம் 18ம் திகதி வடக்கு கிழக்கு மாகாணங்களில் விவசாயிகள் மற்றும் மீனவர்கள் தொடர்பாக உள்ள பிரச்சினைகளுக்கு நீதி கோரி போராட்டங்களை நடத்த தீர்மானித்துள்ளோம் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்

இன்று யாழ்ப்பாணத்தில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

வடக்கு கிழக்கு மாகாணங்களில் விவசாயிகள் உரத்தினை பெறுவதில் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி உள்ளார்கள் குறிப்பாக தென் பகுதியிலும் இந்த பிரச்சனையினால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளார்கள் குறிப்பாக தென் பகுதியில் அரசுக்கு எதிராக பாரிய போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் விவசாய அமைச்சரின் கொடும்பாவியும் எரிக்கப்பட்டது. தற்போது நாட்டில் உள்ள கொரோனா தொற்று பரவல் காரணமாக மக்கள் ஓரிடத்தில் ஒன்று சேர்வது நல்ல விடயம் அல்ல. அது சமூகப் பொறுப்புக்கும் மாறானது என்பதை கருத்திற் கொண்டு வடக்கு கிழக்கு மாகாணங்களில் உள்ள அனைத்து கமநல சேவை நிலையங்களுக்கும் முன்னால் குறிப்பிட்ட எண்ணிக்கையானவர்கள் மாத்திரம் ஒரே நேரத்தில் ஒன்று கூடி எதிர்ப்பு நடவடிக்கையை முன்னெடுக்க தீர்மானித்துள்ளோம் .

குறிப்பாக யாழ்ப்பாண மாவட்டத்தில் 28 கமநல சேவைநிலையங்கள் இருக்கின்றன. அனைத்து நிலையங்களுக்கு முன்னாலும் எதிர்வரும் திங்கட்கிழமை 18ம் திகதி காலை 9 மணிக்கு சமூகப் பொறுப்போடு சமூக இடைவெளியினை பின்பற்றி தற்போது விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சினைக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த அரசுக்கு எதிரான போராட்டத்தில் அனைத்து இடங்களிலும் ஒரே நேரத்தில் இந்த கவனயீர்ப்பு போராட்டத்தினை செய்யவுள்ளோம்.

தெற்கில் உள்ள ஏனைய எதிரணி அரசியல் தலைவர்களுடன் பேசி உள்ளோம்.அவர்களும் தங்களுடைய பிரதேசங்களிலும் இவ்வாறான பிரச்சினை காணப்படுவதாகவும் தொடர்ச்சியாக தமது பகுதியில் இந்த போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளனர் அதாவது எமக்கு பசளை கிடைக்கும் வரை இவ்வாறான போராட்டங்களை முன்னெடுக்க நாம் தீர்மானித்துள்ளோம்.

அதேபோல் வடக்கு மீனவர்கள்அத்துமீறிய இந்திய இழுவை படகுகளினால் பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றார்கள் குறித்த இந்திய மீனவர்களின் வருகையினை நிறுத்துவதற்கு ஏற்கனவே சட்டமூலம் இயற்றப்பட்டு உள்ள நிலையில் அதனை அரசு நடைமுறைப்படுத்த தயங்குகின்றது. குறிப்பாக கடற்தொழில் அமைச்சராக ஒரு தமிழர் இருந்தும்,அவர் அதனை நடைமுறைப்படுத்துவது மிகவும் இலகுவான விடயம். ஆனால் அவர் அதனை செயற்படுத்தாதன் காரணமாக இந்திய இழுவைப் படகுகளின் தொல்லை வடக்கு பகுதியில் மீனவர்களை பெரிதாக பாதிக்கின்றது எனவே குறித்த சட்ட மூலத்தை நடைமுறைப்படுத்தாமைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை 17ம் திகதி முல்லைத்தீவு கடலில் இருந்து பருத்தித்துறைக்கு கடல் வழியாக வந்து அமைச்சருக்கு எதிராக எதிர்ப்பு போராட்டத்தை நடாத்த தீர்மானித்துள்ளோம்.அனைத்து போராட்டங்களுக்கும் எமது மக்கள் ஆதரவு வழங்க வேண்டும் என்றார்.

திருகோணமலையிலிருந்து நியூஸிலாந்து செல்ல முயன்ற 63 பேர் கைது !

திருகோணமலை விடுதி ஒன்றிலிருந்த சட்டவிரோதமான முறையில் நியூஸிலாந்து செல்ல முயன்ற 63 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

குறித்த அனைவரும் கடல் மார்க்கமாக தப்பிச் செல்ல முயன்றுள்ளனர். இவர்கள் கிளிநொச்சி, யாழ்ப்பாணம், வவுனியா மற்றும் முல்லைத்தீவு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

“வடக்கு கிழக்கில் உடனடியாக பொதுசன வாக்கெடுப்பை நடாத்துங்கள்.” – குவாட் அமைப்பிடம் எம்.கே.சிவாஜிலிங்கம் கோரிக்கை !

ஐக்கிய நாடுகள் சபை வடக்கு கிழக்கில் சர்வஜன வாக்கெடுப்பை நடத்த வேண்டுமென அமெரிக்கா, இந்தியா, அவுஸ்திரேலியா, ஜப்பான் நாடுகளை உள்ளக்கிய குவாட் அமைப்பிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தமிழ் தேசிய கட்சியின் தலைவர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

வல்வெட்டித்துறையில் உள்ள அவரது இல்லத்தில் இன்று (10) நடந்த ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இது தொடர்பான கடிதம் ஏற்கனவே இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளரிடம் கையளிக்கப்பட்டுள்ள நிலையில், ஏனைய மூன்று நாட்டு தூதரகங்களிற்கும் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். அத்துடன், தமிழ் தேசிய கட்சிகளிற்கும், அதன் பாராளுமன்ற உறுப்பினர்களிற்கும் அந்த கடிதம் பார்வைக்காக அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

அனுப்பப்பட்ட அந்த கடிதத்திலே 1987 ஆம் ஆண்டின் இந்திய – இலங்கை ஒப்பந்தத்தின் விளைவாகிய, நடைமுறையிலுள்ள மாகாண சபைகள் முறைமையானது இலங்கையால் கடந்த 3 வருடங்களாகக் கைவிடப்பட்டுள்ளது. இலங்கை அரசாங்கமானது தேர்தலை நடாத்துவதற்கு எவ்வித முயற்சியையும் எடுக்காமல், பதிலாக சபைகளுக்குக் கையளிக்கப்பட்டுள்ள அதிகாரங்களை அகற்றுவதிலேயே ஈடுபட்டுள்ளது.

இந்திய-இலங்கை ஒப்பந்தமானது வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்குரிய பிராந்தியத்தை தமிழ் மக்களின் பாரம்பரிய தாயகமாகத் தெளிவாக அங்கீகரித்துள்ளது. குறித்த உடன்படிக்கையின் மூலமாகக் கொண்டுவரப்பட்ட அரசியலமைப்பிற்கான 13வது திருத்தத்தை இலங்கையானது எப்பொழுதுமே முழுமையாக அமுல்படுத்தவில்லை என்பதுடன் தற்பொழுது அதனை மேலும் பலமிழக்கச் செய்வதிலேயே ஈடுபட்டுள்ளது.

இந்திய – பசுபிக் பிராந்தியத்தில் நிரந்தர அமைதியை அடைவதற்கும் அதே சமயம் எமது பிராந்தியத்தில் சுதந்திரத்தையும் ஸ்திரத்தன்மையையும் உறுதிப்படுத்திக் கொள்வதற்கும் உதவுவதன் பொருட்டு தமிழ் மக்கள் உலகிலுள்ள அதிகாரம்மிகுந்த நாடுகளில் ஒன்றாகிய இந்தியாவிடம் அழைப்பு விடுக்கின்றனர்.

தமிழ் மக்களுக்கு எதிரான கடந்த கால வன்முறை வடிவங்கள் மீள – இடம்பெறாமலிருப்பதற்கு உத்தரவாதம் அளிக்கவல்ல நிரந்தர அரசியல் தீர்வினை சனநாயக ரீதியில் நிலைநாட்டுவதற்காகவும், அவர்களுக்கான ஈடுசெய் நீதியை வழங்குவதன் பொருட்டும் அவர்களை அடக்குமுறையிலிருந்தும் ஆக்கிரமிப்பிலிருந்தும் விடுவிப்பதன் பொருட்டும் இலங்கையின் வடக்கு- கிழக்குப் பிராந்தியத்திலுள்ள மக்களுக்காக ஐ.நாவினால் கண்காணிக்கப்படுகின்ற குவாட் நாடுகளான அவுஸ்திரேலியா, இந்தியா, ஜப்பான், ஐக்கிய அமெரிக்கா போன்றனவற்றால் நடாத்தப்படுகின்றதுமான பொதுசன வாக்கெடுப்பினை ஒருங்கிணைப்பதற்காக உடனடியானதும் அவசரமானதுமான நடவடிக்கையினை மேற்கொள்ளுமாறு இந்தியாவிடம் கோருகின்றேன் என்கிறார்.

“சிலர் எதிர்பார்ப்பதை போல நாட்டில் எந்தவகையிலும்  பஞ்சம் ஏற்பட இடமளிக்க மாட்டோம்.” – நிதி அமைச்சர் பசில்

“சிலர் எதிர்பார்ப்பதை போல நாட்டில் எந்தவகையிலும்  பஞ்சம் ஏற்பட இடமளிக்க மாட்டோம்.” என்று நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நாட்டின் உணவு பாதுகாப்பு தொடர்பாக விவசாய அமைச்சர் மற்றும் அதனுடன் இணைந்த இராஜாங்க அமைச்சுகளுடன் நிதி அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் பேசிய அவர்,

இந்த ஆண்டுக்கான வரவு – செலவு திட்டத்தில்  ஒவ்வொரு அமைச்சுக்கும்   உற்பத்தி பொருளாதாரம் தொடர்பான பல்வேறு திட்டங்களுக்காக 25,000 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது . நாட்டில் உணவுப் பற்றாக்குறையுடன் பஞ்சம் ஏற்படும் என்று சிலர் பல்வேறு அறிக்கைகளை வெளியிடுகின்றனர்.  அவர்கள் எதிர்பார்ப்பதைப்  போல் நாட்டில் பஞ்சம் ஏற்பட இடமளிக்க மாட்டோம்.

நாம் இம்முறை வரவு – செலவு திட்டத்தில்  உற்பத்திப் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதில் அதிக கவனம் செலுத்தியுள்ளோம். இந்த முறை வரவு – செலவுத் திட்டத்தில் கிராமத்துக்குப் பணம் அனுப்பும் முறையை உருவாக்கியுள்ளதாகவும்  உற்பத்தித் துறையை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு  இம்முறை வரவு – செலவு திட்டத்தில் கிராம மற்றும் பிரதேச செயலக மட்டத்தில்  நிதி ஒதுக்கீடு  செய்யப்பட்டது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையிலிருந்து வெளியேற திட்டமிட்டுள்ள ஒரு மில்லியன் இளைஞர்கள் – பகிரங்கப்படுத்தியது ஐக்கிய மக்கள் சக்தி !

எதிர்வரும் மாதங்களில் கிட்டத்தட்ட ஒரு மில்லியன் இளைஞர்கள் நாட்டை விட்டு வெளியேற உள்ளனர் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் மயந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

கண்டியில் ஊடகங்களிடம் பேசிய அவர் 1983 கலவரத்தின்போது அல்லது யுத்தத்தின்போது கூட இவ்வளவு பெரிய எண்ணிக்கையிலானவர்கள் நாட்டை விட்டு வெளியேறவில்லை என கூறினார்.

இளைஞர்கள் தங்கள் எதிர்காலத்தை வலுப்படுத்துவதற்காக கல்வி மற்றும் வேலை வாய்ப்புக்காக வெளிநாடுகளுக்கு செல்வதற்கு திட்டமிட்டுள்ளனர் என்றும் குறிப்பிட்டார்.

இந்த வளர்ச்சி ஏமாற்றமளிப்பதாகக் கூறிய நாடாளுமன்ற உறுப்பினர் மயந்த திஸாநாயக்க, நாட்டின் இளைஞர்களின் எதிர்காலத்திற்காக தற்போதைய சவால்களை எதிர்கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.

நாட்டின் வருங்கால சந்ததியினர் நாட்டை வளர்ப்பதற்கும் தலைமைத்துவத்தை வழங்குவதற்கும் கைகோர்க்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

காணி அபகரித்தல் , சட்டவிரோத குடியேற்றம் என்பவற்றுக்கான ஆதாரங்களை நோர்வே, நெதர்லாந்து உயர்ஸ்தானிகர்களிடம் கையளித்த சாணக்கியன் !

மட்டக்களப்பில் இடம் பெற்று வரும் காணி அபகரித்தல் சட்டவிரோத குடியேற்றம் மற்றும் மண் அகழ்வு உள்ளிட்ட பிரச்சனைகள் தொடர்ந்தும் இடம் பெற்று வருவதாகவும்  தொல்பொருள் திணைக்களத்தின் அத்துமீறல் இடம்பெற்று வருவதாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் இலங்கைக்கான நோர்வே உயர்ஸ்தானிகர் மற்றும் நெதர்லாந்து உயர்ஸ்தானிகர் ஆகியோரிடம் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கான நோர்வே உயர்ஸ்தானிகர் ட்ரினி ஜோரானில் எஸ்கெடல் மற்றும் நெதர்லாந்து நெதர்லாந்து உயர்ஸ்தானிகர் தன்சா கோங்க்றிப் ஆகியோரை இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் சந்தித்து பேசியுள்ளார்.

மட்டக்களப்பில் இன்று செவ்வாய்க்கிழமை நண்பகல் குறித்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தின் எதிர்கால அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் மற்றும் துரிதமாக முன்னேற்றும் செயல்பாடுகளில் முதன்மையான தகவல் தொழில் நுட்பத்துறை மற்றும் இயற்கை அழகுடன் காணப்படும் மட்டக்களப்பு மாவட்ட சுற்றுலா துறையை மேம்படுத்தும் பல திட்டங்கள் பற்றியும் கலந்துரையாடப்பட்டுள்ளது.

அத்துடன், மட்டக்களப்பில் இடம்பெற்றுவரும் காணி அபகரித்தல் சட்டவிரோத குடியேற்றம் மற்றும் மண் அகழ்வு உள்ளிட்ட பிரச்சனைகள் குறித்து ஆராயப்பட்டதுன், இதற்கான ஆதாரங்களுடன் கூடிய ஆவணமும் கையளிக்கப்பட்டது.

இதன் போது சாணக்கியன் விசேட கோரிக்கை ஒன்றினையும் முன்மொழிந்திருந்தார்.குறிப்பாக தொல்பொருள் எனும் பெயரில் காணிகள் சூறையாடப்படுவதை தடுக்கும் நோக்குடன் தொல்பொருள் சம்பந்தமான செயற்பாடுகள் அனைத்தும் யுனெஸ்கோ (UNESCO) அமைப்பின் ஊடாக சர்வதேச கண்காணிப்புடன் முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதையும் அவர் வலியுறுத்தியிருந்தார்.

இதன்மூலம் நாம் எதிர்கொள்ளும் சட்ட விரோத காணி அபகரிப்பு போன்ற பிரச்சினைகளை தடுக்க முடியும் என இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். அத்துடன், இன்றைய குறித்த சந்திப்பானது சமகால அரசியல் பரிமாற்றத்துடன் முற்றுப்பெற்றதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அயல் வீட்டாருடன் ஏற்பட்ட தகராறு – தாய் மற்றும் மகன் மீது கத்திக்குத்து – யாழில் சம்பவம் !

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை காவல்துறை பிரிவிற்கு உட்பட்ட சுழிபுரம் – காட்டுப்புலம் பகுதியில் குடும்ப பெண் மீதும் அவருடைய மகன் மீதும் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் காரணமாக படுகாயமடைந்த நிலையில் இருவரும் யாழ்.போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில் ,

அயல் வீட்டாருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக 45 வயதான குடும்ப பெண் மீதும் அவருடைய 16 வயதான மகன் மீதும் கத்தியால் வெட்டியுள்ளனர். சம்பவத்தில் காயமடைந்த இருவரும் சங்கானை பிரதேச வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் வட்டுக்கோட்டை காவல் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய அயல் வீட்டாரான 51 வயது நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

“எம்மின மக்களை வெட்டிச் சரித்தும், சொத்துக்களை அழித்தும், தீயிட்டுக் கொழுத்தியும், தமிழ்ப் பெண்களின் மார்புகளில் கொதிக்கும் தாரால் குறிவைத்தும் எம்மை அடக்கினர்.”- எஸ்.சிறீதரன்

“எம்மின மக்களை வெட்டிச் சரித்தும், சொத்துக்களை அழித்தும், தீயிட்டுக் கொழுத்தியும், தமிழ்ப் பெண்களின் மார்புகளில் சிங்கள ‘ஸ்ரீ’ ஐ கொதிக்கும் தாரால் குறிவைத்தும், பச்சிளம் குழந்தைகளை கொதித்த தார்ச்சட்டிகளுள் வீசி எறிந்தும், தமிழ் இளைஞர்களின் கண்களை உயிரோடு தோண்டி எடுத்தும் ஓரினத்தின் இருப்பை அடியோடு ஆட்டம்காண வைத்து, அவர்களின் உணர்வுகளை கொதிநிலைக்கு இட்டுச்சென்றது யாரென்பதை இந்த உலகம் அறியும்.” என தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறீதரன் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 2021.10.06 ஆம் திகதி நடைபெற்ற நயினாதீவு நீர்வழங்கல் திட்டத்திற்கான கடல்நீரை நன்னீராக்கும் சுத்திகரிப்பு நிலையத் திறப்புவிழாவில் கலந்துகொண்டு உரையாற்றிய, கிராமிய மற்றும் பிரதேச நீர்வழங்கல் கருத்திட்டங்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சனத் நிசாந்த, ‘சயனைட் குப்பிகளையும், புத்தகங்களையும் ஏந்திய வடக்கு மாகாண இளைஞர்களை இன்று புத்தகங்களையும், பேனாவையும் ஏந்த வைத்திருப்பதாகவும், இந்த நல்லெண்ணத்திற்கு வித்திட்டவர்கள் இன்றைய ஜனாதிபதியும், பிரதமருமே’ என்று குறிப்பிட்டிருந்தார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் பேசிய போதே எஸ்சஜறீதரன் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பேசிய அவர்,

இராஜாங்க அமைச்சர் சனத் நிசாந்த  குறிப்பிட்டிருந்த கருத்து உண்மைக்குப் புறம்பான புனைவாகும். அது அமைச்சரின் சிங்கள பௌத்த பேரினவாத சிந்தனையையே எடுத்துக்காட்டுகிறது. தமிழர்களின் உரிமைப் போராட்டம் குறித்தோ, அதன் வரலாறு பற்றியோ, தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் தோற்றுவாய் குறித்தோ இராஜாங்க அமைச்சர் அறிந்திருக்க வாய்ப்பில்லை. என்றாலும், இத்தகைய கருத்துக்களை வெளியிட முன்னராவது வரலாற்றை அறிவதற்கு அவர் முயற்சித்திருக்க வேண்டும். இந்த நாட்டில் எழுபது ஆண்டுகளுக்கு மேலாகப் புரையோடிப் போயிருக்கும் இனப் பிரச்சினைக்கு அடித்தளமிட்டது யார் என்பதையும், தமது சொந்த நாட்டில் இழைக்கப்பட்ட அநீதிகளை எதிர்த்து, அமைதிவழியில் போராடிப் பெறமுடியாதுபோன அடிப்படை உரிமைகளைப் பெற்றுக்கொள்வதற்காகவே தமிழர்கள் ஆயுதமேந்த நிர்ப்பந்திக்கப்பட்டார்கள் என்பதை இனியாவது இராஜாங்க அமைச்சர் கற்றுககொள்வது அவரது அரசியல் எதிர்காலத்துக்கு தேவையானதாக அமையும்.

சுதந்திர இலங்கையில் என்ன நிகழ்ந்தது என்பதை அப்போது பிறந்தேயிராத அமைச்சர் அறிந்திருக்க மாட்டார். அதன் விளைவாகத்தான் அவர் வெளியிட்டுள்ள கருத்தும் அத்தனை அபத்தமாக அமைந்துள்ளது. 1957 இலும், 1965 இலும் இலங்கையில் இனச் சமத்துவத்தை அங்கீகரிக்க அடிப்படையாக அமைந்த பண்டா – செல்வா ஒப்பந்தத்தையும், டட்லி – செல்வா ஒப்பந்தத்தையும் சிங்கள அதிகார பீடங்கள் தான் கிழித்தெறிந்தன. பன்மைத்துவமற்ற அரசியலமைப்பை உங்கள் இனத்தவர்கள் தான் உருவாக்கினார்கள், பௌத்தத்தை மட்டும் முதன்மை பெற வைத்து, தரப்படுத்தலை சிங்களத் தலைவர்களே மேற்கொண்டார்கள், தமிழ்மொழியைப் புறக்கணித்து, தமிழர் தாயகத்தில் நிலவிய மரபுரிமை சார்ந்த கூட்டு வாழ்வைச் சிதைத்து, சிங்களக் குடியேற்றங்களை உருவாக்கினார்கள், இனவாதிகளை உருவாக்கி எம்மின மக்களை வெட்டிச் சரித்தும், சொத்துக்களை அழித்தும், தீயிட்டுக் கொழுத்தியும், தமிழ்ப் பெண்களின் மார்புகளில் சிங்கள ‘ஸ்ரீ’ ஐ கொதிக்கும் தாரால் குறிவைத்தும், பச்சிளம் குழந்தைகளை கொதித்த தார்ச்சட்டிகளுள் வீசி எறிந்தும், தமிழ் இளைஞர்களின் கண்களை உயிரோடு தோண்டி எடுத்தும் ஓரினத்தின் இருப்பை அடியோடு ஆட்டம்காண வைத்து, அவர்களின் உணர்வுகளை கொதிநிலைக்கு இட்டுச்சென்றது யாரென்பதை இந்த உலகம் அறியும்.

தமிழர்கள் ஒரு அறிவார்ந்த சமூகம் என்பதை எண்பித்த வரலாற்றுச் சாட்சியமாய், தமிழர்களின் தனிப்பெரும் கல்வி அடையாளமாய் இருந்த தெற்காசியாவின் அறிவுக் களஞ்சியமான யாழ்ப்பாணம் பொதுநூலகத்தை 1981 யூன் 30ம் திகதி நள்ளிரவு தீயிட்டுக் கொழுத்தி எமது இனத்தின் அறிவாண்மையைச் சிதைக்கும் செயலில் சிங்கள இனவெறியர்கள் ஈடுபட்டதை, அப்போது ஆறு வயதுச் சிறுவனாக இருந்த நீங்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லைத்தான். இந்த அவலம் மிகுந்த வரலாற்றால் வெஞ்சினம் கொண்ட இளைஞர்கள் தான், வெகுண்டெழுந்து எமக்கான வரலாற்றைப் படைத்தார்கள். அடக்கப்படுகிற போது விடுதலை பெற வேண்டுமென்ற உணர்வு மனித சமூகத்தின் தன்னியல்பான குணாம்சம். அதனையே எங்கள் இளைஞர்களும் செய்தார்கள். அவர்கள் ஒருபோதும் வன்முறையை விரும்பியவர்களல்ல. ஆயுதங்களை அவர்கள் விரும்பி ஏற்றவர்களும் அல்ல. தங்களையும், தங்கள் இனத்தையும் தற்காத்துக் கொள்வதற்காக போராடி அதற்காகவே தங்கள் உயிர்களை ஈர்ந்தார்கள். தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு.வே.பிரபாகரன் அவர்களே ‘ஆயுதங்களை நாம் ஒருபோதும் விரும்பி ஏற்கவில்லை. அவை எம்மீது வலிந்து திணிக்கப்பட்டவையே’ என்று 1985 ஆம் ஆண்டு இந்தியாவிலிருந்து வெளிவந்த சஞ்சிகை ஒன்றுக்கு  வழங்கிய நேர்காணலில் குறிப்பிட்டிருந்தார்.

இவற்றைவிட சிங்கள இனவாத அரசு காலம்காலமாக மேற்கொண்டுவந்த தமிழினப் படுகொலைகளும், தமிழர்களின் வாழ்வியல்ப் போக்கைத் திசைமாற்றியதில் பெரும் பங்கு வகித்தன. வடக்கு இளைஞர்களைத் தாம் புத்தகமும், பேனாவும் தூக்க வைத்திருப்பதாகப் பெருமிதம் கொள்ளும் இராஜாங்க அமைச்சர் சனத் நிசாந்த, இனவாத அரசால் வயதுவேறுபாடற்று மேற்கொள்ளப்பட்ட சிறுவர் படுகொலைகள் குறித்தும் அறிய முற்பட வேண்டும். நவாலிப் படுகொலை, நாகர்கோவில்ப் பாடசாலைப் படுகொலை, கொக்கட்டிச்சோலைப் படுகொலை, வாகரைப் படுகொலை, செஞ்சோலைப் படுகொலை, முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்புப் படுகொலை உள்ளிட்ட பல்வேறு சம்பவங்களில் கொல்லப்பட்ட ஆயிரக் கணக்கான அப்பாவிச் சிறுவர்களின் உயிரிழப்புக்களுக்கும், இறுதிப் போரின்போது இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியில் வைத்து காணாமலாக்கப்பட்ட பலநூற்றுக் கணக்கான சிறுவர்களுக்கும் நீதியைப் பெற்றுக்கொடுக்கத் திராணியற்ற பேரினவாத நாட்டில், தமிழ் மாணவர்களின் தற்போதைய நிலை குறித்து அமைச்சர் அக்கறையும், பெருமிதமும் அடைவது நகைப்புக்கிடமான செயலாகும்.

வரலாறு இவ்வாறிருக்க, நல்லெண்ணத்திற்கு வித்திட்டதாக இராஜாங்க அமைச்சர் குறிப்பிடும் இன்றைய ஜனாதிபதியும், பிரதமரும் தற்போது எம் இனம் மீது பிரயோகித்துவரும் அடிப்படை வன்முறைகள் கூடவா அமைச்சரின் கண்களுக்கு இன்னும் புலப்படவில்லை?. நாம் கண்ணீர் விட்டு அழவும் தடையுத்தரவு தருகின்றீர்கள். ஒவ்வொரு அப்பாவித் தாய், தந்தையின் நெஞ்சிலும் ஆணியால் அடிக்கிறீர்கள், தங்கள் தாய், தந்தையரின் கல்லறைகள் இல்லாது போன காலத்திலும், அவர்கள் புதையுண்ட நிலங்களை முத்தமிடத் துடிக்கின்ற பிள்ளைகளின் தலையிலே சம்மட்டியால் அடிக்கின்றீர்கள். அவர்களை நினைந்து அழுவதையும், தொழுவதையும் பயங்கரவாதம் என பறைசாற்றுகிறீர்கள். இலங்கை தேசத்தில் வாழ்கின்ற சிங்கள தேசிய இனம் போலவே நாமும் ஓர் தேசிய இனமாக, எமக்கென்றோர் தனித்துவமான பண்பாட்டு, விழுமியங்களோடு இந்த வரலாற்றுத் துயர்களை எல்லாம் மறந்து வாழ முற்படும் வேளையில் சர்வதேச மனித உரிமை சாசனங்களை மீறி, இலங்கையின் உள்நாட்டு அடிப்படை உரிமைகளுக்கு முரணாக, சர்வதேச சமவாயங்களின் அடிப்படைக் கோட்பாடுகளைக் கூட அங்கீகரிக்கத் தவறி, எமது சமூக, பண்பாட்டு, விழுமியங்களை நிராகரித்து ‘பௌத்த புராண, இதிகாசமான மகாவம்ச சிந்தனைகளிலிருந்து சிங்களதேசம் மீண்டு வந்து தமிழ் மக்களுக்கு சமத்துவமான தீர்வொன்றைத் தருமென்று நான் துளியேனும் நம்பவில்லை’ என்ற தமிழீழ தேசியத் தலைவர் மேதகு.வே.பிரபாகரன் அவர்களின் சிந்தனையை மெய்ப்பிப்பதாகவே உங்கள் செயற்பாடுகள் இன்றும் அமைந்துள்ளன.

கைதுகள், காணாமலாக்கல்கள், நில ஆக்கிரமிப்பு, மரபுரிமைச் சின்னங்களை அழித்தல், திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள் என தமிழ்த்தேசிய இனம் மீதான உங்களின் அடிப்படை இனவன்முறைகள் இன்னும் இன்னும் அதிகரித்துச் செல்லும் அதிபயங்கரமான சூழலில் எமது போராட்டம் குறித்து கருத்துரைப்பதற்கு அருகதையற்ற இராஜாங்க அமைச்சர், சயனைட் குப்பியும், துப்பாக்கியும் ஏந்திய எங்கள் பிள்ளைகளை தாமே புத்தகங்களை ஏந்த வைத்திருப்பதற்காக தெரிவித்துள்ள கருத்தை அவரது அரசியல் அறியாமையின் வெளிப்பாடாகவே நான் பார்க்கிறேன்.” எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

“13ம் திருத்தத்தில் இருக்கின்ற முழு அதிகாரங்களையும் அமுல்படுத்த வேண்டும் என இந்தியா வலியுறுத்தியுள்ளது.” – எம்.ஏ.சுமந்திரன்

13ம் திருத்தத்தில் இருக்கின்ற முழு அதிகாரங்களையும் அமுல்படுத்த வேண்டும் என்பதை இந்தியா தொடர்ச்சியாக வலியுறுத்துவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுமந்திரன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்துக்கான இந்தியத் துணை தூதர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரனை அவர் சந்தித்த பின்னரே ஊடகங்களுக்கு இவ்வாறு கருத்து தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

எமது கடற்பரப்புக்குள் இந்திய மீனவர்கள் வந்து எங்களுடைய மீனவர்களுடைய மீன்பிடி உபகரணங்களை பாதிக்கச் செய்த பல விடயங்கள் அண்மைக் காலமாக நடந்திருக்கின்றன.அவர்களுடைய இலட்சக்கணக்கான மீன்பிடி உபகரணங்களுக்கு சேதங்கள் ஏற்பட்டது. இந்த விடயங்கள் சம்பந்தமாகவே இந்தியத் துணைத் தூதருடன் பேசி இருக்கின்றோம். இவற்றுக்கு என்ன செய்யலாம் என்று இழப்பீடுகள் தொடர்பாகவும் நாம் பேசியிருக்கிறோம். வடமராட்சி கிழக்கில் மூன்று மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட பாதிப்பு தொடர்பாக அங்குள்ள மீனவ சங்கங்கள் எனக்கு அனுப்பிய கடிதத்தை இந்திய பிரதித்தூதரிடம் நான் அனுப்பியிருந்தேன்.

அத்துமீறி பிரவேசித்து எங்களுடைய வளங்களை சுரண்டுவதால் மீன் வளங்கள் அற்றுப்போகின்றது. 2018 ஆம் ஆண்டு இழுவை மடி தொழிலை தடுக்க வேண்டும் என ஒரு சட்டம் கொண்டு வரப்பட்டது. அது சட்டமாக்கப்பட்டாலும் மீன்பிடி அமைச்சு அந்த சட்டத்தை அமுல்படுத்தாமல் இருப்பது தான் இதற்கு பிரதான காரணமாக இருக்கின்றது.

அந்த சட்டத்தை அமுல்படுத்தினால் இந்த பிரச்சினை பெரிய அளவிலே தீர்ந்து விடும். அந்த சட்டம் கொண்டுவரப்பட்டபோது இந்திய வெளிவிவகார அமைச்சு ஓர் எச்சரிக்கை ஒன்றை தமிழக மீனவர்களுக்கு விடுத்திருந்தது. ஒரு கடுமையான சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது ஆகவே இலங்கை கடற்பரப்புக்குள் போகவேண்டாம் என எச்சரித்தது.இதன் காரணமாக ஓரிரு வருடங்களாக வராமல் இருந்த தமிழக மீனவர்கள், அந்த சட்டம் அமுல்ப்படுத்தப்படவில்லை என தெரிந்த பின்னர் மீண்டும் வர ஆரம்பித்து விட்டார்கள்.

அத்துமீறுபவர்களை கைது செய்து இந்த சட்டத்தின் கீழ் அவர்களுக்கு எதிராக வழக்கு தொடர்வது என்பதை மீன்பிடி அமைச்சு செய்ய வேண்டும். ஆகவே சட்டத்தை அமுல்படுத்தாமல் இருப்பதே அத்துமீறல் தொடர்ச்சியாக நடப்பதற்குக் காரணமாக இருக்கின்றது. மீன்பிடி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு நாங்கள் கூறுவது என்னவென்றால் சட்டங்களை இயற்றி கொடுத்திருக்கின்றோம். இதற்கான ஆயுதத்தை உங்களிடம் கொடுத்திருக்கின்றோம். அதை வைத்துக் கொண்டு செயல்படுத்தாமல் விடுவது எங்களுடைய மீனவர்களுக்கே பாதிப்புகளை ஏற்படுத்தும்.

பதின்மூன்றாம் திருத்தம் தொடர்பிலும் சில கருத்துப் பரிமாற்றங்களை செய்து இருக்கின்றோம்.இந்திய வெளியுறவுச் செயலாளருடன் பேசியதன் தொடர்ச்சியாக 13ம் திருத்தத்தில் இருக்கின்ற முழு அதிகாரங்களையும் அமுல்படுத்த வேண்டும் என்பதை இந்தியா தொடர்ச்சியாக வலியுறுத்துகின்றது. முழு அதிகாரத்தையும் அமுல்படுத்துவதாக இருந்தால் காவற்துறை அதிகாரத்தையும் அமுல்படுத்த வேண்டும். ஒவ்வொரு மாகாணத்துக்கும் காவற்துறை பிரிவு ஒன்று ஏற்படுத்தப்பட வேண்டும். முழுமையாக 13ஆம் திருத்தச் சட்டத்தை அமுல்படுத்துவோம் என்று அரசாங்கம் சொன்னால் அதனை செய்து காட்ட வேண்டும் என்றார்.

மேற்படி சந்திப்பின்போது நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனுடன் வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் சுகிர்தனும் பங்கேற்றிருந்தார்.

இலங்கையில் ஒரே நாளில் எகிறிய அத்தியாவசிய பொருட்களின் விலைகள் – முழுமையான விபரங்கள் !

இன்று முதல் கோதுமை மாவின் விலை 10 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. செரண்டிப் மற்றும் பிரீமா நிறுவனங்களால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

லிட்ரோ சமையல் எரிவாயுகளின் விலைகள் நேற்று நள்ளிரவு முதல் அதிகரிக்கப்பட்ட போதிலும் சிறிய விலை குறைப்பினை அந்நிறுவனம் அறிவித்துள்ளது.அதன்படி, 12.5 கிலோ எடைக்கொண்ட சமையல் எரிவாயுவின் விலை 75 ரூபாயினாலும், 5 கிலோ எடைக்கொண்ட சமையல் எரிவாயுவின் விலை 30 ரூபாயினாலும், 2.5 கிலோ எடைக்கொண்ட சமையல் எரிவாயுவின் விலை 14 ரூபாயிவினாலும் குறைக்கப்பட்டுள்ளது.

நேற்று நள்ளிரவு முதல் அதிகரிக்கப்பட்ட விலையில் இருந்தே விலை குறைக்கப்பட்டுள்ள நிலையில் 12.5 கிலோ எடை சமையல் எரிவாயுவின் புதிய விலை 2675 ரூபாயாகவும் 5 கிலோ 1071 ரூபாயாகவும், 2.5 கிலோ 506 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், 5 கிலோ கிராம் சிலிண்டரின் விலையை 503 ரூபாவாலும், 2.5 கிலோ கிராம் சிலிண்டரின் விலையை 231 ரூபாவாலும் அதிகரிக்க அந்த நிறுவனம் தீர்மானித்துள்ளது. அதன்படி, 5 கிலோ கிராம் சிலிண்டரின் விலை புதிய விலை 1,101 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் 2.5 கிலோ கிராம் சிலிண்டரின் புதிய விலை 520 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் எசீமேந்து விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இவ்வாறு விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதனடிப்படையில் 50 கிலோ கிராம் சீமேந்து 93 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் நாட்டில் சமையல் எரிவாயு, கோதுமை மா, பால்மா சீமெந்து உள்ளிட்ட பொருட்களின் விலைகள் சடுதியாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து  கொத்து, தேநீர்,சாப்பாட்டு பார்சல்  உள்ளிட்டவற்றின் விலைகளை அதிகரிக்க அகில இலங்கை உணவக உரிமையாளர் சங்கம் தீர்மானித்துள்ளது. இதன்படி, 10 ரூபாயால் விலையை அதிகரிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாணின் விலையை அதிகரிக்க பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்படி 450 நிறையுடைய ஒரு இறாத்தல் பாணின் விலை 5 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.